About Me

2012/12/13

அவள்


தொலைந்து போன வசந்தங்களுக்காய்
யாகமிருக்கும்
சராசரிப் பெண்!

வறுமைக் கற்பழிப்பால்
வசந்தங்களைத் தொலைத்த 
(அப்) பாவியிவள்!

கண்ணாடிச் சிதறல்களின்
சாம்ராஜ்ஜியத்தில் 
முடி சூட்டிக் கொண்ட ராணியிவள்!

காற்றின் காமத்தில்
மூச்சுத் திணறும் குப்பி விளக்கில் 
எரிந்து கொண்டிருக்கின்றது
அவள் ஆசைகள்!

அவள் மனச் சிதைவுகளின் விம்பங்கள்
 தெறிக்கின்றன 
விரக்தியாய்!

இதழ் சிதைக்கப்பட்ட
ரோசாத் துண்ட மவள் 
வீழ்ந்து கிடக்கின்றாள் அடுக்களையில்!

புகையுறிஞ்சித் தோற்றுப் போன
சுவாசம் 
சுகம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றது!

துரத்திச் சென்ற நாட்களெல்லாம்
உணர்வறுத்து 
கண்ணீருக்குள் அவிந்து போனதில்

விரல்களில் விழுந்து கிடந்த
மருதாணிச் சாறு.கூட 
மூச்சையற்று வெளிறித்தான் கிடக்கின்றன!

உதரக் குழி விட்டுச் செல்லும்
பசி 
அடிக்கடி
அலைந்து கொண்டிருக்கின்றது அனாதையாய்!

கிழிசல்களால்
இளைப்பாறிக் கொண்டிருக்கும் மேனியோ 
பருவத்தைக்  கரைத்துக் கொண்டிருக்கின்றது
காலாவதியாகி !

யார் யாரோ நினைவுக்குள்
எட்டிப் பார்த்துச் செல்கின்றனர் 
அனுமதியின்றி!

சிரிக்கின்றாள் மெதுவாய் 
பூச்சியங்களைத் தொடாதவர்களின்
ராச்சியங்கள் கூட அவள் வசமில்லை!

ஏனெனில் 
அவள்
ஏழ்மை எழுதிச் செல்லும்
புதுக் கவிதை!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!