About Me

2012/12/06

பிஞ்சுக் காதல்



அவன்................!

இன்னும் பதினான்கு வயது நிரம்பாதவன்...பருவ வயதுக்குள் உள்நுழைய விளிம்பில் நிற்பவன்.. அரும்பி நிற்கும் மீசையை ரகஸியமாக தடவித் தடவி இன்பம் காணும் பருவத்தினுள் வாசம் செய்பவன்...........

ஒருவாரமாக அவனை அவதானிக்கின்றேன்.....சற்று பரபரப்புடன் காணப்பட்டான். அவனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். பாடசாலை முடிவடைந்ததும் வீட்டுக்கு செல்ல முதல் பல தடவைகள் "பொயிட்டு வாரேன்  மிஸ் " என்பான்.... ஆனால் போகாமல்  என்னையே சுற்றிச் சுற்றி வலம் வருவான்.

அவனது தாய் கூறிய பின்னரே, அவனுக்கு என்னை அதிகம் பிடிக்கும் என்பதை நான் அறிந்தேன்..........

"எப்ப பார்த்தாலும் மிஸ் உங்களைப் பற்றியே கதைப்பான் "

அவன் தாய்  என்னைச் சந்திக்கும் போதெல்லாம் இதனைக் கூறிச் சிரிப்பார்.

அவன் சற்று முரட்டு மாணவன்...அந்த முரட்டுத் தன்மையை என் அன்பு நெகிழ வைத்ததில் எனக்கும் சந்தோஷமே!

"உன் மனசுல ஏதோ பிரச்சினை  இருக்கு, சொல்லுடா ராஜா........"

ஒருநாள் என் துலாவுகைக்குள் அவன் பிடிபடவேயில்லை.....ஒரு வார என் முயற்சி பலனளிக்காமல் போகவே, என் வேலைப் பளுவில் அவனை நான் மறந்தே போனேன்...

நேற்று......

எல்லா மாணவர்களும், வகுப்பறையை விட்டு வெளியேறிய பின்னர் என்னிடம் வந்தான்... தன் மனதிலுள்ள விடயத்தை சொல்வதற்கு துடிப்பதை உணர்ந்தேன்...சொல்லும்படி தூண்டினேன்....

"யாருக்கும் சொல்லாதீங்க, மிஸ்"

அவன் பீடிகை என்னுள் ஓரளவு விடயத்தை ஊகிக்க வைத்தது. இருந்தும் அவன் வாயால் அதைக் கேட்க நினைத்து அமைதியானேன்..........

என்னிடம் பெற்ற சத்தியத்தின் வலிமையால் தன் மௌனம் உடைத்தான்......

நாணம் கலந்த புன்னகை அவனுள் இறுகிக் கிடந்தது........

"மிஸ்.......நான் ஒரு ஆள லவ் பண்ணுறன்"

அப்பாடா.....போட்டுடைத்தான் தன் மனதைக் குடைந்திருக்கும் காதல் ரகஸியத்தை!

அவள்................அவன் வயதுக்காரிதான்...........பெயர் சொன்னான்....

அவளுக்கும் நான் பாடம் எடுக்கிறேன்...நல்ல பிள்ளை....எப்போதும் அவள் மொழி புன்னகைதான்.....என்னை அவளுக்கும் ரொம்பப் பிடிக்கும்...

"அட................அப்ப டீப்பான லவ்வுதான்..எப்ப இருந்துடா"

நான் ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல் கேட்ட போது, முகத்தில் பிரகாசம் குன்றாமல் 3 வருஷம் என்றான் பட்டென்று!

"அப்போ சின்ன வயதுக் காதலோ..........ஆமா, அவளும் உன்னை லவ் பண்றாளா" அப்பாவித்தனமாய், நான் அறியாதவளாய் கேட்ட போது, சிரித்த அவன் முகம் சற்று வாடியது......மீண்டும் மௌனித்தான்...........

"இல்ல மிஸ், இன்னும் நான் என் விசயத்தச் சொல்லல, ஆனா அவள 9ம் வகுப்பு பெடியனும் லவ் பண்ணுறான் " என்றவாறு அந்தப் பையனின் பெயரை அவசரமாக வெளிப்படுத்த, அருகில் நின்ற அவன் நண்பன் மேலும் ஒரு ரகஸியத்தை என் காதில் போட்டுடைத்தான்...

"மிஸ்.நேற்று, அவனுக்கும், இவனுக்கும் பெரிய பைட் போச்சு, இவன்தான் நல்லா அடி வாங்கினான்"

"ஓ.........இவ்வளவு நடந்திருக்கா..ஏன்டா அவன் உன்ன அடிச்சான்"
நானும் விடவில்லை.

"இல்ல மிஸ், அவனும் அவளக் காதலிக்கிறானாம், விட்டுக் கொடுடா என்று அடிச்சான். நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்"

"ம்ம்.....சினிமாவ பார்த்து ரொம்பத்தான் கெட்டாச்சு.........இல்லையா!"

நான் சற்று அழுத்திக் கேட்ட போது அழுதே விட்டான் அவன்,  "அவள எனக்கு ரொம்பப் பிடிக்கும் , இங்க பாருங்க மிஸ், 3 நாளா இத அவளக்குக்  கொடுக்க ட்ரை பண்ணுறன்.....தனிய போகாமல் ப்ரெண்ட்ஸோடத்தான் சேர்ந்து போறாள்..."

என்றவாறு தன் காற்சட்டைப் பைக்குள்ளிருந்து சில டொபி, கன்டோஸ், 2 பேனாக்களை வெளியே எடுத்தான்...

" ஏதடா காசு இதுக்கு"

நானும் விடவில்லை........

"மிஸ்.......நான் வீட்டில ஆசையா வளர்த்த மீன்கள எல்லாம் அவளுக்காக வித்துட்டேன்.அந்த காசிலதான் இத வாங்கினேன்"

அவன் காதல் ஆழம் புரிந்தது.. ஆனாலும் அது ஒரு தலைக் காதல்..அந்தப் பெண்பிள்ளை சற்று வசதியான பிள்ளை....இவன் காதலுக்கு முதல் தடையாக அந்தஸ்தே வாய் பிளந்து நிற்பதை அவன் உணரவில்லை,

"நான் ஒன்னு சொல்லட்டுமா.....அவள் பணக்காரிடா"

"பரவால மிஸ், எனக்கு அவள்ர காசு வாணாம்....அன்பு போதும்...அன்பா  ரெண்டு வார்த்தை பேசினாப் போதும்.........."

அவனும் அவளை விட்டுக் கொடுப்பதாக இல்லை.

"சரிடா................பர்ஸ்ட், அவள்ர போய் உன் காதலைச் சொல்லு..........சரின்னா நீ கனவ வளர்க்கலாம், ஆனால் இந்தக் காதல் அவஸ்தையில நீ படிக்காம விட்டா, அப்புறம் என் கூடப் போசக் கூடாது சரியா"

"ம்ம்"

தலையாட்டினான்... அன்றைய தினமே அவளுக்காக காத்திருந்தான் தன் காதல் சொல்ல!

மாணவர்களுக்கான இலவச புத்தக விநியோக வேலைப் பளுவில் நான் அவன் காதலை மறந்து போக, மீண்டும் இன்று என் பின்னால் சுற்றினான்..........

"மிஸ்...மிஸ்"

"என்னடா........."

"அவள் எனக்கு வாணாம் மிஸ்"

" என்னடா திடீரென்று லைன் மாறிட்டே"

"நான் நேத்து அவள்ட என்ட லவ்வச் சொன்னேன்.  ஓவென்று அழுதிட்டாள்..சேரிட்டயும் என்ன மாட்டிட்டாள்" அந்த சேர் பெயர் சொன்னான்..

"ஓ......அந்த சேர் அடிச்சாரா"

"இனி அவள தொந்தரவு பண்ணாத என்று சொல்லிட்டார்.............அவளுக்குத்தான்  என்னைப் பிடிக்கலயே............."

சொல்லும் போது, அவனது கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் தெறித்தன.

. அவனாகவே தன் தவறை உணர்ந்தது எனக்கு மகிழ்வு தந்தது...

"அப்பாடா......................"

பெருமூச்சு விட்டேன்.............அந்தப் பெருமூச்சு உலர முதல் இன்னுமொரு குண்டைத் தூக்கிப் போட்டானே.............

"அவள் வாணாம் மிஸ்...அவளுக்கு வாங்கின டொபி, கண்டோஸ நானே தின்றுவிட்டேன்.........இப்ப நான் இவள லவ் பண்ணுறன்"

அவன் புதுக் காதலி பெயர் சொன்னான்.......!

அவள் 6ம் வகுப்பில் படிப்பவளாம்........நண்பன் வகுப்பைப் பற்றிச் சொன்னான்

இது காதல் இல்ல கண்ணா.......பருவக் கிளர்ச்சி...............

சொன்னேன். ஆனால் நிச்சயம் அதை அவன் உணரப் போவதில்லை. அவனுக்கு புத்தி சொன்னால் அதைக் கேட்கும் வயதில்லை அவனுக்கு. இவளும் சலிச்சுப் போய் விரைவில், அவனாகவே இன்னுமொருத்தியின் பெயர் சொல்வான்.......


2 comments:

  1. நல்ல கதையாடல்.கதைசொல்லியாகவிருந்து அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்.வயது
    கோளாறில் அலைந்தவர்கள் பலர்;அதுபோல இதுவும் அமைகிறது.நீங்கள் கதையும் எழுதலாம்.

    வதிரி.சி.ரவீந்திரன்.

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!