About Me

2015/02/27

மனசு



முருங்கை  இலை மென்று
சுருங்கி உறங்கி வளரும் மயிர்க்கொட்டியின்
கருமேனி  கண்டு
அருவருப்போடு பீதிசேர்த்து ஒதுங்கும் மனசு...
பறந்தோடும் வண்ணாத்தியி னழகில்
இறுமாந்து கிடக்கின்றது!


- Jancy Caffoor-
  27.02.2015

தொல்லை

தவழும் குழந்தைக்கு
கட்டுக்காவல் தொல்லை...

பருவ வயதில்
பருக்கள் தொல்லை....

வாலிபம் வந்தால்
காதல் தொல்லை.......

குடும்பஸ்தனுக்கோ
எடுக்கும் சம்பளம் தொல்லை...

வயோதிப மானால்
தள்ளாடும் தேகம் தொல்லை....

எல்லையில்லா தொல்லைகள்
இல்லாதவருண்டோ வாழ்வில்!



- Jancy Caffoor-
 

2015/02/26

இவர்கள்



வறுமை .....
இவர்கள் முகவரியா - சதை
மறுக்கும் தேகம் அறிவிக்கின்றதே!

பசி ......
இவர்கள் ஓலமா - அன்றேல்
நாசியோர  வலியின் பரிதவிப்பா!

நெஞ்சுக்கூட்டுக்குள் அஞ்சாமல்
யார் செருகினார்
எக்ஸ்ரேயின் இலவச அழைப்பிதழை!

பாலைவன குடைக்குள்
அடைக்கலம் தேடும் நிழல்களா
இவர்கள்!

பண ஆசியில் குவிந்திருக்கும்
வீண் பருக்கைகள்......
இவர்கள் உதரத்துக்குள்ளாவது
இருக்கை யாகி யிருக்கலாம்!

ஐயகோ.....

உணவின்றி உணர்விழக்கும் இவ்வுயிர்களுக்கு
தினமு மினி
துன்பம் துடைக்கும் கரங்கள்  யாதோ!


- Jancy Caffoor-
 

நானுமோர்


பாரதி கண்ட புதுமைப் பெண்
 
சாத்தான்கள் வேத மோத
சாத்திரங்களும் கோத்திரங்களும் போர்வை விரிக்க
கொத்தடிமைகளாய் பெண்டுகளை
கொத்திச் செல்லும் வல்லுாறுக்களுக்கு
சத்தமிட்டு கற்றுக் கொடுக்கும் நானும்
நித்திலம் சுமக்கும் புதுமைப் பெண்தான்!
.
களவாய் மேகங்கள் மறைத்தும்
உலா வரும் நிலவாய்....
பாறை மோதியும் பக்குவமாய் நௌிந்தோடும்
சிற்றாற்று நீராய்....
சளைக்க மாட்டேன் அற்பர்களை வேரறுக்க - நானும்
களையறுக்கும் புதுமைப் பெண்தான்!
.
எப்படியும் வாழ்ந்திடலாம் மாக்கள் - ஆனால்
இப்படித்தான் வாழ்க்கையென கோடு கிழித்து
தப்பில்லா வழி காட்டும் பாதைகளில்
அப்பிக் கிடக்கின்ற  மங்கையாய்
எப்பவும் தன்னம்பிக்கை சுமந்து வாழும் நானும்
இப்புவியின் புதுமைப் பெண்தான்!
.
அடுப்பங்கரை புகைக் கரியை
தடுப்புச் சுவராக்கி
தடுத்து வைக்கும் மூடர்களின் வலையறுத்து
விடுதலை பருகும் வீரப் பட்சி நானும்
நடுநிலை தவறா புதுமைப் பெண்தான்!
.
ஆணாதிக்க அகந்தைக்குள்
வன்முறை கோர்க்கும் கயவர்களை
கொன்றொழிக்கும் ஆயுதமாகவும்
நின்றடக்கும் அஹிம்சையுமாகவும் - சமுக
மன்றில் குரல்கொடுக்கும் நானுமோர்
பாரதி கண்ட புதுமைப்பெண்தான்!


- Jancy Caffoor-
 

2015/02/24

வாழ்வே மாயம்


வாழ்க்கை !

கடந்துபோன வாழ்க்கைய கிளறிப் பார்ப்பது  தப்புத்தான். ஏன் என்றால்  அதில்  நம் நிம்மதி கரைந்து  போன வடுக்கள் இருக்கும். அவை வலிக்கும். ஆனாலும் சில விசயங்கள நினைத்துப்  பார்க்கும் போதுதான் அது நம் வலிகளை  காய வைத்து  பக்குவப்படுத்தி எதிர்காலத்திற்கு தயார்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில இன்னைக்கு நான் நெனைக்கப் போறது என்னோட வாப்பாவ . அவர நெனைச்சு அவர்ட தெறமைகளை கண்டு நான் மலைச்சுப் போயிருக்கிறேன். என்னதான் தெரியாது அவருக்கு. ஓவியம், இலக்கியம் உட்பட எல்லா உபகரணத் திருத்த வேலைகளும்  அவர் பேசுற ஆங்கிலத்திற்கு நிகரே இல்ல. படித்தவர். அரசாங்க ஊழியர். எங்கள எல்லாம் படிக்க வச்சார். தன்னோட சம்பளத்துக்குள்ள  வட்டம் வரைஞ்சி  அதுக்குள்ள எங்களையும் உள்ளீர்த்துக் கொண்டார். அந்த உள்ளீர்ப்பு எங்க அம்மாட தெறமை அவருக்கேத்த வாழ்க்கை. அதுக்கு எங்களயும் பழக்கப்படுத்தி.

என்னோட சின்னக் கால வாழ்க்கய நெனைச்சா அவர்கிட்ட நெறைய அடி வாங்கியிருக்கிறேன். றோட்டுல விரட்டி விரட்டி செம்பரத்தை தடி பிய்ச்சி விளாசியிருக்கிறார்.  அப்படி அடிச்சு வார காயத்தில இருந்து ரெத்தம் வந்தா க கோபம் போனதும் அந்த கல்லுக்குள்ள கொஞ்சம் ஈரம் கசியும். மருந்து கட்டுவார். ஏதாவது தின்ன வாங்கி தருவார் அடிச்சதுக்கு இலஞ்சமா.

அவர் சிங்கம். தனிக்காட்டு ராஜா. யாருக்கும் கட்டுப்படாத அஞ்சா நெஞ்சன். ஆனால் அவரச் சூழ யாருமற்ற ஒரு மயானம் உருவாகியிருப்பதைக்கூட புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

- Ms. Jancy Caffoor -
   24.02.2015

எழுத்தணிக்கலை



இஸ்லாமிய எழுத்தணிக்கலை
-----------------------------------------
அரபிமொழியானது இஸ்லாம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் மக்களால் பேசப்பட்டு வந்தது. புனித இஸ்லாம் மார்க்கம் நபி(ஸல்) அவர்களால் அரபி மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புனித அல்குர்ஆனும் அரபி மொழியில் இறக்கப்பட்டது. இதனால் அரபுமொழியானது இஸ்லாமிய கலாச்சாரத்தில் மிக முக்கிய செல்வாக்கைப் பெற்றிருந்தது.

உமையா கிலாபத்தின் ஆட்சியாளர்களில் ஒருவரான கலீபா அப்துல் மலிக்கின் காலத்தில் இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசங்களில் உத்தியோகபூர்வ மொழியாக அரபிமொழி மாற்றப்பட்டது. அக்காலத்தில் அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் தாய்மொழியாக அரபுமொழி காணப்படவில்லை. அக்கால இஸ்லாமிய உலகில் அரபுமொழிக்கு அடுத்தபடியாக பெருன்பான்மை மக்களால் பாரசீக மொழி பேசப்பட்டு வந்தது. இஸ்லாமிய உலகில் ஆரம்ப காலப்பகுதியில் எகிப்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆட்டுத்தோல்களிலும், ஒரு வகையான மரஇலைகளிலும் எழுத்துக்கலைகள் வரையப்பட்டு வந்தன.

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காகிதத் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காகிதத் தாள்களில் இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் வரையப்பட்டன. இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்தமுறையில் வரைவதற்கு காகித்தாள்கள் பெரிதும் உதவிசெய்தது. அக்கால இஸ்லாமிய எழுத்தணிகளை வரைவதற்கு ‘கலம்’எனும் சாதானம் பயன்படுத்தப்பட்டது. அது கோரைப்புல் தாவரத்தால் உருவாக்கப் பட்டிருந்தது. ஆரம்பகால குர்ஆன் பெரியவையாகக் காணப்பட்டதுடன், அவை இஸ்லாமியக் கலைத்திறன்மிக்கதாகக் காணப்பட்டது. அதிலிருந்து இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்த ஓவிய முறையாக வளர்ச்சியடைந்தது.

நன்றி - தமிழ் விக்கிப்பீடியா

- Jancy Caffoor-
  24.02.2015

சித்திரமும் கைப்பழக்கமும்


ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு சித்திரம் வரைதல் மிக விருப்பமானதொன்று.

சித்திரம் என்பது மனதில் எழுதும் கருத்துக்களை ரேகைகளாக்கி அவற்றுக்கு நிறங்களைப் பயன்படுத்தி வௌிப்படுத்தும் வௌிப்பாடாகும், ரேகைகளை வரைதல், வடிவங்களை ஆக்குதல், நிறப் பயன்பாடு என்பன சித்திரம் வரைதலின் முக்கிய நிலைகளாகும்.

ஒருவர் தனது உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளுக்கு கருத்து வடிவம் கொடுக்கும்போது அது அவரின் அனுபவம், கலையார்வம், ஆற்றலின் பிரதிபலிப்பாக வௌிவருகின்றது.

ஆரம்ப காலங்களில் எண்ணங்களை வௌிப்படுத்த மட்டுமன்றி, செய்திகள், கண்டுபிடிப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தவும் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

- Jancy Caffoor-
  24.02.2015

மறை வழியில் கல்வி



கல்வியின் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும் அறிவே மனித வாழ்வை வழி நடத்திச் செல்லும் காட்டியாகும். இவ்வறிவின் சிறப்பைக் கூறும் சில ஹதீஸ்களின் பொன் வரிகள் சில -

'ஒருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)

''நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.'' (அபூ த h வு த்  அஹ்மத்)

--------------------------------------------------------
குர்ஆன் என்னும் பெயர்

வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

-------------------------------------------------------
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ


- Jancy Caffoor-
  24.02.2015

பரீட்சைச் சுமை



இயற்கையோடு இணைந்து ஆரம்பக்கல்வியை அனுபவங்களாகப் பெற வேண்டிய பிள்ளைகளுக்கு பரீட்சைச் சுமையொன்று முதன்முதலாக ஐந்தாம் தரத்தில் புகுத்தப்படுகின்றது. பரீட்சை நெருங்கும்வரை ஒரே படிப்பு படிப்பு.......படிப்பு! பிள்ளைப் பருவத்தில் கிடைக்க வேண்டிய எல்லா இயல்புகளும் விளையாட்டுக்கள் உட்பட மறுக்கப்படுகின்றது. பெற்றோர்களும் தம்பிள்ளைகளின் ஐந்தரத்திற்கு கொடுக்கும் "அதி முக்கியத்துவத்தையும் கவனிப்பையும் ஏனைய வகுப்புக்கள் கற்கும் போது குறைத்து விடுகின்றார்கள்.

இப்பரீட்சை நிதியுதவி வழங்குவதற்காகவோ அல்லது பிரபல்யமான பாடசாலைகளுக்குச் செல்லவோ நடத்தப்படுகின்றது. பெரும்பாலும் பரீட்சையில் அதிகளவான சித்தி பெறுவது அரச ஊழியர்களின் அல்லது வசதி படைத்த பெற்றோர்களின் பிள்ளைகளே இவர்களுக்கு பிரபல்ய பாடசாலைகள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் அரிதாக வறுமையோடு போராடிக் கொண்டு சித்தி பெற்ற மாணவர்கள் இந் நிதியால் பயனடைவதும் மறுப்பதிற்கில்லை. எப்படியோ இவ் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவது தொடர்பாக அரச மட்டத்தில் அடிக்கடி வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் இப்பரீட்சை 2016ம் ஆண்டிலிருந்து நடாத்தப்படாதென இன்று (19.12.2013) அறிவித்துள்ளார்.

- Jancy Caffoor-
  24.02.2015

ஜீன் ஜாக்ஸ் ரூஸோ (1712-1778)


கல்வியென்பது பல தத்துவங்களினடிப்படையில் முன்வைக்கப்படும் ஒரு ஒப்பந்தம். கல்வி பற்றிய சிந்தனைப்படுத்தலில் முக்கியமான ஒருவராக ஜீன் ஜாக்ஸ் ரூஸோ (1712-1778) போற்றப்படுகின்றார். இவர் தலைசிறந்த இயற்கை வாதியாகவும் சிந்தனைப் புரட்சியாளராகவும் விளங்கியவர் என்றும் விளங்கிக் கொண்டிருப்பவர்.

பிள்ளைகளின் சூழலில் பாதிதான் பாடசாலையில் கழிகின்றது. மிகுதி வீட்டில்தான். பெற்றோர் பிள்ளை பற்றிய உளவியலை அறியாதவர்களாக இருக்கும்போது பிள்ளையின் இயல்பான கற்றலை விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள்.

இதோ ரூஸோவின் சில கருத்துக்கள்

பிள்ளைகள் இயற்கையின் போக்கில் வளர அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் இயற்கையோடு இணைந்து இயற்கையின் நியதிகளின் படி வாழ அனுமதிக்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை விட கல்வி பெறுவதற்கான நிலைக்கு அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். அதற்காக பிள்ளைகளிடம் பிரச்சினைகளைக் கூறுங்கள் அவர்களே அதற்கான தீர்வுகளைக் காணட்டும் என்றார்.

பிள்ளை வேறு, வளந்தோர் வேறு என்று விளக்கிய ரூஸோ இயற்கை சூழல், மனிதர்கள், பொருட்கள் போன்ற மூன்று ஊடகங்களினூடாகவும் பிள்ளைகள் கல்வியைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளை தானாகவே கற்றல் - கற்பித்தலின்போது கற்றல் சாதனங்களினைப் பயன்படுத்தி பெறும் அனுபவம்சார் கல்விக்கு வலியுறுத்தும் ரூஸோவின் தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் பாடசாலைகளில் பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு மற்றும் திறமைக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது எனலாம்.

- Jancy Caffoor-
  24.02.2015

நிஜத்தின் நிழல்கள்


கல்வியைத் தேடுபவனாலேயே வாழ்க்கையையும் கற்றுக் கொள்ள முடிகின்றது. கற்ற கல்வியின் அளவீடுதான் பரீட்சை. பரீட்சை எனும் போது வயது பேதமின்றி எல்லோருக்கும் ஒரு பயம், முயற்சி, டென்ஷன் வருவது இயல்பு. அதிக சிரத்தையுடன்  கல்வியைக் கற்பவன் உயர்புள்ளிகளைப் பெறுவதில் தவறுவதில்லை.

ஆனால் 

பெரும்பாலான மாணவர்கள் எவ்விதமான முன்னாயத்தமுமின்றி திறமையான மாணவர்களிடம் காப்பியடிக்க தயாரானவர்களாகவும், வெற்றுப் பேப்பர்களை ஒப்படைக்கத் தயாரானவர்களாகவும் பரீட்சைக்கு செல்வதைப் பார்த்து வேதனை கலந்த வெட்கம்.

இவர்கள் கல்வியைப் பற்றி உணர ஆரம்பிக்கும்போது கல்வி  இவர்களை விட்டு விலகிப் போயிருக்கும் என்பது மட்டும் உண்மை!
-----------------------------------------

பாடசாலை வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது. ஆனால் அதன் இனிமையை உணர்வது பாடசாலையை விட்டு விலகிச் செல்லும்போதுதான்.
மீட்கப்படும் ஞாபகங்கள் சில நேரம் சந்தோசத்திலும், சில நேரம் ஏக்கத்திலும் சில நேரம் கண்ணீரும் கலைந்து நிற்கும். ஏனெனில் பள்ளி வரும் தொட்டு நிற்கும் நட்பு அப்படிப்பட்டது....
-------------------------------------------
பாடசாலை என்பது ஒழுக்கமுள்ள சமுதாயத்தின் தோற்றுவாய்க்கான தளம். சகல பாடசாலைகளும் இதனைத்தான் கல்வி இலக்காகக் கொண்டு தமது செயற்பாடுகளை வகுக்கின்றன. ஆனால் துரதிஷ்டமாக சில ஒட்டைகள் விழுந்து விழுமியம் தளர்ந்த முரண்பாட்டுக் கூட்டங்களும் வௌியேறி விடுகின்றன. பாடசாலை வௌி மதில்கள் அழகாக பெயின்ட் பூசப்பட்டிருக்கும்போது அவற்றில் தமது பெயர்களையோ ஏதாவது செய்திகளையோ கிறுக்கி விட்டுச் செல்வது இந்தக் கூட்டம்தான். விளம்பரம் ஒட்டாதீர்கள் எனும் அறிவித்தல்களைக் கூடப் புறக்கணிப்பவர்களாக இவர்கள்.
-------------------------------------------
பாடசாலை என்பது அங்கு கற்கும் அனைத்து மாணவர்களும் பாதுகாக்க வேண்டிய நிறுவனம். அதன் வளங்கள் அவர்களின் கற்றலுக்காக பயன்படுத்தப்படும் சொத்து. ஆனால் சில மாணவர்கள் வளர்ந்த மாணவர்கள் பாதுகாக்க வேண்டிய இச்சொத்துக்களை சேதப்படுத்துவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. விளையாடும்போது யன்னல் கண்ணாடிகளை உடைப்பது, கதிரை, மேசைகளில் டிபெக்ஸால் கீறி நாசப்படுத்துவது, பெயின்ட் அடித்த சுவரில் தமது கால்களை உதைத்து அசுத்தப்படுத்துவது, கதிரை, மேசைகளை உடைப்பது இவையெல்லாம் ஆண் மாணவர்களிற் சிலர் செய்யும் சாதனைகள்.
-------------------------------------------

ஒரு பாடசாலையின் வளர்ச்சியின் தூண்கள் அதன் ஆசிரியர்கள்தான். இளைய ஆசிரியர்களிடம் வேகம் காணப்பட்டாலும் கூட அனுபவம் காணப்படுவது அதிக சேவைக்காலத்தைக் கொண்ட ஆசிரியர்களிடம். ஆனால் துரதிஷ்டவசமாக சேவைமூப்புக் கொண்ட ஆசிரியர்கள் பொதுவாக பாடசாலைகளிலிருந்து ஓரங்கட்டப்படுவது நடைமுறையாகக் காணப்படுகின்றது. இளைய ஆசிரியர் சமுதாயத்தின் கைகளில் பொறுப்புக்கள் வழங்கப்படுவது நல்ல விடயமே இருப்பினும் முதியவர்களை அலட்சியப்படுத்தி வழங்கப்படும் மலர்மாலைகள் சற்று சிந்திக்கத்தக்கது.
------------------------------------------

சமூகத்தினுள் நுழையும் ஓர் பிரஜையை நற்பண்புள்ளவனாக மாற்றும் பணியில், இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு கல்வி வழங்கும் பணியை பாடசாலைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் பெற்றோர், சமூகத்தினர் ஒத்துழைப்பின்றி பாடசாலைகள் தனித்து இக்குறிக்கோளை நிறைவேற்ற முடியாது.

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பெற்றோர் கொடுக்கும் ஊக்கம், அவர்கள் வகுப்பேற ஏற குறைந்து கொண்டே செல்கின்றது. மாணவர்களை வெறுமனே பாடசாலைக்கு அனுப்பாது அவர்கள் எந்தளவில் கற்றலில் ஈடுபாடு காட்டுகின்றார்கள் என்பதை கண்காணித்து வழிகாட்டும் பெற்றோர்களின் பிள்ளைகளே கரிசனத்துடன் கற்க ஆரம்பிக்கின்றார்கள்.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்கும் ஆர்வம், ஊக்கத்தை மேற்பார்வை செய்து வழிகாட்டுவது கடமையாகும்.

- Jancy Caffoor-
  24.02.2015




குறும்பு - பாடசாலை நினைவு


நான் ஏ.எல். படிக்கிற நேரம் (12ம் வகுப்பு)
--------------------------------------
இடம்-  யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி
வகுப்பு - கல்வி பொது தராதர உயர் தரம் விஞ்ஞானம் 

ஒரு நாள் Zoology Teacher வகுப்புக்கு வந்தார். அவர்  எப்பவும் மூக்குக் கண்ணாடி போட்டிருப்பார்.   கண்டிப்பான ரீச்சர்.

 ஆனால் நோட்ஸ் நிறையத் தருவதால் ரியூசன் கிளாஸ் போகின்ற  சில பேருக்கு அம் மிஸ்ஸின் பாடத்தை மிஸ் பண்ணத்தான் ஆசை. பயத்தில அரை குறையாக எழுவதைப்போல பாவனை செய்வார்கள். ஆனால் ரியூசன் வாசலை மிதிக்காத என்னப் போல சில பேரின் வற்புறுத்தலில் மிஸ் நிறைய நோட்ஸ் தருவார் .

இப்படியான மனநிலையில், ஒரு நாள் ஒரு குறித்த சப்ஜெக்ட்ல  மிஸ் மந்திலி எக்ஸாம் (மாத அலகுப் பரீட்சை)  தந்தார். நாங்களும் விடை எழுதிக் கொடுத்தோம். மறுநாள் எங்க விடைப் பேப்பரைத் திருத்திய மிஸ்ஸூக்கு மூக்குமேல கோபம் வந்திட்டுது.

உடனே வகுப்புக்கு வந்தார். சிலபேரின் பெயரை வாசித்து எக்ஸாம் கொப்பியை அவர்கள் மூஞ்ஜில வீசிட்டார்.

"ஸ்கூல்ல தார எக்ஸாமுக்கு நான் தார நோட்ஸ படிச்சிட்டுத்தான் விடை எழுதணுமே தவிர, ரியூசன் நோட்ஸ இங்க கொண்டு வந்து விடையா எழுதக்கூடாதுண்ணு எத்தனை தடவை சொன்னேன். "

மிஸ் சத்தம் போட்டாங்க. நாங்க கப்சிப்.

அப்படி எழுதின அத்தனை பேருக்கும் முட்டை மாக்ஸ்தான் (பூச்சியம்) கிடைத்தது. அசடு வழிய உட்கார்ந்திருந்த நண்பிகளை அனுதாபத்துடன் பார்க்கத்தான் முடிந்தது.

இப்ப அந்த ரீச்சர் இருக்கிறாவோ தெரியல. ஆனால். மனசுககுள்ள அந்த முகம் இன்னும் இறுக்கமா படிந்திருக்குது.


- Jancy Caffoor-
    24.02.2015

பிரியாவிடை ஓ . எல். 13


டிசம்பர் 2 - 2013
-------------------
பாடசாலைப் பருவம் என்பது துன்பம் துறந்து, சிறகு விரித்துப் பறக்கும் பருவம். பொதுப்பரீட்சைகள் தடையும் பிரிவும் விதிக்கும் வரை நட்பின் வலி யறியாப்பருவம்.

எம் பாடசாலையின் தரம் 11 மாணவர்களுக்கும் இது பொருந்தும். இன்னும் கா. பொ. த சா/த பரீட்சைக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், பரீட்சை பற்றிய எதிர்பார்ப்பும் பயமும் ஒரு புறமிருக்க.....பல வருடங்களாக பின்தொடர்ந்த நண்பர்களைப் பிரியும் பிரிவு வலி மறுபுறம் நெருக்க வேதனையுடன் பிரியாவிடைக்கு தயாராகி விட்டனர் அம் மாணவச் செல்வங்கள்.

இரண்டு வருடங்களாக இவர்களுக்கு விஞ்ஞானப் பாடம் எடுக்கின்றேன். நான் கண்டிப்புக் காட்டும் நேரத்தில் கூட அவர்கள் என்னை ஒருபோதும் வெறுத்ததில்லை. தங்கள் குடும்பத்தில் என்னையும் ஓர் அங்கத்தவராய் கருதி புன்னகையும் அன்பையும் சிதறும் இம் மாணவர்களின் பிரியாவிடைக்கும் பாடசாலையில் நாள் குறித்தாகி விட்டது.

ஓ.எல். விடுதி மாணவர்களின் பிரியாவிடை அழைப்பிதழை இன்று என் கையேந்தியபோது கண்கள் லேசாய் பனித்தன. மனசும்தான்.

அவ் அழைப்பிதழில் காணப்பட்ட பின்வரும் வரிகள் மனதைத் தொட்டுச் சொல்ல.

எதிர்வரும் பரீட்சையில் சிறப்பாக சித்தி பெற இறைவனைப் பிரார்த்தித்தேன். எல்லோரும் பிரார்த்திப்போம்!

"ஏர் பிடிக்க இருந்தோம்
எழுத்தறிவித்தாய்....
எட்டி முயற்சித்தோம்
ஏணியானாய்....
பிரிந்து செல்கின்றோம்
என்செய்வாய்?
பணிந்து சொல்கிறோம்
நீ சிறப்பாய்!"


- Jancy Caffoor-
  24.02.2015

அ/ ஸாஹிரா மகா வித்தியாலயம்


சமபோஷா கால்ப்பந்தாட்ட சாம்பியன் அணி - 2014
15 வயதுக்கு கீழ்பட்ட ஸாஹிரா மாணவர் கால்ப்பந்தாட்ட அணியினர் அ/மத்திய கல்லூரி, சென் ஜோசப் கல்லூரி போன்ற பிரபல்ய பாடசாலை மாணவ அணியினர்களை வெற்றியீட்டி இன்று (23.10.2014) சாம்பியன் பட்டத்தை தமதாக்கினார்கள். 
இவர்களின் வெற்றிக்குழைத்த பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் இம்மாணவர்களுக்கு நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்

பாராட்டுக்கள் இவர்களுக்கு
---------------------------------------------

Australian National Chemistry Quiz - 2014
-------------------------------------------------------
மேற்படி போட்டியில் அ/ ஸாஹிரா  மகா  வித்தியாலய  மாணவர்களும் பங்கு பற்றி வெற்றியீட்டியுள்ளார்கள். அவர்களையும்,  அவர்களை  வழிப்படுத்திய ரமீஹா ஆசிரியையும் பாராட்டுவோம்

மாணவர்கள் விபரம்
-----------------------------
தரம் 11 (2014)
-----------------------------
1. M. Shalik - High Distinction
2. I. Hafeel - Credit
3. A. Waseema - Participation
4. N. Fayaza - Participation

க.பொ.த உ/த
--------------------
1.A. Ayisha   - Distinction
2. M. Rasna  - Distinction
3. S. Rinoosa  -  Credit
4. T. Simaya   -   Credit
5. A. Fazna  - Participation
6. F. Faseeha  - Participation
7. H. Thansila banu - Participation
8. N. Niroskhan  - Participation
9. R. Rozana - Participation
10. S. Sameema - Participation
11. T. Hisafa - Participation
---------------------------------------------------------------------

வலய மட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம் தரம் 7 சீ மாணவன் M.U.M. பாலிஹ் மாகாண மட்டத்திற்குச்செல்லும் வாய்ப்பைப்பெற்றுள்ளார். இவரை நாமும் வாழ்த்துவோம்

---------------------------------------------------------------------

அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில்  பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். அவர்கள் விபரம் -

1.. M.F.Aadhil Ahamed...............  ( marks 182)
2. .M.V.Sameeha......................... .......... (177)
3..M.M.M. Akeel............................. .........(172)
4..N.Ashfan Ahamed...................... .........(167)
5..A.A.H.Nisha .........................................(165)
6.. N.Aysha.............................................. (162)
7..M.R.F.Salha......................................... (159)
8..S.H.Hafri ..............................................(158)
9..A.H.F.Rasheeka.................................. (158)
10..A.S.Shahama...................................... (158)
11..T.F.Sahara............................... ...........(156)

-------------------------------------------------------------------------------
 க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேறுகளில் (2013 டிசம்பர்) அதிக கூடிய பெறுபேறுகளைப் பெற்ற அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவிகள் விபரம் -

C.M.Fathima Risla - 9 A
s. Fathima Sashna - 8A, 1 B
M.S. Fathima Aasra - 8A , 1 C
M.R.Hasheena - 8A , 1 C

-------------------------------------------------------------
சமூகக்கல்வி வினா- விடைப் போட்டி வருடாவருடம் நடத்தப்படும் போதெல்லாம் கோட்ட மற்றும் மாகாண மட்டங்களில் எமது பாடசாலை மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர்.


- Jancy Caffoor-
  24.02.2015



2015/02/22

கோணப்புளி


யுத்தம் சத்தமில்லாமல் பலரின் ஆதாரங்ளைப் பிடுங்கியது.
பறந்து போன இந்தப் பல வருடத்தில்  சிலர் வசதி வாய்ப்புக்களுடன் வேரூன்ற இன்னும்  பலர் அகதிகளாய் நிர்க்கதிக்குள்ளாகி  அலைய காலம் எப்படியோ கழிந்து  கொண்டிருக்கின்றது.

இதில் நாங்கள் இரண்டாவது வர்க்கம். யாழ் நகரில் எம் பிறப்பிடம் வனாந்தரமாகி காய்ந்து கிடக்க, நாங்களோ இன்னும் பேரம் பேசும்  உலகில் இருப்பிடங்களை  மாற்றிக் கொண்டிருக்கின்றோம் நிரந்தர முகவரியில்லாமல்.

சரி விசயத்திற்கு வருகின்றேன்.

யுத்த காலத்தில்கூட   சன்னம் துளைக்காத எங்கள் வீடு சில எம்மினத் துரோகிகளால்  தன் சுவர்களையும்  கட்டடங்ளையும் இழந்து வனாந்தரமானது. மரங்களின் சுய ஆட்சியின் விஸ்வரூபமாய் ஓர் கோணப்புளிய மரமும்  கிணற்றுக்கு அருகிலுள்ள முற்றத்தை குத்தகை  எடுத்ததை நாங்கள்  அறிந்துகொண்டோம்.


யுத்தம் ஓய்ந்து சமாதான காலத்தில் வெறிச்சோடிப் போன எங்கள் வீட்டைப் பார்க்கப் போன போது  மரத்தை அயலாளர் அறிமுகப்படுத்தினார்கள். கிணற்றைச் சுற்றி  பசுமையாய் கிளைகள்  விட்டிருந்தது மரம்... அடி தண்டுப் பகுதிகள் முட்களற்றும், மேல்க் கிளைகள்  கொழுக்கி போன்ற வளைந்த முட்களையும் தனக்குள் நிரப்பி வைத்திருந்தன.

வளவை துப்பரவு செய்யும் முயற்சியில் இறங்கினோம். காடாகிப் போன வீட்டைத் துப்பரவு  செய்ய  பல ஆயிரங்கள் கூலிக்காரர்களுக்குள் இடமாறின. கிளைகளில் பசுமையும்  சிவப்புமாக சுருள்களாய்   தொங்கிக்  கிடந்த சீனிப் புளியங்காய்களுக்காக அம்மரத்தை  வெட்ட  அயலாளர் விடவில்லை.


"கோணப்புளியை  எங்க வீட்டுப் புள்ளங்க ரொம்ப  ஆசயாச் சாப்பிடுவாங்க,வெட்டாதீங்க. எங்களுக்காக அந்த மரத்தை விட்டுட்டு போங்க"  ஒரு அறிந்தவர் கெஞ்சினார்.
நாங்களும் மறுக்கவில்லை.  மரம் இன்னும் உயரமானது.

காலவோட்டத்தில் அம்மரத்தையே மறந்து விட்டோம்.

மூன்று வருடங்கள் மெல்லக் கரைந்து போனது....

அண்மையில் ஒரு கைபேசி அ ழைப்பு ........

அறிமுகமில்லாத  இலக்கம்...

"ஹலோ"  - இது நான்..

மறுமுனை தன்னை  அடையாளப்படுத்தியது. பட் பட் வார்த்தைகள் வெடித்தன. அது வேற யாருமில்ல! அதே அயலவர்தான்!

"மரத்துல மசுக்குட்டிகள் தொங்குது. உடனே  வெட்டுங்க ...."

மிரட்டல், விரட்டல்  கலந்த முறைப்பாடுகள் !

எங்கள் அனுமதியின்றி  இயற்கை  வளர்த்த  மரம். இத்தனை வருடங்களும்  அதன்  பலனை  அனுப்பவித்தவர்கள்  அயலாளர்.

இன்றோ

ஒரு தீமையைக் கண்டதும்  வீட்டுக்காரங்களுக்கு  அது  சொந்தம்!

கூலிகள் வைத்து மரத்தை வெட்ட  ஐயாயிரம் ரூபா பணம் அனுப்புவதாக அந்த அயலாளருக்கு உறுதியளித்துவிட்டு பெருமூச்சொன்றை மெல்லிழுத்தேன்..

எனக்கு  கொறக்காய்ப் புளி  தெரியும். இதன்   தாவரவியற் பெயர் Manilla tamarind இதுல என்ன  பகிடியென்றால் இதுதான் கோணப்புளி   என்று தெரியல . ஒரு
காய்கூட வாய்க்குள்ள வைக்கல. அதன் ருசி தெரியல. ஆனால்  சுளையா   ஐயாயிரம் ரூபா இந்த  மாசச்  சம்பளத்தில  மரத்த  வெட்ட  அங்க பறந்து போறதுதான்  கவலை!


-Jancy Caffoor-
22.02.2015

ஞாபகத் தீ


அன்றோர்
பொழுதொன்றில்
உன் கரத்தில் குவிந்திருந்த மாதுளங்கனியால்
என்னைச் சிவப்பாக்கினாய் 
இதழ்களின் சிணுங்கல்கள்
அழகாய் நம்மை மொய்த்த - அந்த
ஞாபகங்கள் நெஞ்சைப் பிளக்கின்றதடா!
---------------------------------------------------------------------------

நீ என்னை இம்சித்துச் செல்லும் போதெல்லாம்
திட்டுகின்றேன் உன்னை
வழிந்தோடும் சினத்தால் - உன்னைப்
போர்த்துகின்றேன் - இனி
நமக்குள் ஒன்றுமில்லயென
முடிவுரைகூட செப்புகின்றேன் உன்னிடம்
ஆனால்
நீ விட்டுச்செல்லும்  அந்த அப்பாவித்தனமான
மௌனத்தில்தான் - என்
இதயம் கனத்து
கண்ணீரில் கரைக்குது அன்பை!
------------------------------------------------------------------------

ஏழ்மைத் தேசத்தின்  பிரதிநிதிகளாய்
வியர்வைத் துளிகள்!
பசி ரேகைகள்  வரையும் ஓவியங்களாய்
அவலங்கள்!
அழுத்தங்கள் விழிகளுக்குள் வீழ்ந்து
அழுகிப் போகும் போதெல்லாம்
கன்னக் கதுப்புக்களில் உப்பளங்கள்!
இத்தனைக்கு மத்தியில்
அக்னிப் பிரசவங்களின் அழுகுரல்கள்
அடங்கிக் கிடக்கும் காப்பகமாய் மனசு!
அட
வறுமைக்குள் தோற்றுப் போகும் வாழ்வுகூட
ஒர் கணம்
தேற்றிக்கொள்கின்றது 
வாழ்க்கையின்னும் முடிந்து விடவில்லையென
நீயென்  அருகினிலிருப்பதால்!
--------------------------------------------------------------------

என் செல்லத்துக்கு,
இது
நாம் சிருஷ்டித்த உலகம் 
இங்குதான் 
நம் காதல் நம்மைக் காதலித்தது!
இங்குதான்
நம் குழநதைகளும்
நமக்குள் முத்தங்களைச் சிந்தின!
இங்குதான்
நாம்
உறங்க மறந்த பல இரவுகள்
நம் காதலை
கவிதைகளாய்ப் பேசின -
வா
இது நம்முலகம்!
தடையின்றி நம்மைப் பொறிப்போம்
காதலுடன்!
-----------------------------------------------------------------

நினைத்துப் பார்க்கின்றேன் - நம்
நிஜத்தின் வாசத்தை
அழகான நம் மனதுக்குள்
ஆழமான அன்பை வீசும் - அத்
தருணங்கள்தான்
இன்னும் நம்மை எழுதிக் கொண்டிருக்கின்றன
ஒருவருக்குள் ஒருவராய்!


- Jancy Caffoor-
  22.02.2015

2015/02/14

ஊழல்


அண்மையில் நடைபெற்ற தேசிய ஒலிம்பியாட் விஞ்ஞான தெரிவுப் பரீட்சை - 2015க்கு மேற்பார்வையாளராக அழைக்கப்பட்டிருந்தேன். கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலயப் பணி. இதற்கான கொடுப்பனவு ரூபா 750. எமது பணியை முடித்துக் கொண்டு ஆறு மணிக்கு வெளியேறும்போது அவ் விஞ்ஞான அதிகாரி கொடுப்பனவுப் பத்திரத்தை நீட்டி எமது கையெழுத்துக்களைப் பெற்றார். பணம் இன்று இல்லை. நாளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கினறேன் என எல்லோருக்கும் உறுதியளித்தார். இன்று இது நடைபெற்று ஈர் வாரங்கள்....

பணத்தை எதிர்பார்த்து கடமை செய்ய முடியாதுதான். ஆனாலும்
கொடுப்பனவுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகாரிகள் ஏதோ ஒருவகையில் சுரண்டுகின்றார்கள். இவ் ஊழல் அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல.
இவ்வாறான அரச அதிகாரிகளிடமும் குவிந்து கிடக்கின்றது இன்னும் வௌிச்சத்திற்கு வராமல்! சிறு தொகையை உறிஞ்சுவதும் ஊழல்தான். அவவிடம் இன்னும் இது பற்றி நான் மூச்சு விடவில்லை. ஆனாலும் இவ்வாறானவர்களின் அழைப்புக்களை இனி நிராகரிக்கவேண்டும். ஏனென்றால் நாம்தான் ஊழல், இலஞ்சத்தை வளர்க்க அனுமதிக்கின்றோம்.


-Jancy Caffoor-
  14.02.2015

கோபம்



சாலையோரத்தில் காற்றோடுரசும் ரோசாவை
வாஞ்சை யோடணைத்தேன் கைகளில்
சிரித்தது முள்
ரணம் தருவதை மறைத்து
...................................................................................

கோபம்!
மனக் கஷ்டம்
பண நஷ்டம்
சில காலங்களாக எனக்குள் வலை பிண்ணிக் கொண்டிருக்கும் இக் கோபம் இனி வராதிருக்கட்டும்


- Ms. Jancy Caffoor -
   14.02.2015

காதலர் தினம்



வருடா வருடம் 
சிவப்பு ரோசாக்களும் சிவக்கின்றன
பெப்ரவரியில் பன்னீர்த்துளிகள் வீழ்கையில்
வெட்கம் தொட்ட காதல்
மனசெங்கும் ஏங்கி
நிலாவௌியில் அன்பைக் களவாய் வாசிக்க!

அடடா

ஊர் செவி விரித்து சங்கதி கேட்குதோ!
காதலின் குணம் நுகர்ந்து
கேலியும் கிண்டலும் மாலையும் சில சேர
சிலவோ 
விமர்சனம் கண்டு அரிவாளும் அழுகையுமாய்
சமாதியில் வீழ
எங்கும் காதல் எதிலும் காதல்!
பேதங்களுக்கு அப்பால் பேசப்படும் மொழியாய் 

ஓ     இன்று காதலர் தினம்!

காற்றுவாக்கில் காதில் அதிர்ந்து
காத்து நிற்கின்றது நமக்கும் தன் வரலாற்றின் ஞாபகங்களை
மெல்லச் சொல்லிப் போக!

முத்தங்களும் பரிசுகளுமாய் பரிமாறு மின்று....
அன்றைய தியாகமொன்றும்
மீண்டும் உயிர்க்கின்றது சுயமாய்!

நீங்கள் அறிந்தவைதான்
இருந்தும் 
செவி கொடுங்கள் மீண்டுமொரு முறை!

அரசன் கிளாடிஸ் மிமி கிளர்ந்தெழுந்தான் 
ரோமாபுரியில் திருமணம் செய்பவர்கள்
சிரம் சிதைத்துக் கொல்லப்படுவார்களென!

உத்தரவின் அகோரத்தில் திருமண நிச்சயதார்த்தங்களும்
காதல் ஒப்பந்தங்களும் ரத்தாகும் வேள்வியில்...

பாதிரியார் வாலண்டைன்
பசுமை வார்க்கும் நெஞ்சினனாய்
ரகஸியமாய்
இல்லறமிணைக்கின்றார் காதலர்களை!

அறிந்தான் அரசன்
அவன் ஆக்ரோசத்தில் வாலன்ரைன்!.
சிறையில்
இரும்புக் கம்பிகளையும் துளைத்துச் செல்கின்றது
சிறைக்காலவர் தலைவனின் பார்வையிழந்த பூமகளின்
அன்பு!

அவள் அஸ்டோரியசு

சிரமிழக்கப் போகும் தன்னவனுக்காய்
துவண்டாள் பேதை
போராடினாள்   விளைவு
வீட்டுக்காவலில் வேராகினாள்!

கட்டுப்பாடுகள்
காதலின் சக்தி முன் வெறும் காற்றலைகளோ..

காவலை மீறினார் வாலன்டைன்
காகித அட்டை துளைத்தெழுதிய - அவர்
காதல் வாழ்த் தவள் கரம் சேரும் நேரம்!

சித்திரவதைக்கூடம் அவருயிர் பிரித்து
சத்தமின்றி கலைக்கின்றது
சத்தியக் காதலை!

அது
முதல் காதலர் வாழ்த்து!

270 வது வருடம் பிப்ரவரி 14 !
கண்ணீரில் கசிந்த காதலின் ஈரம்
இன்றும் காதலர் தினமாய்
காலத்தின் ஞாபகங்களில்


- Jancy Caffoor-
  14.02.2015


காதல் வாழ்க



பஸ்ல பயணம் செய்கிற ஒவ்வொருவரும் அப்பஸ்ஸ தவறவிடுற ஒவ்வொரு செக்கனுக்கும் பல நிமிட தாமதங்களப் பெற வேண்டும் எனும் உண்மையை மறுப்பதில்லை.

நானும் அவசரமாகப் பாய்ந்து பஸ்ஸேறி ஜன்னலோர இருக்கையில அமர்ந்தபோதுதான் நீண்ட பெருமூச்சொன்று என்னுள் எட்டிப் பார்த்தது........

ஜன்னலோரம்

மதிய நேர உக்கிர காற்றின் மோதலோடு சுவாசமும் சிக்கிக் கொண்டபோதுதான் சுகமும் அவஸ்தையும் கலந்த கலவையொன்றை அனுபவித்தேன். கண்களை மூடிக் கொண்டேன். காற்றின் தாலாட்டு இதமாய் வசீகரித்தது.

அது மூன்று பேருக்கான இருக்கை!

அருகில் இளஞ்ஜோடியொன்று அமர்ந்தது

அவள்

இன்னும் இருபதைத் தொடாதவள் முகமெங்கும் வழியும் பருக்கள் அவள் இளமையின் சுவடுகளாய். அவனும் அவளுக்கருகில் நெருக்கமாக அமர்ந்தான். இருவரும் கொழும்புக்கு பயணிக்கிறார்கள் போல். உணர்ந்து கொண்டேன் அவர்கள் காதலை!

அவர்களின் நெருக்கம் சங்கடம் தரவே பார்வையை வீதியோரம் திசை திருப்பினேன். இருந்தும் அத்திசை திருப்பலையும் மீறி

அவர்களின் அன்பின் ஈரம் என் பார்வையில் கசிந்தது. அவன் தன் கரத்தால் அவள் கரங்ளையும் பிணைத்து அவள் தோளில் சாய்ந்து ஒருவருக்கொருவர் குழந்தையாய் மாறி கண்மூடி காற்றில் தம் சந்தோசங்களை கலந்து கொண்டிருந்தனர். இக்காதலின் அன்பும் வசீகரமும் மகிழ்ச்சியின் ரேகையாய் அவர்களுள் ஒன்றித்திருந்தது. காதல் என்பது வெறும் அன்பை மட்டுமல்ல பாதுகாப்பு, அக்கறை, உரிமை, வாழ்க்கையின் பிடிப்பு, எதிர்கால நம்பிக்கை, ஆசைகள், கனவுகள் என அத்தனை அம்சங்ளோட  ஜீவநாடி என்பதை அவர்களும் உணர்த்திக் கொண்டே வந்தார்கள் அந்த ஒன்றரை மணி நேரமாய்.

ஆனாலும் 

எனக்குள்ள ஒரு டவுட்டும் இருக்கத்தான் செய்யுது. இந்த அன்பும் நெருக்கமும் ரசிப்பும் கல்யாணத்திற்கு அப்புறமும் எல்லோர்கிட்டயும் தொடருமான்னுதான்.

ஏன்னா 

பெரும்பாலான காதல். வாழ்க்கையின் யதார்த்தத்தில் நசுங்கி சீரழிஞ்சு போயிருக்கு. எதுவா இருந்தாலும் காமத்தை மாத்திரம் தேடாத ஆனால் அன்பை மட்டும் வாசிக்கும் எந்தக் காதலுக்கு நாம சல்யூட் அடிக்கத்தான் வேணும்!

அடடா 

இன்னைக்கு பெப்ரவரி 14 ஆச்சே!

உண்மையா நேசிக்கிற  எல்லோருக்கும் ஹாப்பி  வலன்ரைன் வாழ்த்துக்கள்!!

- Jancy Caffoor-
  14.02.2015



நேசிப்பதும் நேசிக்கப்படுதலும்


நாம நேசிக்கிறதும், நேசிக்கப்படுவதும்கூட சுகமான உணர்வுதான். இந்த அன்பு மட்டும் உலகத்தில இல்லையென்றால் பூபாளம்கூட பாதாளமாகி விடும்.

உண்மைதாங்க இந்த அன்போட வாசம் மனசுக்கு ரொம்பப் பிடிச்சுப் போனா, அதன் ஆயுளும்கூட  தடைகளையும் பிரிவுளையும் மீறி  ரொம்ப நாளா உயிர் வாழும்......!

"என்ன "மொனா"   நான் சொல்லுறது உண்மைதானே!......"

வெயிட்...........

நான் ஏன் அதை மொனாகிட்ட கேக்கிறேன் என்றுதானே யோசிக்கிறீங்க....?

ம்ம்..................!

அந்த அன்பு தாற செல்லச் சண்டைகளும், அப்புறம் ஈகோ பார்க்காம ஒருத்தர ஒருத்தர் விட்டுக்கொடுத்துப் போறதும், வாழ்க்கையில கஷ்டம் வாறப்போ ஆறுதலா ஒருத்தருக்கொருத்தர் தூணாகி சாய்ஞ்சு கிடக்கிறதும் இன்னும் எவ்வளவோ!

இது எங்க மனசோட  குரல்கள்!


- Ms. Jancy Caffoor -

என்னுள் நிரம்பும் நீ

 
காதல்
தனிமை    நிரப்பிய வெற்றிடத்தை
நிரப்புகின்றது அன்பால்!

ஒவ்வொரு இரவுகளும்
அவிழ்க்கும் கனவுகளில் - உன்
வாசம் தாலாட்டாய்
விழி மடிக்கின்றது!

என்
விரல்கள்  உன்னை மீட்டும் போதெல்லாம்
உதிரும் நாணத்தில்
உன் புன்னகையுமல்லவா
சிவந்து போகின்றது மருண்டபடி!

அன்பே
காதல் அழகிய வரம்!
அதனாற்றான்
நம் சுவாச வேலிகளில்
சுகத்தை தேய்த்துச் செல்கின்றது
உயிரும்!

நம்மைக் கடந்து செல்லும்  தென்றலில்
கசங்கிக் கிடக்கும் நம் முத்தங்கள்
இன்னும்
ஈரங் கக்கிக் கொண்டுதான்  கிடக்கின்றன
கதுப்புக்களில்!
ரகஸியமாய் தொட்டுப்பார்
ராத்திரிகளின் கிண்டல்களில் அவை
உலர்ந்துவிடப் போகின்றன!

என்னவளே..
இமைகள்  உரசிச் செல்லும் பார்வைகள்
மனவௌியில் சொக்கிக்  கிடக்கையில்
நம் வாலிபப் போர்வைக்குள்
வசந்தங்களின் வருடலல்லவா
வந்து வீழ்கின்றது!

அடடா
வெட்கித்து  கிடக்கும் - நம்
காதலின் கூடல்
சிலநொடிகளில் மோதலாய் வெடிக்கையில்
நம் விழிகளின் விசாரிப்பில்
அன்பும் அடங்கிப் போகின்றது
சிறு குழந்தையாய்

செல்லமே! - என்
காட்சியின் நீட்சியில் உறைந்திருக்கும்
தேவதை நீ
அதனாற்றான்  - என்
தனிமை விலக்கி
அரவணைக்கு முன்னன்பில்
நானும்
அரணமைத்து வாழ்கின்றேன்!

இறுக்கமாய் பற்றிக்கொள் என்னை
இதமாய்
உறவாய் - நம்
காதலும் வாழட்டும்!

நம்மைப் பரிமாற்றும்  குறுஞ்செய்திகள்
நிறுத்தப்படுமபோது
சொல்லிவிட்டுத்தான் போகின்றேன்
தினமும்
ஆனாலும் மனது
உனைப் பிரிந்து வரமறுக்கும் போதெல்லாம்
நீயோ ஊடல் கவிதையில்
உனை  எழுதுகின்றாய் வலியோடு!

காமம் துறந்த நம் காதலில்
தாய்மையின் விலாசம் முகங்காட்ட
நீயும் நானும்  சிறு கிள்ளையாகி
அன்பால்
வாழ்வை நெய்துகொண்டிருக்கின்றோம்
அழகாய்!

அன்பே
உன் மனதைக்  கிழித்து
நானெழுதும் அன்பின் வருடல்கள்
உன்னுள் விதைக்கும்
கனவுளையும் ஏக்கங்ளையும் தொட்டுக்கொள்ள
வருவேன் ஓர் நாள்

அதுவரை
உன்
நினைவுக்குள் கவிதையெழுதும்
பிரதி விம்பமாய் நான்
சுருண்டு கிடக்கின்றேன் உன்னுள்

- Jancy Caffoor-
  14.02.2015