About Me

2012/10/12

உனக்கான கவிதைகள்


நாட்காட்டி கிழிக்கப்படுகின்றது
நாடி நரம்புகளில்
மின்சாரம் பாய்ச்சுது உனக்கான
என் நினைவுகள்!

உதடுகளை நசித்து
வெளியேற்றப்பட்ட  என் வார்த்தைகள்.......
மொழிபெயர்க்கப்படுகின்றன
அழகானவுன் பெயராய்!

உன் சுயம் நானானதில் - என்
சுற்றுப்புறங்களெல்லா முன் தேடலில்
வீழ்ந்து முரண்படுகின்றன
உன் காதலின் ஆழம் புரியாமல்!

மனசைத் தட்டிப் பார்க்கின்றேன்.........
தரிப்புக்களாய் உன்
அந்தரிப்புக்கள் ................
ஏக்கத்தையும் பிணைந்தபடி!

இரவின் மௌன வாசிப்புக்களில்
எனை நீயுறிஞ்சி
கனவுகளால் மோகிப்பதால்
நிதமும்
கருத்தரிக்கின்றேன்
உன் கவிக்குழந்தைகளைப் பிரசவித்தே!

என்............
விரல் பற்றி
நீ பயணிக்கும் சாலையெங்கும்.........
காற்றின் துளைகளிலும்
காதலின் சுகமப்பிச் செல்கின்றது
நம்மை அணைத்தவாறு!

என் வாழ்க்கைப் பிரமிட்டுக்களின்
ஒவ்வொரு அணுக்களும்....................
அணு அணுவாயுன்னைச் சேமித்தே
ரசிப்பில்
உறைந்து கிடக்கின்றது
உன்னுடன் வாழ்ந்தபடி!

நினைவுகளில்
மிருதுவாய் யென்னைத் தழுவி..............
ஸ்பரிசங்களால்............
செல்களை புல்லரிக்கும் நீ!

செல்களிலுன் குரலை
நிரப்புகையில்.........
பல நிமிடங்கள் மறந்து
காற்றலைகளுடன் மோதல் செய்கின்றேன்
நம் சமுத்திரங்களின்
எல்லைச்சுவரை கரைக்கும்படி!

உனக்கான என் கவிதைகளை
கவர்ந்தெடுத்து வா!
தாஜ்மஹாலின் படிவுகளாய்
நாமும் வீழ்ந்து கிடக்கலாம்
காலத்தின் மடிகளில்!






1 comment:

  1. ரசிக்க வைக்கும் அழகான கவிதை வரிகள்...

    நன்றி...

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!