கிறீஸ் பிசாசே!
உன் தசை கிழிக்கும் புத்தியில்
இனவாதம் எட்டிப் பார்க்கின்றது!
தரித்திரத்தின் சரித்திரம் நீ
அரியாசனம் மிதிக்கின்றாய்
குருதியை உறிஞ்சியபடி!
நீ கருவறைக் கூடுகளைச் சிதைத்து
உயிரறுக்கும் காட்டேறி!
நீ முகமூடிச் சல்லாபத்தில்
முணங்கிக் கிடக்கும் சாத்தான்!
நீ
நகங்களில் ஆணி பூட்டி
நடுசாமங்களில் ஊர்ந்து செல்லும்
நாகம்!
நீ
துப்பாக்கி ரவைகளில்
அப்பாவிகளை நிரப்பும்
ஆட்கொல்லி!
நீ கற்றாளைப் பாலில் உணவூட்டி
கல்பை விஷமூட்டும்
பாதகன்!
நீ ஆறடிக்குள் ஆன்மா அடக்க
வருந்தாத பூதம்!
உன் மயான கிடங்குகளைத் தீ மூட்ட
வாய் பிளக்கின்றன
அக்கினி நட்சத்திரங்கள்!
உன் அதர்ம மூச்சடக்க
இதோ நாம்!
ஈமானிய உச்சரிப்புக்களுடன்!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!