About Me

2014/10/01

சிறுவர் தினம் - 2014


இன்று ஒக்டோபர்  01 ந் திகதி, சர்வதேச குழந்தைகள் தினம்..
-------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு குழந்தையும் தன் தாயின் கருவறையில் ஜனனிக்கும்போது தன் ஆத்மாவில் நன்மைகளை நிறைத்தே பிறக்கின்றன. நல்ல சூழல் நல்ல குழந்தைகளை சிருஷ்டித்து இவ்வுலகில் சிறப்பான மனித நடமாட்டங்களை உருவாக்குகின்றது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைக்க முடியாது என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல யதார்த்த வாழ்வியலின் ஓரம்சம். எனவே தம் நடத்தைகளைச் சீக்கிரமாக மாற்றக்கூடிய சிறுவர் பருவத்தை சரியான திசையில், இலக்கில் இட்டுச் செல்வது காலத்தின் தேவையாகும். ஏனெனில் இப்பருவத்தில் ஒழுக்கம் பிறழ்ந்து நடமாடும் ஒவ்வொரு பிறவியும் முதிர்ச்சியடைந்த பிறகு பலரின் விமர்சனத்திற்கு ஆளாகும் பாவிகளாகின்றனர்.

முதுமையின் விளைநிலம் இளமை ததும்பும் சிறுவர் பராயம். இப்பராயத்தை சிறப்பானதாக மிளிரச் செய்வது எமது- கட்டாயக் கடமையாகும்.  அந்த வகையில் குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அவையினால்(unicef) 1954 ஆம் ஆண்டு  பிரகடனப்படுத்தப்பட்ட இச் சிறுவர் தினம் இலங்கையில் ஒக்டோபர்  1 ஆம் திகதி கொண்டாடப்படுவது யாவரும் அறிந்ததே!

இந்நாளில் உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் நினைவுபடுத்தப்படுகின்றன. ஏனெனில் உலகிலுள்ள காமுகர்கள் அரங்கேற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை சட்டங்களால் மட்டும் நிறுத்த முடியாது. ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாக்க தனது பலகீனத்தைக் களைதல் வேண்டும். அதற்காக தன்னை உணர்தல் வேண்டும். ஒவ்வொரு சிறாரும் தன்னை முழுமையாக உணர, சிந்திக்க சிறுவர்தினம் களமமைத்துக் கொடுக்கின்றது

குழந்தை தனது ஒவ்வொரு செயலையும் வளர்ந்தவரைப் பார்த்தே செய்கின்றது. பின்பற்றுகின்றது. எனவே சிறுவர் பருவம் என்பது குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தின் ஓர்நிலை. சிறார் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அநீதிகளையும் தொடர்ச்சியாக உள்ளெடுப்பாராயின் காலப்போக்கில் அவர்களும் வன்முறையெனும் ஆயுதமேந்திகளாகவே மாற்றப்படுவார்கள்.

எனவே இன்றைய சிறுவன் நாளைய தலைவன் என்பதை மனதிலிருத்தி அவர்களின்  அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க ஒவ்வொரு வளர்ந்தோரும் முன்வரல் வேண்டும். இதற்கு அடிப்படையாக  கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ள வழிப்படுத்த வேண்டும்.


எனவே  இன்றைய நாளில் சிறுவர்கள் தமது அடிப்படை உரிமைகளைப் போஷித்தவாறே, சகல சௌகரிகங்களும் பெற்று தத்தமது இல்லத்தில் மனநிறைவுடன் வாழ வாழ்த்துவதோடு,  இவ்வாழ்க்கை அவர்களுக்குக் கிடைக்க நாமும் முதியோர் தினத்தை நினைவுகூர்ந்தவாறு இறைவனைப் பிரார்த்திப்போமாக!


2014/09/30

வாழ்க்கை


சூழ்நிலைகள்தான் நம்மைத் தீர்மானிக்கின்றன. அதனால்தான் நேற்று எடுத்த முடிவுகள் இன்று அவசியமாகாமல் நாளை மாற்றப்படலாம். மாற்றங்கள்தான் வாழ்க்கை..காலமும் நம்மை நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டே இருக்கின்றது. அதுதான் வாழ்க்கையின் பலம். சுவாரஸியங்களை நமக்குள் விட்டுத் தரும் தோற்றங்கள்.....

வாழ்வோம்!
வாழ்ந்து காட்டுவோம்!!
நமக்குப் பொருத்தமான வாழ்வுக்குள் நம்மைத் தயார் படுத்துவோம்!!!


-----------------------------------------------------------------------------------

ஈரம் மறந்த பூமியோரம்
வேரூன்றும் உயிர்க்கூடுகளின்....
கனவுகளில்  நீராகாரம்!
கண்களிலோ விழிநீர் கோலம்!


-------------------------------------------------------------------------------------------------


சிதறிக் கிடக்கும் சின்னச் சின்ன விசயங்களில்தான்
பென்னம் பெரிய சந்தோஷங்கள் வீழ்ந்து கிடக்கின்றன....
அதுபுரியாம நாம அந்தக் கணங்களையும் தொலைத்துவிட்டு எங்கேயோ போய் தேடிக் கொண்டிருக்கின்றோம் மன அமைதியை!

வாழ்க்கையை ரசிப்பதற்கு நம்மை நாமே ஏற்றுக் கொள்ளும் மனம் போதும்.............நம்மை நாமே ஆளும்போதுதான் நமது பலமும் பலகீனமும் புரிய ஆரம்பிக்கின்றது! வாழ்கின்றோம் என்பதைவிட இப்படித்தான் வாழனும் எனும்போது மனதும் பக்குவப்படுகின்றது!

இந்தப் பக்குவம்தான் நிம்மதிக்கான அடிவருடல்!
வாழ்ந்துதான் பார்ப்போமே!

--------------------------------------------------------------------------------------------------

உன்னை எனக்குத் தெரியும் - நீ
என்னிடம் உன்னை விட்டு விட்டுப் போன
கணத்திலிருந்து!



இருந்தும்............
உனக்காய் காத்திருக்கின்றேன்
சிறு பிள்ளையாய் நானும்!
என்னை நீயும் அணைத் தென் நெற்றியில்
அழுத்து மந்த அன்புக்காய்
காத்திருக்கின்றேன்.........
இன்னும்!

------------------------------------------------------------------------------------


பளபளக்கும் ஔி நாடி
பறந்து வரும் ஈசல்களெல்லாம் - தம்
சிறகறுக்கின்றன அற்ப ஆயுள்தேடி!
.
சிறப்பான மாந்தரும் - தம்
தவறுகளுக்காய் வருந்தாது வழி
தவறிப் போகின்றனர் அற்பர்களாய்!

--------------------------------------------------------------------------------------


அன்பு சாகா வரம்
அதனால் நீயோ......
எனக்கு இன்பஸ்வரம்!
பூக்களுக்கும் வலிக்குமோ
நீ விரல் தீண்டா உன் பூவை அவை
தாங்குவதால்!

--------------------------------------------------------------------------------------

இருட்டில் இறுமாந்திருந்த
குப்பி லாம்பு.................
ஔிப் பிராவகத்திலே
அழுது வடிகின்றது!
ஏற்றுவோர் யாருமின்றி!
.
அடுத்தவருக்காக தன் சுயமிழப்போரும்
கவனிப்பாரற்று காலத்துள் புதைந்து விடுகின்றனர் 
தன்மானமிழந்து!
.
இதுதான் வாழ்க்கைப் போக்கு!

------------------------------------------------------------------------------------------

கனவுகளுக்கும் கால்கள் இருக்கின்றதா
தினம்..........
உன்னிடம்தானே வந்து நிற்கின்றன.......
இருந்தும்
விரல் நீட்டுகின்றாய்
உன்னை மறந்து போவதாய்!

------------------------------------------------------------------------------------------


அதிகாரம் ஒரு ஆட்சிபீடம்...
அதன் கையசைப்பில்
ஆயிரம் தலை கவிழ்ப்புக்கள்!
இருந்தும்....
சூடிக் கொள்ளும் முடி
வாடி வீழும்போது......
ஓடியணைத்துக் கொள்ள யாரும் வருவதில்லை - தன்
நிழல் தவிர!

-------------------------------------------------------------------------------------------

2014/09/27

கற்றல் பெறுபேறு B. Ed

கடந்த 25.09.2014 அன்று எனது கல்விமானிப் பட்டப் பரீட்சை இறுதி வருடப்​பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

அல்ஹம்துலில்லாஹ்!

இப்பெறுபேறுகள் எனக்குக் கிடைக்க  ஆசியளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு முதல் நன்றியைப் பகிர்ந்தவளாய், கற்றலுக்கு ஊக்கமளித்த குடும்பத்தார், வழிகாட்டல் தந்த ஆசான்கள் மற்றும் என்னுடன் கற்றலில் இணந்த வவுனியா கற்கை நிலைய ஆசிரிய நட்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்  உரித்தாகட்டும்




2014/09/26

மனசின் வரிகள்


அந்தகாரத்தில் அந்தரங்கமாய்
கார்கொன்றல் பிழிந்த சில சொட்டுக்கள்............
மண்வாசனை நுகர்ந்ததில்
வெட்கப்பட்டு நனைகின்றது 
இருள்!
------------------------------------------------------------------------------------


மாற்றங்கள் வேண்டும் வாழ்வினில்......
அப்பொழுதுதான்....
உளச்சீற்றங்கள் தணிந்து நம்மை நாமேயாளும்
கொற்றனாய்.....
ஏற்றங் காணமுடியும்!

--------------------------------------------------------------------------------------------------

இரவுகள் சுய விசாரணை செய்கின்றன
என்னில்................
பகலிலே சூழ்நிலைகள் பொருத்திய முகமூடிகளை!
மென்மையின் ஸ்பரிசங்களில்
வீழ்ந்துகிடக்கத் துடிக்கும் மனம்........
இப்போதெல்லாம் .......
வன்மையின் வீச்சுக்குள் - தன்னைத்
தொலைத்துக் கொண்டிருக்கின்றது !


------------------------------------------------------------------------------

நா.......
.
சுதந்திரமாக அலைவதால்தான்...
வார்த்தைகள் கோபத்தின் அடிமையாகின்றன.
அடுத்தவர் மன முருக்கும் கோபத்தைத் தடுத்துக் கொள்ள நாம் போராடுவதுகூட , பிறர் நம்மீது வைத்திருக்கும் மதிப்பைக் காப்பாற்றும் ஓர் அடையாளம்தான்!
.
ஆனால் ..........
.
எத்தனை பேரால்தான் தமது அடையாளத்தைப் பேண முடிகின்றது..............














மொஹமட் ஸல்மான்



அஸ்ஸலாமு அலைக்கும்,


உலகளாவிய ரீதியலி்ல் காலத்திற்குக் காலம் மனிதர்களால் பல்வேறு சாதனைகள் புரியப்பட்டு அவை சாசனங்களில் பதியப்பட்டு வருகின்றன.

ஆனால் ..........

எவ்வித உலகாயுத நன்மைகள், பதவிகள் என்பவற்றை எதிர்பாராது , இறை திருப்தியை மாத்திரம் மனதிலிருத்தி புரியப்படுகின்ற அல்குர்ஆன் மனனமிடல் எனும் இந்த நினைவாற்றல் சாதனை ....உலக நிறைவு வரை நிகழ்த்தப்படும் ஆன்மீகச் சாதனையாகும்...இது பால், அந்தஸ்து, வயது வேறுபாடின்றி அவரவர் முயற்சிக்கேற்றபடி வெவ்வேறு கால இடைவௌியில் நிகழ்த்தப்படும் ஒன்றாகும்..

அல்குர்ஆன் மனனமிடலென்பதும் அல்லாஹ்வின் ஏற்பாடே...

ஏனெனில் அல்குர்ஆன் (87 :6) வசனம் பின்வருமாறு கூறுகின்றது..

"நாம் ஓதக் கற்பிப்போம். நீர் அதனை மறக்கமாட்டீர்' ஆக கற்றுக் கொடுக்கும் பொறுப்பையும் மனத்தில் இருத்தும் பொறுப்பையும் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹ வத ஆலா ஏற்றுக் கொண்டுள்ளான்.."

பொதுவாக அல்குர்ஆன் வசனங்கள் மிக இலகுவாக ஓதும் பொருட்டும் மனனமிடும் பொருட்டும் , எதுகை, மோனை, சொல்லாட்சி, ஓசை போன்ற பண்புகளையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன.

அல்குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் அவற்றில் சரித்திரம், இயற்கை வினோதம், சட்டம், பொருளாதாரம், தர்மம், உரிமைகள், யுத்தம்  லொகீக வாழ்க்கை  உள்ளிட்ட  உடல், உள, தொழில் வாழ்க்கை தொடர்பான சகல விடயங்களும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதானால் அல்குர்ஆன் ஆன்மிக மற்றும் சிந்தனைப் புரட்சிக்கான ஏடு. இதனை ஓதுவோரும், மனனனமிடுவோரும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இன்றைய நாட்களிலே.......

கடந்தவாரம் ...........

எமது பாடசாலையிலும்  அல்குர்ஆன் மனனமிட்டு ஹாபிஸாக ஓர் மாணவர் வௌியேறியுள்ளார்... அல்ஹம்துலில்லாஹ்!

அம்மாணவனுக்கும் நான் கடந்த சில வருடங்களாகப் பாடமெடுத்தவேளையில் அவர் வௌிப்படுத்தியிருந்த நடத்தைப் பண்புகளை லேசாக இன்று நினைவிலிருத்துகின்றேன்..........

அமைதி, அடக்கம், புன்னகை, ஆன்மீகம் போன்ற பல பண்புகள் அவரணியும் அடையாளங்கள்!

அம்மாணவர்!

பாடசாலை மாணவர்களிடையே நான் கண்ட ஒழுக்க முத்து........

ஆசிரியர்களை எப்போதும் கனம் பண்ணும் அந்தப் பண்பின் அறுவடையாளர்
ஜயந்தி மாவத்தை , அநுராதபுரத்தில் வசித்து வரும்.............
மொஹமட் சல்மான் எனும் மாணவனே! தரம் 9 B (2014)

ஆர்ப்பாட்டத்துடன் அலையுமிந்த மாணவப் பருவத்தில் எப்போதும் இவரிடம் அமைதி  அடக்கத்தையே  கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன்..

அந்த ஆச்சரியம்.....இன்று பலரின் வாழ்த்தாக மாறியுள்ளது!

பெரியோரைக் கனம் பண்ணும் ஒழுக்கமுள்ள மாணவர், பிறர் பாராட்டும், நேசிக்கும் பண்பாட்டைப் பெறுகின்றார் எனும் கூற்றுக்கு இவரும் சான்றாகியுள்ளார்.

அல்குர்ஆனை மனனமிட்டு ஹாபிஸாகும் இந்த சிறந்த செயலுக்கு அல்லாஹ்வின் கிருபை, இம்மாணவர் முயற்சி, பொருத்தமான வீட்டுச்சூழல், ஆன்மீகச் சமுதாயத்திற்கு வழிகாட்டும் பெற்றோர் தூண்களாகின்றார்கள். இவர்களுடன் சிறந்த கற்றல் ஒழுக்கத்தை வழங்கும் மதரஸாக்களின் பங்களிப்பையும் மறுக்க முடியாது.

 ஏனெனில் ஒழுக்கமிகு சமூகக் கட்டமைப்பின் அடித்தளமிட இம்மதரஸாக்களும் பங்களிப்புச் செய்கின்றன!

அல்குர்ஆனை நன்கு மனனமிட்டு ஹாபிஸாக மாறியுள்ள மொஹமட் சல்மானிடம் இது தொடர்பாக நான் வினவியபோது, அம்மாணவரும் மனந் திறக்கின்றார் இவ்வாறு!

நான் அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டிருக்கும் போதே அல்குர்ஆனை முழுமையாக மனனமிட்டுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்!

அல்குர்ஆனை மனனமிடுவது சற்று கடினமான விடயந்தான் என்றாலும்கூட, அல்லாஹ்வின் கிருபையினால் அது சாத்தியமாகியுள்ளது. இதற்காக நான் மூன்று வருடங்களை எடுத்துள்ளேன். நான் அநுராதபுரத்திலுள்ள ஈமானியா அரபுக்கல்லூரியிலேயே அல்குர்ஆனை மனனமாக்கியுள்ளேன். ஈமானியா அரபுக்கல்லூரியில் நான் இரண்டாவது ஹாபிஸ்...

குர்ஆன் ஓதுவதிலும், கல்வி கற்பதிலும் நான் அதிக நாட்டம் கொண்டுள்ளேன். எனது தந்தையும் ஒரு ஹாபிஸ்..எனது சகோதரியும் மாவனல்லை ஆஇஷா ஸித்தீக்கா எனும் அரபுக் கல்லூரியில் கல்வி கற்கின்றார்.

எனது இலட்சியம் குர்ஆனை மறக்காமலும் பிழையின்றியும் என்றும் நினைவில் வைத்துக் கொள்வதாகும். அவ்வாறே கல்வியிலும் நாட்டம் செலுத்தி மௌலவி ஆசிரியராக எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதாகும்...

எனது இலட்சியம் நிறைவேற அல்லாஹ் த ஆலா துணைபுரிவானாக!
நீங்களும் துஆ செய்யுங்கள்......

என  தனது புன்னகை மாறா முகத்துடன் மன எண்ணங்களைப் பதிவாக்குகின்ற ஸல்மானுக்காக நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்!