About Me

2014/08/08

மனதின் இருப்பு


மனம் ஒருவரை நேசிக்கும்போது அவரின் குறைகள் எல்லாம் நிறைவாகிப் போகும். இதனால் அவரை ரசித்து மகிழ்கின்றோம்!
ஆனால்
காலத்தின் விதிவசத்தால் அவரை வெறுக்கின்றபோது  அவரின் ஒவ்வொரு சாதாரண அசைவிலும் குற்றமும் குறைகளும் தேடிக் கண்டுபிடித்து   வலி கொடுத்தவாறே நமது விலகலை வௌிப்படுத்துகின்றோம்
விருப்போ, வெறுப்போ மனதின் வௌிப்பாடு நம்மை தன்னுள் அடக்கியாள்கின்றது என்பதே யுண்மை!
----------------------------------------------------------------------------------------

நண்பர்களுக்கு நாம் வழங்கும் மிகச் சிறந்த பரிசு
" உண்மையான அன்பு"
---------------------------------------------------------------------------------
கடல் .....!

அலையடிக்கும்போதுதான் அதன் நுரை கரையோடு மோதி அழகு காட்டும். அலைகள் பாய்ந்து வரும்போது பயம் கொள்ளும் மனது,
தரை தொட்ட  அலைகள் கால்களை வருடும்போது சிலிர்த்து நிற்கின்றன..

வாழ்க்கையும் இப்படித்தான்...
துன்பங்கள் நெருடும்போது மனதை கட்டிப்போடும் பயம், அவ்வலியை நீக்க நாம் போராடும்போது பலமாக மாறி விடுகின்றது..

பலம் பலகீனமாகவும், பலகீனம் பலமாகவும் மாற்றிப் போராடும் இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொள்ளும்போது காலம் போய் விடுகின்றது. அனுபவம் எஞ்சும்போது நாமோ வாழ்க்கையின் பசுமையை இழந்து விடுகின்றோம்.
----------------------------------------------------------------------------------------


உன்
உரிமை
உறவெல்லாம்

சினமாகி
என்னுள் தூறிக் கொண்டிருக்கின்றது
இப்போதெல்லாம்!

வருந்தவில்லை நானும்
ரசிக்கின்றேன் உன் அன்பை!

திட்டி விடு
அன்றேல் கொஞ்சி விடு
--------------------------------------------------------------------------------------
எதனையும் நாம் மனப்பாடம் செய்து பேசுவதில்லை. சந்தர்ப்பங்கள்தான் நம் வார்த்தைகளைத் தீர்மானித்து விடுகின்றன. ஒருவரின் வார்த்தைகள்தான் அவர்களது மனதைப் படம் பிடித்துக் காட்டும் கருவி.

அன்போ
நட்போ
பாசமோ
உரியவர்களிடம் அதிகம் பேச வைத்து விடுகின்றது..
முடிவில் அதன் விளைவு்.

அவர்கள் நம்மிடம் கொள்ளும்
நல்லபிப்பிராயம் அல்லது தப்பெண்ணம்!
------------------------------------------------------------------------------------------
அவசரம்
அறியாமை
ஆத்திரம்
முட்டாள்தனம்
என்பவற்றின் பின்னல்தான்
தவறுகள்

நம் தவறுகளின் வலி
நம்மை மீளவும் புது மனிதராய்
மாற்றக்கூடியது

ஏனெனில்

ஒருவரின் வார்த்தைகளின் வலி
நம்மைச் செதுக்கும் உளி!
-------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு ஆரம்பமும்
முடிவொன்றின் அடித்தளம்
எனது பாடசாலை இடமாற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில்,
கற்பித்தல் பணியிலிருந்து நீங்கி
தனிமையில் நான்!

- Jancy Caffoor-
    08.08.2014

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!