About Me

2020/07/25

தமிழ் வணக்கம்

 

கனிந்தாய் என்னுள் உணர்வாய்/
கருத்தின் சுவையாய் உயிர்த்தாய்/
கனிவால் மனதை நிறைத்தாய்/
கலந்தாய் வாழ்வின் ஒளியாய்/
இனித்தாய் மொழிக்குள் தாயாய்/
இசைந்தாய் இசைக்குள் ஒலியாய்/
இனிதாய் பிறந்தாய் தமிழாய்/
இமயமே உனையே வணங்குகிறேன்
/

ஜன்ஸி கபூர்  


குறளுக்கு கவிபாடு

குறள் :- 15

கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கேஃ
எடுப்பதூம் எல்லாம் மழை

வரண்ட மேகங்கள் வந்திங்கு போக
வாழ்வும் பஞ்சத்தில் மோதித் தவிக்கும்
வறுமை நீக்கி கெட்டார்க்கும் துணையாய்
வந்து பொழியுமே நல் மழையிங்கு


வசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே 
பசும்புல் தலைக்கண்பு அரிது. 

பெய்திடும் மழையும் பொய்த்திட்டால் புவியில்
பெருமரங்கள் ஊன்றாதே நிலத்தோ டுயிர்த்தே
பெருஞ் செல்வமாம் வாழ்வும் சுருங்கிட
ஓரறிவுப் புல்லினமும் வாடுமே பசுமையிழந்து

 
குறள் :- 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி  
தான்நல்கா தாகி விடின். 

மேக முறிஞ்சும் கடல் நீரெல்லாம்;
மேதினில் மழையாய் வீழ்ந்திடாத பொழுது
வருந்தித் துடிக்குமே கடல்வாழ் உயிரெல்லாம்
வற்றியும் போகுமே பெருங்கடலும் வளமின்றி

ஜன்ஸி கபூர்

எதிர்பாராதது

 சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் மணி ஆறென்பதை உணர்த்தியதும் வனஜாவின் நெஞ்சுக்குள் ஏதோ பிசைய ஆரம்பித்தது. தன் முன் மேசையில் பரவிக்கிடக்கும் கோவைகள் அனைத்திற்கும் இன்று கையொப்பம் இட்டால்தானே நாளை அவற்றை உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். இந்த அலுவலகத்தில் முகாமைத்துவ அதிகாரியாக இருக்கும் அவளுக்குள் பயமெல்லாம் வேரூன்றக் கூடாதுதானே. மனதைத் திடப்படுத்திக் கொண்டவளாக தனது வேலையில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினாள். 

நிமிடங்கள் இரவுடன் கசியத் தொடங்கவும் அறையினுள் ஒளிர்ந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அணைத்து விட்டு வெளியேறத் தொடங்கினாள். கடைசிப் பேருந்தினை பிடித்துவிடலாம் எனும் நம்பிக்கை அவளை விரைவுபடுத்திய போது.      யாரோ பின்தொடரும்  ஓசை   கேட்கத் தொடங்கியது. நடையின் வேகத்தை துரிதப்படுத்தினாள். 
வீட்டில் அவளும் அம்மாவும்தான். தம்பி வெளி மாவட்டத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். சிறு குளியலொன்றையும் எடுத்தவள் அம்மா தூங்கியதும் தன்னறைக்குள் வந்தாள்.

அம்மா பாரிசவாத நோயினால் கடந்த இரண்டு வருடங்களாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவளைப் பொறுத்தவரை அம்மா  இன்னமும் சிறு குழந்தைதான். இயக்கமற்று நாற்காலியே கதியென்று வாழும் அவரைக் கவனிக்க   ஏற்பாடும் செய்திருந்தாள்.

உறக்கம் கண்களைச் சுழற்ற தன்னறைக்குள் திரும்பியவள் அதிர்ந்தாள். மீண்டும் காலடிச் சப்தம் அருகில் கேட்கத் தொடங்கியது. பிரமையோ தன்னைச் சமாதானப்படுத்த முயன்றாலும்கூட அவளது அடிமனமோ மீண்டும் அச்சத்தில் உறைய ஆரம்பித்தது.

திடீரென அவளது கண்முன்னே அவன் நின்று கொண்டிருந்தான். 

வயது முப்பதுக்குள்.....

முகக் கவசத்தினால் தன்னை மறைத்திருந்தான். கையில் வைத்திருந்த கைத் துப்பாக்கி அவளது நெஞ்சின் முன்னால் நீண்டு பயமுறுத்திக் கொண்டிருந்தது. அவன் திருடனென்பதைப் புரிந்து கொண்டாள். 

'வீட்டு பீரோச் சாவியைக் குடு'

'ஓ..இதுதான் காரணமா என தனக்குள் சொல்லிக் கொண்டு' அவனது கட்டளைக்கு இயங்க ஆரம்பித்தாள். சப்தம் போட்டால் அம்மா பயப்படுவாரென்ன கவலை அவளுக்குள்.

'அவள் கண்முன்னே....... அலுமாரி திறக்கப்பட்டு பொருட்கள் வீசப்பட்டன. அவன் எதையோ தேட ஆரம்பித்தான். அவன் தேடி வந்த பொருள் கிடைக்கவில்லைபோலும். கண்ணுக்குள் அகப்பட்ட பொருட்களை எட்டி உதைத்து தன் ஆத்திரத்தை தீர்த்தவன் வந்த வேகத்திலே மறைந்தும் போனான்.

அம்மாவின் அறையினை மெல்ல எட்டிப் பார்த்தாள் வனிதா. அம்மா கலவரத்தோடு போராடிக் கொண்டிருப்பது புரிந்தது.

'யாரு மக...........'

'அவள் விடயம் சொன்னதும் அம்மாவின் முகம் பயத்தில் இறுகத் தொடங்கியது.

'அம்மா பயப்பிடாதீங்கோ....அவன் இனி இந்தப் பக்கம் வரமாட்டான். கொஞ்ச நாளா யாரோ என்னைப் பின்தொடர்ந்தாங்க. எனக்கு சந்தேகமா இருந்திச்சு. அதான் வீட்டிலிருந்த நம்ம நகையையெல்லாம் வங்கிப் பெட்டகத்தில நேற்றே பாதுகாப்பா வைச்சிட்டேன். விடிஞ்சதும் பொலிஸுக்கு போகலாம்மா.'  

 என்ற வனிதாவிடம் திருடனைத் தந்திரத்தில் வென்ற மகிழ்ச்சி வெளிப்பட்டது.   தனது எதிர்பார்ப்பு திருடனுக்குள் எதிர்பாராத முடிவைக் கொடுத்த திருப்தியுடன் உறங்கச் சென்றாள் அவள்.  

ஜன்ஸி கபூர் 
 







2020/07/24

புரிதலில் வாழ்க்கை


சிறகிருக்கு துணையாய்
 தொட்டிடலாம் சிகரம்/

சிந்தையும் தெளிந்திருந்தால்
சிறப்பாகும் எண்ணமே/

சிதறாதே பகையுணர்வால்
சீராகும் நல்லுணர்வும்/

சினமது தொலைந்திட்டால்
மனமது மகிழும்/

சிக்கல்தானே வாழ்க்கை
மதியுமதை மீட்கும்/

புரிந்துதானே நீயும்
சுகமாய் வாழ்ந்துவிடு /

ஜன்ஸி கபூர்   




உணர்வால் ஒன்றுபடுவோம்


தாய்பூமி தாங்கிடும் விரல்களின் சத்தியத்தால்
தளிர்த்திடும் ஒற்றுமையும் தங்கக் கரங்களால்
தன்னார்வக் கூட்டணியில் மனமும் இணைந்தால்
தரணியும் துலங்கிடுமே தன்னிகரில்லா உழைப்பினாலே

தேடிடுவார் வளங்களை தேயாதே இயற்கையுமே
தேன்சுவை   மொழியெடுத்தால் வளர்த்திடலாம் சிந்தையை
தேகத்தின் வலிமையினால் உழைப்பும்   செல்வமே
தேக ஆரோக்கியம் என்றும் அடையாளமாம்

ஒன்றுபட்டே வெல்லலாம் மனங்களை அன்பினாலே
ஓங்கிடும் பலத்தினில் ஒளியேற்றலாம் மனையினில்
ஒருமித்த கருத்தெடுத்தே களைந்திடலாம் முரண்பாடுகளும்
ஒத்திசையும் குணத்தாலே ஆளலாம் எத்திசையும்

கூடியே அகற்றலாம் பேதங்களும் ஒழிய
கூடாதோர் நட்பையும் வீழ்த்திடலாம் வெளியே
கூட்டணியாய் திரண்டேதான் காட்டிடலாம் பலத்தை
கூடிடலாம் திருநாளில் பண்பாடும் வளர

ஜன்ஸி கபூர்     
 
   

2020/07/23

விடியாத பொழுது

விடியாத பொழுதெல்லாம் விதியின் சூழ்ச்சியோ/
துடிக்கின்றனர் மாந்தரும் இழிகுணம் கண்டே/
கடிவாளமில்லா ஆசைகளும் வெடித்திடுமே பேராசைகளாய்/
மனசு முணர்ந்திடும் திருப்தியற்ற வாழ்வுதனை/

சுரண்டும் கரங்கள் உயர்த்திடும் கோபுரங்களை/
வரட்டும் ஏழ்மைக்குள்ளும் துகிலுரிக்கும் கையூட்டுக்காய்/
ஈரமில்லா நெஞ்சுக்குள்ளும் திரளும் சுயநலத்தால்/
மரத்திடும் மனிதமே மற்றோரெல்லாம் இருட்டிலே/

திட்டமிடா வாழ்வும் கடனேற்றும் மலையளவு/
வாட்டத்தின் வலிமைக்குள்ளும் உதிர்ந்திடும் வனப்புமே/
தட்டிக்கேட்கார் உழைப் புறுஞ்சுவோர் அநீதியை/
வட்டமிடும் பொழுதெல்லாம் விடியலும் மறக்குமே/

விரலளவே முட்டட்டும் நமக்குள்ளே எதிர்பார்ப்பும்/
வீணாகாமல் பொழுதெல்லாம் நலமாகட்டும் இனிதாகவே/
வாழ்வும் தன்னியல்போடு பொருந்திப் போனால்/
விடியாத பொழுதெல்லாம் விடிவெள்ளிகள் ஆளட்டும்/

ஜன்ஸி கபூர்  

இறவாத வரம்

பகுத்தறிவு மாந்தர்க்கு இறவாத வரமே
வகுத்திடலாம் நெறிதனை வாழ்வும் மேன்மையுற
தன்னையு மறிந்திடலாம் கற்காத அறிவுடனே
தரணியோ டிசைந்திடலாம் நல்வாழ்வும் பெற்றே

ஜன்ஸி கபூர் 


குச்சுவீட்டுத் திண்ணையோரம்


குச்சுவீட்டுத் திண்ணையோரம் ஆசை/
மச்சானும் காத்திருக்கேன் நெடு நேரம்/
அச்சமேனே அஞ்சு நிமிசம் பேசிடலாம்/
பச்சப் புள்ளையே புரிஞ்சுக்கடி மனசத்தான்/

வளைஞ்சோடும் நதியோரம் நீ நடக்கையிலே/
வளையல் சத்தம் கலகலக்குதடி காதோரம்/
வைரமே உருக்கிறியே என் மனசத்தான்/
வைகைக் காற்றே கிள்ளாதே நினைவைத்தான்/

மை தீட்டும் விழியாலே மயக்குறே/
தை மாசம் வாறேன்டி வீட்டோரம்/
கை வீசி நடக்கையில மனசள்ளுறியே/
வையடி சீக்கிரம் கல்யாணத் தேதியத்தான்/

மொய்க்கிறே வண்டாட்டும் மனதைக் கிள்ளித்தான்/
பொய்யாக சினந்துகிட்டே சிவக்கிறே அழகாக/
சாய்ந்தாடும் மலரே உன்னிதழ் அமுதாக/
காய்ந்த பூமியின் தேவதை நீதானடி/

ஆலமர விழுதிலே ஊஞ்சலும் ஆடுவோமா/
ஆசை நெலவும் ரசித்திடப் பாடுவோமா/
ஆனந்தத் தித்திப்பிலே உசிரும் இசைந்தாட/
ஆருயிரே காத்திருக்கிறேன் உனக்காக/

ஜன்ஸி கபூர்
 





மெய்க்காதல்


அந்தாதி கவிதை
-----------------------
பனித்துளிகள் படர்கின்றனவே உன்னை நினைக்கையில்/
நினைக்கையில் வீழ்கின்றாய் கனவெல்லாம் சுகம்தானே/
சுகம்தானே கண்ணே உயிரும் தேடுகிறதே/
தேடுகிறதே நிழலும் உன் பாதையினை/
பாதையினை வகுத்தே வாழ்ந்திடுவோம் நலமாய்/
நலமாய் வாழ்ந்திடவே துடித்திடுமே மனதும்/
மனதும் தவித்திடுமே நீயென்னைப் பிரிந்தாலே/
பிரிந்தாலும் சேர்ந்திடுமே நம் மெய்க்காதல்/

ஜன்ஸி கபூர் - 24.07.2020
யாழ்ப்பாணம்


மகிழ்வின் விலை

 

உழைப்பின் மூச்சினில்  ஊதிப் பருத்திடும்
ஏழை வியர்வையும் காற்றினில் கலந்திடும்
தழைத்திடும் வாழ்வும் செழித்தே மலர்ந்திட
அழைப்பார் விலை கொடுத்திட ஊதும்பைக்கே

பிஞ்சு மனங்களின் கொஞ்சும் விரல்கள்
கெஞ்சி வருடும் காற்றுப்பை மேனிதனை
அஞ்சிடாமல் அசைந்திடும் தென்றல் சுகத்தினில் 
நெஞ்சமும் நிறையுதே வானவில் வர்ணங்களில் 

விழிகளின் சுகத்தினிலே அழுகின்றதே இயற்கையும்
பழியாகுமோ சூழலும் இறப்பர் மாசினால்
அழிகின்றதே பண்பாடும் காற்றுப்பை கலாசாரத்தினால்  
செழிக்கட்டுமினித் தரணியும் பசுமை யலங்காரங்களால்

ஜன்ஸி கபூர்   

2020/07/21

புத்தம்புதுக் காலையிலே நித்தம் காத்திருக்கேன் அத்தமகளே உனக்காக பூத்திருக்கேன்

 
புத்தம்புதுக் காலையிலே நித்தம் காத்திருக்கேன்/
அத்தமகளே உனக்காக பித்தாகப் பூத்திருக்கேன்/
சித்தமெல்லாம் உருகுதடி உந்தன் அழகாலே/
உத்தமியே உசுருக்குள்ளே உன்னைத்தானே பூட்டினீயே/

கடலோரக் காற்றி லுந்தன் வாசமெல்லாம்/
கவிதையாக வீழுதடி நனையுதே மனசும்தான்/
கனவோரம் உயிர்க்குதடி நினைவெல்லாம் சுகமாய்/
கட்டியிழுத்தாய் காலமெல்லாம் கூடி வாழ/

நாணம் சிந்தும் நளின விழியினிலே/
நானும் சிறைபட்டேனே நிழலாய்த் தொடர/
நாவுதிர்க்கும் அமிர்தமே சுவைக்கத் துடித்தேனே/
நாளுமே உனக்காக ஏங்கித் தவித்தேனடி/

நடக்கு முன்னழகிலே அன்னமும் தோற்குதடி/
குடமேந்தும் வளைவினிலே துடிக்குதடி வயசும்தான் / 
விடமும் அமிர்தம்தானே நீ தொட்டதனாலே/
அடம்பிடிக்காதே  நாள்குறி நாம வாழத்தான்டி/

ஜன்ஸி கபூர் 






பொங்கு தமிழ்

அமுதத் தமிழை அன்பால் மொழிந்தே
அகிலம் வியக்க ஆளும் தமிழா
அண்டம் கேட்கும் வீர முழக்கம்
அஞ்சா நெஞ்சம் உந்தன் மகுடம்

பொங்கு தமிழ் எங்கும் தமிழாய்
வங்கக் கடலும் ஓங்கி ஒலிக்கும்
எங்குமுள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே
சங்கே முழங்கு பகைவர்கள் மறையட்டும்

கொடுமை காணுகையில் கொன்றொழி அதர்மம்
நடுநிலை கொண்டேதான் நானிலம் காத்திடு
தடுமாறி வீழ்ந்திடாமல் தடைகளு முடைத்தே
நாடும் செழித்திட நல்லுரமாய் உழைத்திடு

வஞ்சகர் நெஞ்சினைப் பிளந்திடு வாய்மையால்
கொஞ்சிடு முறவுதனை நல்லறமாய்ப்  போற்றிடு
வெஞ்சினம் கொள்வாய் பெண்பித்தர் முன்னாலே
நெஞ்சத்தை நிமிர்த்திடு தமிழனாய் வாழ்ந்திட

ஜன்ஸி கபூர் - 20.07.2020
யாழ்ப்பாணம்

2020/07/20

கலைகளின் இதயம்


இலக்கியங்கள் கலைக்கூற்றின் ஊடக மொழியே/
கலந்திடும் உணர்வுகளும் மரபால் அழகாகும்/
உலகக் கலைகளின் உன்னத தளமாய்/
துலங்கிடுதே மாந்தரின் வாழ்வோடும் பிணைந்தே/

ஜன்ஸி கபூர்  
 


காற்று வெளியிடைக் கண்ணம்மா


காற்று வெளியிடைக் கண்ணம்மா உந்தன்
காதல் என்னுள் பிறக்குதுதடி இசையா
கனவும் தீன்சுவையாய் உறவாடும் மனதோடு  
கற்பனையும் உயிர்க்குதடி உந்தன் அன்பாலே

உந்தன் விழிகளிரண்டும் எழிலோவியமே
சிந்தும் உன்மேனியும் தங்கச்சிலையே
வந்தேன் உன் னிழலாய்   தினம் தினமே
தந்தேன்  என்னையே உன்னிடத்தில் காதலுடன்

திரை விரிப்பாய் நாணத்தால் எனையும் ரசித்தே
வரைந்திடுவாய் எனையே உந்தன் கூர்விழியாலே
கரையுமோ கற்கண்டும் உந்தன் சுவைப் பேச்சாலே
தரையுமே ஒளிருதே தங்கமுந்தன் சுவடாலே

வட்டநிலாவே நீயும் பிழிகின்றாய் அமிர்த மொழியே 
தொட்டணைத்தால் தென்றலும் முறைத்தே விரட்டுதே
மனசோரம் ஒளிர்கிறாய் மின்னலாய் வீழ்ந்தே
மங்களமாய் இணைந்திட்டாய்   என் இல்லறமாக


ஜன்ஸி கபூர்  


மனிதர்கள் ஏன் மகிழ்ச்சியே நோக்கி மட்டும் பயணிக்க விரும்புகிறார்கள்

வாழ்க்கை என்பது நீண்ட தேடல். ஓவ்வொருவரும் தமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் வெற்றி பெற வேண்டுமென்றே எதிர்பார்ப்புடனே பயணிப்பதால் மகிழ்ச்சியை அடிமனம் விரும்புகின்றது. மகிழ்ச்சியும் ஒரு ஊக்கம் தருகின்ற உணர்வுகளே. மகிழ்வான மனநிறைவில் செயல்களை விருப்புடன் செய்வதால் இலகுவாகவும் தவறின்றியும் செய்ய முடிகின்றது. ஏனெனில் மகிழ்வு உற்சாகத்தின் உந்தலாகும். ஒரு மனிதன் தன்னை உற்சாகமாகத் தேடி அனைத்துக் காரியங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு   மகிழ்ச்சி அவசியமாகின்றது.

அகமகிழ்வின் ஆற்றல் வெற்றியில் குவிகிறது என்பது திண்ணம்

ஜன்ஸி கபூர் 

திகில் பயணம்

 வெண்பனி சூழ்ந்திடும் வெள்ளிடை மலையை
வெருட்டிடும் ஆதவன் வெம்மைக் கதிர்கள்
உருகிடும் பனியால் உறையுது நீரும்
துருவத்தின் குளிர்மையில்  விறைக்குது படகும்

நடுங்கும் குளிரோடையில் துடிக்குது படகும்
தடுமாறும் மனங்களும் தவிக்குது வலியில்
இடுக்கண் தந்திட்ட  இயற்கையின் எழுச்சி
வடுவொன்றைத் தந்தே  வாழ்வாகிப் போனது

மலை தழுவும் அழகு  நீரோட்டமே
விலையில்லா உயிர்களுக்கது மரண போராட்டமாம்
தள்ளாடும் படகும் தாங்கிடும் மாந்தர்
உள்ளத்தின் வலிமை கரையொதுக்கி களிப்பூட்டும்

ஜன்ஸி கபூர்   


2020/07/19

ஆற்றல் கொள்

ஆற்றல்_கொள் அவனிக்குள் அடையாளமாய்/
 ஊற்றாய் மாறியே ஊட்டமிடு வளங்களைத்தான்/
காற்றின்  மொழியுடனே சேற்றிலும் பலனுண்டே/
போற்றுவார் உன்னையே பெண்மையாய் நிமிர்ந்திடு/

ஆளுமை வளர்த்திட்டால் அண்டமும் தலைசாய்க்கும்/
ஆழிப்பேரலையும் அடங்குமே அறிவின் துணையுடன்/
அஞ்சாமல் பணியாற்று மானுடம் பெருமையாகும்/
ஆக்கங்கள் படைத்திடவே சிந்தனையைக் கூராக்கு/

தன்னம்பிக்கை கொண்டெழு திறமைகள் உனதாகும்/
வென்றெடுப்பாய் விருதுகளே சாதனைகள் சரித்திரமே/
சென்ற விடமெல்லாம் முன்மாதிரி நீயன்றோ/
கொண்டாடும் மாந்தரெல்லாம் பின்வருவார் அன்போடு/

வேராகத் தாங்கிடு ஊரே போற்றிடுமே/
போராடும் வாழ்வினிலே வலியும் வல்லமையே/
நாரும் துணைதானே மாலையாய் பிறப்பெடுக்க/
பாருக்கும் தெரியட்டும் ஆற்றலோடு வாழ்ந்திடு/

ஜன்ஸி கபூர் 

நல்வாக்கு


தூய்மை கடைப்பிடித்தால் தேகம் சுகமாகும் 
வாய்மை வாக்கினிலே வாழ்வும் மகிழ்வாகும் 
நேர்மை உழைப்பினிலே மனிதமே பிறப்பெடுக்கும் 
தாய்மை நெஞ்சினிலே அன்பே ஊற்றெடுக்கும் 


ஜன்ஸி கபூர்  



காதலெனும் மலர்வனம்

காதலெனும் மலர்வனத்தின் காத்திருப்பு நாமாக
கசிந் துருகும் அன்பி லிணைந்தே
கனிந்திருக்கும் நறுஞ்சுவைக் கனிகள்
காலத் தேய்விலும் உதிரா நறுமலர்கள்

இதழ் கசியும் கற்கண்டுச் சாறெடுத்தே
இதயம் நனைத்தோம் இன்னுயிர் வருடி
இசைந்திட்ட என் விழியே உன் மொழியாய்
இணைத்திட்டாய் என் பருவச் சுவையினில்
       
மொட்டென நீளும் உன் விரல்கள்
பட்டாலே தேகம் நனைக்கும் பனித்தூறல்
கட்டுடலும் கற்பைச் சிதைக்கா அறமாக
தொட்டுணர்வேன் நானும் காமம் தீண்டாக் காதலால்

ஜாதி மல்லிகை சூழ்ந்திடும் குணமே
சாதி மறந்தே இணைவோம் வாழ்வில்
ஓதி ஒழுகும் நல்லறமே நமதாய்
சோதி ஒளிர்வில் சேர்ந்திருப்போம் நாமே

ஓளி உமிழ்வில் மலரும் மென்மலராய்
ஓர விழி மலர்வாய் என் நிழல் கண்டே
வாசம் வீசும் நறுமணமே – நம்
வாழ்வில் இனி என்றும் வசந்தமே

ஜன்ஸி கபூர் 

காத்திருப்பு


கருப்பாயி.................!

தோட்டத்துரையின் குரல் சற்று அதிகாரமாக ஒலித்தபோது உறிஞ்சிக் கொண்டிருந்த தேயிலைக் கோப்பையை கீழே வைத்தவளாக ஓடிச் சென்றாள் அருகே....

துரையின் பார்வையில் சூடு கொதித்துக் கொண்டிருந்தது. அவர் கோபிக்கும் அளவிற்கு தான் செய்த தப்பு என்ன.... அவனால் அனுமானிக்க முடியவில்லை.

'ஐயா..........'

அப்பாவித்தனமாய் அவரைப் பார்த்தாள்.

'இப்ப நேரம் என்ன......எத்தனை கூடை கொழுந்து பறிச்சே'

'ஓ.....இன்று கொஞ்ச நேரம் தாமதித்து வந்ததற்கான விசாரணதானா இது'

மனம் காரணத்தைக் கண்டறிந்தது. தாமதித்து வேலைக்கு வந்தால் அவளது நாட்கூலிதானே குறையும். இது அவளுக்கும் தெரிந்ததுதானே. ஆனாலும் வரமுடியாத சூழ்நிலை. கொதிக்கும் அனலோடு வந்திருக்கிறாள். அவளுக்கென்று இந்த உலகத்தில் இருப்பது எண்பது வயது அப்பத்தா மாத்திரம்தானே. அவள் பிறந்ததும் அம்மா இறந்து விட்டதாகச் சொன்னார்கள். குடிகார அப்பாவோ   இவளைக் கைவிட்டுவிட்டு யாரோ ஒருத்தியின் பின்னால் ஓடிவிட்டதாக ஊரார் பரிகசித்தார்கள்;. வறுமையுடன் அல்லல்பட்ட இந்த வாழ்வே வெறுத்துப் போய்விட்டது. இருந்தும் அவளை நம்பி வாழும் அப்பத்தாக்காக  வாழ்ந்தே ஆக வேண்டும். அழகை ரசிக்கும் இந்த உலகம் முகத்தில் தழும்புகளுடன் பிறந்த அவளை சற்று ஒதுக்கியே வைத்து விட்டது. தன்னை நிராகரிப்பவர்களின் பின்னால் சரணடைந்து ஓட அவளும் தயாரில்லை. இந்த சமூகத்தில் தன்னையும் நிலைநிறுத்தும் அவளின் போராட்டம் தொடர்ந்தே கொண்டே இருக்கிறது. காலையில் அப்பத்தாக்கு உடம்பு கொஞ்சம் முடியாமலிருந்தது. அவருக்கு கசாயம் வைத்துக் கொடுத்தாள். நாட்டுப்புற வைத்தியம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பத்தா முன்பு சொல்லிக் கொடுத்த கை வைத்தியங்களின் பலனாக தன்னை நாடி வருவோருக்கு ஏதோ தன்னாலான கை வைத்திய உதவிகளை செய்து கொடுப்பதில் திருப்தியை உணர்கிறாள் கருப்பாயி.

'விசாரணைக் கைதியாக குறுகி நிற்பவள் இந்தத் துரையிடம் தன்னை நியாயப்படுத்த விரும்பவில்லை. நியாயம் கிடைக்காத இடத்தில் வாதிட்டு என்ன பயன். சுகவீனமுற்றிருக்கும் அப்பத்தாவின் நினைவும் மனதை வருத்திக் கொண்டிருந்தது. லீவு கேட்டாலும் தரமாட்டாங்க. கஞ்சி குடிக்கிற காசில கொஞ்சத்தை வெட்டும்போது அந்த ஈர் உயிர்களும் பட்;டினியால் வாட வேண்டுமே. முழித்திருந்து விடிய விடிய அப்பத்தாவை கவனித்ததில் அவளது உடலும் சற்று அசௌகரிகப்பட்டது போன்ற பிரமை. நண்பகல் 12 மணிக்குள்ள அஞ்சு கூடையாவது கொழுந்து பறிக்கணும். மனதால் தன்னை தயார்படுத்தினாள்.

'என்ன பேசாம நிற்கிறே. போ அந்தப் பக்கம் நெறைய கொழுந்திருக்கு பிய்ச்சுட்டு வா'

துரை சுட்டிக் காட்டிய திசையில் விழிகள் குத்தி நின்றதும் லேசான படபடப்பை உணர்ந்தாள். அந்தப் பகுதியில் உள்ள மரங்களில் பெரிய பெரிய குளவிக் கூடுகள் இருப்பதை அவள் அறிவாள். துரைக்குப் பிடித்தவர்கள் அந்தப் பக்கம் செல்வதில்லை. யாராவது இப்படி மாட்டிக் கொண்டால் பலிவாங்குவதைப் போல் அந்தக் குளவிகளுக்கு இரையாக்குவதில் கொடூர இன்பம் போல்.

வேறு வழியின்றி வயிற்றுப் பசி தணிக்கும் அந்த நாட்கூலிக்காக துரை கூறிய பகுதியில் கொழுந்து பறிக்கச் சென்றாள். அங்கே ஓரிரு முகங்கள் தெரிந்ததும் மனம் சற்று ஆறுதலடைந்தது. மனதுக்குள் இறைவனை துதித்தவளாக கொழுந்து பறித்து முதுகில் சுமந்து கொண்டிருந்த கூடைக்குள் போடத் தொடங்கினாள். சிறிது நேரத்தில்,

'கிர்...கிர்...........'

தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்த குளவிக் கூட்டங்கள் அவளை மொய்க்கத் தொடங்கின. உயிருக்குள் தீ வார்த்த பிரமை.

'ஐயோ...........'

அவளின் சப்தம் கேட்டு அருகிலிருந்தோர் அவளை நெருங்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆவர்களின் ஆரவாரச் சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக அவளது ஞாபகத்திலிருந்து குறைந்து போக ஆரம்பித்தது. கண்களும் மயக்கத்தில் சொருவ ஆரம்பித்தது. அந்த மயக்கநிலையிலும் அப்பத்தாவை நினைத்துபோலும் அவளது கன்னங்கள் கண்ணீரால் நனையத் தொடங்கின.
அங்கே... அவள் குறித்த நேரத்தில் வருவாளென்ற நம்பிக்கையில் அப்பத்தா காத்துக் கொண்டிருக்கிறார்.

ஜன்ஸி கபூர் - 19.07.2020
யாழ்ப்பாணம்