About Me

2013/03/08

ஞாபகம் வருதே

என் ஞாபகச் சிறையிலிருந்து
விடுதலை பெறாத தோழா
உன் சரிதத்தின் சில துளிகள்!

துள்ளி நனைந்த வுன் பள்ளிக் குறும்புகள்
இன்னும் இளமையாய்
கண்சிமிட்டுகின்றன அழகாய்!

கற்றல் காலமெல்லாம்
சொற் தேடி நீ அலையாமல்
வெட்டியாய் மதிலேறி - உன்
காலம் கழித்த வில்லத்தனம்
இன்னும் பசுமையாய்!

உன் குறும்பும்
அடுத்தாரைச் சீண்டும் புனைப் பெயரும்
ஆசானின் பிரம்படிச் சோகமும்
விடலைப் பருவ காதல் ஏக்கங்களும்

இன்னும்..இன்னும் நீளமாய்
ஞாபகப் பெட்டகத்தை நிரப்புகின்றன
ரசித்தபடி!

தோல்விக்குள் நீ வீழ்கையில்
கண்ணீர் தொட்ட சோகங்களும்
ஏழ்மையிலும் எழில் குன்றா புன்னகையும்
உன் சொத்தாகி
இன்னும் இன்னும் மனதை ஆள்கின்றது
அழகாய்!

பல பொழுதுகளில் தலைநீட்டும்
பனிப்போர்கள்
பாச நெகிழ்வில் முகம் கண்டு விலக

அடடா
ஒவ்வொரு பௌர்ணமியும்
எழுதிச் செல்கின்றது நம் நட்பை
ரம்மியத்துடன்!

பிரியா வரமென்றே
பெருமிதத்துடன் நானிருக்க
ப்ரியமே!
பிரிந்தே சென்றாய்
விதியின் கோட்டைக்குள்!


- Jancy Caffoor-
    08.03.2013



2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!