About Me

2013/04/30

தொழிலாளி



ஒவ்வொரு நாட்களும்
வியர்வையின் முகவரிக்குள்
தேகம் அடங்கிக் கிடப்பவர்!

வயிற்றோர தசைகளின் வருடல்களில்
மயங்கிக் கிடக்கும் உதரத்திற்கு
மெல்ல மனுக் கொடுத்து பசி விரட்டுபவர்!

இவர்கள்
கனவு வாழ்க்கைக்குக்குள் கூட
ஒதுங்கத் தெரியாத அப்பாவிகள்!

விடியலும் இரவும் மாறி மாறி வரும் உலகில்
இவர்களேனோ
அந்தகரத்துக்குள் வேரூன்றிக் கிடப்பவர்கள்!

தினமும் வாழ்க்கைப் போராட்டத்தில்
வலிகளை மட்டும் பதியமாக்கும்
உற்பத்தியாளார்கள்!

ஒன்றிக் கிடக்கும் உறவுகளின்
நேசங்களிலில் கூட வசந்தங்ளை நெருங்கிடாத
அபாக்கியசாலிகள்!

வாழ்க்கைச் "சீவனத்தில்"
ஜீவனோபாயமாய் வறுமையைத் தேர்வு செய்யும்
தேர்வு நாடிகள்!

உரிமைகள் மறுக்கப்படும் போதுதான்
விலங்குகள் உடைக்கப்படுகின்றன
இவர்களும் வாழ்க்கையை  கற்றுக் கொடுக்கின்றார்கள் பலருக்கு!

இவர்களின்
நாளைய வாழ்க்கை வெறும்
ஏக்கங்களின் சேமிப்பு!

கண்ணீர்கூட காய்ந்து போனதில்
வரண்டு போன திட்டுக் கன்னங்கள்
சரிதம் எழுதுகின்றன எலும்பின் கூட்டணியுடன்!

இவர்கள்
தின உழைப்பில் வாழ்வேங்கும்
சராசரிக் கூலிகள்!

முதலாளித்துவ முடக்கலில்
மூச்சடங்கி
சுகபோகங்களை பறி கொடுக்கும் அப்பாவிகள்!

தேய்ந்து போன கை ரேகைகளில் கூட
உழைப்பைச் சின்னமாக்கும்
கடின உழைப்பாளிகள்!

விண் நட்சத்திரங்களை
வீசி விட்டுச் செல்லும் வானம் கூட
ஒரு கணம் தரித்து கண்ணீர் சிந்துகின்றன

புழுதி படிந்த வாழ்வுக்குள்ளும்
ஓர் நாள்
முழு உலகுமே வாழ்த்தி நிற்கும்!

நாளை
நாமும் வாழ்த்துவோம்
உழைப்பின் உரிமைகளைப் போற்றி!

- Jancy Caffoor-
     30.04.2013

2013/04/29

கணனியும் நானும்



என் மடிக் கணனியில்
சாப்ட்வெயராய் நுழைந்தாய்!

மௌசாய் என் தொப்புள் நாண்
உனை ஸ்பரிசிக்கையில்
மெல்ல எட்டி உதைத்தாய்!

கீபோர்டாகி என் உணர்வுகளை உனக்குள்
பதியமிடுகின்றேன் தினமும்!

என் கருவறை சிஸ்டத்தில் சேமிக்கின்றேன்
உன்னை வைரசுக்கள் தாக்காமலிருக்க

என் கனவு மொனிட்டரில்
உன் முகம் ரசித்தே களித்தேன்!

என் பிரசவ ப்ரிண்டரில் வெளியுலகிற்காய்
உனை அச்சேற்றும் நாள் எப்போது!

- Jancy Caffoor-
     28.04.2013

விதியின் வழியில்


தூக்கம் மறந்த இரவுகளில் இனி
தூளியாய் தரித்திருக்கும் ஏக்கம்!

பசுஞ் சோலைகளில் பாய் விரித்த தென்றல்
வங்கம் தேடி மறைந்திருக்கும்!

ஹிருதயச் சிறகடிப்பில் கிறங்கிய மனம்
சந்தத் துடிப்புக்களை நிறுத்திட விழையும்!

பாலைவெளிகளில் பாகாய் உருகும் நிஜம்
சோலைக் கனவுகளை கரைத்திட்டு மறையும்!

நீயும் நானும் ஈர் சமாந்திரங்களாய்
நீர்த்திரை விழி மறைக்க பயணிப்போம்!

இழப்புக்கள் வசந்தங்களைத் திரையிட
பாழாய்ப் போன விதியைச் சபித்தபடி நான்!

- Jancy Caffoor-
     28.04.2013

என்றோ ஒரு நாள்


என்றோ ஒர் நாள்
உரமொன்று உயிர் வழியாய் நழுவிச் சென்றதில்
தவறுதலாய்
களைகள்
கலை வடிவத்தில் என் தேசத்தில்!

தலையறுக்கும் வெறியோடு - என்
குரல்வளை நசுக்க அவை துடிக்கையில்
மிரட்சியோடு ஓடுகின்றேன்
திக்கேதுமறியாமலே!

முட்களுக்கிடையியே
மென் மலரொன்று அணைத்து நிற்கின்றது
மனசோரம்

"நான் உனக்கிருக்கேன்"

- Jancy Caffoor-
     28.04.2013

வண்ணாத்தி



இரவொன்றில்...........!

சிறகடித்து பறந்து வந்த வண்ணாத்திப்பூச்சியொன்று தவறுதலாய் என்னறைக்குள் நுழைந்தது...

அதன் பரபரப்பில் என் உறக்கம் அறுந்தது. அடித்து விரட்ட ஆவேசம் கொண்டபோதும் , என்னிடம் சிக்காமல் ஜாலியாய் அறையை நோட்டம் விட்டு பறந்து கொண்டே இருந்தது, நானோ அதனுடன் போராடித் தோற்ற நிலையில் களைத்துறங்கினேன் வண்ணாத்திப்பூச்சியை வெளியே விரட்ட முடியாதவளாய்....!

ஆழ்ந்த உறக்கத்தில் வண்ணாத்திப்பூச்சி மறந்தே போக,
எழுகின்றேன் ஏதுமறியாதவளாய் அதிகாலையில்........

கண்ணெதிரே சிறகிரண்டு பிய்ந்து தரையில் சிதறிக் கிடக்க, பதற்றத்துடன் வண்ணாத்தியைத் தேடுகின்றேன்.

நேற்று சபித்த நான், இன்றோ வேதனையுடன் அச்சிற்றுயிரைத் தேடுபவளாய்.......

நச்....நச்....

பல்லியொன்றின் சப்தம் உரப்போடு என்னருகில் கேட்க,

அறைச் சுவற்றை உற்று நோக்குகின்றேன்...

வண்ணாத்தியின் சுதந்திரம், பல்லியின் இரையாகிக் கொண்டிருந்தது..

"எப்போதும் ஆபத்துக்கள் எம்மை நெருங்கிக் கொண்டுதானிருக்கின்றன. தவிர்ப்பதும், சிக்குவதும் நம் மதி, விதி வசப்பட்டது.

ஊஞ்சல்


மன எண்ணங்கள் நிறைவேறும் போது மகிழ்ச்சி தானாய் வரும். ஆனால் நம் கையை விட்டுப் போன பொருள் திரும்ப  எதிர்பாராத நேரத்தில் நம்மை வந்து சேருமாயின் , கிடைக்கும் சந்தோஷத்தை அளவிட வார்த்தைகள் கிடையாது!
---------------------------------------------------------------- 


புகழ்ச்சி என்பது சாத்தானின் வேதம்....
அடுத்தவர் அளவின்றிப் புகழ்ந்தால், கொஞ்சம் அவதானமாக இருங்கள்..

அவர் உங்களிடம் எதையோ எதிர்பார்க்கின்றார்

------------------------------------------------------------- 

சித்திரை முழக்கம்..............
நித்திரை குழப்புது!
யாத்திரை போகும் மழையோ
மாத்திரை யாகுது விழித்திரைக்கு!
மழையோ...மழை!
அதுவும் ஐஸ்கட்டி மழை!
ஹய்யா.....ஒரே குளிரடிக்குது!
------------------------------------------------------------ 



உயிர்மெய்யில் உன் பெயர்........
என் மெய்யில் நீ உயிராய் இருப்பதனால்!
--------------------------------------------------------------------



அழகான இதயம்....
அழுகிப் போகும்...
விழிகள் வீங்கிப் போகும்
பழி சொல்லும் உறவுகள்!!
--------------------------------------------------------------- 


உணர்வுகள் , உள்ளத்தின் குரல்கள்......!
அதுவே குரல்களாக, எழுத்துக்களாக வெளி வருகின்றன. !!

பிறருக்கு பாதிப்பு வராமல் தனி மனிதன் தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் தவறிருப்பதாக எனக்குப் படவில்லை.

அளவோடு பேசுங்கள்....ஆனந்தம் நம்மை விட்டு சிதறிப் போகாது!
கருத்துச் சுதந்திரம் இருப்பதற்காக பண்பற்ற ரீதியில் ஒருவர் செயற்படுபவராக இருந்தால் அவரைக் கண்டிக்கும் முதல் ஆள் நான்தான். அதே நேரம் பிறர் மனதை புண்படுத்தாமல் வெளிப்படுத்தும் கருத்துக்களை ஆதரிக்கும் முதல் ஆளும் நான்தான்......

---------------------------------------------------------- 

Add caption

நாணயத்தின் முன்பு சிலவேளை "நாணயம்" கூட தோற்றுப் போகும்,

புழக்கத்திலுள்ள எமது இலங்கை நாணயம் இது . இதிலும்  தமிழ் உண்டு

----------------------------------------------------------- 


மன்னிப்பு என்பது மேலும் தவறுகள் தொடர்வதற்கான சந்தர்ப்பங்களாகும்.
தவறுகளை தண்டிக்கும் போது, உரியவர் அதனை உணர்தல் வேண்டும். மௌனம் அந்த உணர்தலை புரிய வைக்கும்.
--------------------------------------------------------- 


நாம் தவறவிடும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும்
அடுத்தவர் தமக்குள் பற்றிக் கொள்ளும் அற்புத தருணங்கள்!
----------------------------------------------------------- 

தங்கத்தை உரசி அதன் தரம் அறியலாம்...
மனிதனை , அவன் வார்த்தைகளை 


ஒளியில் விழுந்து கிடக்கின்றேன்
விட்டிலாய்........
விலகிச் செல்கின்றாய் நீ - என்
முறிந்து கிடக்கும் சிறகைக் கூட சீர் செய்யாது!
---------------------------------------------------------- 



வெத்திலை பாக்கு சுண்ணாம்பு
வெளுத்து வாங்கிறார் சின்னப்பு- அட
கொக்கு காத்திருக்கு மீனுக்கு
சொக்கு பொடி போட்டு மயக்கினது யாருக்கு!
--------------------------------------------------------- 


வரையெல்லாம் கடந்து.......
சிறை மீட்பாய் என்றிருந்தேன்...நீயோ
இரையானாய் பிரிவுக்கே- நமை
திரையிட்டு மறைத்ததும் யாதோ!
------------------------------------------------------------ 



சில நேரங்களில் நாம் விடும் சிறு தவறுகள் கூட .......
நீண்டகால நன்மைக்காக நமக்காக உருவாக்கப்பட்ட விளைநிலமாகக் கூட இருக்கலாம்.


- Ms. Jancy Caffoor -


ஏனடா



இப்பொழுதெல்லாம் நீ
உறக்கம் மறந்த இரவுகளை
என்னுள் எழுதிச் செல்கின்றாய்!

என் உணர்வுகளின் அனல்வெப்பத்தில்
நீ தயாரிக்கும் மின்சாரம்............
ஆயிரம் வாற்று ஏக்கமாய்
கசிந்து மருகின்றது!

உன் பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு அணுக்களிலும் நானாய்......
நம்புகின்றேன் உன்னை!
இன்னொரு தடவை இம்சிக்காதே வார்த்தையாகி!

சீனப் பெருஞ்சுவராய்
உயர்ந்திருக்கும் உன் உள்ளத்தில்....
சிறு வெடிப்புக்களை யார் தூவியது
நம்மை யழிக்க!

உன் குழந்தை மனசுக்குள்
நானிருக்கின்றேனா...........
ஊடுருவிப் பார்க்கின்றேன் மெல்ல
நம் குழந்தையாய் மீள நீ என்னுள்!

இதுதான் காதலா....!
பிரிவுக்குள் உறவையும்
உறவுக்குள் ஊடலையும் பிசையும்
அழகிய அவஸ்தையாய்!

2013/04/24

ஸ்வரம்


ஒவ்வொரு ஆணுக்குள்ளும் வெளியே தெரியாத ஒரு குழந்தை மனசு உண்டு. அந்த மனச கண்டுபிடிச்சு, அதை அன்பால் நனைக்கிற பெண், அந்த ஆணையே வெற்றி கொள்கின்றாள்.
--------------------------------------------------------------------------------------------------


குழந்தை ஓர் கண்ணாடியாக இருப்பதனால்தான் பிறர் செய்வதைப் போல் தாமும் செய்ய முயற்சிக்கின்றார்கள்..
அவர்களின் தவறுக்கு தண்டனை வழங்கும் போது, நமக்கு நாமே தண்டிப்பதைப் போன்றது. ஏனெனில் குழந்தை வலியை உணறும் முன்னரே, ஏன் தண்டித்தோம் எனும் வலி நம்மைப் பிறாண்ட ஆரம்பித்து விடுகின்றது.
---------------------------------------------------------------------------------------------------



நம்மைக் கடந்து போகும் வாழ்க்கை, எல்லைகளைக் காட்டும் வெறும் மைல்கல் அல்ல...மீளத் திரும்ப முடியாத அற்புதமான கணங்கள்........
அழகிய தருணங்கள்..!!
------------------------------------------------------------------------------------------------




உலகம்.......நம்மைச் சுமந்து கொண்டிருக்கும் அற்புதமான படைப்பு!
இவ்வுலகின் ஒவ்வொரு நிகழ்வுகள் தொடர்பாகவும் மனிதன் இன்னும் ஆராய்ந்துதான் கொண்டிருக்கின்றான். ஆரம்ப காலத்தில் உலகத்தை 4 யானைகள் தாங்கிக் கொண்டிருப்பதாக, அறிவியல் அறிவு வளராத முன்னோர்கள் தமது கற்பனையைச் சுமந்தார்கள்....

அந்தக் கற்பனையில் உலகம் இப்படித்தான் தாங்கப்பட்டிருக்குமோ!
     ---------------------------------------------------------------------------------------------    


----------------------------------------------------------------------------------
 

பிறரின் உணர்ச்சிகளை உன்னிடம் வெளிப்படுத்த அனுமதி கொடுக்காதே. ஏனெனில் அவர்கள் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த எதுவேண்டுமானாலும் செய்யலாம்.    
-----------------------------------------------------------------------------------------------  

-------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------

நம் கனவுகளை வெளியேற்றி விட்டு
யதார்த்தங்களை உணரச் செய்வதே வாழ்க்கை!






         

2013/04/21

போய் வருகின்றேன்


போய் வருகின்றேன்
சுனாமி கூட சுக அலையாக!

ஆழியின் சுழற்சிக்குள்
அடங்கத் துடிக்குது  தேகம்!

குரல்வளை நனைக்கும் நீர்த்துளிகளால்
சுவாசவோரம் சிதையத் துடிக்குது

இதோ!

இன்னும் சில வினாடிகளில் முற்றாக
இடம்பெயறலாம் ஒட்சிசன் என்னிலிருந்து!

திமிங்கிலம் குதறிய எச்சங்கள்
கரையோரம் வந்து ஒதுங்கலாம்!

சூரிய உதயத்தில் கூட
என்னுருவம் மறைந்தும் போகலாம்!

காத்திருக்கின்றன கடற்பூக்கள் அஞ்சலிக்காய்
பாத்திருக்கின்றன அலைகள் புரட்டியெடுக்க!

வா!
எனக்காக!!

ஒரு துளி உப்பை கடலில் நீயும் சிந்த
காத்திருக்கின்றேன்
பாதி மூச்சையிழுத்து!

- Jancy Caffoor-
     21.04.2013

நவீன காதல்


உறவினர் வருகை கண்டு
பூரித்த மனசு கொஞ்சம்
மறந்ததே அவள் நினைவின்று!

துடித்திருப்பாளோ
அருகிலிருந்தால் கடித்து மிருப்பாளோ

"செல்"லுக்கினி விடுமுறையென்று
சொல்லிக் கொண்டாள் என் மனசோரம்!

அவள் வதை கூட தேன்கூடென்றும்
கள்ளின் மொழியென்றும்
இறுமாற முடியவில்லை

செல்லமென்றவள்
சொல்லிக் கொள்ளாமலே மறைந்து விட்டாள்

பேசா மடந்தை பேசாமலே
வாசமிழக்கச் செய்தாளோ கனவுகளை!

போடீ!

வழியனுப்பி வைத்தேன்
மீள என்னிடம் வராதேயென்று!


- Jancy Caffoor-
     21.04.2013

மனசோரம்



வீசும் காற்றில் விழுந்திருக்கும் இலை
அழவில்லை...........
அழிந்துவிட்டேனென!

உரமாகும் மகிழ்வில்
உரத்துச் சிரிக்கின்றது!

ஒவ்வொரு துன்பத்துக்குள் நன்மையுண்டு. அதை ஏனோ நாம் காலதாமதமாகித்தான் உணர்கின்றோம்!
-------------------------------------------------------- 
எட்டப்பன் கெட்டவன்தான்
கூடிக் கெடுத்தான் தன்னினத்தை!
இருந்தும்.............
கட்டபொம்பன் புகழ் பரப்பும்
சுட்டியும் அவனே!


நம்மை வீழ்த்துவதாய் நினைத்து செயற்படும் எதிரியின் விமர்சனங்கள் கூட நம்மை முன்னேற்றும் துடுப்புக்கள்!

---------------------------------------------------- 
என்னையே எடுத்துச் சென்றாய்
நான் திருப்பிக் கேட்பது உன் னிதயத்தை மட்டுமே!
------------------------------------------------------------------------------------------


ரசிக்கும் மனதிருந்தால்
இயற்கை கூட பேரழுகே!
ரசனை நம் வசமானால்
சோகம் கூட வெறுந் தூசே!
-------------------------------------------------- 


மௌனங்கள் வலிக்கலாம்........
ஆனால்...........
அதன் வலிமையில்தானே
உணர்வுகள் தம் மனதை மீளத் திரும்பிப் பார்க்கின்றன!

வலி கூட அழகான மொழிதான்!
------------------------------------------------------ 


அழகான ரோசாவை
ஆசை கொண்டு பறித்த போது........
விரலோரம் வழிந்தது
பூவின் நிறம் மெல்ல!
முள்ளோ...................
கள்ளமாய் சிரித்தது!

ஆசையும், அழகும் துன்பத்தின் வடிகால்கள். பலருக்கு பட்ட பின்னர்தான் புத்திக்குள் எட்டுது!
------------------------------------------------------ 


மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை!
மாறும் உலகிற்கேற்ப ...............
தன் ஒழுக்க நெறி பிசகாமல் வாழ்வோர்
ஏற்றம் பெறுவார் எந்நாளும்!
------------------------------------------------------ 


தன் குறைகளையெல்லாம் தான் திருத்தார்
பிறர் நிறைகளைத் தானும் அறியார்...........
இவரெல்லாம் நன்மக்கள் எனின்
பாரெல்லாம் தலைகீழாய் சுழலும்!
------------------------------------------------------- 



ஆரயா.........சேட்டை விடுறது!
ஹன்ஸிகாவைக் காணவில்லை!


- Ms. Jancy Caffoor -





2013/04/20

இதோ என் வீடு



இதோ...........

என் வீடு!
வெறும் எலும்புக்கூடாகி...............

என் படுக்கையறையும்
படிப்பறையும்
முட்களின் சேமிப்பாய் உருமாறிக் கிடக்க

சுவற்றில் பதித்த கிறுக்கல்கள்
மழைநீரில் அழுதழிந்து பாசிக் காயங்களாய்
பரிகசித்து வியர்க்க....

வனாந்தரமாகிப் போன - என்
மனையின் கற்குவியலுக்குள்
தடம் பதிக்கின்றேன்

ஐயகோ.............

என் இராஜங்கத்தின் கிரீடங்கள்
கறையான் புற்றுக்களோடு
இம்சித்துக் கிடக்கின்றதே!!

என் கனவுப் புன்னகைகள் எல்லாம்
குருதிப் பிழம்பாகி
சீழ் வடிய.........

என் வீட்டோரக் கற்சிதைவுகள்
கண்ணீரைப் பிழிந்து
பால்யத்தை ஞாபகத்துள் நிரப்புகின்றது!

அம்மா..............
பூக்களின் சுவாசத்தில்
சுவாரஸியமாய் தன்னைக் கரைத்தவர்!

அழகு பார்த்து அழகு பார்த்து
பதியம் வைத்த
சிவப்பு ரோஜாக்கள்........
முற்றத்து மண்ணுக்குள் எச்சமாகியிருக்குமோ!

வீதியோரத்தில் தன் கிளைகளைப் பரப்பி
காற்றுக்குள் வாசம் நுழைத்த - எங்கள்
கறிவேப்பிலை மரங்கள்........
பறிப்பவர் யாருமின்றி ஏக்கத்தில் தன்னை
அழித்திருக்குமோ!

முற்றத்து நிழலாய் தன் முகம் பதித்த
சிறு நெல்லி கூட.......
தன் ஆயுள் குறைத்து ஆழ் துயிலில்!

எங்கள் வீட்டுப்பசுமையின் சுவடுகளிலெல்லாம்
கறைப் படிவுகளாய் சோகங்கள்.............
பெயர்த்தெடுக்க இன்னும் எத்தனை யுகங்கள்!

அம்மா கொஞ்சம் அழட்டுமா...
என் தாய் வீடு சிதைந்த வலியைக்
கரைக்க வேறு வழியின்றி..........

அழுகின்றேன் இன்னும் ஆழமாய்..
என்னுயிர் தன்னிதயம் துறந்து
வலிப்பதாய் உணர்வு........
விழிக் கதவுடைத்து கண்ணீரோ
அழையா விருந்தாளியாய் வெளி நடப்புச் செய்ய!

மீண்டும் அழுகின்றேன்...........
அந்த ஓர் நொடியில்
இவ்வுலகமே இடிந்து என் தலையில்
வீழ்வதாய் பிரமை!

மண் சோறாக்கி மண்குவியல் மட்டும்
இன்னும் மலையாகி குவிந்து.....
எத்தனை பிணங்களின் கல்லறையோ அவை!

குயில்கள் கூத்தாடும்
இளம் வேப்ப மரக் கிளைகள்..........
ஷெல் கண்டு வில்லொடித்திருக்குமோ!

அழுகின்றேன் இன்னும்......
என்னுடன் சேர்ந்து.........
பெற்றவளை வேரறுத்த வலியில்
என் பிறப்பிடமும் கதறுகின்றது...
அந்நியனாய் எனை விட்டு செல்லாதே என.....

எல்லாமே முடிந்து விட்டதா
என் பால்ய நினைவுகளின் பசுமைகள் மட்டும்
என் நினைவுக்குள் பதிவாக......!

எல்லாமே முடிந்து விட்டதா
யுத்தத்தின் எச்சத்தில் எம் வாழ்க்கை நொருங்க
எல்லாமே முடிந்து விட்டதா!

வினாக்கள் மட்டுமே என் வசம்!



2013/04/19

அதுவரை



காதல்................!

அதன் வாசத்தில்

காய்ந்து போன சருகெல்லாம்
புதிதாய் தளிர்க்கும் !

விஷம் கக்கும் கள்ளிப் பாலெல்லாம்
ஓளஷடதமாய்
உயிர் வருடும் மெல்ல!

ஒவ்வொரு அஸ்தமனத்திலும்
சூரிய உதயம்
தன்னை நிலைநாட்டிக் கொள்ளும்!

முட்கள் கூட பேனா முனையாகி
கவி சிந்தும்!

ஆகாய வெளியின் விசாலப் பரப்பில்
நாம் மட்டுமே உலா வருவதாய்
மனசு சொல்லிக் கொள்ளும்!

காதல் இனிமைதான்
எல்லோரும் சொல்வதைப் போல்
கனவுக்குள் அமிழ்ந்து கிடக்க!

வாழ்வை நன்கு உணர்ந்தபின்!
காதல் செய்யலாம்
வசந்தம் நம் வசமாகும்!

அதுவரை காத்திருப்போம்
உனக்கு நானாய்
எனக்கு நீயாய்!

- Jancy Caffoor-
     19.04.2013

வானவில்


தன்னைக் கருக்கி, மெழுகுதிரிக்கு ஒளியூட்டும் தீக்குச்சி!
தீக்குச்சியின் தியாகத்தை நினைத்து கண்ணீர் வடிக்கும் மெழுகுதிரி!

அன்பும் இவ்வாறே..........இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்து நேசத்தைப் பகிரும் போதே, அது ஆயுள் முழுதும் நீள்கின்றது!
-------------------------------------------------------------------------------------------


பயமென்ற ஒரு சொல்லே போதும். இயக்கமுள்ள நம் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வரும்.
----------------------------------------------------------------------------------

சவால்களுடன் நாம் போராடும் போராட்டக்களமே வாழ்க்கை. துணிவு, விவேகம், முயற்சி எனும் ஆயுதங்கள் நம்மை வெற்றி என்னும் பக்கம் தள்ளிச் செல்லும்.
---------------------------------------------------------------------------------------

பூமியைப் பிளந்து செல்லும் வேர்களால்தான் தண்டுகளும் உறுதியாகத் தாங்கப்படுகின்றன. அதனைப் போல் மனதைப் பிளக்கும் கஷ்டங்கள் வந்தால்தான் நம் மனதிலும் வாழ வேண்டுமென வைராக்கியமும் வளர்க்கப்படும். வாழ்க்கையில் நம்பிக்கை கொள்வோம். அவ் வாழ்வையும் வெற்றி கொள்வோம்.
-----------------------------------------------------------------------------------------


சந்தர்ப்பவாதங்களே நம்மைக் குற்றவாளியாக்குகின்றன. அப்பொழுதெழும் விமர்சனங்கள் கூட  நம்மை நோக்கி பிறரைத் திசை திருப்புகின்றன.
-------------------------------------------------------------------------------------------


ரசிக்கும் மனதிருந்தால்
இயற்கை கூட பேரழுகே!
ரசனை  நம் வசமானால்
சோகம் கூட வெறுந் தூசே!

 ------------------------------------------------------------------------------


உணர்வோடு, உயிரோடு
மனதோடு , வாழ்வோடு
என்னோடு, உம்மோடு
உலகத்தின் இயக்கத்தோடு
இரண்டறக் கலக்கும் எம் தமிழுக்கு
என்றும் வீர வணக்கம்!

- Ms. Jancy Caffoor -



நீ காதல் சொன்ன போது

முதன் முதலாய்
உணர்வுக்குள் ஏதோ பிசைவு!

கண்களை இறுக்கிக் கொள்கின்றேன்
காதோர ஒலியதிர்வுகள் மெலிதாய்
சிணுங்குகின்றன உன் பெயர் சொல்லி!

இருண்ட கானகத்திலிருந்து ஓர்
ஒளிப்பிழம்பாய்
நீ என்னை ஊடுறுவுகின்றாய்
பட்டாம் பூச்சியாய் சிறகடித்து!

நீ எனக்குத்தான்............
உள்ளுணர்வுகள் சேமிக்கப்படுகின்றன
மனதுக்குள் ரகஸியமாய்

எனக்காக வாழ்ந்த நான்
முதன் முதலாய் உனக்காய் வாழ்வதாய்
உணர்கின்றேன் தனிமை துறந்து!

உறக்கமும் பசியும் துக்கமும்
துறந்து போக...........
பறக்கின்றேன் சிறகடித்து உன்னுடன்
வரம் நீயான சந்தோஷிப்பில்!

உன்னிழல் பற்றும் நிஜங்களுடன்
ஊர்கோலம் போகும் நம் நினைவுகள்
வர்ணக் கலவையாய் - நம்
வாலிபத்தின் சுவரேறி குந்தியிருக்கின்றன!

ஒருவரை ஒருவர் அறியாது
இத்தனைநாள் எங்கிருந்தோம்.......
வினாக்கள் நெஞ்சுக்குள் முகிழ்க்கும் போது
உன்னிடம் என் உதடுகள் குவிகின்றன!

உன் அழகுப் பார்வையில் எனை மேய்ந்து
இறுக்கி அணைக்கின்றாய்.......
இனி பேசுவது நாமல்ல...
நம் உணர்வுகளும் உதடுகளும் தான்!

காதலைச் சிதறியவாறு
திரும்பிப் பார்க்கின்றாய் என்னுள் மின் பாய்ச்சி!





2013/04/17

மருந்து



நள்ளிரவின் நிசப்தத்தில் என் அறைக் கதவு பலமாக தட்டப்படுகின்றது. அப்பாதான் பெயர் சொல்லி அழைத்தார். வெளியே வந்த போது அவரது கைகளால் மார்பினைப் பொத்தியவாறு வலியால் துடித்துக் கொண்டிருந்தார். 

"நெஞ்சுக் குத்துது மக........ரெண்டாவது அட்டாக் வந்திட்டுது போல"

அவர் சிரமப்பட்டு சொன்னபோது, என் மனமும் இற்று துடிக்கத் தொடங்கியது. 

"உங்களுக்கு ஒன்னும் ஆகாதுப்பா"

அப்பாவைத் தைரியப்படுத்தினாலும் கூட, மனசு அப்பாக்கு ஏதும் நடந்திடுமோ என்று பயந்தது..

அந்த நடுநிசி நேரத்தில் எங்கள் வீட்டில் மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, கொடுக்க வேண்டிய மருந்துப் பக்கெற்றுக்களை துலாவுகின்றேன்.. 

அப்பா தொடர்ச்சியாக மருந்து பாவிப்பதில்லை என்பதால், மருந்துகள் தீர்ந்திருந்த விடயம் கூட தெரிந்திருக்கவில்லை. வருத்தம் வந்தால் எப்போதாவது பாவிப்பார்.  எப்படியோ தேடி கண்டுபிடித்து இரண்டு அஸ்பிரின் சார் மருந்து வில்லைகளை குடிக்கச் செய்தேன். அப்பா நாளைக்கு வாங்கித் தாரேம்பா "

என் உறுதி மொழியில் அப்பாவும் சற்று வேதனை துறந்து சிரமப்பட்டு தூங்கிய போது கண்கள் பனித்தது. 

"பிரிந்திருப்பதை விட பிரியப் போகின்றோம் என நினைக்கும் போது அதன் வலி அதிகம்."

நாளை கட்டாயம் அப்பாக்கு பாமஸில மருந்து எடுத்துக் கொடுக்கணும். மனசு பல தடவை மனப்பாடம் செய்ய உறங்கிப் போனேன்......

அதன் பின்னர் விரட்டி வந்த இரண்டு நாட்களும் மன அழுத்தங்களுடன் இறங்கிப் போனது. அந்த விடயத்தை மறந்தே போனேன்...

"மக மருந்து வாங்கினீங்களா"

அப்பா கேட்ட போது மனசுக்கு யாரோ சம்மட்டியால் அடித்த வலி...

"சொறிப்பா.........மறந்திட்டன், நாளைக்கு வாங்கித் தாரேன்"

நான் பதிலளித்த போது அப்பா எதுவுமே பேச வில்லை...

அந்த மௌனம் என் வலியை இன்னும் அதிகரிக்கச் செய்தது. இரண்டு ஏச்சு ஏசியிருந்தாலும் கூட அந்தக் கணத்துடன் கோபம் கரைந்திருக்கும் இப்படி மனசு வலித்திருக்காது...

அப்பா சாறீப்பா...........மனசு மீண்டும் எனக்குள் பல தடவைகள் மன்றாடியது.

அப்பா அந்த மௌனிப்புக்களுடனேயே உறங்கிப் போனார்...

நானோ குற்ற உணர்ச்சியில் உறக்கத்தை தொலைத்தவளாக அழ ஆரம்பித்து விட்டேன்..

"அப்பா........என்னை மன்னிச்சுடுங்கப்பா"

விடிந்ததும் அப்பாக்கான மருந்துகள் கைகளில்!

2013/04/16

உன்னால்


ஒளி தேடி மதியிழந்து சிறகறுக்கும்
விட்டிலாய்
வீழ்ந்து போகின்றது என் வாழ்க்கை
உன்னால்!

மனப் பஞ்சுக் குவியலுக்குள்
மடிந்து கிடக்கும் கனவுகளை உரச
உன் வார்த்தையெனும்
சிறு குச்சி போதும்!

வாலிபத்தில் வில்லொடித்து
கடி மணம் புரிந்த உனக்கு
கலிகால சூழ்ச்சிகளைக் கற்றுத் தர
கால அவகாசம் தேவையில்லை!

சிதைக்கப்பட்ட என்னிலிருந்து
சீழும் இரத்தமாய் ஏதோ வடிகிறது
யார் யாரோ தடம் பதித்து நாடியளக்கின்றனர்
நான் அழவேயில்லை
உன்னிலிருந்து விடுதலை தந்தவன்
நீதானே!

உணர்வறுந்த கனவோரம்
மயானவெளியில் நாட்டப்படுகையில்
அயர்ந்த கண்கள் விரிகின்றன
விழித் துவாரத்திலிருந்து வீச்சோடு கண்ணீர்
சிறுதுளியாய்!
இது ஆனந்தக் கண்ணீரோ!

எத்தனை தடவைகள்
உன்னால் நான் புதைக்கப்பட்டாலும்
எழுவேன் விதைகளாய்
அழிவு எனக்கில்லை!

- Jancy Caffoor-
     16.04.2013

2013/04/15

பப்பி


இரவின் நொடிப் பொழுதுகள்
இவன் மேனியில் பனி தூவிக் கிடக்கும்!

விழி திறந்து செவி தொடுப்பான்
பிறர் பேச்சொலி தன்னுள் ஏந்த!

நன்றிக்கும் இலக்கணமாய்
அன்புக்கும் வரைவிலக்கணமாய்

வந்துதித்தான் - எம்
வாயிற் படலை காக்கும் சின்னப் பப்பி!

கூலியேதும் கேட்பதில்லை - வீட்டு
வேலியோரம் பிறர் நிழல் தீண்ட விடுவதில்லை!

கடமை காக்கும் நன் வீரன் - தன்
உடமையாய் நன்றியையும் பிணைந்தே வாழ்ந்தான்!

பஞ்சு மேனியில் பாசம் நனைத்து
கொஞ்சி தன் வாலால் கால் நனைக்கையில்

அஞ்சிடாத வீரன் தானென்றே
பறை சாட்டிக் கிடந்திடும் பப்பியிவன்!


- Jancy Caffoor-
     15.04.2013