About Me

2019/06/22

அன்றும் இன்றும்

வயது  என்பது உடல் சார்ந்த பெறுமானமே தவிர அகத்தின்  பெறுமதியல்ல. ஆனாலும் நமக்கு கிடைக்கும் அனுபவத்திட்கும், வயது எனும் எண் பெறுமானத்திற்கும்  நேர்ப்பெறுமானத் தொடர்பு  உண்டு. அந்த வகையில் வயது அதிகரிக்கும் போது அனுபவச் சேர்க்கை காரணமாக மனமுதிர்ச்சி உண்டாகிறது.  

அன்று.................!

2012 ஆம் ஆண்டு நான் இணையத்தோடு தொடர்புள்ள பயிற்சியில்  ஈடுபட்ட போது இந்த வலைப்பூவை உருவாக்கினேன். வலைப்பூ மூலம் முழு உலகையும் சில நொடிகளில் சுற்றிய மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் எதையாவது எழுதும் ஆர்வம்  மனதைப்  பிறாண்ட கற்பனைக்குள் நான் வசியமானேன்.  

மனம் நினைப்பதை எல்லாம் விரல்கள் வாசித்தன ஆர்வமாய்.  எழுத்துக்களால் ஒரு அடையாளம் கிடைக்க நிறைய போராட வேண்டி இருந்தது. ஒரு ஆக்கம் எழுதும் போது மகிழ்ச்சி வசமானது. நானே என் எழுத்துக்களுக்கு வாசகியானேன். அந்த மகிழ்ச்சி தந்த ஆர்வம், அதிர்வு இன்னும் எழுதத் தூண்டியது. பக்கங்கள் நிறைய, நிறைக்க   எழுதினேன்.  நான் எனும் உலகத்துக்குள் "நானே" வாசகியாய், விமர்சகியாய் உருக் கொண்ட தால் நிறைய எழுதவேண்டும் எனும் தாகம்  மனதுக்குள் கருக் கொண்டது. ஆனால் அப்படைப்பின் கனதி பற்றி மனம் எடை போடவில்லை. என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தில் எனது படைப்புக்களுக்கு வெளியுலகில் விமர்சனம் இருக்கும் எனும் எதிர்பார்ப்பு  ஏற்படவில்லை.

 ஆனால் ............

காலம் கடந்தது. மனம் முதிர்ச்சி அடைய பட்டம், பதவிகள் அடையாளமாகின. என்னைச் சுற்றி இருந்த உலகம் விரிந்து சென்றது. விமர்சகப் பார்வைகளும் விசாலமாகின.   

கற்பனைகள் ஒடுங்கிக் கொண்டன தானாக. யதார்த்தங்கள் சமீபமானது. ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் காண அருகே ஆயிரம் பேர்களின் விம்பப் பார்வைகள் விழுவதை போன்ற பிரமை. எதை எழுதினாலும் சரி எனும் நினைப்பு  மறைந்து, எதை எழுதுவதென்று யோசித்து நின்றது. படைப்புக்களில் இருந்த அலங்காரம், கருத்துச்செறிவுள்ளதாக மாறப்  போராடியது.  வெளியே அவதானித்துக் கொண்டிருந்த விமர்சகர் உலகம் பெரும் அண்டமாக விழி விரித்துக் காத்து நிற்பது   புரிந்தது.

ஒவ்வொரு அடியும் மிக  நிதானமாக பயணிக்க வேண்டிய அவசியம் புரிந்தது.  சின்ன வயதில் எதையும் எழுதலாம். ஆனால் இப்போது கருத்துச் செறிவுடன், புலமையும் கைகோர்த்து பயணிக்க வேண்டிய அவசியம் புரிந்தது.  நிஜங்களின்  செறிவின் முன்  கற்பனைகள்  யாவும் தடுமாறி ஓடி ஒளிந்து கொள்ள, மெதுவான என் எழுத்துப் பயணம் எனது அடையாளத்தைச் சிதைக்காதவாறு பயணிக்க ஆரம்பித்தது. 

இப்பயணத்தின் பரிமாணம் இப்போதெல்லாம் நிதானித்து, மனசுக்குள் ஒரு தடவை  எழுதியவற்றை சரி பார்த்து, கனதியுடன் படைப்பினை எனக்குள் விமர்சித்தே எழுதுகோல் பிடிக்கிறது. அலங்காரம், கற்பனை அதிகம் தொட்டுக்க கொள்ளாத யதார்த்தமான படைப்பினை நோக்கியதான அடுத்தவர் எதிர்பார்ப்பு பார்வையை நோக்கிய திசையில் எனது விரல்கள் பயணிக்க   ஆரம்பித்து விட்டன.

- Jancy Caffoor -
  22.06.2019

மீளும் ஆளுமை

Image result for மீளும் ஆளுமை

வட மாகாணத்தில் அன்றைய காலங்களை  விட இன்றைய  கல்வி நிலை சற்று தாழ்ந்தே உள்ளது. இது யுத்தத்தின் தாக்கமாகவும்  இருக்கலாம். கற்றல் பெறுபேறுகளில் ஏறுமுகம் காண மாணவர்களின் கற்றலோடு ஆளுமை விருத்திக்கான உள பரிகாரத்தையும் ஏற்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என கருதப்படுவதால், பாடசாலை மாணவர்களுக்கு ஆளுமை விருத்திக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. அந்த வகையில்  யோகா பயிற்சியளித்தலும் கற்றல் ஒரு பகுதியாக தற்போது கல்வித்துறையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு அம்சமாக 21.06.2019  அன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  யா| இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற  "மீளும் ஆளுமை"  அங்குராப்பண வைபவ நிகழ்வு  என்னையும் ஒரு கணம் சிந்திக்க வைத்தது .

அங்கு கூறப்பட்ட வளவாளர் கருத்துக்களோடு என் மனதையும் உள்வாங்கிக் கொள்ளுகிறேன். மனம் சுத்திகரிக்கப்படும் உணர்வு. மனதின் குழப்ப அலைகளை யாரோ நகர்த்தும்  பிரமை! 

புத்தி என்பது சரியான தீர்மானம் எடுக்கும் ஆழ் மனதின் பகுதி. இந்த மனமும், புத்தியும் ஓர் வழியில் பயணிக்கும் போதே உள ஆரோக்கியம் கிடைக்கும்.  இந்த உள அமைதிக்கு ஆன்மீகம் பாதை அமைத்துக் கொடுக்கின்றது. எனவே நாம் உள அமைதிக்கான வழிகளில் நம் மனதை நகர்த்த வேண்டும். ஆன்மீகமும், ஆரோக்கியமும் சீரற்று    போகுமானால் மனம் குழம்பி விடும்.  

மனம் என்பது எண்ணங்களை உருவாக்கும், உணர்ச்சி மயமான, ஆத்மாவின் ஒரு பகுதி. நம்மை சுற்றி படரும் பலவித எண்ணங்கள் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறன. இந்த மனதில் உருவாகின்ற தேவையான, தேவையற்ற  எண்ணங்களே   நம்மை வழி நடத்துகின்றன.

அனுபவங்கள் பதிந்து கிடைக்கும் பகுதி ஆழ்மனம் ஆகும். சூழல் நமது அனுபவங்களுக்கான ஒரு பொக்கிஷம். நாம் தினமும் பலவிதமான அனுபவங்களை அங்கிருந்து பெற்றுக் கொள்கின்றோம். அவை நம் எண்ணங்களுடன் கலந்து வடிவமைக்கப்பட்டு நடத்தைகளாக சீரமைக்கப்படுகின்றன. புத்தி என்பது ஆழ்மனது உள்வாங்கிக் கொண்ட உணர்வுகளை கிரகித்தல் அல்லது சிந்தித்தால் ஆகும்.  இந்த ஆழ்மனப் பதிவில் இருந்தே நேர், மறை எண்ணங்கள் நமக்குள் இருந்து உருவாகின்றன. புத்தியை முடிவெடுக்கும் திறன், அபிப்பிராயம் என்றும் கூறலாம். 

எண்ணப் பெருக்கத்தை புத்தி சீர் செய்யும். சில வெளியேறும், சில உள்ளே புகுந்து அலைக்கழிக்கும். நமது எண்ணங்களை செயலோடு இணைப்பது, நமது திறமைகளை நினைப்பது, தூங்கும் முன்பு நல்ல செயல்களை மனதில் கட்டளை இடுவது என்பது நமது ஆழ் மனதை சீர்படுத்துகிறது.

ஒவ்வொரு மனிதனும் தனித்து வாழ முடியாது. அவன் சமூகத்தின் ஒரு கூட்டு. இச்சமூகத்துடன் சமாதானம்,  புரிந்துணர்வுடன் இணைந்து வாழும் போதே சந்தோஷமான வாழ்வும் நமக்குச் சொந்தமாகின்றது. நாம் நம் மனதை ஒருமைப்படுத்தி சுய விசாரணை செய்யும் போது ஆழ்மனம் தன்னை ஒழுங்கு படுத்துகிறது.
  • நான் யார்?
  • என் இலக்கு என்ன?
  • எனக்கு நன்மையானவை எவை?
  • நான் தவிர்க்கவேண்டியவர்கள் யார்?
  • எப்படி என் வாழ்வுக்கான பாதையை நான் வகுக்க வேண்டும்?
இவ்வாறாக பல வினாக்கள் தொடுத்து நம்மை நாமே சுய விசாரணை செய்ய வேண்டும். அப்போது நம் மனதுக்குள் ஆன்மீகம் உள்ளாந்த புரட்சியை ஏற்படுத்துகிறது.  நமது வாழ்வின் ஒவ்வொரு சம்பவத்திற்கும் நானே பொறுப்பு எனும் உணர்வானது நமது எண்ணத்தின் முதன்மைச் சாவி ஆகிறது.  சூழலில் நாம்  கண்களால் காணும் காட்சிகள்  யாவும்  அவதானமாக மாறி தாக்கம் செலுத்துவதால் நடத்தை கோலங்களினுடாக நமது ஆளுமையும் பாதிக்கப்படுகிறது.  

    நாம்,  நமது வாழ்க்கை எனும்போது அந்த வாழ்க்கையின் பொறுப்பாளி நாமே! மனிதன் தானாக வாழும் போது சக்தி அதிகம். என்னை, எனக்காக வாழும் போதே அந்த வாழ்க்கை சிறப்பு பெறுகின்றது. உறவு, சொத்து, கல்வி, பட்டம், பதவி என்பவை நமக்கு பிறகே!   

என் எண்ணங்களோடு, என்னைச்  செலவழித்து மீண்டும் என்னுடன் என்னைக் கொண்டு செல்லுதல் மீளும் ஆளுமை எனப்படுகிறது ஒவ்வொருவரும் தமது சுய ஆளுமையை உணர்ந்து வாழ்தலே சுதந்திரமான வாழ்க்கை. ஆனால் நாம் எல்லோரும் வெளிவாரி வாழ்க்கையிலே கவனம் செலுத்துகிறோம்.  வாழ்க்கையின் ஆரம்ப அத்திவாரம் பலமாக இருப்பின் எதிர்காலம் சிறக்கும் 
என்பதில் ஐயமில்லை.

- Jancy Caffoor -
  22.06.2016 

2019/06/16

வசந்தத்துளிகள்


எப்பொழுது நாம் பிறரால் மறுக்கப்படுகின்றோமோ, அன்றுதான் நாம் நமது ஆற்றல்களை உணர்ந்து, அவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கின்றோம்!
----------------------------------------------------- 


சனியில் நாங்கள் சட் செய்தோம்
ஞாயிறில் என் ஞாபகத்தில் நீ
திங்களில் முத்தங்களாய் தித்திப்பு தந்தாய் 
செவ்வாயில் திருமண உறுதி தந்தாய்
புதனில் கனவுலகில் புதுமணத் தம்பதியராய் நாம்
வியாழனில் வீட்டுக்கு வந்தாய் திகதி குறிக்க
வெள்ளியில் ........ உள்ளம் திருடிச் சென்றாய்!
----------------------------------------------------- 

ஆடம்பரமான ஹோட்டலில் புரியாணி சாப்பிட்டாலும் கூட, வீட்டுல குடிக்கிற கஞ்சிக்கு ஈடாகுமா

நாம் அடுத்தவருக்காக ஆடம்பரத்துல நாட்டம் காட்டினாலும் கூட, எளிமையிலதான் அதிகமான மகிழ்ச்சி இருக்கிறது.

---------------------------------------------------------- 
பெண்ணின் அழகும் இளமையும் தான் ஒவ்வொரு ஆணிணதும் உணர்ச்சியைக் கிளரச் செய்து அவளைத் திரும்பிப் பார்க்கச் செய்கின்றன!

ஆனால் அவளின் அன்பே அவன் வாழ்வை என்றும் முழுமையடையச் செய்கின்றன!
------------------------------------------------------ 



காதல் ஒரு வார்த்தைதான். ஆனால் அன்பின் முழு இராய்ச்சியமும் அதில்தான் அடங்கிக் கிடக்கின்றது!
------------------------------------------------------- 

பாம்பாட்டி மகுடி ஊதும்போது, பாம்பும் ஆடும்.
அது மகுடிக்காகவா!
இல்லையென்கிறது ஆராய்ச்சி!
பாம்பாட்டியின் உடல் அசைவைப் பார்த்துதான் பாம்பும் ஆடுதாம். என்ன உங்களுக்கும் பாம்பு போல ஆட ஆசை வந்திருக்குமே!

நான் சொல்ல வந்த விசயம் இதுதான்
ஒருவருடைய வீட்டுச் சூழலும், சமுகப் பின்னணியும் தான் அவருடைய முழு செயல்களையும் செய்கிறது. நீங்க தப்பு செய்தா உங்கள ஏசக் கூடாது. ஏனென்றால் அது பலனளிக்காது. அதனால உங்க அம்மா, அப்பாவத்தான் ஏசணும், நீங்க வளர்ந்த சூழலைத்தான் ஏசணும்.

ஆக நல்லவங்க தன்னை சுற்றியிருக்கிறவங்களுக்கு கெட்ட பெயர் வாங்கித் தரமாட்டாங்க..தவறுகளும் செய்ய மாட்டாங்க. அறியாம செய்தா திருந்திடுவாங்க.


- Ms. Jancy Caffoor -
   16.06.2019

கல்விப் பட்டங்கள்



வவுனியா கல்வியற்கல்லூரியில் என் பாதங்கள் பதிந்து பலவருடங்களும் கழிந்துவிட்டன.

பல ஆசிரியர்களை சமுகத்திற்குள் சேவைக்காக பயிற்றுவிக்கும் அக் கூடத்தின் நிழற்பரப்பில்தான் எனது கல்விமாணிப் பட்டப்படிப்பின் கூடமும் அமைந்திருந்தது

வவுனியா பூந்தோட்டத்திற்கே ஓர் முகவாயிலாக இக் கல்வியியற் கல்லூரி திகழ்கின்றது. இங்கு நான் என் கற்கையறிவுடன் இணைந்த நிலையில் பல நல்ல, என் தொழில் வாழ்விற்குரிய அனுபவங்களையும்  உள்வாங்கியுள்ளேன்..


கல்லூரிக்குள் நுழைந்ததும் ஆசிரியர் மாணவர்களின் பல சிந்தனைத்துளிகள் காட்சிக்குள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை ஒவ்வொருமுறையும் விழிகளால் நுகர்ந்து, சிந்தைக்குள் நிரப்பியே உட்செல்வேன்!


இந்த நுழைவாயில் தந்த அறிவும் அனுபவமும் யாழ் பல்கலைக்கழகத்தின் முதுகல்விமானி வரை என் தொழிற்றகைமையை உயர்த்தியது.

கல்விக்குதான் தடையேது!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!















- Jancy Caffoor-
   16.06.2019


அன்பே மகிழ்ச்சி




எனக்கொரு நண்பர் இருந்தார். அவரும் ஆசிரியர்தான். இலக்கிய ஈடுபாட்டுடன் கூடிய வேடிக்கைப் பேச்சுக்கு அவர் சொந்தக்காரர்.

அவர் அழகானவர்...நடிகர் சரத்பாபுவின் சாயல் ஆனால் மூக்குக் கண்ணாடி அவரிடமில்லை. ஒருநாள் செமினார் ஒன்றில் அவரைச் சந்தித்தபோது , அவர் சின்னத்தாடி வைத்திருந்ததைக் கண்டேன்.

"என்ன, தாடியெல்லாம் வச்சிருக்கிறீங்க, காதல் தோல்வியான்னு கேட்டேன்"

சிரிச்சுக் கொண்டே கவிதையொன்று சொன்னார்
(இது அவர் இயற்றினதா இல்லையான்னு தெரியல)

'ம்ம் 
இதயத்தை தாடி என்றேன்
தர மறுத்தாள்....
அந்த தாடியோ இப்ப என் கன்னத்தில
ஒட்டிக்கிட்டுது"

அவர் பதில் சொன்ன விதத்தைக்கேட்டு நானோ சிரிக்க, அவரும் என்னுடன் சேர்ந்து சிரிக்க

அன்று ..............
அவர் சொன்ன விசயம் ஒன்று இன்னைக்கும் மலைப்பா இருக்கு. அந்த இலட்சிய இளைஞர் செய்த தியாகம் என்ன தெரியுமா.

அப்போது அவருக்கு வயது 25, அழகில்லாத, வறுமைப்பட்ட திருமண வாய்ப்பே இல்லாத 45 வயதுப் பெண்மணியைத்  துணிந்து திருமணம் செய்தார்.

வாழ்க்கையை  ஈஸியா நினைக்கிற இந்த மனசு எத்தனை ஆண்களுக்கு வரும்! இன்று வரைக்கும் அந்த தம்பதியினர் ரொம்ப சந்தோஷமாக வாழுறாங்கள்.

அன்பே மிகப் பெரிய மகிழ்ச்சி!

- Jancy Caffoor-
   16.06.2019

சிரிப்பூக்கள்



அம்மா -
மிளகாய்த்தூள் கண்ணுக்குள் பட்டால் ஏன் சிவக்குது?

மகள் - மிளகாய் சிவப்பாக இருப்பதால்

(உங்களை விட, உங்க பிள்ளைங்க புத்திசாலிங்களா? )

-------------------------------------------------------------------------------------------------


நடிகன் :- ஏம்பா என்னைச் சுத்தி சுத்தி வாறே!

ரசிகன் : - நான் உங்க Fan ங்க .................


- Jancy Caffoor-
  16.06.2019

சின்னக் குறும்பு





நான் சின்ன பொண்ணா இருக்கிறப்போ, எங்கட ஊர்ல (யாழ்ப்பாணம்) சுவீப் டிக்கற் விக்க ஒருத்தர் வருவார். அவர வைரமாளிகைன்னு சொல்லுவம். அப்படி ட்ரெஸ் எல்லாம் போட்டு ராஜ கம்பீரமா குரல் கொடுத்திட்டு போவார்.

இதில என்ன விசேசம் என்றால் அந்த உருவத்துக்கு என்ர தங்கச்சி ரொம்ப பயம். நான் எங்கேயாவது விளையாட வெளிக்கிட்டா அந்த வாலும் ஒட்டிக் கொண்டு என் பின்னாலேயே வருவா. கொஞ்ச தூரம் போனதும்,

 "இந்தா உன்ன பிடிக்க வைரமாளிகை வாரார்"

 என்று கத்துவேன்.

அழுது கொண்டு தலை தெறிக்க வீட்ட ஓடுவாள் அவள்!

  இதை இப்ப நினைச்சாலும் சிரிப்ப அடக்க முடியல!







- Jancy Caffoor-
   16.06.2019

கனவுகள் சொல்வதென்ன

Image result for கனவு கவிதை

கனவுகள் என்பது உறைந்திருக்கும் உணர்வுகளின் வெளிப்பாடா என்பது பற்றி பல நாட்களாய் சிந்தித்திருக்கின்றேன். ஏனெனில் நம்மையுமறியாமல் ஆழ்மனதுள் பதிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தான் கனவாகி கசிந்து வெளிப் பாய்கின்றன.

நான் அண்மையில் கண்ட கனவொன்று இன்னும் என்னுள் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் அது அதிகாலைக் கனவு. அதிகாலையில் காணப்படும் கனவுகள் பலிக்குமென்று பலர் சொல்லக் கேட்டுள்ளேன்.

ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தங்கள் வேறுதான்.

கனாக்கள் அழகானதுதான் நாம் விழிக்கும் வரை!

- Jancy Caffoor-
   16.06.2019

யாழ் நினைவுகள்




யாழ்ப்பாணம் 
1990 ஆம்  ஆண்டுக்கு முன்னர் நாம் பிறந்த ஒரு தேசம். வாழ்விடம். பிறப்பிடம் தான். ஆனால் இடப்பெயர்வின் பின்னர் வேறு ஊர்களில் தங்கி இருக்கும் போதுதான் சொந்த ஊரின், வீட்டின் வாசம்  புரிந்தது. அதன் ஏக்கம் நெஞ்சில் நிறைந்து ஆழமான மனத் தாக்கமாய் உள் நுழைந்தது. இழப்பின் போதுதானே அதன் அருமை புரியும். அந்த வகையில் எம் சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போது சின்ன வயது நினைவுகள் மெல்ல மெல்ல அதிர்ந்து கண்கள் வழியே கண்ணீரை வெளித் தள்ளும்.

பிள்ளைப் பருவம் என்பது பிறப்புக்கும், பருவமடைந்த நிலைக்கும் இடையிலான பருவமாகும். இப்பருவம் வாழ்வின் ஆரம்ப நிலை பலவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மனதை நிறைக்கும் பருவம். அனுபவங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பருவம். பயம் பாதி, தைரியம் பாதி என   நம்ம நாமே நிரப்பிக் கொள்ளும் பருவம். வாழ்க்கை தத்துவங்களை புரிந்து கொள்ளாமலே நமக்கென சில கோலங்களை நாமே வகுத்து அணி வகுக்கும் காலம்.  குடும்பமே வலிமையான உறவாக நம்மை வட்டமிடும். கஷ்டம், நஷ்டம் மனதுக்கு புரிவதில்லை. கிடைக்கும் சிறு காசு கூட கற்பனை  மாளிகையின் வண்ணக் கோலம்கள்தான். சுதந்திரமான காற்றின் அசைவுகளில் வாழ்நாட்கள் நகரும் அழகிய பருவம்.

அந்த பருவ அசைவுகள் யாழ்பாணத்து தெருக்களில் என்னை பதித்த நினைவுகளை மெல்ல அசை போடுறேன்.

அப்போது நான் 4 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் காலம். சைக்கிள் பழகும் ஆசை ஏற்படவே உம்மாவிடம் மெல்ல ஆசைகளை அவிழ்த்தேன். பக்கத்தில் லுகுமான் காக்காவின் சைக்கிள் கடை. ஒரு மணித்தியாலத்திற்கு குறித்த சில்லறைகள் வாடகையாகக் கொடுக்க வேண்டும். பக்கத்துக்கு வீட்டு நண்பிகள் புடை சூழ சைக்கிள் பயிற்சி  தினமும் ஆரம்பமானது.

சில மாதங்கள் நகர்ந்தன.

உம்மாவின் கோரிக்கைக்கேற்ப வாப்பா எனக்கென சிறு சைக்கிள் வாங்கித் தந்தார். இப்போது வாப்பாவின் மேற்பார்வையில் சைக்கிளோட்டம் ஆரம்பமானது. வாப்பா முன்னே செல்ல, நான் பின்னே பயத்துடன் ஊர்ந்து கொண்டிருந்தேன்.

அது ஓட்டுமடச் சந்தி கடந்த அராலி வீதி.

அப்போது முதலாம் குறுக்குத் தெரு பொம்மைவெளியில் வீடுகள் பெரிதாக இல்லை. ஆங்காங்கே  குடிசைகள்.  வீதிக்கும், குறுக்கு நிலத்துக்கும் இடையில் பெரிய பள்ளம்.

ஈருருளி நகர்ந்து கொண்டிருக்கும் போது என் பின்னால் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பயத்தில் கைகள் நடுங்க, ஈருருளியை பள்ளத்துக்குள் வீழ்த்தினேன். 

"உம்மா"

மெல்ல முனகலுடன் எழும்ப  முயற்சித்தேன். "ம்ம் ஹும்" முடியவில்லை. வாப்பாவும் பள்ளத்துக்குள் இறங்கி  என்னை தூக்கி விட்டார். அந்தக்கணம் பாதி வெட்கம், மீதி வேதனை.

அன்று எனக்கேற்பட்ட அடி மெல்ல என் முயற்சிகளுக்கு  பலமானது. இன்று நான் லாகவமாக உந்துருளியை செலுத்தும் போதெல்லாம் அந்த நினைவுகள் மெல்ல என்னை உலுக்கி செல்கின்றது. வீழ்கின்ற ஒவ்வொரு அடியும், அவமானமும் நம்மை தூக்கி விடும் தூண்கள்தான்! 
 

- Jancy Caffoor -
  16.06.2019





தனி மரம்

Image result for divorce

பெண் இப்புவியில் கருக்கொள்ளும் போதே அவளை சூழ இருளும் கவ்வத் தொடங்குகிறது போலும்1 பெண் எனும் அழகிய உருக்குள்ளே சோகங்களும் மையம் கொள்ளத் தொடங்குகிறது. அவளுக்குள்ளே உறைந்து கொண்டிருக்கும் கனவுகள், எதிர்பார்ப்புகளை காலம் "திருமணம்" எனும் பெயரால் விகாரப்படுத்தி விடுகின்றது. 

திருமணம் ஒரு பெண்ணை முழுமைப்படுத்துகிறது. அவள் தன் மனதில் படிய வைத்திருக்கும் ஆசைகள் அரங்கேற்றும் இடமாக அந்த மணவாழ்க்கையை கருதுகிறாள். அவள் உணர்வுகளோடு ஒன்றித்துப் போகும் கணவனை மனம் தேடுகிறது. தன் குடும்பமே அவள் உலகமாக உரு எடுக்க, தன் உணர்வுகளை குடும்பத்துக்கே அர்ப்பணித்து வாழ்கிறாள். அந்த திருமணம் அவள் பெற்றோர் உடன்பிறப்புகள்,  உறவினர்கள், நண்பர்கள் என பல உறவுகளையும் பிரித்து, கணவன் எனும் கயிற்றை பலமாகப் பற்ற அவளுக்கு கற்றுக் கொடுக்கிறது. 

வருடங்கள் அவள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வர அவளுக்கென்றே அவள் இரத்தத்தோடு  உறவாடும் பிள்ளைகள் சொந்தமாகிறார்கள். 

தனிமரம் அவள் கிளை விட்டு தோப்பாகிறாள். 

சில வருடங்கள் ஓடிச்சென்றது விதி சதி செய்கிறது!

மருமகளின் உணர்வுகளை புரிந்து மகளாக ஏற்றுக் கொள்ளாத மாமியார், மதினிமார் அவள் மீது வன்மம் வளர்த்தார்கள். அவர்களின் சூழ்ச்சியால் கணவன், மனைவிக்கிடையில் மனக்கசப்பு உருவானது. அவர்களின் உறவுக்குள் மௌனம் பிசைந்து கொண்டது. ஒரு வீட்டுக்குள் வாழும் பறவைகள் உடலாலும், மனதாலும் தொலைவாகினர். அந்த வாழ்வு வெறும் சம்பிரதாயமாக மாறியது. அவள் ஏதோ வாழ்ந்தாள். அவள் பிள்ளைகள் மீது உயிரை போர்வையாக்கி மகிழ்ந்தாள். தன் குடும்ப மகிழ்வுக்காக அவள் சுயநலம் களைந்து ஒடுங்கிக் கொண்டாள்!

" பெண் என்றால் பேயும்  இறங்கும் "  என்பார்கள்.  

ஆனால்!

இந்த ஆணாதிக்க யுகத்தில் அவளுக்கென்று வெறும் போராட்டங்களே தரித்து நிற்கின்றன.   காற்றாகி போகும் கானல்கள் அவளுக்குள் தீயாய்  உறைந்து விடுகிறது.  நிம்மதி தேடும் வழிப்பயணத்தில் அவள் பதிக்கும் சுவடுகள் எல்லாம் கலியாகி  உலர்ந்து விடுகிறது. திருமணம் எனும் உணர்வுமிக்க புரிந்துணர்வு வெறும் சடங்காகிப் போகும் போது பெண்ணின் வாழ்வும் கேலியாய்,  கேள்வியாய் வீணாகிப் போய் விடுகின்றது.
   
நம்பிக்கை தந்து வாழ்வை பகிர்ந்த கணவன் வேறு பெண்ணை நாடும் பறவையாகிறான். அவள் மனநிலை இறுக்கமடைகிறது. தற்கொலை எண்ணம் தீயாய் அவளை சூழ்ந்து மனதை அல்லல்படுத்துகிறது.  தன்னை கட்டுப்படுத்த, தன் பிள்ளைகளுக்கான இருப்பை தக்க வைக்க அந்த சூழலை விட்டு சில காலம் வெளியேற நினைக்கிறாள்.  உணர்வுகளை நேசிக்காத  அந்த மனிதாபிமானமற்ற மனிதனிடமிருந்து, தன் பிள்ளைகளிடமிருந்து  யாருமறியாமல்  பிரிந்து தாய் வீடு செல்கிறாள்.  பிள்ளைகள் அவனுடன் இருந்தால் அவன் தன் அடுத்த மனைவியை தேடிச் செல்லமாட்டான்  எனும் நப்பாசை அவளுக்குள்!

சில காலம் சென்றதும் 

தன் கொந்தளிக்கும் மனதை அடக்கி மீள வீட்டிட்குச் செல்கிறாள்.  அவள் கணவன் அவள் குழந்தைகளையும் பார்க்க அனுமதிக்கவில்லை.  பிள்ளைகள் அந்த சிலகாலமும் தகப்பனால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள் போலும் ! தாய் மனநிலையை புரிந்து கொள்ளாமல் வெறுப்பை கக்கினார்கள்.  

அவள்  பிள்ளைகள் கணவனால் பிரிக்கப்படுகின்றார்கள். பிரிக்கப்பட்ட போது பெத்த மனம் கண்ணீரால் தன்னை கழுவிக் கொண்டது. 

இன்று விவாகரத்துக்காக    விண்ணப்பித்துக் காத்திருக்கும் அவள் மனம்!

போராட்டக் கலவை. கணவனால் வேறாக்கி கொண்டு செல்லப்பட்ட அவள் குழந்தைகள் தாய்ப்பாசம் மறந்து இன்று கணவனின் மனைவியான சிற்றன்னையுடன் வாழும்  பிள்ளைகளாக மாறி விட்டார்கள் . 

ஏன் ?

தாயை  மறக்கும் படி கணவன் மிரட்டினானா அல்லது கணவன் ஈனச் செயல் தாங்காது அவள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி தன் தாய் வீடு சென்றதா?  

அவள் இன்று தனி மரம்!
வாழ்வோடு போராடும் தனி மரம்!!
வாழ்வு தரிக்கப்பட்ட சோக மனம்!!!

அவளுக்கு அவள் தெரிவு செய்த இந்த திருமண வாழ்வு பொய்த்து போனதே!

இது யார் குற்றம்? 

அவனைத் தெரிவு செய்த அவள் குற்றமா அல்லது இறைவன் விட்ட வழியா?

அவள் துன்பத்துக்கு ஒருநாள் முடிவு வரும் அதுவரை அவள் வாழ்வு காலத்தின் கையில் புதிர்தான்!
கலங்காதே உன் துன்பம் விரைவில் தீரும்!!   பிரார்த்தனைகள்!!!

- Jancy Caffoor-
    16.06.2019


Image result for life

வாப்பா



வாப்பா!

இன்னும் உச்சரிக்கிறேன்
உங்கள் பெயரை
என் பெயரோடு !

உங்கள் கரம் பற்றி திரிந்த பயணங்கள்தான்
இப்போதும்   
என் அடையாளமாகின!

வாப்பா!
உங்கள்   அருகாமையில்
தைரியம் முளைத்தது  எனக்குள்!

நிரப்பினேன் என்னை
நீங்கள் கற்றுத் தந்த அனுபவங்களால்
தினமும்!

வாப்பா
தூரிகைகளுக்கு உயிர் கொடுத்த
ஓவியர் நீங்கள் !

வாப்பா!
உங்கள்  அழகான கையெழுத்தும் மொழிப் புலமையும்
நான் வியந்த கிரீடங்கள்!

தொலைவாகி போன
உங்களை இன்னும் தேடுகிறேன்
நிழல்கள் எல்லாம் உங்கள் முகமாக!

தீ வீசும் உஷ்ணத்தில் இன்றும்
நீராய்  வழிகின்றன
உங்கள் வார்த்தைகள்! 

உங்கள் நினைவுகள் இன்னும்
பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன
என் வெறுமை மனதில்!

உங்களை
நான் புரிந்து கொண்ட போது
என்னை பிரிந்தீர்கள் வாப்பா!

உங்கள் மரணம் கூட
என் அருகாமையில்!
விழி நீர்  நிரப்புகிறேன் இன்று வரை!

ஓய்ந்து போன உங்கள் சுவாசத்தில்
இன்னும்
என் நினைவுகள்  கலந்திருக்கு!

வாப்பா !
பிரார்த்தனை குடை பிடிக்கிறேன்
உங்கள் ஆன்மாவின்  சுவனத்திக்காய்!

மறைந்தும் மறையாத உங்களுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள் வாப்பா 16.06.2019
 


- Jancy Caffoor -

மௌனமே சிறந்த தேர்வு



வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். ஒவ்வொரு நகர்விலும்  நமது காலடியில் பலவித அனுபவங்கள். அனுபவங்களை உள்வாங்கியபடி நாம் பயணிக்கும் போது சூழ்நிலைகளின் தாக்கத்திலும் உள் வாங்கப்படுகிறோம். எண்ணங்களை நாம் உருவாக்கி அதனை செயற்படுத்தி வாழ முயற்சிக்கிறோம்.   ஆனால் நாம் நினைத்த படி வாழ்க்கை அமையாத போது மனதிலும் அமைதி இன்மை குடி கொள்கிறது. அர்த்தமற்றதாக தோன்றும் வாழ்வில் துன்பங்களின் ஆதிக்கம் அதிகமாகிறது. வாழும் ஒவ்வொரு நொடியும் பெரும் சுமையாக மாறுகிறது. நாம் நம்பிக்கை வைத்த அனைத்துமே மாயமாக மாறி மனதை அங்கலாய்க்கிறது. உலக உருண்டையில் சுழலும் ஒவ்வொரு துளிகளிலும் நமக்கான வெறுப்பு மேலோங்குகிறது. நயம் தரும் வாழ்வு காயம் தரும் நகர்வாக மாற ஆரம்பிக்கிறது. புரிந்துணர்வில்லாத மனிதர்களின் சொல் , செயல்கள் புயலாக மாறி தாக்கும் போது வார்த்தைகள் நாவுக்குள் ஒடுங்கி மௌனமே சிறந்த தேர்வாக   நமக்குள் அங்கீகரிக்கப்படுகிறது .

Related image

- Jancy Caffoor-
   15.06.2019