2020/12/05
மழை
நம்பிக்கை
நம்பிக்கை
++++++++
நம்பிக்கை கொண்டோர்/
வாழ்வில் தோற்பதில்லை/
ஊக்கத்துடனான முயற்சி/
அவநம்பிக்கை தருவதுமில்லை/
ஜன்ஸி கபூர் - 5.12.2020
2020/12/04
மழை
கருத்துப் போன முகில்களின் நீரோட்டம்
கடல் அலைகளை வேகமாகத் துரத்துகின்றது
அச்சப்பட்ட அலைகள் அடைக்கலம் தேடி
ஊருக்குள் நுழைகின்றது வெள்ளமெனும் பெயரில்
கனமழையின் நிழலுக்குள் ஒளிகின்ற உயிர்களைத்
தேடி ஒலிக்கின்ற உறவுகளின் கதறல்களும்
கலக்கின்றது காற்றோடு போராடுகின்ற ஈரத்தில்
மழைக்குள்ளும் ஈரமான மனசு இருக்கின்றது
அதனாற்றான் வறட்சியின் துன்பம் கண்டு
அடிக்கடி கண்ணீர் சிந்தி அழுகின்றது
ஓவெனும் ஒப்பாரிச் சத்தம் கேட்டு
எட்டிப் பார்க்கின்றன குளம் குட்டைகள்
தம் நெஞ்சத்தில் அணைத்தே ஆறுதல்படுத்துகின்றன
வழிந்தோடும் விழிநீரால் நனைக்கின்றன இருப்பிடங்களையும்
குடைக்குள் ஒளிந்து கொள்கின்ற கொடை
பற்றியதான புரிதல்கள் இங்கு யாருக்குமில்லை
எப்போது அணைக்கும் அழிக்குமென்ற மணக்கணக்கும்
தப்பாகிப் போய்விடுகின்றமையால் தவிக்கின்றேன் வாழ்வில்
விழுகின்ற நீர்த்துளிகள் பரிகசிக்கின்றன முன்னறிவிப்புக்களை
எதிர்வுகூறல்களை எட்டி உதைக்கையில் தடுமாறுகின்றன
முன்னாயத்தம் இல்லாத் தாவரங்களும் இயற்கையும்
சினத்தில் வானமும் முகம் கறுக்க
முகில்களும் கல்லெறிகின்றன தகரக் கூரைகளில்
அதன் பேரிரைச்சல் சப்தம் கேட்டு
தலைதெறித்து ஓடுகின்ற அமைதியான ஆறுகளை
நானும் அனுதாபத்துடன் பார்த்துக் கலங்குகின்றேன்
எவருக்கும் தெரியாது மழையின் குறும்பும்
பிறரை வருத்தும் துன்பத்தின் தீவிரமும்
வாட்டம் தீர்க்கின்ற இதமான அன்பும்
மழையின் இரகசியம் நானும் அறிந்திருந்தால்
ஒவ்வொரு துளிகளையும் அனுபவித்தே மகிழ்ந்திருக்கலாம்
கிடைக்கின்றபோது சலிப்பதும் காணாதபோது ஏங்குவதும்
நிலையற்ற மனதின் எதிரொலியாகவே காண்கின்றேன்
நினைக்கின்ற போதெல்லாம் மழையும் கிடைத்துவிட்டால்
துன்பங்கள் நம் அனுபவங்களைத் தொட்டிருக்காது
வெளியே மழையின் ஓசை கேட்கின்றது
மண்வாசம் சுவாசத்தினைத் தொட்டுச் செல்கின்றது
குளிரைப் போத்தியபடி இரசிக்கின்றேன் மழையை
அது விரும்பும்வரை என்னையும் நனைக்கட்டும்
ஜன்ஸி கபூர் - 4.12.2020
Kesavadhas
ஜன்ஸி கபூர்
இயற்கை நிகழ்வுகளை மழையின் ஒவ்வொரு நகர்வையும் மனித உணர்வுகளௌடு ஒப்பிட்டு படிமங்களாய் பதிய வைத்திருக்கிறார் கவிஞர்!
கவிதையைப் புரிந்துணர்வு செய்யும் முயற்சியில் புதிய சொல்லாக்கங்களும் அரங்கேறுகிறது அழகு!
முகில் நீரோட்டம் கடல் அலைகளை துரத்த அவை அடைக்கலம் தேடி ஊருக்குள் நுழைகிறதாம்!
கனமழையின் நிழலுக்குள் ஒளிகின்றனவாம் உயிர்கள்
அந்த உயிர்களைத் தேடும் உறவுகளின் கதறல்கள் காற்றோடு போராடுகின்றனவாம்!
மழைக்கும் ஈரமான மன்சு இருக்கிறதாம்!
அதனால்தான் வறட்சி கண்டு அடிக்கடி கண்ணீர் சிந்துகிறதாம்!
ஓவெனும் ஒப்பாரி கேட்டு எட்டிப் பார்க்கின்றனவாம் குளங்குட்டைகள்!
தம் நெஞ்சில் அணைத்து ஆறுதல் படுத்துகின்றனவாம்!
பெய்யும் மழையின் ஓலமும் பாயும் நீரும் நிரம்பும் குளங்குட்டைகளும் படிமக் கடலில் புணைகள் ஆகின்றன!
அணைப்பதும் அழிப்பதும் கொடுப்பதும் கெடுப்பதும் மழைக்கு கைவந்தகலை!
நம் கணக்குதான் தப்பாகிப் போகிறது!
என்ன அழகான புரிதல்!
விழுகிற நீர்த்துளிகள் பரிகசிக்கின்றன முன்னறிவிப்புகளை எதிர்வுகூறல்களை..
முன்னாயத்தம் இல்லா தாவரங்களுடான இயற்கை சினத்தில் வானமும் முகமும் கறுக்க முகில்கள் கல்லெறிகின்றனவாம்! கற்பனை விரைந்து பாய்கிறதே விரியனின் விஷமாய்!
அடுத்த நாலைந்து வரிகள் மழையின் தாண்டவம் காட்டும்!
குறும்பு காயப்படுத்தல் அன்பு
என பலமுகம் காட்டுகிறது மழை!
மழை மர்மம் புரியாமையால் ரசிக்க முடியவில்லை!
புரிந்து ஆயத்தமாய் பாதுகாப்பாய் இருந்திட எல்லாவற்றையும் ரசிக்கலாம் மழையின் துளிகள் அதட்டல் மிரட்டல் எல்லாவற்றையும்!
கிடைத்தால் சலிப்பாகும்!
கிடைக்காதபோது ஏக்கம் தரும்!
மனதைப் போலவே மழையும்!
நினைக்கும் போதே எல்லாம் சாத்தியமானால் வாழ்வு சுவாரசியம் இழந்து போகாதோ!
மழையின் ஓசை வெளியில்
மழைதொட்ட மண்ணின்
மணம் நாசியில்
குளிரைப் போர்த்தி என்னை நினைக்கின்றது மழை!
குளிரால் போர்த்தமுடியுமா?
போர்த்தினாலும் நனையுமா!
எதிர்களின் அடுக்கினால் கோட்டையே கட்டிவிடுகிறார் கவிஞர்!
வாழ்த்துகள்!
மழையானுபவம் பேரின்பமே!
*****+
------------------------------------------------------------------------------------------
2020/12/03
உதிரும் பூவே
விடிகாலைப் பொழுதினில் விருப்பாகும் இதழ்கள்/
மடிகின்ற போதெல்லாம் இழக்கின்றதே இரசிப்பினை/
உதிரும் பூவே உணர்கின்றேன் உண்மையை/
அழகும் இளமையும் அழியும் வாழ்வினில்/
பழகும் அன்பே பண்பினிற் சிறந்ததென/
ஜன்ஸி கபூர் -3.12.2020
மழைக்கால மேகம்
இருண்ட வானின் இறக்கைகளோ மழைமேகம்/
வருணன் வடிவெடுத்து வனப்பாக்குது மண்ணையும்/
துள்ளுகின்ற நீர்த்துளிகள் துயரினைப் போக்கிட/
உள்ளச் செழிப்பினால் உழைப்பும் உயருது/
உழவும் களித்திடும் பெருமழையால்/
கழனிப் பெருவெளியும் களிக்குதே பசுமைக்குள்/
ஜன்ஸி கபூர் - 3.12.2020
உறவுகள் நமக்கு உறுதுணையே
வாழ்க்கை என்பது தனிப் புள்ளியல்ல. உணர்வுகளால் சூழப்பட்ட கோலம். இந்த உணர்வுகளை ஆள்வோர் நமது உறவுகளே. நாம் நமது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய இதயங்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை குறித்த பாதையில் நகர்த்தக் கூடியவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை எப்பொழுதும் அவதானித்துக் கட்டுப்படுத்தும் சக்தியாக இவ்வுறவுகள் இருப்பதனால் நாம் நமது எல்லைகளை விட்டு வெளியேறாது நம்மை நாமே கட்டுப்படுத்தி வாழக்கூடியவர்களாக இருக்கின்றோம் என்பதே உண்மை.
உறவுகளை நம்முடன் இணைப்பது அன்பு பாசம் சார்ந்த பிணைப்பே. உண்மை அன்பானது உபத்திரமாக மாறாது. நம்மைச் சூள்கின்ற ஆபத்துக்களைக் கூடத் தடுக்கின்ற சக்தி உண்மை உறவுகளுக்கு உண்டு
2020/12/02
மனம் விரும்புதே
ஏழ்மையும் சிதைக்காத எழில்ப் பூவழகி/
வீழ்கின்றேனடி தினமும் விழிகளின் ஒளிர்வினில்/
கன்னத்தில் கரைந்திடும் வசீகரப் புன்னகையில்/
இன்பத்தைச் சுவைக்கின்றேன் இதயமும் சிறகடிக்க/
அன்பைக் குலைத்தே அமுதாய் ஊட்டுகையில்/
உன்னோடு வாழ்ந்திடவே மனம் விரும்புதே/
ஜன்ஸி கபூர் - 2.12.2020
2020/12/01
விழிகளின் மொழி
விழிகளின் மொழி
-------------------------------
விழி அன்பிற்கு மொழியும் உண்டோ/
பழகும் பண்பில் பேதங்கள் கலையும்/
அழகான சிரிப்பினில் தந்தையும் இங்கே/
கலங்குகின்றதே மனமும் அவர் பிரிவினிலே /
ஜன்ஸி கபூர் -1.12.2020
-------------------------------------------------------------------------------------
அன்பினால் அரவணைப்போம்
அவலம் சூடும் அனாதைகளைத் தினமும்/
அன்பினால் அரவணைத்தே வாழ்ந்திட வழிகாட்டுவோம்/
இருப்பிடம் தொலைக்கும் இயற்கைச் சீற்றத்தின்/
இடரினைத் துடைக்க இரக்கமும் விதைப்போம்/
வழியின்றித் தவிக்கின்ற வறுமை நெஞ்சின்/
விழி நீரினைத் துடைப்போம் கருணையுடன்/
ஜன்ஸி கபூர் - 1.12.2020
விவசாயம்
விவசாயத்தின் வரலாறானது பல்வேறு காலகட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. காட்டிலிருந்து பெறப்பட்ட விதைகளைத் திட்டமிட்டு விதைக்கச் செய்தும், ஆறு, ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளிலிருந்து மீன்களைப், பிடித்தும், உணவுத்தேவையினை நிறைவு செய்த மக்கள், இன்று தமது சிந்தனையின் விளைவாக விவசாயம் எனும் பழமைக்குள் தற்கால அறிவியலைப் புகுத்தி நீர்ப்பாசனம், உரங்கள், பயிர்ச்செய்கை முறைகள், பூச்சிகொல்லிகள் போன்ற பல்துறைகளிலும் பல்வேறான தொழினுட்ப உபாயங்கள் பயன்படுத்தி, தற்கால மனித தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய விளைவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மை போன்ற பகுதிகளைக் கொண்டுள்ள விவசாயத்தில் நிலங்கள் பண்படுத்தப்படுவதனால் மண்வாழ் உயிரிகளுக்கான வாழ்விடம் கிடைப்பதுடன், மண்வளமும் காக்கப்படுகின்றது. செழிக்கின்ற பசுமைக்குள் இயற்கையும் உயிர்க்கின்றது. அத்துடன் சூழல்வாழ் உயிரிகளுக்கிடையிலான அங்கிச் சமநிலையும் பேணப்படுகின்றது. எனவே விவசாயமானது வருமானத்தை ஈட்டித் தந்து நாட்டினதும், வீட்டினதும் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உயர்த்துவதுடன், சூழலையும் காக்கின்றது.
இவ்வுலக வாழ்வில் இணைந்த மனிதன் இயற்கையாகக் கிடைக்கின்ற இயற்கை வளங்கள் உயிரினங்கள் என்பனவற்றுடன் தொடர்புபட்டு மணணையும், விண்ணையும் ஓர் புள்ளியில் குவித்து, அதன் மூலமாக ஏற்படுகின்ற பிணைப்பினால் விவசாயத்தை உயிர்க்கச் செய்து, சமூக பொருளாதார மாற்றத்திற்கு பங்காற்றிக் கொண்டிருக்கின்றான். விவசாயத்தை ஆளுகின்ற விவசாயியின் மூலமாகவே இவ்வாறான உன்னதமான உழைப்பினை தான் வாழும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் வழங்க முடிகின்றது.
விவசாயத்தின் அடிப்படைத் தத்துவம் உழவாகும். தமிழரின் உழவு சார்ந்த வாழ்வியல் நெறிப் பண்பாட்டினை திருவள்ளுவரும் தமது குறளடிகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். – (குறள் 1037)
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. – (குறள் 1038)
மேற்கூறப்பட்ட குறளடிகளில் உழவுத் தொழிலின் தொழினுட்பத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
பசுமைப் புரட்சியின் மூலமாக விவசாய விளைவுகள் அதிகரிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் கூட, நாகரிக வாழ்வு, வணிகமயமாதலின் தாக்கம், காலநிலை, சனத்தொகைப் பெருக்கத்தினால் ஏற்பட்ட இடநெருக்கீடு, மண்வளம், நீர்வளம், நிலத்தோற்றம் போன்ற பல புறக்காரணிகளின் தாக்கங்களுடன், விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டங்களும் விவசாயத்தின் செழிப்பைக் குறைக்க முனைகின்றன. இவ்வாறான சூழ்நிலைகள் எதிர்கொள்ளப்பட்டாலும்கூட, இயற்கையுடன் இசைந்து வாழ்ந்து இயற்கையைப் பாதுகாக்கும்விதமாக நாம் வேளாண்மையில் நாட்டம் கொண்டு உழைப்போமாக.!
ஜன்ஸி கபூர் - 1.12.2020