About Me

2013/04/12

தவறுகள் உணரப்படும் போது



ஞாயிற்றுக்கிழமை பொதுவாக எல்லோருக்கும் விடுமுறைதான்...

ஆனால் அனுஜாவுக்கு............

மனசின் வலிப்புடன் உடலும் லேசாய் அலுத்தது. வீட்டுவேலை எல்லாம் அவள் தலையில் மலை போல குவிந்து கிடந்தது. முன் ஹாலில் அன்றைய வாரப் பத்திரிகையை சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து மனது கொதித்தது.

"சே..........இன்னைக்கு ஒரு நாளாவது கொஞ்சம் உதவி செய்யலாம்தானே, நேரத்துக்கு தின்ன மட்டும் வாங்க"

புறுபுறுத்தாள் அனுஜா....

"அநு .................என்ன ஏதோ பேசுற மாதிரி இருக்கு, எனக்கா"

கணவன் கேட்ட போது ஆத்திரத்தில் உதடு துடித்தது. உண்மையை சொல்லப் போக, அவனும் கொஞ்சம் கோபக்காரன் கையை நீட்டினானென்றால், அப்புறம் அக்கம்பக்க மனுஷங்க கிட்ட இந்த வீட்டு மானம் கப்பலேறி போய் விடும்" மௌனம் காத்தாள்.

"அநு" நான் கேட்டதற்கு பதில் இன்னும் வரல............"

அவனும் விடுவதாக இல்லை.

"இவரு பெரிய்ய்ய்ய ஜட்ஜ்.....தீர்ப்புச் சொல்லப் போறாராம்..." 

மீண்டும் முணுமுணுத்தாள்........

"என்னோட தலைவிதிய நெனைச்சு பொழம்புற, உங்கள காதலிச்சு கல்யாணம் முடிச்சதற்குப் பதிலாய விறகுக் கட்டைய முடிச்சிருக்கலாம். கறி சமைக்கவாவது உதவும்"

மனசு கண்ணீருடன் கரைந்திருக்கும் நேரம், வீட்டின் ஹாலிங் பெல் அடித்த போது, கணவன் வெளியே எட்டிப் பார்த்து, உற்சாகமாகக் கூவினான்..

"வாவ்.......மச்சான், என்னடா இந்தப் பக்கம், அநு.அநு......இன்னைக்கு மச்சானுக்கு நம்ம வீட்டிலதான் சாப்பாடு"

நண்பனின் மீதுள்ள பாசம் கட்டளையாக இறுக்க, திணறிப் போனாள். 

"தனியொருத்தியாக வீட்டுவேலை செய்ய முடியாம புலம்பிக் கொண்டு இருக்கிறன், அதுக்குள்ள விருந்தோம்பல்"

எரிச்சல் ஆத்திரமாக மாற, அது அவள் செய்யும் வேலைகளில் பட்டுத் தெறித்தது. சமையல் பாத்திரங்கள் ஓசை எழுப்பின.

"மச்சான், உன் பொண்டாட்டி ரொம்ப சூடா இருக்கிறாள் போல, கொஞ்சம் ஹெல்ப் பண்ணிக் குடுக்கலாம்ல"

நண்பன் ஆதங்கப்பட்ட போது, மெல்லிய சுவாசத்துடன் அவள் கணவன் மறுதலித்தான் .

" அட....போடா....நீ ஒன்னு .....இந்த வீட்டு வேலைங்க எல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம்..அப்புறம் நம்ம கணக்கெடுக்க மாட்டாள்களடா...நான் அவளுக்கு இன்னைக்கு பாவம் பார்த்து ஹெல்ப் பண்ணப் போனால், டெய்லி எனக்கு ஏதாவது வேல வைப்பாள்டா....படிச்ச பொண்டாட்டின்னா கொழுப்பு ஜாஸ்திடா....நீ கல்யாணம் முடிச்ச பொறகு விளங்கும் பொண்ணாட்டின்னா எப்படியிருப்பான்னு"

அவன் சொல்லி முடிப்பதற்குள் மகள் சிந்துஜா அழும் சப்தம், அக் ஹோலை நிறைத்தது.

"அநு............ஏன் கொழந்தய அடிக்கிறே" சற்று குரலை இறுக்கினான்..

"உங்க மாதிரித்தான் உங்க பொண்ணும், இங்க வந்து பாருங்க, அடுக்கி வைச்ச எல்லாச் சாமான்களையும் இழுத்து கீழ போட்டு அசிங்கப்படுத்துறாள்"

கணவன் மீதுள்ள ஆத்திரத்தை தனது ஆறு வயது மகளிடம் அனுஜா காட்ட, மகளின் அழுகைச் சத்தம் வீதி வரை பரவியது.............

அவர்களது குடும்ப விவகாரம் உச்சக் கட்டமடையும் நிலையில், நண்பனோ நாசூக்காக வெளியேறினான்...

"சொறீடா மச்சான், நான் வந்த நேரம் சரியில்லைன்னு நெனைக்கிறன். இன்னுமொரு நாளைக்கு வாரேன்டா"

வெளியேறினான்..

அப்பொழுதும் அனுஜாவின் ஆத்திரம் அடங்கவில்லை. கைகள் பலமடைந்ததைப் போன்ற உணர்வில், மகளின் முதுகில் கைவிரல்கள் வேகமாகப் பதியத் தொடங்கின.

"அம்மா......................"

குழந்தை விடாமல் உரத்து அழுதாள் ........................கதறினாள்...

மகள் மீதுள்ள அன்பும், நண்பனின் வெளியேற்றமும் மனைவி மீது கோபத்தை தாராளமாக இறைக்க, விருட்டென்று உள் நுழைந்து அனுஜாவின் கன்னத்தில் பலமான அறைகளை இறக்கினான்

"இது வீடா.....இல்ல சுடுகாடா......எப்ப பார்த்தாலும் புலம்பல்"

அவன் மேலும் அவளை அடிக்க முனைந்த போது மகள் தடுத்தவாறே கதறினாள்...

"அப்பா.....வேணாம்பா.....அம்மாவ அடிக்காதீங்கப்பா.........அம்மா பாவம்"

தன் வேதனை, வலியை விட பெத்தவள் துன்பப்படுவாளென்று கதறும் தன் மகளை மார்போடணைத்தவாறு அனுஜா கண்ணீர் சிந்தினாள்...

"சொறீடா...செல்லம், அம்மா இனி உன்னை அடிக்க மாட்டன்"

தன் குழந்தையை ஆரத் தழுவி முத்தமிட்டு அணைத்த அனுஜா நிமிர்ந்த போது கணவன் எதிரே நின்றான். அவசரமாய் அவன் மீது குத்திட்டு நின்ற தனது பார்வையை வேறு திசையை நோக்கி நகர்த்த முற்பட்ட போதும்,

அவன் பாய்ந்து வந்து அனுஜாவையும், மகளையும் ஆரத் தழுவினான்......

"சொறீடி செல்லம், நானும் உனக்கு அவசரப்பட்டு அடித்திருக்கக் கூடாது"

அவனது குரலும் தழுதழுத்தது. மகளறியாமல் மனைவியின் கன்னத்தை தனது முத்தத்தை இரகஸியமாகப் பதிக்கத் தொடங்கினான் அவன்..

(குடும்பம் என்றால் இப்படித்தாங்க......அடிச்சுக்குவாங்க, அப்புறம் கட்டிப் பிடிச்சுக்குவாங்க...என்ன நான் சொல்லுறது சரிதானே........கோபம் வாறது தப்பில்லீங்க, கோபம் வந்தாத்தான் அவன் மனுஷன். ஆனா அந்த கோபம் குறைஞ்ச பிறகு தன் தவற உணராம இருக்கிறாங்க பாருங்க அதுதான் தவறு)

2 comments:

  1. அருமை...

    உணர வேண்டிய தவறு... அடிக்கடி என்றால் தவறல்ல... தப்பு...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!