About Me

2012/08/31

கடலோரம்.........


---------------------------------------------
ஒரே கற்பனைக் கரு...
வெவ்வேறு சொற் வருடல்.....

மூன்று  கவிதைகளாயிங்கு!
---------------------------------------------

எங்கோ புரண்டு கொண்டிருக்கின்றது
அலைகள்...................
மணற் முத்துக்களையும் கோர்த்தபடி!

குவிந்து கிடக்கும் வானில்
"ஒட்டரை"ப் படையாய் .............
கொட்டமடிக்கின்றன முகிற் படைகள்!

கதிர் பரப்பி வீழ்ந்து கிடக்கும்
சூரிய பிம்பம்...............
சூட்சுமமாய் சூடேற்றுது கடலை!

வளைக்குள் சிறையிருக்கும்
கரையோர நண்டின் கோலம்
வரையத் துடிக்குது என் காலில் மெல்ல!

வெட்டியாய் ஊர்சுற்றும்
வெட்கங் கெட்ட காற்றும் - பல மேனி
தொட்டு  சில்மிஷம் பண்ணத் துடிக்குது!

காலை வருடும் கடற்சாதளைகள்
நுரை நீரில் எட்டிப்பார்க்கையில்
கூதல் சுண்டியிழுக்குது நரம்புகளை!

விடிகாலை கரைதேடும் - பாய்
மரக்கலங்கள் நாடுகின்ற என்னருகே
கரமசைத்தே மகிழ்வாய்!



எங்கோ புரண்டு கொண்டிருக்கின்றன
அலைகள்...........
மணற் பாயில் சுருண்டபடி!

வில்லொடிக்கும் வானில்
அம்புகளாய் மேகக் கூட்டங்கள்!

காற்றுவேலிக்குள் சிறைப்படும்
இயற்கையென் காதலாகி கசியும்!

மணற்கரையில் குடியிருக்கும்
வாண்டுகளாய் சிறு நண்டுகள்!

உப்பு நீரில் விழுந்தெழுகின்ற
வெப்புச் சூரியன் குளிக்கின்றதோ இதமாய்!

வானுக்குள் நூல் கட்டி ...........
நானிட்ட தூதாய் கொக்குப் பட்டமொன்று!

நுரைநீரில் எட்டிப் பார்க்கும் சாதளைகள்
திரையிட்டுக் கிடக்கும் கால்களை!

பாய் விரித்தே கரையொதுங்கும் வள்ளங்கள்
ஹாய் சொல்லி மீன் நிரப்பும் பையில்!




எங்கோ புரண்டு கொண்டிருக்கின்றது
அலைகள்...........
மணற் முத்துக்களையும் அணைத்தபடி!

வில்லாய் ஒடிந்து கிடக்கும் வானில்
வெள்ளை மேகப் படையெடுக்க !
விரட்டியடிக்கும் வில்லனாய்......
பரபரப்பாகுது காலைத் தென்றல்  !

கரையோரம் நடைபயின்றே - வளைக்குள்
சிறையிருக்கும் நண்டுக் கூட்டம்......
சீண்டுதே என் கால் பிராண்டி
"அண்டவோ" என் அருகாமைக்காய்!

உப்பு நீரில் விழுந்தெழுகின்ற
வெப்புச் சூரியன் கதிர் கண்டே......
அப்பப்பா மீன்கள் நழுவ இடம்தேடி
தப்பிக்க ஓடுதே  அம்மம்மம்மா!

வானேறும் கொக்குப்பட்டம் ..........
பாரெட்டிப் பார்க்கையிலே- என்
கரந்தொடுத்த நூற் கற்றையும்
பறந்தேறத் துடிக்குது மெல்ல!

காலை முகரும் "சாதளைகள்"
நுரை நீரில் முகம் பார்க்க................குளிரில்
விறைத்த என் மேனி கொஞ்சம்
முறைத்து முணுமுணுக்குது மெலிதாய்!

விடிகாலை கரையொதுங்கும் - பாய்
விரித்தே காற்றிலாடும் வண்ண.....................
மரக் கலங்கள் எனைப் பார்த்தே
கரமசைத்து மணற்றரை வருடுகின்றது!


ஜன்ஸி கபூர் 




2012/08/29

செல்லங்கள்

எங்கள் வீட்டுச்செல்லங்கள்...கதீஜா + அஸ்கா
-------------------------------------------------------------------
என் சகோதரிகளின் மக்கள் , எனது அறையில் இக் குட்டீஸ் விளையாடிக் கொண்டிருக்கும்  போது நானெடுத்த க்ளீக் (24.08.2012)










அநுராதபுரத்தின் முதுசொம்


அநுராதபுரத்தில் சேவை செய்து, ஓய்வுபெற்ற அரச ஊழியர்களை கௌரவிக்கும் விழாவில் (25.08.2012) வெளியிடப்பட்ட  விழா மலரே " அநுராதபுரத்தின் முதுசொம்" ஆகும்.

"முதுசொம் " எனும் சொல்லின் அர்த்தம் எனக்குப் புரியாத நிலையில், இது தொடர்பாக மலராசிரியர் ஜவஹர்ஷா சேரிடமே வினவினேன். அதற்கவர் "பரம்பரைச் சொத்து" எனும் பொருள்படுவதாகக் கூறினார்.

"முதுசொம்" எனும் மிகப் பொருத்தமான மலர்த் தலைப்புடன் , அநுராதபுர நகர மக்களின் பரம்பரைச் சொத்துக்களான கலை, இலக்கிய, பண்பாடு, அரசியல் , சமூகம், ஆன்மிகம் தொடர்பான தகவல்களை முன்வைக்கின்ற, கடந்த கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பரிணமிக்கின்ற இம் மலர் பல விடயங்களைத் தன்னத்தே பதித்துள்ளதென்பது வெள்ளிடைமலை! இம் மலரானது, அதன் செலவில் மட்டுமல்ல, அதன் உள்ளடக்கத்திலும் கனாதியானது. மிகப் பெறுமதியானது.

இது காலத்தால் அழிவுறாத ஆவணமாகையால், மலராசிரியர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரின் அநுராதபுர நகரின் வரலாறு தொடர்பான ஒவ்வொரு நுணுக்கமான தேடலும்,  இம் மலரின் பதிவுகளின் ஒவ்வொரு வரிகளிலும் கலக்கப்பட்டு, வரலாற்றின் தெளிவான வெளிப்பாடாகி, எம்மை பிரமிக்க வைக்கின்றது.

சில அரிய புகைப்படங்களை தன்னகத்தே கொண்ட முகப்பட்டையே இங்கு நுழைவாயிலாகி,   எம்மையும் இம் மலரின் பயணப் பாதையில் சுவடுபதிக்க அழைத்துச் செல்கின்றது.

மலரை விரித்ததும் உள்ளே முதற்பக்கத்தில்  விழா ஒழுங்குக் குழுவினரின் புகைப்படமும், விழாக் குழுவினரின் விபரமும் அதனைத் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

பிரதம அதிதி வைத்தியக் கலாநிதி முஸ்தபா ரயிஸ் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில், " இப்பிரதேசத்தின் மகத்தான பணிகள் புரிந்த பலரை தற்போதைய, எதிர்கால சந்ததியினருக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஆவணமாகவும் முதுசொம் மிளிரும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழுத் தலைவரான அல்ஹாஜ் எச். எஸ். ஏ.முத்தலிப் ஜேபி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில், "தாய்மொழியையும் தமது கலாசாரத்தையும் படித்துக் கொடுத்து, கல்விக்கு வித்திட்ட கல்விமான்களையும், ஆங்காங்கே மஸ்ஜித்துக்களையும் குர்ஆன் மத்ரஸாக்களையும் அரும்பாடுபட்டு அமைத்து, மார்க்கத்தை வளமுடன் நிகழச்செய்த சன்மார்க்க சீலர்களையும், சமூகத்தின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் அயராது உழைத்த திணைக்கள, கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களையும் வாழ வாழ்த்தி கண்ணியப்படுத்துதல் கடனும் கடமையும் பொறுப்பாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழு செயலாளர் எம்.ஏ.எம்.டில்ஷான் தனது வாழ்த்துச் செய்தியில்,

 "ஒவ்வொரு  பிரதேசங்களிலும் இதுபோன்ற கௌரவிப்புக்கள் நடைபெறுவதானது, கல்வி ரீதியாக நாம் எவ்வளவு பண்பட்டுள்ளவர்களென்பதையும்,  அரசாங்கத்திற்கு எந்தளவு எம் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளோம் என்பதையும் விளக்குவதோடு எதிர்கால நம் சந்ததிகளுக்கும் சிறந்ததொரு எடுத்துக்காட்டுமாகவும் இருக்கும்"  

என்று குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழு பொருளாளர் வடமத்திய மாகாண தமிழ்ப்பிரிவு கல்விப்பணிப்பாளர் ஜனாப்  ஈ. பீர்முஹமட்  Sir , அவர்கள் , தனது வாழ்த்துச் செய்தியில் "ஒரு இனத்தின் வளர்ச்சியையும், நாகரீகத்தையும் அறிந்து கொள்வதற்கு உதவியாய் அமைவது அவர்களின் வரலாற்றுப் பதிவாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொகுப்பாசிரியர் அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்கள் , தனது செய்தியில் " ஓய்வு பெற்றவர்களை கௌரவிக்கும் இந்த கௌரவிப்பு விழா மலருக்கு "அநுராதபுரத்தின் முதுசொம்" என்று தலைப்பிட்டமைக்குக் காரணம், இவர்களின் தகவல்களோடு கிடைக்கக்க;டியதாக சில ஆவணங்களையும், எதிர்கால வரலாற்றுத் தேவைகளுக்காக ஆவணமாக்கி உள்ளபடியால் இந்நூலின் உள்ளடக்கத்திற்காகவே இவ்வாறு தலைப்பிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கூறப்பட்ட வாழ்த்துச் செய்திகளில் 'முதுசொம்' மலரின் முக்கியத்துவமும், இக்கௌரவிப்பு விழாவின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

வாழ்த்துரைகளைத் தொடர்ந்து , பல்வேறு திணைக்களங்களில் சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ள அல்லது மரணித்த எண்பத்தேழு அரச சேவையாளர்களின் பெயர்ப்பட்டியலொன்றும் , அவர்களின் புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய சுருக்கமான அறிமுகமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1992 ஆண்டு இங்கு நிகழ்த்தப்பட்ட தேசிய மீலாத்விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட  மீலாத் மலரில் பிரசுரமாகியிருந்த இரண்டு கட்டுரைகள், இம் மலரில் மீள ஞாபகப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்று திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட போதனாசிரியர் ஏ.பி.எம்.ஹூசைன் அவர்களின் "அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்" எனும் கட்டுரையாகும்.

கி.மு 6ம் நூற்றாண்டில் விஜயனின் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே , இலங்கையில் அராபியர், பாரசீகர், எகிப்தியர் எனும் முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள்  வாழ்ந்ததற்கான , வர்த்தக நோக்கத்திற்காக பயணத்ததிற்கான சான்றுகள் உள்ளன எனக் கூறி, அச்சான்றுகளையும் இவர் இக்கட்டுரையினூடாக முன்வைத்துள்ளார். முஸ்லிம்கள் அநுராதபுர நகரின் திசாவெவகம, பொன்னாரங்குளம், கும்பிச்சங் குளம், ஆமன்னரத்மல, நாச்சியாதுவ ஆகிய பிரதேசங்களில் தமது ஆரம்ப குடியிருப்புக்களை நிறுவினர் எனத் தொடரும் இவரது  கட்டுரை இன்னும் பல விடயங்களை முன்வைக்கின்றது.

மேலும் அநுராதபுரத்தை ஆண்ட  பண்டுகாபய மன்னன் தொடக்கம் பல மன்னர்கள் அரேபியர்களுடன் கொண்டுள்ள வர்த்தக தொடர்புகள் பற்றியும் இக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. அக் கால கட்டத்தில் கச்சுத்தோட்டம், இசுறுமுனி, வெஸ்ஸகிரிய, ஒட்டுப்பள்ளம், திசாவெவகம, மிரிசுவெட்டி போன்ற இடங்கள் முஸ்லிம்களின் குடியிருப்புக்களாக விளங்கின. சிங்கள மன்னரின் கீழ் "விதானை"யாக சேவையாற்றிய "முத்து விதானை அசனார் " என்பவரின் வீட்டிலுள்ள இரு கற்றூணில் அவரது பெயர் முதலெழுத்துக்களைக் குறிக்கும்  "மு.அ" எனும் தமிழ் ஈர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அரசனின் முகாந்திரமாக அநுராதபுரத்தைச் சேர்ந்த "பிச்சைத் தம்பி" என்பவர் கடமையாற்றியுள்ளார். அரசரால் இவருக்கு வழங்கப்பட்டு வந்த சீருடை இடைவாள், அரண்மனைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ள கௌரவ வாள் என்பன இன்னமும் இவரது பரம்பரையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன எனும் செய்தியும் கட்டுரையாசிரியரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இச் சீருடை, வாள் என்பவற்றின் புகைப்படங்களும் இம் மலரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அன்று அநுராதபுரத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஐந்து குடும்பப் பெயர்களுடன் வாழ்ந்து வந்ததாகவும், இவர்களை வரலாற்றாசிரியர்கள் "பஞ்சகூட்டத்தினர்" எனக் குறிப்பிடுவதாகவும் அவரது தகவல் மேலும் சுட்டிக்காட்டுகின்றது. 

இவ்வாறு அநுராதபுர மக்களின் இருப்பை, வாழ்வியலை கட்டுரையாசிரியர் பல கோணங்களினூடாக ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார்.

ஆன்மீகப் பணிக்காக இந்தியாவிலிருந்து வந்து அநுராதபுரத்தில் இறையடியெய்திய சிக்கந்தர் வொலியுள்ளாஹ் அவர்களின் ஒட்டுப்பள்ளித் தர்கா, நாச்சியாதுவ, நேகம, இக்கிரிகொல்லாவ போன்ற கிராமங்களின் புராதன தொடர்பும், மன்னர்களின் குளப்புனரமைப்புக்கள் காரணமாக வேறிடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களின் குடிப்பெயர்ச்சி பற்றிய தகவல்களும்,  காதல் கொண்ட மன்னன் எனும் தலைப்பில் சிங்கள மன்னன் காதலுற்றதால் தன்னுயிரை நீத்த முஸ்லிம் மந்திரியின் மகளின் சோக வரலாறும் ஆசிரியரால்  ஆராயப்பட்டுள்ளது.

ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிகானின் "மறை(று)க்கப்படும் வரலாறு எனும் கட்டுரையில்,  சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் அரசின் நடவடிக்கையின் பயனாக, முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்புக்கள் பற்றிய தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களை முன்வைப்பனவாக உள்ளன. இக் கட்டுரையை வாசிக்கும் போது பல வரலாற்று உண்மை விடயங்கள் நம்மை அழுத்துகின்றன. எனினும் அவர்களின் ஆட்சிப்பலத்தின் முன்னிலையில் சிறுபான்மையினரின் பல சரித்திர உண்மைகள்  சாதுரியமாக மறைக்கப்பட்டுவிட்டன.

"முஸ்லிம்கள் பூர்வீகக் குடிகளல்லர், பிரித்தானியர் காலத்தில் கொண்டு வரப்பட்டவர்கள்"  எனும் போலிப் பிரச்சாரத்தினூடாக , தாம் மட்டுமே இப் பிரதேசத்தின் பிரதான பூர்வீக உரித்தாளிகள் எனும் கருத்தை ஆட்சியாளர்கள் அவ்வவ்போது தம்மின மக்கள் மனங்களில் விதைக்க முற்படுகின்றனர் எனும் எண்ண உள்வாங்கல்  இக்கட்டுரையை வாசித்த பின்னர் எம் மனதில் நிழலாடுகின்றது.

அநுராதபுர நகரின் முஸ்லிம்களின் இருப்பு தொடர்பான பல விடயங்களை இக்கட்டுரையும் விரிவாக ஆராய்ந்து பல உண்மைகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

"அநுராதபுரம் முஸ்லிம்கள் பல்வேறு பதிவுகள் "எனும் தலைப்பில் மலராசிரியர் ஜவஹர்ஷா சேர் அவர்கள் இந்நகரத்தின் முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் பல்வேறு சிறப்புக்களையும், முஸ்லிம்களாற்றிய சேவைகளைப் பற்றியும் சமயம், கல்வி, அரசியல், கலை இலக்கியம், விளையாட்டு, முஸ்லிம் மாதர்கள், அஹதிய்யா பாடசாலை, பொது எனும் தலைப்பின் கீழ் ஆராய்கிறார். நிச்சயம் இவ்வாராய்வுக்கான அவரின் தேடல் மிக நீண்டிருக்க வேண்டும். வரலாற்றுத் தொகுப்புக்களை வெளிவிடும் போது மிகவும்  ஆதாரபூர்வமான தகவல்களைக் கவனமாகப் பதிவிட வேண்டியுள்ளது. இங்கும் தகவல்கள் அந்தத் தனித்துவத்தைப் பேணி நுட்பமான முறையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. சமய, கலை , கலாசார, பொருளாதாரப் பின்னணிகளுடன் இச்சமுகத்தின் வரலாற்று ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1870 ம் ஆண்டு திசாவெவ குளத்தின் மத்தியில் காணப்பட்ட பள்ளிவாசல் உள்ளிட்ட பௌத்த மத வணக்கஸ்தலம் அல்லாத மத வழிப்பாட்டுத் தளங்கள் அகற்றப்பட்டன எனும் செய்தியொன்றும் இப் பதிவில் காணப்படுகின்றது. இவற்றுடன் அநுராதபுர பள்ளிவாசல்கள் ஒட்டுப்பள்ளம் தர்கா உள்ளிட்ட தற்போதைய பள்ளிவாசல் நிர்மாணம் பற்றிய தகவல்களையும் , அவற்றுடன் தொடர்புடைய பின்னணித் தகவல்களையும், மத்ரஸா, தக்கியா, அரபுக் கல்லூரிகளுட்பட்ட மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட  ஈமானிய முயற்சிகளையும் ஆதாரபூர்வமாக இவர் முன்வைத்துள்ளார்.

இம் மண்ணில் கலை இலக்கியச் சுவடு பதித்தவர்களின் பெயர்களும், அவர்கள் பற்றிய சிறு ஞாபகக் குறிப்புக்களும் தடம் பதித்துள்ளமை சிறப்பானதொரு அம்சமாகும். ஏனெனில் இலக்கியம் என்பது மனித வாழ்வியலின், பண்பாட்டின் கண்ணாடியாகும். இதனடிப்படையில் இலக்கிய கர்த்தாக்களான முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு, ஆ.லெ. உமர்லெப்பை ஆலிம் சாய்பு , அன்பு ஜவஹர்ஷா, எப். ஆர் பரீட்ஹ், எப்.எப். சப்ரினா,  ஜன்ஸி கபூர்,  எம். வஸீம் அக்ரம், மர்ஹூம் எஸ்.எச். எம் .ஸஹீர் சட்டத்தரணி போன்ற பலரின் எழுத்துப்பணிகளும் அடையாளப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன.

அநுராதபுரத்திலிருந்து வெளிவந்த, வரும் சஞ்சிகைகள் பற்றிய குறிப்புக்களும் காட்டப்பட்டுள்ளன. அவையாவன:-

  • சிக்கந்தர் மகத்துவக்கும்மி (1928 -முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
  • விதி-அறிவு-விளக்கம் (1938-முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
  • கைபுட்சிக மாலை (உமர்லெப்பை ஆலிம் சாய்பு - அநுராதபுரத்தில் ​வெளியீடு)
  • தமிழ்மணி கையெழுத்துச் சஞ்சிகை (எம்.எஸ்.ஹூசைன்)
  • இளைஞர் குரல் (இரு ஆசிரியர்களுள் ஒருவர் மர்ஹூம் அமீர் சுல்தான்)
  • மாணவர் குரல் ( அண்டன் ஞானராஜா)
  • தமிழ்ச்சுடர் (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • புத்தொளி (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • வீரத் தமிழன் ( மர்ஹூம் எஸ்.எச். எம் .ஸஹீர் )
  • தேன்துளி ( மர்ஹூம் எஸ்.எம். ஸாலிஹ்)
  • பிறையொளி பாடசாலைச் சஞ்சிகை (அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • பொறிகள் ( அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • காவிகளும் ஒட்டுண்ணிகளும் -அன்பு ஜவஹர்ஷா சேர் 
  • அன்னை (எப். ஆர் பரீட்ஹ்)
  • அல் மதீனா (எப். ஆர் பரீட்ஹ்)
  • தொலைச்சுடர் ( ஜன்ஸி கபூர் )
  • அநுராகம் (ஜன்ஸி கபூர் , எப். ஆர் பரீட்ஹ், ஏ.பி.எம். அன்சார் )
  • படிகள் (எம். வஸீம் அக்ரம் )
1853 ம் ஆண்டில் இங்கு  பாடசாலைகள் 3 மாத்திரமே இருந்ததென்ற செய்தியுடன்  இவரது கல்வி பற்றிய பார்வை தொடர்கின்றது.  முதன் முதலாக எஸ்.எஸ்.சி சித்தியடைந்த மாணவர் எம்.எஸ். ஹூசைன் என்றும்,  முதல் பல்கலைக்கழக நுழைவு அவரது புதல்வி நூர் நிஹார் என்றும் தகவல்கள் இங்கு சுட்டி நிற்கின்றன. மேலும் மொஹம்மதியன் கொலேஜ், முஸ்லிம் வாலிபர் சங்கம் உருவாக்கம், அநுராதபுர ஸாஹிரா மகா வித்தியாலயம் உருவாக்கம் என்பவற்றின் பின்னணி பற்றியும்  நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் அநுராதபுரம் முஸ்லிம் சமுகத்திற்கு சேவையாற்றிய அல்ஹாஜ் யூ. அபூசாலி , அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்திற்கு கட்டிடம் வழங்கல் மூலம் அளப்பரிய சேவையாற்றிய மர்ஹூம் அல்ஹாஜ் மொஹிதீன் தம்பி அமீர் சுல்தான் ( பாடசாலை விடுதி ), அல்ஹாஜ் அனஸ்தீன் (சிறுவர் நூலகம்) என்பவர்கள் நினைவூட்டப்பட்டதுடன், சீ.பி முகம்மது அவர்களின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்ட கட்டடம், பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட ஆசிரியர் விடுதி , சிற்றுண்டிச்சாலை, மஸ்ஜிதுஸ் ஸாஹிரா பள்ளிவாசல் , பாடசாலை முன் முகப்பு என்பவற்றின் உருவாக்கப் பின்னணியில் உழைத்த பெருந்தகைகள் பற்றியும் இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயம், அநுராதபுரம் முஸ்லிம் கல்வி, கலாசார அபிவிருத்தி அமைப்பு , அநுராதபுரம் முஸ்லிம் கல்வி அமைப்பு ,அல் இஸ்லாஹ் பாலர் பாடசாலை, பிரிசம் (சமூக அபிவிருத்தி அமைப்பு) , அநுராதபுரம் சுதந்திர இயக்கம் (AIM) உள்ளிட்ட இம் மண்ணில் உருவாக்கப்பட்டு, இம் மக்களுக்கு சேவையாற்றிய, சேவையாற்றும் பல்வேறு அரசியல் , சமூக நிலையங்களும், சமூகப் பணியாளர்களும் பெயர் குறிப்பிடப்பட்டு  நினைவூட்டப்பட்டுள்ளனர்.

இம் மண்ணின் முதல் வைத்தியர் ரீ.எம். அஸ்மி , முதல் நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஓ.எல். அஷ்ரப் என்போரும் வரிகளில் அமர்ந்து கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் இல்லாமல் எந்தச் சமூகமுமில்லை என்ற முன்னுரையுடன், இவரின் அரசியல் பார்வை தொடர்கின்றது. காதர் சாய்பு செய்யது அஹமட், எல்.ஏ. மஜீத் (ஜே.பி) , அப்துல் ரவூப் (ஜேபி) , சட்டத்தரணி எஸ். நடராஜா, திரு ஆர். வி. கந்தசாமி, அப்துல் வாஹித் அப்துல் சலாம் , மொஹமட் அன்சார் (ஜே.பி) , ஏ.சி ராவுத்தர் நெயினா முஹமட் போன்றோரும், அவர்கள் சமுகத்திற்கு ஆற்றிய சேவைகளும் இக் கட்டுரை வாயிலாக நினைவுபடுத்தப்பட்டுள்ளன.

எழுத்துத் துறையில் மட்டுமல்ல நாடகம், ஊடகம் போன்ற துறைகளிலும் அநுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களுள் நாடகத் துறையில் மர்ஹூம் அமீர் சுல்தான் அவர்களும் , ஊடகவியலாளராக அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்களும் ITN தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும், நாடகக் கலைஞராகவும் செயற்பட்ட உவைஷ் ஷெரீப் அவர்களும் சிரச ஊடகவியலாளருமான எம்.எம். றிஸ்வி அவர்களும் மர்ஹூம் ரிஸ்மி மஹ்ரூப் அவர்களும் ஊடகவியலாளர் ஆர். எம். தாரீக் அவர்களும் முதன்மைப்படுத்தப்படுபவர்களாவார்கள்.

இவர்களைப் போலவே சமூகத்திற்கு பங்களிப்புச் செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மாதர்களும், விளையாட்டுத் துறையினரும் இம் மலரின் தடத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மார்க்க அறிவை சிறார்களுக்கு வழங்கும் அஹதிய்யாப் பாடசாலையின் சேவையும், அவற்றின் பின்புலத்திற்கான காரணங்களின் ஆராய்வும் இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான நீண்ட தேடல்களின் பின்னணியில் பெறப்பட்ட தகவல்களை "அநுராதபுரம் முஸ்லிம்கள் பல்வேறு பதிவுகள்" எனும் பதிவினூடாக அன்பு ஜவஹர்ஷா சேர் அழகாகவும் சிறப்பாகவும் பதிவித்து, நமக்கொரு சிறந்த வரலாற்று ஆவணத்தை தந்திருக்கின்றார். தர முயற்சித்திருக்கின்றார்.

இப் பதிவுகள் நீங்கலாக சில தகவல்களும் புகைப்படங்களும் பின்னிணைப்புச் செய்யப்பட்டுள்ளன. 1950ம் ஆண்டு வரை அநுராதபுர புனித வளனார் கல்லூரி, அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் கல்லூரி, ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் கற்றவர்கள் பெயர் விபரங்களும், அக்காலங்களைச் சுட்டும் சில பிறப்பத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளும், அநுராதபுரத்தில் முஸ்லிம் குடியிருப்புக்களைக் காட்டும் இட அமைவு வரைபும், சில மலர்களின் முகப்பட்டைகளும் உள்ளிட்ட பல நிகழ்வுகளின் அரிய ஆவணப் பதிவுகளின் நிழல்படங்களும் புகைப்படங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

அநுராதபுர முஸ்லிம்களின் வரலாற்றை சிறப்பாகத் தொகுத்துத் தரும் சிறப்பான பதிவே  இவ் "அநுராதபுரத்தின் முதுசொம்"  என்றால் மிகையில்லை. எனினும் ஓரிரு இடங்களில் அச்சுப் பிசாசின் எழுத்துப் பிழைகளும் அவதானிக்கப்பட்டாலும் கூட, அவை தவிர்க்கமுடியாதவை. குறைகளல்ல..இந் நல்ல முயற்சியை பலகீனப்படுத்தும் எந்தக் குறைபாடுகளையும் நான் அவதானிக்கவில்லை. சிறப்பும், நிறைவுமே என் கண்முன்னில் விமர்சனமாகி வீழ்கின்றன.

தனி மனித வாழ்வில் பிறப்பிடம், இருப்பிடம் எனும் இருதாங்கல் மிக முக்கியமானதாகும். அந்த வகையில் நான் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் கூட, இரு தசாப்தங்களுக்கு மேலாக எம்மையும் இருப்பிடமாகித் தாங்கி நிற்கும் இவ் அநுராதபுர பூமியினதும், முஸ்லிம் மக்களினதும் சிறப்புக்களை நானும் மிக நேசத்துடனும், அக்கறையுடனும் உள்வாங்கியவளாக எனது மலர் பற்றிய பார்வையை நிறைவு செய்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்!

Jancy Caffoor









                                                                                                                   

2012/08/26

எனது தந்தை




என் தந்தையைப் பற்றிய சில நினைவு வரிகள்

என் தந்தையாகிய ஒசன் சாய்பு முஹம்மது அப்துல் கபூர் அவர்கள், (O.S.M.A), யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், வண்ணை தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று, முதல் நியமனமாக அரச பொலீஸ் திணைக்களத்தில் பொலீஸ் நியமனம் பெற்றுச் சேவையாற்றினார்.  சில காலங்களின் பின்னர் பொலீஸ் சேவையிலிருந்து விலகி, ஆங்கில உதவியாசிரியராக ஆசிரியவுலகில் இணைந்தார்.

அட்டாளைச்சேனை  ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்  பயிற்றப்பட்ட  தமிழ்மொழி ஆசிரியராக பயிற்சி பெற்றாலும் கூட, தெரிவுப்பரீட்சைக்கு தோற்றி, சித்தியடைந்ததன் மூலம் ஆங்கிலப் பயிற்சி தராதரப்பத்திர ஆசிரியராக நியமனம் பெற்றார். ஆசிரியர் சேவையில் சிறப்பாக சேவையாற்றிய பின் , அதிபர் சேவைக்குள்ளீர்க்கப்பட்டு  , ஓய்வுபெறும் போது முதலாம் தர அதிபராக பதவி வகித்தார். 

யாழ்ப்பாண கல்வித்திணைக்களத்திலும், இடம்பெயர்ந்த பின்னர் வடமத்திய மாகாணக் கல்வித்திணைக்களத்திலும்  இணைப்புச் செய்யப்பட்டிருந்தார். வடமத்திய மாகாணக் கல்வித்திணைக்களத்தில் 5 வருடங்கள் பணியாற்றினார்.

வவுனியா ஆண்டியாபுளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆங்கில உதவி ஆசிரியராக தொடரப்பட்ட இவரின் முதற்சேவை, பின்னர் யாழ்ப்பாணம் மஸ்றஉத்தீன் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் ஒஸ்மானிக்கல்லூரி, அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம் என ஆசிரியத்துவப் பணிக்காக விஸ்தரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மஸ்றஉத்தீன் பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டிடமொன்று தோற்றம் பெற என் தந்தையாற்றிய பங்களிப்பும் மறக்கமுடியாதது.

மண்கும்பான் முஸ்லிம் பாடசாலை, யாழ்ப்பாணம் அல்ஹம்ரா முஸ்லிம் பாடசாலை, வவுனியா சூடுவெந்தபுலவு  மு.வி, முல்லைத்தீவு மு.வி என்பன தந்தை அதிபராகக் கடமையாற்றிய சில பாடசாலைகளாகும்.

தந்தை சிறந்த இலக்கியவாதி. ஆனால் அவர் நூல் பதிப்பில், தன்னை பிறருக்கு அறிமுகப்படுத்துவதில் பெரிதும் அக்கறை காட்டவில்லை.  இதற்கு அன்றைய யுத்தச் சூழலும் காரணமாக இருந்திருக்கலாம். அவர் எழுத்துக்களே என்னையும் சிறிய வயதில் எழுதத் தூண்டின.

நல்ல மேடை நாடக நடிகர். படிக்கும் காலத்தில் பல மேடை நாடகங்களில் அவர் திறமைகள் வெளிப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வண்ணை ஏ.எஸ். மணி அவர்களின் நட்டுவாங்கத்தில் பல மேடை நாடகங்களை நடித்துள்ளார். அவற்றுள் சில "உயிர்காத்த உத்தமன்", " தோட்டக்கார மகள்" "கற்சிலை" ,போன்றவையாகும். இவற்றுள் கற்சிலை என்பது தந்தையால் எழுதி இயக்கப்பட்ட நாடகமாகும். அன்றைய நாட்களில் ஏ.எஸ். மணி அவர்களின் மேடை நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் சிறப்புற்று, மக்கள் அபிமானத்தை வென்றவையாக இருந்தன. 

அட்டாளைச்சேனையில் ஆசிரியராகப் பயிற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் , அங்கு நடைபெற்ற கலைவிழாவில் இடம்பெற்ற சித்திரப்போட்டி, விஞ்ஞானப் போட்டி, நடிகர் போட்டி போன்ற  3 கலைவெளிப்பாடுகளிலும் முதலாமிடத்தைப் பெற்று பரிசில்களை வென்றுள்ளார்.

முதலுதவிப் பிரிவு ஆசிரியராகவும், சாரண இயக்க ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார். 

சிறந்த பாடகர்...கற்கும் காலங்களில் பாடசாலை மன்றங்களில் தந்தையின் பாடல் இடம்பெறாத நாட்களே  இல்லையென்றே சொல்லலாம்.

சிறந்த ஓவியர். அவரின் ஓவியங்கள் பல வரையப்பட்டிருந்த ஆல்பம் என் பிஞ்சு வயதின் ரசிப்பை பல தடவைகள்  வென்றிருக்கின்றன. இத்தனை வருட கால உதிர்விலும் கூட, என் மனக் கண்ணில் அவை வந்து வந்து போகின்றன. அவர் வெள்ளைச்சங்குகளின் மேற்பரப்பில் செதுக்கிய  பல அரபு எழுத்தணி வடிவங்கள் என்னை இன்றும் ஆச்சரியப்படுத்தும் விடயங்கள்!.

கைவைத்தியம் உட்பட தன் சுயமுயற்சியால் பல துறைகளைத் தானாகவே கற்றுத்தேர்ந்தவர். வானொலி திருத்தம், தொலைக்காட்சிப் பெட்டித் திருத்தம், கணனி போன்ற உபகரணங்கள் திருத்தம், வீட்டு மின்னிணைப்பு வேலைகள், அன்ரனா தயாரிப்பு, பிளாஸ்டர் தயாரிப்பு போன்ற பல துறைகள் அவர் கைதேர்ந்த துறைகளாகும்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் முன் முகப்புத் தோற்றம் அவரின் ஓவியத்திறனால் உயிர் பெற்றதொன்றாகும். இதனை "யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு" நூலில் அதனாசிரியர் ரஹீம் ஆசிரியரவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அவ்வாறே யாழ்ப்பாணம் குளத்தடி சின்னப்பள்ளிவாசலின் தோற்றத்தையும் தந்தையே வரைந்து, அத்தோற்றத்திலேயே பள்ளிவாசலைக் கட்டிமுடிக்க பெரும் பங்களிப்பாற்றியதை அன்றைய யாழ் முஸ்லிம் சமூகம் மறந்திருக்க மாட்டார்கள். வரையப்பட்டிருந்த பள்ளிவாசலின் தோற்றம், அன்றைய காலங்களில் சித்திரமாக பள்ளிவாசலின் வெளிப்புறச் சுவரில் வைக்கப்பட்டிருந்ததை நானே பல  தடவைகள் அவதானித்துள்ளேன்.

அவ்வாறே வி.எம்.முஹீதின் தம்பி அவர்களின் தலைமையில் இயங்கிய யாழ்ப்பாணம் குளத்தடி சின்னப்பள்ளிவாசலின் கட்டிடக் குழுவின் செயலாளராக இருந்த காலத்தில், யாழ் முஸ்லிம் சமுகத்திற்கு பெரும் சேவையாற்றினார்,. அவரது நிர்வாகக் காலத்திலேயே யாழ்ப்பாண முஸ்லிம் மையவாடி, பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. வக்பு சபைக்கான பணத்தையும் அவர் முன்னின்றே அனுப்பி வைத்தார்.

"ஒன்றே ஜூம்ஆ' சமூக எழுச்சியிலும் போராட்டத்திலும் தந்தையின் பங்களிப்பு அன்றைய கால கட்டத்தில் முக்கியமானதொன்றாக விளங்கியது.

வெள்ளிப் பேழையாலான தீப்பெட்டி அளவினாலான  திருக்குர்ஆன்  உள்ளிட்ட  பல பரிசில்களும் சான்றிதழ்களும்,  குர்ஆன் மனனம், பேச்சுப் போட்டி உள்ளிட்ட  பல  போட்டிகளில் பங்குபற்றி வென்றுள்ளார்.

அன்றைய நாட்களில் இந்திய அமைதி காக்கும் படையினர் , யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்தில், எமது பிரதேச மக்களுக்காக என் தந்தை சேவையாற்றியதை அம் மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்.

பல வருடங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த  ஈழநாடு பத்திரிகையின் நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். அவ்வாறே பல வருடங்களாக நல்லூரில் இயங்கி வந்த யாழ்ப்பாண பல நோக்கு கூட்டுறவுச்சங்க நிர்வாகக் குழுவிலும் முகாமைத்துவ அங்கத்தவராகப் பணியாற்றினார்..

மொழித்திணைக்களத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்களப் பரீட்சையின் மூலமாக இரண்டாம் மொழி ஆசிரியராகவும் தெரிவு செய்யப்பட்டார். மூன்று மொழிகளிலும் தேர்ச்சிபெற்று விளங்கியமையால்  அவரது அறிவுத்துறைப் பயணம் தடையின்றித் தொடர்ந்தது.

அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரின் சிறந்த ஆங்கிலப் புலமை என்னை பல தடவை வியக்க வைத்துள்ளது. 

அன்றைய நாட்களில், கப்பல் - துறைமுக அமைச்சு நடத்திய "மொழி பெயர்ப்பிற்கான ஆட்சேர்ப்புப் பரீட்சையில்" சித்திபெற்று ஒப்பந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு பணிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட, சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அப் பதவியினையேற்கவில்லை. எனினும் வடமத்திய மாகாண சபையினால் வழங்கப்பட்ட ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை சிறப்பாக மேற்கொண்டார்.

புனித அல்குர்ஆன் , ஹதீஸ்கள், நபி வரலாறுகள் உள்ளிட்ட  மத சார்பான நூல்களும் ,  மருத்துவம் , இலக்கியம் , ஓவியம் , சரித்திரம் , அரசியல், தமிழ் இலக்கியங்கள், அரசியல், குடிசைக்கைத்தொழில்கள்  உள்ளிட்ட பல வகையான நூல்களும்   எங்கள் வீட்டிலுள்ள தந்தையின் நூலகத்தில் நிரப்பப்பட்டிருந்த நூல்களாகும்.

தனது தீர்மானத்தை, எண்ணத்தை உறுதிப்படுத்த, நிறைவேற்ற அதிக சிரத்தை எடுத்து தந்தை செயலாற்றும் பாங்கு எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று.அவரிடம் எனக்குப் பிடித்த இன்னுமொரு விடயம் முன்னாயத்தம்...எதனையும் திட்டமிட்டே நேர காலத்துடன் செய்ய முயற்சிப்பார்.

தந்தையின் வழிப்படுத்தலில் நான் சிறிய வயதிலேயே அகில இலங்கை ரீதியிலான ஹிஜ்ரா கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று, அன்றைய ஜனாதிபதி திரு ஜே.ஆர். ஜயவர்த்தன  அவர்களிடம் பரிசில் பெற்றேன். அவ்வாறே அன்றைய  போக்குவரத்து அமைச்சர் ஜனாப் முகம்மது அவர்களின் கரங்களால் பேச்சுப் போட்டியிற்கான பரிசில்களைப் பெற்றதும் மறக்கமுடியாத அனுபவமாகும். 

அவ்வாறே ஸாஹிரா வெள்ளி விழா மலரில் இடம்பெற்ற  "யாமறிந்த மொழியிலே" எனும் எனது கட்டுரையும் அவர் வழிகாட்டலில் நானிட்ட பதிவாகும்.

அவர் அன்று பெற்ற விருதுகள், வரைந்த அழகான ஒவியங்கள், கையெழுத்துக்களில் பொறித்திருந்த பல இலக்கியப் பதிவுகள், தந்தையின் சாதனைகளைச் சுமந்து நின்ற பத்திரிகைச் செய்திகள், அவரெழுதிய நாடகப்பிரதிகள் , அவரது சேவையை நினைவு கூறும் புகைப்படங்கள் போன்ற பல ஆவணங்களை, யாழ்ப்பாணத்திலிருந்தான எம் இடப்பெயர்வும், யுத்தமும் விழுங்கிவிட்டன.


இவ்வாறாக தன்னுள் பல சாதனைகளை வைத்துக் கொண்டு, அவற்றை வெளியுலகிற்கு ஆவணப்படுத்தல் மூலம் எத்தி வைக்காது, சுருங்கிய தன்னுலகமான தன்குடும்பத்திற்குள்ளும், தன்னுறவுகளுக்குள்ளும், நண்பர்களுக்குள்ளும், யாழ் பிரதேச எல்லைகளுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தியவாறு வாழ்ந்த என் தகப்பனாரின் சாதனைகளை, அவரை நன்கறிந்தவர்கள் மறுக்கப் போவதில்லை. அவை ஏடுகளில் பொறிக்கப்படாவிட்டாலும் , மனங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

அவருக்கும் சீரீசீ குழுமம் நினைவுச்சின்னம் வழங்கி, அவரை வாழ்த்தியிருக்கும்  இச் சந்தர்ப்பத்தில் தந்தையின் சாதனை கலந்த நினைவுப்பாதையை நானும் இப்பதிவினூடாகத் தரிசிப்பது, அவருக்கான எனது வாழ்த்தாக இருக்கும் என்பதாலேயே இப் பதிவை இடுகின்றேன்.

நல்ல மனங்களின் வாழ்த்துக்கள் பூத்தூவ, அவர் ஆரோக்கியம் என்றும் சிறப்பு நிலை பேண, வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ் !

- Ms.A.C.Jancy -
.

கௌரவிப்பு விழா

   
  எனது தந்தைக்கு 
வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்

வாழ்க்கையில் நமக்கென ஓர் லட்சியம் வகுத்து, எதிர்காலத்தை நமது ஆளுகைக்குள் உட்படுத்திக் கொள்ள ஓர் தொழில் அவசியம். அரச ஊழியனாயின் அத் தொழிலுக்கு, சேவைக்கு ஒரு குறித்த வயதில் அல்லது சேவைக்காலத்தில் ஓய்வு வழங்கப்படுவது கட்டாயமாகும்.

அநுராதபுர மாவட்டத்தில் பல துறைகளைச் சார்ந்து சேவையாற்றிய 87, அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர்   சீரீசி குழுமத்தினரால் நினைவுச்சின்னங்கள் வழங்கி (25.08.2012) கௌரவிக்கப்பட்டார்கள்.
அதுமாத்திரமின்றி அவர்களின் சேவையை நினைவுபடுத்தி
மலரொன்றும் (" அநுராதபுரத்தின் முதுசொம் " ) வெளியிடப்பட்டது.

சகலரையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து கௌரவப்படுத்தலென்பது  இலேசான முயற்சியல்ல. காலத்தால் என்றும் நிலைத்திருக்கக்கூடிய முன்மாதிரியான செயலாகும்.

எனினும் "வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும்...வாழ்த்த வேண்டும் '' எனும் சிறப்பான எண்ணத்தை வகுத்து, அதனை செயற்படுத்தி வந்த , வருகின்ற  கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரின் பங்களிப்பும் இவ்விழாவிற்கு அச்சாணியாக அமைந்துள்ளது. இவரை ஆசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விழாமலராகிய "அநுராதபுரத்தின் முதுசொம் " எனும் மலரை வடிவமைக்கவும், விழா நிகழ்விற்கும், விருதுகளுக்குமாக  இலட்சங்களை அள்ளி வழங்கிய சீரீசி மண்டப உரிமையாளரும், சமுகசேவையாளருமான அல்ஹாஜ் H.S.A. முத்தலிப் ஹாஜியார் அவர்களும் முழுமையான அர்ப்பணிப்புடன் விழாவை நடத்திய குழுவினரும் மீண்டும் மீண்டும் நன்றிக்குட்படுத்தவேண்டிய முகங்களாவார்கள்..

அநுராதபுரம் சீரீசி மண்டபம் கற்றவர்களாலும், அவர்கள் உறவுகளாலும் நேற்றைய தினம் நிரம்பி வழிய , யாஸீரின் கிறாத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அல்ஹாஜ் H.S.A. முத்தலிப் ஹாஜியார் அவர்களின் தலைமையுரையும் , கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரின் மலராசிரியர் உரையும் , பிரதம அதிதி உரையாக வைத்திய கலாநிதி முஸ்தபா ரையீஸ் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

டாக்டர் ரையீஸ் அவர்கள் இவ்வுலகில் நடைபயிலும் பல அற்புதங்களையும்,  அவற்றை விளக்கும் விஞ்ஞானத்தையும் புனித அல் குர்ஆனின் ஆதாரத்துடன்  மிகச்சிறப்பாக எடுத்துக்காட்டினார்...

கற்றவர்கள், தம் கல்வியறிவுடன், மத அறிவையும் பூரணமாக வெளிப்படுத்தும் போதே அறிவாளிகளாகின்றார்கள் எனும் அவரின் ஆணித்தரமான உரை பல உண்மைகளை விளக்கியது.

அவரைப் போலவே அவரது மகன் பிலால் ரயீஸ் எனும் 13 வயதுச் சகோதரர், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை  ஆங்கிலத்தில் அழகாக உரையாற்றி சபையினரின் மனதைக் கவர்ந்தார்..

மேற்கூறிய  உரைகளுக்கு முடிவுரையாக , விழாக்குழு செயலாளர் எம். ஏ.எம். டில்ஷான் அவர்களின் நன்றியுரை இடம்பெற்றதைத் தொடர்ந்து, பிரதம அதிதி ரயீஸ் அவர்களால் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் எனும் நினைவுச்சின்னங்கள் , ஓய்வு பெற்றவர்கள் ஆற்றிய சேவையை ஞாபகப்படுத்தும் அழகிய, மிகப்பெறுமதியான ஆவணமாகும்.

இவ்வாறாக ஓய்வுபெற்றவர்களுக்காக நடைபெற்ற இச் சிறப்பு விழாவானது இலங்கை வரலாற்றில் ஓர் முன்னோடி விழாவென்றே சொல்ல வேண்டும். நான் நினைக்கிறேன் இலங்கை வரலாற்றில் ஓய்வுபெற்றவர்களின் கௌரவிப்புக்காக சிந்தப்பட்டிருக்கும் முதல் துளி இந்த விழாவாகத்தான் இருக்க வேண்டும்.

இவ்விழாவில் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரை ஆசிரியராகக் கொண்டு ,ஓய்வு பெற்றவர்களை கௌரவிக்கும் விழா மலராக " அநுராதபுரத்தின் முதுசொம்" எனும் சிறப்பான, பெறுமதியான மலரொன்றும் வெளியிடப்பட்டது. இந்த வரலாற்றுப் பதிவு நூல்  என்றும் பேணிப்பாதுகாக்க வேண்டிய சேமிப்பு ஆவணமாகும்.

இத்தருணத்தில் இந்த விழாத் தடத்தின் இயக்கத்திற்காக வியர்வைத்துளிகள் சிந்திய சகலரின். செயலாற்றுகையை  நன்றியுடன் நான் நினைவுகூறுகின்றேன்!.......

என் தந்தையைப் பற்றிய சில நினைவு வரிகள்

என் தந்தையாகிய ஒசன் சாய்பு முஹம்மது அப்துல் கபூர் அவர்கள், (O.S.M.A), யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம் , வண்ணை தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று , முதல் நியமனமாக அரச பொலீஸ் திணைக்களத்தில் பொலீஸ் நியமனம் பெற்றுச் சேவையாற்றினார்.  சில காலங்களின் பின்னர் பொலீஸ் சேவையிலிருந்து விலகி, ஆங்கில உதவியாசிரியராக ஆசிரியவுலகில் இணைந்தார்.

அட்டாளைச்சேனை  ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்  பயிற்றப்பட்ட  தமிழ்மொழி ஆசிரியராக பயிற்சி பெற்றாலும் கூட , தெரிவுப்பரீட்சைக்கு தோற்றி , சித்தியடைந்ததன் மூலம் ஆங்கிலப் பயிற்சி தராதரப் பத்திர ஆசிரியராக நியமனம் பெற்றார். ஆசிரியர் சேவையில் சிறப்பாக சேவையாற்றிய பின் , அதிபர் சேவைக்குள்ளீர்க்கப்பட்டு  , ஓய்வுபெறும் போது முதலாம் தர அதிபராக பதவி வகித்தார். 

பாடசாலையில் சேவைக்காக இணைந்திருந்த காலத்தில் யாழ்ப்பாண கல்வித்திணைக்களத்திலும், இடம்பெயர்ந்த பின்னர் வடமத்திய மாகாணக் கல்வித்திணைக்களத்திலும்  இணைப்புச் செய்யப்பட்டிருந்தார்.

வவுனியா ஆண்டியாபுளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆங்கில உதவி ஆசிரியராக தொடரப்பட்ட இவரின் முதற்சேவை , பின்னர் யாழ்ப்பாணம் மஸ்றஉத்தீன் கலவன் பாடசாலை , யாழ்ப்பாணம் ஒஸ்மானிக்கல்லூரி. அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம்,  என ஆசிரியத்துவப் பணிக்காக விஸ்தரிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் மஸ்றஉத்தீன் பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டிடமொன்று தோற்றம் பெற என் தந்தையாற்றிய பங்களிப்பும் மறக்கமுடியாதது.

மண்கும்பான் முஸ்லிம் பாடசாலை, யாழ்ப்பாணம் அல்ஹம்ரா முஸ்லிம் பாடசாலை, வவுனியா சூடுவெந்தபுலவு  மு.வி , முல்லைத்தீவு மு.வி என்பன தந்தை அதிபராகக் கடமையாற்றிய சில பாடசாலைகளாகும்..

தந்தை சிறந்த இலக்கியவாதி...ஆனால் அவர் நூல் பதிப்பில், தன்னை பிறருக்கு அறிமுகப்படுத்துவதில் பெரிதும் அக்கறை காட்டவில்லை.  இதற்கு அன்றைய யுத்தச்சூழலும் காரணமாக இருந்திருக்கலாம். அவர் எழுத்துக்களே என்னையும் சிறிய வயதில் எழுதத் தூண்டின.

நல்ல மேடை நாடக நடிகர். படிக்கும் காலத்தில் பல மேடை நாடகங்களில் அவர் திறமைகள் வெளிப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வண்ணை ஏ.எஸ். மணி அவர்களின் நட்டுவாங்கத்தில் பல மேடை நாடகங்களை நடித்துள்ளார். அவற்றுள் சில "உயிர்காத்த உத்தமன்" , " தோட்டக்கார மகள்" "கற்சிலை" ,போன்றவையாகும். இவற்றுள் கற்சிலை என்பது தந்தையால் எழுதி இயக்கப்பட்ட நாடகமாகும். அன்றைய நாட்களில் ஏ.எஸ் . மணி அவர்களின் மேடை நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் சிறப்புற்று, மக்கள் அபிமானத்தை வென்றவையாக இருந்தன. 

அட்டாளைச்சேனையில் ஆசிரியராகப் பயிற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் , அங்கு நடைபெற்ற கலைவிழாவில் இடம்பெற்ற சித்திரப்போட்டி, விஞ்ஞானப் போட்டி, நடிகர் போட்டி போன்ற  3 கலைவெளிப்பாடுகளிலும் முதலாமிடத்தைப் பெற்று பரிசில்களை வென்றுள்ளார்.

முதலுதவிப் பிரிவு ஆசிரியராகவும், சாரண இயக்க ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார். 

சிறந்த பாடகர்...கற்கும் காலங்களில் பாடசாலை மன்றங்களில் தந்தையின் பாடல் இடம்பெறாத நாட்களே  இல்லையென்றே சொல்லலாம்.

சிறந்த ஓவியர்........அவரின் ஓவியங்கள் பல வரையப்பட்டிருந்த ஆல்பம் என் பிஞ்சு வயதின் ரசிப்பை பல தடவைகள்  வென்றிருக்கின்றன. ...இத்தனை வருட கால உதிர்விலும் கூட, என் மனக் கண்ணில் அவை வந்து வந்து போகின்றன. அவர் வெள்ளைச்சங்குகளின் மேற்பரப்பில் செதுக்கிய  பல அரபு எழுத்தணி வடிவங்கள் என்னை இன்றும் ஆச்சரியப்படுத்தும் விடயங்கள்!.

கைவைத்தியம் உட்பட தன் சுயமுயற்சியால் பல துறைகளைத் தானாகவே கற்றுத்தேர்ந்தவர்..... வானொலி திருத்தம், தொலைக்காட்சிப் பெட்டித் திருத்தம், கணனி போன்ற உபகரணங்கள் திருத்தம், வீட்டு மின்னிணைப்பு வேலைகள், அன்ரனா தயாரிப்பு , பிளாஸ்டர் தயாரிப்பு போன்ற பல துறைகள் அவர் கைதேர்ந்த துறைகளாகும்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் முன் முகப்புத் தோற்றம் அவரின் ஓவியத்திறனால் உயிர் பெற்றதொன்றாகும். இதனை "யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு" நூலில் அதனாசிரியர் ரஹீம் ஆசிரியரவர்கள் இத்தகவலைக் குறிப்பிடுகின்றார்கள்.

அவ்வாறே யாழ்ப்பாணம் குளத்தடி சின்னப்பள்ளிவாசலின் தோற்றத்தையும் தந்தையே வரைந்து , அத்தோற்றத்திலேயே பள்ளிவாசலைக் கட்டிமுடிக்க பெரும் பங்களிப்பாற்றியதை அன்றைய யாழ் முஸ்லிம் சமூகம் மறந்திருக்க மாட்டார்கள். வரையப்பட்டிருந்த பள்ளிவாசலின் தோற்றம், அன்றைய காலங்களில் சித்திரமாக பள்ளிவாசலின் வெளிப்புறச் சுவரில் வைக்கப்பட்டிருந்ததை நானே பல  தடவைகள் அவதானித்துள்ளேன்..

அவ்வாறே வி.எம்.முஹீதின் தம்பி அவர்களின் தலைமையில் இயங்கிய யாழ்ப்பாணம் குளத்தடி சின்னப்பள்ளிவாசலின் கட்டிடக் குழுவின் செயலாளராக இருந்த காலத்தில் , யாழ் முஸ்லிம் சமுகத்திற்கு பெரும் சேவையாற்றினார்,. அவரது நிர்வாகக் காலத்திலேயே யாழ்ப்பாண முஸ்லிம் மையவாடி , பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. வக்பு சபைக்கான பணத்தையும் அவர் முன்னின்றே அனுப்பி வைத்தார்.

"ஒன்றே ஜூம்ஆ' சமூக எழுச்சியிலும் போராட்டத்திலும் தந்தையின் பங்களிப்பு அன்றைய கால கட்டத்தில் முக்கியமானதொன்றாக விளங்கியது.

வெள்ளிப் பேழையாலான தீப்பெட்டி அளவினாலான  திருக்குர்ஆன்  உள்ளிட்ட  பல பரிசில்களும் சான்றிதழ்களும் ,  குர்ஆன் மனனம் , பேச்சுப் போட்டி உள்ளிட்ட  பல  போட்டிகளில் பங்குபற்றி பெற்றுள்ளார்.

அன்றைய நாட்களில் இந்திய அமைதி காக்கும் படையினர் , யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்தில், எமது பிரதேச மக்களுக்காக என் தந்தை சேவையாற்றியதை அம் மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்.

பல வருடங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த  ஈழநாடு பத்திரிகையின் நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். அவ்வாறே பல வருடங்களாக நல்லூரில் இயங்கி வந்த யாழ்ப்பாண பல நோக்கு  கூட்டுறவுச்சங்க நிர்வாகக் குழுவிலும் முகாமைத்துவ அங்கத்தவராகப் பணியாற்றினார்..

மொழித்திணைக்களத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்களப் பரீட்சையின் மூலமாக இரண்டாம் மொழி ஆசிரியராகவும் தெரிவு செய்யப்பட்டார். மூன்று மொழிகளிலும் தேர்ச்சிபெற்று விளங்கியமையால்  அவரது அறிவுத்துறைப் பயணம் தடையின்றித் தொடர்ந்தது.

அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் , ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரின் சிறந்த ஆங்கிலப் புலமை என்னை பல தடவை வியக்க வைத்துள்ளது. 

துறைமுக அமைச்சு நடத்திய "மொழி பெயர்ப்பிற்கான ஆட்சேர்ப்புப் பரீட்சையில்" சித்திபெற்று ஒப்பந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு பணிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட, சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அப் பதவியினையேற்கவில்லை. எனினும் வடமத்திய மாகாண சபையினால் வழங்கப்பட்ட ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை சிறப்பாக மேற்கொண்டார்.

புனித அல்குர்ஆன் , ஹதீஸ்கள், நபி வரலாறுகள் உள்ளிட்ட  மத சார்பான நூல்களும் ,  மருத்துவம் , இலக்கியம் , ஓவியம் , சரித்திரம் , அரசியல், தமிழ் இலக்கியங்கள், குடிசைக்கைத்தொழில்கள்  உள்ளிட்ட பல வகையான நூல்களும்   எங்கள் வீட்டிலுள்ள தந்தையின் நூலகத்தில் நிரப்பப்பட்டிருந்த நூல்களாகும்.

தனது தீர்மானத்தை, எண்ணத்தை உறுதிப்படுத்த, நிறைவேற்ற அதிக சிரத்தை எடுத்து தந்தை செயலாற்றும் பாங்கு எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று.அவரிடம் எனக்குப் பிடித்த இன்னுமொரு விடயம் முன்னாயத்தம்...எதனையும் திட்டமிட்டே நேர காலத்துடன் செய்ய முயற்சிப்பார்.

தந்தையின் வழிப்படுத்தலில் நான் சிறிய வயதிலேயே அகில இலங்கை ரீதியிலான ஹிஜ்ரா கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று, அன்றைய ஜனாதிபதி திரு ஜே.ஆர். ஜயவர்த்தன  அவர்களிடம் பரிசில் பெற்றேன். அவ்வாறே அன்றைய  போக்குவரத்து அமைச்சர் ஜனாப் முகம்மது அவர்களின் கரங்களால் பேச்சுப் போட்டியிற்கான பரிசில்களைப் பெற்றதும் மறக்கமுடியாத அனுபவமாகும். 

அவ்வாறே ஸாஹிரா வெள்ளி விழா மலரில் இடம்பெற்ற  "யாமறிந்த மொழியிலே" எனும் எனது கட்டுரையும் அவர் வழிகாட்டலில் நானிட்ட பதிவாகும்.

அவர் அன்று பெற்ற விருதுகள், வரைந்த அழகான ஒவியங்கள் , கையெழுத்துக்களில் பொறித்திருந்த பல இலக்கியப் பதிவுகள், தந்தையின் சாதனைகளைச் சுமந்து நின்ற பத்திரிகைச் செய்திகள், அவரெழுதிய நாடகப்பிரதிகள் , அவரது சேவையை நினைவு கூறும் புகைப்படங்கள் போன்ற பல ஆவணங்களை , யாழ்ப்பாணத்திலிருந்தான எம் இடப்பெயர்வும், யுத்தமும் விழுங்கிவிட்டன.

இவ்வாறாக தன்னுள் பல சாதனைகளை வைத்துக் கொண்டு, அவற்றை வெளியுலகிற்கு ஆவணப்படுத்தல் மூலம் எத்தி வைக்காது, சுருங்கிய தன்னுலகமான தன்குடும்பத்திற்குள்ளும், தன்னுறவுகளுக்குள்ளும், நண்பர்களுக்குள்ளும், யாழ் பிரதேச எல்லைகளுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தியவாறு வாழ்ந்த என் தகப்பனாரின் சாதனைகளை, அவரை நன்கறிந்தவர்கள் மறுக்கப் போவதில்லை. அவை ஏடுகளில் பொறிக்கப்படாவிட்டாலும் , மனங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

அவருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி, வாழ்த்தப்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் தந்தையின் சாதனை கலந்த நினைவுப்பாதையை நானும் தரிசிப்பது, எனது வாழ்த்தாக இருக்கும் என்பதாலேயே இப் பதிவை இடுகின்றேன்.

நல்ல மனங்களின் வாழ்த்துக்கள் பூத்தூவ, அவர் ஆரோக்கியம் சிறப்பு நிலை பேண, வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ் !

நடைபெற்ற விழா தொடர்பான சில புகைப்படங்கள்


 அன்பு ஜவஹர்ஷா உரையாற்றுகின்றார்



2012/08/22

பபா அம்புலி


வான் இருளை சற்றுக் கலைக்கும் வண்ணம் வானில் கால்வாசி மாத்திரம் நிரப்பப்பட்ட வண்ண நிலாவொன்றும், தம் மழகையும் ரசிக்கும்படி கண் ஜாடை செய்யும் பல நட்சத்திரங்களும், தம் ஒளியை வானில் அள்ளி வீசி இருளை சற்று அகற்றிக் கொண்டிருந்த அந்த நேரம் எங்கள் வீட்டுச் செல்லம் அஸ்கா, என் கைகளைப் பற்றி யிழுத்தவாறே வீட்டின் முற்றத்தில் கொண்டுபோய் நிறுத்தினாள்....

" என்ன குஞ்சு காட்டப் போறீங்க எனக்கு " 

நான் அவள் கன்னத்தை செல்லமாக வருடியவாறே கேட்டேன்.

"பபா அம்புலி வந்திருக்கு......அதைப் பார்க்கணும் "

என்றாள் அந்த மூன்று வயதும் நிரம்பாத மழலை!

பபா அம்புலி..........!

பாதி உடைந்திருக்கும் அந்த நிலாவுக்கு அவளிட்ட அந்தப் பெயர் கூட அழகாகத்தான் இருக்கின்றது. நானும் ரசித்தேன் அந் நிலவின் எழில் கசியுமந்த அழகை அவளுடன் சேர்ந்து நெடுநேரமாய்!

அஸ்கா............

வழமையாக அம்புலிக்குப் பயம்...அவளுக்கு தினமும் உணவூட்டுவதென்பது எங்கள் வீட்டில் பெரும் போராட்டம் தான். குழந்தை சாப்பிடுவதில் அக்கறை காட்டமாட்டாள். இரவில் உணவுண்ண அடம் பிடித்தால் இந்த நிலாவைக் காட்டித்தான் உணவூட்டல் நடைபெறும். அம்புலி மீதான பயத்திலும், தனதுணவை அம்புலிக்கு கொடுத்து விடுவார்களோ எனும் ஆதங்கத்திலும் உண்ணச் சம்மதிப்பாள். இப்படியாவது ஏதோ சிறு உணவுக் கவளங்கள் அவள் சமிபாட்டுத் தடத்தில் இறங்கி விடுகின்றதே எனும் திருப்தி எமக்கு!

அம்புலிக்குப் பயப்படும் பிள்ளை என்னை இழுத்து வந்து வானத்தைக் காட்டும்படி இன்று கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்......

"அஸ்கா பபா........நீங்க அம்புலிக்குப் பயமில்லையா"

நான் அப்பாவி போல் பிள்ளையிடம் கேட்க, அவள் பயம் என தலையாட்டினாள்

"நான் உம்மா அம்புலிக்குத்தான் பயம் , ஏன் நம்ம வீட்டுக்கு வருது" 

பிள்ளை தொடுத்த வினாக்களை ரசித்தேன் மெல்லிய புன்னகையை என்னுள் பரப்பியபடி !

ஏனோ சின்னப் பிள்ளைகள் தொலைவில் எட்டிப் பார்க்கும் நிலா மீது ஆசையை வைத்தாலும் கூட, பயத்தையும் வெளிப்படுத்துகின்றார்கள்..நிலா பற்றிய பிரக்ஞ குழந்தைகளுக்கு வெறும் கற்பனையுருவாகவே அமைந்து விடுகின்றது..கொஞ்சம் வெளியுலகைப் பார்க்கும், பிரித்தறியும் பக்குவம் வரும் போது நிலாவைத் தோழியாக்கி ரசிக்கின்றது பிள்ளை மனம்!

"ஓ..........உம்மா அம்புலி (பூரண நிலா) இன்னும் கொஞ்ச நாள்ல வந்திடுவா..அதுவரைக்கும் இந்த பபா அம்புலிதான் நம்மட வீட்டுக்கு வரும் " 

நானும் குழந்தையுலகில் பயணித்து அவளுக்கு சில விடயங்களைப் புரிய வைக்கத் தொடங்கினேன்.

"பபா அம்புலி எங்க போயிருந்தது " 

குழந்தை வினவ, நானும் சளைக்காமல் அவளுக்கேற்ப பதில் சொன்னேன்..

"பபா அம்புலி காலைல ஸ்கூல் பொயிட்டு, நைற்தான் அச்சா பபாவ பார்க்க வந்திருக்கு.......அந்த பபா அம்புலியோட விளையாடுவோமா நாம ரெண்டுபேரும்"

நான் இயல்பாகக் கேட்க, குழந்தை அபிநயத்து தான் அதற்குப் பயமென்பதை கூறி அவசரமாக மறுத்தாள்.

குழந்தையின் ஆர்வம் திடீரென நட்சத்திரங்கள் மீதும் பரவியது.

"இது என்ன"  வினவினாள் ஆவலுடன்...........

"இது தான் நட்சத்திரம்....ஸ்டார் .........."   

ஒற்றை நட்சத்திரமொன்றைச் சுட்டிக் காட்டிச் சொன்னேன். பிள்ளையும் கஷ்டப்பட்டு தன் மழலை மொழியில் நான் கூறிய அந்த வார்த்தைகளை மீள எனக்கு சொன்ன போது, அந்த மழலைத் தமிழை சில நிமிடங்கள் மெய்மறந்து ரசித்தேன்.

"அப்ப ஸ்டார் என்ன செய்யுது  ஏன் அங்கு வந்துது"  

பிள்ளையின் அடுத்த வினாத் தேடல் களத்தில் இறங்கியது.

"பபா நிலாட விளையாட்டுச் சாமான்கள் தான் நட்சத்திரம்.........பபா நிலா குழப்படி அதுதான் தன் விளையாட்டுச் சாமான்கள வானத்தில வீசியிருக்கு.... அஸ்கா பபா அச்சாவா கூடாதா, இப்படி விளையாட்டுச் சாமான்கள வீசியெறிவீங்களா"

நான் கேட்க, குழந்தை தன் கைகளை விரித்துக் காட்டியபடி  "அச்சா பபா" என்றாள். அவளை வாரியணைத்து கன்னத்தில் என் அன்பைப் பதித்து அவள் தலையை மெதுவாக வருட ஆரம்பித்தேன். 

இரவில் மெதுவாக வீசிக்கொண்டிருக்கும் கூதல் நிரம்பிய காற்றின் வருடலில் அவள் மழலை சுகம் மனதுக்குள் மானசீகமாக இறங்கிக் கொண்டிருந்தது.

இந்த வயதில்தான் பிள்ளை தன் சூழல் அனுபவங்களால் உலகையறிய முயற்சிக்கின்றது.  குழந்தையின் புத்திக்கூர்மையும் மெதுவாகப் பட்டை தீட்ட ஆரம்பிக்கப்படுகின்றது.  எனவே எதற்கெடுத்தாலும் வினாக்களே சிந்தனைத் தூண்டலாக மாற்றப்படுகின்றது. ஏன்.............எப்படி......எங்கு......இவ்வாறான வினவல்கள் தான் அவள் வார்த்தைகளுடன் இணைந்து தன்னைச் சூழவுள்ள நிகழ்வுகளை மனதுக்குள் படமாக்க வுதவுகின்றது. நான் குழந்தை உளவியல் பற்றி அறிந்திருப்பதால் அவளின் வினாக்களுக்குப் பொறுமையுடன் உண்மையான விவரங்களை அவள் புத்திக்கேற்ப அவள் பாணியில் கூறுவேன்.......இது எனக்கும் பிள்ளைக்குமிடையிலான தின நிகழ்வு..பிள்ளை விரும்பும் உலகத்திற்கு நான் அழைத்துச் செல்லத் தயங்குவதில்லை....

"யூ டியூப்பில்" குழந்தை விரும்பும் ரயில் கார்ட்டூன்களும், வானத்து நிலாவும் தினமும் இரவில் பிள்ளை ரசிக்கும் உலகங்களாக கவிழ்ந்திருக்கின்றன!

நாளையும் நிலா வரும்...........பிள்ளை கேட்கும் இதே கேள்விகளுக்கு , எனது விடைகள் மாத்திரம் வேறுபடும்.........

இயற்கையின் ரசிப்புடன் கூடிய மழலை சுகம், என் இரவுத்துளிகளை பனித்துளிகளாக்கி என்னுள் உலாவவிடத் தொடங்கின வாஞ்சையுடன் ! 

அகம் மெய்மறந்து அந்த வுலகில் வேரூன்றத் தொடங்கினேன் யதார்த்த வுலகின் இம்சைகளைக் கலைந்தபடி!

ஆசிரியர் கீதம்


தேசியரீதியில் தமிழ்மொழியில் இசைக்கப்படும் ஆசிரியர் கீதம்!
ஆ ஆ ஆ......ஆ ஆ ஆ..........

முத்து முத்தான சித்திரங்கள்
இலங்கை முற்றத்தில் சிந்திய ரத்தினங்கள்  (முத்து)
பற்றும் பாசமும் வைத்தவற்றை
நல்ல பாதையில் சேர்க்கும் பணி எமதே!    (2)

                                                                                           (முத்து)
அன்னை மடியில் அரவணைத்த பிள்ளை
பள்ளி வரும் பிஞ்சு பாலகனாய்  (அன்னை)
அவன் தன்னம் தனிமையைப் போக்கிடவே
உள்ளத்தில் நம்பிக்கை அன்பை ஊற்றிடுவோம் (அவன்)
                                                                                            (முத்து)

எண்ணும் எழுத்தும் உணர்ந்திடுவோம்
உள்ள தேவைகள் அறிந்து பூர்த்தி செய்வோம்   (எண்ணும்)
அவன் ஒழுங்குடன் ஒழுக்கமும் பேணி நல்ல
சிந்தை ஆற்றலை தூண்டிடுவோம்                         (அவன்)
    
                                                                                            (முத்து)

கற்பித்தல் கற்றல் நிகழ்ந்திடவே
நல்ல கட்டுப்பாட்டுடன் வகுப்பறையில்        (கற்பித்தல்)
தினம் பெற்ற கடமையை பேணி ஏற்றே
ஞாலம் போற்றும் சமூகத்தை நாம் படைப்போம்   (தினம்)

                                                                                             (முத்து)

முன்மாதிரி



தான் பருகிய நீரை இளநீராக்கித் தரும் தென்னையைப் போல், தான் கற்ற , அறிந்த விடயங்கள் மூலம் சேவையை மூச்சாக்கி சமுகத்தினருக்கு வழங்கக் காத்திருப்பவரே அரச ஊழியர்கள்....

"கற்றவர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு"

இது தொன்மைக் காலம் தொடக்கம் நம் வரலாற்றில் பதிவாக்கப்பட்டு வருகின்ற குரல்........குறள் !

"அரச உத்தியோகம் புருஷ லட்சணம்"  என்பார் நம்மவர்கள் !

உண்மையில் சிறிதளவு கற்றவர்கள் பெறும் மாத ஊதியத்தை விட அதிகம். கற்றவர்கள் பெறும் மாத ஊதியம் குறைவாக இருந்தாலும் கூட, சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் கிடைக்கும் ஓய்வூதியமும், அதனால் கிடைக்கும் சுயமரியாதையும், நற்சமுகம் எப்பொழுதும் தருகின்ற மதிப்பும், கௌரவமும் எமக்குக் கிடைக்கும் வரப்பிரசாதங்கள்!

ஒரு அரச ஊழியரிடமிருந்து உச்ச பலனை எதிர்பார்த்து, அதன் மூலம் திருப்தியான சேவையைச் சமூகத்திற்கு நுகர்ந்தளிப்பதே அரசின் நோக்கம்..

எனவே ஓய்வுபெறுவதற்கென ஒருவர் தனது உடலாலும், உள்ளத்தாலும் ஒத்துழைக்கக்கூடிய இறுதி வயது  தீர்மானிக்கப்பட்டு , அவரது சேவைப் பயணம் கட்டாயப்படுத்தப்பட்டு நிறுத்தப்படுகின்றது.  இதற்கென இறுதி வயதினைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசின் கரங்களில் உள்ளது.

ஓய்வுபெற்ற ஒருவர் கௌரவமாக, தன் காலில் நிற்கும் உழைப்பவர் போல் மாத வருமானமொன்றைப் பெற்றுக் கொள்ளக்கூடியவராக மாற்றப்படுவதன் மூலம் அவர் தனது வயதான காலத்தில் பிறரைச் சார்ந்திராது, முன்பு உழைத்த அதே மனநிலைக்குள் தக்கவைக்கப்படுகின்றார். இதன் மூலம் அவர் உளநிலையும் மேம்படுத்தப்படுகின்றது.

ஒருவர் தனது சேவையிலிருந்து ஓய்வுபெறும் போது, மனஅழுத்தத்திற்கு சிறிதளவாவது உள்ளாக  நேரிடும். ஏனெனில் அதுவரை கடமைகளுடன் தன்னைப் பழக்கப்படுத்தியவர், வீட்டில் எவ்வித வேலைகளுமற்று தனிமைப்படுத்தப்படும் போது அவரின் மன அழுத்தமும் அவரை லேசாக தொட்டுச் சொல்கின்றது. ......கொல்கின்றது..

உத்தியோக வாழ்வின் இரண்டாம் நிலையே ஓய்வு நிலை. அதுவரை அடிக்கடி அவரது நிறுவனங்களில் முதன்மைப்படுத்தப்பட்டவர், ஓய்வுபெற்றதும் வெறுமைப்படுத்தப்படுகின்றார். குடும்பம், உறவுகள் என அவரின் முழுக் கவனத்தையும் மானசீகமாகத் திசை திருப்புகின்றார். இது சாதாரணமான நிகழ்வாகின்றது.

ஓய்வு என்பது கடினமான உடலுழைப்புக்கே அன்றி நம்மிலெழும் மன  மகிழ்ச்சிக்கல்ல...அவர்களும் சிறு குழந்தைகள் போலவும்,, ஆலோசனை வழிப்படுத்தலை வழங்கும்  முதியோர் போலவும், அநுபவசாலிகள் போலவும் நம் கருத்தினை நிறைத்திருப்பார்...

ஓய்வூதியம் பெறும் வயதினை அண்மிக்கும் போது ஆரோக்கியமும் மெதுவாக அகல ஆரம்பித்து, நோய்ப்படுக்கையில் தேகம் விழ ஆரம்பிக்கின்றது..மருத்துவமே அவர்களின் வார்த்தைகளாகின்றன,

இத்தகைய மனப்பண்புகளால்  இலட்சியப்படுத்தப்பட்ட , சேவை மூலம் தன் சமூகத்தினருக்கு நல்ல விளைவுகளைப் பெற்றுக் கொடுத்த அரச ஊழியர்களைக் கௌரவிக்கும் நற்பண்பை முதன் முதலில் அநுராதபுரம் சீடீசீ குழுமம் வெளிப்படுத்தியுள்ளது .

அநுராதபுரம் மண்ணில் பிறந்து சேவையாற்றி ஓய்வுபெற்றவர்களும், வெளி மாவட்டத்திலிருந்து இங்கு வந்து சேவை செய்து ஓய்வுபெற்றவர்களும் கெளரவிக்கப்படவுள்ளார்கள். இக் கௌரவிப்பு எதிர்வரும் சனி (25.08.2012) மாலை 3.30 ற்கு நடைபெறவுள்ளது. சின்னம் வழங்குதல் , மலர் வெளியீடு என காலம் மறக்காத நினைவுத்தடங்களுள் இவர்களது சேவை பதிக்கப்படவுள்ளது

"வாழும் போதே வாழ்த்தப்படல் வேண்டும் " எனும் கொள்கை முனைப்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் பலர் கௌரவிக்கப்படவுள்ளார்கள். அதில் எனது தந்தை ஜனாப் ஓ.எஸ.எம். ஏ கபூர் (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்.. அதிபர் சேவைத்தரம் 1)அவர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்கள் எனும் செய்தி மகிழ்வு தருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இவ்வாறான ஓர் நிகழ்வுகூடலுக்குத் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றும் அன்பு ஜவஹர்ஜா சேர் அவர்களும், டில்ஷானும், அவரது செயற்பாட்டுக்கு பக்க பலமாக நிற்கும் விழாக் குழுவினரும் நன்றியுடன் எம்மால் நினைவுகூறப்படுகின்றனர்.

இம் முன்மாதிரியும், முயற்சியும், வழிநடத்தப்படலும் தொடர்ந்தும் நடத்தப்பட்டு , காலத்தின் ஞாபகக் கரங்களுள் தன்னை எப்பொழுதும் முழுமைப்படுத்தப்படல் வேண்டுமென்பதே எமது அவவாகும் !

அல்லாஹ் வழித்துணையுடன் இவர்களின் இப்பயணம் தொடர வாழ்த்துக்கள்!


2012/08/21

என்று தணியும்


விஞ்ஞானம் விசமம் செய்ததா........
அஞ்சுகின்றதே நம் வாழ்க்கை!
சூரியன் சூட்சுமத்தில் எரிகின்றது - எம்
பூமியிலோ வரட்சி வருத்துகின்றது!

எம் தரைப் பாதங்களில் - பல
பித்தவெடிப்புக்கள் வரையப்பட்டுள்ளனவே!...........
வைத்தியர்களில்லையோ சிகிச்சைக்கு
சித்தம் கலங்கு தியற்கை ஒவ்வொரு நாளும்!

பசுமை மரங்களெல்லாம் நீர் மறந்து
எலும்புகளாய் உருமாறியதில்.............
எரிகின்றது மரப்பற்றை - தீக்குச்சிகள்
உரசாமலே !

இலையுதிர்த்த மரங்களெல்லாம்
விலைமாதராய் அவிழ்த்துக்கிடக்க............
நறுஞ்சோலை கூடப் புழுக்கம் கண்டு
தலை கவிழ்த்து முறைத்து நிற்கின்றது!

பாலைவனங்கள் சொகுசாயிங்கு
தரையோடு உறவாகிப் போக - நம்மிள்
இறந்து போகும் நீரூற்றுக்காய் - தேகம் கூட
மரத்துப் போய் வெடிக்கின்றது!

நீரோடைகளின் சலசலப்பெல்லாம்
நீராவியாய் கலைந்தேதான் போனதில்........
குளங்களிலெல்லாம் குஷியாய் நிதமும்
எட்டிப்பார்க்கின்றது மணற்றரை!

வளியெங்கும் வெப்பமுறிஞ்சி
அழகான தேசம் இறந்தும் போனதில் - நீர்
வாழ் உயிரினங்களின் மூச்சைப் பிடுங்கும்
வெயில்தானின்னும் எரிக்கின்றது!

கார் மேகமிங்கு மிரண்டோட
பாரெங்கும் மழைக்கு மேங்க - ஈரலிப்பு
தார்மீகம் சிதைந்தே போக ...........
வரண்டுதான் போனதெங்கள் சூழல்!

நா வரண்டு தொண்டை யும் காய்ந்து
நாடியெல்லாம் துடிப்பையுமடக்கி.........
வாடி நிற்குமெம் தேகம் கதற
ஓடி வந்த காலநிலை யாதோ!

இனங்களாலும் மதங்களாலும்
கோடு கிழித்தவர்கள் யாவரும்..........
பேதமேதுமின்றி குரல்வளை குளற
தாகமுற்று  துடிக்கின்றார்கள் தேசத்தில்!

ஜன்ஸி கபூர் 

2012/08/20

மிஸ்ட் கால் (missed call )


2010ம் வருடம்............. ...........!

என்  ரிங்டோனாய் இடப்பட்டிருந்த  ஒலியின் அலைவு பலமாக என்னுள் நுழைந்து என் கவனத்தை அதன்பால் திசை திருப்பியது...

கைபேசியை அவசரமாக எடுத்து அழைத்தவர் யாரெனப் பார்ப்பதற்கு முயல்வதற்கிடையில், அது "மிஸ்ட் கோலாக"ப் பதிவாகியிருந்தது. அன்றைய தினம் கைபேசியில் அந்த அழைப்பு ஒலிப்பதும், நான் தூக்குவதற்கிடையில் அது துண்டிக்கப்படுவதும், ...........எரிச்சல் என் மனதின் கொதிநிலையைக் கூட்டியது....

"யாராவது என்னுடன்  விளையாடுகின்றார்களா !"

என் வினாவின் தொக்கலில் மனதின் அடித்தளத்தில் எரிச்சலும், ஆச்சரியமும் மாறி மாறி என்னைக் கௌவிப் பிடித்துக் கொண்டன. இருந்தபோதும் என் சினத்தைக் கட்டுப்படுத்தி உண்மைநிலையை எனக்குள் ஆராய்ந்தேன்.

"எனது அந்தத் தொலைபேசி இலக்கம் என் குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் நான் பரிமாறியதில்லை. எனவே இவ்வழைப்பில் வம்பு நோக்கமில்லை. இது அறியாத பிழையான அழைப்புத்தான் "

என முடிவெடுத்த நிலையில் நானே குறித்த அவ்விலக்கத்தை டயல் செய்தேன்...

"ஹலோ".........நான்

"ஹலோ"..........மறுமுனை

"ஓயா கவுத".......... நான் ( நீங்கள் யார் )

".................... இன்னவாத " மறுமுனை  (...........இருக்கின்றாரா)

" ஓ சொறீ.....ரோங் நம்பர் " ........நான்

தொடர்பைத் துண்டித்த நான்,  அவ்வழைப்பை மறந்தவளாய் என் கடமைகளுடன் மூழ்கியிருக்க,  குறித்த நம்பரிலிருந்து இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் எனக்கு அழைப்பு வந்தது.

எடுத்தேன் அதே குரல்.............!

என்னைப் பற்றிய தேடலுக்கான அழைப்பது. வழமையாக என்னைப் பற்றிய விபரங்களை அறிமுகமில்லாதவர்களுக்கு நான் கொடுப்பதில்லை. அதிலும் அவர் பெண்ணாக இருப்பதனால்  "பாத்திமா" என ஒற்றைச் சொல்லில் அறிமுகப்படுத்தினேன்.

தன் விபரங்களையும் அப் பெரும்பான்மைத் தோழி கூறினார். அவ பேசின விதமும், பண்பும் என்னைக் கவர்ந்ததால் எங்கள் உரையாடல் உடனே அறுபடவில்லை. ஆவலுடன் .....நீளமானது

"எனக்கு நீங்கள் உதவவேண்டும். நான் தமிழ் பயிற்சிநெறி கற்கின்றேன். தேவைப்பட்டால் உதவுவீர்களா" 

என அவர் சிங்களத்தில் கோரிக்கை விட, நானும் அவரிடம் சிங்கள உச்சரிப்பை பழகிக்கொள்ளலாமென்ற நப்பாசையில் மகிழ்வோடு சம்மதித்தேன்.

அன்று தொடக்கப்பட்ட எம் நட்பு பாலம் மூன்று மாத காலமாக சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பில் தன்னை முழுமையாக அடக்கிக் கொண்டது, இருவருமே மொழிப்பயிற்சி நன்கு பெற்றோம். காலங்கள் மூன்றும் மறைந்த போது அவள் பரீட்சையும் திருப்தியுடன் எழுதி முடித்திருந்தாள்.

ஒருநாள் அவளழைப்பே எனக்கு அலாமானது. பதறித்துடித்தெழுந்தேன்.

"ஏய் என்னடி ஆச்சு"

மனம் பதற்றப்பட, சிரித்தவாறே கைபேசியினூடே என் தலையில் ஒரு "நறுக்" வைத்தாள்.

"எப்ப பாரு........ஒரே பயம்தான்.....நான் 90 மாக்ஸ் என் தமிழ் கோர்ஸில் எடுத்து பர்ஸ்டா வந்திருக்கிறேன்டீ. உனக்குத்தான் இத பர்ஸ்ட்  சொல்லனும் என்று நெனைச்சேன்"


அவள் மகிழ்வு எனக்குள்ளும் நிரம்ப, அன்று முழுவதும் எங்கள் அன்புத் தொல்லையினால் எங்கள் கைபேசியின் பற்றரி மின்வலுவை இழந்து பல தடவை உயிர்ப்பிக்கப்பட்டது!


இவ்வாறாக எங்கள் நட்பும் நாட்களின் விரைவான சிறகடிப்பில் இறுக்கமாகப் பிணைந்தது . இந்த இரண்டு வருடமும் நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காத நிலையில் உண்மையான நட்பைத் தினமும் பரிமாறிக்கொண்டோம் இப்போது எங்கள் நட்புக்கு இரண்டு வயதும் கடந்துவிட்டது.

சென்றமாதம் திடீரென அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

"உன்னைப் பார்க்க எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கிறதடீ....இனியும் எனக்கு பொறுமையில்ல..உன்ன நேரில பார்க்கணும், வீட்டுக்கு வரட்டா" 

அவள் கைபேசியில் தன்னுணர்வைப் பதித்த போது.....


"வாவ்" 


நானும் உற்சாகமாக அவள் வருகைக்கு நாள் குறித்தேன், அந்த நாளும் வந்த போது அவள் காலடி என் வீட்டுத்தரையில் படிந்து அன்பைச் சிதறியது.

பல நாள் முகந்தெரியாமல், ஏதேதோ உருவ எதிர்பார்ப்புக்களுடன் நாங்கள் பண்ணியிருந்த கற்பனையுரு அன்று கலைந்தது..

அவள் அழகாய் இருந்தாள்.......ரொம்ப ரொம்ப ....பல கோணங்களில் அவளழகை, அன்பை, குறும்பை ரசித்தேன்...கண்களால் பார்வையுருட்டி , அபிநயத்து பண்ணும் பகிடியை.......அவள் எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது.

அவளுக்கும் என்னை................ரொம்ப ரொம்ப !

இத்தனை நாளும் அகத்தின் ஆட்சியில் அடங்கிப் போயிருந்த எங்கள் நட்பு , முதன்முதலாய் அன்று உருவங்கள் கண்டு மகிழ்வின் பேரலையில் சிக்கித் தவித்தது. நிறையப் பேசினோம்...இந்த இரண்டு வருடங்களும் பேசி முடிக்காத பல விடயங்களை அந்த இரண்டு மணித்தியாலத்தில் பேசி முடித்த திருப்தி!

அவளைப் பிரியும் நேரம் இருவர் கண்களும் கலங்கியது. என் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.....

விடைபெறும் இறுதி நொடியில் .........!

அவள் கரம் என் கரத்துடன் பிணைக்கப்பட்டபோதுதான் எதையோ அவள் என் கைகளுக்குள் அழுத்தும் விசையொன்றை உணர்ந்தேன். பார்க்க முயற்சித்த போது அழகாய்ச் சிரித்தாள்....

"இது என் அன்பான கிப்ட் உனக்கு! நான் வெளில போனதும் பாரு " .....

அவள் கோரிக்கையேற்று மௌனமாகத் தலையாட்டிய பின்னர்  சற்று குரலில் சூடேற்றினேன் !

" ஏய் .........என்னடி இது ! இத நான் உன்கிட்ட எதிர்பார்த்தேனா" 

நான் சற்று உரப்பை அதிகரித்த போது அவள் வார்த்தைகளி னன்பு  என்னைச் சற்றடக்கின.

"கூல்மா...........நீ.........ஏசுவேன்னு தெரிஞ்சுதான் நான் முதல்ல இத சொல்லல"

அவள் என்னை விட்டு மறையும் போது, அவள் எனக்காக சற்றுமுன் உதிர்த்த வார்த்தைகளும் தொலைவாகிப் போகின!

என் கரங்கள் அவள் விட்டுச்சென்ற அடையாளத்தை எனக்கு காட்சிப்படுத்த மெதுவாக விரிந்தது . உள்ளே...  கண்ணாடி மூடியால் மூடப்பட்ட சிறு பெட்டி ஆறு வெவ்வேறு நிறங்களுடன் கூடிய இரத்தினக்கற்களுடன் !

இரத்தினக்கற்களை விடப் பெறுமதியான அவள் நட்பைத்தான் எனக்கு விட்டுச் சென்றுள்ளாளே!................... அதை  நிரூபிக்கவா இது!

மனம் மிகையாக நெகிழ்ந்தது கண்ணீர்த்துளிகளுடன்!

அவள் என்றோ ஒரு நாள் சொன்ன அந்த வார்த்தைகளின் நிருபணமாய் இரத்தினக்கற்கள் என்னைப் பார்த்து சிரித்தன. ஒளிக்கதிர்களை ஞாபகங்களாக வெளிவிட்டபடி!

"நான் உன்ன எப்ப சந்திக்கிறேனோ அன்று உனக்கொரு இரத்தினக்கல் செட் தருவேன். அந்தக் கற்களைப் பாவித்து நீ மோதிரம் செய்து , உன் கைல அதப் போட்டுக்கணும்...ஏன்னா எப்பவும் நான் உன் கூட இணைந்திருக்கனும்"

அவள் அன்று  கூறிய வார்த்தைகளை நான் வேடிக்கையாக நினைத்து அதனையே , மறந்திருக்கின்ற ஓர் பொழுதில், அவள் அதனை உயிர்ப்பித்து என்னைக் கடனாளியாக்கிச் சென்று விட்டாள்...

அடுத்த எங்கள் சந்திப்பில்  நானும் அவளுக்கொரு ஏதாவது ...................

அவள் அன்பு மனசுக்குள் வீழ்ந்து கண்ணீர்த்துளிகளையும் கிளறிவிட்ட போது, அழுதேன் அந்தக் கணத்தில் நிறைய கண்ணீர்த்துளிகள் கன்னத்தில் உருண்டன..............

அவை ...........

ஆனந்தக் கண்ணீர்!

முகம் பார்க்கும் நட்புக்கள் கூட சீக்கிரம் அற்பக் காரணத்தால் முறிந்து விடும் இக்காலத்தில் அந்த "மிஸ்ட் கோல்" பாசம் உயிரில் நினைவுகளை விதைத்து போஷித்து வருகின்றது......

எங்கள் ஆயுள் வரை இவ்வன்பு தொடரும் எனும் நம்பிக்கையுடன் அவளை நினைவுகளால் அரவணைத்தவாறே பயணிக்கின்றேன் எங்கள் நட்புலகில்!





2012/08/19

மரணப்பூக்கள்


ஒவ்வொரு விடிகாலையும் - எனக்கு
நிச்சயமற்ற பொழுது !

இரவின் சயனத்தில் வீழ்ந்துகிடக்குமிதயம்
அறுந்துவிடத் துடிக்கின்றது பலமாய்!

கனாக்கள் காலாவதியாகிப் போனதில்
காவுகொள்ளப்பட்டனவோ உணர்வு வேரறுக்கப்பட்டு!

பறக்கத் துடிக்குமென் எத்தனங்களில் - யாரோ
சிறகுகளை கத்தரிக்கின்றனர் சளைக்காமல்!

வெந்நீரின் சகவாசத்தில் வீழ்ந்த மனசும்
ஆவியாகிபோகின்றது  அடிக்கடி மகிழ்வும் துறந்து!

எங்கோ தொலைந்த சந்தோஷங்கள்- நீராய்
இங்கிதமின்றி  விழிமடலுக்குள்  ஊற்றப்படுகின்றன!

குரல்வளையின் பட்டிகையாய் தூக்குக்கயிறொன்றும்
வரமாகி மூச்சுக்காற்றில் தரித்து நிற்கின்றது!

ஒட்டடைபடியாத மயானமொன்று எனக்காய்
காத்துக் கிடக்கின்றது அந்தரிப்புடன்!

பாறைகளின் போர்க்களத்தில் பதியமிடப்பட்ட வாழ்க்கை
கோரமாகிக் கிடக்கின்றது தினமும் !

ஒருவேளை சந்தோசங்களின் மீள்பிறப்பு
இறப்பின் காலடியிலோ!

இளமையின் போஷிப்பில் துடிக்கும் நாடியே..........
உனக்கேனின்னுமென் மூச்சறுக்கத்  தயக்கம்!

சபிக்கின்றேன் என் ஆரோக்கியத்தை.........!

இருந்தபோதும்...................!

நாளை சேதியொன்றும் வரும்!- என்
ஆயுள் அண்டம் ஆறடிக்குள் சிதைக்கப்பட்டதாய்!

அன்று மண்ணறை மடி  தர- உறவினர்
கண்ணீர்த்துளிகளென்னைத் தாங்கிப் பிடிக்க...

பதித்துக் கொண்டிருப்பேன் என்னையும் .....
மதியில் இம்சைகள் தொடாத புதுத்தேசத்தில்!

ஜன்ஸி கபூர் 

Azka + Sahrish (19.08.12)....