About Me

2012/09/23

தொடருமோ காமம்


கழுகுகளாய் காமக் கண்கள்
பறக்கின்றன சதைப் பிண்டங்களுக்காய்.......
மாற்றுப் பிறப்புறுப்புத் தேடிச்
சிரிக்கின்றன  மன்மதன்களாய்!

உடல்கள் உரசி
விழிகள் விழுங்கி
எழுதப்படும் காதல் சரித்திரங்கள்.....
இப்போதெல்லாம்
காமத்தின் அர்ப்பணிப்பில்
சுருண்டு கிடக்கின்றன.........
எங்கோ அன்பைத் துவம்சம் செய்தபடி!

காதலை மந்திரமாக்கி
பென்மைக்குள் நா சுவைக்குமிந்த
பொறுக்கிகளின் மனசுகள்.......
வரம் வாங்கி வந்தனவோ "சாபங்களை"
சரித்திரங்களின் உமிழ்நீரால்
இவர்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்!

கண்டதும் காதலென்பார்...
கருத்தினில் நிறைந்ததும்
இதழ்களை இறுக்கிடுவார்.......
முத்திரைகள் பல பொறித்திட்டே
நித்திரைக்குள்ளும் ஆணியறைவார்
நிம்மதி பிடுங்கி!

ஆசையின் பலத்தில்
பழம் பறிக்கும் ஏவாள்களை
கண்டாலோ இவர்கள்
பெண் ....................
பலவீனத்திற்குள் தம் பலம் புதைத்து
வளைத்துப் பிடித்திடுவார்
வின்னர்களாய்
இந் நவீன ஆதாம்கள்!

வெட்ட வெளிகளும்
வெளிச்சம் துறந்த பற்றைகளும்........
காதல் தேசத்தின் விலாசங்களாய்
மாறிப் போகும்
காதலால் வெம்பிப் பழுத்த - இவர்கள்
சதையுறுஞ்சுவதற்காய்!

கூரை மறந்த காற்றாடையில்
பிண்ணிப் பினைந்து காதல் செய்து......
காமம் சுவாசிக்கும்
இவர்கள் வாழ்வில்.................
மோகித்துக் கிடக்கும் பொய்மைகள்
மெய்போல் மெய்க்குள்
நம்பிக்கை புதைக்கும்
வருங்கால கனவுகளுக்காய்!

தாய்மையின் கற்புக்குள்ளும்
காமமுறிஞ்சும் இச் சாத்தன்கள்..........
வேர் பரப்பி பிணைந்திருக்கின்றன
இவ்வுலகை .....
மயானங்களாய் மாற்றி
தம் வாலிபங்களின் கறைப்படிவில்
தடம் பதித்துலாவ!

தம் மொழுக்கத்தில் தீமூட்டி - ஆபாச
வார்த்தைக்குள்  மனம் புதைத்து..........
பிஞ்சில் பழுக்குமிந்த "ஓமோன்கள்"
ஓசியில் .............
பிணங்களிலும் சுகம் தேடும்
இரசாயனக் கழுகுகள்!

சபலத்தில் தம்மெண்ணம் புதைத்து
அப்பாவி வாழ்வோடு நச்சுக் கலக்கும்
இப் பிசாசுகள்.......
என்றும்
இறை சந்நிதானத்தில்
சபிக்கப்பட்ட சாத்தான்கள்!

இரவு விரிக்கும் கனாக்களில்
இதம் தேடி  மருண்டு நிற்கும்- தம்
ஆண்மைக்குத் தீனி தேடி
அட்டகாசமாய் அலைந்து திரியும்
இவ் வல்லுறுக்கள்
நல்ல பிறப்பில் புவி தொடாதவர்கள்!

விடியலில் சிவக்கும் வானில்
கூட.........பெண்
இரத்தம் துப்பி ரசனை தேடுமிந்த
இங்கிதமற்ற பேய்களுக்கு
யாரிட்டாரிந்த  "கௌரவ" வாழ்க்கை
மனிதரென!

கறைப் படிவுகளின் கூடாரத்தில்........
இரை தேடியலையுமிந்த
வேட்டைநாய்களின் ஆயுதமாய்
"காதல்" நசுக்கப்பட்டு
புனிதம் கற்பழிக்கப்படுகின்றது தினமும்
கண்ணீர்ச் சிதறல்களுடன்!

மரணங்களின் விளிம்பேறி
மீளுமிந்த காமத்தால்..........
காவு கொள்ளப்படும் பூக்கள்
நிரப்புகின்றன மகரந்தங்களை - தம்
கர்ப்பப்பைக்குள் நிரந்தரமாய்....
அனாதைகளை உற்பத்தி செய்தபடி!

அலைபேசிக்குள் நிதம் தூதுவிட்டு
விலைமகளாய் தன் காதலியை மாற்றும்.....
கவர்ச்சி நாகரிகம் கூட - இக்
காமதேசத்தின் பக்கங்களை
நிரப்பிச் செல்கின்றன வீரியமாய்!

துளி மழைக்குள்ளும் - பூமிக்குள்
துணை தேடும் காளான்களாய்...........
வெட்கத்தைத் தொலைத்து விட்டு
சல்லாபிக்குமிந்த தீநாக்குகளின் உரசலில்
நிறை பிரசவமாய் காமம் பிறக்கும்
திரையரங்குகளின் இருள் மூலைக்குள்!

இவர்கள் திருந்தப் போவதில்லை.......
அன்பின் வேட்கைக்குள்
அக்கினியை நனைத்து விட்டு......
சபலத்தால் தம்முணர்வை நக்குமிந்த
ஜடங்களுக்கு........
காமத்தின் பார்வையிருந்தால் போதும்
தப்பிவிடுவார்கள்
கல்லறைக்குள் வீழ்ந்தாலும் - தம்
ஆத்மாவுக்கும் சுகம் தேடிக் கொடுக்க!

உயிர் தரித்த தடத்தில் கூட
உறவு தேடும் ஈனர்களின் படையெடுப்பின்
வலிமையில்..........
வெடித்துச் சிதறுமோ
பொறுமை பூமி- இனியும்
தன் சோகம் தாங்காது!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!