About Me

2013/03/08

நீதான்

கண்களால் எனைச்
சீண்டினாய்!

கண்மணியாய் விளித்தே
என் விழியுறக்கமும்
அறுத்தாய்!

கன்னம் வைத்து மனசுள் நுழைந்து
கன்னத்தை நொறுக்கினா யுன்
முத்தச் சத்தங்களால்!

கண் முன்னே யுன்னைப் பரப்பி
நிதமும் - என்
கல்பினுள் நிறைந்தாய்
தனிமை விரட்டி!

எனைக் கவியாக்கி
ரசித்தாய் என்னை
என்னுள் உனை வீழ்த்தி
சிரித்தாய் மெய் மறந்து!

கருத்தினுள் எனை நிறைத்து
கருவும் சுமந்தாய்
அருமையான வுன் சிசுவை!

கற்பனையைப் பிய்த்தெடுத் துன்
வாலிபங்களை ஜாலியாய் முலாமிட்டே
தாலியும் தந்தாய் மனையாளாய்

கனவுகள் மெய்ப்படும் வேளை
மற்றோர் நம்மில் கடுப்பாக
மறுப்பிலும் வெறுப்பிலும்
பெற்றோர் சம்மதம் காதல் பெற்றிட

அடடா

கனக்க கேட்கவில்லை
காரும் பங்களாவும் வேண்டுமென்றாய்
நம் பிள்ளைகள் சொகுசாய் வாழ்ந்திட!

சில பவுண்களும்
சில லட்சங்களும்
வரதட்சணை தந்துவிடு- இப்
பரந்த பூமியில் நம்மவர் பேர்
அடுத்தவர் சொல்லிட வென்றாய்

கோலமிட்டவுன் சீதன ஆசையால்
அலங்கோலமாகின
அழகான நம் காதல்
சில நொடிகள்!

நீயுரைக்க
நானும் முறைக்க
கனவுகள் எனை அறைந்தே சென்றது
"சீ" இவனெல்லாம் ஒரு..................


   - Jancy Caffoor-
         08.03.2013







No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!