2012/12/10
அன்பென்ற மழையிலே
உடைந்து வீழ்ந்தது
விண் வைரமொன்று- அதில்
முகம் பதிக்கின்றேன் லேசாய்
அழகாய்ச் சிரிக்கின்றா ரென் னன்னை!
தொலை தூர ஆகாயம்
களையிழந்து வெறிக்கின்றது - என்
அன்னையின் அன்பாழத்தில்
தான் தோற்றுப் போனதாய்!
மலரிதழ்களின் விளிம்போரம்
விரல் துடைக்கின்றேன்
நினைவுகளாய்த் தெறிக்கின்றது - என்
அன்னையின் மென் கரங்கள்!
அமைதி வருடலால்
அடங்கிக் கிடக்கின்ற இரவுகளெல்லாம்
முகிழ்க்கும் உறக்கம் பிளந்து
கனவாய் விழி திறப்பார் என் னன்னை!
நசியும் கடலலைகளில்
புரளும் நீர் மேனியாய்
கரையும் மன அவஸ்தைகளை
அகற்றும் தேவதையாய் தினமும் என் னன்னை!
சோம்பலுற்று விடிகின்ற வென்
ஒவ்வொரு நொடிப் பொழுதையும்
இயக்கும் கடிகாரமாய்
இன்முகம் காட்டுவதும் என் னன்னையே!
வெம்மையின் இம்சிப்புக்களால் என்னுள்
தளிர்க்கும் கண்ணீர்த் துளிகளை
உலர்த்தும் தென்றலாய் - என்
உலகினை யாளும் மூச்சுக் காற்றும் அவரே!
ஜன்ஸி கபூர்
ஸ்பரிசம்
உன் புன்னகைச் சிதறல்களின்
வாசம் தேடி
அலைகின்றதே
வண்ணாத்துப்பூச்சி!
பாவம்............
மலர்களோ காத்திருக்கின்றன
உன் விழி வண்டுகளின்
முகவரிக்காய்!
தரையில் விழுந்து கிடக்கின்றேன்
நுரை பூசும் உன் தழுவலுக்காய்..........
என் தேகம் அணைக்கும்
உன் அலைகள்...............
விட்டுச் செல்கின்றனவே
உன் ஈர முத்தங்களை!
தென்றல் மேனி குடைகின்றது
பூக்களாய் சிதறுகின்றன
குளிர்த் துளிகள்!
உன் அருகாமையின்
ஸ்பரிசங்களால்
வெம்மையின் வெடிப்புக்கள்
நரம்பை உடைத்தெறிகின்றனவே!
பார்க்காதே என்னை - நம்
விழிப்பூக்களின் மோதுகையால்
வண்ணத்திகள் - என்
பெண்மைக்குள் சிறகு நுழைத்து
விட்டுச் செல்கின்றனவே தவிப்பை!
என் வாழ்வின் முகவுரை!
இருந்தும்
நானிட்டேன் சில மறுப்புரைகள்!
அவையென்
கற்பின் காப்புரைகள்!
புரிதலும் பரிவுமே- மெய்
காதலின் சிறப்புரைகள்!
புரளும் அலை கூட சலிப்பதில்லை
தரை நனைத்து மீள் கடல் நுழைய
ஆதவச் சிதறல்கள் சினப்பதில்லை
ஆர்வமாய் தினமும் நம்மை யெட்டிப் பார்க்க
காற்றுக் கூட தோற்பதில்லை
வியர்வைத் துகள்களை துவம்சம் செய்ய
மனிதன் மட்டும்......!!
தோல்வியின் இம்சிப்பால்
வாழ்வையை நசித்துக் கொள்கின்றான்!
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Posts (Atom)