About Me

2012/06/30

முத்து !



வாழ்க்கையென்பது மிக நீண்ட பயணம்.............

இப் பயணத்தில் நம்மை நிலைப்படுத்த உறவு, நட்பு, அறிந்தவர் எனும் தரிப்பிடங்கள் நம் வெட்டுமுகங்களாகின்றன. சில நட்புக்கள் காலவோட்டத்தில் கரைந்து போக, சிலவோ ஞாபகப் பரப்பிலிருந்தும் அழியாத உணர்வுப் பதிவாகிக் கிடக்கின்றன.

பாரதம் தந்த பாசக்கிளி. 

"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"

இந்தத் தாரக மந்திரத்தால் தன் உள்ளத்தை உரப்பேற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிதயம்..............

முத்து .......!


அன்று...


என் முகநூல் ஆரம்பப் பயணத்தில் நண்பராக என்னுள் இறங்கி, இன்று அன்புத் தம்பியாக என் வாழ்க்கைப் பூமியில் நிலையூன்றியிருக்கும் உறவுத் துடுப்பிவர். பெயரில் முத்து இருந்தாலும் அவர் எண்ணங்கள் யாவும் வைரத்தை விட பெறுமதியானவை!

அன்பான உள்ளம் அவருக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை. நிறையப் படித்தும் கூட துளியளவு கூட கர்வம் கிடையாதவர். நட்புக்கு இன்முகமும் நேசமும் காட்டி மனசுக்குள் மானசீகமாய் பரவிக் கிடப்பவர்.

மதம் மனிதங்களை மலினப்படுத்தும். ஆனால் முத்தோ மதத்தில் "மதம்" கொள்ளாமல், பிற மதத்தவரின் உணர்வுகளைக் கொல்லாமல் தன் மதமாய் பிற மதங்களையும் நேசிக்கும் மானிடப்பண்புள்ள நல்ல இளைஞர்.

பல சோதனை ஆர்ப்பாட்டத்திலும் அமைதி காக்கும் இந்த இளைஞர். தன்னம்பிக்கையுடன் வாழ்வை ஜெயிக்கும் செயல்வீரர்.

என் முகநூலின் பல பக்கங்களின் விடியல் அவர் காலை வணக்கத்துடனேயே விடிந்திருக்கின்றது.

"அக்கா"

மலர்ச்சியில் பல வார்த்தைப்பனித்துளிகள் செய்திகளாய் பரவசப்பட்டுக் கொண்டிருக்கின்றன அவர் விடும் பாசத்தூதாய்!

அவர் முகநூல் பக்கங்களிலும் கூட காலை வணக்கம் வெறுமையாக அல்ல நல்ல படிப்பினையூட்டும் சிந்தனை தாங்கிய செய்தியுடன் கூடிய புகைப்படத்துடனேயே எப்பொழுதும் சிரிக்கின்றன....

முத்து............

கலாரசிகன்......கலைத்திறனில் பிடிப்புள்ள கலைஞன்.....!

அவர் சிந்தனைக்குள் வீழ்ந்து கிடப்பவை உயிர்ப்போட்டமுள்ள புகைப்படங்கள் தான்..அவரது புகைப்பட ஆல்பம்...கருத்துச் செறிவுள்ள சேமிப்பகம்!

 அந்தச் சேமிப்பிலிருந்து சில துளிகள் இப் பக்கத்தை நிறைக்கின்றன பெருமிதத்துடன்........


தான் ரசிக்கும் அழகான , அறிவுபூர்வமான, அற்புதமான, கருத்துச் செறிவுள்ள புகைப்படங்களை ரசிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அப் படம் பேசும் பின்னணியையும் அழகாகப் பதிப்பதில் அவருக்கு நிகர் அவரே!

இவரது புகைப்படங்கள் அழகு, வறுமை, அன்பு, இயற்கை, வாழ்க்கை,பொழுதுபோக்கு என பல வார்ப்புக்களிலும் தெறித்துக் கிடக்கின்றன முகநூல் பக்கங்களில்!

தான் கற்ற படிப்பினை, அறிவுத்துடிப்பாக்கி சாதனைகளின் பக்கம் சாய்ந்திருக்கத் துடிக்கும் இந்தச் சகோதரனின் வெற்றியின் கனம் நாளுக்கு நாள் ஏறுமுகம் காட்டியே நிற்கும் என்பதில் ஐயமில்லை.

நம் வாழ்வின் ஆயுட் பரப்புக்களின் எல்லைக்குள் நாம் சாதிக்கும் சாதனைகளே நம் பெயரை இப் புவியில் பதிக்கவல்லன. அந்த வகையில் முத்தின் நேசத்துக்குள் பொதிந்திருக்கும் பல உறவுகள் அவர் பெயரை அன்போடு வாசித்துக் கொண்டுதானிருக்கின்றன. எப்பொழுதும் வாசித்துக் கொண்டுதானிருக்கும்.

தொடர்பாடலே மனித உணர்வுகள் பகிரப்படும் வாசற்றலம்!


தொடர்பாடலின் போது மனமுரண்பாடுகளும் தாக்குவது இயற்கையே!


அவ்வாறான சந்தர்ப்பங்களில் சகிப்புத்தன்மையுடன், கண்ணீர்க்கசிவின் வெளிப்படுத்துகையை ரகஸியப்படுத்தி உள்ளத்துக்குள் போராடும் போராட்டமும், அதன் சுமையும் நானறிவேன். இருந்தும் அத்தகைய நிலையில் கூட வழுக்களை வெற்றிப்படுத்தும் ஆற்றலை நானும் கண்ணீரில் கரைந்து உணர்ந்திருக்கின்றேன்...

வாழ்க்கை எட்டாத தூரத்தில் விரிந்து கிடந்தாலும் அதனைத் தொட்டுவிடும் மனோபலத்தின் இருக்கை முத்துவிடம் அதிகமாக இருப்பதைக் காணும் போது மனம் மகிழ்வே.......!

இவற்றுக்கும் மேலாக நான் பதிவிடுபவற்றை உடனுக்குடன் ஆதரித்து விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தரும் இந்த நேசக்கிளியின் பாசத்திற்கு எல்லை கட்டுவது சாத்தியமற்றதே!

முத்து ..........

உங்கள் வாழ்க்கைப் பயணம் சந்தோஷமாக விடியட்டும் !

என் வாழ்த்துக்களின் புன்னகை உங்கள் மனதை நிறைக்கட்டும்! 

- Ms. Jancy Caffoor -




2012/06/28

சொர்க்கத் தீவு !


வெள்ளி நிலாக் கொஞ்சலில் 
உணர்வுகள் களித்துக் கிடக்கின்றன
இப்போதெல்லாம்!

நேர்த்தியான என் மாளிகையில் 
சிதறிக் கிடக்கின்ற பொருட்களெல்லாம்
கண்ணடிக்கின்றன வெகுளியாய்!

தூசு கூடச் செல்லாத என் காற்றில்
மாசற்ற அவள் பேச்சொலி 
சிலிர்த்துக் கிடக்கின்றன சில்லறையாய்!

காலைப் பனிக்குள்ளும் பண்ணிசைக்கும்
சிட்டுக்களின் சிரிப்பலையாய் - அவள்
என்னுள் நிரம்பிக் கிடக்கின்றாள்!

தனிமைக்குள் மந்திரிக்கப்பட்டு
இருளுக்குள் கவிழ்ந்திருந்த என்னுள் 
இப்பொழுதெல்லாம் அவளே விடிவெள்ளி!

என் மனதின் துன்பவலைகளெல்லாம்
அவள் புன்னகைக்குள் 
கலைந்து செல்கின்றன இதமாய்!

என் விழிகள் விரிகையில்  
விடியலை சுட்டும் மலரிதழாய் 
வாசனை விட்டுச் செல்வதும் அவளே!

என் பெயரில் இத்தனை அமிர்தமா !
அவளென்னை உச்சரிக்கையில்
சிறகடிக்கின்றேன் பல வெளி தாண்டி!

அவள் பார்வை வீச்சில் 
இத்தனை வசீகரமோ - என்
மனமோ பித்தாகிக் அலைகின்றது
அவள் பின்னால்!

விடியலின் கரமசைப்பில் - எனை
தொட்டுத் தழுவும் அலாரமாய்
வந்து போகின்றாள் அடிக்கடி!

இந்தக் கிளிப்பேச்சில் மயக்கத்தில்
என் சினக் கவசங்கள் 
துகிலுரிக்கப்படுகின்றன மென்னிசையாய்!

இவள் பதிக்கும் முத்தத்தில்  
பவனி வரும் பழரசங்களோ
இடறி வீழ்கின்றன என்னிதழில்!

இப்பொழுதெல்லாம் என் கவனம்
அவள் மீதே சிதறிக்கிடக்கின்றன- இந்த
வெளியுலக வில்லத்தனத்திலிருந்து மீண்டபடி!

உணர்கின்றேன் என்னை நானே
உணர்கின்றேன் - அவள்
தந்திருக்கும் மொத்த அன்பையும் சேமித்தபடி!

இவள் 
குறும்புகளில் கரும்பு பிசைந்து
பயணிக்கின்றேன் - அந்தச்
சொர்க்கத்தீவின் ஆட்சிக்குள் நான் !

(அஸ்கா எங்கள் வீட்டுச் செல்லம். வயது 2  1/2  . அவள் என்னுள் தந்த பாச அருட்டலிது.)


Doctor  Jano இம் மழலையை எமக்களித்த என் சகோதரி

ஜன்ஸி கபூர் 

காத்திரு!




என்னிடம் திரும்பி வா 
எனக்குன் காதல் வேண்டும்!

என் காற்றில் நெய்த தூதோலைகள்
சமுத்திரம் துளைத்துன் கரம் சேரட்டும்!

விண்வெளிச் சூரியப் பூ- நம்
பிரிவின் தீ வார்ப்பில் நசுங்கிப் போகட்டும்!

என்னிடம் திரும்பி வா 
எனக்குன் காதல் வேண்டும்!

என் வழிப் பாதையில் ஒட்டிக்கொண்ட
உன் நேசிப்புக்களால் 
என்னுயிரின் பெண்மை சிலிர்க்கட்டும்!

நம் வேடிக்கைச் சிதறலின்
ஈரத்தில் கூடல் கொஞ்சம்
வெட்கித்து மோகித்துக் கிடக்கட்டும்!

என்னிடம் திரும்பி வா 
எனக்குன் காதல் வேண்டும்!

ஒவ்வொரு நிசப்தங்களிலும்
என் மூச்சின் விரல்களில் - உன்
முத்த ரேகைகள் சுகமாய் சயனிக்கட்டும்!

நீ தந்த தனிமைப் பொழுதின்
காயங்கள் யாவும் 
கண்ணீரில் மௌனித்து கரையட்டும்!

என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!

உன் நிழலோடு 
என் தடங்கள் அலையும் பயணத்தில்
உன் தேசமே சொந்தமாய் வீழட்டும்!

சோகத்தின் துவம்சத்தில் சொக்கிக் கிடக்கும்
இப் பாவையின் ஏக்கம் தீரவே 
மாரியாய் உன் தூறல் மாறட்டும்!

என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!

இருள் கவிந்து மிரட்டும் - என்
திக்குத் தெரியா காட்டின் 
திசைகாட்டியாய் உன் ஞாபகம் வீழட்டும்!

நிசர்சனங்களில் உனையேந்தி
நிழலுக்குள் மறைந்திருக்குமென்னை
உன் கண்கள் மட்டுமே துகிலுரிக்கட்டும்!

என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!

உன் காத்திருப்புக்களின் சுயம்வரத்தில்
தொட்டுக் கொள்ளும் கணங்கள் தோறும் 
உன் மாலை என் தோள் சேரட்டும்!

என்றோ திரும்பி வருவேன்
உன் காத்திருப்புக்கள் எனக்கானால் 
உன் வசம் சேர்ந்திருப்பேன்!



ஜன்ஸி கபூர் 













2012/06/26

சில நினைவுகள்

ஆசிரியர்த் தொழிலில் நானீட்டிய சில பசுமையான சாதனைகளின்  நினைவுகளின் தொகுப்புக்கள் இவை
-----------------------------------------------------------------


வடமத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூல சிறந்த விஞ்ஞான ஆசிரியையாக தெரிவு செய்யப்பட்ட போது



சர்வதேச ஆசிரியா் தினத்திற்காக பாடசாலையில் எனக்குக் கிடைத்த விருது
(குறைந்த லீவு)
தந்தவர் அன்றைய அதிபர் அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்கள் 


தேசிய மட்ட ஆசிரியர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பரிசில் பெறல்
தருபவர் அன்றைய கல்வியமைச்சர் ரிச்சட் பத்திரன அவர்கள்



என் இலக்கிய பயணத்திற்காக யாழ் முஸ்லிம் இணையத்தளம் வழங்கிய "விருது " . 

தருபவர் அமைச்சர் ரிசாட் பதியூத்தின் அவர்கள்







நான் வரைந்தவை

"பெப்ரிக்" ( இந்தியா) வர்ண நிறுவனம் நடாத்திய துணி ஓவியப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இருபத்தைந்து பேரில் முதலிடம் பெற்ற என் தூரிகை அசைவுகள் இவை-




















மீண்டும் உரிய முன்பக்கத்திற்குச் செல்ல வேண்டுமாயின் இதனை அழுத்துக

விபத்துக்கள்


அழகான வாழ்க்கையின் அர்த்தங்கள் ஓர் நொடிப் பொழுதின் விபத்துக்கள் மூலம் சிதறிப் போய் விடுகின்றன. ஊனங்களும், உயிரிழப்புக்களும் விபத்தின் கொடுரமான பக்கங்கள். பெரும்பாலும் வீதி விபத்துக்களுக்கு கவனயீனம், அவசரமே காரணமாகின்றன. ஓர் நிமிட தாமதங்களை விரும்பாமல் விரைந்து செல்ல முயற்சிக்கும் போக்கு தரும் அழிவுகள் நாள் தோறும் செய்திகளாக அனுபவங்களாக நம் கண்முன்னால் வெடித்துக் கொண்டே இருக்கின்றன.

நானும் வீதி விபத்தொன்றில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிக்கியவள் தான். முகத்தில் காயம். மயிரிழையில் எனது இடது கண் தப்பியது. மழை நாளொன்றில் எனது மோட்டார் வாகனத்தில் செல்லும் போது எதிர்பக்கத்திலிருந்து வந்த வாகனத்திற்கு இடமளிப்பதற்காக விரைவாகப் பாதையைக் கடக்க முயற்சிக்கும் போது மழைநீரில் நிரம்பியிருந்த குழியினுள் மோட்டார் வாகனச்சில்லு உருண்டதால் ஏற்பட்ட அந்த விபத்தின் ஞாபகங்கள் ஒவ்வொரு நாளும் அந்த முகத்தழும்புகளால் உயிர்ப்பூட்டப்படுகின்றன.

இரத்தத்தில் தோய்ந்த ஹெல்மெட் கண்ணாடியும், சிவப்பு நிறமாக மாற்றப்பட்ட என் மழை அங்கியும் இரத்தக் கசிவாகி நின்ற என்னைப் பார்த்த என் உறவுகளின் கதறல்களும் இன்றும் என்னுள் மறக்கப்படமுடியாத பதிவுகள்.

வீதியில் இறங்கும் போதே உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் பயணிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். இன்றைய கால கட்டத்தில் தொழிலுக்குப் போகும் பெண்கள் வீதியை மறந்து வாழ முடியாது.ஆண்களின் இயக்கம் அவர்களுக்கும் மறுக்கப்படாத நிகழ்வாகி விட்டன. விபத்துக்களைப் பொறுத்தவரையில் தாமே பயணித்து விபத்துக்குள்ளாகும் நிலை ஆண்களுக்கே அதிகம்.

நாம் எவ்வளவுதான் கவனமாக ,அவதானமாகச் செயற்பட்டாலும் கூட ஏனையோரின் கவனயீனமும் , அவசரமும் நமக்குள் பாதிப்பைத் தருகின்றன.

வீதியில் அன்றாடம் சதை கிழிந்து , குருதி கசிந்து மலினப்பட்டுக் கிடக்கும் மனிதங்களின் கோரங்கள் தினம் தினம் செய்தியாக அல்லது கண்ணுள் விழும் காட்சியாகிப் போகின்றது. இந்நிலையில் விபத்தைத் தவிர்ப்பதில் ஒவ்வொருவரும் பங்குதாரராக மாற வேண்டும்.

பெரும்பாலான விபத்துக்கள் இரவிலேயே நடைபெறுகின்றன. இதற்கு காரணமாக சாரதியின் தூக்கமோ அல்லது சனநடமாட்டம் குறைந்ததால் வேகமாகப் பயணித்து , அதன் விளைவாக தன்னிலைப்படுத்த முடியாமல் விதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்துடன் மோதுதல் அல்லது குடைசாய்தல் போன்றவற்றைக் குறிப்படலாம்.

எனவே விபத்துக்களைத் தவிர்க்க சில டிப்ஸ்-
---------------------------------------------------------------
பெரும்பாலும் இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் செல்ல வேண்டிய அவசியமேற்பட்டால் வாகனமோட்டுபவர் விழிப்புடன் ஒட்டுதல் வேண்டும். தனித்துப் பயணிப்பதை தவிர்த்தல் வேண்டும். உடல் அயர்ச்சியோ அல்லது தூக்கமோ ஏற்பட்டால் வாகனத்தை சற்று நிறுத்தி ஓய்வெடுத்தல் வேண்டும்.

மனஅழுத்தத்துடனோ அல்லது கவன கலைப்புக்களால் மனம் தடுமாறும் போதோ வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

வாகனம் வீதியில் பயணிக்க வேண்டிய குறித்த வேகங்களிலேயே பயணிக்க வேண்டும். பெரும்பாலானோர் தம் திறமையை அடுத்தவருக்கு வெளிப்படுத்த உச்ச வேகத்தில் பயணிப்பார். இத் தவறு கூட நம்முடன் பயணித்துக் கொண்டிருப்போரின் உயிரைக் காவு கொள்ளக்கூடியது.


சனத்தொகைப் பெருக்கத்தினதும், நகரமயமாக்கலினதும் முக்கியமான விளைவுகளுள் ஒன்றாக அதிகரித்த வாகனப் பயன்பாடுள்ளது. தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்த நிலையிலும் கூட ஒவ்வொரு வீடுகளிலும் வாகனங்கள் காணப்படுகின்றன. இதனால் வீதியில் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன.

நாம் பயணிக்கும் போது இரண்டு வாகனங்களுக்கிடையில் உள்ள இடைத்தூரத்தை பேணல் வேண்டும்.அத்துடன் வீதி விளக்குகள், சைகை விளக்குகள் உரிய விதத்தில் ஒளிரச் செய்வதும், வாகனப் பயன்பாட்டின் முன்னர் வாகனத்தின் இயக்க நிலையைச் சரி செய்வதும், நன்றாகப் பயிற்சி பெற்று உரிய சான்றிதழ் பெற்ற பின்னர் வாகனமோட்டுவதும் நமது கடமையாகின்றது.






பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் வாகன பின் இருக்கைகளில் அமரும் போது சேலை சில்லிற்குள் சுற்றுவதால் விபத்துக்கள் நிகழ்கின்றன.

மேலும் பேருந்து போன்ற பொது வாகனங்கள் உரிய தரிப்புக்களில் நிறுத்தும் போது பயணிகளை ஏற்ற அவசரப்படுத்துவார்கள். அவர்கள் ஏறுவதற்கிடையிலோ அல்லது இறங்குவதற்கிடையிலோ வாகனத்தை விரைவுபடுத்துவதாலும் பயணிகள் கீழே விழுந்து விபத்துக்களுக்குள்ளாகின்றனர். அதுமாத்திரமின்றி மதுபாவனை, நோயுடன் வாகனமோட்டுதல், வாகனம் பயணிக்கும் போது வீதியில் நடமாடும் மிருகங்கள் குறுக்கே பாய்வதும் விபத்துக்களின் மூலவேர்களாகும்.

நம் உயிரின் பெறுமதியை ஏனோ நாம் உணர்வதில்லை. எதிர்பாராமல் அசம்பாவிதம் நடைபெற்ற பின்னர் அந்தப் பாதிப்புக்கள் தரும் ஊனமும் உயிரிழப்புக்களும் நம்மை மட்டுமல்ல நம் உறவுகளையும் பாதித்து விடுகின்றன.

வாழ்க்கை என்பது நீண்டகாலப் பயணம். சில அவசரங்களும் கவனயீனமும் அந்த வாழ்க்கையைச் சிதைக்கும் போது அந்த இழப்புக்கள் தாங்க முடியாதவை. நம்மைப் படைத்தவன் நம்மைக் காத்தருளுவானாக!


- Ms. Jancy Caffoor -
























மௌனம்




நிசப்தத்தின் சுவாசத்தில் 
வெட்கித்துக் கிடக்கின்றது
நம் மௌனம்!

மிரண்டோடும்
மின்மினிகளின் சிறகடிப்பில்- என்
புன்னகை நசுங்கிப் போகின்றது!

பூவுக்குள் தன் சிறகு தேடும்
பட்டாம் பூச்சியாய் 
உன்னுள் எனைத் தேடி
தோற்றுக் கிடக்கின்றேன் ஏக்கவெளியில்!

வேம்பின் விரலிடுக்கில்
குந்திக் கொண்டிருக்கும் - அந்த
ஒற்றைப் பறவையாய்
சயனித்துக் கிடக்கின்றேன் 
உன் வீதியோரங்களில்!


ஒற்றையாய் அலையும்
மேகத்தின் சில்மிஷத்தில் - உன்
நினைவுகள் பிறாண்டுவதால்- என்
விழிகள் வாந்தியெடுக்கின்றன தினமும்!

நீயென்னைக் கடந்து செல்லும்
தருணங்களெல்லாம்- என்
பேனாவின் வீரியமறுந்ததாய்
பிரமிப்பு என்னுள்!

நீயென்னை மறுத்த பொழுதுகளில்
அந்தரித்துக் கிடந்தேன்
இருள் கவிழ்ந்த நிலவாய்!

வான் விரட்டும் மழையாய்
என் மடி நனைத்த நீ 
ஏனோ இப்பொழுதெல்லாம்
நம்முள் இடைவெளி வளர்த்தாய்
மனசுள் வலி தந்தபடி!

இருந்தும் 
வெட்ட வெளியில்
ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த
நிலாக் கசிவில் - உன்
ஞாபகங்கள் புதுப்பிக்கப்படுகின்றன
மீண்டும் புளாங்கிதமாய்!

ஜன்ஸி கபூர் 










2012/06/25

என் பதிவுகள்



சிறு வயது முதல் எந்த சிறு விடயமாயினும் அதனை ஒழுங்குபடுத்தி நேர்த்தியாகச் செய்யும் இயல்புள்ளவள் நான். என் முகநூல் ஓட்டத்திலும் அந்தப் போக்கு தலை காட்டியதால், எழுத்து வடிவம் பெறும் சிந்தனைகளின் தனித்தன்மை பேண ஒவ்வொரு குறிக்கோள் வகுத்து சில குறுப் களையும், சில பக்கங்களையும் உருவாக்கியுள்ளேன். ஏனெனில் நமது சிந்தனைகள் எழுத்து வடிவம் பெறும் போதே ஆவணப்படுத்தப்படுகின்றது. ஆவணப்படுத்தல் என்பது நம் முயற்சியை, ஆற்றலை பிறர் அங்கீகரிக்கச் செய்யும் ஓர் உபாயமாகும்.


முகநூலில் என் பதிவு-
-------------
Jancy Caffoor


இணைய வலைப்பூ (Blogger)
-------------------------------------
கவிதாயினி




முகநூலில் என்னால் உருவாக்கப்பட்ட பக்கங்கள்
-----------------------------------------------------------------------


 
1. வானவில்-
அவ்வவ்போது மனதில் தோன்றும் பசுமையான எண்ணங்களின் வார்த்தை வரிகள்

2. அநு-
சர்வதேச தினங்கள் தொடர்பான பதிவுகளுக்கான பக்கம்
  
அந்தக் களத்தின் மீதான பயணமே இது. என் நட்பை ஏற்ற, புரிந்துணர்வுமிக்க நட்புள்ளங்களின் வாழ்த்துடன் இந்தப் பயணம் தொடரும்.  

என் பயணம் தொடர்கின்றது !

- Ms.Jancy Caffoor -






மைக்கல் ஜாக்சன்



இசையானது மொழிகளையும், மதங்களையும், பேதங்களையும் துறந்து மனித மனங்களை ஈர்க்கக்கூடிய அற்புத உணர்வு. இசைக்கு வரிவடிவம் கொடுப்பது பாடல்களே! பாடல்களுக்கு உருவம் கொடுப்பது காட்சிகள் அல்லது உடலசைவை வெளிப்படுத்தும் நடனங்கள்.


மைக்கல் ஜோசப் ஜாக்சன்........1958 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ந்திகதி அமெரிக்கா இண்டியானா மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற இசைக் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்தார். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை

ஜாக்ஸனுக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது இஷ்டமான பொழுது போக்காக விளங்கியதால் "பப்புல்ஸ்" எனும் சிம்பன்சியும் , "மிஸ்டர் டிப்ஸ் 'எனும் பனி ஆடும் இவர் தோழமைக்குள்ளான ஐந்தறிவு ஜீவராசிகள். குழந்தைகள் மீது பற்றுள்ளவர். தன் வீட்டில் மிகப் பெரிய தீம் பார்க்கை உருவாக்கி ஆதரவற்ற குழந்தைகளை விளையாடச் செய்தவர்.

ஐந்து வயதிலேயே தனது அண்ணன்மாருடன் இணைந்து "ஜாக்ஸன் பிரதர்ஸ்" இசைக்குழுவில் இணைந்து பாடினார். 

"ஜாக்சன் 5" இசைக்குழுவிலிணைந்து புகழடையும் போது அவரின் வயது 11 ஆகும். இவரது இசைப்பயணம் 1967ல் ஆரம்பமாகி மரணிக்கும் வரை புகழோடிணைந்தே நகர்ந்தது. 1971ல் மேடையேறினார். 1980 ல் பொப் இசையுலகில் தனி முத்திரை பதித்து அமெரிக்கா மக்கள் மனதில் இடம்பிடித்த கறுப்பின இசைக்கலைஞராக முடிசூட்டினார். அவரது நடனம் தனித்துவமிக்கதாகவும், பாடல்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்ததால் பலரின் ரசிப்பில் பாடலும், நடனமும் உறைந்து கிடந்தன.



1982ம் ஆண்டு "ஈடி" படத்திற்கான ஒலிக்கோர்வையை தனது குரலில் பதிவு செய்தமைக்காக இவருக்கு கிராமிய விருது கிடைத்தது. அதே ஆண்டில் "த்ரில்லர்" ஆல்பத்திற்காக 8 விருதுகள் கிடைத்தன. அவ் ஆல்பம் உலகளவில் அதிகளவு விற்பனை செய்யப்பட்ட முதல் தர ஆல்பமாக இருந்தது. இவரது நான்கு இசைத் தொகுப்புக்கள் உலக சிறந்த பதிப்புக்களாக முத்திரை குத்தப்பட்டன. இவருக்கு பல "க்ராமி" அவார்டுகளும், கின்னஸ் சாதனைகளும் சொந்தமாகின. "கிங் ஆப் பொப்" பட்டம் ஜாக்சனுக்கு வழங்கப்பட்டது பொருத்தமானதே!

ஜாக்சனின் "ரோபார்ட்", மூன்வாக்" நடன வகைகள் பிரபல்யமானவை. "மூன்வாக்" அவர் கண்ணீர் வாழ்வின் சோகங்களின் பிரதிபலிப்பாகும்.

அவர் இசைத்துறையினதும் நடனத்துறையினதும் தடங்கலற்ற பயணத்திற்காக புவியீர்ப்பு விசையை மீறி இயங்கக் கூடிய பாதணிகளைத் தனக்காகத் தயாரித்து பயன்படுத்தி தேவைக்கேற்ப உடலசைவைப் பேணி பல வகையான நடனங்களஞடன் கூடிய பொப்பிசைப் பாடல்களை வெளிப்படுத்தினார்.

1992ம் ஆண்டு இவரால் பாடப்பட்ட"ஹீல் தி வேர்ல்ட்" எனும் பாடலுக்கு ஐ.நா சபையின் அங்கீகாரம் கிடைத்தது. அவரது "ஏர்த்" பாடல் உலக சுற்றுப்புறத் தினத்தின் அதிகாரபூர்வ பாடலானது. தென் கரோலினா மாநிலத்தின் பாடலும் இவர் குரல் பதிவே!

ஆர்& பி ,டிஸ்கோ, ராக், பொப் என்பன இவரது இசை வகைகளாக பலர் மனங்களைத் தொட்டன.

பாடகராக , நடன அமைப்பாளராக மட்டுமல்ல ஜக்ஸன் எழுத்தாளராகவும், நடிகராகவும் , வணிகராகவும், இசையமைப்பாளராகவும் , சமூக சேவையாளராகவும் தனது திறமையைப் புலப்படுத்தியவர்.

"மேன் ப்ரொம் தி சிங்கிள்" எனும் பாடலை இசைத்து கிடைத்த வருமானத்தை ஆதரவற்றோருக்கு வழங்கியவர். இவர் எயிட்ஸ் நோயாளிகள். ஏழைகளை நேசித்து நிதியுதவி செய்தார்.

இந்த பொப் இசை நாயகனின் மறுபக்கத்தில் பல அவலங்களும் குற்றச்சாட்டுக்களும் பரவிக்கிடந்தன. நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது பெறப்பட்ட தீக்காயங்கள் இவரது உடலின் வடுக்களாகியது. :விட்டிலிகோ" எனும் உடல் நிறமிக்குறைபாட்டாலும் ஆட்பட்டு சிரமப்பட்டார்..

அமெரிக்கா நூலகமொன்றில் பெற்றுக் கொண்ட பல நூல்களைத் திருப்பிக் கொடுக்காது பத்து இலட்சம் டாலர் அபாரதத்தையும் பெற்றுக் கொண்டவரிவர். 1993 ல் குழந்தைகளுடன் தகாத உறவுகளைப் பேணியவர் எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதில் பலரின் விரோதத்திற்கும் ஆளானார்.

அவரின் பலகீனம், கட்டுபாடற்ற வாழ்க்கை என்பன அவரை கடனாளியாக்கியது. அந்தக் கடன் சுமையிலிருந்து மீளமுடியாத நிலையில் 2012 ஜூன் 25 ந்திகதி தனது 50 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் தனது துடிப்புக்களை அடக்கினார். பலரை துள்ள வைத்த இந்தப் பொப் இசை மன்னனின் மறைவு க்கு இன்று மூன்றாண்டு நிறைவஞ்சலி..........நினைவஞ்சலி 


























2012/06/24

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் !


ஒவ்வொருவரும் அனுபவங்களை உள்வாங்குகின்றோம். அந்த அனுபவங்களை நம் உணர்வுகளால் மெருகூட்டத் துடிக்கும் போதே கவிஞன் பிறப்பெடுக்கின்றான். 

தன் வார்த்தை வருடல்களால் பிற மனங்களை வசியப்படுத்தும் போது இலக்கியவுலகின் சொந்தங்களும் நேசிப்புக்களும் தங்கள் இராச்சியத்துக்குள் இவர்களுக்கான செங்கம்பள விரிப்பை விரிக்கின்றனர்.வரவேற்கின்றனர்.

அந்த வகையில் கவிதைகளின் தேன் ஊற்று, காவியத் தாயின் இளைய மகனாய் பொன்முடி சூட்டிக் கொண்ட கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளின்று (2012.06.24). தன் முகம் காட்டி நிற்கின்றது.

தமிழ்நாடு சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் திகதி சாத்தப்பனார், விசாலாட்சி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். இவர் இயற் பெயர் முத்தையா. உடன்பிறப்புக்கள் எண்மர். இருந்தும் குடும்பத்தின் பாச நீரோட்டம் இவரை நனைக்க முன்னரே ஏழாயிரம் ரூபா பணத்திற்கு தத்துப்பிள்ளையாகி வேறோர் பெற்றோர் வசம் போய்ச் சேர்ந்தார்.

"நாராயணன்" வளர்ப்புப் பெற்றோரிட்ட பெயர் . இவர் கல்வி எட்டாம் வகுப்புடன் தடைப்படவே பதினாறு வயதில் பணி புரியத் தொடங்கினார்..பொன்னம்மா, பார்வதி, வள்ளியம்மை எனும் மூன்று மனைவியர் மூலம் பதினான்கு வாரிசுகள்.இலர் இரத்த உரிமைகளாகின.

கவிஞர் கண்ணதாசன்.அவர்கள்....காலம் என்றும் உச்சரிக்கும் அற்புதமான கவிஞர்.இவரின் ஒவ்வொரு பாடல்களிலும் இழையோடிக் கிடக்கும் கவி வார்ப்பின் ஆழத்தினைக் காணும் போது நம்மனசுக்குள் வியப்பு சிறகடிக்கின்றது.


இவர் காலம் நமக்கு அடையாளம் காட்டிய அற்புத கவிஞர் . காதல், திருமணம், வாழ்க்கை, தொழில், ஏக்கம், சோகம், அன்பு, பாசம் எனும் பல உணர்வுக் கலவைகளில் சொற்சிலம்பாடிய உணர்ச்சிக் கவிஞர்.


நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களையும் மக்கள் மனங்களில் நிறைத்தவர் கண்ணதாசன் அவர்கள். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த இவருக்கு அரசு தன் கௌரவப்படுத்தலை சாகித்ய அகாதமி விருதின் மூலம் வழங்கியது.


சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் போன்ற இதழ்கள் இவரின் மேற்பார்வையின் கீழ் பதிப்புரிமை பெற்ற இதழ்களாகும்.கம்பரும் பாரதியாரும் இவரின் மானசீக குருக்களாகும்.

இவர் இந்துமதத்தில் பிறந்தவராயினும் மதங்களுள் மதங் கொள்ளாமல் பிற மதங்களிலும் மனம் லயித்து இயேசுகாவியம் பாடினார்.

திரைப்படப்பாடல், அர்த்தமுள்ள இந்து மதம், மாங்கனி, இயேசு காவியம் இவரது படைப்புக்களாகும். அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்களாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தாய்ப்பாவை, கவிதாஞ்சலி, கண்ணதாசன் கவிதைகள் உள்ளிட்ட பத்து கவிதை நூல்கள் இவரின் சொந்தமாகின. கண்ணதாசன் கவிதைகள் ஆறு பாகங்களாக வெளியாகின.அவ்வாறே கடைசிப்பக்கம் உள்ளிட்ட பத்துக்குமேற்பட்ட கட்டுரைகளையும், விளக்கு மட்டுமா சிவப்பு உள்ளிட்ட இருபத்தொரு புதினங்களையும், வனவாசம் உள்ளிட்ட பத்து கட்டுரைகளையும் எழுதியுள்ளன அவரின் கரங்கள். ராஜ தண்டனை, அனார்கலி உள்ளிட்ட மூன்று நாடகங்களும், பகவத் கீதையுரை, அபிராமி அந்தாதியுரை என்பன அவர் நமக்கு விட்டுச் சென்ற இலக்கிய கலசங்களாகும்.

காலம் மறக்காத இந்த ஒப்பற்ற கவிஞர் 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் திகதி அமெரிக்கா சிகாகோ நகர் மருத்துவ மனையில் தன்னுயிர்த்துடிப்பை நிரந்தரமாக அடக்கினார்.மதுபோதையின் நட்புக்கு பலியாகிய இந்தக் கவிஞன் மறைந்தாலும் இன்னும் கவிதைகளாலும், பாடல்களாலும் நம்மிடையே உயிர்த்துக் கொண்டுதானிருக்கின்றார்.

இவரது ஞாபகங்கள் இன்றும் கூட சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணதாசன் மணிமண்டபம் மூலம் மீட்டப்படுகின்றது. அங்கு அவரது நூல்கள் உள்ளிட்ட பல நூல்கள் வைக்கப்பட்டுள்ள நூலகமும், அவரது வாழ்க்கை வரலாற்றின் எச்சங்களாகப் பரிணமிக்கும் புகைப்படங்களின் தொகுப்புக் கண்காட்சியும் நடைபெறுகின்றது. 

அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையும் அவர் விட்டுச் சென்ற கனச்செறிவான கவிதைகளின் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன இன்றும் என்றால் மிகையில்லை

கண்ணதாசன் அவர்களின் மணக்கோல நிகழ்வைக் காட்டும் அபூர்வ புகைப்படமிது