About Me

2013/04/20

இதோ என் வீடு



இதோ...........

என் வீடு!
வெறும் எலும்புக்கூடாகி...............

என் படுக்கையறையும்
படிப்பறையும்
முட்களின் சேமிப்பாய் உருமாறிக் கிடக்க

சுவற்றில் பதித்த கிறுக்கல்கள்
மழைநீரில் அழுதழிந்து பாசிக் காயங்களாய்
பரிகசித்து வியர்க்க....

வனாந்தரமாகிப் போன - என்
மனையின் கற்குவியலுக்குள்
தடம் பதிக்கின்றேன்

ஐயகோ.............

என் இராஜங்கத்தின் கிரீடங்கள்
கறையான் புற்றுக்களோடு
இம்சித்துக் கிடக்கின்றதே!!

என் கனவுப் புன்னகைகள் எல்லாம்
குருதிப் பிழம்பாகி
சீழ் வடிய.........

என் வீட்டோரக் கற்சிதைவுகள்
கண்ணீரைப் பிழிந்து
பால்யத்தை ஞாபகத்துள் நிரப்புகின்றது!

அம்மா..............
பூக்களின் சுவாசத்தில்
சுவாரஸியமாய் தன்னைக் கரைத்தவர்!

அழகு பார்த்து அழகு பார்த்து
பதியம் வைத்த
சிவப்பு ரோஜாக்கள்........
முற்றத்து மண்ணுக்குள் எச்சமாகியிருக்குமோ!

வீதியோரத்தில் தன் கிளைகளைப் பரப்பி
காற்றுக்குள் வாசம் நுழைத்த - எங்கள்
கறிவேப்பிலை மரங்கள்........
பறிப்பவர் யாருமின்றி ஏக்கத்தில் தன்னை
அழித்திருக்குமோ!

முற்றத்து நிழலாய் தன் முகம் பதித்த
சிறு நெல்லி கூட.......
தன் ஆயுள் குறைத்து ஆழ் துயிலில்!

எங்கள் வீட்டுப்பசுமையின் சுவடுகளிலெல்லாம்
கறைப் படிவுகளாய் சோகங்கள்.............
பெயர்த்தெடுக்க இன்னும் எத்தனை யுகங்கள்!

அம்மா கொஞ்சம் அழட்டுமா...
என் தாய் வீடு சிதைந்த வலியைக்
கரைக்க வேறு வழியின்றி..........

அழுகின்றேன் இன்னும் ஆழமாய்..
என்னுயிர் தன்னிதயம் துறந்து
வலிப்பதாய் உணர்வு........
விழிக் கதவுடைத்து கண்ணீரோ
அழையா விருந்தாளியாய் வெளி நடப்புச் செய்ய!

மீண்டும் அழுகின்றேன்...........
அந்த ஓர் நொடியில்
இவ்வுலகமே இடிந்து என் தலையில்
வீழ்வதாய் பிரமை!

மண் சோறாக்கி மண்குவியல் மட்டும்
இன்னும் மலையாகி குவிந்து.....
எத்தனை பிணங்களின் கல்லறையோ அவை!

குயில்கள் கூத்தாடும்
இளம் வேப்ப மரக் கிளைகள்..........
ஷெல் கண்டு வில்லொடித்திருக்குமோ!

அழுகின்றேன் இன்னும்......
என்னுடன் சேர்ந்து.........
பெற்றவளை வேரறுத்த வலியில்
என் பிறப்பிடமும் கதறுகின்றது...
அந்நியனாய் எனை விட்டு செல்லாதே என.....

எல்லாமே முடிந்து விட்டதா
என் பால்ய நினைவுகளின் பசுமைகள் மட்டும்
என் நினைவுக்குள் பதிவாக......!

எல்லாமே முடிந்து விட்டதா
யுத்தத்தின் எச்சத்தில் எம் வாழ்க்கை நொருங்க
எல்லாமே முடிந்து விட்டதா!

வினாக்கள் மட்டுமே என் வசம்!



2013/04/19

அதுவரை



காதல்................!

அதன் வாசத்தில்

காய்ந்து போன சருகெல்லாம்
புதிதாய் தளிர்க்கும் !

விஷம் கக்கும் கள்ளிப் பாலெல்லாம்
ஓளஷடதமாய்
உயிர் வருடும் மெல்ல!

ஒவ்வொரு அஸ்தமனத்திலும்
சூரிய உதயம்
தன்னை நிலைநாட்டிக் கொள்ளும்!

முட்கள் கூட பேனா முனையாகி
கவி சிந்தும்!

ஆகாய வெளியின் விசாலப் பரப்பில்
நாம் மட்டுமே உலா வருவதாய்
மனசு சொல்லிக் கொள்ளும்!

காதல் இனிமைதான்
எல்லோரும் சொல்வதைப் போல்
கனவுக்குள் அமிழ்ந்து கிடக்க!

வாழ்வை நன்கு உணர்ந்தபின்!
காதல் செய்யலாம்
வசந்தம் நம் வசமாகும்!

அதுவரை காத்திருப்போம்
உனக்கு நானாய்
எனக்கு நீயாய்!

- Jancy Caffoor-
     19.04.2013

வானவில்


தன்னைக் கருக்கி, மெழுகுதிரிக்கு ஒளியூட்டும் தீக்குச்சி!
தீக்குச்சியின் தியாகத்தை நினைத்து கண்ணீர் வடிக்கும் மெழுகுதிரி!

அன்பும் இவ்வாறே..........இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்து நேசத்தைப் பகிரும் போதே, அது ஆயுள் முழுதும் நீள்கின்றது!
-------------------------------------------------------------------------------------------


பயமென்ற ஒரு சொல்லே போதும். இயக்கமுள்ள நம் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வரும்.
----------------------------------------------------------------------------------

சவால்களுடன் நாம் போராடும் போராட்டக்களமே வாழ்க்கை. துணிவு, விவேகம், முயற்சி எனும் ஆயுதங்கள் நம்மை வெற்றி என்னும் பக்கம் தள்ளிச் செல்லும்.
---------------------------------------------------------------------------------------

பூமியைப் பிளந்து செல்லும் வேர்களால்தான் தண்டுகளும் உறுதியாகத் தாங்கப்படுகின்றன. அதனைப் போல் மனதைப் பிளக்கும் கஷ்டங்கள் வந்தால்தான் நம் மனதிலும் வாழ வேண்டுமென வைராக்கியமும் வளர்க்கப்படும். வாழ்க்கையில் நம்பிக்கை கொள்வோம். அவ் வாழ்வையும் வெற்றி கொள்வோம்.
-----------------------------------------------------------------------------------------


சந்தர்ப்பவாதங்களே நம்மைக் குற்றவாளியாக்குகின்றன. அப்பொழுதெழும் விமர்சனங்கள் கூட  நம்மை நோக்கி பிறரைத் திசை திருப்புகின்றன.
-------------------------------------------------------------------------------------------


ரசிக்கும் மனதிருந்தால்
இயற்கை கூட பேரழுகே!
ரசனை  நம் வசமானால்
சோகம் கூட வெறுந் தூசே!

 ------------------------------------------------------------------------------


உணர்வோடு, உயிரோடு
மனதோடு , வாழ்வோடு
என்னோடு, உம்மோடு
உலகத்தின் இயக்கத்தோடு
இரண்டறக் கலக்கும் எம் தமிழுக்கு
என்றும் வீர வணக்கம்!

- Ms. Jancy Caffoor -



நீ காதல் சொன்ன போது

முதன் முதலாய்
உணர்வுக்குள் ஏதோ பிசைவு!

கண்களை இறுக்கிக் கொள்கின்றேன்
காதோர ஒலியதிர்வுகள் மெலிதாய்
சிணுங்குகின்றன உன் பெயர் சொல்லி!

இருண்ட கானகத்திலிருந்து ஓர்
ஒளிப்பிழம்பாய்
நீ என்னை ஊடுறுவுகின்றாய்
பட்டாம் பூச்சியாய் சிறகடித்து!

நீ எனக்குத்தான்............
உள்ளுணர்வுகள் சேமிக்கப்படுகின்றன
மனதுக்குள் ரகஸியமாய்

எனக்காக வாழ்ந்த நான்
முதன் முதலாய் உனக்காய் வாழ்வதாய்
உணர்கின்றேன் தனிமை துறந்து!

உறக்கமும் பசியும் துக்கமும்
துறந்து போக...........
பறக்கின்றேன் சிறகடித்து உன்னுடன்
வரம் நீயான சந்தோஷிப்பில்!

உன்னிழல் பற்றும் நிஜங்களுடன்
ஊர்கோலம் போகும் நம் நினைவுகள்
வர்ணக் கலவையாய் - நம்
வாலிபத்தின் சுவரேறி குந்தியிருக்கின்றன!

ஒருவரை ஒருவர் அறியாது
இத்தனைநாள் எங்கிருந்தோம்.......
வினாக்கள் நெஞ்சுக்குள் முகிழ்க்கும் போது
உன்னிடம் என் உதடுகள் குவிகின்றன!

உன் அழகுப் பார்வையில் எனை மேய்ந்து
இறுக்கி அணைக்கின்றாய்.......
இனி பேசுவது நாமல்ல...
நம் உணர்வுகளும் உதடுகளும் தான்!

காதலைச் சிதறியவாறு
திரும்பிப் பார்க்கின்றாய் என்னுள் மின் பாய்ச்சி!





2013/04/17

மருந்து



நள்ளிரவின் நிசப்தத்தில் என் அறைக் கதவு பலமாக தட்டப்படுகின்றது. அப்பாதான் பெயர் சொல்லி அழைத்தார். வெளியே வந்த போது அவரது கைகளால் மார்பினைப் பொத்தியவாறு வலியால் துடித்துக் கொண்டிருந்தார். 

"நெஞ்சுக் குத்துது மக........ரெண்டாவது அட்டாக் வந்திட்டுது போல"

அவர் சிரமப்பட்டு சொன்னபோது, என் மனமும் இற்று துடிக்கத் தொடங்கியது. 

"உங்களுக்கு ஒன்னும் ஆகாதுப்பா"

அப்பாவைத் தைரியப்படுத்தினாலும் கூட, மனசு அப்பாக்கு ஏதும் நடந்திடுமோ என்று பயந்தது..

அந்த நடுநிசி நேரத்தில் எங்கள் வீட்டில் மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, கொடுக்க வேண்டிய மருந்துப் பக்கெற்றுக்களை துலாவுகின்றேன்.. 

அப்பா தொடர்ச்சியாக மருந்து பாவிப்பதில்லை என்பதால், மருந்துகள் தீர்ந்திருந்த விடயம் கூட தெரிந்திருக்கவில்லை. வருத்தம் வந்தால் எப்போதாவது பாவிப்பார்.  எப்படியோ தேடி கண்டுபிடித்து இரண்டு அஸ்பிரின் சார் மருந்து வில்லைகளை குடிக்கச் செய்தேன். அப்பா நாளைக்கு வாங்கித் தாரேம்பா "

என் உறுதி மொழியில் அப்பாவும் சற்று வேதனை துறந்து சிரமப்பட்டு தூங்கிய போது கண்கள் பனித்தது. 

"பிரிந்திருப்பதை விட பிரியப் போகின்றோம் என நினைக்கும் போது அதன் வலி அதிகம்."

நாளை கட்டாயம் அப்பாக்கு பாமஸில மருந்து எடுத்துக் கொடுக்கணும். மனசு பல தடவை மனப்பாடம் செய்ய உறங்கிப் போனேன்......

அதன் பின்னர் விரட்டி வந்த இரண்டு நாட்களும் மன அழுத்தங்களுடன் இறங்கிப் போனது. அந்த விடயத்தை மறந்தே போனேன்...

"மக மருந்து வாங்கினீங்களா"

அப்பா கேட்ட போது மனசுக்கு யாரோ சம்மட்டியால் அடித்த வலி...

"சொறிப்பா.........மறந்திட்டன், நாளைக்கு வாங்கித் தாரேன்"

நான் பதிலளித்த போது அப்பா எதுவுமே பேச வில்லை...

அந்த மௌனம் என் வலியை இன்னும் அதிகரிக்கச் செய்தது. இரண்டு ஏச்சு ஏசியிருந்தாலும் கூட அந்தக் கணத்துடன் கோபம் கரைந்திருக்கும் இப்படி மனசு வலித்திருக்காது...

அப்பா சாறீப்பா...........மனசு மீண்டும் எனக்குள் பல தடவைகள் மன்றாடியது.

அப்பா அந்த மௌனிப்புக்களுடனேயே உறங்கிப் போனார்...

நானோ குற்ற உணர்ச்சியில் உறக்கத்தை தொலைத்தவளாக அழ ஆரம்பித்து விட்டேன்..

"அப்பா........என்னை மன்னிச்சுடுங்கப்பா"

விடிந்ததும் அப்பாக்கான மருந்துகள் கைகளில்!

2013/04/16

உன்னால்


ஒளி தேடி மதியிழந்து சிறகறுக்கும்
விட்டிலாய்
வீழ்ந்து போகின்றது என் வாழ்க்கை
உன்னால்!

மனப் பஞ்சுக் குவியலுக்குள்
மடிந்து கிடக்கும் கனவுகளை உரச
உன் வார்த்தையெனும்
சிறு குச்சி போதும்!

வாலிபத்தில் வில்லொடித்து
கடி மணம் புரிந்த உனக்கு
கலிகால சூழ்ச்சிகளைக் கற்றுத் தர
கால அவகாசம் தேவையில்லை!

சிதைக்கப்பட்ட என்னிலிருந்து
சீழும் இரத்தமாய் ஏதோ வடிகிறது
யார் யாரோ தடம் பதித்து நாடியளக்கின்றனர்
நான் அழவேயில்லை
உன்னிலிருந்து விடுதலை தந்தவன்
நீதானே!

உணர்வறுந்த கனவோரம்
மயானவெளியில் நாட்டப்படுகையில்
அயர்ந்த கண்கள் விரிகின்றன
விழித் துவாரத்திலிருந்து வீச்சோடு கண்ணீர்
சிறுதுளியாய்!
இது ஆனந்தக் கண்ணீரோ!

எத்தனை தடவைகள்
உன்னால் நான் புதைக்கப்பட்டாலும்
எழுவேன் விதைகளாய்
அழிவு எனக்கில்லை!

- Jancy Caffoor-
     16.04.2013

2013/04/15

பப்பி


இரவின் நொடிப் பொழுதுகள்
இவன் மேனியில் பனி தூவிக் கிடக்கும்!

விழி திறந்து செவி தொடுப்பான்
பிறர் பேச்சொலி தன்னுள் ஏந்த!

நன்றிக்கும் இலக்கணமாய்
அன்புக்கும் வரைவிலக்கணமாய்

வந்துதித்தான் - எம்
வாயிற் படலை காக்கும் சின்னப் பப்பி!

கூலியேதும் கேட்பதில்லை - வீட்டு
வேலியோரம் பிறர் நிழல் தீண்ட விடுவதில்லை!

கடமை காக்கும் நன் வீரன் - தன்
உடமையாய் நன்றியையும் பிணைந்தே வாழ்ந்தான்!

பஞ்சு மேனியில் பாசம் நனைத்து
கொஞ்சி தன் வாலால் கால் நனைக்கையில்

அஞ்சிடாத வீரன் தானென்றே
பறை சாட்டிக் கிடந்திடும் பப்பியிவன்!


- Jancy Caffoor-
     15.04.2013







அழகான அவஸ்தை


காதலித்துப்பார்.........

பட்டாம் பூச்சிகளின் தேசமாய்
நம் ஹிருதயம் பிரகடனமாகும்!

வாழ்க்கைக்குள் கனவு மாறி......
கனவுக்குள் வாழ்க்கை விழ்ந்து போகும்!

நிலவின் மடி மீதில் நினைவுகள் கவிழ்ந்து நிசர்சனமாய் உலா வரும்
காதல் வாசம்!

நம்மை ரசித்து ரசித்தே கண்ணாடி தேயும்
விம்பமாய் காதல் நெஞ்சம்
இரசத்தில் ஒட்டிக் கிடக்கும்!

வானவில் இறங்கி தலை வருடும்
தென்றல் சுவாசமாகி
உடலோரம் வேலி போடும்!

நினைவுகளில் ஒரு முகமே சுழன்றடிக்கும்
முத்தங்களின் தீப்பொறிகள்
குளிராய் உருகி உணர்ச்சி தொடும்!

காதலித்துப்பார்.....
கானல் நீரெல்லாம் பனித்துளியாய் உருகும்
கானகம் கூட பூங்காவனமாய் மாறும்!

மார்ப்புத் தசைக்குள் மயக்கங்கள் நிறையும்
வியர்வைத் துளிகளில் நாணம் கரைந்து
பக்கம் வர தேகம் துடிக்கும்!

ஈருயிர்கள் ஓருயிராகி  ....
விரல் தொடும் ஸ்பரிசித்து.....
ஆருயிர் குரல்த்தொனியில் ஆவி துடித்தெழும்!

காதலித்துப்பார்....
கவனம் எல்லாம் திசைமாறும்
பசி கூட மறந்து போதும்

காதலித்துப்பார்...
காதல் அவஸ்தையல்லா.....
அழகான அன்பு!
ஒத்துக் கொள்ளுவாய்
ஓரவிழி பார்த்துக் கொண்டே!

காதலித்துப்பார்..........
தனிமை பறக்கும் - இதயங்களோ
இரம்மியத்தில் துடித்தெழும்!

காதலித்துப் பார்..........

உனக்குள் நானாய்
எனக்குள் நீயாய்
புதுவுலகில் கிறங்கிக் கிடக்க
காதலித்துப்பார்!

மீளாத் துயரில் பர்மா

மியாண்மார் ரோஹிங்கியா!

ஒவ்வொரு பகலையும் இரத்தக் கறைகளால்
பூசி மெழுகும்
அக்கிரமக்காரர்களின் வாசற்தலம்!

ஒரு கோடி முஸ்லிம்களின்
நாடித்துடிப்படக்க
பஞ்சபூதங்களை தம் பூதங்களாக்கும்
மதவாதிகளின் கொலைத் தளமிது!

ஹராங்களின் போஷிப்புக்களினால்
கோஷமிடும் மரணங்களால்
மியண்மார் எரிந்து கொண்டிருக்கின்றது
பௌத்த தீவிரவாதத்தால்!

இனவாதம் அனல் கக்கும் இப்
பௌத்த வேள்வியில்
நரகங்களின் ஆட்சி பீட ங்களாக
மேடையேற்றப்படுகின்றனர்  பிக்குகள்!

புத்தரின் அஹிம்சையில் கூட
சத்தமின்றி புழுக்களைக் கரைக்கும் இம்மாக்கள்
சரித்திரத்தில் பதிக்கின்றனரிங்கு
இன்னுமொரு பர்மாவை!

இனவெறியின் உச்சக் கட்டமாய்
அர்ச்சிக்கப்படும் கந்தகப் பூக்கள்
கருக்கி உதிர்க்கின்றன முஸ்லிம் உம்மாக்களை
மயானங்களில் புதைப்பதற்காய்!

மண்டையோடுகளும்
மரண ஓலங்களும்
பாளியின் வார்த்தைகளாய்
காவிகளால் மனனமிடப்படுகின்றன வெறியோடு!

கொல்லாமை பற்றி இடிமுழக்கங்களுக்குள்
மனித புதைகுழிகள்
மறைத்து வைக்கப்படுகின்றன
தினசரி வேதமோதும் ஹாமதுருக்களால்!

கல்பில் தீனேந்தி அண்ணல் நபி வழி நடக்கும்
முஹ்மீன்களின் தியானச் சுவடுகளில்
ரத்தக் கறை நிரப்பும் காட்டேறிகளாய்
பௌத்தமோதும் காவிகள்!

மனிதங்களில் புனிதம் தொலைக்கும்
பௌத்தம்
அராஜகத்தின் ஆயுதங்களாய் தம்மை
தடம்பதித்துக் கொண்டிருக்கின்றதிங்கே!

காவிகளின் கல்லடியில் ரத்தம் சிதைக்கும்
மியாண்மர்
பாவிகளின் சொப்பன  சிம்மாசனத்திற்காய்
கரைத்துக் கொண்டிருக்கின்றது உயிர்களை!


- Jancy Caffoor-
     15.04.2013


2013/04/14

பாடகர் பி.பி.சிறினிவாஸ்



பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவருக்கு எமது அஞ்சலி
----------------------------------------------------------------
 திரையுலகின் ஓரங்கமே திரையிசைப் பாடல்கள். அந்த வகையில் காலத்தில் அழியாத பாடல்கள் பலவற்றையும், அவற்றை உயிர்ப்பித்தோரையும் தென்னிந்திய திரையுலகு தந்து கொண்டுதான் இருக்கிறது. வயது வேறுபாடின்றி இன்று நாம் ரசிக்கின்ற பல பழைய பாடல்கள் இருக்கின்றன. சில நவீன இசையமைப்பில் துள்ளல் வடிவம் கூட பெற்றுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் நான் ரசித்த பாடல்களுள் "நிலவே என்னிடம் நெருங்காதே" ஒன்றாகும். ஜெமினி கணேசன் பாடுவதைப் போன்ற பிரமிப்பினை ஏற்படுத்தியவர், தமிழ் சினிமாவில் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றால் மறுக்கவா போகின்றீர்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

 கடந்த சில நாட்களாக உடல்நலம் மோசமான நிலையில் இருந்து வந்த நிலையில் இன்று (14.4.2013) அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. இறக்கும் போது அவருக்கு வயது 82.

காலமான பி.பி.ஸ்ரீநிவாஸ் 1934-ம் ஆண்டு செப்டம்பர் 22ம் நாள் ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார். தமிழ்த் திரை இசை உலகில் டி.எம்.சௌந்தரராஜன் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். வெண்கலக் குரலில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரலால் இனிமையைக் கூட்டி பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

'காலங்களில் அவள் வசந்தம்', ‘மயக்கமா கலக்கமா’, ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என காலத்தால் அழியா பாடல்களை பாடிய அற்புதமான பாடகர். தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசன், கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரின் அனைத்துப் படங்களிலும் இவர்தான் பின்னணி பாடியுள்ளார்.

பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவிற்கு நாமும் எம் அஞ்சலியைச் செலுத்துவோமாக!

ஒரு கலைஞனின் உடல் அழியலாம், ஆனால் விட்டுச் சென்ற கலைகள் என்றும் வாழ்ந்து கொண்டுதான்  இருக்கும்.


-Jancy Caffoor-








ஒளித் தூரிகை


நீ சொன்னால்..........
பொய்களும் மெய் போலாகும்
நீ என்னவனென்பதால்!
========================== 


அங்கே.............
குடைக்குள் கோடை கழிக்கும்
காளானாய் நீ!

இங்கே.........
மாரிக்குள் ஒப்பாரி வைக்கும்
கிணற்றுத் தவளையாய் நான்!

நம் உணர்வுகள்
மையப் புள்ளியில் சந்திக்க...........
பார்த்தாயா...............
நம் தேசங்கள் நம்மை
வெவ்வேறு துருவங்களாய் மாற்றுகின்றன!

============================ 



"நம்மட சூரியன் பயணிக்கிற பாதையில 12 ராசி இருக்கு, அதில முதலாவது ராசியாக மேடமும் ,  12வது ராசியாக மீனமும் இருக்கு. சூரியன் மீன ராசியில இருந்து மேட ராசிக்கு பயணிக்கிற அந்த நிகழ்வத்தான் புதுவருஷமென்று சொல்லுறம்"



நான் என் வகுப்பு மாணவர்களுக்கு புதுவருடப்பிறப்பினை விஞ்ஞான ரீதியில் விளக்கிக் கொண்டிருக்க, தம் அயல் மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியவாறு மாணவர்கள் திருப்தியுடன் தலையாட்டுகின்றனர்...

இதுல உங்களுக்கு ஏதாவது புரியுதா..

புரியலைன்னா பரவாயில்லை..............

நாளை சித்திர வருடப்பிறப்பைக் கொண்டாடும் என் நேசங்களுக்கு முன்கூட்டிய புதுவருட வாழ்த்துக்கள்
====================================== 

நமது வார்த்தைகள் எப்பொழுது பிறர் முன்னிலையில் பெறுமதி இழக்கின்றதோ, அத் தருணமே. மௌனம் நம் பெறுமதியைக் காக்கும் கேடயமாக மாறி விடுகின்றது!

================================ 



என் கனவுக்கூடுகளில் உன்னை நிரப்பி
போகின்றேன் என் தேசம் தோறும்!
வா.........
வசந்தத்தின் இருக்கைகள் கூட
நாமாகட்டும் !

மயிலிறாகால் வருடும் என்
ரஞ்சிதப் பொழுதுகளெல்லாம் - உன்
அன்பின் விடியலில் மட்டும்
முகம் பார்த்துக் கொள்ளட்டும்!

வா............................
நம்................
தேசத்தில் நாம் மட்டுமே
ஆளுபவர்களாய்!
============================== 



அன்பின் துளிகள் சிந்தும் ஒவ்வொரு இடங்களிலும்
அன்னையே......................
நீயே உன் முகங்காட்டுகின்றாய்!
================================= 


மழை வருது மழை வருது குடை கொண்டு வா.......
இப்படித்தான் இப்ப எங்க ஊரும் பாடிக் கொண்டிருக்கின்றது...மழை வந்தால் நல்லதுதான். ஆனால் இன்னொரு பிரச்சினை இருக்கே!

அது மின்னல்..........

நேற்று ராத்திரி அக்கம் பக்கம் கேட்ட மத்தாப்புக்கள விட, இந்த மின்னலும், இடியும் அட்டகாசமாக கொட்ட ஆரம்பிச்ச நேரம்,


(எங்கேயோ பக்கத்தில விழுந்திருக்கணும்..டியூப் லைட்ட யாரோ உடைக்கிற மாதிரி சத்தமும், வெளிச்சமும்)


எனக்கு வந்த நினைவுதான் இந்தப் பதிவு.....

அருகே கந்தக வாசம் அதாவது தீக்குச்சி எரிக்கிற போது வருகிற வாசம் வந்தால் கொஞ்சம் உஷாரா இருங்க.....ஏனென்றால் எங்கேயோ இடி விழப்போகுதுன்னு அர்த்தம்!

சிலர் கோபத்தில தலைல இடி விழட்டும் என்று சொல்வீங்கதானே..........இனி அப்படி சொல்லாதீங்க!
ஏனென்றால் எதிரி கூட கருகிச் சாக வேண்டாமே!
================================== 



உடன்பாடுகளும், முரண்பாடுகளும் நம் மன எண்ணங்களிலிருந்தே வேர் விடுகின்றன. வேற்றுமையிலும் ஒற்றுமை காணப் பழகி விட்டால் நிம்மதியின் நிதர்சனத்தில்  நம் வாழ்வும் இளைப்பாறும்!

- Ms. Jancy Caffoor -













ஏன் வேரறுத்தீர்


உங்கள் பயிற்சிப் பாசறைகள்தான்
எங்கள் கனவுக் கூடாரங்கள்!

உங்கள் வேள்வித் தீக்காய்
எங்கள் உயிர்களும் உருகின!

பொம்பரும்
ஹெலிகளும்
ஏகே களும்
பீரங்கிகளும்
எங்கள் தோட்டத்திலும்
குண்டுகள் நட்டன!

சுதந்திரப் பறவைகளின் இறக்கைகளில்
எங்கள் ஜடைகளைப் பிணைந்தவர்களும்
நாமே!

பெடியள்களின் படிக்கட்டுக்களில்- எம்
தடங்களும் பதிந்துதான் இருந்தன!

நிதர்சனங்களின் காட்சி ரணங்களில்
குருதி பிழியப்பட்ட போது
உயிரறுந்த வலியால் துடித்தவர்களும் நாமே!

சிதறப்பட்ட ஒவ்வொரு விதைகளிலும்
எழுச்சியைப் பொறுக்கியவர்களும் நாமே!

புல்லரிக்கும் புதுவை அண்ணாவின் கவிகளை
உள்ளத்தில் பதியமிட்டு
சுதந்திர எழுச்சிக்காய் சுவாசமறுத்தவர்களும்
நாமே!

நீங்கள் செருகிய மயான முகவரிகளை
எம்மோடிணைத்ததில்
பலியாடுகளாய் வீழ்த்தப்பட்டவர்களும்
நாமே!

எல்லாம் உங்களுக்கும் தெரியும்
ஏனெனில்
போராட்டங்களும்
யுத்த தந்திரங்களும்
எமக்கு
கற்றுத் தந்தவர்களும் நீங்கள்தானே!

சயனைட் குப்பிகளாய்
எம் உணர்வுக்குள்
விடுதலை கோஷிக்க வைத்தவர்களும்
நீங்கள்தானே!

பாலச் சந்திரன் போல் நானும்தான்
உங்களிடம் கேட்கின்றேன்
இவை காட்டிகொடுப்பல்ல உங்களை
அடுத்தவரிடம்!

என் அகதி வாழ்வின்
ஒவ்வொரு துளிகளின் அவலங்கள்
இருப்பிடம் அறுக்கப்பட்ட அவஸ்தை
பால்யம் வீணடிக்கப்பட்ட சினம்!

நானும் கேட்கிறேன் உங்களிடம்
ஏன் எம்மை
1990 ஒக்டோபர் 30
இரண்டு மணி நேரத்தில்
பிறப்பிடத்திலிருந்து கருவறுத்தீர்
சகோதரராய் அருகிலிருந்தும்!

உங்களைப் போல்தானே
யாழ் மண்ணும் எம்மைச் சுமந்தது
உங்களுடன் தானே நாமும் பயணித்தோம்
ஏன் கருவருத்தீர் எம் தாயகத்திலிருந்து
எம்மை!

ஒன்று மட்டும் புரியவேயில்லை

சிறுபான்மை அடக்குமுறைக்காய்
ஆயுதம் ஏந்திய நீங்கள்
எதற்காய் வேரறுத்தீர்கள் எம்மை
நாம் உங்களுக்கு சிறுபான்மையினர் தாமே!

இனவாதத்திற்கான உங்கள் அடக்குமுறை
ஏன்
உங்கள் சிறுபான்மை எமக்காய்
அஹிம்சையை  நாட்டவில்லை!

உங்கள் மனக்குமுறல்கள் தானே எமக்கும்
கோஷங்கள் வெறும் முழக்கங்கள் அல்ல
உணர்வின் எரிமலைகள்!
ஏன் வேரறுத்தீர்கள்
குற்றம் புனையா எமக்கே!

- Jancy Caffoor-
     14.04.2013