About Me

2014/10/29

முஹர்ரம்


ஒவ்வொரு மனிதரைச் சூழவும் அவர் அண்டி நிற்கும் சமூக, சமய, கலாசார உணர்வுகள் அவர்களது அடையாளங்களாக நிற்கின்றன. அந்த வகையில் முஸ்லிம் மக்கள் முஹர்ரம் எனும் தமது புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளனர்.

ஹிஜ்ரி வருடம் 1436 ன் புதுப் பிரவேசத்தில் பிரவேசிக்கப் போகும் நிலையில் நாம்!

நாட்கள் எவ்வளவு வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. நாமோ ஆமை வேகத்தில் நமது செயல்களுடன் பயணிக்கின்றோம்.

இருந்தும் இதோ நமது புதுவருடத்தின் நிழலில் அண்மித்தவர்களாக நாமிப்போது!

அல்லாஹ் கூறுகிறான் :

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 9:36)

முஹர்ரம் மாதத்தின் முதலாம் நாள் முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகை கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை சீஆக்களால் நினைவுகூரப்படுகிறது.

10 வது தினத்தில் நோற்கப்படும் ஆசுரா நோன்பானது ,
தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக நோற்கப்படுவதாகும்.

வரலாற்றில் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாள்) நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். 
"இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். யூதர்கள் ”இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ”உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 2004.

ஆஷூரா நாள் நோன்பின் சிறப்பை நோக்கினால் -

”ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : புகாரி 2006

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷூரா நாள் நோன்பு முந்தைய ஒரு வருட தவறுகளுக்கு பரிகாரமாகும் என்று நான் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைக்கின்றேன்.
நூல் : முஸ்லிம் 1976

இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் முஹர்ரம் தொடர்பான கணக்கெடுப்பு பின்வருமாறு கணக்கெடுக்கப்படுகின்றது.
(இன்ஷா அல்லாஹ்)
முஹர்ரம் ஆரம்பம் 25 அக்டோபர் 2014 ----.........இறுதி 22 நவம்பர் 2014

எனவே முஹர்ரம் ..............!

எனும் போர் செய்யத் தடை செய்யப்பட்டுள்ள இப்புனித மாதத்தில் சகல முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் நேர்வழி ஏற்பட்டு அதனூடாக சாந்தி, சுபீட்சம், அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமை ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை புரிவானாக!

                                                                                                                               
- Jancy Caffoor-

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!