About Me

2013/01/19

புது யுகம்

அப்பாவின் மரணம்
அம்மாவுக்கு விடுதலை!
ஹிருதயத்தை இம்சித்தவர்
ஹிருதயம் அறுந்து கிடக்கின்றார்!

வெள்ளைச் சீலை............
விதவையின் அடையாளமல்ல இங்கே!
போராட்ட வாழ்விற்கு கிடைத்த
சமாதானம்!

வாழ்வின் துன்பச் சரித்திரங்கள்........
இனி சாபத்தில் வீழாது!
எழுச்சி தூசு தட்டும்
அழுகைப் புழுதிகளை!

தரித்து நிற்கும் சத்திரங்களெல்லாம்
அழுகின்றன..............
அவலத்தாலல்ல - இது
ஆனந்தக் கண்ணீர்!

இனி..........
வீட்டுக்குள் ஒருபோதும்
இடியுமில்லை மழையுமில்லை!
வெறுமைக்குள் சிறு உலகம்
நிம்மதிக்குள் வீழும்!

அடிக்கடி
கடிந்த இதயமின்று
துடிப்பை மறக்கையில்............
வலிக்கவேயில்லை விழிகள்!
அழிந்துபோன உணர்வுகளால்!

ஆட்குருவிகள் கீழ் திசையில்
ஆரவாரிக்கின்றன.............
பட்டுப் போன மரங்களெல்லாம்
வெட்கித்து தளிர்க்கின்றன!

விசம் கக்கிய விதியொன்று
வேரறுந்த கிடக்கின்றது பாரினிலே.......
உறவறுந்து போனதில்
ஊமைவலி ஏதுமில்லை!

அப்பாக்களின் தேசங்கள் என்னை
அரக்கி என்றே கதறட்டும்!
இரக்கமற்ற இதயங்கள் இனி
மரணித்தே போகட்டும்!

மன்னித்து விடென்னை



தேவதை என்றாய் - எனைத்
தீண்டும் தேள்வதை யறியாது!

கண்மணி என்றாய் - தினம்
கண்ணீருக்குள் அழுகும் என் விம்பம்
அறியாது!

சிரிக்கின்ற கன்னங்களில்
உதிரும் புன்னகை அழகென்றாய்...
ரணங்களின் ஆழம் காணாது!

என் கனவு நீ என்றாய்
மரணத்துக்காய் காத்திருக்கும்
பலி யாடு நானென்பதை யறியாது!

நிம்மதி நானென்றாய் - என்னுள்
அலையும் நிம்மதியில்லாத
ஆத்மா அறியாது!

மன்னித்து விடென்னை..
விண்ணப்பித்து விட்டேன் மரணத்திற்கு.......
என் விடுதலைக்காய்


வசியமாகின்றேன் உன்னில்!


விழுந்தன மயிலிறகுகள்- உன்
வார்த்தைகளில் பிசையப்பட்டு
வசியமானேன் உன்னுள்!

மொழியிழந்த நானோ ..........உன்னுள்
இலக்கணம் தேடுகின்றேன்
நம்மைப் பகிரும் அன்பின் வரிகளுக்காய்!

இரவின் ரகஸியத்தில்
நிரந்தரமாகும் நம் பரிமாற்றங்கள்
இப்பொழுதெல்லாம்...........
வேவு பார்க்கின்றன நம் கனவை!

இயல்பாய் பேசுமுன் வார்த்தைகளோ
இப்போ தடிக்கடி...................
இடறுகின்றன என் விழிச் சாளரத்தில் சிக்கி
வீம்பாய்!

உவப்போடு நீ சிந்தும் பாடல்களால்
உதிர்கின்றன பூவிதழ்கள் என்னுள்.......
உன்னருகாமையை என்னுள் சிதறியபடி!..

சொற்களை அழகாய் நீவி - என்னுள்
நீ கவியாய் சிறகடிக்கையில்.............
என் கரங்கள் குவலயமாய் விரிந்துன்னை
அணைத்துக் கொள்கின்றன அழகாய்!

காற்றிலேயுதிர்க்கும்
உன் குரல் ஸ்பரிசங்களின் தொடுகையால்.........
குவிந்து கிடக்கும் நேசமெல்லாம்
வீழ்கின்றன உன்னிடம் சரணடைந்தே!

காதலா............அன்பா.........நட்பா
ஏதோவொன்று ...........
நம்மைக் கடந்து செல்கையில் மட்டும்
முறைக்கின்றாய் நிமிடங்களோடு
பிரிவின் வலிக்கஞ்சி!



இதுவும் காதல்தான்



            அவரை 'எஸ்' என்கிறேன். சிறிய வயதிலிருந்தே அவரைத் தெரியும். நான் வீட்டுச்சாமான்கள் வாங்கச் செல்லும் கடைக்கு முன்னால் தான் அவரின் வீடும் இருந்தது. நான்கு பிள்ளைகளின் தாயாக இருந்தாலும் இளமையாக, சிறிய பெண்ணாகவே இருந்தார். அவரைக் கடந்து நான் செல்லும் போதெல்லாம் சிறு புன்னகையொன்றை உதிர்ப்பார். அப்பொழுது அவரின் கடைக் குட்டிக்கு மூன்று வயதிருக்குமென்று நினைக்கின்றேன். ஒருநாள் அவரின் கணவனுடன் அவர் எங்கேயே பயணித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அவரின் கணவன் முகம் என்னுள் பார்வையாகப் பதிந்தது. கணவருக்கு அப்பொழுதே அறுபது வயதுக்கு மேலிருக்கும். வழுக்கைத் தலையில் ஓரமெல்லாம் ஓரிரு நரை முடிகள் குத்திட்டு நின்றன. அரச ஊழியர். பென்ஷனில் வாழ்ந்து கொண்டிருந்தார். நரை விழுந்த முதுமைத் தோற்றம். இருவரும் தந்தை மகள் போன்ற பார்வையை பிறருக்கு அளித்துக் கொண்டிருந்தது. ஊரார் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டாலும் கூட, இல்லறத்தின் செழுமையில் அவர்கள் இரண்டறக் கலந்ததன் விளைவு நான்கு குழந்தைகளும் முளைத்திருந்தனர்.  இரண்டாம் தாரமாகவே வாழ்க்கைப்பட வைத்தது அச்சகோதரியின் வறுமை. வறுமையின் கொடுமைகளுள் இதுவும் ஒன்றா? வாலிபக் கனவுகளை சிதைத்து விட்டு இலகுவாகவே பெண்களை கண்ணீர்க்கம்பிகளுக்குள் சிறைவைத்து விடுகின்றது இந்த வறுமையின் இயலாமை!

எங்களது புன்னகைப் பரிமாற்றம் தொடர, நாங்களும் ஓரளவு அறிமுகமாகி கதைக்கத் தொடங்கும் போதுதான்,  எங்களது கடைக்காரரும் தனது கடையின் இருப்பை வேறொரு வீதிக்கு மாற்றி விட்டார். இதனால் எங்கள் சந்திப்பும் தடைப்பட எங்கள் யாழ்ப்பாணச் சந்திப்பும் தடைப்பட்டது.

நாட்களின் வேக ஓட்டத்திற்கு நாமும் ஈடுகொடுத்து,  பல யுத்த கொடூரங்களைச் சந்தித்த பிறகு,  வேறு பிரதேசத்திற்கு அகதியாக இடம்பெயர்ந்திருந்தோம். அப்போது , மீண்டும் 'எஸ்' ஸை பாடசாலையில் சந்தித்தேன். அவர் கணவன் இறந்துவிட்டதாக அறிந்தேன். எனினும் விதவையாக இருந்தாலும் கூட , முன்னரை விட அழகாகவும் , இளமையாகவும் இருந்தார். பிள்ளைகள் எல்லாம் வளர்ந்திருந்தனர். நான் கற்பிக்கும் பாடசாலையிலேயே அவர்களும் கற்றுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நான் விஞ்ஞானப் பாடம் கற்பித்ததால், மீண்டும் எமக்குள் விடுபட்ட புன்னகை தொடர்ந்தது. கடைக்குட்டி என்மீது ரொம்பப் பிரியமாக இருந்தாள். "மிஸ்" மிஸ் என என் பின்னால் சுற்றுவதில் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அவள் அன்பும் எனக்குப் பிடித்ததால் நானும் அவள்மீது கரிசனை காட்டத் தொடங்கினேன்.

ஒருநாள் திடிரென 'எஸ்' பற்றி சில கதைகள் என் காதில் விழுந்தன. அவருக்கும் 'ஏ' என்பவருக்கும் லவ் என்றனர் பலர். ஏன் விதவைகள் மறுமணம் செய்யக் கூடாதா? சாதாரண பெண்ணுக்கு இருக்கக்கூடிய இயல்பான ஆசைகள், வாழ்வு பற்றிய கனவுகள் , எதிர்பார்ப்புக்கள் இச்சகோதரிக்கும் இருக்கும் தானே? ஆண் துணையின்றி தன் குழந்தைகளை எப்படி வளர்த்தெடுப்பார், தன் குடும்பம் படர  அந்தப் பெண்ணுக்கும் ஒரு கொம்பு தேவைப்பட்டது தப்பில்லைதானே.. எனக்குள் பல வினாக்கள் புரண்டெழுந்து விடை கண்டதன் பயனாக , அவரின் செயல் தவறாகப் படவில்லை. ஆனால் அவரை விட அவரது காதலன் பதினைந்து வயது குறைவானவர் என்பதால் அவர்கள் காதலை ஊரும் அங்கீகரிக்கவில்லை. உண்மைக்காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதைப் போல, அவர்களும் யாரைப் பற்றியும் அலட்டாது தம் பாதையில் உறுதியாக இருந்தனர்.

 'ஏ' அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனார். பிள்ளைகள் அவரை 'சாச்சா' என அன்பொழுக அழைத்துப் பழகினார்கள். பிள்ளைகளின் படிப்புக்கும் அந்தச் சாச்சாவே ரொம்ப உதவினார். அந்தக் குடும்பமும் வறுமையிலிருந்து ஓரளாவது மீள அந்த சாச்சாவே உதவினார். 'ஏ' வவுனியாவில் பொறியிளாளராக வேலை செய்ததால்  இவர்கள் வீட்டில் தங்கியே வேலைத் தளத்திற்குச்  செல்வார். அவர்களின் காதலுக்கு பிள்ளைகளும் ஆதரவாகவே இருந்தனர். காதல் சந்திப்புக்கு தடையின்றி வழிவிட்டனர். ஆனால் 'ஏ'யின் வீட்டில் இந்தக் காதலுக்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது .இந்த எதிர்ப்பின் மத்தியிலும் கூட, 'எஸ்' சோரவில்லை. காதல் கசிந்துருகியோடியது.

'எஸ்' ஸின் பிள்ளைகள் படிப்பில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. மூத்தவள் மட்டும் உயர்தரத்தை தொட்டு இடைவிலகி நின்றாள். மற்ற இருவரும் சாதாரண தரத்துடன் வீட்டுக்குள் முடங்கினர். ஆனால் சின்னவள் மட்டுமே படிப்பில் படு சுட்டியாக இருந்து பல்கலைக்கழகத்திற்கும் தெரிவானாள்.. தன் மூன்று பெண் பிள்ளைகளையும் கேட்டு வரும் சம்பந்தங்களில் இணைத்ததன் மூலம் வசதியான இடங்களில் மக்களை அந்தத் தாய் கரையேற்றினார். பிள்ளைகள் அழகென்பதால், அந்தக் கிளிகளை வாலிபக் கூட்டங்கள் போட்டி போட்டு கொத்திக் கொண்டு போனது. இப்பொழுது 'எஸ்' ஸூடன் கடைக்குட்டி மட்டுமே தங்கினாள்.

நாட்களும் மேலும் பல மாதங்களைத் தொட்டன. மாமியின் காதல் விடயம் கேள்விப்பட்டு, மருமகன்மாரும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர். மூன்றாவது மருமகன் தனது மனைவியை அவள் தாய் வீட்டுக்கே அனுப்புவதைத் தவிர்த்தான். மூத்தவளும் தன் அவசர திருமண வாழ்வை அறுத்தெறிந்தவளாய் தாயுடன் ஒதுங்கிக் கொண்டாள். 'எஸ்'ஸூக்கு வாழ்க்கைச் சுமை மேலும் இறுகும் போது, எதிர்பாராதவிதமாக அந்தத் திருப்பம் ஏற்பட்டது.

விடுமுறையில் ஊருக்குச் சென்ற காதலன்  "ஏ" வீட்டில் அவனுக்கே தெரியாமல் அவசர அவசரமாக அவனது திருமணத்தை ரகஸியமாக முடித்து விட்டார் அவர் தந்தை. 'ஏ" சிறிய வயதிலேயே தனது தாயை காச நோய்க்கு பறிகொடுத்து பாசத்துக்கு ஏங்கியவன். .ஊரிலேயே செல்வாக்குப்பெற்ற அவனின் தந்தை, தனது மனைவி இறந்ததும் மனைவியின் சகோதரியை இரண்டாம்தாரமாகத் திருமணம் செய்து தன் பிள்ளைகளுக்கு துணை சேர்த்தாலும் கூட,  சிறிய வயதில் தாயை இழந்த 'எஸ்' தனது முழுமையான அன்பை 'எஸ்' ஸிடமிருந்தே பெற்றான். ஊரில் 'எஸ்'ஸின் வீடு அவனின் வீட்டருகே இருந்ததும்,  'எஸ்' ஸின் கணவர், 'ஏ' யின் நெருங்கிய உறவினர் என்பதாலும் , "ஏ" "எஸ்" சந்திப்புக்கு யாரும் தடையாகவிருக்கவில்லை. சிறு வயதிலிருந்து அவர்கள் வீட்டுக்குப் வந்து போகும் "ஏ" யின் பாசம்........காதலாக மாற, அவ்விருவரின் தேவைகளும் சூழ்நிலையும் அன்பும் காரணமாகிவிட்டன.

'ஏ' திருமணம் முடித்த  மனைவி அழகான ஆசிரியை. அவனின் வயதையொத்த உறவுக்காரப் பெண் என்பதால் அவள் பெற்றோர் துணிந்து 'ஏ'யை திருமணம் முடித்து வைத்தனர். இளம் மனைவி கொடுக்கும்  திருமண வாழ்வால், வயதால் முதிர்ந்த அப்பெண்ணை 'ஏ' மறப்பாரென்பதே பலரின் எதிர்பார்ப்பாகவிருந்தது. .

   அவன் கல்யாணம் முடிந்து இரண்டு வருடமாகியும் இவர்களின் சந்திப்புத் தொடர்ந்தது. இந்த கால மாற்றத்தில் 'ஏ' ஒரு ஆண்பிள்ளைக்கும் தந்தையானார். தன் முதல் கணவனின் பென்ஷன் பணம், தான் திருமணம் முடித்தால் கிடைக்காது எனும் எதிர்பார்ப்பில், 'எஸ்'ஸூம் 'ஏ'யை வற்புறுத்தவில்லை. ஆனால் முன்னரைப் போல 'ஏ' வருகை இருக்கவில்லை. அந்தப்பிரிவு 'எஸ்'ஸை ஆட்கொள்ளவே ஒருநாள் 'ஏ'யின் வீட்டுக்கே தன் மக்களுடன் சென்றுவிட்டார். 'ஏ'யின் மனைவிக்கும் , காதலிக்கும் இடையில் உக்கிரமான போராட்டம் நடைபெறவே, 'ஏ' தான் காதலித்தவளுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் அவளையும் தன் மனைவியாக ஊரறிய சட்டப்படி ஏற்று, கொழும்பில் வீடு ஒன்றையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இன்று இரு மனைவிகளுக்கும் அவர் நல்ல புருஷனாகத் தன் கடமைகளைச் செய்கின்றார். மனைவியின் கடைக்குட்டிக்கும் அவரது அலுவலகத்திலேயே வேலையும் பெற்றுக் கொடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன்.

சிலருக்கு இந்தக் காதல் முறையற்றதாக முணுமுணுப்பைத் தரலாம். ஆனால் காதல் எனும் பெயரில் பெண்களை ஏமாற்றி,  கண்ணீருக்குள் அமுக்கி, அவர்கள் வாழ்வை வீணடிக்கும் ஆண்கள் இருக்கும் இச்சமுகத்தின் முன்னிலையில் இந்த ஆண்மகனின் உண்மைக் காதல் மரியாதைக்குரியதாகவே உள்ளது.

இது நமது கலாசாரம், பண்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயமாக இருப்பதனால், அவ்விருவரும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். இக்காதல் சரியானதா/ முறையற்றதா எனும் வாதத்திற்கு நான் தயாராகவில்லை. அவரவர் வாழ்க்கை, அவரவர் விருப்பத்தின்பாலே நகரும். சரி, பிழையென விமர்சிக்கும் ஊரால், அவர்களுக்கு ஒரு வழியை, விடிவை நிச்சயம் காட்டமுடியாது. சமுகத்திற்கு  இது ஒவ்வாததாக காதலாக இருந்தாலும் கூட, ஒரு விதவைக்கு வாழ்வளித்த கதாநாயகனாகவே அந்த 'ஏ' என்னுள் மிளிர்கின்றார்.

இரு மனைவிமாரும் பாதிப்பின்றி வாழும் அந்த வாழ்க்கை இன்னும் பல வெற்றிகளை அந்தத் தம்பதியினருக்குக் கொடுக்கட்டும் .அவர்கள் வாழ்க்கை இன்னும் பல்லாண்டு காலம் ஜொலிக்கட்டும்!

Jancy Caffoor

ஏதேதோ நினைவுகள்


ரெட்டை ஜடை கட்டி சிட்டாக பறந்து திரிந்த அந்த பசுமை மிகு அந்த பிள்ளைப் பருவம் ஏனோ இன்று நினைவுக்குள் வருகின்றது. வாழ்க்கைச் சுமை மறந்த, எதிர்பார்ப்புக்கள் பற்றி அறிந்திருக்காத அந்த வயதில், நாம் பண்ணிய குறும்புத் தனங்களும், விளையாட்டுக்களும் செயல்களும் ரொம்பவே மறக்க முடியாத நினைவலைகள்தான்!

அந்த நினைவுகளில் ஒன்றுதான் இன்றைய ஸ்பெஷலாய் உங்களுக்குள் வருகின்றது....

அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்திருந்தேன்..ரொம்ப அமைதியான டைப். யாருடனும் வலிந்து பேச மாட்டேன். என் நெருங்கிய நண்பிகள், உறவினர்களைத் தவிர...........

வயதுக்கு மீறிய சற்று குண்டு உடம்பும், நீளமான தலை முடியும், கல்வியில் நான் காட்டிய சுட்டித்தனமும் எல்லோர் பார்வையையும் என்னுள் விழ வைத்திருந்தது. நீல நிற "சொப்பர்" பைக் தான் என்னுலகின் இறகுகள். அந்த சைக்கிளிலில் பாடசாலை, முஸ்லிம் கொலிஜ் வீதியிலிருந்த உமம்மா வீடு என பறந்து திரிவேன்.  எனக்கு கச்சான் ரொம்பப் பிடிக்கும் என்பதால், இடைக்கிடையே கொலிஜ் வீதியில் இருந்த சித்திக்கா ராத்தா வீட்டுக்கும் போய் கச்சான் வாங்கி வருவேன். எப்போதாவது ரோஜா வீட்டுக்கும் (அமான் மாஸ்டர்) , சபீல் வீட்டுக்கும் (சலீம் மாஸ்டர்) விளையாடச் செல்வேன்..றவூப் காக்கா கடையும் அடிக்கடி என் கால் பதியும் வாசற்றலங்களாகும் .இதுதான் என் அன்றாட செயற்பாடுகள்!

எங்கள் வீடு யாழ்ப்பாண ஜின்னா வீதியில் இருந்தது. வீட்டிலிருந்து 3 வீடுகள் தள்ளினால் ஒஸ்மானியாச் சந்தி. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணத்தில் ஆடு, மாடு போன்ற கால் நடைகள் அதிகமாக இருக்கும். அவற்றுக்கு தீனி போடுவதற்காக புல் வியாபாரமும் நடக்கும். முஸ்லிம் கல்லூரி வீதியும், ஜின்னா வீதியும் சந்திக்கும் இடத்திலுள்ள ஒஸ்மானியாச் சந்தியில்தான் ஆட்கள் ஒன்றுகூடி ஏதாவது ஊர்ப் புதினங்கள் பேசுவார்கள்.

உங்களுக்கு போரடிக்காம இருக்க, பேச்சு வழக்கில இந்தப் பதிவத் தாறன்....சரியா.......

சனத்தால் நிரம்பி வழியும் அந்த இடத்தில்தான் "புல்லு" ஆச்சியும் தனது புல் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தா. அவக்கு பக்கத்தில அவட ஒற்றை மாட்டை சுமந்து கொண்டிருக்கும் மாட்டுவண்டிலும் கட்டப்பட்டிருக்கும். புல்லு ஆச்சியிட காது தோடு போட்டு இழுபட்டு தொங்கிக் கொண்டிருக்கும். மூக்கிலயும் சின்ன மூக்குத்தி. களையா ரொம்ப அம்சமா......ஆனா அவ ரொம்பக் கறுப்பு. அவட ஊரு இந்தியான்னு ஆக்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறன். என்னடா ஆச்சிய இழுத்து விடுறாளேன்னு யோசிக்கிறீங்களா..........வெயிட் பண்ணுங்க......என்ர கதயில அவவும் ஒரு கதாநாயகிதான்.

எங்க வீடு ஜின்னா றோட்டில இருந்துது. ரெண்டு வாசல். ஒன்னு கேட் போட்டிருந்தது. அத நாங்க பெரிசாகப் பாவிக்கிறதில்ல. மற்ற வாசல் கதவத்தான் நாங்க பாவிச்சம். அந்த கதவு முன்ஹோலோட சேர்ந்திருந்துது. அந்த ஹோலில தான் வீட்டுக்கு வாற நல்ல தண்ணீ டாங்கும் இருந்துது. அது தண்ணீ டாங்குதான்..ஆனா ஊரடங்கு சட்ட நேரங்களில நான் அதில ஏறித்தான் றோட்டில ஆமி போறத "விடுப்பு" பார்ப்பன். அது ஒரு அழகான கனாக்காலம்தான்.

அந்த தண்ணி டாங்க மூடி அதுக்கு மேல என்ட சின்ன பைசிக்கிள ஏத்தி வைச்சிருந்தம். அந்த பைக்க என் சின்ன தங்கச்சி ஓடிக் கொண்டிருந்தா (இப்ப அவ டாக்டர்)

ஒருநாள் வீட்டுக்கு ஹதியா கேட்டு அந்தப் பெரியவர் வந்தார். "அவர் முந்தி வசதியோட இருந்தவராம். பாவம் மனுஷன் கொஞ்சம் கஷ்டப்பட்டு பொயிட்டார்." உம்மா சொல்லித்தான் எனக்கு இந்த விஷயம் தெரியும். அவருக்கு ஹதியா குடுத்தனுப்பினது நான்தான். அவர் கொலிஜ் றோட்டிலதான் இருந்தார்.

மாலை 6 மணி இருக்கும். ஏனோ எனக்கு கச்சான் தின்னுற ஆச வந்திட்டுது. உம்மாவ அலட்டி ஒரு ரூபா வாங்கிக் கொண்டு, குட்டி சொப்பர் பைக்கையும் மிதிச்சுக் கொண்டு சித்திக்கா ராத்தா வீட்டுக்கு போய் கச்சான் வாங்கினேன். என்னட்ட உள்ள நல்ல பழக்கம் றோட்டில வச்சு எதையும் சாப்பிட மாட்டன். ஆசய அடக்கிட்டு வீட்டுக்கு வந்துதான் ஒரு பிடி பிடிப்பன். அப்படி வரும்போது, ஏனோ புல்லு ஆச்சிய பார்த்திட்டன். அவட பக்கத்தில நின்ற அதையும் பார்த்திட்டன்......

அடடா...........என் ஹார்ட் வேகமாக அடிக்க ஆரம்பிச்சுது. புல் ஆச்சி வீட்டுக்கு போக ரெடியாகிறத கண்டதும் டென்ஷன் இன்னும் கூடிட்டுது. பாஸ்டா வீட்டுக்கு ஓடி விசயத்தச் சொன்னன் வாப்பாட்டா..........

"வாப்பா......புல்லு ஆச்சிட்ட நம்ம சின்ன சைக்கிள் நிக்குது"

வாப்பாவும், உம்மாவும் அது இருந்த இடத்த வந்து பார்த்தா அத காணல. உடனே வாப்பா என்னயும் கூட்டிக் கொண்டு புல்லு ஆச்சிட்ட போனாரு. (வாப்பா முந்தி பொலிசில இருந்துதான் ரீச்சிங்கிற்கு வந்தாரு) அந்தப் பாணியில விசாரிச்சப் போது, ஆச்சி எல்லாத்தையும் சொன்னா...........

எங்க வீட்டுக்கு ஹதியா கேட்டு வந்த அந்த பெரியவருதான் தனக்கு இன்னைக்கு 150 ரூபாவுக்கு இந்தச் சைக்கிள வித்ததா சொன்னா..

நாங்க எங்க சைக்கிள வீட்டுக்கு கொண்டு வந்தம்...பாருங்கோ, ஆச்சிதான் பாவம்..காசை இழந்திட்டா பரிதாபமா......ஆனாலும் ஆச்சி காசு விசயத்தில உஷாரா நின்னு அந்தக் காச அந்தப் பெரியவர்ட மகன்ட இருந்து ஒருமாதிரியா புடிங்கிட்டா...

அன்றைக்கு என்னை நினைச்சு நானே ரொம்ப சந்தோஷப்பட்டன். என்ட முயற்சியால காணாம போனத கண்டுபிடிச்சேனே..

அந்தச் சம்பவத்துக்கு பொறகு கொஞ்சம் வீட்டுக்கு வாற வெளியாட்கள் மேல ஒரு கண்ணு வைச்சம் என்பது வேற விஷயம்..........

என் மனசு இப்படி உங்ககிட்ட பேசுறது எனக்கு புடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்சிருக்கா....புடிச்சா சொல்லுங்க.

2013/01/18

வெளிநாட்டு அஞ்சல்


என்னதான் இணையத்தின் முற்றத்தில் உலகம் சுருங்கிக் கொண்டாலும் கூட வெளிநாட்டு அஞ்சல்களின் பயணப் பாதைகள் இன்னும் தடைப்படவில்லை.
வான் வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ அனுப்பப்படும் வெளிநாட்டு அஞ்சல்களில் கடிதம், அஞ்சல் அட்டைகள், வான் கடிதம், பொதிகள் மற்றும் சிறிய பைக்கற்றுக்கள் உள்ளடங்குகின்றன.

வெளிநாட்டுக் கடிதங்களின் ஆகக் கூடிய நிறை 2 கிலோ கிராம் ஆகும். இந்தக் கடிதங்களை நடுத்தர உறையைப் பயன்படுத்தி தபாலிட வேண்டும். அஞ்சல் சேவையின் கீழ் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடிய ஆகக்கூடிய நிறை 30.5 கிலோவாகும்.

வெளிநாடுகள் A,B,C,D,E,F,G,H என 8 வலயங்களாகப்  பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலய நாடுகளுக்கும் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு கடிதங்களை பதிவு செய்ய முடியும். அவ்வாறே காப்புறுதி அஞ்சலில் ,அஞ்சல் அலுவலக சட்டதிட்டங்களுக்குட்பட்டு வங்கி வரைவு, காசோலை, நாணயங்கள், பணத்தாள்கள், இரத்தினக்கற்கள், தங்க ஆபரணங்கள், இலாபச் சீட்டுக்கள், என்பவற்றை அனுப்ப முடியும்.

- Jancy Caffoor-

மின்னஞ்சல் @


" ரே டாம்லின்ஸன் " எனும் கம்பியூட்டர் பொறியிலாளரே 1971ம் ஆண்டு இச் சின்னத்தை உபயோகித்து முதன்முதலாக மின்னஞ்சலை அனுப்பினார். கணனி விசைப் பலகையில் எவரின் பெயரையும் குறிக்காத, குழப்பம் விளைவிக்காத சின்னமாக @ ஐ அவர் பயன்படுத்தினார்.

இந்த @ 18ம் நூற்றாண்டில் புழக்கத்தில் வந்தது. அந்த எழுத்து தொடர்பாக பல ஆராய்ச்சிகள் இருந்தாலும் கூட, ஆராய்ச்சியாளர் டெனிஸ் என்பவர் கூறுகின்றார் ப்ரெஞ்ச், ஜேர்மனிய வியாபாரிகள் a எழுத்தை வேகமாக உச்சரிப்பதால் ஏற்பட்ட திரிபு இதுவென்று!

2000ம் ஆண்டில் இது தொடர்பாக கருத்துக் கூறிய இத்தாலி நாட்டவர், 14ம் நூற்றாண்டுக்குரிய வியாபார தஸ்தாவேஜூகளில் இவ்வெழுத்துக் காணப்படுவதாகக் கூறினார். "anfora" எனும் அளவைக் குறிக்க இது பயன்பட்டதாகக் கூறினார். இது arroba என்பதின் மொழிபெயர்ப்பாகும். 1885ல் வியாபார ரீதியிலான "a" அண்டர்வுட்  தட்டச்சு  மெஷினில் சேர்க்கப்பட்டது.

இதனை ஸ்பானியர்கள் "arroba" என்றும், பிரெஞ்சுக்காரர் "arobase"  என்றும் , அமெரிக்கர், பிரிட்டிஷ் காரர்கள் "at-sign"  என்றும், ஜெர்மனியர்" at- Zeichen" என்றும், எஸ்தோனியர் "at- mark" என்றும்,  ஜப்பானியர் "atto maak" என்றும் உச்சரிக்கின்றார்கள்.

இதன் உருவருத்தை குரங்கின் வால் என சிலரும், சிலரோ நத்தை என்றும் கூறுகின்றனர்.


- Jancy Caffoor-





தாவணி


வாலிப தேசம் கண்டெடுத்த
வண்ணக்கொடி!

மலை முகடுகளை மறைத்தோடும்
நீர்வீழ்ச்சி!

இளமை ரகஸியங்களை
காற்றிலுதிர்க்கும்  உளவாளி!

பருவத்து அலைவரிசைக்காய்
விரும்பப்படும் ஒலிபரப்பு!

பாவாடைக் குடைக்காய்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னாடை!

இடை நெரிக்கப் படையெடுக்கும்
நூற்படை!

குமரப் பருவத்தை அங்கீகரிக்கும்
ஒப்பந்தக் காகிதம்!



2013/01/17

திருந்தும் வரை


உன்னைத் திருத்த முடியவில்லை
வருந்துகின்றேன்!
கடிவாளமிடப்படாத வுன் மனசு
பிடிவாதம் பிடிக்கின்றதோ - நம்
முரண்பாட்டில் முகம் நனைக்க!

"காளை நீயே" என்றிருந்த - என்
நாளை..............
சாலையோரப் புழுதிகளால்
ஓலையெழுதினாய் - உன்
வாலிபக் கிறுக்கை எனக்குள் விற்றுவிட!

என்னை அங்கீகரிக்கு முனது
இராசதானிக்காய்..................
முரசு கொட்டியழைக்கின்றாய்
உரிமையுடன்!
பூரிக்கின்றேன் உன்னன்பில்- இருந்தும்
உதிரமுறிஞ்சும் உன் தேடலில்
கதி கலங்கிக் கிடக்கின்றேன்
"கல்லாகி" இறுகி!

மன்னித்து விடென்னை!
உனக்காய்................
செலவளிக்கப்பட்ட  என் மணிப்பொழுதுகள்
இப்பொழுதெல்லாம் நகர்கின்றன- என்
தனிமை வீதிகளில்
உன்னைத் தவிர்த்து!

அடம்பிடிக்காதே பின்தொடர..........
உனக்கான அனுமதி மறுக்கப்படும் - நீ
திருந்தும் வரை!





நிராயுதபாணியாய்


சுருண்டு கிடந்தேன் - என்
கனவுலகில்!
சுள்ளென்று கிள்ளுகின்றாய் அடிக்கடி
உன் நினைவுகளால்!

பனி படரும் இருள் முகிலில்
கனிவாய் உலா வருமுன்
குரற் றொனியில்....................
அடங்கித்தான் கிடக்கின்றேன்
இனிய ஸ்வரமாய்!

இப்பொழுதெல்லாம்..................
என் தினக்குறிப்பின் ஆக்கிரமிப்பில்
அலைந்து கொண்டிருக்குமுன்னை.........
சேமித்துக் கொள்கின்றேன் கவிதைகளாய்!
பத்திரப்படுத்து என் உணர்வுகளை
உன் அன்பகத்துள்!

சிரிக்கின்றாய் எனைக் கடுப்பேற்ற.........
உன்
கருவிழிகளில் குறும்பையும் லேசாய்ப் பிசைந்து!

ஆயுதமேந்தவில்லை- உன்னை
ஆட்கடத்தல் செய்யவுமில்லை!
நிராயுதபாணியாய்
மருகிக் கிடக்கின்றாய் - என்
வாலிப எல்லைகளில் உன் விடுதலை மறுத்து!

நம் முதற் சந்திப்பின் மௌனம்
நிரம்பி வழிகின்றது ஞாபகக் குவளையில்
நாணத்தைச் சிதறியவாறு
நேசப் போதையில் கிறங்கி!

பரிவோடு காதல் குலைத்து
நிதமென்னை அரவணைக்குமுன்னை.........
அறிவிப்புச் செய்யட்டுமா - என்
தாயகமாக!




2013/01/16

"கற்றலுக்கு முதலிடம்"


சமயங்களுடன் வழிநடத்தப்படுகின்ற கல்வி, பொருளாதாரம், அரசியல் தொடர்பான பின்புலங்களே ஒரு சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகின்றன. அந்த வகையில் கல்வி அபிவிருத்தியின் மூலமாக இளம் சிறார்களின் ஆரோக்கியமான வாழ்வினை வழிநடத்தும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அப்பொழுதே நாட்டின் உயர்தரமான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் மனித உழைப்புக்களின் சக்தி யாவுமே ஓர் மையத்தில் குவிக்கப்பட வேண்டும்.


                          வடமத்திய மாகாண கொடி



வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ் எம் ரஞ்ஜித்


மகிந்த சிந்தனையின்  அடிப்படையில், கல்வி அமைச்சரான மேன்மை தாங்கிய பந்துலு குணவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற மூன்று வருட கால இலக்கினைக் கொண்ட இக் கல்வி அபிவிருத்திச் செயற்றிட்டமானது வடமத்திய மாகாண கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 2013 - 2015 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கின்ற இக்கல்வி அபிவிருத்திக்கு உயிரூட்டியவர் தற்போதைய வடமத்திய மாகாண  கல்வியமைச்சர் மேன்மைதாங்கிய ஜயரத்ன பண்டார ஆவார்கள். இக் கல்வி அபிவிருத்தி நடவடிக்கையின் பயனாக அநுராதபுரம், பொலனறுவை மாவட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பயனடைவார்கள்.
---------------------------------------------------------------------------------------------
இக்கல்வி அபிவிருத்தியின் பொருட்டு 
வடமத்திய மாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகளாவன:-
-------------------------------------------------------------------------------------------

இங்குள்ள சகல பாடசாலைகளுக்கும் ஒரே நேரத்தில் செயற்படக்கூடிய செயற்பாட்டவணைகள் வழங்கப்பட்டுள்ளன.


அந்த வகையில் சகல ஆசிரியர்களுக்கும் பொதுவான பாடத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த காலப் பகுதியில் சகலரினதும் இலக்கு ஓர் திசையை நோக்கியதாக குவிந்து காணப்படும்.  இதன்மூலமாக மாணவர்களின் சகல கற்றற் செயற்பாடுகளின் உச்ச அளவினாலான கற்றற் குணநலப் பண்புகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.


அவ்வாறே  மாத , தவணைப் பரீட்சைகள், ஒவ்வொரு தவணை இறுதிநாளின் போது குறித்த பாட ஆசிரியர்களை பெற்றோர் சந்தித்து தம் பிள்ளைகளின் கற்றல் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளல், இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடத்தல், அபிவிருத்திச் சங்க, பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் கூட்டங்கள் உள்ளிட்ட சகல செயற்பாடுகளும் திகதி குறிக்கப்பட்டு ஓர் குறித்த தினத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டம் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலையில் கொண்டாடக்கூடிய  விழாக்கள், மற்றும் சர்வதேச தினங்களும் திட்டமிடலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலைக் காலைக்கூட்டங்களில் ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மும்மொழியிலான கருத்துரைகளும் இடம்பெற  வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் தகவல்களை உள்ளடக்கியதாக தரம் 1 தொடக்கம் 13 வரையிலான சகல மாணவர்களுக்கும் மாணவர் அறிக்கைப் புத்தகமும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

எல்லாப் பாடசாலைகளிலும் இயங்கக் கூடியதாக சுற்றாடல் குழு, சாரணியர் குழு, சுகாதாரக் குழு போன்ற பல குழுக்கள் நிறுவப்பட்டு, அவற்றுள் மாணவர்கள் உள்வாங்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுவார்கள். இவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் விளையாட்டுப் பயிற்சிகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கற்றலைப் போலவே , மாணவர்களின் உடல்- உள நல விருத்திக்குதவும் பல்வேறு விளையாட்டுச் செயற்பாடுகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சகல கோட்டக்கல்விப் பிரிவுகளிலுள்ள பாடசாலைகள் ஒன்றிணைக்கப்பட்டு "(சம்பத்) விளையாட்டு அபிவிருத்தி நிலையம்" உருவாக்கப்பட்டு, அதன் மூலமாக மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சியளிப்பதுடன், பாடசாலைகளுக்கிடையிலும்  வளங்களைப் பரிமாறிக் கொள்ளும் தன்மையும் உருவாக்கப்படும். பாடசாலை ஆரம்பிக்கும் போது உடற்பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும்.


பாடசாலைகளுக்கிடையில்  தகவல் தொடர்பாடலை விருத்தி  செய்யும் நோக்குடன் , பாடசாலைகளுக்கிடையிலான இணைய வலைப்பின்னலும், மையங்களும் ஏற்படுத்தப்படும். அத்துடன் தகவல் பரிமாற்றங்களுக்காக கோட்டம், வலயம், மாகாணம், பாடசாலைகளுக்கிடையில் இணைய வலையமைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதுடன், இளைஞர்களுக்குரிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் விதமான கணனிப் பயிற்சிகளும் வழங்கப்படும்


தேசிய பொதுப் பரீட்சை இலக்குகளுக்கேற்ற விதமாக தயாரிக்கப்பட்ட  மாதிரிப் பரீட்சைகள் வடமத்திய மாகாணம் முழுவதும்  ஒரேவிதமான வினாத்தாள்கள் ஒரே நாளில் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.


க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய கஷ்டப் பிரதேச மாணவர்களும் தமது பிரதேசங்களிலேயே சிறந்த வளங்களைக் கொண்டு உருவாக்கப்படும் கற்றல் எண்ணக்கருக்களை உள்வாங்கும் பொருட்டு உயர்தர  விஞ்ஞான, கணித , தகவல் தொழினுட்ப கற்கைகளை சிறப்பாக வழங்கும் 30 நவீன பாடசாலைகள் அமைக்கப்படும்.

வடமத்திய மாகாணத்திலுள்ள 780 தமிழ், சிங்கள பாடசாலைகளுள் 449 பாடசாலைகளில் மாணவர்களின் முழுத் தொகை 200ற்கும் குறைவாகவே உள்ளன. இப்பாடசாலைகள் தொடர்பாக ஆசிரியர் பற்றாக்குறைகளும் உண்டு. இதனால் உயர் கற்றல் அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது. இப்பிரச்சினையும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் ஆரம்பப் பாடசாலைகளின் அபிவிருத்தியின்பாலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைச் சுற்றுப்புறம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலையை மாணவர்களின் விருப்பத்திற்குரிய இடமாக மாற்றும் பொருட்டு பாடசாலைச் சுற்றாடலை அழகுபடுத்தும் செயற்றிட்டங்களும், போட்டிகளும் நடாத்தப்படும்.


மாதத்திற்கு ஒருநாள் ஆசிரியர்களும், பாடசாலைச் சமுகத்தினராகிய பெற்றோர்களும் இணைந்து மேற்கொள்கின்ற சிரமதானச் செயற்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.  பாடசாலையிலுள்ள மொத்த மாணவர் தொகையை பன்னிரண்டு மாதங்களால் பிரித்துப் பெறப்படும் தொகையைக் கொண்டு, பெற்றோரை சிரமதானத்திற்கு அழைப்பதால், ஒரு பெற்றோர் வருடத்திற்கு ஒரு தடவையே சிரமதானத்திற்கு அழைக்கப்படுவார்.

கல்வியில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் இன்னுமொரு முயற்சியாக வான்மைத்துவ பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களுக்குரிய  காலத்திற்கேற்ற பொருத்தமான வான்மைத்துவப் பயிற்சி, பல்கலைக்கழகங்கள்  மற்றும் தேசிய கல்வி நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொடுக்கப்படும். க.பொ.த உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் குறித்த பாடம் தொடர்பான பல்கலைக்கழக மட்டத்திலான கற்றல் மற்றும் தொழில் வான்மைப் பயிற்சி  பெற்றுக் கொடுக்கப்படும்.


ஆசிரிய ஆலோசகர் சேவை  மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு போட்டிப் பரீட்சைகளின் மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு ஆசிரியர் ஆலோசகர் சேவையில் காணப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படும். வகுப்பறை கற்றல்- கற்பித்தல் தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்பார்வை செய்யப்பட்டு, ஆலோசனை அளித்தல் இவர்கள் சேவையாகின்றது. ஆசிரியர்களின் தொழில்வாண்மை விருத்திக்கு இவர்கள் உதவுவார்கள்.

பிற பிரதேசங்களிலிருந்து அதிக கஷ்ட பிரதேசங்களில் (பதவிய போன்ற பிரதேசங்கள் ) சேவையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் விடுதிகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதன்பொருட்டு முதற்கட்டமாக 25 ஆசிரியர் விடுதிகள் கஷ்டப் பிரதேசங்களில் அமைக்கப்படும்.


கோட்டக் காரியாலயங்கள் தற்போதுள்ளது போல் பாடசாலைக் கட்டிடங்களில் இணைக்கப்படாமல்,  தனித்து இயங்கும் கட்டிடங்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்படும்.  வலயக் கல்விக் காரியாலயங்களும் மறுசீரமைக்கப்பட்டு நவீனத்துவமான சேவையைக் கொண்ட தளமாக மாற்றப்படும்.  இதன்பொருட்டு  காரியாலயங்களில் சேவையாற்றுபவர்கள் பயிற்சியளிக்கப்படுவார்கள், வருடத்திற்கு 3 கல்வி வலயங்கள் எனும் ரீதியில் இந்த மூன்றாண்டு காலத்தினுள் சகல கல்வி வலயங்களும் சகல வசதிகளும் கொண்ட சேவைத்தளமாக மாற்றப்பட்டு, ஆசிரியர்களுக்கு முழுமையான சேவையைப் வழங்கும் "குரு மிதுரு" கல்வி அலுவலகங்களாக பரிமாணிக்கச் செய்யப்படும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்திற்குள் செயற்படும் விதமாக இடமாற்றக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவற்றினூடாக ஆசிரியர் இடமாற்றங்கள் கிரமமாக நடத்தப்படும். ஐந்து வருடங்களுக்கொருமுறை கட்டாய இடமாற்றம் அமுல்படுத்தப்படும். அதிக கஷ்ட பிரதேச ஆசிரியர்கள் மிக விருப்பு பாடசாலைக்கு இலகுவாக இடமாற்றம் பெறும் பொருட்டு புள்ளித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  அதி கஷ்ட பிரதேச பாடசாலையில் சேவையாற்றினால் பத்து (10)  புள்ளிகளும், கஷ்ட பிரதேச பாடசாலையில் சேவையாற்றினால் ஆறு (6) புள்ளிகளும், வசதியற்ற  பாடசாலையில் சேவையாற்றினால் 3 புள்ளிகளும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும்.


அதிபர் இடமாற்றங்களும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படியில் 1 ஏபி  பாடசாலை அதிபர்கள் மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றப்படுவார்கள். அவ்வாறே 1சீ பாடசாலையில் சேவையாற்றும்  அதிபர்களுக்கு மாவட்ட பாடசாலைகளுக்குள்ளும், வகை 2 ,3 பாடசாலையில் சேவையாற்றும் அதிபர்களுக்கு வலயப் பாடசாலைகளுக்குள்ளும் இடமாற்றங்கள்  வழங்கப்படும்.

புதிய நியமனங்கள் கஷ்டப் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் போது 5 வருடங்கள் அப்பாடசாலையில் கடமையாற்ற வேண்டுமென நிபந்தனை விதிக்கப்படும். அவ் அரச ஊழியர் அதே கோட்டப் பிரிவில் மேலும் 5 வருடங்கள் கடமையாற்ற வேண்டும். இம்மாகாணத்தில் உள்ள சகல மாணவர்களும் உச்சளவிலான கல்வி அபிவிருத்தியைப் பெறும் விதமாக, அம் மாணவர்களுக்கேற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை பாடசாலைகளில் பேணப்படும்.


பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும்   நோக்குடன், சகல கோட்டக் கல்விக் காரியாலயப் பாடசாலைகளில் பற்சுகாதார  வேலைத்திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ்  வைத்திய அதிகாரிகள் பாடசாலைக்கு சமுகமளிப்பார்கள்.


பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் விடயம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சகல ஆரம்பப் பாடசாலைகளையும் விருப்புக்குரிய பாடசாலையாக மாற்றியமைக்கும் வகையில் சகல வளங்களைக் கொண்டதாக அப்பாடசாலை மாற்றப்பட்டு மாணவர்களுக்குரிய சிறந்த ஆரம்பக் கல்வி வழங்கல் பெற்றுக் கொடுக்கப்படும்.


 கல்விக் காரியாலயங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் கற்பித்தல் சார் பிரச்சினைகளை  ஆராய்ந்து சரியான தீர்ப்பு வழங்கும் பொருட்டு  "விமர்ஸன " எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சகல பாலர் பாடசாலைகளிலும் ஒரேவிதமான கல்வி வழங்கலை முன்னெடுக்கும் பொருட்டு, முற் பாடசாலைகளில் (பாலர் பாடசாலைகளில்) கற்பிக்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆரம்பக் கல்வி டிப்ளோமா பயிற்சி வழங்கப்படும். அத்துடன் இவர்களுக்கான கொடுப்பனவுகளின்பாலும் கவனம் செலுத்தப்படும்.


பாடசாலைகளில் நிலவும் மேசை, கதிரை உள்ளிட்ட  தளபாடப் பற்றாக்குறை நீக்கும் பொருட்டு,அவற்றை திருத்தும் வேலைகளுக்காக குணநலப் பங்கீட்டின் வழியாக நிதி வழங்கப்படும். அவ்வாறே கணனி மற்றும் கற்றற் உபகரணங்களின் பழுது பார்க்கும் வேலைகளுக்காகவும் நிதி வழங்கப்படும்.


"கற்றலுக்கு முதலிடம்"

எனும் கொள்கையை வலுப்படுத்தும் விதமாக , வடமத்திய மாகாணப் பாடசாலைகள் மற்றும் முற்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் மற்றும் கற்றற் செயற்பாடுகளில் அபிவிருத்தி ஏற்படுத்தும் விதமான செயற்பாடுகள் மேற்காட்டப்பட்டவாறு முன்னெடுக்கப்பட்டுகின்றன.
இவ்வாறாக பிள்ளைக்கு வழங்கப்படும் கல்வியால் பெற்றோர்கள் திருப்திப்படுவதுடன்,  கற்றற் செயற்பாடுகளின்  மூலம் மாணவர்களின்  மனம் மற்றும் குணநல சார்பான ஆரோக்கியங்களும் புதுப்பிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாக்கப்படும்.. அதுமாத்திரமின்றி  பாடசாலையில் சிறப்பான கற்றற் சூழலும், பின்னணியும் உருவாக்கப்படும் விதமாக ஆசிரியர்களின் செயற்பாடுகளும் குறித்த இலக்கு நோக்கி ஒழுங்கமைக்கப்படுவதனால், உச்ச அளவினாலான கல்வி அபிவிருத்தியும் நம்மை நோக்கி முகங்காட்டி நிற்கும்.



மேற்கூறப்பட்டவாறு இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இம் மூன்று ஆண்டு காலத்திற்குள்ளும்  எதிர்பார்க்கப்பட்ட சகல கல்விசார் எண்ணக்கருக்களும் மேம்படுத்தப்பட்டு, கற்றல் அபிவிருத்தியின்பால் மாணவ சமுதாயத்தினர் அணி வகுக்கப்படுவார்கள் எனலாம். இச்செயற்பாடுகளின் வெற்றிக்காக சகல தரப்பினரும் ஒன்றிணைந்து அயராதுழைத்தல் வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாகும்.. அப்பொழுதுதான்  "கற்றலுக்கு முதலிடம்" எனும்  இலக்கை அநுராதபுரம் மற்றும் பொலனறுவைப் பாடசாலைகள் எட்டி நிற்கும்.

மேற்கூறப்பட்ட இலக்குகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

Miss . A.C. Jancy (Teacher)
(Science - SLTS - 2I),
(B.Ed - final Year)
A/Zahira National School
Anuradhapura.








                                                                                              

2013/01/14

கலியுக மன்னர்


நண்பர் போர்வைக்குள்
அரங்கேற்றப்படுகின்றன
காம சூத்திரங்கள் தந்திரங்களாய்
முகநூல் மேடைகளில்!

துகிலுரிக்கும் துச்சாதனன்களே!
திகிலுடன் பாருங்கள்........
உங்கள் விழி மேய்ப்பவர்களும்
உடன்பிறப்பின் ஆத்மாக்களே!

பாலூணர்ச்சி வேகத்தில்
பாசம் போல் வேடமிட்டு........
விசம் கக்கிச் செல்கையில் - பிறர்
வாழ்வை வேரறுத்துச் செல்கின்றீர்!

தரச் சான்றிதழ் தர வேண்டும்
நல்ல நண்பர் தாமென்று!
கலியுகத்து கழுகுகள்
வழியெல்லாம் நிறைந்திருப்பதால்!



மல்லிகை


கூந்தல் வெளிகளில்
குடியிருக்கும்
அழகு தேவதை!

உஷ்ணத்தின் காமத்தை
சிகையுறிஞ்சாது தடுக்கும்
பூக்கூடை!

சூரியன் எட்டிப் பார்க்கையில்
சூட்சுமமாய் இதழ் சுருக்கும்
மென் தேகத்தாள்!

நறுமண ஆட்சேர்ப்பால்
நார் சேர் பூமாலையாய்
தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்!

ஜாஸ்மின் நாமம் சுமந்தே
ஐவிதழ் வரிகளுக்குள்
ஐக்கியமான ஹைக்கூ!

இரவின் கூடலில்
மோகித்துக் கிடக்கும்
மலர்ச் சிற்பங்கள்!

இம்சைக் காதல் தேடி
மேனி நசிக்கும் வண்டுகளுக்காய்
மகரந்தத் தூது விடும் காதலி!

கொடிப் பந்தலிலே
கொசுவம் சொருவிக் காற்றாடும்
மல்லிகைச் சாமரம்!


2013/01/13

பொங்கலோ பொங்கல்


சூரிய தங்கத்தில்
பூரிக்கும் நெல்மணிகள்............
கரமசைத்து வரவேற்கும் இனிய
தைப்பொங்கலிது!

வரப்போரம் இடை நெளித்து
கரும்பாய் முகங் காட்டும்..............
தேன்சுவை மயக்கத்தினில்
உதட்டை நனைக்கும் பொங்கலிது!

வயலோரக் காற்றில் நாணும்
வாழ்வாதார  நெல்மணிக்காய்.......
உளமெங்கும் நன்றி தேக்கி
களிக்கின்ற பொங்கலிது!

சேற்றில் விரல்  நனைத்து
நாற்றாய்  மடி சாயும்........
சோற்றுப் பருக்கை தந்தவளுக்காய்
நன்றியுரைக்கும் பொங்கலிது!

மார்கழிப் பனி விரட்டி
சோர்வையும் கொஞ்சம்  துடைத்து...........
தையாய் இதழ் விரிக்கும்
வசந்தப் பொங்கலிது!

கோமாதா நெஞ்சம் தொழுது
கோயில் திருவிளக்கேற்றி............
மத்தாப்பாய் மகிழ்வுகள் பூக்க
சித்தம் குளிர்த்திடும் பொங்கலிது!

பட்டாடை தனை செருகி
ஆதவனுக்கும் புதுப் படையல்தனையிட்டு......
உறவுகளின் ஆத்ம சுகத்தில்
திருவிழாக் காணும் பொங்கலிது!

பொங்கலின் சந்தம் கண்டு
மணக் களையினி மெல்ல விரிய...............
தையவள் வாழ்த்திடுவாள்
தரணிக்குள் பூத் தூவிடுவாள்!

Jancy Caffoor

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்





அருணோதயம்


கிழக்கின் விடியலில்
விழுந்து கிடந்தாய் ஒளிச் சிறகினை
லேசாய் உதிர்த்து!

உன் குண்டுக் கன்னங்களும்
காந்தம் உமிழும் கண்களும்
சிரிப்பில் நசியும் உதடுகளும்
பாசமாய் என்னை மேவிச் செல்லும்
நிதம்!

உன் தனிமை அலைவரிசையில்
அலையுமெனக்கு
கடிவாளமிட்டாய் அடிக்கடி
ஆசையோடு!

உன் பிடிவாதங்களும் சீற்றங்களும்
ரசனையில் குழைந்தே கலப்பதால்
தொலைபுள்ளியில்
உன்னோடு கண்ணாமூச்சியாடுகின்றேன்
கண்ணா!

ஜன்ஸி கபூர் 



2013/01/12

வைரத்துளிகள்


மோதி வீழ்கின்றன உழைப்பின் துளிகள்
நெற்றி முகட்டில் கரைந்து!

உறிஞ்சி விடும் பூக்களாய்
முகர்கின்றன கைகள் லேசாய் அவற்றை!

கைரேகைகள் கழுவப்படும் போதெல்லாம்
தலைவிதிகள் மாற்றப்படுமோ!

வடியும் நீர்க் கசிவு கண்டு
வழி விட்டு மறைகின்றது  சோம்பல் மெல்ல!

ஈர ஒத்தடங்களின் நெருடல்களில்
ஓரமாய் ஒதுங்கிக் கிடக்கின்றது ஏழ்மை வெம்மை!

உலர்ந்த வாழ்க்கைத் தரையெல்லாம்
உவப்போடு வரைகின்றது பொருளாதாரத்தை!

சோர்வுற்ற தசைகளின் முகங் கழுவல்
ஆர்வத்தோடு எட்டிப் பார்க்கின்றன தேகம் வழியாய்!

வியர்வைத்துளிகள்..............!
உழைப்பின் தேடல் தந்த வைரத்துளிகள்!

ஜன்ஸி கபூர் 






2013/01/11

நீயறியாமலே


உன் நெருடலின் மயக்கத்தில்
மூச்சுத் திணறுது என் சுவாசம்!

உன் கடிதங்களின் கிசுகிசுப்பால்
புல்லரிக்கின்றது உதடுகள்!

வெற்றிடமாய் தேங்கிக் கிடக்கும் மனதில்
வேரூன்றிக் கிடக்கும் உயிரோ நீ!

உன் ரகஸிய ஒத்தடங்களால்
திமிறேறிக் கிடக்கின்றதே கன்னங்கள்!

உன் அருகாமை விட்டுச் சென்ற ஏக்கங்களில்
வலை பிரித்து முறுவலிக்கின்றது வெம்மை!

உன் காதலின் இம்சைகண்டு
கனவுகள் கூட கப்பம் கேட்கின்றனவே!

என் தனிமைப் பொழுதைக் கரைக்கையில்
வீழ்கின்றாய் நினைவுகளாய்!

ஏற்றி விட்டேன் என்னை யுன்னுள்
நீ யறியாமலே உன் பார்வையாய்!

2013/01/09

ரிஸானா நபீக்


2013.01.09 ந் திகதி, இலங்கை தேசம் எங்கும் கண்ணீர்க் கசிவுகளுடன் உலா வரும் செய்திதான் றிஸானா நபீக்கின் மரண தண்டனை ! இன, மத பேதமின்றி அனைவர் உள்ளங்களையும் துன்பத்திலாழ்த்திய இம் மரண தண்டனையின் கொடூரம் எம்மை பிரமைக்குள்ளாழ்த்தியுள்ளதென்றே சொல்லலாம்.

றிஸானா நபீக்.........!

மூதூர் சகோதரி.

வண்ணக் கனவுகளுக்கு வாலிப மெருகூட்டி வசந்தம் நுகர வேண்டிய இந்தப் பருவச் சிட்டாள், வறுமையின் வாசலுக்குள் எட்டிப் பார்த்ததால் றியாத் எனும்  சவூதியின் நிழலுக்குள்  தன் பாதங்களைப்  பதித்தாள் நம்பிக்கையுடன்!பெற்றவர்கள் நிம்மதிப் பெருமூச்சொறிந்தனர் தம் வாழ்க்கைப் போராட்டங்களை இனி ஓரளவாயினும் சமாளிக்கலாம் என்று! தனது பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி,  தம்பி, தங்கைகளையாவது வாழ வைக்கலாமென்ற நப்பாசையில் பாலைவனம் நோக்கி, பல எதிர்பார்ப்புக்களுடன் பறந்த இச் சகோதரி இன்று அலைவரிசைகளில் முக்கிய செய்தியாகி, எம் உறவினர் போன்ற பரிதவிப்பை எமக்குள் ஏற்படுத்தி மறைந்துள்ளார்.

2005ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி ........

றியாத்திலிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்தில்  தவாத்துமி பிரதேசம் அமைந்துள்ளது. அங்குள்ள அல்ஜிம்ஸ் எனும் கிராமத்தைச் சேர்ந்த நய்வ் ஜிஸியான் காலவ்  எனும் எஜமான்  தலைமையிலான குடும்பத்தினரே அவரைப் பணிப்பெண்ணாக உள்வாங்கிக் கொண்டனர். அவர்களது நான்கு மாத ஆண் குழந்தையொன்றுக்கு பாலூட்டும் போது குழந்தை மூச்சுத் திணறி மரணித்தது. றிஸானா கொலை செய்ததாக அக் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பட, சிறைப்படுத்தப்பட்டார் அவ் இளமங்கை. பாலூட்டும் போது பால் தொண்டையில் சிக்குண்டு குழந்தை இறந்ததாக றிஸானா மறுதலிக்க, அவரின் வாக்குப் பதிவு பலனளிக்கவில்லை. ஏனெனில் அக்குழந்தையை தானே கொலை செய்ததாக பொலிஸ், மஜிஸ்ரேட், நீதிமன்ற விசாரணைகளின் போது  மூன்று தடவை அவர் வாக்கு மூலம் ஏற்கனவே அளித்திருந்தார். அரபு பாஷை சரியாகத் தெரியாமை, தன்னை விடுவிக்கட்டும் என்ற பதற்றம், பதகளிப்பு , பயம் , மிரட்டல் போன்றன அவரைக்  குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்திருக்கும். எனவே இத்தகைய நிலையில் பெற்றோர் மன்னித்தாலே விடுதலை கிடைக்கும் எனும் நிலைப்பாடு  றிஸானாவின் குரல்வளையை இறுக்கியது. எனினும் பெற்றோர் மன்னிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. றிஸானாவின் இறுதி ஆசையாக இருந்தவை, 2 ரக் அத் தொழ வேண்டும், அத்துடன் தான் சேகரித்த பணத்தை உறவினர்களுக்கு ஸதகா கொடுக்க வேண்டுமென்பதாகும். சிறைக்கூடத்தில் றேந்தை பின்னி உழைத்த இந்த இளம் சகோதரி, பலர் முன்னிலையில் கழுத்தறுபட்டு துடிதுடித்து மரணித்த அந்தக் காட்சியைக் காணும் போது பதறாத உள்ளங்கள் இருக்கவே முடியாது.

வயது பதினேழு ..........!

பக்குவம் தெரியாத மனநிலை........குழந்தைத் தனமும் குறும்புத்தனமும்  வலை வீசும் கட்டிளமைப் பருவம்...இருந்தும் கடவுச்சீட்டில் தனது வயதினை அதிகமாகக் காட்டி, உழைப்புக்காக முயற்சித்த பயணமே இன்று சிரச் சேதமென்னும் முற்றுப்புள்ளியில் முக்காடிட்டு நிற்கின்றது.

அக் குழந்தையின் பெற்றோர் அதனை கொலை என வழக்குத் தொடர்ந்ததில் 2007ம் வருடம் ஜூன் மாதம் 16ம் திகதி நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனையைத் தீர்ப்பளித்தது.மேன் முறையீடு வரை கொண்டு செல்லப்பட்ட இவ்வழக்கிற்கு பல மனித உரிமை அமைப்புக்கள், இலங்கை- சவூதி அரச தரப்பு பேச்சு வார்த்தைகள் , பல்வேறு மக்களின் கையெழுத்துப் பதிவுகள், றிஸானாவின் பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள்கள் , ஜம்இய்யத்துல் உலமா போன்ற மத அமைப்புக்களின்  வேண்டுகோள்கள் , மகளிர் அமைப்புக்களின் கோரிக்கைகள் , அரசியல் குழுக்களின் முயற்சிகள் , மக்கள் போராட்டங்கள் என வெடித்தெழுந்த அழுத்தங்கள்  கூட   பெறுமதியற்று, உயர்நீதிமன்றத்தின் சிரச் சேதம் எனும் மரண தண்டனை எனும் தீர்ப்பே வலுப்பிடியாக அமைந்திருந்தது. பல சர்வதேச நாடுகள் ஏழைப் பெண்ணான றிஸானாவுக்கு கருணை காட்டும்படி விடுத்த வேண்டுகோள்களும் நிராகரிக்கப்பட்டன. சவூதி அரசின் இஸ்லாமிய ஷரீஆ சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பை மேலும் சட்டரீதியாக கொண்டு நடத்தமுடியாதளவிற்கு சிக்கல் நிலை தோன்றியது. தீர்ப்பு வழங்கப்பட்டு 3 மாதத்திற்குள் தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற சட்டத்தை சவூதி அரேபியா 7 வருடங்களுக்கு ஒத்திப் போட  அரச உயர் மட்ட பேச்சு வார்த்தைகளும் பல தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் காரணமாக இருக்கலாம். இந்தக் காலத்தினுள் இறந்த குழந்தையின் பெற்றோர் மனமாற்றமடையலாம், அதன் காரணமாக மன்னிப்பு வழங்கலாம் எனும் எதிர்பார்ப்பும் சவூதி அரசுக்கு இருந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

துடிதுடித்து மரணித்த அந்தப் பிஞ்சுப் பாலகனின் இழப்பின் வலி, உரிய பெற்றோருக்குத் தான் தெரியும். அந்த மரணத்தை நியாயப்படுத்த யாராலும் முடியாதுதான். ஆனால் வறுமையின் நிமித்தம் தனது வயதினையும் கடவுச் சீட்டில் அதிகமாகக் காட்டி உழைக்கச் சென்ற அந்த ஏழை முஸ்லிம் குமர்ப் பிள்ளைக்கு மன்னிப்பளித்திருக்கலாம். தவறுக்கு தண்டனை வழங்குவதை விட, மன்னிப்பதே மிகப் பெரிய மனசாட்சி உறுத்தலை ஏற்படுத்தும்.

தவாத்மி பிரதேச சிறையில் அழுதழுது நிதமும் தொழுகையிலும், பிரார்த்தனையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த அச்சகோதரியின் விடுதலை, குழந்தையைப் பறிகொடுத்தவர்களின் கைகளிலேயே தங்கியிருந்தது பெற்றவர்கள் மன்னித்தால் மாத்திரமே விடுதலைக்கு வழி கிடைக்கலாம் எனும் ஷரீஆ சட்டத்தின் திசையைச் சுட்டிக் காட்டி சவூதி அரசு  மௌனிக்க, நடக்க வேண்டியதெல்லாம் தானாக நடந்தேறி விட்டது.சிறைக்கூடத்தில் தன் பெற்றவர்களை சந்தித்த றிஸானா அழுதழுது தன்னையும் இலங்கைக்கு கூட்டிச் செல்லும்படி விடுத்த பாச நெருடல் நம் கண்ணீரை வெளியேற்றச் செய்யக்கூடியது.

இலங்கை- சவூதி அரசுகளினால் சாதிக்க முடியாத கோரிக்கைகள் வெறும்  பூஜ்ஜியமாகிப் போக, றிஸானாவின் தலை நிலத்தில் உருண்டோடியது. தான் மரணிக்கப் போகின்றோம் என்ற அந்த இறுதிப் பயங்கரக் கணங்கள் இனி யாருக்குமே வரவேண்டாம்.
.
சாந்தி, சமாதானம் , அன்பு, கருணை, காரூண்ணியம் போன்ற உயர் பண்புகளைக் கொண்ட இஸ்லாம் மதத்தை ஆணி வேராக்கி இறுக்கப் பற்றிப் பிடித்து ஷரீஆ சட்டங்களை கடுமையாக அமுல் செய்யும் சவூதி, இஸ்லாம் வலியுறுத்தும் மன்னிப்பின் பாலும் கவனம் செலுத்தியிருக்கலாம். தண்டனை எனும் பெயரில் சிறுவயதினரை சிரச்சேதம் போன்ற ஈவிரக்கமின்றி கொல்லும் இவ் அரபிகளின் செயலை மன்னிக்கவே முடியாது. வாழ் வேண்டிய ஓர் ஜீவனைக் கபனிட்டு மண்ணுக்கு வலுக்கட்டாயமாக மறைத்து வைப்பதில் இவர்களுக்குள் அப்படியென்னதான் சாதனை முளைக்கப் போகின்றது.

மறுமுனையில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வெளிநாடுகளிற்கு  ஆட்களை ஏற்றுமதி செய்யும்  முகவர்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தவும் இம் மரண தண்டனை நிகழ்வு வழிவகுத்துள்ளது. போலி ஆவணங்களைத் தயாரித்த ஏஜென்ஸிக் காரர்கள் சட்டத்தின் பிடிக்குள் சிக்குண்டமை, பணிப்பெண்ணை குழந்தை வளர்ப்பிற்காக நியமிக்க முடியாது , வயது குறைந்த பெண் போன்ற சாதகமான காரணிகள் இருந்தும் கூட, பெற்றோரின் மன்னிப்பென்ற வார்த்தையின்றி இச் சகோதரி பாலைவன மண்ணில் தன் குருதி சிந்தி கோரமான மரணத்தை எய்தினார்.

பல வருடங்கள் சிறைத் தண்டனைக்குள் சிக்குண்டாலும் கூட, தான் விடுவிக்கப்படுவேன்  எனும் நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனைகளுடன் , அந்த இருளுக்குள் முகம் தேடிக் கொண்டிருந்த இந்த மூதூர் சகோதரியின் மூச்சு இன்று  முற்றாக நிறுத்தப்பட்டது வேதனையே!




2007-01-30
அல் தவாத்மி சிறைச்சாலை
அல் தவாத்மி
தற்போது அல் தவாத்மி சிறைச்சாலையில் கொலை குற்றச்சாட்டின் பெயரில் சிறையிடப்பட்டுள்ள ரிசானா நபீக் ஆகிய நான் இன்று பின்வருமாறு வாய் மொழி இடுகிறேன் மேற்படி நான் முதலில் மேல் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கு பதிலாக இன்று தாழ்வான மன நிலையுடன் பின்வருமாறு கூறுகின்றேன்.

இலங்கையில் எனது முகவரி
எம்,எஸ்,நபீக், சாலி, நகர்,மூதூர்

எனது உண்மையான வயது [19] பிறந்த திகதி 02-02-1988 எனது வயதை கொஞ்சமாக எனது சப் ஏஜன்ட் அஜிர்தின் என்பவர் பிறந்த திகதியை ௦2-௦2-1982 என குறிப்பிட்டு பாஸ்போட் [கடவுச்சீட்டு] வழங்கினார் முதலில் நான் 2005-04-01ல் சவூதி வந்தேன்.

எனது சவூதி வாப்பா விட்டில் 1.1/2 மதம் வேலை செய்தேன் குரிப்பிடதாக்க பிறர்சினைகள் இருக்க விலை இந்த விட்டில் சமைத்தல் கழுவுதல் 4மாத குழந்தையைப் பார்த்தல் ஆகியவற்றை செய்தேன் இவ்விட்டில் நன்றாக இருந்தேன்.

குரித்த சம்பவத்தினம் ஞபக்கம் இல்லை அது ஒரு ஞயிற்றுக் கிழமை பகல் 12.30 இருக்கும் அப்போது யாரும் விட்டில் இருக்க வில்லை இக்குழந்தைக்கு மேலே 4 வயது 3 வயது ஆண் பென் குழந்தைகளும் உண்டு வழமையாக நான்தான் குழந்தைக்கு பால் கொடுத்தேன்.

வழமைபோல் பால் உட்டிக் கொண்டிருந்தபோது குழந்தையின் வாய் முக்கின் முலம் பால் வெளிவர ஆரம்பித்தது நான் குழந்தையின் தொண்லையை மெதுவாக தடவினேன் அப்போது குழந்தை கண்முடி இருந்தபடியால் நான் அக் குழந்தை தூக்கமென நினைத்தேன்,

எனவே மாமா [குழந்தையி தாய்] 1.1/2மணிக்கு வந்து சாப்பிட்டு விடு பிள்ளையை பார்த்து விட்டு ''செருப்பால்'' அடித்துவிட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு போனார் என் வாய் மற்றும் மூக்கில் இரத்தம் வந்து பின்பு பொலிஸ் விட்டுக்கு வந்து என்னை எடுதுச் சென்றனர்.

போலீசில் வைத்து எனக்கு அடித்தார்கள் ஒரு பட்டியால் அடித்தார்கள் அடித்து குழந்தையின் கழுதை நேரித்ததாக [நசித்ததாக] கூறுமாறு அடித்து வர்புரிதினார்கள் அவ்வாறு கூராவிடின் சொல்லும்வரை கரண்ட் பிடிப்பதாக கூறினார்கள் எனவே அவர்கள் எழுதியபேப்பரில்கையப்பம்மிட்டேன்.

என்னை வேறு இடத்திற்கு கொண்டுபோய் கேட்டபோது பயங்கரமாக இருந்தது ஞபகசக்தி அப்போது இல்லாதபடியில் நான் கழுதை நரித்ததாகக் கூறினேன். அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொள்ள நான் கழுதை நசிக்கவில்லை மேற்படி எனது வக்குமூலம் வசித்து விளங்கிய பின் உறுதியான உணர்ந்து கையப்பம் மிடுகின்ரேன்

N. RISANA
எல்லாப் புகழும் இறைவனுக்கே



துபாய் பத்திரிகையொன்றில் வெளியான பதிவிது
------------------------------------------------------------------------

ரிஸானாவின் வாக்கு மூலம் இது-
-----------------------------------------------
" குழந்தைக்கு 4 நாட்களாக தொடர் இருமல், சளி இருந்தது. சம்பவ தினம் நான் குழந்தையை மடியிலிருத்தி பாலூட்டிக் கொண்டிருந்தேன். போத்தலில் இருந்த பாலை முக்கால் வாசி அக்குழந்தை குடித்து முடித்து விட்டது. மேலும் அது குடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென இரும ஆரம்பித்து விட்டது. இருமல் மேலும் அதிகரிக்கு மூக்காலும், வாயாலும் பால் வெளியேற, திடுக்கிட்டெழுந்து குழந்தையின் இரு கக்கத்திற்குமிடையில் கையைப் போட்டு தூக்கினேன். குழந்தையோ மூச்சுத் திணறி தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தது. எனக்குப் பயமாக இருந்தது. உடனே குழந்தையை என் உள்ளங்கையில் படுக்க வைத்து மறு கையால் பிடரியில் தட்டினேன். இப்படிச் செய்தால் குழந்தை இருமலில் இருந்தும் மூச்சுத் திணறலில் இருந்தும் நீங்கி விடும் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். அதனை நானும் நேரில் பார்த்திருக்கின்றேன். கொஞ்சம் அழுத்தித் தட்டியதால் அந்த இடம் சற்று சிவந்து விட்டது. இதே நேரம் என் எஜமானி அம்மா அதைப் பார்த்து விட்டு ஓடி வந்து என் கையில் இருக்கும் குழந்தையைப் பறித்து விட்டு என்னைப் பிடித்து தள்ளி விட்டார். அதன் பிறகு அக் குழந்தையின் இருமல் சத்தமோ, அழுகையோ கேட்கவில்லை. என் பிள்ளையைக் கொன்றுவிட்டாய் என்று அழுது கொண்டு பொலிஸில் ஒப்படைத்தார்கள்" என தொடர்கிறது. 



குழந்தை மூச்சுத் திணறியே இறந்ததாக போஸ்மாட்டம் அறிக்கை கூறும் போது, இதனை கொலை என சாடி , குற்றமற்ற இந்த இளம் உயிரை எல்லோர் முன்னிலையிலும் துடிதுடிக்க உறிஞ்சிய இந்த ஈனச் செயலைக் காட்டுமிராண்டித்தனம் என்றுதான் கூற வேண்டும்..இவர்களை அல்லாஹ் தண்டிப்பானாக!



குடும்ப வறுமையை நீக்க வேண்டும் எனும் கனவுகளைச் சுமந்து சென்ற அந்த சகோதரியின் கனவு, அவர் இறப்பின் மூலம் நிறைவேற்றப்படுகின்றது. என்னதான் வசதியான வாழ்வு கிடைத்தாலும் கூட, இழப்பின் வலி ஈடுசெய்ய முடியாதது. றிஸானாவின் பிரிவுத் துயரில் உருகும் அவர் குடும்பத்திற்கு கவிதாயினியும் தனது சோகத்தைப் பகிர்கின்றது.

வறுமை இன்னும் பல றிஸானாக்களை உருவாக்கலாம். நமது சமுதாயத்தில் காணப்படும் சிறுசிறு ஓட்டைகளால் தான் இவ்வாறான துக்ககரமான நிகழ்வுகள் இடம் பெறுகின்றது , இனி எந்த றிஸானாக்கும் இந்தக் கதி நிகழக்கூடாது. வருமுன் வசதி படைத்தவர்கள் இளம் சமுதாயத்தைக் காக்க தோள் கொடுங்கள். இழப்புக்களைக் கண்டு கண்ணீர் சிந்துவதை விட, ஏழைக் குடில்களில் வேரூன்றியிருக்கும் இந்த மனிதங்களின் கண்ணீர்த்துளிகளை ஒற்றியெடுப்பதும் ஓர் இபாதத்தே!



றிஸானாவின் 7 வருடப் போராட்டங்களும், கதறல்களும் ஓய்வுக்குள் கொண்டு வரப்பட, மரணித்த அந்த சகோதரி விட்டுச் சென்ற அனுபவங்களும் சேதியும் இன்னும் பல றிஸானாக்களுக்கு  எச்சரிக்கைகளாக அமைய வேண்டும்.



நபி (ஸல்) அவர்களுக்கே கல்லெறிந்து சித்திரவதை செய்த அந்த கோத்திரத்தாரிடையே றிஸானா நபீக் சிக்குண்டதும் தன்னுயிரை அநியாயமாக பலிகொடுக்கவா...........................!

யா அல்லாஹ்..........நீயே துணை!




இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன் . 
ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் சுவனபதியை அல்லாஹ் தஆலா வழங்குவானாக.  ஆமின் !


றிஸானா நபீக்கின் வீடு


தாய் சகோதரிகள்


சிறைச்சாலையிலிருந்து
மரண தண்டனை நிறைவேற்றப்படும் இடம் நோக்கிசெல்லும்
இறுதிக் கணங்கள்



சிரச் சேதம் செய்யப்பட்ட நிலையில்


ஜனாஸா






- Jancy Caffoor -

2013/01/02

அழகிய நெருப்பு


அழகாய் வார்க்கப்பட்ட - என்
கனவுச் சுவர்களில் கீறல்கள்
லேசாய்!

 சுவாசப் படிமங்களின் சுக விசாரிப்புக்களில்
முந்திக் கொள்கின்றது நிக்கற்றின்!

சிந்திய வியர்வைத்துளிகள் உலர முன்னே
உறிஞ்சிக் கொள்கின்றன
புகை வளையங்கள்!

பத்தியம் பார்த்து பூத்த மேனிக்குள்
புதுசாய் வேலியிட்டுக் கொள்கின்றது
தீப் பந்தம்!

சுகமான நித்திரைகளில்
விரகமாய் பல்லிளிக்கின்றது
விசத் தாபம்!

வாலிபக் கிறுக்கின் அடாவடித் தனத்தில்
பைத்தியமான உதடுகள்
முறுவலிக்கின்றன தீ முத்தத்திற்காய்!

தீயின் ஆக்கிரமிப்பில்
எரிந்து கொண்டிருக்கின்றது - என்
இன்றைய பொருளாதாரம்!

கரும் புகையுறிஞ்சி ஆவியுருக்கியதில்
தோற்றுத்தான் போனேன் மரணத்திடம்
மகிழ்வின் போதைக்காய்!

விரலிடுக்கில் உனைக் கோர்க்க
அடமானம் வைத்ததென் வாழ்வின்று
புகைந்து கொண்டிருக்கின்றது அணைப்பவரின்றி!

ஜன்ஸி கபூர்