About Me

2012/09/14

ஏனோ இப்படி


இன்று தொழில்கூடத்தில் ஓர் பெண் ஆசிரியையால் நான் எதிர்நோக்கிய சம்பவமே  இதனை பதிவிடக் காரணமாகிக் கிடக்கின்றது....

மாணவர்களின் கற்றலடைவை பரீட்சைகள் மூலம் பரீட்சித்து, மாணவர் பெற்ற அறிவு, ஆற்றலை பெற்றோருக்குக் காட்சிப்படுத்த மாணவர் தேர்ச்சியறிக்கையை ஆசிரியர்கள் பதிவிட்டு, பெற்றோருக்கு அதனை அனுப்பி வைப்பதுண்டு.. அதற்காக நாங்கள் பரீட்சைப்புள்ளிகளைப் பதிவிட, அதற்கான படிவங்களைப் பயன்படுத்துவதுண்டு!

சென்றமாதம் முடிவுற்ற இரண்டாம் தவணைப் பரீட்சைப் புள்ளிப் படிவங்களைப் பதிவிட்டு உரிய பகுதித் தலைவரிடம் ஒப்படைத்தேன். வழமையாக நான் யாரிடமும் எந்தப் படிவமும் ஒப்படைக்கும் போது, அவர்களின் கையெழுத்தினைப் பெறுவதுண்டு. ஏனெனில் பல தடவைகள் நான் ஒப்படைத்தவற்றை தரவில்லையென்று முரண்பட்ட என் சக ஊழியர்கள் சிலர் தந்த அனுபவப்பாடங்களால் நான் கற்றுக் கொண்ட படிப்பினையே இது! இருந்தும் அன்றேனோ ஏதோ ஓர் அவசரத்தில் நான் ஒப்படைத்த படிவத்திற்கான கையொப்பத்தை பெற மறந்து விட்டேன்......!

அன்று கொடுத்த அந்தப்படிவத்தினை  உரிய பகுதித் தலைவரிடம் திருப்பிக் கேட்ட போது, அடித்துச் சொன்னார் தன்னிடம் தரவில்லையென்று ....நானும் சூடானேன்.....மனிதர்களுக்கு மறதி இயல்புதான் .அதிலும் வயது அதிகரித்த நிலையில் மறதி தவிர்க்கமுடியாத இயல்பொன்றே..ஆனால் அந்த ஆசிரியை
தன் மறதிக்கு நியாயம் தேடய செயலை என்னால் மன்னிக்க முடியவில்லை, என் வெறுப்பில் வீழ்ந்த அந்த மூத்தாசிரியை எனக்கு தந்த மனவழுத்தத்தில் இன்று எனது கற்பிக்கும் மனநிலையையே மாறியது. சில நியாயங்கள் அநியாயக்காரர்களால் சமாதியாகின்றன.

என்னிடம் திரட்டூக்கம் சிறுவயதிலிருந்தே அதிகமாகக் காணப்பட்டதனால் எப் பொருளையும் நான் உடனே வீசுவதில்லை. பிறகு தேவைப்படும் என சேகரித்து வைத்திருப்பேன். அத்தன்மையால், இப் புள்ளிகளின் பதிவுகளின் மூலப்பிரதி என் வசமிருந்ததால், எனக்குரிய பாடசாலைக் கடமையை தடையின்றி  பிறர் விமர்சனம் தவிர்த்துச் செய்து முடித்தேன்..

பிறரை நம்புவதால், எனக்கேற்ற துன்பத்தால் நானின்று மானசீகத் தீர்மானமெடுத்தேன்...

"இனி எப் பொருள், படிவத்தை பிறரிடம் ஒப்படைக்கும் போது, அவர்களின் கையொப்பத்தை கட்டாயம் பெற வேண்டும்"

மனிதர் ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதி, சுயநலவாதி, தம்மை நியாயப்படுத்தவே காலத்தைப் பயன்படுத்துகின்றனர். இம் மனிதர்களின் செயல்களே அவர்களை நம்முள் அடையாளப்படுத்துகின்றன. முரண்களை வெளிப்படுத்தும்  மனிதர்களிலிருந்து, நாம் ஒதுங்கிக் கொள்ளும் போது, பிரச்சினைகளும் விலகியோடுகின்றன...

ஒருசிலரின் இவ்வாறான செயற்பாடுகளால், நண்பர்கள்.........உறவுகள் யாருமற்ற வெட்ட வெளியில் என் சிறகுகள் பயணிப்பதைப் போன்றவுணர்வு ஏற்படுகின்றது இப்போதெல்லாம்......

பிரச்சினைகள் காணப்படாத இந்தத் தனிமை ரொம்பப் பிடிக்கின்றது. இத் தனிமைக்குள் வீழ்ந்து கிடக்கும் முயற்சியில் என் பயணச்சுவடு தனக்கான தேசத்தை தேடலில் கண்டறிந்துள்ளது.

இந்தத் தனிமை தேசம் எனக்குப் போதும்......இந்தவுலகில் பிறர் இம்சைகள் களையப்பட்டுள்ளன. சோகத்தை வடிக்கும் இதமான கண்ணீரும், மனதை சிவக்க வைக்கும் துன்பங்களும் என்னுறவாக, தனிமைக்குள் நடை பயில இதோ புறப்பட்டேன்.................

நானும் பெண்தானே!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!