About Me

2012/12/19

தஞ்சை பெரிய கோயில்



சரித்திரங்கள் புரட்டப்படும் போதுதான், நம்மை விட்டு விலகிப் போன, மறைந்திருக்கின்ற பல விடயங்களை அறிய முடிகின்றது. இவ்வாறான
ஒவ்வொரு சரித்திரங்களின் பின்னாலும் பல உயிர்களின் ஆற்றல்களும், உழைப்புக்களும், புதுமைகளும் இருக்கும். அவற்றைத் தேடியறிதலே சுவாரஸியமான ஓர் கலைதான்.

அந்த வகையில் என்னை வியப்புக்குள்ளாக்கிய தஞ்சாவூர் பெரிய கோயில் தொடர்பான சரித்திரங்களைத் தேடியறிவதற்காக வலம் வந்த இணைய உலா வில்  பெற்றுக் கொண்ட தகவல்களையே உங்களுடன் பகிரப் போகின்றேன்.

தஞ்சாவூர் காவிரி சமவெளிப் பகுதியில் 15 தளங்களைக் கொண்ட சுமார் 60 மீற்றர் நீளமான கோயிலே தஞ்சை பெரியார் கோயிலாகும். சோழர்களின் சிறப்பை வெளிப்படுத்தக் கூடிய இக்கோயிலில் பல சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.



இது  10ம் நூற்றாண்டில் (கி.பி 985 - 1070 வரை)  சோழர்கள் தமிழ்நாட்டை ஒரே குடையின் கீழ் ஆண்ட    பொற்காலத்திலேயே,   சோழ மன்னனாகிய இராஜ இராஜசோழனால்   கட்டப்பட்டது. அரசனின் சிவபக்தியுடன் 1006 ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க 7 ஆண்டுகள் சென்றனவாம்.  இன்று இக்கோயிலின் வயது 1002 ஆகும். இராஜ இராஜ சோழன் மன்னன் கோயில் கட்டும் கலையில் பல புதுமைகளை ஏற்படுத்திய மன்னனாவான். இக்கோயில் கட்டடக் கலையானது, தென்னிந்திய கட்டடக் கலைகளுக்கு சிறந்த அத்திவாரமாக விளங்குகின்றது.


இக்கோயிலானது, இராஜ இராஜ சோழன் மன்னன் காலத்தில் இராஜ இராஜேஸ்வரம் என்றும், நாயக்கர்கள் ஆண்ட காலத்தில் தஞசை பெரியார் கோயில் என்றும்,  மராட்டியர் காலத்தில் பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டது.

இதன் நீளம் 150 அடியாகும். கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்துள்ள கூர்நுனிக் கோபுரமாக இதன் விமானம் அமைந்துள்ளது. இதன் இராஜ கோபுரம் மிகவும் அழகிய கலைநயத்துடன் காணப்படுகின்றது.

உண்மையில் தமிழர்களின் சாதனையாக இக்கோயிலைக் குறிப்பிடலாம். இங்குள்ள சிற்பங்களில் மகரங்களும், போர் வீரர்களும், வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும், அவற்றின் மீதேறி பயணம் செய்பவர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிருந்ததாக கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. நாயக்கர் காலத்தில் ஒரே கல்லால் கட்டப்பட்டுள்ள நந்தியானது, 14 மீற்றர் நீளமும், 7 மீற்றர் அகலமும்,3 மீற்றர் உயரமுமானதாகும்.


1987ம் ஆண்டு  ஐக்கிய நாட்டு கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், இக்கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்திய மத்திய அரசானது 1954ம் ஆண்டில் ஆயிரம் ரூபாய்த் தாளையும் ,1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜ ராஜ சோழன் உருவம் பதித்த இரண்டு ரூபாய் முத்திரையையும் , ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு 2010 ம் ஆண்டு 5 ரூபாய்முத்திரையும் நாணயத்தையும் நினைவாக வெளியிடப்பட்டது.

                               Tanjai1000.jpg

இத்தகைய சிறப்புமிகு கோயிலில், 2 வித்தியாசமான உருவங்களுள்ளன. அவற்றிலொன்று தலையில் தொப்பியுடன் காணப்படும் மேலைத்தேசத்தைச் சேர்ந்தவனின் உருவச் சிலையாகும்.
மற்றைய உருவம் இப் பெண்ணின் சிலையாகும்.


இச் சிலைகளுக்கும்  சோழ மன்னனுக்கும் என்ன தொடர்புண்டு? 
இவை புலப்படுத்தும் கருத்துக்கள் என்ன?

எனும் வினாக்கள் நம்முள் தொக்கி நிற்கின்றன. இச்சரித்திரத்தை இன்னும் ஆழமாகத் துளாவினால் நமக்குரிய விடை கிடைக்குமா! பொறுத்திருந்து பார்ப்போம்!

- Jancy Caffoor-

2012/12/17

ஏனடா !


நாட்காட்டிக்  கிழிசல்களில்
எட்டிப் பார்க்குமென்  நினைவுகள்..........
சோரந்தான்  போயின
உன் வில்லத்தனத்தில்!

நினைக்கவேயில்லை............
அணைத்தவுன் கரங்களே
என்னுள்.........................
அக்கினி யாகம் நடத்துமென்று!

வெறுமை வெளியில்........
அந்தரிக்கின்றேன் -
என்னையே உன்னிடம்
இழந்தவளாய்...........

உன்னை உச்சரித்த என்னுதடுகள்
இப்போ................
உலர்ந்தே உயிரறுந்து போனது
உன் பொய்மையன்பில்!

நீ..............நல்லவனா கெட்டவனா!
காலத்தின் காலடியில்
வினா குவிந்து கதறுகின்றது
என்னைப் போல் அனாதையாய்!

வலிக்கிறதடா............
என் மார்பிலுன் தடம் பதித்து
இன்னொரு மதியுடன் இணையவே........
என் நெஞ்சில் குருதி பிடுங்கினாய்!

மலையேறி மாலை கொண்டவுன்
மனதில்..................ஏனடா
இல்லையென்றாய் எனக்குமொரு
மாலை தர!

என்னில் பற்றென்றே - லேசாய்
கற்புமுறிஞ்சி களி கொண்ட
கலியுக நாயகனே - ஏனடா
 கலி வார்த்து காணமற் போனாய்!

"போய்த் தொலைகிறேன்"
உன் வார்த்தைகளினி எனதாக.............
சமுத்திரம் வாய் பிளக்க
நடக்கின்றேன் மரணம் தேடி!

நாளையென் கல்லறையில்- உன்
நிழலைக் கூடத்தொடுக்காதே!
என் கண்ணீர் ஈரம் .........
உன் பாதம் பட்டு உலர்ந்து விடலாம்!

ஜன்ஸி கபூர் 

கனவே கலையாதே!


இருள்ச் சலனத்தில்
விழிக்கின்றாய் கனவாய்....!
அல்லி மோகித்த நிலாவில்......
அலைகின்றாய் ஒளியாய் !

நாணத்தில் மூடிக் கிடந்தவுன்
பார்வைகள்....................
மெல்லத்  துடிக்கின்றன
எனுள் படரும் வரமாய்த் தாவ..........

வெண்முகில்களால்
துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விண்மீன்கள்........
அவசரமாய் விழுகின்றன - உன்
முத்தத்துக்குள் மின்னொளி பாய்ச்ச!

சேலையவிழ்த்த மரவிடுக்கில்- உன்
விரல் நுழைத்து நீ வரையும்
நம் பெயரோ................
தரை தொடும் காற்றில் தள்ளாடிக் கிடக்க!

விழி நிமிர்த்திப் பார்க்கின்றேன்- ஏக்க
மொழி சற்றுப் பிசைந்து..........
சிம்பொனியாய் நழுவுகின்றாய்
என் மூச்சுக்குள் உன்னை நிறைத்து!

இருள் இன்னும் கவிழ்ந்துதான்
கிடக்கின்றது- நீயோ
விடியலுக்கஞ்சி மெல்ல விழி நழுவுகின்றாய் - என்
கனவிலிருந்து விலகி!


ஜன்ஸி கபூர் 



வானவில்லாய்











தினம்



எப்பொழுதும்
வீட்டில் இடிமுழக்கம்
அப்பாவால்!

மழையாகிப் போவார்
அம்மாவும்!

நானோ காற்றாகத் துடிப்பேன்
வெளியேற.............!

இயற்கையே எங்கள் வீட்டில்தான்
தினம்

வாருங்க ளுங்கள்
இதயம் துறந்து ..............!

தருகின்றோம் எங்கள் சோகம்
கொஞ்சம் வடித்து!


ஜன்ஸி கபூர் 





தோற்றங்களும் தொழில்களும்......


காலம் - 16.12.12
இடம் - வவுனியா, தனியார் பஸ் நிலைய அருகிலுள்ள சைவ உணவகம்

கடிகாரம் 8.30 இனை தொட்டு நின்றதும், வியர்வைத்துளிகள் உடலை நனைத்தன. 9 மணிக்கு B,Ed வகுப்பு.....அதுக்குள்ள சாப்பிட்டுட்டு, ஆட்டோ பிடிச்சு பூந்தோட்ட கல்விக் கல்லூரிக்குப் பறக்கணும்...

வேகத்தை விரைவுபடுத்தி, சைவ உணவகத்தையடைகின்றேன்.விடுமுறை நாளென்பதால் உணவகம் முழுதும் தலைகள் நிறைந்திருந்தன. இருக்கை தேடிய போது, தனித்திருந்த யுவதியொருத்தியின் மேசை அகப்பட்டது. அருகே சென்றேன்..

"யாராவது இருக்கிறாங்களா"

சிங்களத்தில் கேட்டேன்........இல்லையென முறுவலித்தார். அமர்ந்தேன்....சொற்ப நொடிகளில் சினேகப் பார்வைகளும் புன்னகைகளும்  இடமாறின. ஆடர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்திருந்தோம்.

எங்கள் மௌனத்தை நானே உடைத்தேன் மெதுவாக.........

"இங்கதான் வர்க் பண்றீங்களா" - நான்

"நான் ஆமி, கிளிநொச்சி காம்ல இருக்கிறேன், லீவுக்கு குருணாகல் வீட்டுக்கு போறேன்"  - என்றார்  புன்னகையைச் சற்றும் குறைக்காதவாறு.........

நானும் என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது எமக்கான உணவுகளும் மேசைக்கு வந்தன....

இரண்டு தோசைகளை பீங்கானிலிட்டு சாப்பிடத் தொடங்கினார். நானும் இடியப்பத்தை காலி பண்ணத் தொடங்கினேன்....

"காம்ல எப்பவும் சோறுதான், இப்பதான் இத சாப்பிடுறேன்" என்றார் அந்தச் சிங்கள சகோதரி...

"ம்ம்......வடையும் சாப்பிடுங்கள்......ருசியா இருக்கும்" - நான்,

"ம்ம்....ரஸயி , இந்த "பொல் சம்பல்"     கிரைண்டர்ல அரைக்கிறதா "   மீண்டும் மலர்ந்தார்.

இவ்வாறு தொடர்ந்த சம்பாஷணை, எங்கள் உணவுத்தட்டு நிறைவடையும் போது முடிவுக்கு வந்தது.

அந்த இராணுவப் பெண், கைகளை கழுவதற்காக எழுந்த போது, பக்கத்தில் காலியாக இருந்த மேசையை நிரப்ப நான்கு வாலிபர்கள் வந்தார்கள். அவர்களின் பார்வையும் இந்தப் பெண்ணின் மீதுதான் மொய்த்துக்கிடந்தது. அவர்களும் இராணுவத்தினர்தான். விடுமுறைக்காக ஊர் செல்ல பஸ்ஸிற்கு வந்தவர்களாக இருக்க வேண்டும்.

அந்தப் பெண் தங்களைப் பார்க்கட்டுமென்ற நப்பாசையில் கிசுகிசுத்தார்கள். ஆனால் அவளோ அவர்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. என்னிடம் விடைபெற்றுச் சென்றார்............

அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த, அவர்களில் ஒருவன் மெதுவாகச் சொன்னான்

"டேய்.....அவள் ஆமிடா"

அவளைப் பற்றி எதுவுமோ தெரியாத நிலையில், அந்த இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெற்ற அவள் உடலமைப்பைக் கொண்டு அவளைச் சரியாக "ஆமி"யாக இனங்கண்டது ஆச்சரியமாக இருந்தது. தன் தொழிலை இனத்தை சரியாக இனங்கண்ட திருப்தி அவர்கள் முகத்தில்.........

"ரீச்சர்............"

கையில் பில்லுடன் நின்று கொண்டிருக்கும் சர்வரைக் கண்டதும், மனதுக்குள் சிரித்தேன்....

"தோற்றத்தைக் கொண்டு தொழிலை எடைபோடும் நம்மவர்கள் புத்திசாலிகள் தான்"

பணத்தைக் கட்டுவதற்காக வெளியேறினேன்!







2012/12/15

தும்மல்


அவள்.............

இருதயம்
நின்று மீள்கின்றது
ஒவ்வொரு தடவையும்!

அவன்........!

அன்பே!
பார்த்தாயா..........
உன்னை எத்தனை தடவைகள்
நினைக்கின்றேன் என்று!

அவள்............!

புரிகிறது.........
என்னுயிரையே நீதான்
பறிப்பாயென்று!





2012/12/14

கண் வழியே


முகம் காணா  நேசங்களின்
தேசம்!

தொலைதூர நிழல்களின்
சங்கமம்!

மின்னஞ்சல்கள் வழி திறக்க
விழி காட்டும் முகங்களிங்கே!

மின்காந்த  அலையோரம்.......
சலசலக்கும் குசலங்கள்!

வாழ்த்தும்  உள்ளங்கள்..........
தாழ்ப்பாளிடும் பேதங்களை!

நேசமிங்கே இலவசம்தான்............நல்
 நெஞ்சங் கொண்டோர்க்கு!

விழி கசியும் நீருறிஞ்ச- பல
கைக்குட்டைகளிங்கே!

மலரின் மௌனங் கூட
மொழி பெயர்க்கப்படும் நேசமாய்!

இங்கே...........!

இரவின் விழித் திறப்பில்
கிறங்கிக் கிடக்கும் "சட்"கள் !

பாசத்தோடு "மெஸேஜ்"
கோஷமிட்ட லையும்!

"லைக்கும்". "கொமாண்ட்ஸூம்"
சிரிக்கும் அன்பைச் சுமந்து!

காதலும் காமமும் கூட
கழுகாய் காத்திருக்கும்!

 நட்பின் சுகத்தில்
மனசும் திளைக்கும்!

அரசியல் மேடும்
அதிரடி போடும் அந்தரங்களை!

கருத்துக்களும் படிப்பினைகளும்
பின்தொடரும் நம் சுவரோரம்!

குழுக்களின் கும்மாளத்தில்
குஷியாய் எண்ணங்கள் பறக்கும்!

"பேஜ்" எல்லாம்
பேஷாய் நம்மை எட்டிப் பார்க்கும்

பேந்தப் பேந்த முழிக்கும்.........
பேக் ஐடி பழிக்கஞ்சி!

நம் சாம்ராஜ்யத்தில்.......
நாம் தாம்   கிரீடங்கள்!

முகநூல் - நம்
இன்றைய  தோழமை!


ஜன்ஸி கபூர் 



















2012/12/13

காதல் வந்தால்


பருவம் வந்ததில்
கருப்பொருளாய் காதல்.........!

ஆத்மாவின் சரீரங்களில்
அழகான அவஸ்தை!

முட்களின் படுக்கையிலும்
ஆட்கொள்ளும் பஞ்சணைகள்!

காதல்...........
மகிழ்வின் கைத்தடி!

கனவுக்குள் எதிர்பார்ப்புக்களை
ஏற்றி வைக்கும் ஏணி!

உதடுகளின் உல்லாசம்.........
உற்பத்தியாகும் மின்சாரமாய்!

இறக்கைகள் சுமக்கும் சிலுவையாய்
உருமாறும் இதயங்கள் !

செல்லின் சிணுங்கல்களில்- உயிர்
செல்கள் செல்லமாய் முறைக்கும்!

காத்திருப்புக்களில்.........
வியர்த்திருக்கும் கடிகார முட்கள்!

விடியலை இருளாக்கி
இருளை விடியலாக்கும் மந்திரம்!

சுனாமியின் சுழற்சி போல்
தடுமாறும்  மனசு!

கிறுக்கல்கள் கவிதையாகும்
புலம்பல்கள் காவியமாகும்!

நிலவும் விண்ணும்
களவாய் அடிக்கடி கால் தொடும்!

நினைவுகளின் நெருடல்களெல்லாம்.........
கனத்துக் கிடக்கும் போதையில்!

விழித் தேடலில் எப்பொழுதும்
வீழ்ந்து கிடக்கும் ஓர் உருவம்!

நெஞ்சக் கூட்டுக்குள் பத்திரமாகும்- சிதறிய
கொஞ்சல்களும் வருடல்களும்!

அட........இதுதாங்க காதல்!





அவள்


தொலைந்து போன வசந்தங்களுக்காய்
யாகமிருக்கும்
சராசரிப் பெண்!

வறுமைக் கற்பழிப்பால்
வசந்தங்களைத் தொலைத்த 
(அப்) பாவியிவள்!

கண்ணாடிச் சிதறல்களின்
சாம்ராஜ்ஜியத்தில் 
முடி சூட்டிக் கொண்ட ராணியிவள்!

காற்றின் காமத்தில்
மூச்சுத் திணறும் குப்பி விளக்கில் 
எரிந்து கொண்டிருக்கின்றது
அவள் ஆசைகள்!

அவள் மனச் சிதைவுகளின் விம்பங்கள்
 தெறிக்கின்றன 
விரக்தியாய்!

இதழ் சிதைக்கப்பட்ட
ரோசாத் துண்ட மவள் 
வீழ்ந்து கிடக்கின்றாள் அடுக்களையில்!

புகையுறிஞ்சித் தோற்றுப் போன
சுவாசம் 
சுகம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றது!

துரத்திச் சென்ற நாட்களெல்லாம்
உணர்வறுத்து 
கண்ணீருக்குள் அவிந்து போனதில்

விரல்களில் விழுந்து கிடந்த
மருதாணிச் சாறு.கூட 
மூச்சையற்று வெளிறித்தான் கிடக்கின்றன!

உதரக் குழி விட்டுச் செல்லும்
பசி 
அடிக்கடி
அலைந்து கொண்டிருக்கின்றது அனாதையாய்!

கிழிசல்களால்
இளைப்பாறிக் கொண்டிருக்கும் மேனியோ 
பருவத்தைக்  கரைத்துக் கொண்டிருக்கின்றது
காலாவதியாகி !

யார் யாரோ நினைவுக்குள்
எட்டிப் பார்த்துச் செல்கின்றனர் 
அனுமதியின்றி!

சிரிக்கின்றாள் மெதுவாய் 
பூச்சியங்களைத் தொடாதவர்களின்
ராச்சியங்கள் கூட அவள் வசமில்லை!

ஏனெனில் 
அவள்
ஏழ்மை எழுதிச் செல்லும்
புதுக் கவிதை!

ஜன்ஸி கபூர் 

2012/12/12

மாயன் கலண்டர்


(இந்தப் பதிவை வாசிப்பவர்கள் கவனத்திற்கு, மாயன் கலண்டர் பற்றியே தற்போது பேசப்படுவதால், அது தொடர்பான பார்வையே இது. எல்லாவற்றி்ற்கும் மேலாக, படைத்த இறைவனை மீறி உலகை அழிக்கும் சக்தி ஏதுமில்லை எனும் நிலைப்பாட்டுடனேயே இப்பதிவை வெளியிடுகின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்!

2012 டிசம்பர் 21....................!

உலகம் பரபரப்புடன் விழி வைத்துக் காத்திருக்கின்றது. உலக அழிவு என்ற ஒன்று இருப்பதை சகல சமயங்களும் ஏற்றுக் கொண்டாலும், அந்த தினம் நிச்சயமாக 2012 டிசம்பர் 21 ஆக இருக்காது என அடித்துக் கூறுகின்றது.

உலக அழிவு தொடர்பாக புனித குர் ஆனில் பல அறிகுறிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சில தஜ்ஜால் வருகை, கடும் புகை, ஈஸா நபி மீள் பிறப்பு ஆகும்.

கிறிஸ்தவ சமயமும் பின்வருமாறு கூறுகின்றது-

உலக அழிவு என்பது இறுதித் தீர்ப்பு நாள், அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். நல்லவர்களாக மரணிக்க வேண்டும் என்கின்றது.

பௌத்தம் பின்வருமாறு கூறுகின்றது.

உலகம் உடையக் கூடியது. அதர்மம் செய்பவர்கள் அதிகரிக்கும் போது உலகம் தானாக உடைந்து விடும் என்கின்றது.

விஞ்ஞானிகளோ, மனிதனின் செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் இயற்கைச் சீற்றமே உலகை நசுக்கி விடக் கூடியது என்கின்றனர்.

ஆக மொத்தத்தில் உலகம் அழியாது என நாசாவும், விஞ்ஞானிகளும், சமயங்களும் உறுதியாகக் கூறும் போது மாயன் கலண்டர் மட்டும் அழியும் எனச் சுட்டி நிற்கின்றது. இவ்வாறான பரபரப்பினால் உலகம் அழியுதோ இல்லையோ மாயன் நாட்காட்டி தொடர்பான விபரம் பலருக்கு தெரிந்திருக்கின்றது.

மாயன் நாட்காட்டி  அல்லது கலண்டர் என்றால் என்ன எனும் தேடலில் நானும் ஈடுபடத் தொடங்கிய போது கிடைத்த தகவல்களை இங்கு பகிர்கின்றேன்.

உலக நாகரிக வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட எகிப்திய நாகரிகம் நிலவிய காலத்தில், கி்மு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னமேரிக்காவில் உள்ள மெக்சிக்கோ, குவாதிமாலா, ஹூந்திராஸ் போன்ற இடங்களில் வாழ்ந்த உயர் நாகரிகத்தை உடைய மக்கள் கூட்டமே மாயன் கூட்டமாகும். கி்மு 2600 வருடங்களுக்கு முன்னர் இவர்களின் மாயன் கலாசாரம் உருவாக்கப்பட்டது. கி.மு 150 வருடமளவில் இவர்களின் மாயன் கலாசாரம் உச்சநிலையை அடைந்தது.

3500 வருடங்களுக்கான வாழ்க்கைக் காலத்தைக் கொண்ட  இவர்கள் கடந்த 15ம் நூற்றாண்டில் அழிந்து போனார்கள். மாயன் இனத்தவர்கள் கட்டிடக்கலை. வான் சாஸ்திரம், கணித சூத்திரம், ஜோதிடம், எழுத்து போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினர். 20 அடிமான எண் முறையைப் பயன்படுத்தினர். அவர்களின் பூஜ்ஜிய பயன்பாட்டு முறை மிகச் சிறப்பானதொன்று.

மாயன்கள் இரும்பு போன்று உலோகங்களைப் பயன்படுத்தாமலே, உறுதிவாய்ந்த மிகப் பெரிய பிரமிட்டுக்களையும் கட்டினர்.

சூரியன், சந்திரன் சுழற்சி பற்றி நுட்பமாக அறிந்து வைத்திருந்தனர். ட்ரெடெக்ஸ் என்பது மாயன் பஞ்சாங்கக் கலண்டராகும்.

உண்மையில் இவர்கள் விஞ்ஞானிகளை விடவும் புத்திசாலிகளாக இருந்தனர்.

கி.மு 350 - 400 ஆண்டுகளில் வாழ்ந்த மாயன் மன்னனின் கல்லறை கண்டுபிடிக்கப்ட்ட போது, அதில் பல சித்திர வேலைப்பாடுகள் அவதானிக்கப்பட்டதாம். நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் மாயன் இன பூர்வீகக் கலாசாரமும் முற்றாக அழிக்கப்பட்டது. ஐரோப்பிய குடியேற்றம், விசித்திர மூடநம்பிக்கைகள், பங்காளிகளின் சண்டைகள் போன்ற பல்வேறு காரணங்களால் மாயன் இனம் அழிவடைந்தது.

இவர்களால் உருவாக்கப்பட்ட நாட்காட்டியே மாயன் நாட்காட்டியாகும். இது கி.மு 313 ல் உருவாக்கப்பட்டு 2012 டிசம்பர் 21 உடன் ஓய்வடையப் போகின்றது.  நமது கலண்டருக்கும் முரண்படாத தன்மையைக்  கொண்டுள்ள
மாயன் கலண்டர்  உலகின் பல நிகழ்வுகளின் எதிர்வுகூறலாக விளங்கியதை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

பிரச்சினையே இனித்தான் ஏற்படப்போகின்றது!

இக்கலண்டரின் இறுதி நாளாக 2012.12.21 காலை 11:மணி 11 நிமிடம் 11 விநாடி எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இதுவே கடைசி நாளாக இருக்கலாம் எனும் யூகத்தில் மக்களால் உலக அழிவு தொடர்பான கதைகள் வெளியே கிளம்பியிருக்கின்றன. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நாம் பயன்படுத்தும் திகதி உள்ளிட்ட பல விடயங்களை உலகிற்கு முன்வைத்தவர்கள் இந்த மாயன் கூட்டத்தினர். இவர்கள் சூரியன் 2012 உடன் செயலற்றுப் போகும் என எதிர்வு கூறியுள்ளனர்.

சூரிய மண்டலத்திற்கு 7 நாள் என்பது பூமியைப் பொறுத்தவரை 25,662 வருடங்களாகும். இதனை மாயன் கலண்டர் 5 பிரிவுகளாக வகுத்துள்ளது.
ஒவ்வொரு பிரிவும் 5125 வருடங்களைக் கொண்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 21ந் திகதி 5 வது கட்டம் முடிவடைவதால் உலகம் அழியும் எனக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

மாயன் கருத்துக்கணிப்பின்படி, கி.மு  3113 வருடங்களுக்கு முன்னர், பாரிய வெள்ளப்பெருக்கினால், நான்காவதாக வாழ்ந்த சமுதாயம் அழிந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் அன்றைய தினத்தில், சூரியன் எமது விண்மீன் மண்டலத்திற்கு நேரடியாகப் பயணிக்கின்றது. இந்நேரத்தில் விண்மீன் மையத்திலுள்ள சூப்பர்நோவா கருங்குழி, சூரியன் மற்றும் பூமி என்பன ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளன. அப்போது விண்மீன் மையத்தில் இருந்து வரும் காந்த அலைகளால் சூரியன், பூமி நன்கு பாதிக்கப்படவுள்ளது. இந்நேரத்தில் சூரியப்புயல்  ஏற்படும். இது 26,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என மாயன் கலண்டர் கூறுகின்றது.


 இச்செயற்பாட்டின் பின்னணியை நோக்கி, விஞ்ஞானம் தனது கருத்துக்களை இவ்வாறு அலசுகின்றது.சூரியனிலிருந்து வெளிப்படும் மிகப்பிரகாசமான  சுவாலையின் கதிர்த்தாக்கத்தினால் செய்மதிகள் பாதிக்கப்படும். வானொலி அலைகள் பாதிக்கப்படுவதனால், வானொலி, தொலைபேசிச் சேவைகள் பாதிக்கப்படும். வெளித்தள்ளப்படும் ஒளி வட்ட வெளித் தள்ளல்களால் மனித இனம் பாதிக்கப்படும். கதிரியக்க நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படும்.  இவை 5 நாட்களுக்குள் புவியை அடையும். மின்சாரம் கூடத் தடைப்படலாம். இது விஞ்ஞானிகளின் பார்வையாகும்.

மேலும் மாயன் கலண்டர் இது தொடர்பாக கூறுவதாவது,

இப்பாதிப்பினால் பூமியிலும் காந்தப்புலங்கள் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக துருவப் பகுதிகள் இடம்மாறும் என்றும், புவியின் துருவப்பகுதிகள் இடமாறுவதால், புவியில் பாரியளவில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமென்றும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய அளவிலானப் புகை மற்றும் எரிமலைக் குழம்புகள் போன்றவற்றால் ஏற்படும் புழுதி சூரியனை மறைக்குமென்றும், இதன் காரணமாக 40 வருடங்களுக்கு சூரியனைப் பார்க்க முடியாதென்று மாயன் சமுகத்தினர் எதிர்பார்ப்பை முன்வைத்தனர். 

துருவங்களின் இடப்பெயர்ச்சியை  ஏற்றுக் கொண்ட  விஞ்ஞானம், அது 2012ம் ஆண்டுதான் என உறுதிப்படுத்தவில்லை.

மாயன்களின் விண்வெளி ஆய்வு தொடர்பான சில படங்கள் இதோ...

                                                                 ராக்கெட்


                                                       விண்வெளிக்கு பயண நிலை


                                                            விண்வெளிப் பயணம்




முற்றாக அழிந்த ஓர் இனம், உலக அழிவைப் பற்றிக் கூறியதால், மீண்டும் இன்றைய சந்ததியினரின் பார்வையில் தளிர்த்துள்ளது. ஓர் அழிந்த சந்ததியின் வரலாற்றை மீண்டும் வாசித்தறிவது புதுமையான அநுபவமே!

உண்மையில் உலகம் அழியும் என பல தீர்க்கதிசிகள் முன்னர் கூறிய  பல நாட்களெல்லாம் அமைதியுடன் எந்த ஆபத்துமின்றி கழிந்து விட்ட நிலையில் , மீண்டும் நாம் இப்போது  மாயன் கலண்டர் பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

 உண்மையில் சூரியனின் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்கள் திடீரென உலகம் ஒரேநாள் ஸ்தம்பிதமடையாது. இயற்கைச் சீற்றங்கள்  பல தன் கோர முகங்களைக் காட்ட வேண்டும். சமயங்கள் முன்வைக்கும் அறிகுறிகள் தென்பட வேண்டும். அப்பொழுதே இவ்வுலகின் சுவாசம் நிறுத்தப்படும். அது படிப்படியான நிகழ்வுகளே!

இயற்கையை விட அதனைப் படைத்த சக்தி வாய்ந்த அந்த இறைவன் அசைத்தாலன்றி, இந்த உலகம் எந்த மாற்றத்தையும் காட்டப் போவதில்லை.

இன்ஷா அல்லாஹ்........டிசம்பர் 22 நாம் மீண்டும் சந்திப்போம்! சந்திக்கலாம்! நம்மைச் சுற்றி இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டால், அந்த அனுபவத்தையும் பகிரலாம்.

வீடியோ

உலக அழிவு பற்றி திருமறையின் திருவசனத்திலொன்று
-------------------------------------------------------------------
"அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்;நீர் கூறும்:"அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கின்றது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது. அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும், அது உங்களிடம் வரும் அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கின்றார்கள், அதன் அறிவு நிச்சயம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக" (ஸூரதுல் அ ராப் - 187)

-Jancy Caffoor-


2012/12/10

அன்பென்ற மழையிலே


உடைந்து வீழ்ந்தது
விண் வைரமொன்று- அதில்
முகம் பதிக்கின்றேன் லேசாய் 
அழகாய்ச் சிரிக்கின்றா ரென் னன்னை!

தொலை தூர ஆகாயம்
களையிழந்து வெறிக்கின்றது - என்
அன்னையின் அன்பாழத்தில்
தான் தோற்றுப் போனதாய்!

மலரிதழ்களின் விளிம்போரம்
விரல் துடைக்கின்றேன் 
நினைவுகளாய்த் தெறிக்கின்றது - என்
அன்னையின் மென் கரங்கள்!

அமைதி வருடலால்
அடங்கிக் கிடக்கின்ற இரவுகளெல்லாம் 
முகிழ்க்கும் உறக்கம் பிளந்து
கனவாய் விழி திறப்பார் என் னன்னை!

நசியும் கடலலைகளில்
புரளும் நீர் மேனியாய் 
கரையும் மன அவஸ்தைகளை
அகற்றும் தேவதையாய் தினமும் என் னன்னை!

சோம்பலுற்று விடிகின்ற வென்
ஒவ்வொரு நொடிப் பொழுதையும் 
இயக்கும் கடிகாரமாய்
இன்முகம் காட்டுவதும் என் னன்னையே!

வெம்மையின் இம்சிப்புக்களால் என்னுள்
தளிர்க்கும் கண்ணீர்த் துளிகளை 
உலர்த்தும் தென்றலாய் - என்
உலகினை யாளும் மூச்சுக் காற்றும் அவரே!

ஜன்ஸி கபூர் 

ஸ்பரிசம்



பெண்ணே!
உன் புன்னகைச் சிதறல்களின்
வாசம் தேடி
அலைகின்றதே
வண்ணாத்துப்பூச்சி!

பாவம்............
மலர்களோ காத்திருக்கின்றன
உன் விழி வண்டுகளின்
முகவரிக்காய்!


தரையில் விழுந்து கிடக்கின்றேன்
நுரை பூசும் உன் தழுவலுக்காய்..........

என் தேகம் அணைக்கும்
உன் அலைகள்...............

விட்டுச் செல்கின்றனவே
உன் ஈர முத்தங்களை!


தென்றல் மேனி குடைகின்றது
பூக்களாய் சிதறுகின்றன
குளிர்த் துளிகள்!

உன் அருகாமையின்
ஸ்பரிசங்களால் 
வெம்மையின் வெடிப்புக்கள்
நரம்பை உடைத்தெறிகின்றனவே!

பார்க்காதே என்னை - நம்
விழிப்பூக்களின் மோதுகையால் 
வண்ணத்திகள் - என்
பெண்மைக்குள் சிறகு நுழைத்து
விட்டுச் செல்கின்றனவே தவிப்பை!

நீயே 
என் வாழ்வின் முகவுரை!

இருந்தும் 

நானிட்டேன் சில மறுப்புரைகள்!
அவையென்
கற்பின் காப்புரைகள்!

புரிதலும் பரிவுமே- மெய்
காதலின் சிறப்புரைகள்!

புரளும் அலை கூட சலிப்பதில்லை
தரை நனைத்து மீள் கடல் நுழைய 

ஆதவச் சிதறல்கள் சினப்பதில்லை
ஆர்வமாய் தினமும் நம்மை யெட்டிப் பார்க்க 

காற்றுக் கூட தோற்பதில்லை
வியர்வைத் துகள்களை துவம்சம் செய்ய 

மனிதன் மட்டும்......!!

தோல்வியின் இம்சிப்பால்
வாழ்வையை நசித்துக் கொள்கின்றான்!


ஜன்ஸி கபூர்