About Me

Showing posts with label இவர்கள். Show all posts
Showing posts with label இவர்கள். Show all posts

2021/06/08

கொரோனா சிதைத்த ஓவியம்



பிறக்கின்ற எல்லோரின் நாமங்களையும் இவ்வுலகம் உச்சரிப்பதில்லை. திரும்பியோ, விரும்பியோ பார்ப்பதில்லை. வாழ்த்துப் பூக்களுடன் ஆற்றலும், ஆளுமையும் கொண்ட சாதனையாளர்களுக்கென தனியிடத்தினை   எப்பொழுதும் வைத்தேயிருக்கின்றது.  

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பார்கள்.

சித்திரம் வரைகின்ற உணர்வு ஆன்மாவுடன் ஒருங்கிசைந்தால்தான், உயிரோவியங்கள் பிறக்கும். 

வெறும் வண்ணக் கலவையுடன் படிந்த தூரிகைகளின் அசைவுக்குள்ளும் இரசனை இருந்தால்தான் தத்ரூபமான ஓவியங்கள் கிடைக்கும். 

இவ்வாறான தத்ரூபமான ஓவியங்களை வரைந்த கலைஞன் திரு இளையராஜா அவர்கள் கொரோனாத் தொற்றுக் காரணமாக இறந்திருக்கின்றார்.

விரல் தூரிகைகளின் உயிர்ப்பான கவி வரிகளை

வண்ணங்கள் குலைத்து 

விழிகளுக்குள் ஓவியமாக 

உயிர்ப்பித்த கலைஞனின் இழப்பு 

கலையுலகிற்கான பேரிழப்புத்தான்.  

43 வயதான ஓவியர் இளையராஜா இன்று இப்பிரபஞ்சத்தின் காற்றின் பிம்பங்களுக்குள் வண்ணங்களாக கரைந்திருக்கின்றார்.

இசைக்கோர் ராஜாவென்றால்

ஓவியத்திற்குள்ளும் இந்த அற்புத ராஜா ஒளிந்திருக்கின்றார்.

இவர் சென்னை கும்பகோணம் அருகே செம்பிய வரம்பில் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். ஐந்து அண்ணா, ஐந்து அக்காக்களைக் கொண்ட பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி ராஜா.

ஆரம்ப காலத்தில் தான் வரைகின்ற அழகிய ஓவியங்களை இணையத்தில் பதிவேற்றி வந்தார். 2010 ஆம் ஆண்டு முதல் ஆனந்தவிகடன் தனது இதழின் சிறுகதை, கவிதைகளுக்காக இவரது ஓவியங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தபிறகு உலகம் இவரைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது. பல எழுத்தாளர்களின் கற்பனைக்கு தனது ஓவியத் திறமையால் உயிர்ப்பூட்டினார். இவரது பொருளாதார நிலையும் உயர்ந்தது. பல விருதுகள் இவரது ஓவியங்களைக் கௌரவித்தன.

கிராமத்துப் பெண்களின் அழகை தனது தூரிகையால் வண்ணங் குலைத்து பேரழகாக்கினார். இவரது ஓவியங்கள் வெறும் ரேகைகளும், வண்ணங்களும் கலந்த வரைபடங்களாக இருந்ததில்லை. வாழ்வியல் கலைகளாகவே பிரதிபலித்தன. 

இவரது ஓவியங்களுக்காக எழுத்தாளர்கள் கதைகளை எழுதியிருக்கின்றார்களென்றால் அவ்வோவியங்களின் ஈர்ப்புசக்தி பற்றி நாம் கூறத்தேவையில்லை.

தன் கண்முன்னால் காணும் காட்சிகளை உருச் சிதறாமல் வரைவதுதான் ஓவியப் பண்பு. அத்தகைய ஓவியனாக, கண்முன் காணும் தரிசனங்களை மாற்றமின்றி,   தனது தூரிகைகளுக்குள் சிறைப்பிடித்த இளையராஜா இன்று புகழின் அமயத்துக்குள் தன்னை நிரப்பிக் கொண்டுள்ளார்.

குக்கிரமம் பூர்வீகம். அப்பா தச்சுத் தொழிலாளி. அவர் செய்கின்ற சக்கரவேலைகளை ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்தபோதே, விரல்களும் தூரிகைகளாக மாற ஆரம்பித்தன. ஏழு வயதிலேயே வரைய ஆரம்பித்து விட்டார். தொலைக்காட்சியில் வருகின்ற நடிகர்களைப் பார்த்து வரைந்து தன்னாற்றலை சுயமாக வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

பள்ளிக்குப் போக விருப்பமில்லை. இராணுவத்தில் சேர்கின்ற முடிவோடு வாழ்க்கையில் நகர்ந்தவரை, ஓவிய ஆசிரியர்கள் இவரது திறமைக்கேற்ற பாதையைக் காட்டினார்கள்.

பெற்றோர் மறுப்பினையும் பொருட்படுத்தாது, கும்பகோண ஓவியக்கல்லூரியில் இணைந்து முழுமையான ஓவியராக மாறினார். ஆசானால் வழங்கப்படுகின்ற ஓவிய நுட்பங்களை இலகுவில் புரிந்து கொண்டு பிறருக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். நமக்கு கிடைக்கின்ற அறிவினைக் கொண்டு அனுபவங்கள் எழும்போதே திறமையான சாதனைப் பக்கங்கள் நமது இருப்புக்காகக் காத்திருக்கத் தொடங்குகின்றன.கண்களை அளவுத்திட்டமாகக் கொண்டு மனித உடலை அழகாக வரையக் கற்றுக் கொண்டார். பின்னர் சென்னை ஓவியக்கல்லூரியில் முதுகலை கற்றார். 

அக்காமார், அண்ணிமார் எனப் பெண்களைச் சூழ வாழ்ந்த பின்னணியால் இவரது ஓவியத்திற்கான கரு பெண்களாகவே இருந்தது. அழகான மண்ணியல் வாழ்வினை தத்ரூபமாக ஓவியங்களின் ஊடாக வெளிப்படுத்தினார். உடன்பிறப்புக்கள் திருமணமாகிச் செல்ல, கிடைத்த தனிமையின் காத்திருப்பு இவரது  ஓவியங்களில் பிரதிபலித்தன. இவரது ஓவியங்கள் பெண்களின் அழகினை பேரழகாக்கின. வியப்படையச் செய்தன. இவை ஓவியங்களல்ல. புகைப்படங்களே எனப் பார்ப்போரை வியப்படையச் செய்வதே இவரது பாணியாக இருந்தது.

வண்ணங்களினூடாக வாழ வேண்டிய கலைஞனை தன் எண்ணத்துள் சிறை பிடித்ததோ கொரோனாவும்.

   ஏற்பட்ட சளி நுரையீரலின் உயிர்ப்பினை அறுத்து மாரடைப்பென அறிவுப்புச் செய்ததுவோ.

சிறு அலட்சியம்கூட பெறுமதியான உயிரைப் பிளந்து விடுகின்றது.

ஓவியர் கொரோனாவால் உயிரிழந்தாலும்கூட, அவரின் தூரிகையின் மொழி இவ்வுலகம் அழியும் வரையும் தத்ரூபமான அவரது கலையாற்றலின் அடையாளத்தினை பரப்பிக் கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை

கலைஞன் இறப்பதில்லை. 

என்றும் கலைகளினூடாக வாழ்ந்து கொண்டேயிருப்பான்.

ஜன்ஸி கபூர் - 08.06.2021   


2021/06/02

இட்லி பாட்டி

நாகரீகத்தில் மையங் கொண்ட நவ உலகத்தில் நாலு சுவர்களுக்குள் வாழ்கின்ற பல நல்லுள்ளங்களைப் பற்றிய பார்வைகள் பலருக்குப் புரிவதில்லைதான். எந்தவொரு செயலும் நேர்மையாகச் செய்கின்றபோது நாம் பிறரின் நேசத்திற்குள் ஈர்க்கப்படுகின்றோம்.

உணர்வுகளால் ஆளப்படுகின்ற மனித மனங்கள் ஆளாளுக்கு வேறுபடுகின்றன. இப்படித்தான் வாழ வேண்டுமென சிலரும், எப்படியும் வாழலாம் என சிலரும் தமது வாழ்வை அடுத்தவர் பார்வைக்கு நகர்த்துகின்றார்கள்.

அடுத்தவர்களைச் சுரண்டி தனது பணப் பையை நிரப்புகின்ற பலரின் மத்தியில் இவரின் தயாள குணம் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இவர் ....இட்லி பாட்டி..........என செல்லமாக அழைப்போம்.

கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலயாம்பாளையம் எனும் பசும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றார். நாற்பது வருடங்களாக தனது வியாபாரமாக இட்லி சுட்டு விற்கின்றார். அன்று முதன் முதலாக இட்லி விற்ற விலையான ஒரு ரூபாவையே இன்றும்  இவர் பெற்றுக் கொள்கின்றார்.

இன்றைய விலைவாசியில், உழுந்து விற்கின்ற விலையில் ஒரு ரூபாவிற்கு இட்லியா?

கேட்பவர்கள் ஆச்சரியத்தில் விழிகளை உயர்த்தும்போதும், அவரின் மெல்லிய புன்னகை உண்மையை ஒத்துக் கொள்கின்றது.

சுருங்கிய தளர்ந்த தேகம். இருந்தும் அவர் தளர்ந்து விடவில்லை. தன் வாழ்வையும், இட்லி வியாபாரத்தையும் நேர்த்தியாகவே கொண்டு செல்கின்றார். 

இன்றைய உலகியல் வாழ்வில் பல பிரச்சினைகளுக்கு ஆசைகளே காரணமாக அமைகின்றன. ஆனால் இப்பாட்டியின் ஆசையற்ற நடைமுறை வாழ்வியல் பலரின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

செய்கின்ற தொழில் தெய்வம் என்பார்கள். ஆனால் இப்பாட்டியின் தயாள குணத்தால் பலர் இவரைத் தெய்வமாகப் பார்க்கின்றார்கள்.

பசியுடன் தன்னை நாடி வருகின்றவர்களுக்கு ஆவி பறக்க பரிமாறும் இட்லிச் சுவையில் அன்பும் கலந்திருப்பதாக பசியாறுபவர்கள் மகிழ்வுடன் குறிப்பிடுகின்றார்கள்.

சூரியன் முற்றத்தை முத்தமிடுகின்ற அந்த அதிகாலைப் பொழுதிலே அடுப்பில் விறகேற்றி பசியெனும் இருளை விரட்டுகின்ற பாட்டியின் கடுமையான உழைப்பால் பல வயிறுகள் சுவை காண்கின்றன.

கையில் காசு இல்லாதவர்களுக்கு கூட அழைத்து இட்லி பரிமாறுகின்றார். காசு கையில வரும்போது தரும்படி கூறுகின்ற அவரின் அன்பு மனம் கொடுத்த இட்லிகளை கணக்குப் பார்த்து கடதாசிகளில் குறித்து வைப்பதில்லை.

முதுமையின் தோற்றத்தை உடல் பெற்றாலும்கூட சுறுசுறுப்பாக தானே உழைத்து தன்னைக் காக்கின்ற உழைப்பும் அடுத்தவர்களை மனிதாபிமானமாக நோக்கும் பண்பும் இப்பாட்டியின் சிறப்பான அடையாளங்கள்.

உண்ண வருகின்றவர்களுக்கு பாட்டியின் அன்பான உபசரிப்பு  வயிற்றுடன் மனதையும் நிறைக்கின்றது.

பசுமையான மனதின் பிரதிபலிப்புத்தானே இது!

தேடி வருகின்ற பசியாளிக்கு இல்லையென்று சொல்லாமல் பசியாற்றுகின்றார். கொடுக்கும் இட்லிக்கு கணக்குப் பார்ப்பதில்லை. கொடுக்கும் பணத்தை மனதாரப் பெற்றுக் கொள்கின்றார்.

பசித்தவன்  புசிக்க இலவசமாக உணவளிக்கும் தர்மத்தையும் செய்கின்றார்.

கலப்பமிடமில்லாத சுவையான இட்லி இவரது கைப் பக்குவம்தான்.

சுவையான இட்லியென உண்பவர் வாயாரப் புகழும் வார்த்தைகள் இவரின் மனதை  நிறைக்கின்றன.

இணையத்தில் கண்டெடுத்த பாட்டியின் இட்லிகள் எனது வரிகளில் இங்கு பரிமாறப்படுகின்றன.

ஜன்ஸி கபூர் - 02.06.2021


2021/04/12

சாதனைகள் சரித்திரமாகும்


சாதனைகள் சாகா வரம் பெற்றவை. உள்ளத்தில் உதிக்கின்ற எண்ணங்களுக்கு தன்னம்பிக்கையுடன் தொடர் முயற்சியும் பயிற்சியும் வழங்குகின்றபோது அங்கு வெற்றியின் வாசம் மனதினை நிறைக்கின்றது.

அடுத்தவர்களால் இயலாததொன்றை தன் இலட்சியமாகக் கொண்டு சாதிக்கின்ற வீரர்களை பிரமிப்புடன் நாம் பார்க்கின்றோம்.

எதனையும் சாதிக்கலாம். நம்மிடம் அதற்கான நம்பிக்கை மலையளவு நிறைந்திருக்கின்றபோது.....

அந்த வகையில்

தற்போது இலங்கை ஊடகங்களில் பேசப்படுகின்ற பெயர் ரொஷான் அபேசுந்தர

கடந்த 11.04.2021 இல் புதிய சாதனையை நிலைநாட்டினார்.

தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் மீண்டும் அங்கிருந்து தலைமன்னாருக்கும் 59.3 கிலோமீற்றர் தூரத்தை 28 மணித்தியாலங்கள் 19 நிமிடங்கள் 43 செக்கன்களில்  பாக்குநீரிணையில் நீந்தி புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டினார்.

பிரம்மிப்பான கொந்தளிக்கும் கடலலைகளையும் தன் ஆற்றலால் வசப்படுத்தி சாதனை புரிந்த இந்த இலங்கை விமானப் படையின் நீச்சல் வீரரை நாமும் வாழ்த்துவோம்.

அதே நேரம் 1971 ஆம் ஆண்டு 51 மணித்தியாலங்களில் மேற்கூறப்பட்ட சாதனையை நிகழ்த்தியிருந்த குமார் ஆனந்தனும் நினைவூட்டப்படுகின்றார்.

ஓவ்வொரு முயற்சிக்கும் ஊக்கமாக காணப்படுகின்ற சுவடுகளும் நினைவூட்டப்படுகின்றன.

ஜன்ஸி கபூர் - 12.04.2021




 



2021/04/10

இரங்கல்

 

பிறப்பில் உற்பத்தியாகும் மனித உயிர்கள் இறப்பு எனும் புள்ளியைத் தொடுவது இயல்பான வாழ்ழ்க்கையின் நியதிதான் என்றாலும்கூட அந்த மரணங்கள் விட்டுச் செல்கின்ற சோகங்கள் ஆற்றமுடியாமல் கனக்கின்றன. சோகங்களுக்கு அரசன், ஆண்டி பேதங்கள் தெரிவதில்லை. வலியின் வலிமை இழப்புக்களின்போதே தொட்டுப் பார்க்கின்றன.  அமைதி எட்டிப் பார்க்கின்ற அந்த மௌன நிலையிலேயே அவர்கள் பற்றிய கடந்த கால நினைவுகள் பலராலும் மீட்டப்படுகின்றன. 

 உலக அளவிலும் அன்பைப் பெற்ற, பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த எடின்பரோ கோமகன் அவர்களின் மறைவுச் செய்தி நம் காதுகளை எட்டியுள்ளது. 

மாட்சிமை பொருந்திய இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி.

 


ஜன்ஸி கபூர் - 10.04.2021

2012/06/30

முத்து !



வாழ்க்கையென்பது மிக நீண்ட பயணம்.............

இப் பயணத்தில் நம்மை நிலைப்படுத்த உறவு, நட்பு, அறிந்தவர் எனும் தரிப்பிடங்கள் நம் வெட்டுமுகங்களாகின்றன. சில நட்புக்கள் காலவோட்டத்தில் கரைந்து போக, சிலவோ ஞாபகப் பரப்பிலிருந்தும் அழியாத உணர்வுப் பதிவாகிக் கிடக்கின்றன.

பாரதம் தந்த பாசக்கிளி. 

"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"

இந்தத் தாரக மந்திரத்தால் தன் உள்ளத்தை உரப்பேற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிதயம்..............

முத்து .......!


அன்று...


என் முகநூல் ஆரம்பப் பயணத்தில் நண்பராக என்னுள் இறங்கி, இன்று அன்புத் தம்பியாக என் வாழ்க்கைப் பூமியில் நிலையூன்றியிருக்கும் உறவுத் துடுப்பிவர். பெயரில் முத்து இருந்தாலும் அவர் எண்ணங்கள் யாவும் வைரத்தை விட பெறுமதியானவை!

அன்பான உள்ளம் அவருக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை. நிறையப் படித்தும் கூட துளியளவு கூட கர்வம் கிடையாதவர். நட்புக்கு இன்முகமும் நேசமும் காட்டி மனசுக்குள் மானசீகமாய் பரவிக் கிடப்பவர்.

மதம் மனிதங்களை மலினப்படுத்தும். ஆனால் முத்தோ மதத்தில் "மதம்" கொள்ளாமல், பிற மதத்தவரின் உணர்வுகளைக் கொல்லாமல் தன் மதமாய் பிற மதங்களையும் நேசிக்கும் மானிடப்பண்புள்ள நல்ல இளைஞர்.

பல சோதனை ஆர்ப்பாட்டத்திலும் அமைதி காக்கும் இந்த இளைஞர். தன்னம்பிக்கையுடன் வாழ்வை ஜெயிக்கும் செயல்வீரர்.

என் முகநூலின் பல பக்கங்களின் விடியல் அவர் காலை வணக்கத்துடனேயே விடிந்திருக்கின்றது.

"அக்கா"

மலர்ச்சியில் பல வார்த்தைப்பனித்துளிகள் செய்திகளாய் பரவசப்பட்டுக் கொண்டிருக்கின்றன அவர் விடும் பாசத்தூதாய்!

அவர் முகநூல் பக்கங்களிலும் கூட காலை வணக்கம் வெறுமையாக அல்ல நல்ல படிப்பினையூட்டும் சிந்தனை தாங்கிய செய்தியுடன் கூடிய புகைப்படத்துடனேயே எப்பொழுதும் சிரிக்கின்றன....

முத்து............

கலாரசிகன்......கலைத்திறனில் பிடிப்புள்ள கலைஞன்.....!

அவர் சிந்தனைக்குள் வீழ்ந்து கிடப்பவை உயிர்ப்போட்டமுள்ள புகைப்படங்கள் தான்..அவரது புகைப்பட ஆல்பம்...கருத்துச் செறிவுள்ள சேமிப்பகம்!

 அந்தச் சேமிப்பிலிருந்து சில துளிகள் இப் பக்கத்தை நிறைக்கின்றன பெருமிதத்துடன்........


தான் ரசிக்கும் அழகான , அறிவுபூர்வமான, அற்புதமான, கருத்துச் செறிவுள்ள புகைப்படங்களை ரசிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அப் படம் பேசும் பின்னணியையும் அழகாகப் பதிப்பதில் அவருக்கு நிகர் அவரே!

இவரது புகைப்படங்கள் அழகு, வறுமை, அன்பு, இயற்கை, வாழ்க்கை,பொழுதுபோக்கு என பல வார்ப்புக்களிலும் தெறித்துக் கிடக்கின்றன முகநூல் பக்கங்களில்!

தான் கற்ற படிப்பினை, அறிவுத்துடிப்பாக்கி சாதனைகளின் பக்கம் சாய்ந்திருக்கத் துடிக்கும் இந்தச் சகோதரனின் வெற்றியின் கனம் நாளுக்கு நாள் ஏறுமுகம் காட்டியே நிற்கும் என்பதில் ஐயமில்லை.

நம் வாழ்வின் ஆயுட் பரப்புக்களின் எல்லைக்குள் நாம் சாதிக்கும் சாதனைகளே நம் பெயரை இப் புவியில் பதிக்கவல்லன. அந்த வகையில் முத்தின் நேசத்துக்குள் பொதிந்திருக்கும் பல உறவுகள் அவர் பெயரை அன்போடு வாசித்துக் கொண்டுதானிருக்கின்றன. எப்பொழுதும் வாசித்துக் கொண்டுதானிருக்கும்.

தொடர்பாடலே மனித உணர்வுகள் பகிரப்படும் வாசற்றலம்!


தொடர்பாடலின் போது மனமுரண்பாடுகளும் தாக்குவது இயற்கையே!


அவ்வாறான சந்தர்ப்பங்களில் சகிப்புத்தன்மையுடன், கண்ணீர்க்கசிவின் வெளிப்படுத்துகையை ரகஸியப்படுத்தி உள்ளத்துக்குள் போராடும் போராட்டமும், அதன் சுமையும் நானறிவேன். இருந்தும் அத்தகைய நிலையில் கூட வழுக்களை வெற்றிப்படுத்தும் ஆற்றலை நானும் கண்ணீரில் கரைந்து உணர்ந்திருக்கின்றேன்...

வாழ்க்கை எட்டாத தூரத்தில் விரிந்து கிடந்தாலும் அதனைத் தொட்டுவிடும் மனோபலத்தின் இருக்கை முத்துவிடம் அதிகமாக இருப்பதைக் காணும் போது மனம் மகிழ்வே.......!

இவற்றுக்கும் மேலாக நான் பதிவிடுபவற்றை உடனுக்குடன் ஆதரித்து விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தரும் இந்த நேசக்கிளியின் பாசத்திற்கு எல்லை கட்டுவது சாத்தியமற்றதே!

முத்து ..........

உங்கள் வாழ்க்கைப் பயணம் சந்தோஷமாக விடியட்டும் !

என் வாழ்த்துக்களின் புன்னகை உங்கள் மனதை நிறைக்கட்டும்! 

- Ms. Jancy Caffoor -