About Me

2013/03/08

அறிவாயோ



தேவதை என்றாய் - என்
வாழ்வின் தேள்வதை யறியாமல்!

கண்மணி என்றாய் - தினம்
கண்ணீருக்குள் அழுகும் விம்ப மறியாது!

உதிரும் புன்னகை அழகென்றாய்
என் ரணங்களின் ஆழ மறியாது!

உன் கனவுகள் நானென்றாய்
வெட்டப்படும் பலியாடு நானென்பதை யறியாது!

நிம்மதி நானென்றாய் - நிதம்
நிம்மதி தேடும் ஆத்மா நானென்பதை யறியாது!

எரியூற்றப்படும் எனக்காய்
ஏக்கங்கள் வளர்க்கு முனக்காய்

அனுதாப அலைகள் அனுப்பி விட்டே ன்
 மன்னித்து விடென்னை  மானசீகமாய்......

விடுதலை வேட்கைக்காய் விண்ணப்பித்த
மரணக் கைதியிவள்!

Jancy Caffoor

அன்பின் புன்னகை


அன்பின் புன்னகையில்
அடங்கிக் கிடக்கின்ற தென்னுலகம்!

அறியாமைத் தீ யனல்கள்
அணைந்து போகத் துடிக்கின்றன!

இதயவெளிச் சுவரெங்கும் வருடி
முகாமிட்டு கொள்கின்றது காற்றும் தென்றலாய்!

ஈடேற்றத்தின் தலை வருடலால் வாழ்வொன்றும்
கண் முன்னால் விரிகின்றது விசாலமாய்!

உறவின் நறுமணங் கண்டு உருவாகும் மொழியொன்று
 உதடு குவிகின்றது 'அம்மா' வென்றே!

ஊரின் திருஷ்டிக் கஞ்சி முகத்தை யன்னை கரம்
முந்தானைத்  திரையிட்டு மறைத்துக் கொள்கின்றது!

எட்டுத் திக்கெங்கும் என் பெயரொளி வீச
ஏக்கம் சுமந்த உணர்வொன்று தாய்மையாய்
வருடுகின்ற திங்கே!

ஐயமகற்றும் கற்றலின் நிழலாய் கண் முன்
விரிகின்றது தாயின் அறிவகம் ஆழமாய்!

சூரிய தேசத்தின் வெம்மைக் குடை யெல்லாம் சரிந்து
திரையிட்டு கொள்கின்றன பசுமையைப் பூட்ட!

சிப்பிக்குள்ளிருந்த வெண்முத்தும் புன்னகைத்தே
முத்தமிட்டு கொள்கின்றது அன்னை விரல் பற்றி!

காற்றசைக்கா கருங்கல் மெல்ல
இளகிக் கிடக்கின்றன யவர் கருணைப் பார்வை கண்டு!

சுவர்க்கமொன்று சுரங்கம் தந்தே வழிவிடுகின்றது
சுகந்தம் மணக்கும் தாயின் பூவடிக்காய்!

இத்தனைக்கும்............
என் தாய்க்கீடேது இத் தரணியில்!

Jancy Caffoor

சீ தனம்


பெண் மலர்களுக்கிடப்படும்
முள்வேலி!

வாழ்க்கை வியாபாரத்திற்கான
முதலீடு!

பெண்மை ஸ்பரிசங்களுக்கான
நுழைவுச் சீட்டு!

ஏழைக் கன்னியரின் சுயம்வர
கைவிலங்கு

திருமணத்தின் வருங்காலத்திற்கான
உத்தரவாதம்!

ஆணின் வாழ்வியலுக்காக
பரிந்துரைக்கப்படும் நன்கொடை!

பணத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படும்
பண்டம்!

சொகுசு வாழ்விற்காக வழங்கப்படும்
அனுமதி!

ஏழைகளின் கனவுகளுக்கு விதிக்கப்படும்
அபராதம்!

சோம்பேறிகள் கணக்கில் வைக்கப்படும்
அதிஷ்டலாபச் சீட்டு!

"சீ" தனம் சொல்லாதோர்
கையேந்தும் பிச்சை!













ஓடு மகளே ஓடு



நிமிடங்கள் யுகங்களாய் மாற்றிய யுத்தம்
உன்னை..........
வாசித்துச் சென்றதில் வலிப்புடன்
வீழ்ந்து கிடக்கின்றாய் அகதியாய்!

சுகம் மறந்த சுவாசம்
விட்டுச் சென்ற சோகங்களின் வரலாறாய்.......
விரல் பிடிக்கின்றாய் - உன்
வெற்றுடல்களில் பீதியை நிரப்பியவாறு!

யுத்த டயறிக்குள் வரிகளான - உன்
வாழ்வின் தொடக்கத்தில்.....
கழுகுகளும் காட்டேறிகளும் காவல் காக்கின்றன
உன் னிரத்தத்தை உறிஞ்சியவாறு!

வாழ்வை இன்னும் நீ
தொடங்கவேயில்லை
ஆனால்..........
முடிவுரைகளின் விண்ணப்பங்கள்
குவிகின்றன உன்னிடம்!

இன்னும் நீ பூக்கவேயில்லை
முட்கள் குதறுகின்றன - உன்
அழகான மேனியை
சாம்பர் மேட்டில் புதைக்க!

உன் பிள்ளைச் சரிதத்தில்
கறைகளாக்கப்பட்ட அகதி வாழ்வில்
வேரறுக்கப்பட்ட வசந்தங்களின் வலியே
உன் பேச்சொலியாய் உருளுது உலகில்!

மகளே............
உன் பிஞ்சு விழிக் கனாக்களில்
விசம் தடவுமிந்த சாத்தன்கள்
இருந்தென்ன ..இறந்தென்ன
அழிந்தே போகட்டும் ஓர் நாள்!

இந்தப் பிரபஞ்சம்
ஓர் நாள் வாய் திறக்கும் அகோரமாய்.......
இவர் மெய்யேந்திய குண்டுகளும் சன்னங்களும்
தீக்குளிக்கு மிவர்கள் பாவங்களை!

ஓடு மகளே ஓடு
மண்டைகளால் பதிய மிடப்படுமிந்த
பூமிக்குள்..........
நாளை விடியலொன்று எட்டிப் பார்த்திட
நீயும் முகவுரையெழுதிட

ஓடு மகளே ஓடு!



இவர்கள்



சோலைக்குள் தீச் சுவாலைகள்
வேலியாய் முளைத்திருக்க..............
வறுமையின் முகவரியாய் இவர்கள்
வாழ்க்கை அடிக்கடி

தோற்றுப் போன வசந்தங்கள்
இவர்களுக்கு....................
வேரறுந்து போனதில்
கண்ணீர்ச் சந்ததியினராய் - தம்மை
அறிவிப்புச் செய்கின்றனர்!

ஒட்டியுலர்ந்த மேனியில்
எட்டியுதைக்கும் என்புகளும்
ஏக்கம் நிறைந்த வாழ்வும்.......
இவர்களின்
உரிமைகளாய் பிசைந்து கிடக்க!

புறப்பட்டு விட்டனர்
பசியின் நிழல்களில் கோலம் போட்டே........
தம்முயிர் அணுக்களில் மரணம் தேக்கி!