About Me

2021/06/16

வாழ்க்கை நம் கையிலே



 மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியையே தேடுகின்றது. ஆனாலும் அந்த மகிழ்ச்சி நமக்குள்ளேயே இருக்கின்றது என்பதை மறந்து அடுத்தவர்களின் எதிர்பார்ப்பிற்காக நமது வாழ்க்கையை குறுக்குகின்றோம். மகிழ்ச்சியை உணர வேண்டிய மனம் அதை வீணாக இழந்து தவிக்கின்றதே!
---------------------------------------------

-
ஆசைகள் உள்ளத்தில் எழுகின்ற சிறு உணர்வுதான். ஆனாலும் ஆசைகளுக்குள் நாம் நம்மை அடக்கி வாழ முயற்சிக்கும்போதுதான் நம்மைச் சுற்றி வலி கசிகின்றது. கட்டுப்படுத்தப்படாத ஆசைகளின் நீட்சியில் கண்ணீர்க் கசிவு இருக்கின்றது என்பதை நாம் மறந்துதான் போகின்றோம்.
--------------------------------------------------


அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கின்ற வாழ்வினுள்  பல எதிர்பார்ப்புக்களை நமக்குள் தேக்கிக் கொள்கின்றோம். நாம் விரும்புகின்ற எல்லாம் நிறைவேற வேண்டுமென முயற்சிக்கின்றோம். போராடுகின்றோம். இருந்தும் ஏமாற்றங்கள் நம்மைத் துரத்துகின்ற போது எல்லாவற்றையும் இழந்ததைப் போல் தனிமைக்குள் சுருண்டு விடுகின்றோம்.

--------------------------------------------------

நமக்குள் அடங்கியிருக்கின்ற ஆற்றல்கள்தான் நமது அடையாளங்கள். பலம் நமது நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். ஆனாலும் நாம் ஏனோ பலத்தை மறந்து பலகீனங்களை நமக்குள் நிரப்பி அப்பலகீனங்களால் சந்தோசங்களை இழந்து விடுகின்றோம். தடுக்கி வீழும்போதெல்லாம் நம்மீது ஏறி மிதிக்காமல் எழுந்திருக்க கை தருவது நம்மீது அன்பு கொண்டவர்கள் மாத்திரமே!
----------------------------------------------------------

இலக்குகள் நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஓவ்வொரு தொலை புள்ளியும் தொட்டு விடும் தூரமெனும் நம்பிக்கையில் முயற்சிக்கின்றோம். ஒவ்வொரு முயற்சிக்குள்ளும் ஒளிந்திருக்கின்ற தன்னம்பிக்கை நமது பயணப் பாதையின் வலியை உறுஞ்சி வழி காட்டி நிற்கும்.
----------------------------------------------------------

நாம் நேசிப்பவர்கள் எல்லோரும் நம்மை நேசிக்கின்ற போது மனதில் புத்துணர்ச்சியுடன் வலிமை பிறக்கின்றது. புன்னகை நமக்குச் சொந்தமாகின்றது. இன்பமோ துன்பமோ நாம் தேடிச் செல்கின்ற செயல்களின் தீர்ப்புக்களே. வெற்றியை தேடும் மனம் சந்திக்கின்ற தோல்விகளையும் வலிகளையும் அக்கணமே மறந்து விடுகின்றது.    

----------------------------------------------------------


தோல்விகளிடம் நாம் தோற்றுவிடும்போது எம்மைத்  தேடி துன்பங்கள்தானே வருகின்றன. ஒவ்வொரு கணமும் நம் நிம்மதியும் தொலைகின்றதுதானே. இருந்தும் கடந்து போன சந்தோசங்கள் உதிர்ந்து போகாமல் கொஞ்சமாவது நமக்குள் நினைவுகள் எனும் பொக்கிசமாக மாறிக் கிடப்பதனால் வாழ்க்கை இன்னும் நமக்காக காத்துக் கிடப்பதாக உணர்ந்து வாழ்கின்றோம். வாழ்க்கை நம் கையிலே வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் நமக்கான வாழ்க்கை அனுபவங்களைக் கற்றபடி வாழ்வோம். வாழ்வை ரசிப்போம்.

- Jancy Caffoor - 16.06.2021


2021/06/15

வெற்றி(யின் இ)லை

உலகினை கொரோனா எனும் நோய் தன் பிடிக்குள் சிக்க வைத்து வாழ்வைக் கசக்கிப் பிழிகின்ற நேரம், அன்றாடம் உழைத்து உண்ணும் பலர் பசியுடன் போராடி வருகின்றனர். ஊதியம் கிடைக்கின்ற வழி உழைப்புத்தானே. நேர்மையான வழியில் உழைக்கின்ற எல்லாத் தொழில்களும் சிறந்தவைதான்.

 சென்ற வருடம் கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் விடுமுறை விடப்பட்டிருந்தன. வீட்டில் இருக்கின்ற அந்நாட்களைப் பிரயோசனப்படுத்துவதற்காக வீட்டுத்தோட்டத்தில் நாட்டம் செலுத்தினேன். அதன் விளைவாகச் சிரிக்கின்றது வெற்றிலைச் செடி. 

சில வீடுகளின் சுவர்களில் இவ்வெற்றிலைச் செடி பரந்து வளர்கையில் அதனை ரசிப்பேன். ஏனோ வெற்றிலைச் செடி வளர்ப்பதென்றால் எனக்கு கொள்ளை ஆசைதான்.

இந்த வெற்றிலையைப் பற்றித்தான் இந்த வீடியோவில் கொஞ்சம் கதைக்கப் போகின்றேன்.

மலேசியாவில் தோன்றிய இச்செடி மருத்துவ மூலிகையாகும். அத்துடன் இந்துக்களின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளமாகவும் திகழ்கின்றது. வயிற்றுக்கோளாறு நீங்கவும் வெற்றிலை பயன்படுத்தப்படுகின்றது. இது மிளகுக் குடும்பத்தைச் சேர்ந்த பயிராகும். வெற்றிலையை பாக்குடன் மென்றோ அல்லது பீடாவாகவோ சாப்பிடுவார்கள். சிலர் வெற்றிலை ரசம் வைத்துச் சாப்பிடுகின்றார். 

தாய்ப்பால் சுரப்பிற்கும் வெற்றிலை பயன்படுகின்றது. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வெள்ளை வெற்றிலை   காரம் இல்லாததும், வெளிர்ப்பச்சை நிறமாகவும் இருக்கும். கருப்பு வெற்றிலை  காரம் உள்ளதாகவும், நல்ல பச்சை நிறமாகவும் இருக்கும். வெற்றிலையில் நடுக்காம்பிலிருந்து ஒரு புள்ளியில் இருந்து நரம்புகள் பிரிந்து இருந்தால் ஆண் என்றும், பல புள்ளிகளில் இருந்து பிரிந்து வந்தால் பெண் என்றும் கூறப்படுகிறது. 

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. 

வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள் வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். 

வெற்றிலையும், பாக்கும் ஒற்றுமைக்கு உகந்தது. ஒன்றோடு ஒன்றை இணைத்துதான் கொடுக்க வேண்டும். 'வேண்டாத உறவிற்கு வெறும் வெற்றிலை'  என்பது பழமொழி. 

வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி ஆகியவற்றை சேர்த்து வாய் மணக்கஇ மணக்க தாம்பூலம் தரிப்பது தமிழர்களின் வழக்கம். 

இவ்வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

  • உடல் பருமனை குறைக்கும் மருந்து

2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.

  • நரம்புகளை பலப்படுத்தும் மருந்து
  • மூளை பலம் பெறுவதுடன் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • மூச்சுதிணறல், நெஞ்சக சளியை போக்கும் மேல்பூச்சு மருந்து
  • நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது

ஆனாலும் நன்மையின் மறுபக்கமாக தீமையும் உள்ளது. வெற்றிலை மென்று சிலர் வழி வழியே துப்பும்போது சூழலின் அழகு கெடுகின்றது. அது மாத்திரமல்ல தொடர்ந்து மெல்லும்போது பற்களில் கறைகளும், புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.

இருந்தபோதும் மங்களகரமான அச்செடியை வீட்டில் வளர்த்து மன சந்தோசம் பெறுவோமாக!

உங்கள் அன்பின் ஜன்ஸி கபூர் - 14.06.2021