About Me

2012/06/15

தோழமைக்காக !



உன் கிராமச் சாரலில்
தடமாய் பதிந்த என் சுவடுகளில் 
நம் தோழமை விம்பமாய்ச் சிரிக்கும்!

நீண்டு செல்லும் உன்
ஒற்றையடிப் பாதையும் 
விழுதுகளால் காலூன்றும் அந்த
ஆலமரமும் - உன்
ஞாபகப் புலம்பலை
எனக்குள் நிறைத்துக் கிடக்கும்!

உன் நிழற்படுக்கையில் கூட
வெம்மைத் தணல்கள் - தம்
மார் தட்டி நிற்கும்!

மூங்கிலுடைத்து ஸ்வரம் கண்ட
உன் கவிப்புல்லரிப்புக்களில் 
சிலிர்த்த மனசின்னும்
பொலிவு துறக்கவில்லை!
இருந்தும் 
என் கண்ணீருறிஞ்சும் உனக்காய்
சோகப்பூக்கள்
தலைவணங்கிக் கிடக்கின்றன
பொறுக்கிக் கொள்!

நீ சிரிக்கின்ற போது
பூரித்துக் கிடந்தேன் 
புரிந்ததின்று 
பரிவற்ற உன் வார்த்தைகளால்
கருமை பூசின என் பொழுதுகள்!

அன்புக்குள் பொய்மை பூசி
வம்பு வளர்த்தவுன் ஆணவம்- என்
மூச்சு வேர்களை அறுத்தெறிந்தன
இரக்கமின்றி!

உன் அப்பாவித்தனமும் 
அழகான பேச்சும்
அடடா 
உயர் விருதுகளின் கௌரவிப்புக்களாய்
சமர்ப்பணமாகும்
உன் அரிதாரப்பூச்சுக்களுக்கே!

மல்லிகை பொறுக்கி 
மாலை தொடுத்து - அதை
அள்ளியெடுத்த என் கூந்தலின்
கண்டனப் பேரணி - உன்
வில்லத்தனத்திற்கெதிராய்
ஊர்கோலம் போகும்!

என் விழிநீர்த் தோரணங்கள்
கன்னச் சேமிப்பறையில்
உறைய முன் 
உரித்தெடு அவற்றை!
ஏனெனில் 
நாளையவை சாட்சி சொல்லக்கூடும்
உனக்கெதிராய்!

என்னுள் 
கள்ளிப் பாலூட்டி நிதம்
புள்ளிக்கோலம் போடுமுன்
ஆத்மதிருப்திக்காய் 
பாதாள மெத்தையில் தனித்திருக்கின்றேன்
வா- உன்
துரோதச் சரிதங்களை
அங்கேயாவது ஒலிபரப்புச் செய்யலாம்!

இருந்தும் 
முள்வேலிகளாலிப்போ
எல்லைப்படுத்தும் நம் நட்பு 
பிரிவு உடன்படிக்கையில்
கைச்சாத்திட்டதால்
சுதந்திரமானோம் - புதுவுலகில்!

ஜன்ஸி கபூர் 

2012/06/14

அன்றும் இன்றும் !


அன்றோ 
உன் நடையோசைச் சிணுங்கலில்
கவனித்தாயா - என்
இதயமோ சுளுக்குக் கண்டது!
இன்றோ 
நீயென் இதயம் கிழித்து
உயிர் விரட்டுகின்றாய்
என்னிலிருந்து 

அன்றோ 
கடற்கரை மணல் கண்ட
நம் காதலை
அலை நுரைகள் தழுவிய போது
தடம் தேடி கண்ணீரானாய்!
இன்றோ 
கண்ணீரில் என் கனாக் கழுவும்
வில்லனாய்
புன்னகைக்கின்றாய்
அட்டகாசமாய்!

அன்றோ 
என் நினைப்பில் நீ
எகிறிக் குதிக்கும் போதெல்ாம்
களைக்காத காதல்!
இன்றோ 
இளைப்பாற மடி தேடுது
யார் கண் பட்டு!

அன்றோ 
என் நினைவகத்தில்
ஆட்சியேற்றினாயுன் அன்பை!
இன்றோ 
விஷமூட்டி கருவறுக்கின்றாய் - என்
உணர்வுகளை!

அன்றோ 
நேசத்துடன் கல்வெட்டானாய்
என்னுள் !
இன்றோ 
உன் கல்மனச் சர்வதிகாரத்தில்
துவம்ஷத்துடன்
என்னுள் மரண அவஸ்தை
வார்க்கின்றாய்
வில்லத்தனத்துடன்!

அன்றோ 
முழுமையாய் எனை ஆக்கிரமித்து
சிறை வைத்தாய் எனை !
இன்றோ 
என் வாழ்க்கை மன்றத்தில்
நீயொரு விசாரணைக் கைதியாய்
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளாய்!

அன்றோ 
சிறகடிக்குமுன் விழிகளில்
உனை நிரப்பிக் காத்திருந்தாய்!
இன்றோ 
பொய்மைக்குள் எனை விழுத்தி
புன்னகைக்கின்றாய்
இரக்கமில்லாதவனாய்!

அன்றோ 
ஓவியமாய் ஒளிந்திருந்தாய்
என்னுள் கருத்தோடு!
இன்றோ 
வீழ்ந்து கிடக்கின்றாய் சர்வாதிகாரியாய்
துரோகச் சரிதத்தில் !


அன்றுன் 
பார்வையால் எனை விழுங்கி
களவெடுத்த என்னை!
இன்றோ 
இருப்பிடம் பிடுங்கி
ஏலமிடுகின்றாய் வேரொறுவனுக்கு!


ஜன்ஸி கபூர் 


ஞாபகம் வருதே!






















சின்னக் கண்ணில் ஏக்கம் விதைத்து
வண்ண நிலாவை எட்டிப் பிடிக்க 
கண்ட கனவின் புல்லரிப்பு
மீண்டெழுமிந்தப் பொழுதில்!

பூவின் மேனி நடுங்கச் செய்து
வண்டின் தேனை களவில் பருகி 
மலர்ச் செண்டில் முகம் நனைத்த
ஞாபகங்கள் நெஞ்சைக் கிறுக்கும்!

காற்றின் காலில் பட்டம் கட்டி
சேற்று மணலில் உருண்டு பிரண்ட 
மழலைப் பொழுது மனதைக் கௌவும்
மானசீக ரசிப்பில் இறுகிக் கிடக்கும்!

ஊஞ்சல் இறக்கை உயரப் பறக்கும்
அஞ்சாச் சிட்டின் சாகசம் வியக்கும் 
வாஞ்சையோடு உறவும் ரசிக்கும்
பிஞ்சின் நெஞ்சில் மகிழ்வும் பூக்கும்!

மணல் சோறு ஆக்கியெடுத்து
மாலையும் சோகியும் கோர்த்தெடுத்து 
பாவைப் பிள்ளை திருமணம் நடத்தும் - அந்தப்
பால்ய பருவம் வெட்கித்துக் கிடக்கும்!

நட்புக்களோடு கிட்டியுமடித்து
பள்ளிக்கூடம் "கட் " டுமடித்தே 
நல்ல பிள்ளை பெயர் கெடுத்த - அந்தப்
பொல்லாக் கணங்கள் மிரட்டி விரட்டும்!

இரட்டை ஜடை கட்டி ஆட்டி
கொசுவம் வைத்து சேலையு முடுத்தி 
பெரிய மனுஷியாய் போட்ட வேசம்
வில்லத்தனமாய் மனசுல் இறங்கும்!

அழுது விம்மி ஆர்ப்பரித்து நானே
அம்மாவிடம் அபகரித்தவையெல்லாம் 
அள்ளியெடுத்து ரசித்த கணங்கள்
துள்ளி வந்து நெஞ்சை முட்டும்!

தம்பி பறப்பான் தும்பி பிடிக்க
எம்பிக் குதிப்பேன் எனக்கும் தாவென்று 
கவலை மறந்த அந்தக் காலம்
கண்ணீரறியா பொற் காலம் !

முதுகை உதைக்கும் தோற்பையும்
வெம்மையில் புரளும் காலுறையும் 
அழுக்காகத் துடிக்கும் வெள்ளையுடையும்
அடையாளப்படுத்தும் பள்ளி வாழ்வை!

கவலை மறந்த அந்தக் காலம்
கண்ணில் வாழும் நாள்தோறும் 
களிப்பில் புன்னகை கோர்த்துத் தந்த
பிள்ளைப் பருவம் வாராதோ 
மீள வாராதோ!

ஜன்ஸி கபூர் 

முதுமையினில்!

நம் வசந்த வாழ்வின்
கடைசி வரிகள் 
மறுமைத் தேடலுக்கு
மனுப்போடும் விண்ணப்பம்!

நம் வாலிபப் பாறையைக்
பெயர்த்தெடுத்து - காலம்
வரையும்
கடைசிச் சிற்பம்!

விழிச் சுருக்கத்தின் கிறக்கத்தில்
இறுகிக் கிடக்கும் சோகம் 
நம் தளர் நடையிலோ
பாதச்சுவடு
உலர்ந்து வெடிக்கும்!

வாழ்க்கை தேசம்
தாழ்போட்டமிழும்  
ஆன்மீகக் குளியலுக்காய்!
சுவாச நீரோட்டமோ 
சுகம் காட்டும் நோய்களுக்கு!

மனப்புலத்தின் நிழலிலே
மங்கிப் போகும் ஞாபகம் !
ஐம்புலன் ஒலிபரப்பில்
இயலாமை உலாவாகும்!

வாலிப மிடுக்கெல்லாம்
தொலை நோக்கி வழிந்தோடும் 
அநுபவங்களின் வீரியங்கள்
வந்தமரும் வாழ்வினிலே!

வேரறுந்த கனாக்கள்
வேவு பார்க்கும் உறக்கத்தை 
விரக்திக் களைப்போ
உயிரை அறுத்துப்போகும்!

இரங்காத உறவுகளின் இம்சையில்
இதயம் இளைப்பாறும் 
உறக்கத்தின் அருமை
ஏக்கத்தில் வீழ்ந்து கிடக்கும்!

காலத் தேய்வில் வயசோ
நழுவிப் போக 
வீணாய்ப் போன விழுதாய்
நீண்ட தனிமை
கதறித் துடிக்கும்!

நரை வடுக்களுடன்
நாடியும் தளர்ந்து 
மூப்புத் திரையோட்டத்தில்
மூச்சும் அந்நியமாகிப் போகும் !

விறைத்த மனசுக்குள்
சிறைப்பிடிக்கும் ஆசையொன்று!
மறை கழற முன் - என்
ஆவி பிரியாதே இப் புவிதனை நீங்கி !


ஜன்ஸி கபூர் 




2012/06/13

ஓர் நாள்!


இப் பிரபஞ்சத்துள் தடம் பதிக்கின்றேன்
உறக்கத்திலிருக்கும் 
வண்ணப்பூச்சிகளின் சிறகுகள்
என் ஹிருதயத்துள்
நீயாகி 
முத்தமிடத் துடிக்கின்றன!

விண் தொடுகின்றது - என்
காட்சிப்புலம் !
விண்மொட்டுக்களின் வில்லத்தனத்தில்
உன் ஞாபக விம்பங்கள்
மயங்கிக் கிடக்கின்றன!

இருளோடு சரசமாடும்
மல்லிகையின் மோகனத்தில் - என்
கூந்தல் 
தன்னைத் திணிக்க தடுமாறிக்
கொண்டிருக்கின்றது
அப்பாவித்தனமாய்!

ஊர்க் குருவிகளின் அட்டகாசம்
என் கனவுகளையறுத்து
விழிப்புத் தொட்டிலை
நிறைத்துக் கொண்டிருக்கின்றது
வீம்பாய்!

அந்த மயானப் பொழுதினின்
தூறல்களில் 
தூசி படிந்து கிடக்கும் - என்
தனிமைச் சாளரத்தை உடைத்தே
உன் நினைவுகள் - என்
மனவெளிகளில் அப்பிக் கிடக்கிறது
விதவைப் பெண்ணாய்!

நீ தந்த 
இதய வலிகளிலேனோ - என்
உதயமும் வழி தவறி
எங்கோ அலைந்து கொண்டிருக்கின்றன 
வெறும் பிரமையாய் 
உன்னைப் போல!

என்னாச்சு என்னுயிருக்கு!
உன் 
(ஏ)மாற்றங்கள் நகம் பிடுங்கியதால்
கண்ணீருக்குள் தன்னை
அடகு வைத்தே 
அது சோரம் போனதோ!

எங்கோ ஓர் மூலையில்
பதுங்கியிருக்கும் உன் நிழல் மாத்திரம்
ரகஸியமாய் - நம்
பந்தத்தை மறு ஒலிபரப்புக்காய்
ஆவணப்படுத்திக் கொண்டிருக்கின்றது!

உன்னால் மறுக்கப்படும் - என்
நியாயங்கள் 
ஊமை வலியில் முனகிக் கிடக்க
நீயோ 
எனை இராட்சகி முடி சூட்டி
குருதிப் பிழம்புக்குள் தள்ளிவிட்டே
வேடிக்கை பார்க்கின்றாய்!

தோல்விகள் நிரந்தரமல்ல 
நேச வேள்வியில் வெந்து கருகும் - நம்
நெஞ்சின் சாலைப் பரப்பு
என்றோவொரு நாள் - நம்
பிரிவுக்கு நாள் குறித்து
வழி தரும் 
வலி போக !


ஒளி நாயகன் !

இந்தப் பிரபஞ்சத்து மேடையின்
ஒளி நாயகன் நீ! - இருந்தும்
உன் பார்வையின் செழுமையில்
வெட்கித்துக் கிடக்கிறது என்னிளமை!

மேகங்களுள் லொள்ளு விடும் - உன்
மோகன லீலைகளிற்காக
பலயுகங்கள் தவமிருக்கின்றேன் - நீ
இன்னும் எட்டா தொலைவினில்
என் தொல்லையின்றி இருக்கின்றாய்!

பஞ்சணைக்குவியலுக்குள்
பரிதாபம் காட்டும் உன் முகமெனக்குள்
பதிவானதே பசுமரத்தாணி போல!

உன் சந்தனமேனியின்
கதிர்க்கிறக்கத்தின் மயக்கத்தில் - நான்
எப்பொழுதும் சயனிப்பதால்
அடுத்தவர் பார்வையில் நம் சந்திப்புக்கள்
இன்னும் இணையா சமாந்திரங்கள்!

உனை நினைந்து நினைந்து புகையும்
ஏக்க வெம்மைத் திரட்சி
கன்னத்திரட்டில் பருக்களாய் முறைக்கிறது
கறைப்படிவுகளாய் பிறர் பார்வையில்!

உன் தனிமைச் சந்திப்பிற்காய் நான்
காரிருளில் காத்துக்கிடக்கின்றேன் - நீயோ
என் விழிக்கனவுகளையல்லவா
கிள்ளியெறிந்துவிட்டு உலா வருகின்றாய்
பகலில்!

நம் தேசமொன்றாகும் போது - மன
இருப்புக்களில் மட்டுமென்ன பேதமை!
ஆதவனே நிலாவென் மனம்
உன் வசமே
உந்தன் காதல் வேண்டுமென்னாளும்!

ஒளியாதே - நான்
உலா வரும் இரவினில்!


- Jancy Caffoor-

பெண் மனசு


என் 
புலர்ந்த பொழுதின் விரல்களில்
மயங்கிக் கிடக்கின்றது வறுமை!

நிதம் 
சூரியக் குளியலில் தோயும் - என்
மேனியின் நிறம்
அழகை இருட்டடிப்புச் செய்வதால்
காளையின் காதல் மோகம்
காணாமல்தான் போகின்றது!

மாதப்பூக்களில் அவிழும் - என்
குருதி மகரந்தங்களால் 
பெண்மையின் சிதைவுகள்
கண்ணீர் சிந்திச் சிந்தி 
அறிவிப்புச் செய்கின்றன
நாளைய இருப்புக்கு ஆளில்லையென!

முகம் முத்தமிடும் 
வியர்வைத் துளிகளின் சரிதங்களில் 
என்னுழைப்பின் ரகஸியம்
பத்திரப்பட்டுக் கொண்டிருக்கின்றது
காலத்தின் ஆணைக்காய்!

பெண்மை அரிதாரங்களில்
இச்சையேந்தும் 
அணிவகுப்புக்கள்
அமிலம் ஊற்றுகின்றன - என்
விழி நீர்த் திடலில்!

சதை உறிஞ்சும் வல்லூறுக்களின்
மாமிச வேட்டையில் 
நழுவும் ஜீவனாய் என்னுயிர்
பதுங்கு குழு தேடித் தேடி
களைத்துக் கிடக்கின்றது
தினம் தோறும்!

அக்கினிக்குள் அடகு வைத்த - என்
கனவுகளை மீட்டெடுக்க
வழியின்றி 
வலியோடு காத்திருக்கும் - என்
வாலிப மனசை சிறையெடுக்க
கண்ணீர்க்கம்பிகள்
போர் தொடுக்கின்றன!

என் உயிர்ப்பற்ற செல்களை
வெறுப்பேற்ற  
காத்துக் கிடக்கும் காளையரால் - என்
நாளைய பொழுதுகள்
நாட் குறிக்கப்படுகின்றன

மயானத்துக்குள் ஏலமாக !
மலினப்படும் உணர்வுகளால்
விசம் தடவும் விட்டில்கள்
தம் 
இறக்கை கழற்றி
இறங்கத் துடிப்பதென்னவோ 
தூசி படியாத - என்
புன்னகைத் திடலில் தான்!

சந்தோசங்களின் சமாதியில்
தோசம் கழிக்கும் - என்
வாழ்க்கையில் 
மிஞ்சியதென்னவோ
முட் தேசத்தின் சாம்ராஜ்யம்தான்!

கனவுக்குடியிருப்புக் கூட
என் 
கண்ணீர்ச்சுவட்டோரங்களுடன்
தொட்டுக் கொள்கின்றது ரகஸியமாய்!

ஜன்ஸி கபூர் 

2012/06/12

அருவி !


அந்தக் காலைப் பொழுதினில்
மலையடி வாரத் தலைவனின்
கொஞ்சலில்
அவள்
வெட்கித்துக் கிடந்தாள்
கனநேரமாய்!

அவள்
மேனியைச் சூரிய கதிர்களோ
மஞ்சளுடன் சந்தனமுமரைத்து
ஈரப்படுத்திக் கொண்டிருந்தன
காதலால்!

அவள்
மேனி ரகஸியங்கள்
வெள்ளாடை முந்தானை விலகலால்
பகிரங்கமாய்
பறைசாட்டப் பட்டுக் கொண்டிருந்தன!

அவள்
முத்தத்தில் நனைந்த கற்களோ
நாணச் சிலிர்ப்பில்
விறைத்துக் கிடந்தன
கரைக் கொதுங்கி

அவள்
குரற் சலங்கைச் சலசலப்பில்
மோகங் கொண்ட குயில்கள்
மெட்டுக்களை - தம்
குரலுக்குள் திணித்துக் கொண்டன
களவாய்!

காற்றின் ஸ்பரிசத்தை
தன் நீர் விரல்களில் பூட்டி
நளினமாய் நர்த்தனம் புரியும்
அருவி மகளை
பூமியேந்திக் கொண்டது
பூத் தூவி!

அவள்
பாற் சுரப்புக்களில்
மோகித்த அன்னங்கள்
அணி வகுத்தன- நீரைப்
பிரித்தறியும் ஆவலுடன்!

மனித மௌனிப்புக்கள்
அவள் புன்னகையில்
கழற்றின - தம்
சோகங்களை!


அவளுள் செருகுண்ட - அந்த
இயற்கையின் இதயம் மட்டும் என்னுள்
ரசிப்பாகி
கவியைத் துடிப்பாக்கிக் கொண்டிருந்தன
காதலுடன் !


- Jancy Caffoor-

அடிக்கடி நீ !

இப்பொழுதெல்லாம்
அடிக்கடி நீ 
காணாமல் போகின்றாய்!

நீ தந்த நினைவுகளும்
எனக்கான உன் கவிதைகளுமே 
என் நிழலோடு அண்டிக்கிடக்க
அடிக்கடி நீ 
காணாமல் போகின்றாய்!

நம் குறும்புச் சண்டைகளும்
அன்புப் பரிமாற்றங்களும் 
அலை அலையாய் நெஞ்சில் மோதிக் கிடக்க
அடிக்கடி நீ 
காணாமல் போகின்றாய்!

உன் வேடிக்கையின் வாடையில்
மனம் வீழ்ந்து தினம் ரசிக்க 
ஏக்கங்களும் தாக்கங்களும்
சேமிப்பாய் என்னுள் வீழ
அடிக்கடி நீ 
காணாமல் போகின்றாய்!

விழியில் உன்னன்பு மொழி பேச 
விரும்பியெடுப்பேன் உனக்கான
கைபேசியை 
வார்த்தைகளால் பாகாகி
கோர்த்திடுவாய் என்னுள் பாசமதை!
இருந்தும் 
இப்பொழுதெல்லாம் அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!

அடுத்தவர் எனை வம்பு செய்கையில்
சினந்தே கடியும் உன்னன்பில் 
வியந்தே இணையும் என்னுசுரை
தனிமைப்படுத்தியே - நீ
அடிக்கடி காணாமல் போகின்றாய்!

"சட்" டில் சட்டென கவிபேசி 
ஸ்கைப்பில் சிரிப்போடு மனம் வருடி
என் தேசத்தின் எல்லைகளில் விரிந்து நிற்கும்
நீ !
இப்பொழுதெல்லாம்
அடிக்கடி காணாமல் போகின்றாய்!

நிலவினழகை ரசித்த நம்முள்
அமாவாசையாய் சிறு ஊடல்!
உயிரறுக்கும் உன் மௌனம்
எனை தினமறுக்க 
அடிக்கடி நீ 
காணாமல் போகின்றாய்!

கனவுக்குள் எனை அமிழ்த்தி நிதம்
உன் கவிக்குள் என்னுருவம் காணும்
நீ....இப்பொழுதெல்லாம்
அடிக்கடி காணாமல் போகின்றாய்!
என்னுணர்வறுத்தே மறைகின்றாய்!

ஜன்ஸி கபூர் 

2012/06/11

ஒரு நாளும் உனை மறவாத........


இரவின் சீண்டலில் சிலிர்க்கின்றேன்
நினைவு விரல்களால் நீயென்னை
அடிக்கடி வருடுவதால் !

என் மூச்சுக் காற்றுத் தொடாத
தொலைப்புள்ளியில் குவிந்திருக்கும் உன்னை
மெதுவாய் வருடுகின்றேன்
உன் பெயர்களால்!

உன் முகம் நானறியேன் - இருந்தும்
நினைவகத்தின் புல்லரிப்புக்களில்
புரண்டோடுமுன் அன்பில் - நான்
ஆயுள் கைதியாய் விழுந்து கிடக்கின்றேன்!

இறவாத நம் நேசத்தில்
நெஞ்சு கிறங்கிக் கிடக்ககையில் 
நெற்றியிலென் பெயரெழுதி
உன் உயிரில் இணைக்கின்றேன்!

சினம் மெல்ல நசுக்கையில்
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும்
நம் நேசம் 
காலத்தின் அழியாப் பதிவாய் - இப்
பிரபஞ்ச வேர்களில் பிணைந்திருக்கும்!

கவியின் சில வரிகளோடு
நம் நட்பைச் சுருக்கத்தான் முடியுமோ!
காலத்தின் சிறகடிப்போடு காத்திரு
நானும் உன் முகம் பார்த்திட!

ஜன்ஸி கபூர் 


எப்போதும் நீ !


இப்பொழுதெல்லாம் 
என் சரித்திரங்களில்
உன் சர்வாதிகாரமே பேசப்படுகின்றது !
அடிக்கடி 
என் தனிமைப் பொழுதுகளில் - நீ
மட்டும் நிரம்பிக் கொள்வதால்!

இப்பொழுதெல்லாம் 
நம் சந்திப்புக்களின் பதிவுகளில் 
ரம்மியங்களின் கணக்கெடுப்புக்களே
ரகஸியமாய் முகங்காட்டுகின்றன!

இப்பொழுதெல்லாம் 
நம் நரம்பு மண்டலங்களில்
அவஸ்தைகளின் அஸ்திவாரங்கள்
முகப்புத் தூணாய் முறைக்கின்றது
நாளைய தாங்கலுக்காய்!

தொலைவுகளின் அலைவுகளில்
தொங்கிக் கொண்டிருக்கும் - நம்
இருப்பில் கூட 
அன்பின் நிழல்
நளினமாய் அழகு காட்டுகின்றது
நாளைய நம் வரலாற்றுக்காய்!

எம் மூச்சுக்குழலின்
வளிப்படலங்களில் 
உன் பேச்சின் அதிர்வுகள்
நேச முத்தங்களாய்- என்
நெஞ்சைத் தட்டிச் செல்கின்றது!

நம்  
ஞாபக விழுதூன்றலில்
விழித்திரைக் காட்சிகள் 
அடிக்கடி உயிர்ப்பிக்கப்படுகின்றன
அழகான வேள்விக்காய்!

உன் விரலிடுக்குப் பேனாவாய்
எனை நீயேந்தி - நம்
உணர்வுகளை கவியாக்கும் போதெல்லாம் 
உருகும் மெழுகாய்
உறைந்து கிடக்கின்றேன் உனக்குள்
உன் கவியை ரசிக்க!

இப்பொழுதெல்லாம்
பாய் விரித்த புல்வெளியில்
படுத்துறங்கும் பனித்துளியாய்
சிறைப்பட்டுக் கிடக்கின்றேன்- நம்
ஸ்நேகப் பரப்பின் 
வெளியோரங்களில்!

நம் மனநீதிமன்றலில்- என்
வாழ்க்கை நீயென்று

என்னுயிர் கொடுத்த மனுக்களுக்காய்
மானசீகத் தீர்ப்புத் தந்தாய் - என்றும்
நீ என் வரமென்று!

ஜன்ஸி கபூர் 




பயணம் !



இயந்திர .......
ஆர்முடுகலின் கிசுகிசுப்பில்
புகை மூட்டங்கள்
பகையாகிப் போகின்றன - எம்
சுவாசத்துள்!

சாலை மலர்களை நசுக்கி
உரப்போடு.........
உரசி நிற்கிறது
எமதூர் பேரூந்து!

கடிகார அலைவுகளில்
அலைக்கழியும் எம் அவஸ்தை.......
இறக்கத்தின்
இடைத்தூரத்தில்
கருத்தூன்றிக் கிடக்கின்றது!

தரிசன குசலிப்புக்களில்
சில............
மனித உறவுகள்
புன்னகைகளை மௌனமாக
பரிமாற்றுகின்றனர் !

கர்ப்பிணிகள்.....
முதியோர்........
கரிசனத்தில் இளசுகள்- தம்
இருக்கைகளை
இடமாற்றும் தியாகிகளாய்
புதுமுகம் காட்டுகின்றனர்!

இறக்கங்களின் குதூகலத்தில் கூட
கிறங்காத - பல
மனிதச் சுமைகள்
மந்திரிக்கப்பட்டு..........
நிரம்பி வழிகின்றன
பேரூந்தின் உள்ளீட்டில்!

சில்லறை பொறுக்கிகள்
இச்சை ஸ்பரிசத்திற்காய் .........
வெட்கமிழந்து
உரசத் துடிக்கின்றன
பெண்மை நிழல்களோடு!

வியர்வைச் சலவையில்
துயராகும் தேகம்.....
விடுதலைக்காய்
புறுபுறுப்போடு
ஏங்கிக் கிடக்கின்றன!

இத்தனை சீரழிவின் மத்தியில்.....
எம் பொழுதின் பல கணங்கள்
பொய்மை அரிதாரங்களில்
பொசுங்கிக் கிடக்கின்றது!

இருந்தும் - எம்
மன இருப்பின் எண்ணங்களோ
சுதந்திரம் தேடி.........
வெளிறிக் கிடக்கின்றது
கையேந்தும் பிச்சைக்காரனாய் !



தேசத்தின் மகுடம்



தேசத்தின் மகுடம்........
நெருஞ்சியின் சகவாசம் !

பயணக்கைதிகளாய் பல மணி- நாம்
பாதையோரம் வேரூன்றிக் கிடக்க.........
கண்காட்சி இன்பங்கள் யாவும்
கானலாய் வடிந்தோடும்!

வாகன நெரிசல்களால்..........
கோர தாண்டவமாடும் தெருக்கள்
பரவசப்படும் மக்கள் அவலம் கண்டு!

மகுடம் சூடும் புனித தேசம்
நள்ளிரவில் புன்னகைக்கும்
மக்களை மாக்களாக்கி!

வீதியோரக் காவலர்களென
தற்காலிக நியமனத்தில் நாம்
அங்கலாயிப்போம் நள்ளிரவில்!

பிரமிப்பூட்டும் மனித உழைப்புக்கள்
நிசப்த பொழுதுகளில்...........
வீணாகிக் கிடக்கும் வீதியின் விதியால்!

நாயின் குறட்டையில்........
மனித உறக்கம் தொலைந்து போகும்!
சேயின் பசி மயக்கத்தில்
தாய்மை பதறிக் கொள்ளும்!

கண்காட்சி அற்புதங்கள் - சில
அற்பர்களால்..........
நடுவீதியில் ஆவியாகிப் போக
அவலங்களின் முகத்தோடு நள்ளிரவு விடியும்!

மனித முணுமுணுப்புக்களும்....
சில சத்தியப்பிரமாணங்களும்..........
'சீல்' வைக்கும் மீள்பாராசையை!

'தயட்ட கிருள' இன்பம்...........
சன நெரிசலில் நசிந்து போக
நெஞ்சினில் வந்தமரும் அவலம்
மெல்ல உசிரை நசித்துக் கொல்லும்!



முதிர்கன்னி


வாழ்க்கை கலண்டரின் 
கிழிக்கப்பட்ட பக்கங்களாய் - எம்
இளமை எடை குறைந்திருக்கும்!

ரோஜாவின் வாசத்தில்
விசுவாசங் கண்ட தேகம்
இப்போ 
முட்களின் நிழலைத் தொட்டுச் செல்லும்!

பட்ட மரங்களின் மொட்டுக்களாய் 
வெட்ட வெளிகளை மட்டும்
எட்டிப் பார்க்கும் 
வாடாத காகிதப் பூக்கள் நாங்கள் !

இப் பிரபஞ்ச மாக்களின்
விமர்சன தாக்கம் கண்டு - எம்
கண்ணாடி விம்பங்கள் கூட அழும்
இரசம் கரைந்தோட !

ஜன்ஸி கபூர் 

மலரே !


மலரே!

உன் தனிமைக்குள் விரல் நீட்டும் என்னோடு
சினக்காதே!
இன்ப வாசிப்புக்களை நானும் நுகர்ந்திட
வந்தேன் மெல்ல 
உன்னருகில்!

வா மலரே!
இயற்கை தூரிகை வரையும்
ஓவியத்துள் நாமும் 
வண்ணங்களாகக் கிறங்கிக் கிடக்கலாம்
மகிழ்வாக!

வா... வா !
உன் நறுமணத்தை வடித்தெத்தே 
நிரப்பிடலாம் என் எண்ணத்துள்!
என் முத்தங்களின் இதழ்களால்
ஒற்றிடலாம் உன் அமுதத்தை!

வா.....வா !
தென்றலை பிழிந்தெடுத்தே 
நனைக்கலாம் உன் மென்னிதழ்களை
மெதுவாக நாள்தோறும்!

ரம்மியங்களை என்னுள் செதுக்கவே 
வந்தேன் மெதுவாய் நானும் உன்னருகே 
வா வா மென் மலரே என்னருகே!
வசந்த நீரோட்டத்தில் நாமும் இணைந்திடவே!


ஜன்ஸி கபூர் 

அன்னைக்கு விண்ணப்பம்!


தொப்புள் நாண் இணைப்பேற்றி
கருத்தோப்புக்குள் நிழலிட்ட அன்னையே!
புண்ணாகி மென்னெஞ்சும் வலிக்குதம்மா
பிரிவனலில் மழலை மனம் துடிக்குதம்மா!

கடல் கடந்து உறவும் மறந்து- நீங்கள்
உழைக்கத்தான் சென்றீர்கள் - இருந்தும்
என் உணர்வுக்குள்ளும் ஊனம் நுழைத்து
ஊமையாகிச் சென்றீர்கள்!

காலடிச் சுவர்க்கம் நானும் காண - உங்கள்
காலடி தேடித் தவிக்கின்றேன் !
பல திங்கள் தான் கரைந்தும்- நீங்கள்
சிலையாகிக் கிடக்கின்றீர் எனை மறந்து!

கருவிலே எனையழித்தால் - இந்த
இடரேதும் இல்லையம்மா - எனை
விடமான வாழ்வுக்குள் விட்டுச் சென்றீர்
நானும் அனாதை தானம்மா!

சம்பிரதாயங்கள் நீங்கள் மறந்ததால்
சரித்திரமானேன் நானும் சகதியில்.....
என் மழலை கூடத் தொல்லையோ
 மன்றாடுகின்றேன் தாயே உங்களிடம்!

ஜன்ஸி கபூர் 



பெப்ரவரி 14


இதழ்கள் விரிக்கும் சப்தத்தில்
சிலிர்த்துக் கிடக்கும்
மொத்த அன்பும்!

உறக்கம் சுமந்த
கனவுச் சேமிப்பில் 
கல்யாணக் கனாக்கள்
அப்பிக் கிடக்கும்!

குறும்புச் சிமிட்டல்களும்
சில்மிஷச் சண்டைகளும்
கலையாகி
கவிபாடும்
காதல் கீதங்களாய்!

புன்னகை தேசத்தின் நெருடலில்
இடமாறும்
சிவப்பு ரோஜாக்கள் 
நாணிக் கிடக்கும்!

காதலர் தின முடிவுரையாய்
ஈர் மனங்களும்
சிறகடிக்கும் தம்
ஏக்கவெளியில் நிசப்தமாய்!

ஜன்ஸி கபூர் 

காதலும் அவஸ்தையும் !


காதலித்துப் பார் !

உன் போனில் சார்ஜ் குறையும்
ரீலோட் பண்ணிப் பண்ணியே
மணிபர்ஸ் எடை குறையும்!
காதலித்துப் பார் !

காதலித்துப்பார் 
புவிக்கும் விண்ணுக்குமிடையில்
சிறகின்றியே - அடிக்கடி நீ
பறப்பாய் அந்தரத்தில் !

உன்னவள் விரல் நிறைக்கவே
உன் சுண்டு விரல் மோதிரம் கூட
பறக்கும் அடகுக் கடைக்குள்!
அடிக்கடி காதலித்துப் பார்!

நீ சொல்லும் பொய்களெல்லாம்- உன்
இருதயத்துள் இறங்கும் பீரங்கியாய்!
பிள்ளை மட்டுமல்ல புல்லுக்கூடக்
காறித்துப்பும் 
காதலித்துப்பார்!

அவளுக்காய் நீ பிடிக்கும் காக்காக்கள் 
 தெருவோரமெங்கும் உன்னை மிரட்டும்!
உன் வருமானம் இறங்குமுகமாகும்
காதலித்துப்பார்!

பெண் தேவதைகளுக்காக புன்னகைக்கும்
உன் உதடுகள் சீல் வைக்கப்படும்!
பிறரை ரசிக்கும் உன் பார்வைகளால்
உன் கண் விழி கூட நோண்டப்படும் 
காதலித்துப்பார் !

உன் வார்த்தைக் கெல்லாம் அகராதி
தேடுவாள்- உன்
அன்பின் எடை குறைந்தாலோ
அட்டகாஷமாய் முறைத்துச் சிணுங்குவாள் 
காதலித்துப் பார்!

ஆண்களே .!
காதல் தேசம் அழகானது!!
அவஸ்தையானது !!!
அந்த அன்பின் அழகுக்குள்
தொலைந்து போகும் வாழ்வில்
மறப்பீர்கள் உம்மை 

 காதலித்துப் பாரும் !
கனவுலக அழகில் வீழ்ந்து கிடக்க!

ஜன்ஸி கபூர் 

ஏட்டுக்கல்வி



கல்விச் சாலையிலும்
கறையான் சேஷ்டைகளா 

அக்கினி வேள்விக்குள்
அவதாரமெடுக்கும் இளம் பிறைகள் 
கண்ணீரால் தினம்
தாகம் தணிக்கின்றனர்!

புத்தகங்களில் மட்டும் வாழ்வைத்
தொலைக்கும் - வெறும்
புத்தகப் புழுக்களாய் நெளிவோரின்
புளாங்கிதம்
அனலுக்குள் சாம்பராகும்
ஏமாற்றங்களே!

மனப்பாடங்களை ஒப்புவித்து
அனுபவங்களை நசுக்கும் - இவர்கள்
வாழ்வின் தோல்விகளை மட்டுமே
சேகரிக்கத் துடிக்கும் சீர்திருத்தவாதிகள்!

தம் கனவுகளைத் தொலைத்துவிட்டு
கானலுக்குள் மெய் தேடுமிந்த
இளசுகளின் விமர்சனத்தில் 
கற்றலின் கற்பும் வெந்து போகும்
அடிக்கடி!



ஓ !
யாரைக் குற்றம் சொல்வது 
கற்பவனையா !
கற்பிப்பவனையா!

ஜன்ஸி கபூர் 

நண்பனே !



தொலைவில் சிறு புள்ளியாய்
சூரியன் 
அதன் வெம்மைக்குள் சிறைப்படும்
என் வியர்வைத்துளிகள் - உன்
பார்வையில் ஆவியாகிப் போகின்றது!

நிமிஷங்களின் சில்மிஷத்தால் - நம்
உதடுகள் மௌனித்தாலும் 
உணர்வுகளின் பாஷையில் - நம்
இதயம் உறைந்துதான் கிடக்கின்றது!

உன்னாசைகளில் நானும்
என்னாசைகளில் நீயும் - நம்மை
பகிர்ந்து கொள்கையில் 
உயிரின் உயிலில்- நம்
நட்பும் கைரேகை பதிக்கின்றது
ஆனந்தமாய்!

நம் பார்வைப் புலத்தில் பதிக்கப்படுகின்ற
நம் விம்பங்கள் 
நம் மனவெளியை ஆக்கிரமிக்கையில்
சிலிர்த்துக் கிடக்கின்றோம் - நாம்
கவலைகளை விற்றவர்களாய்!

நம் நட்பின் இதத்தில்
பனித்துளிகளின் சாம்ராஜ்யமாய் 
முழு மனசுமே அப்பிக்கிடக்கிறது !

நாமோ !
புன்னகைகளை மட்டுமே சேகரித்தபடி
நட்புலகில் அலைகின்றோம் 
சுதந்திரமாய்!

ஜன்ஸி கபூர் 

வறுமை தேசம் !

காற்றை நீவும்- அந்த
ஆலமர விரல்களின் கீழ் 
விழுந்து கிடக்கின்றது -என்
விலாசம்!

உறவுகள் தொலைத்த 
தெருநாய்களால் - என்
சாமம் தொலைந்து கொண்டிருக்கின்றது
தாராளமாய்!

நுளம்பின் ரீங்காரம் விரட்டும்
என் கைத் தாளத்தால்
கைரேகைகள் கழன்று கொண்டிருக்கின்றன
சுருதி பிசகாமல்!

வெளியுலகை 
களவாய் எட்டிப்பிடிக்கும்
கிழிசல்களால் 
கலியுகம்
களவாய் சிறைபிடிக்கின்றது
இளமை மேனியை!

சாலையோரச் சந்தடிகளில்
கலைந்து போகும் 
கனாக்களின் கண்ணீரில்
மனசோ "ஜலதோஷத்தில்"
கரைந்து கொண்டிருக்கின்றது!

சின்ன மின்மினிகளின்
ஒளிச் சிதறல்களில் 
இருளோ காவு கொள்ளப்படுகின்றது
மருளாமல்!

எச்சில் பருக்கைகளுக்கும்
ஏலம் போடும் 
வறுமை தேசத்தில் - என்
வாழ்வும் வரண்டு கிடக்கிறது
வனப்பை மறந்து!

ஜன்ஸி கபூர் 

ஆசை......ஆசை !


விண்கற்கள் பொறுக்கி
வண்ண வீடு கட்டணும் !
மின்குழிழாய் பொருத்த- அந்த
சூரியனை நிறுத்தணும்!

காற்றில் மெல்ல ஊஞ்சல் நெய்து
நாள் முழுதும் ஆடணும்!
பசி மெல்ல வந்துவிட்டால்
நிலாப் பீங்கான் தேடணும்!

வியர்வை முகம் தான் துடைக்க
மேகக் கைக்குட்டை வாங்கணும்!
முந்தானையாய் போர்த்திக் கொண்ட
வானவில் சேலை கழுவணும்!

கோள்களுக்கு "கோள்" மூட்டி
சீண்டிக் கொஞ்சம் பார்க்கணும்!
புவிப்பந்தை மெல்ல உருட்டி
விண்ணை முட்டச் செய்யணும்!

வான் நீலம் கழுவியெடுத்து
என் கதிராளி நிரப்பணும்!
தேன் சிந்தும் மழைத்துளியால்
சின்ன மாலை கோர்க்கணும்!

எந்தன் நெஞ்சின் எத்தனைஆசைகள்
அவையென்னை 
கட்டியணைக்கும் பேராசைகள்!

ஜன்ஸி கபூர் 

2012/06/10

தனிமை!















அந்த வானம் போல 
நீண்டு செல்லுமிந்த இரவில்
தேடிக் கொண்டிருக்கின்றேன் - என்
உறக்கத்தை!

தந்தையே !

நீங்களோ  
மீளா உறக்கத்துக்குள் நனைந்து - எமையே
மறந்து கொண்டிருக்கின்றீர்கள்!

என் வீட்டுச் சுவர்களில்
சிதறிக் கிடக்கும் உங்கள் ஞாபகங்கள்
என் குரல்வளைக்குள் இடர்வதால்
மூச்சுத் திணறி 
உயிரறுக்கின்றேன்
வெறும் ஜடமாய் நான்!

 உங்கள்
அதிர்வுகளில்லாது 
எங்கள் மௌனங்கள் கூட
காயம் பட்டுக் கிடக்கின்றது கன காலமாய்!

சித்திரவதைக்குள் சிறைப்படும்- அந்த
கைமுஷ்டியளவு இதயத்துள்
அமிலமூட்டும் விதியைச் சபிக்கின்றேன்
உங்கள் அருகாமையை அது
நகர்த்துவதால்!

தந்தையே !
என் பாசத்துளிகள் ஒவ்வொன்றும்
கண்ணீராய் கரையுதிங்கே!
அதைக் காணாமல் நீங்களோ
அங்கே 
மூச்சறுந்து கிடக்கின்றீர்கள்!

ஜன்ஸி கபூர் 

ஏக்கம்



அம்மா !

என் கண்ணீர் பட்டு
இன்னும் உலராமல்தான் இருக்கின்றீர்கள்
அந்த வார்த்தையில் !

என்  
மன டயறியைப் புரட்டுகின்றேன்
நீங்கள் 
விட்டுச் சென்ற பக்கங்கள்
இன்னும் புரட்டப்படாமல்தான் இருக்கின்றது!

எத்தனை யுகம் கடந்தாலும்
உங்கள் வெற்றிடம் நிரப்பப்படாமலே
நான் வேரூன்றிக் கிடப்பேன் 
வெறுமை பூமிக்குள்!

வாருங்கள் 
நமக்குள் மறு ஜென்மம் ஏதுமில்லை!
இருந்திருந்தால் 
பிறந்திடுவேன் உங்கள் மூச்சுக்காற்றாய்
மறுபடியும்!

ஜன்ஸி கபூர் 

என் தாயே !



அந்த 
வேரறுந்த தளிரின் காயம்
எனக்குள்ளும் இரத்தக் கசிவாய்
கசிந்து கிடக்கும்!

தாய்மையின் நிழல் தேடித் தேடியே 
தடம் பதித்த சுவடுகளில்
கண்ணீர்க் கசிவு
கதை பேசும் ஈரலிப்பாய் !

ஒவ்வொரு நொடி ஆகர்சிப்பிலும்
அன்னை முகம் தேடித் தேடியே 
சந்தோஷம் ஆவியாகிப் போகும்!

இன்முகம் காட்ட 
கிளை விட்ட பல உறவுகளிலிருந்தும்
மனமேனோ 
தொலைவாகிப் போன அன்னைக்காய்
ஆர்ப்பரிக்கும்!

நாளை 
தந்தையின் வாலிபம்
வரவேற்கும் இன்னோர் அன்னையை!
உறவுகளும் பூக்கும்
வாழ்வும் விசாலிக்கும்!

இருந்தும் 
அந்த அன்னைக்காய் - என்
ஆத்மா மட்டும் வெம்பித் துடிக்கும்!

ஜன்ஸி கபூர் 

புதிர்




உதட்டோடு உரசி நிற்கும்
முத்தங்களின் ஸ்பரிசத்தில்
உயிர் உறைந்து கிடக்கின்றது !

கனவுக்குள் பாய் விரிக்கும் - உந்தன்
நினைப்பால்......
மூச்சோரங்கள் வியர்த்துக் கிடக்கின்றது!

சூரியன் தொட்டு விட்ட- அந்த
நடு சாம புலர்வில் கூட
என் மேனி
வியர்வைக் குளியலில் உருகித் தவிக்குது!

நம் 
சந்திப்பின் வீரியத்தில்
புது உறவொன்று அன்பால்
கனிந்து காமுறுகிறது!

காதலா ....பாசமா 
இரண்டின் கலவையாய் புதிரொன்று
நம்முள் மோகித்துக் கிடக்குது

ஜன்ஸி கபூர் 



முற்றுப் பெறாத பயணம்!



தொலைத்துவிட்ட வாழ்வைத் தேடி
தொலை தூர பயணம்!
தொல்லையற்ற உன் தேசத்தின்
எல்லைச்சுவர் நானாக!

இருண்ட வான் கண்ணீரில்
நீராடும் என் வரண்ட தேகம் 
மிரண்டோடுது
விரக்திக் காடுகளைத் தேடி!

உறுமி விரட்டும் காற்றுக் கூட- என்
உயிரைப் பிழிந்து 
விரல் பதிக்கின்றது தேகத்தில்
முட்களை மெதுவாய் நட்டபடி!

இறந்த காலத்தின் இரைப்பைக்குள்
முறிந்து விழுந்த என் கனாக்கள் - மீள
தரிக்கத் துடிக்கின்றன
நிகழ்காலத்தின் வலிகளாய்!

பாதம் பதிக்கும் சுவடு கூட- என்
பயணத்தின் சொந்தமில்லை!
அயர்ந்து விழும் நிழலில் கூட
உன் ஆறுதல் ஏதுமில்லை!

வெளுத்த பகலோரங்களில்
வெம்பித்திரியும் உன் நினைவுகள் 
களவாய் குளிர் காயும் இரவினிலே
கண் விரித்துக் கிடக்கும் நீளமாய்!

தோளில் மிதக்கும் சுமையாய்
தாங்கிப்பிடியென்னை அன்பே...!
நாளை 
ஏக்கத்தின் இருளிலே முறிந்து கிடக்கும்
என் வாலிபத்தையாவது நிமிர்த்த!

வலிகளின் மூச்சிரைப்பில் - நாளை
என் நிஜங்கள் கூட இற்றுப் போகலாம்!
நீயோ 
என் ஞாபகப் பிண்டங்களின்
ஆக்ரோஷத்தில் வெந்தும் மடியலாம்!

இருந்தும் !
என் விடிகாலைப் பொழுதினில்
நீரூற்றும் உன்னால்
வேரூன்றும் அழகிய கனாக்கள்
எந் நாளும் உறவாகலாம் - அவை
நம் சொந்தமாகலாம்!

ஜன்ஸி கபூர் 


மே தினம்



மனப்பாறை சிதைக்கப்படுகின்றது
முதலாளித்துவ
முறுக்கேறிய கரங்களால்!

உளியின் வலியால்
சிற்பமாகும் எங்கள் கனவு கூட
ஆவியாகிப் போகின்றது!

களமேட்டில் காத்திருக்கும் அந்தப்
பதர்களாய்...........
காய்த்துப் போனவர்கள் நாங்கள் !

வேரறுக்கப்பட்ட மரங்கள் பரப்பும்
நிழலுக்கும்
தகுதியற்றவர்கள் நிஜங்கள் நாம்!

விரல்களின் தீண்டாமைப் புரட்சியால்
காலாவதியான புத்தகங்களின்
சகபாடிகள் நாம்!

வியர்வைத்துளி நா
உறிஞ்சியெடுக்கும் கைரேகைகள்
முறிந்து வீழ்கின்றன வறுமைக்குள் !

எதிர்பார்ப்பு சமிக்ஞ - அடிக்கடி
வறட்சிக்குள் நிரப்பப்படும்
தொழிற்பூக்கள் நாம்!

உயரப் பறக்கும் எத்தனங்கள்
உடைக்கப்படுகின்றன
சிறகுடைக்கும் வல்லுறுக்களால் !

வைகாசி முதற்பொழுதினில்....
வெடித்திடும் ஒலிப்பதிவுகள் - ஏனோ
அழிக்கப்படுகின்றன அடிக்கடி!

வண்ண விண்மீன்களெம்மை
எரியூட்டும் தீப்பந்தங்களாய்
பணமுதலைகள் வாய் பிளக்கின்றன!

மனிதம் கொஞ்சம் தாருங்கள் - தொழில்
சூளைக்குள்ளும் எம் சுவாசம்
சூடேறட்டும் உயிர்ப்புக்காய்!




மழை


வானம் சலவை செய்யப்படுகின்றது
நெடுநேரமாய் - மேகத்தின்
வாலிப மிடுக்கோடு!

வழிந்தோடும் நீரில்
அடிக்கடி முகம் கழுவும் - என்
வீட்டின் முற்றங்கள்
ஜலதோஷத்தில் தோஷம் கழிக்கின்றது!

கூதல் காற்று குடை பிடிக்கும்
அண்டவெளிகளில்
புரண்டெழும் நீர்வயல்கள்
அணிவகுக்கின்றன ஆறுகளைத் தேடி
ஆர்ப்பாட்டமாய்!

உள்ளத்தின் குதுகலத்திற்காய்
ஊசலாடும் காகிதக் கப்பல்கள்
துறைமுகம் தேடி
கரையொதுங்குகின்றன - என்
தெருக்கோடி கரைதனில்!

கூரை பிழியும் நீரை
நிறைத்தெடுக்கும் பாத்திரங்கள்
திரு திருவென முழிக்கின்றன
விறைக்கும் தம்மேனியைச் சிலிர்த்தபடி!

சிட்டுக்களின் சிணுங்கலும்
சின்னப்பூக்களின் நீராட்டமும்
வண்ணப்பூச்சிகளின் சிறகுடைப்பும்
மின்னலின் படமெடுப்பும்
சிதறி வீழ்கின்றன என்னுள்
பரிதாபமாய்!

வெட்டவெளியில் வெருண்டோடும்
நீரை
இட்டத்தோடு பற்றிப் பிடிக்க
நட்ட மரங்களும் துடிக்குது - சில
தன் நாடித் துடிப்பை அடக்குது!

மழைக்குருவியாய் கரைந்திட
மனசும் துடிக்கையில்
அன்னையின் மிரட்டல் படியிறங்குது- என்
நினைவுத்தளத்தில் ஆக்ரோஷமாய்!

விழியோரம் வியப்புத் தேக்கி
மழைதனை ரசித்திட
புளாங்கிதத்தின் ஊர்கோலத்தில்
உலாவி நிற்குது என் மனம்!


- Jancy Caffoor-

மனிதம்


அராஜகங்களின் அணிவகுப்புக்கள்
அர்ஜிக்கப்படுகின்றன
அடிக்கடி இங்கே 
குருதிப்பூக்களால்!

பறக்கும் சிறகுகளை
உரித்தெடுத்து 
தீக்குள் சுருக்கும்
முகமூடிகளின் சில்மிஷங்களுக்கு
முகவுரைகள் எழுதுகின்றன
அரசியல் எழுத்தணிகள்!

மத வயலோரங்களில் 
பிரிவினை விதைத்து
வேற்றுமை விளைச்சலுக்காய்
ஒன்றுகூடுமிந்த பேரினவாதிகளின்
மயானங்களாய் உருமாறுகின்றன
நம் தேசம் 
அடிக்கடி!

மனிதங்களிங்கே 
அறையப்படுகின்றன சிலுவைகளில்!
இறையில்லங்களோ
வேரறுக்கப்படுகின்றன
மறை கற்றறியா துவம்ஷங்களால்!

விதைக்கப்பட்ட நம்பிக்கைகளின்
சிதைவால் 
கருகிக் கதறும் மாண்புகள்
உருகி வடிகின்றன ஆர்ப்பாட்டங்களாய்!

கலிகாலத் தெருக்கூத்துக்களின்
அரிதார இருளை 
களைத் தெறியவோ- இனி
சேவல்கள் கூவட்டும் !
சுந்தரப் பொழுதுகளும் சிரிக்கட்டும்!

ஜன்ஸி கபூர் 
 

இவர்கள்


நெருப்புத்துண்டங்களாய்
வறுமை
இவர்கள் வாழ்வை விழுங்கும்!

ஒட்டடை கூட
ஒட்டிக் கொள்ளாத உதரம்
ஆகாரத்திற்காய்
அடிக்கடி எட்டிப் பார்க்கும்!

வீதியோர நிழற்படுக்கையில் - தினம்
விழுந்து மொய்க்கும் விழிகள்
பழுதாகி துடிக்கும் கண்ணீரில்!

வீசப்படும் சோற்றுப் பருக்கைகள்
வீம்பாய் முறைத்துக் கிடக்கும்
இவர்கள் 
தெம்பில்லா மேனிகள் கண்டு!

கள்ளிச் செடியின் 
முள்ளுறுத்தலில் முணங்கிக் கிடக்கும்
இவர்கள் வாழ்வோ 
கேள்வியாகி முறைத்துக் கிடக்கும்!

சோகப் புழுக்களின் பிறாண்டலிலும்
சோர்வடையா பசி மிரட்டல்கள் 
வந்தமரும் சேமிப்பகங்கள்
இவர்கள் !

திட்டலும் முறைப்பும் சரிதமெழுத
விட்டகலா பசிக்காய் - தினம்
பறக்கும் பட்டாம் பூச்சிகளிவர்கள் !

ஜன்ஸி கபூர் 

என்னால் முடியும் !

என்
மனத் தரை வேரூன்றலில்
தழுவிக் கிடக்கிறது
முயற்சி விழுதுகள்!

சூரிய வெம்மையின்
இம்சை அராஜகத்திலும்
துவண்டிடா மேனி. 
தடம் பதிக்கத் துடிக்கின்றது
உழைப்பின் நல்லறுவடைக்காய்!

துரோக முட்களால்
குரல்வளை நசிப்போரின்
துவம்சத்திலும் என் வாழ்வு
தளிர் விட துடிக்கும் !

என்னால் முடியும் 
தன்னம்பிக்கையின் விசிறலுக்குள்
தடையின்றி நனைந்தே தான்
வாழ்வைச் செதுக்க முடியும்
வனப்பில் நனைந்தே - என்றும்
வானம் தொடவும் முடியும்!

ஜன்ஸி கபூர் 

பிரிவலை




என் சுவாசக் காற்றின் மூச்சிரைப்பில்
உன் 
மௌனத்தின் அதிர்வுகள்
பலமாய் அலைகின்றது!

காலச்சுனாமியின் காவால்
காணாமல் போனது - நம்
கனவுகளா உயிர்த்துடிப்பா!

இருந்தும் 

நம்முள் முகிழ்க்கும் நேசம் கூட
தீப்பிழம்பின் ரேகைக்குள்
புது யுகம் படைக்கின்றது!

ஜன்ஸி கபூர் 

புயலாக மாறும் பூவை


சயனைட் தேடுகின்றேன்
என்னுயிர் அறுக்கவல்ல.........
அக்கிரமங்களால் தீ வார்க்கும்- அந்தக்
கயவர்களைக் கருக்கிடவே!

நேசத்தை வார்க்கும் நெஞ்சில்
நெருஞ்சியைப் பதியமிடுவர் வஞ்சகர்!
கேடியாய் பிறர் கோடி பிடுங்கி
நாடியுமறுப்பர் உயிர் வதைக்க !

ஓர் குற்றம் செய்யவில்லை
பாச உடன்படிக்கை மீறவில்லை
வார்த்தைக் கணை தொடுக்கவில்லை
இருந்தும் 
அவலச் சிறைக்குள் அடைக்கின்றனர்
குற்றவாளியென சிதைக்கின்றனர்!

இடியோசைகளின் பயிற்சிக் களம்
என் மனமாம் 
மேகங்களின் தேரோட்டம் என் விழியாம் 
அஞ்சாத சமுத்திரம் என் வாழ்வாம் 
சூரியப் புயல் என் சொல்லாம் 
பிரகடனம் செய்கின்றேனென்னை
எதிராளி எட்டடி தள்ளி நிற்க!

மண்ணிலென் இருப்பறுக்க
பண்பற்றோர் வேரறுக்கையில் 
புயலாக மாறும் பூவையென் - ரவைகள்
ரகஸியமாய் வெளிநடப்புச் செய்கின்றன!


நீயே என் உயிராகி !


உணர்வுகளால் நெய்யப்பட்ட - என்
மனப்பாறையில்
உருகிக் கொண்டிருக்கின்றது
உன் முகம்!

சுகம் நனைக்கும் - உன்
விழி நெருடலில்
மயங்கிக் கிடக்கின்றது
என் ஆத்மா!

உன் வசீகரப் புன்னகையின்
சிதறல்களில் 
பொறுக்கியெடுக்கின்றேன் - என்
சந்தோஷத் தேடலை!

நண்பா- நீயேயென்
ஞாபகத் தெருக்களில்
காவலனாய்
பல கணங்களில் !

ஜன்ஸி கபூர் 

மண வேலி!


நீ- என்
இனிய கவிதை!

நாதஸ்வரத்தின் நளினத்தோடு
என்னுள் நார்த்தனமாடியவுன்னை 
விலங்கிட்டுக் கொண்டேன்
என்னவளாய்!

நீ நடக்கையில் 
எனக்குள் கிசுகிசுக்கும் - உன்
மெட்டியொலியின் மெட்டோசை
கெட்டி மேளம் கொட்டும் - என்
ஹிருதய நுழைவாயிலை
அடிக்கடி எட்டிப் பார்த்து !

அடி  பெண்ணே!
நம் புதுவுறவுள் - நானோ
புளாங்கிதமடைய 
நீயோ புன்னகைக்கின்றாய்
அந்தப் புது நிலவாய் 
என்னவளாய்!

ஜன்ஸி கபூர் 

யதார்த்தம்



கால மயானத்தில்
காவு கொள்ளப்பட்ட என் வயதைத்
தேடுகின்றேன் - அது
மரணித்த சுவடாய்
நினைவுகளை மட்டும் அப்பிக்
கிடக்கின்றது!

முட்களும் கற்களும்
முணுமுணுத்த - அந்தத்
தீப் பொழுதுகள்
மௌனமாய் என்னை விரட்டும்
போதெல்லாம் 
வாழ்க்கை சயனித்து
இடறி வீழ்கின்றது வெறுமைக்குள்!

அன்று 
திமிரெடுத்து பண்ணிய வம்பு
வாலிப அட்டகாசங்கள்
இன்று 
வலியெடுத்துத் துடிக்கின்றது
ஞாபகச் சில்லுகளில் நசுங்கி!

வசந்த விரயத்தோடு உதிர்க்கப்பட்ட
வாழ்க்கைத்துளிகள் 
மானசீகமாய் எட்டிப்பார்க்கின்றது
தனிமைப்பட்டுப் போன - என்
சிறைப் பொழுதுகளில்
சிரமம் பாராமல் !

ஜன்ஸி கபூர் 

ஞாபகம் வருதே!


என் மன டயறி - உன்னால்
தூசு தட்டப்படுகின்றது மெதுவாய்!
நம் நட்பின் நெருடல்கள் - அதில்
சிரிக்கின்றன எழுத்துக்களாய்!

தெரு வயல்களில் - நாம்
புழுதி பரப்பி ஓடித் திரிந்த
அந்தக் கணங்கள் 
காயத் தழும்புகளினூடே
எட்டிப் பார்க்கின்றன
உன் ஞாபகச் சீண்டலைப் போல்!

காற்றலைகளில் நூல் கோர்த்து
காகிதப் பட்டங்களை ஏணியாக்கி 
விண்ணுக்கு நாமிட்ட தூதோலைகள்
இன்று வேடிக்கையாய்
என்னுள் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன
உன் அன்பின் பசுமை போல்!

நம் ஹிருதயங்களில் சிறகு விரித்து
தும்பி விரட்டியடித்த - அந்த
விடலைப் பருவம்
சிகரமாய் வியக்கின்றது என்னுள்!

கடிகார நகர்வுகளைத் தடுத்து
காலத்தை நிறுத்திய நம் குறும்புகள் 
மங்காத வாசத்தின் சுவாசிப்புக்களாய்
இன்னும் மயங்கித்தான் கிடக்கின்றன
என்னுள்ளே !

ஜன்ஸி கபூர் 

உறக்கம்



விழிக்கும் விடுமுறை தா..!


உறக்கத்தின் போராட்டம்
களமிறங்கும் நேரமிது!

இருளும் முகங்காட்ட 
மெல்ல எட்டிப் பார்க்கிறது
கனாக்களும்!
எம் நினைவகத்தின் இருப்புக்களை
மீள உருத்துலக்குவதற்காக!

விளக்கின் ஒளிச்சாரலில்
விழத்துடிக்காத பார்வைகள் 
வீம்பாய் முரசறைகின்றது
கொட்டாவி அலைகளோடு!

குட் நைட் .!

இஷ்டப்பட்ட வார்த்தைகளோடு
நாவும் குவிந்து மடிகின்றது
இன்றைய பொழுதின் நன்றியுரையாய்!

ஜன்ஸி கபூர் 

நீ


என் கனவு நதியின்
குளிர் நீரோட்டம் நீ!

என் ஆத்மா சரீரத்தின்
சுவாசப் படிமங்கள் நீ!

என் சிந்தனை இராக்களின்
விடியல் நீ!

என் உதடு உச்சரிக்கும்
தமிழ்மொழி நீ!

என் மனப்பை சுமக்கும்
அழகிய கர்ப்பம் நீ!

இருந்தும் 

நிழல்களின் இருக்கையில்
கையசைக்கும் சமாந்திரங்கள் நாம்!

நினைவுப் புள்ளிகளில் மாத்திரமே
தொட்டுக் கொள்கின்றோம் ரகஸியமாய்!

ஜன்ஸி கபூர் 

காதலித்துப் பார்


காதலித்துப் பார் 
முட்களில் படுத்தாலும்
ரோஜாவுன் மடியாகும்!

கண்ணாடியில் உன் விம்பங்கள்
அடிக்கடி அழகு பெறும்!
விழிகள் காதலில் கசிந்து
இதய மொழிகள் புன்னகையில் வடியும்
காதலித்துப் பார்!

உனக்கு அவள் 
அவளுக்கு நீ 
சரித்திரங்களில் உங்கள் பெயர்கள்
பொறிக்கப்படும்!
உயிரோ கனவின் தித்திப்பில்
மயங்கிக் கிடக்கும்
காதலித்துப்பார்!

நண்பர்கள் அந்நியமாவார்கள்
அந்நியமான அவளோ அன்பாவாள்!
மௌனங்கள் மனசைக் கிள்ளும்
மனசோ காதலில் நனையும்
காதலித்துப் பார்!

ஜன்ஸி கபூர் 

நிலா நிலா ஓடி வா


நிலாவே
உன்னை பல நாட்களாய்
கண்காணிக்கின்றேன்!
ஏனின்னும்
உன்னால் அடைகாக்க முடிவதில்லை
குஞ்சு நிலவொன்றை - என்
பிஞ்சு விழியினுள் நுழைத்திட!

சேவலின் சிறகடிப்போடு
ஒளிந்து கொள்ளும் நீ
பகற்பொழுதின் வறட்சியில்
மறைந்து கொள்வதும் ஏன்!

உன் பருக்கன்னங்களை
ஒற்றியெடுக்க சேலை தருகின்றேன்!
பூமியின் செல்லப்பிள்ளையே
நாளையென் கையசைவு கண்டு
தரையிறங்கி வா வேகமாய்
எனக்கும் சேவகம் செய்திட!


- Jancy Caffoor-

திறந்து பார்க்காதே



துருப்பிடித்த என்னிதயத்தை
திறந்து பார்க்காதே அடிக்கடி!
இற்றுப் போன காதலின் எலும்புக்கூடுகள்
அங்கே மரண ஓலமிடுகின்றது !

நகரும் ஒவ்வொரு நிமிடங்களோடும்
போராடும் எனக்குள் 
முட்கம்பிகளின் சாம்ராஜ்யம்
 காவல் காக்கின்றது வேலி விரித்து 
யாரும் நுழையாமல்!

விடியல் துசு தட்டும் கருமை
அப்பிப் பிடிக்கின்றது என் வாலிபத்தில்
ஆக்ரோஷமாய்!
உயிரோ 
தன் கயிரறுக்க நினைத்து
வெம்மைக்குள் தியானித்துக் கிடக்கின்றது!

கார்கால முரசொலியால் 
விழிக்குளங்கள் விறைத்துக் கிடக்கின்றது!
வெள்ளம் வழியும் தருணங்களுக்காய்- என்
கன்னங்கள் தவித்துக் கிடக்கின்றது!

அரிதாரம் பூசும் முகமகிழ்வோ
காலாவதியாகிப் போகின்றது- என்
கவனிப்பாரற்ற உயிர்த்துடிப்போ
மௌனிப்புக்களுடன் அலைந்து போகின்றது!

திறந்து பார்க்காதே என்னை நீயும்
திறந்து பார்க்காதே- உன்னால்
இறந்து போன என்னிருதயத்தை- மீள
திறந்து பார்க்காதே!

ஜன்ஸி கபூர்