About Me

2013/04/10

ஒரு காதல் கடிதம்


அன்புள்ள......................!

நான் உன்ன நேசிக்கிறது உனக்கு தெரிஞ்சும் கூட ஏன்டி என்னக் காயப்படுத்துற. உன் மேல எவ்வளவு ஆச வைச்சிருக்கிறேன். உனக்காக உசிரய தருவேன்டி அது உனக்கு தெரிஞ்சும் உன் மௌனத்தால கொல்றீயடி.....சத்தியமாச் சொல்றன்.....நீயெனக்கு கெடக்கலைன்னா செத்துப் போய்டுவேன்டீ"

இப்படிக்கு ..........................

இது எனக்கு நேற்று கிடைத்த காதல் கடிதமொன்று......

(அட.....வெயிட்.....எனக்கல்லப்பா....மொறைக்காதீங்க)

இத எழுதினது 16 வயது மாணவன், (தரம் 1 1) எங்க ஸ்கூல்தான் படிக்கிறான். அவனுக்கு நான் சயன்ஸ் பாடம் படிப்பிக்கிறேன். ரவுடித்தனத்தில பர்ஸ்ட்.. படிப்பில சத்தியமா அவனுக்கு மண்டைல ஒன்னுமே ஏறாது. தினம் தினம் என்னட்ட ஏச்சு வாங்கும் போது மண்டைய மண்டைய ஆட்டுவானே தவிர அதில ஒன்னுமே ஏறாது.

அவள் தரம் 9 படிக்கும் மாணவி. கெட்டித்தனம், அழகு, அமைதி, செல்வம் எல்லாம் ஒரே இடத்தில குவிந்திருக்கும் பிள்ளைதான் .. இவன் தொடர்ந்து 2 வருஷமா அவளை ட்ரை பண்ணிட்டு வாறன்,. அவளோ அவனத் திரும்பிக் கூடப் பார்க்கல. கடைசில அவர் பொறுமை இழந்தவராக தன் நண்பியிடம் இக் கடிதத்தைக் கொடுத்து தூதனுப்ப, அவள் இதை வாங்க மறுத்து வீசியெறிய.................

அக்கடிதம் ஆல் ரவுண்டராகி கடைசியில் அந்தப் பெண் பிள்ளையின் வகுப்பாசிரியையான என்னிடமே திரும்பி வந்து சேர்ந்தது. விசாரணையை நான் தொடங்கி விட்ட போது, அந்தப் பிள்ளை தனக்கு நடந்ததை சொல்லி அழ, அவனைத் தேடினேன்.

எப்படியாவது ............ அவன் திங்கட்கிழமை என்னிடம் மாட்டுவான்தானே .அப்ப இருக்கு..........!

இதுகள் எல்லாம் லவ் பண்ணி........கருமம் கருமம்....

படிக்கிற வயசில நாசமாக போகத் துடிக்கிறவன அடி கூடத் திருத்தாது!







தளிர்கள் - 7


உனக்குப் பிடிக்குமென்பதற்காகவே
கவிதைகள் புனைகின்றேன்
இருந்தும்
நீயென் ரசிகனாய் இல்லை!
கடந்து செல்கின்றாய்
என்னுள் தனிமைகளை நிரப்பி தாராளமாய்!
 

நேற்றைய தீர்மானங்கள்
இன்று மாற்றப்படலாம்!
இன்றைய எண்ணங்கள்
நாளை புதுப்பிக்கப்படலாம்

மாற்றங்களுடன் கூடியதே வாழ்க்கை!

உண்மையை ஏற்போர் தடைகளைச் சந்திக்காமல் வாழ்வில் வெற்றி பெறுகின்றார்.
 

வருந்தாதே!
நிறுத்தி விடுகின்றேன் - உன்
காதலை அல்ல
உன்னுடனான சந்திப்பை!


- Jancy Caffoor-
     10.04.2013






நம் பூமி



சூரியனை யின்னும் கீழ்வான்
விரட்டவேயில்லை
இருந்தும் விடியல் மறுக்கப்பட்ட
கைதிகள் இவர்கள்!

கனவுகளால் நெய்யப்பட்ட
வாழ்க்கைக் கூடாரங்கள்
தரிக்கப்பட்டன அரக்கர்களால்
திட்டமிடப்பட்டு!

இவர்களின் பூமியிலேனோ
விதைக்கப்படாத மனிதாபிமானம்
விட்டுச் செல்கின்றது இறப்புக்களை!

உறக்கத்திற்காக தாழிடப்படும்
விழிகளினி
திறக்கவே போவதில்லை
கண்ணிமைகளை வருடியபடி!

இங்கே
ஆயுத விளைச்சல்களின் அறுவடைகள்
தாராளமாய்
ஊற்றிக் கொண்டிருக்கின்றன
இறப்புக்களை!

மூடிவிடுங்கள் யுத்தக் குழிகளை
பிணங்களால்
ரணமாகாமலிருக்கட்டும் நம் பூமி!

- Jancy Caffoor-
     10.04.2013

தளிர்கள் - 6




விளங்கவேயில்லை - உன்
விழிகளில் விலங்கிட்டு
வீழ்த்தினாய் என்னை !
இதுதான் காதலோ!

-----------------------------------------------------------------------------------------



இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கின்றேன்....
உன்னில் தொலைத்த என்னை!

------------------------------------------------------------------------------------------




தனிமை...............
துணிந்து சொல்லும்
நம்மைவிட்டுச் சென்றோரின்
அன்பை!
------------------------------------------------------------------------------------------


உன் வழிப் பாதைக்காய்
என் விழிப் பார்வைகள்!
நீ..............
உடைத்துச் சென்ற மனசின்
ஒவ்வொரு துண்டுகளும்........
உனைக் காட்டும் கண்ணாடிகளாய்
என்னுள்!
-----------------------------------------------------------------------------------


அழகாய் இருப்பது இறைவன் தந்த வரம்...........!

அந்த அழகினை மேலும் மெருகூட்டுவது நாம் பிறர் மீது வைத்திருக்கும் அன்பேயாகும்!
----------------------------------------------------------------------------------------


ஓர் ஆணிண் அன்பில் பூவாக மலரும் பெண்.........
அவன் அடக்குமுறையில் வீணாய் உதிர்க்கப்படுகின்றாள்......!

ஒவ்வொரு குடும்பத்தின் அத்திவாரமும் ஆணின் கரங்களிலேயே திணிக்கப்படுகின்றது! பெண் மென்மையுணர்ந்து அவள் உணர்வுகளை மதியுங்கள்...

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒளிந்திருக்கும் தாய்மைதான் ஆண்களைச் சுமந்திருக்கும்.
அவன் வருங்கால கருவையும் சுமக்கவிருக்கும்!
-------------------------------------------------------------------------------------------


மனசை கொஞ்சம் திறந்து விடு
உன்னில் நான் காதல் செய்ய வேண்டும்!

உன் கவலையை என்னில் சிந்தி விடு
என் கண்ணீரில் உன் அன்பைக் குலைக்க வேண்டும்!

உன் மகிழ்வை என்னில் பூசி விடு
உன் னுதட்டில் என் புன்னகை பதிக்க வேண்டும்!

உன் விழிகளை லேசாய் மூடி விடு
கனவாய் உன்னில் நான் மூழ்க வேண்டும்!
----------------------------------------------------------------------------------------


காதல் வலி தரும்.!
இருந்தும்...................
நினைவுகளைத் தூவிச் செல்லும் அதன் வழி
அழகானது!





---------------------------------------------------------------------------------------


தாய் கருவறை தந்தாள் தானமாய்......
நீயோ..........
மணவறை தந்தாய் மானசீகமாய்!
மனதுக்குள் இறக்கை கட்டி
பறக்கின்றேன் .......
என் வான் உன்னில்..........!
-----------------------------------------------------------------------------------------


அடி மனதின் ஆழ் நினைவுகளே கனவுகளாக கருக்கட்டப்படுகின்றன. 
ஒவ்வொரு கனவுகளும் நனவாக ................
தன்னம்பிக்கையுடன் கூடிய முயற்சியைத் தானமாக்குங்கள்!
----------------------------------------------------------------------------------------


பூக்களாய் பூத்திருந்தேன்
முகவரி தந்தன தென்றல்........

உன் பாக்களில் வார்த்தைகளானேன்
காதல் இலக்கியமானாய் நீ!......

எதுகையும் மோனையும் நானறியேன்
ஏடறியா என்னிடம் மோதிச் சென்றாய் நீ!.....

இருந்தும்...........

இப்போதெல்லாம் மயங்கி நிற்கின்றேன் - உன்
அருகாமைக் கணங்களின் லயிப்பினில் நசிந்து!

-------------------------------------------------------------------------------------


தொலை தூர வானில்
அலையும் முகிற் காகிதங்களுக்கிடையில்......

விழி திறந்து கிடக்கும் நிலாக் கீறலாய்
ஒளி கசியும் உன் ஞாபகங்கள்...........!

நேற்று வரை நான் நானாகத்தான் இருந்தேன்
இன்றோ.................
என் எதிர்காலத்தின் கைரேகைகளில்
உன்னை பச்சை குத்திக் கொண்டாய் 
ஆக்ரோஷமாய்!

இப்பொழுதெல்லாம்.............
என்னுள் ஊடுறுவும் தனிமையில்
கல்லெறிந்து.....
கள்ளமின்றி சிரிக்கின்றாய் காதலுடன்!

உன் வில்லத்தனமும்
குழந்தைத்தனமும்.........
காதலும்...................

என்னுள் முத்தமாகி கசிகையில்
ஏக்கத்துள் வீழ்ந்து தொலைகின்றேன்
பக்கமில்லாத உன் நிழல் தேடி!
------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு குடும்பத்தையும் அழகாக உருவாக்குபவள் பெண். அந்தப் பெண்ணைப் பாதுகாப்பது அவளைச் சார்ந்துள்ள ஒவ்வொரு ஆணிணதும் கடமையாகும்.
--------------------------------------------------------------------------------------------


அம்மா............!

அச்சேற்றிக் கொண்டிருக்கின்றேன்
புதுமைப் பெண்களை!
உங்கள் கண்ணீர் ஈரத்தை மறைத்தபடி!

ரோசாவின் வாசங்களால் 
சுவாசம் நிறைத்துக் கொண்டிருக்கின்றேன்.......
நீங்கள் சூடியிருக்கும் முட்களை
மறைத்தபடி!

பாசத்தால் வேலியிடப்பட்ட
உங்கள் கருவறைக்குள் 
கல்லறை வார்ப்போரோடு பேரம் பேசுகின்றேன்
என் இரத்த உறவென!

நீங்கள் சிரித்திருப்பீர்களா.........
ஓர் துளியைத்தான் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றேன்
ஞாபகங்களை குலைத்தபடி!

தாயே..........

தரணியின்று துதிக்கின்றது உங்களை....
நீங்கள் அறையப்பட்டிருக்கும்
சிலுவையை புரிந்து கொள்ளாமல்!