About Me

2013/05/22

மரணத்திலாவது


அன்பு தேடியலைந்தேன்
பாசம் தொலைத்த வெற்றுடல்களில்
சுயநலங்கள் சால்வை போர்த்திக்கிடந்தன!

நானும் விடுவதாயில்லை
என் யாக்கைக்குள் சிறு பருக்கையாவது
அன்பு கிடைக்காமலா  போகும்!

நடந்தேன் தொலைநோக்கி நடந்தேன்
தூரத்தே சிறு சமிக்ஞை
கரங்கள் அசைந்து அழைத்தன என்னை!

அன்பு கிடைத்ததென்ற போதையில்
கற்களும் முற்களும் கால்களைப் பதம் பார்க்க
புதுப் பிறவியெடுத்தோடுகின்றேன் அங்கே!

அங்கே..................

புகைந்து கொண்டிருக்கின்றன மனித உடல்கள்!
மயானத்தின் சமாதிகளுக்கிடையே ஆத்மாக்கள்
அழைத்துக் கொண்டிருந்தன என்னை!

மெல்ல புன்னகைத்தேன்
தேடியலைந்த அன்பு கிடைத்த மமதையில்!

மெல்ல மெல்ல கண்கள் சொருகுகின்றன
அட
நானும்  மரணிக்கின்றேனா!

என்னைச் சூழ்ந்திருப்போர் கதறும் ஓசை
காற்றினில் இழைந்து கரைய!
அட அன்பு கிடைத்துவிட்டது
மரணத்திலாவது!!


- Jancy Caffoor-
     22.05.2013




அவன்




இன்று விஞ்ஞானப் பாடம் கற்பிப்பதற்காக வகுப்பினுள் நுழைகின்றேன். வழமைபோல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மாணவர் கூட்டங்கள் என் தலையைக் கண்டால்தான் சற்று அடங்கிக்கிடப்பார்கள்........

அவன்...................

வகுப்பில் குழப்படியான மாணவன்...

ஆனால் ..........

ஏனோ என்னிடம் அடங்கி நிற்பான். நான் வகுப்பிற்குள் போகும்வரை வாசலில் காத்து நிற்பான். அல்லது என்னைத் தேடி நானிருக்கும் இடத்திற்கே வந்துவிடுவான்...

இன்றும் மூலகங்கள் பற்றியும் சோடியம் பற்றியும் கற்பித்துக் கொண்டிருந்தேன். எல்லோரின் கவனமும் பாடத்தில் ஒட்டிக் கிடக்க, அவன் மட்டும் அழுது கொண்டிருந்தான். நானோ பாடத்தை கற்பித்து முடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில், அவனைக் கவனிக்காமலே மற்றவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அவன் மேசையில் தலைசாய்த்திருந்தான்....

பாடம் நிறைவுற்று மணி அடித்தபோது, நானும் வகுப்பை விட்டு வெளியேறி சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தேன்............

"மிஸ்....மிஸ்"

யாரோ ஓடியவாறு வருவதை உணர்ந்து திரும்பினேன். அழுது கொண்டிருந்த மாணவன்தான் நின்று கொண்டிருந்தான்.

"போறீங்களா மிஸ்"...அவன் கேட்டபோது என் நடையும் நின்றது.

"ம்ம்........." நான்

"ஏன்டா அழுதே. விடாமல் தொடர்ந்து கேட்டேன்!......

அவனோ சில நிமிடம் மௌனித்த பிறகு மெதுவாகப் பேசத் தொடங்கினான்....

"போன வருஷம், இதே நாள் என் தம்பி செத்திட்டான் மிஸ், அவன நெனைச்சேன்...அதுதான்"

மீண்டும் அவனுக்குள் கண்ணீர் கருக்கட்ட ஆரம்பித்தபோது, எனக்குள்ளும் மனசு லேசாய் கலங்கத் தொடங்கியது! அவன் பாசத்தை எப்படி சமாதானப்படுத்துவது.......

இழப்புக்கள் வரும்போதுதான் அதன் அருமை புரியும்!

ஏனெனில்

"ஞாபகங்கள்......மறதிக்குள் ஒருபோதும் வீழ்வதில்லை"

நிழல்கள்

கனவில் லயித்திருக்கும் பல்லாயிரம் நிமிடங்களை விட ,
யதார்த்தத்தில் உறைந்திருக்கும் ஒரு சில நிமிடங்களே நம்மை உணர வைக்கும் தருணங்கள்!
--------------------------------------------------------------------------------------


ஆயிரம் விண்மீன்களை உன் கண்களில் கண்டேன்
நீ குறும்புகளால் எனைச் சிறைப்படுத்திய போது!
ஆயிரம் வாற்று மின்னும் உற்பத்தியானது
நீ கரும்பாகி என் வசமான போது!

--------------------------------------------------------------------------------------


நேசித்தல் மட்டுமல்ல நட்பு - நம்
வாழ்நாள் முழுவதும்
அவ் அன்பைப் பாதுகாக்கும் அறமே
அதன் சிறப்பு!
--------------------------------------------------------------------------------------


ஓய்வென்பது மன அழுத்தங்களைக்
குறைக்கும்  அரு மருந்து!
இயற்கையில் இதயம் நனைத்து ஓய்வெடுங்கள்
அயர்ச்சியுறும் மனதில் பசுமை படரும்!



- Ms. Jancy Caffoor -


உன்னை நினைந்து



உன்னை நினைக்கும்போது
எனக்குள் கவலை வருகின்றது!
உன் மனதை வாட்டிச் செல்லும்
என்னைக் கடிந்து!

ஆயிரம் பூத்தூவி காத்திருக்கும்
நட்சத்திரங்கள் மொய்த்திருக்கும் வேளையில்......

வெட்கம் தூவி மேனி நனையும்
உன் நேசத்தின் பூரிப்புக்குள் நம் ஞாபகமாய்  விழும்போது
மனசேனோ ...........
மாலையில் சுருங்கும் மலராய்
வீழ்ந்துதான் போகின்றது குற்றுயிராய்!

துக்கம் மூச்சோரம் இளைப்பாறி
துவட்டிச் செல்கின்றது என் நினைவுகளை ஆழமாய்!

2013/05/21

எனக்குள் தாயாகி



உன்னை இழக்கும் போதுதான் வலிக்கின்றது
கண்கள் சாட்சியாய் உன் முன்னால்!

சட்டத்திற்கு தெரிவதில்லை மனசு - உன்
இஷ்டத்திற்கு வீசிச் செல்லும் பட்டாசாய்
சுடும் வார்த்தைகள்!

வேதங்கள் சொல்லும் சத்தியங்கள்
உனக்குள்ளும் உண்டு ஆழமாய்!

எரி புழுக்களாய் மேனியூர்ந்து
பறந்து திரியும் அழகான வண்ணத்துப் பூச்சியாய்
உன் காதல்!

தினமும் அமிலமூற்றும் உன் பார்வையும்
காதலும்
வலிக்கின்றது வாழ்க்கையைப் பிசைந்து!

எனக்குள் பூ போர்த்துமுன் மனசும்
அன்பும்
வம்பு பண்ணுமுன் காதலும்!

 கிள்ளிச் செல்கின்றதென்னை
கள்ளமாய் ரசிக்கும் உன் கைகளால்
ஸ்பரித்தவாறு!

எனக்குள் தாயாகி
என்னைக் காக்கும் அன்பே

உன் குண்டுக் கன்னத்தில் சிரிப்பை நசித்து
பாசச் சாறூற்று எனக்குள்!


- Jancy Caffoor-
      21.05.2013

மறைந்து கொள்


உன் குரலென்னைத் தொடுகின்ற
பொழுதெல்லாம்
என் விடியல்களுக்குள்ளும் இசை பிறக்கின்றது
கேட்டுப்பார்!

சந்தனம் பூசி பந்தியிலமரும் தென்றல் கூட
வந்தனம் செய்கின்றது நம் மன்பிற்கே!
கேட்டுப்பார்!

அன்பின் மஞ்சத்தில் அழகான பட்டாம்பூச்சியாய்
நம் மனங்கள்
சிறகடிக்கின்றது தினமும்!

வா!

உதடுகளைத் தாளிட்டு காத்திருக்கும் நாணத்திடம்
மெல்லக் கேட்போம் அனுமதி
ஒரு நிமிடம் திரையிட்டு மறைந்து கொள் என்று!

- Jancy Caffoor-
      21.05.2013

பொய்த்துப் போன வாழ்க்கை



வாழ்க்கையில் மிகக் கொடுமையான விடயம் வறுமை. சென்ற வாரம் அண்மையூரில் (வவுனியா) நடைபெற்ற விடயமொன்று இன்னும் எனக்குள் உழல்கின்றது.........

அவள்.......

இளந்தாய்......

மூன்று பிள்ளைகளின் தாய்......

இளமையில் ஏற்படும் வறுமை கொடுமையென்பதற்கு மேலாக அவள் வாழ்க்கையும் அந்த வறுமையால் சிதைந்தது. சுயநலக்கார கணவன், வெறும் சுகநலன்களுக்காக அவளைக் கைவிட்டு வேறு பெண் பின்னால் போய் குடும்பம் நடத்த அவளும் அவளது குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். பத்துப் பாத்திரம் தேய்த்தும் உழைக்க முடியாத சூழ்நிலையில் அவள். காரணம் மூன்று பிள்ளைகளும் பச்சிளம் பாலகர்கள்...........

பலரிடம் கையேந்தி வாழும் இந்த வாழ்க்கை வெறுத்துப் போக அவள் எடுத்த முடிவு..........

தற்கொலை!

தன் வீட்டு ஆழ் கிணற்றில் ஒவ்வொரு குழந்தையாக வீசினாள் அந்த இதயமற்ற பெண். பச்சிளங் குழந்தைகள் மூவரும் துடிதுடித்து  இறந்ததை அந்தத் தாயவள் எப்படித்தான் சகித்தாளோ.......

இனி தனது நேரம்..............

தானும் கிணற்றினுள் பாய்ந்தாள்.. ஆனால் உயிர் பறிபோகும் கடைசி நிமிடத்தில் உயிர் வாழ ஆசைப்பட்டு அருகில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து காயங்களுடன் அப்பெண் உயிர் தப்பினாள்............

கணவன் மனைவிக்கிடையிலான கோபத்தின் உச்சநிலையில் பறிபோனது 3 பிஞ்சுக் குழந்தைகள்தான்!

அந்தப் பெண் இப்போது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். மனநிலை பாதிக்கப்பட்டவள் எனும் முத்திரையுடன்!

3 கொலைகளை செய்து விட்டு அப்பெண்ணால் உயிர் வாழ முடியுமா என்ன...............?

அவள் உலகம் இனி சிறைக்கம்பிகள்தான் என அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கும் அப் பெண்ணின் அவசரமும் , கோபமும் எல்லோருக்கும் ஒரு பாடம்!

2013/05/20

தடையில்லையினி


யாரறுத்தார் நம் சிறகுகளை
உயிரறுந்து கிடக்கின்றது - நம்
பட்டம்பூச்சி!

இரவின் வெம்மையில்
உஷ்ணம் சொறிந்த உன் வெண்ணிலா கூட
சாம்பராகிக் கிடக்கின்றதென் மெத்தையில்!

உனக்கான என் கவிதைகள் கூட
இப்பொழுதெல்லாம்
கல்லறைக்குள் தனித்து முணுமுணுக்கின்றது!

நேற்று
கற்றுத் தந்தேன் காதலை
இன்று நீயோ
இன்னொருத்தியின் உணர்வாய்!

உன் மாற்றம்
எனக்குள் ஏமாற்றம்!
உயிர் வதைக்கும் தடுமாற்றம்!

விடை பெறுகின்றேன்
மடையுடைக்கும் கண்ணீர்த்துளிகளுடன் !
தடையில்லையினி உனக்கு நான்!

அன்பும் பொய்த்தது
ஆசைக் கனவுகள் உடைந்தும் போனது!
இன்னலை என் ஜன்னல் கன்னம் வைக்க
இன்னொருத்தியின் வாசமாய் நீ!

- Jancy Caffoor-
      20.05.2013

தாயே



தாயே..........!
உங்களுக்கு சூரியன் கீழிறங்கி
குடை பிடிக்கும்!

சந்திரன் சத்தமிட்டு வாழ்த்துமுங்களை
உங்கள் வார்த்தையில் ஒட்டிக் கிடக்கும்
தன் குளிர்மையை ஏந்திக் கிடப்பதற்காய்!

மலர்கள் சரம் தொடுத்து
கரமசைக்கும் உங்களைக் கண்டு!
தம் மேனி மென்மையை
உங்கள் மனதினில் கொஞ்சம் ரசித்து!

தாயே!
தலை சாய்கின்றேன் நாணலாய்
என்றும் உங்கள் அன்புக்கு!

- Jancy Caffoor-
      20.05.2013

2013/05/15

வர்ணம்



உன் அன்பு எப்பொழுதும் என் மனசோரம்.....
அதுவோ எந்நாளும் எனக்குக் கிடைத்த வரம்!
------------------------------------------------------------ 



நம்மை அறிபவன் நல்ல நண்பன்.....
நம்மை வழி நடத்துபவன் சிறந்த நண்பன்!
------------------------------------------------------- 


நம்மைச் சூழவுள்ளோரின் குணத்தை மாற்ற முடியாது. ஏனெனில் ஒருவர் குணத்தை அவரது பிறப்பும், சூழ்நிலையுமே தீர்மானிக்கின்றது. ஆனால் நம்மைச் சுற்றியுள்ளோரில் நல்ல நண்பர்களை மாத்திரம் நாம் தேர்ந்தெடுக்க முடியும். தெரிவு என்பது நம் மனதைச் சார்ந்தது.

---------------------------------------------------------- 


புன்னகை ஒன்றே போதும்.......
அன்பை அழகாக வெளிப்படுத்தி விடும்!
அன்பினை ஆழ்வோர் எந்நாளும் சிருஷ்டித்துக் கொள்கின்றனர் அழகான உதயத்தை தம் வாழ்வில்!
----------------------------------------------------------------- 



வீழ்த்தப்படும்போது தோற்றுத்தான் போகின்றேன்...
மீள எழும்பும்போது ............
வலியுடன் வெற்றிக்கான வழியும் என் பாதையாய்!
-------------------------------------------------------- 



அக்கினிக்குள் வெந்து போகலாம் உடல்
அவனி விட்டு கருகிடுமோ உணர்வுகள்!
சாம்பர் மேட்டில் விதைக்கப்படும் உயிர்கள்
சரித்திரத்தின் கதையாகி சாகாவரம் பெற்றவை!
-------------------------------------------------- 


கொட்டிக் கிடக்கும் பனித்துளிக்குள்
பத்திரமாய் நீ!
உலராத உன் நினைவுகள் - எனக்கென்றும்
ஈரலிப்பே!
------------------------------------------------------ 


விண் பிளந்து மண் தொடும் வேர்கள்
----------------------------------------------------------- 



சில மௌனங்கள்
மூச்சுக்காற்றை சுருக்கிடும் கயிறுகள்!

புரிதலும் பிரிதலும்
அன்பின் யாசகங்கள் ஆனதில்.........
கண்ணீருறிஞ்சும் கைக்குட்டையாய் நீ
------------------------------------------------------- 


நம் விழிகள் நான்கும் சந்திக்கையில்
உதடுகள் உச்சரிக்கும் கவிதை "முத்தம்"

சத்தங்கள் சந்தமாகும் போது
மனங்களில் மகிழ்வூறி.........

இசையொன்று ஓசையெழுப்பும் அன்பை
ஆழ் நினைவுக்குள்  நகர்த்தி!


- Ms. Jancy Caffoor -

2013/05/07

மருதம்


மனைவி. -ஏங்க பேயடிச்ச மாதிரி பேப்பர உதறி கீழே போடப் பார்க்கிறீங்க ..
கணவன் - அடீயே.........பேப்பர்ல இருக்கிற நியூஸ் சுடுதப்பா
------------------------------------------------------------ 


நாம் பணத்தை வீணாகச் செலவளிக்கும் போதுதான்
அப்பணத்தை உழைப்பதற்காக தொழிலாளி சிந்தும் வியர்வைத்துளிகளெல்லாம்  .........
நம் கண்ணீர்த்துளிகளாக மாற்றப்படுகின்றது!
----------------------------------------------------------- 


நம் எல்லோருக்குள்ளும் குழந்தை மனசும் அன்பும் மென்மையும் உண்டு. அதனைக் குழப்புவதுதான் நமக்குள் முகங் காட்டும்
பகைமை............!

பகைமையானது............
முரண்படும் உள்ளங்களுக்கிடையில் போடப்படும்
முள்வேலி!

மனித முகங்கள் யாவும் ஒரே அடிப்படையில் படைக்கப்பட்டிருக்கும் போது, உணர்வுகளில் மட்டும் பன்னிறங்கள்!!

இன்று தொழிலாளர்கள் உணர்வுகள் மதிக்கப்பட்டு உரிமைகள் அங்கீகரிக்கப்பட்ட நாள், நாமும் கடந்து போன கசப்புக்களை மறந்து புது உதயங்களுக்குள் நம்மை இணைப்போமாக!

சொற்ப கால வாழ்வெல்லைக்குள்
எதற்கு பேதங்களும் பகைமைகளும்!!
ஒற்றுமையே பலம்
வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பீர்!!

----------------------------------------------------------- 

பஞ்சணை மேனியும்
கொஞ்சல் பார்வையும்
மிஞ்சிவிடும் அழகும் - ஆஹா என்
நெஞ்சத்தை கொள்ளை கொள்ளுதே!
------------------------------------------------------------ 


வாகனமோட்டுவதென்பது ஓர் கலை!
முறையான பயிற்சியும் கவனமும் இல்லாமல் செயற்படுவோர் தம் வாழ்வு முழுதும் வருந்த வேண்டியிருக்கும்!

நிதானமாக வாகனமோட்டுவீர்............
இல்லாவிடில் ....
தானமாகும் உயிர் மரணத்திற்கே!
--------------------------------------------------------- 


தான் இரையாவது புரியாமல்
தனக்கே இரை தேடும் ஐந்தறிவுகள்!
----------------------------------------------------------- 


இழப்புக்கள் கண்டு வருந்தும் உள்ளங்கள் - நம்
வாழ்வைப் பின்தொடரும் அழகான உறவுகள்!
-------------------------------------------------------------- 


மாமோய்......மாமோய்......மாமோய்.......
ஆமா ஆமா ஆமா!!

நம் மனசுக்குள்ள சிறகிருக்கு
கண்ணுக்குள்ள அன்பு இருக்கு
தொட்டுக் கொள்ள நினைவிருக்கு
சின்ன மாமோய்...!

நீ பக்கம் வந்தால் வெட்கம் வரும்
தங்க நிறம் கன்னம் தொடும்
தரணியெல்லாம் மயங்கி நிற்கும்
சின்ன மாமோய்!

மாமோய்......மாமோய்......மாமோய்.......
ஆமா ஆமா ஆமா!!
------------------------------------------------------------- 


எதிர்பார்ப்புக்கள் எப்பொழுது நட்புக்குள் முகங் காட்டுகின்றதோ
அப்போதே ஏற்றத்தாழ்வுகளும் மனங்களுக்குள் நுழைந்து விடுகின்றன.

-------------------------------------------------------------- 

எழுகின்றது நம்பிக்கை
பேரொளியாய்...............
உதிர்ந்தாலும் மீளப் பிறப்பெடுக்கும்
பசுந்தளிராய் நான்....



- Ms. Jancy Caffoor _



2013/05/06

நெருடல்


மண் பார்த்து நடக்கும் ஆண் கூட
பெண் அன்பில் கொஞ்சம் நசிந்து
விண் பார்ப்பான் புன்னகையோடு
தன்னவளை நினைந்து.................

அம்மாடி இதுதான் காதலோ
அட...ராமா.............
-----------------------------------------------------------------------------------------


கண்ணாடி மனசை கல்லெறிகின்றனர்
உடைவதென்னவோ
மனசல்ல........உயிர்!
------------------------------------------------------------------------------------------


அன்புடையார் எல்லோரும் உயர்ந்தோரே!
ஏனெனில்.........
அன்பு வாழ்வைக் கற்றுக் கொடுக்கின்றது
பேதங்களைத் துடைத்தெறிந்து!...
--------------------------------------------------------------------------------------
அழகு மறைந்த பின்னும்- நமக்குள்
நிழலாகும் இரத்த பந்தங்கள்!
போலி வாழ்வுக்குள்ளும் வேலியாகும்
நம் ஆருயிர் சொந்தங்கள் !
----------------------------------------------------------------------------------------



என் குரல் (குறள்)
--------------------------
தேடி வரும் சந்தர்ப்பங்களைத் தானிழப்போர்
கோடி துன்பம் தானடைவார் தம் வாழ்வில்!
----------------------------------------------------------------------------------------



 


மலரும் நானும் ஒன்றென்பதனாலா
அடிக்கடி தரையில் உதிர்க்கின்றாய் என்னை
வீம்பாய்!
நீ கசக்குவது என்னை மட்டுமல்ல.........
அழகான  உன் வாழ்க்கையையும் தான்!
நீ மிதிப்பது என் உணர்வுகளையல்ல
அழகாய் வருடிச் செல்லும் அன்பையும்தான்!
-----------------------------------------------------------------------------------



கண்ணாடி முன் நின்று
என்னுள் உன்னைப் பார்ப்பதில்தான்
எத்தனை சந்தோஷங்கள்!

நான் நீயாய்
நீ நானாய்...
அன்பின் தித்திப்பில்
அடங்கிக் கிடக்கின்றது நம்மனசு!
-------------------------------------------------------------------------------------


உறங்காத மனக்கண்கள்
எழுதும் கவிதை
"கனவு"
 
--------------------------------------------------------------------------------------

அன்பும் ஆசையும் இணைத்து..........
ஈருடலின் உயிரை ஊர் ஒன்றுகூடலில் ஓருயிராக்கி
என்றும் ஏற்றமாக ஐக்கியமாக்கும் ஓளடதமே  திருமணம்!
--------------------------------------------------------------------------------------


அன்பின் மொழி அழகான இதயம்!
அழகான இதயத்தின் நுழைவாயில்
மழலையுதிர்க்கும் குழந்தை!
---------------------------------------------------------------------------------------

அன்பு.........
அழிப்பதில்லை........
மனசை ஆள்வது, ஆக்குவது!

நாம் வழங்கும் அன்புக்கு பிறரிடமிருந்து பெறுமதி கிடைக்காத போது,
நமது அன்பும் ஊனமடைந்து விடுகின்றது!

இது என் குறள் (குரல்)
------------------------------------
"அன்பு செலுத்தார் இனங் கண்டு புறந் தள்ளுக
அது நம் மனதிற்கு துன்பந் தராத  அருமருந்து"

-----------------------------------------------------------------------------------------


சோகம் வருகையில் கண்ணீர் துடைக்கும்
உங்கள் கரங்கள்..........
என் மகிழ்வில் உதிரும் புன்னகை சேர்க்கும்
உங்கள் கன்னங்கள்......
நொடிக்கொரு தடவை பெயர் உதிர்க்கும்
உங்கள் உதடுகள்.........
இதமான அன்பைத் தந்து சிரிக்கும்
உங்கள் மனசுகள்............
நொடிக்கொரு தடவை வேடிக்கை சேர்க்கும்
உங்கள் வார்த்தைகள்..........
எல்லாம் பெயர் சொல்லி நிற்கும் என்றும்
உங்கள் நட்பாய்....

- Ms. Jancy Caffoor -



















2013/05/04

என் இரவாய்


இப்பொழுதெல்லாம் - என்
ஒவ்வொரு இரவுகளும் விழித்திருக்கின்றன
என்னைப் போல
உன் நினைவுகளையும் சுமந்து!

வெட்ட வெளியாய் பரந்த வானில்
கொட்டக் கொட்ட முழித்திருக்கும்
நட்சத்திரங்கள் கூட
உன்னையே சுமந்து காத்திருக்கின்றன
என் வெறுமை நீக்க!

யன்னல் திறந்து உள் நுழையும் காற்றுக் கூட
நள்ளிரவில் குளிர் களைந்து
வெப்பப் பிரளயத்தில் என் மேனி நசிக்குது
இதமாக!

இருள் வெளியின் குரல்வளைச் சத்தமாய்
ஒலிக்கும் ஆந்தை அலறல் கூட
உன் கைபேசி அழைப்பாய்
என்னை முட்டிச் செல்கின்றது ஆர்வமாய்!

உனக்காக காத்திருப்புக்கள் சுகமானதுதான்
உன் குரல் வயலில் எனை நாட்டத்துடிக்கும்
உனக்கான காத்திருப்பு சுகமானதுதான்!

உனக்குத் தெரியுமா
உன் காத்திருப்பு மட்டுமல்ல
உன் முத்தவோசை இன்றிக் கூட - என்
இரவுகள் விடிவதில்லை!

- Jancy Caffoor-
     04.05.2013

ஏன் தானோ


வேர் தந்த பெற்றோர் மறுத்து
நேற்று முளைத்த காதலோடு சரசமாடி
உற்றார் வெறுத்து நிற்போர் மனசு
பாழடைந்த கல்லறைச் சாலை!

தொப்புள் நாண் அறுத்தெறிந்து - தமக்கென
தொட்டில் குழந்தை தான் வார்ப்போர்
பாவத்தின் சிலுவைதனை போர்த்துகின்றனர்
தம் பரம்பரைக்கே!

மலர் வாசம் வீசும் பாசம் - என்றும்
நமக்குள் அழகான பசுமைக் கோலம்
வளமான வாழ்க்கை வாழ
பெரியோர் ஆசி வேண்டுமென்றும்!

- Jancy Caffoor-
      04.05.2013

2013/05/02

சட்டம்


சிறுபான்மைக்கு அநீதி விளைப்பார்
உரிமை மறுக்கும் பெரும்பான்மை!
எதிர்த்துக் குரல் கொடுப்போர் பயங்கரவாதியாம்!
ஏக்காளமிடுகின்றதய்யா இனவாதம்!

கண்கொத்திப் பாம்புகள்
தன்னினத்திற்கு கரி பூசுவார் சொகு வாழ்விற்காய்!
காட்டிக் கொடுக்கும் வல்லுறுக்கள்
வந்தமரும் உயர் பதவிகளில்!

சட்டத்தில் அறைகின்றனர் அதர்மங்களை!
ஏட்டளவில் சத்தியம் கதறுதைய்யா - நம்
மன எரிமலைக் குழம்பின் அகோரத்தில்
கருகிப் போகுமோ சட்டத்தின் ஓட்டைகள்!


- Jancy Caffoor-
      02.05.2013

யாரோ


வெடிக்கின்றது மேகம்
வெற்றி பெறப் போவது
விண்ணா மண்ணா!

புவிக்குள் மின்சாரம் பாய்ச்சி
வேவு பார்க்கின்றது மின்னல்
தோற்றது யார் காற்றா நாற்றா!

புழுதிக்குள் கூத்தடித்த மலர் மேனி
குளிருக்குள் விறைத்துக் கொள்ளுது
அழுக்குக்காகவா அழகுக்காகவா !

இங்கோ மழையோ மழை!
எட்டு திக்கெங்கும் முரசறையும்
கொன்றல் சத்தத்துடன்!

- Jancy Caffoor-
      02.05.2013

2013/05/01

புரிதலின்றி


பேசித் தீர்த்துவிடு
நம் வாழ்வை நம் முன்றலில்!
இல்லையென்றால்
பிளவுபடுவது நாமல்ல - நம்
வளமான குடும்பம்!

சமாந்தரங்களாய் நாம் பயணிக்கையில்
நம் குழந்தைகள்
எதிர்காலம் முடிவிலியில்!

மனசு பார்த்து இணைந்த நாம்
இன்று
சட்டம் பேசி நிற்கின்றோம்
வாழ்வை சிறைப்பிடுத்த!
வனப்பைச் சிதைக்க!!

விவாகத்திலிருந்து விமோசனமா
இல்லை
விவாகரத்திலிருந்து விடுதலையா!
புதிராகி நீ எனக்குள்!

சொல்லிவிடு
நல்ல பதிலை!
என் மரணத்திற்காய்  நாள் குறிக்கும்
உன்னிடம்தான் கேட்கின்றேன்!


- Jancy Caffoor-
     30.04.2013

இம்சை



மொழி மறந்து விழி கிறங்கி
உள்ளத்தை ...........
அழகின் இம்சைக்குள் ஆழ்த்தும் காதல்
அற்புதமானது!

உண்மைக் காதல் உருவம் பாராது
உணர்ச்சிக்குள் காமம் தேடாது......
உலகம் உருளும் வரை
உயிர் விட்டும் போகாது!

காதலின் காத்திருப்புக்களும்
வியர்வைத் துளிகளும் கூட.....
நாணத் தாழ்ப்பாளிட்டு
மௌனத்துள் இம்சித்துக் கொண்டிருக்கும்!

இருதயங்கள் சங்கமித்தால்
இருளில் கூட ஒளிப் பிழம்பு தோன்றும்
கரு விழிகளில் மின்னும் காதல் பார்வைகளை
உருத்துலக்கி உயிரேற்ற!

காதல் அழிவதில்லை
காலமுள்ளவரை உணர்வோடு வாழும்!

உன்னில் நான்


உன் கால்கள் பதிந்திருப்பது வயலல்ல
நம் காதல்!

நீ ஏறியது மரமல்ல
என் வாழ்க்கை!

நீ பறித்தது கொடுக்காப் புளியங்காயல்ல
என் மனசு!

உன் கைகளின் ஸ்பரிசத்தில் காய்களல்ல
நான்!

நீ சுவைப்பது பழங்களல்ல
என் நினைவுகள்!

உன் ஒவ்வொன்றிலும்
உன்னை நான் காண்பேன்

இதுதான் அன்படா
உண்மையான அன்படா!


- Jancy Caffoor-
     30.04.2013