About Me

2014/08/04

கவாஸ்கர்






வாழ்க்கை அழகான கனவுகளின் கூடாரம். வாலிபம் அக் கனவுகளை மூடிக் கிடக்கும் திரை. இந்த வசந்த வனப்புக்களையும் அறுத்தெறியும் சதியாக விதி!

இன்னும் வாழத் தொடங்காத வயது..
இருபத்திரெண்டு!
பருவத்தின் விளிம்பில் நடமாடும் உணர்ச்சிப் பிழம்பாய்!

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. கலங்க வைத்து தன் ஆட்டத்தில் பலரை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை!

அதற்கு இவனும் விதிவிலக்கல்ல...

கவாஸ்கர்...!

வறுமைச் சிறையை உடைத்தெறிந்து வாழத் தெரிவு செய்த மார்க்கமாய் இஞ்ஜினியரிங் படிப்பு இவன் நிழலாகியது. ரொம்ப நல்லவன் என்பதால் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருப்போரை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான். இவனது இந்த அழகான இரசனை அவனுக்கு பல நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது..

வள்ளியூர் ....
திருநெல்வேலி....
இவன் பாதம் பட்ட  தரைச்சுவடுகள்!
M.E.T College of Engineering ..இவனைச் செதுக்கிய கல்விக்கூடம்..

இந்து , நாடார் குலம்...இவன் கலாசார சின்னம்..
வாழ்க்கையைக் கற்க புறப்பட்டவன் காலனிடம் சிக்கித் தவித்த போது, அவன் கனவுக்கூடாரங்கள் சிதைந்து கல்லறையாகியது..
தான் ஆசையாக வாங்கிய உந்துருளியில் பயணித்த போது விபத்துக்குள்ளானான். வேகமாகப் பயணித்ததில் ஏற்பட்ட விபத்தா அல்லது கொலைச் சதியா ...


இறைவன்தான் அறிவான். இவனுக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் எதிர்பார்ப்புக்கள் மொய்த்திருக்கும். அவற்றைத் தனக்குள் சேகரித்திருப்பான் அல்லது தன் மனதைக் கவர்ந்தவர்களிடம் பகிர்ந்திருப்பான்.


மெல்லன விரிந்த மொட்டொன்று, தன்னிதழ்களை விரிக்க முன்னரே வாடிப்போனதுதான் கவலை..

தன்னைக் கடந்துபோன ஒவ்வொரு நொடிகளிலும், தான் அற்ப ஆயுசில் போவேனென நினைத்திருப்பானா.... விதியின் சதிராட்டத்தில்....இவனும் ஒரு பங்காளி!

ஜூன் 5ம் திகதி தனது பிறந்த நாளைக் கொண்டாடியவன், நினைத்தும் பார்த்திருக்க மாட்டான் ஜூன் 24ல் தன் கல்லறையை மண் திரட்டுக்களும் அக்கினியும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்குமென்று!

மரணம்..............

இவனைத் தேடி வரவில்லை மாறாக மரணத்திற்கான அழைப்பானை இவனால் விடுவிக்கப்பட்டது மறக்க முடியாத சோக வடு! வாழ வேண்டிய வயது...அற்ப ஆயுசில் உயிர்ப்படங்கிப் போவது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத சோகம்தான்..


அவன்  சோகத்தினை வாசிக்கும் கண்ணீர்த்துளிகள்!

ஒவ்வொரு பெற்றோரும். தம் பிள்ளைக்கு உயிர்ப்பூட்டி வாழ்க்கையும் தந்து நடமாடச் செய்யும்போது பலரோ அந்த வசந்தத்தை ஏதோ ஒரு வகையில் கரைத்து விடுகின்றனர். விதி பறித்த அந்த உயிர் மீள வருமா..

நம் வாழ்க்கையின் பெரும் பகுதி குடும்பத்தினருடனான சந்தோசத்தில் பகிரப்பட வேண்டும். ஆனால் மாறாக பலரோ அவர்களைக் கண்ணீரில் தள்ளி விட்டு காணாமல் போய் விடுகின்றனர்.

மரணக் குகைக்குள் நுழைந்த அந்தச் சின்னவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...

- Ms. Jancy Caffoor -

2014/08/03

ஏனோ



இப் பிரபஞ்சத்தில்
நானும்
நீயும்
இரு உருக்கள்
இறுகிய பாறைகளல்ல
அழகிய அன்பை யுடைக்க!

நம்
விழிகளில் விம்பம்
விழவேயில்லை யின்னும்
இருந்தும்...
அகக் கண்ணில் நம் நகர்வுகள்
அடிக்கடி வீழ்த்தப்பட்டு
வீம்பாய்
முறைக்கின்றன செல்லச் சண்டைகளாய்!

அடுத்தவர் முறைப்பில்- நம்
விருப்புக்கள் இடமாறிச் செல்லும்போதெல்லாம்
சிறகடிக்கும் அன்பும்
உயிர்க்கின்றன இதமாய்!

என்னை யுன்னிடம் நிருபிக்க
அன்பு மாத்திரமே யுண்டு!

பத்திரப்படுத்து அதனை - நாளை
என் ஞாபகங்களாவது
பொய்க்கா மலிருக்க!

காலத்தின் சிதைவில்
காத்திரமான என் அன்பும் உன்னில்
கறைபட்டுப் போனதோ!
கலங்கி நிற்கின்றேன்


- Jancy Caffoor-
 13.08.2014


சிந்தனைத்துளிகள்



எப்படி வாழ வேண்டுமென்று நினைக்கின்றோமோ அதனைக் கற்பனையில் செதுக்குவோம்!

எதனைச் செய்ய வேண்டுமென்று துடிக்கின்றோமோ அதனை செயலாய் உருவாக்குவோம்!

நம்மை தயார்படுத்தும் ஆற்றல் - நம்
உள்ளத்துணர்வில் பதிந்துள்ள சொற்களே!

ஏனெனில்....

நாம் சொல்லும் சொற்கள் அல்லது கேட்கும் சொற்களுக்கேற்ப நம் நடத்தைகளும் மாறும்!
----------------------------------------------------------------------------------------------

உறவுகள் உடைந்து விடக்கூடும்.
காதலும் கரைந்து விடக்கூடும்..

ஆனால்....

உண்மை அன்புள்ள நட்புக்கள் நம்மை விட்டுப் போகாது.
எத்தனை வருடங்கள் ஆனாலும் அதே எதிர்பார்ப்பற்ற அன்பு!

உண்மைதான்...

நட்பே அழகானது. இங்கு பேசுவது உணர்ச்சிகளல்ல. அன்பான உள் மனம் மட்டுமே!






வழித்துணை



நாம் வாழ்க்கையில் சந்திக்கும் நபர்கள் ஏதோ ஓர் வகையில் நமக்குப் படிப்பினையாக உள்ளனர். அந்த படிப்பினைகளைப் பகிரும் பதிவு இது
---------------------------------------------------------------------------------------------

இன்று....
யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ் என்னைச் சுமந்தவாறு பயணித்தது என் இருப்பிடத்தை நோக்கி! சிறிது நேரத்தின் பின்னர் முன்பக்கத்தில் ஓர் இருக்கை கிடைக்க.

அப்பாடா.... அமர்ந்தேன்!
எனது சற்று முன்புறமாக ஓர் கிறிஸ்தவப் போதக சிஸ்ரர் இருந்தார். அவர் ஆங்கிலத்தில் பஸ் சாரதியுடன் தான் இறங்க வேண்டிய இடம் தொடர்பாக கேட்டுக் கொண்டே வந்தார். பஸ்ஸில் இருந்தவர்கள் தமிழ் அல்லது சிங்களம் பேசக்கூடியவர்கள். கோவாவிலிருந்து வந்த இச்சிஸ்ரரின் பிரச்சினையை யாரும் காது கொடுக்கவில்லை.

பேரூந்து

சாலியவெவயில் உணவுக்காக நிறுத்தப்பட்டபோது, அச்சிஸ்ரர் என்னை நெருங்கினார். ஆங்கிலத்தில் , எங்கே போகின்றாய்" என்றார்.
நானும் பதில் கூறினேன்.
தான் ஹபரணை போவதாகவும், எப்படி எந்த பஸ்ஸில் போக முடியும் என்றும் கூறினார். நானும் பதில் கூறினேன்.
அநுராதபுரம் வந்து போங்கள் என்று சொன்னபோது அவர் மறுத்தார். தனக்கு நேரம் போகுமென்று சீக்கிரம்  தானங்கு போக வேண்டுமென்றும் கூறினார்.

பேரூந்து மின்னல் வேகத்தில் பறந்தது. திடீரென போக்குவரத்துப் பொலிசார் பஸ்ஸை நிறுத்தி அரை மணித்தியாலம் தாமதிக்க வைத்தபோது அவர் பதற்றமும் அதிகரித்தது.

போகும் வழியில் பஸ் இறக்கம் இருந்தால் இறக்கி விடும்படி சாரதியிடம் கூறினார்.

ஆனால் அவர் கோரிக்கை நிறைவேறவில்லை.

பஸ் அநுராதபுரத்தை அடைந்தது. என்னுடன் வரும்படி அழைத்தேன். இறங்கினார். வழமையாக மட்டக்களப்பு பஸ் நிறுத்தப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அவர் கெட்ட காலம் அங்கிருந்தோர் மாலை  4.30 ற்குப் பிறகு பஸ் புதிய பஸ் நிலையத்திற்கு வருவதில்லை என்றும் பழைய நகர் சென்றால் தம்புள்ள பஸ்ஸில் ஏறி செல்ல முடியுமென்று கூற, நானும் ஆட்டோ ஒன்றை அவருக்காகப் பேசினேன்.

ஆட்டோக்காரன் 150 ரூபா கேட்க சிஸ்ரர் 100 ரூபா சொல்ல பயணம் தடைப்பட்டது. மீண்டும் சிறிது தூரம் நடந்து இன்னுமொரு ஆட்டோவை பேரம் பேச அவனும் அதே வாடகையை கேட்க வேறு வழியின்றி சிஸ்ரர் ஆட்டோவில் ஏறினார். தனக்கு பழக்கமில்லாத ஊரென்பதால் என்னையும் பஸ் நிலையம் வரும்படி அழைத்தார்.

அப்பொழுது நேரம்  மாலை 6 மணி. அவர் அழைப்பை நிராகரிக்க மனமில்லை என்றாலும்கூட மறுத்தேன். என்னை வீட்டில் தேடுவார்களென!

அவ் ஆட்டோக்காரனுக்கு விபரம் சொல்லி பத்திரமாக அவரை அனுப்பி வைத்தது மனதுக்கு திருப்தியாக இருந்தது.

உண்மையில் நமக்கு பழக்கமில்லாத ஊரில்கூட உதவி செய்ய யாரேனும் வருவார். இறை நம்பிக்கை பலமாக இருந்தால்!

-Jancy Caffoor-

சுயநலம்



சாலையோரம்

அருகே தலை நிமிர்ந்து நிற்கும் மரங்களின் அழகான மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அதன் நறுமணமோ நாசிக்குள் உட்புகுந்து மனதை வருடிக் கொண்டிருக்கின்றது. பூக்களை மிதித்துதான் அவ்வழியைக் கடக்க வேண்டும். சுதந்திரமாக உதிர்ந்து கிடக்கும் இயற்கையின் கொடையை! மிருதுவான மேனியுடன் சாலையோரம் வீழ்ந்து கிடக்கும் அம் மென்னிதழ்களை நசுக்க யாருக்குத்தான் மனம் வரும்.

இருந்தும் நம் வழிப்பாதையின் தடைக் கற்கள் அவை! கடந்துதான் ஆகவேண்டும்.மிதிக்கின்றேன். இதமான மென்மையுடன். மனசு வலிக்கின்றது. நாளை அவை உலர்ந்து சருகுகளாகி விடலாம். அல்லது அழகு அழிந்து காற்றில் வேறெங்காவது பறந்தும் போகலாம்! நம் சுயநலம். இயற்கையை ஏதோ வகையில் இம்சித்துக் கொண்டே இருக்கின்றது.

-  Jancy Caffoor -