About Me

2012/09/21

தவறுகளும் தண்டனைகளும்


இது ஒரு படமோ....நாவலோ இல்லை...
பல மாணவ விழிகளை அதிர்ச்சியாக்கிய உண்மைச் சம்பவம் !

அவன் பத்தாம் வகுப்பில் கற்கும் மாணவன்....வயதுக்கேற்ற உடல்வாகு!
கட்டிளமைப்பருவத் துடிப்புக்கள் (காதல் சேஷ்டைகளல்ல...) அவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது. அவனைச் சுற்றி வட்டமிடும் நண்பர் கூட்டங்கள் வேறு! .அவர்கள் இவனை ரசிக்க வேண்டுமென்பதற்காகவே இவன் ஏதாவது செய்வான்......

கற்பிக்கும் போது, படிக்க ஆர்வமில்லாவிட்டாலும் கூட, எதையாவது சொல்லி ஆசிரியர்களைக் குழப்பத் துடிப்பான். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவனைக் கட்டுப்படுத்தும் ஆயுதம் சிறிய தண்டனைதான்...ஏச்சுடன் அடியொன்று போடும்போது அடங்கிவிடுவான்...தன் நண்பர்கள் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்து மௌனமாகி விடுவான்.  கொஞ்ச நேரம் வகுப்புக்கூரை விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டேயிருப்பான். நாலைந்து தடவை அவன் பெயரை உச்சரித்து, பாடத்துக்குள் அவனை நுழைக்கும் போதே கொஞ்சமாவது கரும்பலகையைப் பார்ப்பான். ஆனால் பாடம் அவனுக்குள் நுழையாது..

ஏதோ பெற்றோரின் வற்புறுத்தல், அவனை பல மைல் தொலைவிலிருந்து பாடசாலைக்குள் விரட்டுகின்றது! பஸ் பயணம் அவனுக்கு விலக்கப்படமுடியாத சுமையாகிப் போனது!

சில நாட்களாக அவனை அவதானிக்கின்றேன்...எதையோ யோசித்துக் கொண்டிருப்பான்..அவன் தன் பிரச்சினையை எம்முடன் பகிர்வதாக இல்லை. அவனது போராட்ட  மனநிலையின் அழுத்தம், இப்போதெல்லாம் அவனது குழப்படியை விழுங்கி விட்டது..அவனது அமைதி சற்று ஆச்சரியமான விடயம்தான்..

அன்று..........இடைவேளை மணி அடித்தோய்ந்தது..மாணவர்க் கூட்டம் வகுப்பிற்குள் நுழைய முற்படும் நேரம்..........

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, மாணவப் படையினர் மைதானத்தை நோக்கி ஓடுகின்றனர்..

"யாரோ........சண்டை பிடிக்கிறாங்க"

ஏனைய மாணவர்களின் கூவலைக் காற்றும் உள்வாங்குகின்றது. இவர்கள் ஏன் ஓடுகின்றார்கள்....?

"சண்டையை ரசிக்கவா.....விலக்கவா...அல்லது தாமும் இதனைப் போல் பழகிக் கொள்ளவா ......புரியவில்லையெனக்கு !

அவனுக்கும், பதினோராம் வகுப்பு மாணவனொருவனுக்கும் நடைபெறும் போராட்டமது...அந்த பதினொராம் வகுப்பு.மாணவன்....மாணவத் தலைவனாக இருப்பவன்!.

இவனிடம், அவன் ஏதோ ஒரு குறை கண்டு, அதற்காக இவனை அவனடிக்க, (மாணவர்த்தலைவர்களெல்லாம் இப்போ அதிகாரத்தை தன் கையிலெடுத்து ஹீரோவாக நினைக்கின்றார்கள் போல்) பதிலுக்கு இவனும் அடிக்க.........

தனியாள் சண்டை, வகுப்பு கோஷ்டி மோதலாக மாற, இவனுக்காக இவன் நண்பர்களும், அவனுக்காக அவன் நண்பர்களும் ரகஸியமாக யுத்தமொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்..

இந்தப் பிரச்சினை முற்றி, அந்த மூத்தவன் தன் நண்பனின் துணையுடன் இவனைத் தேடி வந்தான். இவனது சேர்ட் கொலர் அந்த மூத்த மாணவன் கையில்...............

சுற்றியிருந்த மாணவர்கள் முன்னிலையில், பத்தாம் தர மாணவன், பதினோராம் வகுப்பு மாணவனால் கீழே வீழ்த்தப்பட, அந்த மூத்தவர்கள் இருவரும் மாறி மாறி அவனின் முகத்தில் குத்தினார்கள்..

(இப்போதெல்லாம் கண்ட கண்ட படங்களைப் பார்த்திட்டு, தாமும் அந்த கதா பாத்திரமா மாறனும் நினைக்கிற பசங்கதான் அதிகம் )

அந்தச் சின்னவன் எழ முயற்சித்தான்..........முடியவில்லை..தன் உடலின் பின்புறம் யூனிபோமில் மறைத்து வைத்திருந்த கூரிய பளபளக்கும் கத்தியை , யாரும் எதிர்பாராத விதமாக உருவி வெளியே எடுத்தான். கத்தியைச் சுற்றியிருந்த கடதாசி மின்னல் வேகத்தில் காற்றில் பறந்தது. அவன் உருவிய வேகத்தில், அக்கத்தியின் விளிம்பு அவன் கையைப் பதம் பார்க்க, இரத்தம் வெளியே எட்டிப்பார்த்தது.

"சதக்"........

தன்னைக் கீழே விழுத்தி, அழுத்திக் கொண்டிருக்கும் எதிரி மாணவனின் நெஞ்சை நோக்கி கத்தி வேகமாகப் பாய்ந்தது...

அந்த மின்னல் வேகத்தில், கத்திக்குத்துக்கு இலக்காகவிருந்தவனின் நண்பன் பாய்ந்து அதனைத் தடுக்காவிடில், நிச்சயம் கொலையொன்றும் அக் கொலைக் குற்றத்திற்காக சிறைத் தண்டனையோ, சீர்திருத்தப் பள்ளிக்கான அனுமதியோ இருவருக்கும் கிடைத்திருக்கும்...

கத்தியை பாடசாலைக்குள் கொண்டு வந்த மாணவன் விசாரிக்கப்பட்டு, அவனது தந்தையை வரவழைத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டான். இன்று அவன் ஓர் குற்றவாளி. அவன் தனது தற்காப்புக்காக கத்தியைப் பாவித்தாலும் கூட, பாடசாலைக்குள் அதனை கொண்டு வந்தது தவறு..அவன் பாடசாலையை விட்டு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இடைநிறுத்தப்படலாம். அவனது செயலுக்காக அவனது தந்தை அழுதார்..அந்தக் கண்ணீர் , வீட்டுக்குச் சென்றதும் ஆத்திரமாக மாறி, நிச்சயம் அம் மாணவனைத் தண்டிக்கும்.

அம்மாணவன் தன் முன்கோபத்தால் இன்று ஒரு கொலையாளியாக மாறியிருந்தால், அவனது எதிர்காலமும், அவனை நம்பி வாழ்க்கையொன்றை அவனுக்குக் கற்றுக் கொடுக்க முயன்று கொண்டிருக்கும் பெற்றோரின் கனவுகளும் அர்த்தமற்றுப் போயிருக்கும்......நினைக்கவே உடலெல்லாம் புல்லரிக்கின்றது!

(இது இச் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த ஏழாம் வகுப்பு மாணவன் சொன்ன தகவல்...இச் சம்பவம் இடைவேளை நேரமாகையால், ஆசிரியர்கள் யாவரும் ஆசிரிய ஒய்வறையிலிருந்த போது நடைபெற்ற சம்பவம், திட்டமிட்டே அந்த இரு மாணவர்களும் தாக்கப் போயிருக்கின்றனர்.

பாடசாலையென்பது ஒழுக்க விழுமியங்களைக் கற்றுக் கொள்ளும் கூடம். சிறந்த மனித உற்பத்திகளை சமுகத்திற்கு வழங்கும் முயற்சியில் நாம் போராடும் இக்கால கட்டத்தில், மாணவர்கள் தாம் காணும் சமூகத்தாக்கத்தினால் வன்முறையாளர்களாக மாறுகின்றனர்.. இந்த வன்முறை ஆரம்பமே பின்னர் பெரிய வன்முறைகளுக்கும் வித்திடுகின்றது........பாடசாலையை யுத்தகளமாக்க ஒருசாரர் முயன்று கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆசிரியர்த்தொழிலென்பது பெரும் சவாலே!

மாணவர்கள் விடும் தவறுகள், அவர்களின் வாழ்க்கைப்பயணத்தையே மூழ்கடித்து விடும் பெரும் தண்டனையாக மாறிவிடுகின்றது என்பதை இன்றைய அவர்களின் வாலிப, கட்டிளமைப் பருவ வயது உணர்த்தப்போவதில்லை.  அவர்கள் எதிர்காலத்தில் வாழ்வியலை உணரும்போதுதான்,  வாழ்வின் பசுமைகள் யாவும் அவர்களை விட்டு நீங்கிப்போயிருப்பதை உணர்வார்கள்..

இன்று நவீனத்துவத்தின் பிடிக்குள் பல நன்மைகளை அனுபவிக்கும் இவ்விளஞ்சமுதாயம், தனது ஒழுக்கவியலையும் தானே வகுத்து, அதனடிப்படையில் நடைபயில முயலவேண்டும்..இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையுமாகும்.

உளரீதியில் திருந்த முயலாதவனை, அடுத்தவர் திருத்த முடியாது. இதுவே நிஜம்!




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!