About Me

2012/06/11

ஒரு நாளும் உனை மறவாத........


இரவின் சீண்டலில் சிலிர்க்கின்றேன்
நினைவு விரல்களால் நீயென்னை
அடிக்கடி வருடுவதால் !

என் மூச்சுக் காற்றுத் தொடாத
தொலைப்புள்ளியில் குவிந்திருக்கும் உன்னை
மெதுவாய் வருடுகின்றேன்
உன் பெயர்களால்!

உன் முகம் நானறியேன் - இருந்தும்
நினைவகத்தின் புல்லரிப்புக்களில்
புரண்டோடுமுன் அன்பில் - நான்
ஆயுள் கைதியாய் விழுந்து கிடக்கின்றேன்!

இறவாத நம் நேசத்தில்
நெஞ்சு கிறங்கிக் கிடக்ககையில் 
நெற்றியிலென் பெயரெழுதி
உன் உயிரில் இணைக்கின்றேன்!

சினம் மெல்ல நசுக்கையில்
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும்
நம் நேசம் 
காலத்தின் அழியாப் பதிவாய் - இப்
பிரபஞ்ச வேர்களில் பிணைந்திருக்கும்!

கவியின் சில வரிகளோடு
நம் நட்பைச் சுருக்கத்தான் முடியுமோ!
காலத்தின் சிறகடிப்போடு காத்திரு
நானும் உன் முகம் பார்த்திட!

ஜன்ஸி கபூர் 


2 comments:

  1. //இறவாத நம் நேசத்தில்
    நெஞ்சு கிறங்கிக் கிடக்ககையில்.......
    நெற்றியிலென் பெயரெழுதி
    உன் உயிரில் இணைக்கின்றேன்!// அருமை ஜான்சி

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!