About Me

2012/08/18

கசக்கப்படும் மலர்கள்



                                                Fathima Afra 

இவ்வுலகம் எவ்வளவு விரைவாக நவீனத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு செல்கின்றதோ, அதற்கு எதிர்மாறாக வக்கிர உணர்வுகளையும் அதிகளவு சம்பாதித்துக் கொண்டு செல்கின்றது. மூடநம்பிக்கைகள், நரபலி என அற்பமான சிந்தனைகள் இன்னும் இவ்வுலகத்தின் நடைப்பயணத்திலிருந்து விலகிப் போகாமலிருப்பது ஆச்சரியமே!

கொலை, கொள்ளை, களவு, கற்பழிப்பு என தொடரும் பஞ்சமாபாதகங்களின் ஆணிவேர் முற்றாக அறுக்கப்படாத நிலையில், மனித சமுகம் எவ்வளவுதான் நாகரிகமடைந்ததாக தன்னைக்காட்டிக் கொண்டாலும் அதன் பெறுமதி பூஜ்ஜியமே

அண்மையில் நான் கேள்விப்பட்ட சம்பவமே என்னை இவ்வாறு எழுதத்தூண்டியுள்ளது.

இறைவனின் அழகிய, அற்புத படைப்புக்களில் குழந்தையும் ஒன்று. குழந்தைப்பருவம் ஒரு சில வயதேற்றங்களின் பின்னர் பிள்ளைப்பருவமாக மாற்றப்பட, வீடென்று இருந்த பிள்ளையின் உலகம் பாடசாலை வரை நீளுகின்றது..மலரைப் போன்று மென்மையான உணர்வும், உடலும் கொண்ட இந்த சின்னவர்களின் அன்பும் , அவர்கள் சார்பான உலகமும் எம்மை மகிழ்ச்சிப்படுத்தும் நந்தவனங்கள் என்பதனை  மறுப்பவர் யாருமில்லை !

பாத்திமா அfப்ரா...................!

வெலிகம, கோட்ட கொடையைச் சேர்ந்த தரம் ஒன்று கற்கும் பால்மணம் மாறாத சிறுமி...பாடசாலை வாழ்விற்குள் நுழைந்து இன்னும் ஒருவருடம் கூட பூர்த்தியாகாத மலரிவள்..

அச் சிறுமிக்கு அவன் முகம் ஏற்கனவே பழக்கப்பட்ட நிலையில், அவன் அன்று அச்சிறுமியை அணுகி பூச்செண்டு தருவதாக கூறி ஆசைப்படுத்தவே அப்ராவும் அவனுடன் அவன் வீட்டுக்குச் சென்றுள்ளாள்.

அவன் காமுகன். பெண்கள் குளிப்பதையெல்லாம் மறைந்திருந்து பார்த்து, பல தடவைகள் பிடிபட்டு நையப்புடைக்கப்பட்டவன். அவன் பொழுதுபோக்கே ஆபாசப்படக்காட்சிகளை ரசிப்பதுதான்!

அவன் முன்பு மனநலப்பாதிப்படைந்து குணமடைந்தவன். அந்தக் கொடியவன் மூடநம்பிக்கைகளிலும், அதிக விசுவாசம் கொண்டிருந்தான்.. அவனது தீராத நோய் குணப்படுத்தப்பட வேண்டுமானால், சிறுவர் ஒருவரை நரபலியிட வேண்டுமென்பதில் அவன் குடும்பத்தினரும் அதிக  நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களின் அந்தத் தேடலுக்கு அfப்ரா இரையானாள்.

அந்த ஆறு வயதுச் சிறுமி அfப்ராவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவன் , வீட்டில் மறைத்து வைத்திருந்தமண்வெட்டியினால் அf ப்ராவைத் தாக்கி , அவள் முகத்திலும் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தி, சிறுமி சிந்திய இரத்தத்தில் தன் நரபலி வெறியைத் தணித்துள்ளான் அந்தக் காமுகன்.

அவனது தாக்குதலில் துடிதுடித்துக் கசக்கப்பட்ட அப்பிஞ்சு, தனது  மூச்சையடக்கிய  பின்னர், அவளது சிதைந்த  உடலை ஒரு குறித்த வாழைமரத் தோட்டத்தில் மறைவாக வீசியிருக்கின்றான். எனினும் அவனது துரதிஷ்டம் இறந்த அfப்ராவின் உடல் வெளியுலகப் பார்வைக்குத் தென்பட்டு விட்டது.


பிள்ளை கொல்லப்பட்ட செய்தி கேட்டு திரண்ட உறவுகளும், ஊரும் அவனைத் தேடிக் கண்டுபிடித்து நையப்புடைத்து சட்டத்தின் கரத்தில் ஒப்படைத்துள்ளனர். அவன் இப்பொழுது சட்டத்தின் பிடியில் சிக்குண்டிருக்கின்ற ,  ஓர் கைதி..............!



அfப்ராவைக் கொலை செய்த பாதகன் இவன்தான்


அfப்ரா.........!

இப் பூவுலகில் இன்னும் பல காலம் வாழ்ந்து  , தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழ வேண்டிய பூ ! சத்தியமும், மனிதாபிமானமுமற்ற மனிதர் சதியினால்  தன் காலடித்தடம் பதித்தோடித்திரிந்து , விளையாடிய  மணற்றரையிலேயே  அப்பிள்ளை நிரந்தரமாக உறங்குகின்றாள். மனித உயிர்களை தம் சுயநலத்திற்காக காவு கொள்ளும் எவரையும் என்றும் மன்னிக்கவே முடியாது!

சிறுமியைக் குருரமான முறையில் கொலை செய்த இவனுக்கு உயர்ந்த பட்சத் தண்டனை வழங்கவேண்டுமென்பதே, மனிதாபிமானமுள்ள மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்றது.

இந்த மென்மையைக் கூடச் சிதைக்கும் வக்கிரத்தைப் பெற்றுள்ள இவனைப் போன்றவர்களை இப்புவியில் தரிக்க விட்டால், இன்னும் பல அப்ராக்கள் கசக்கப்படுவார்கள் என்பது கசப்பான, வேதனையான உண்மை! இந்தக் கொடும் பாவிக்கு மன்னிப்பு எனும் வார்த்தை லாயக்கற்றது.

இலங்கைச் சட்டத்தில் இப்பொழுது மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.  இவ்வாறான கொலைக் குற்றமெல்லாம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவதனால்தான் இந்தப் பாவிகளும் மரணதண்டனை அவஸ்தையிலிருந்து தப்பித்து விடுகின்றார்கள்...

சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள். சட்டத்தின் பிடியில் இவர்கள் தப்பித்துக்கொண்டாலும் கூட இறை தண்டனைக்கு நிச்சயம் ஆளாவார்கள் என்பதும்  மறுக்கப்படாத உண்மை!

காலம் பதில் சொல்லும்............!

இரத்தங்களால் அசுத்தமாகாத பசுமையான பூமியொன்றில் மனிதர்கள் வாழ்கின்றார்கள் எனும் சேதியை அது தாங்கிக் கொள்ளும்......இவ்வாறான காலமொன்று வருமா....அல்லது இதுகூட  நிறைவேற்றப்படமுடியாத காத்திருப்பா!

நம்பிக்கைதான் வாழ்க்கை......காலம் பதில் சொல்லும்!












முகநூல் டயறி


இந்தக் கட்டுரையில் சாடப்படுபவர்கள்  முகநூலில் பெண் நட்புள்ளங்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆண்களே !
------------------------------------------------------------------
வாழ்க்கை பல எதிர்பார்ப்புக்களின் கலவையாக இருப்பதனால் சவால்களும், போராட்டங்களும் அதிகரித்துச் செல்கின்றன இந்நாட்களில் !

மன வழுத்தங்களை  நாமும் சற்று இறக்கி வைத்து, நட்புலகில் வாஞ்சையுடன் சிறு நடைப்பயணம் பயில முகநூலுக்குள் பிரவேசித்தால், அங்கும் சில மன விகாரிகளின் அராஜகம்!

வெறும் பொழுதுபோக்கிற்காக முகநூலைப் பயன்படுத்துவோருமுண்டு. நல்ல ஆரோக்கியமான கருத்துக்கள் மூலம் தம்மைப் போஷிப்போருமுண்டு. இதில் நான் தற்போது இரண்டாவது ரகம்!

முகநூலில் உள் நுழைந்த ஆரம்ப நாட்களில் , இதனை நானும் நேரங்கடத்தும் பொழுதுபோக்கு ஊடகமென்றே கருதினேன். ஆனால் சில கசப்பான விடயங்களை மனம் உள்வாங்கியதில் ஓர்நாள் விழித்துக் கொண்டேன். அன்றிலிருந்து சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு பயணித்த முகநூல் பயணம் இப்பொழுதெல்லாம்  கலையுலகத்தின் சார்பானதாகவே உள்ளது.

நல்ல நண்பர்களை மிகக் கவனமாகத் தேர்வு செய்து முகநூல் பக்கங்களில் இணைத்தாலும் கூட, எப்படியோ சில விஷமிகளும் உள் நுழைந்து விடுகின்றனர்.

பேரலைகள் ஒருபோதும் ஓய்ந்திருப்பதில்லை என்பது போல், குறுகிய நோக்கத்தில் உள் நுழைந்து நண்பர் பட்டியலில் உட்கார்ந்திருப்பவர்களும் ஒரிரு நாட்களில் தம்மை இனங்காட்டி விடுகின்றனர். நட்பு இருக்கை கொடுக்கும் தைரியத்தில் தம் சிதைந்த வக்கிர மனதின் வெளிப்பாடாய் பின்னூட்டம் எனும் பெயரில் எதையெதையோ எழுதி சினமூட்டி விடுகின்றனர். பெண்களுடன் பிறக்காத இவர்கள்!

வேடிக்கையாகச் சொல்வதற்கும், விகாரமாகச் சொல்வதற்கும் வித்தியாசமுண்டு. போலி முகமூடியணிந்து நடமாடுமிவர்களை, அவர்கள் வார்த்தைகள் மூலம் கண்டறிந்தால் கழுத்தறுக்கவா முடியும். முகநூல் தடைப்பெட்டிக்குள் சிறைப்படுத்தவே முடியும். நட்பின் அந்தஸ்தைப் பேணாதோருக்கு இந்தத் தண்டனை கூட போதாதே!

ஏன் இந்தக் குதர்க்கம்?

இத்தனைக்கும் காரணம் நாங்கள் பெண் என்பதாலா? அதிலும் முஸ்லிம் பெண் என்பதாலா! நாங்கள் தவறாக முகநூலைப் பயன்படுத்த நினைத்ததில்லையே!

பெண்கள் முகநூலில் நல்ல விடயங்களைப் பரிமாறுவதில் உங்களுக்கென்ன சிரமம்? பெண்களைக் கேலிப்படுத்தி விளையாட  முகம் தெரியாத முகநூல் நண்பிகள் தான் கிடைத்தார்களா?

நம் மனதின் வெளிப்பாடு வார்த்தைகளே. பண்பான வார்த்தைகளைப் பரிமாறி உறவைப் பலப்படுத்துங்கள். மாறாக யாரோ தானே என்று உங்கள் பெயரை நீங்கள் தாழ்த்திக்கொண்டால், அதன் பாதிப்பு என்றோ ஓர் நாள் உங்களைச் சுற்றி வரும்!

நட்பை நாடி வருகின்ற விண்ணப்பங்களை, நாம் நல்லவர்கள் எனும் அடிப்படையில் தான் ஏற்றுக்கொள்கின்றோம். அறிமுகமாகாதவர்களை நாம் நிராகரித்தால், பல வகையான வெளியுலகின் நடமாட்டத்தை இழக்க வேண்டியிருக்கும்...

பெண்கள் பெயரில் முகநூல் பக்கங்களை போலியாக உருவாக்கி, அதில் தங்கள் குரூரங்களை வெளியிடுவதன் மூலம் சில ஆண்கள்  தங்கள் வக்கிரத்தையே வளர்க்கின்றார்கள். ஒரு பெண்ணை ஒருவன் குற்றம் சுமத்தும்போது அவளை நன்கறிந்தவர்களுக்கு அவ் வார்த்தையின் நம்பகமும், அவனது மனநோயாளித்தனமும் புலப்படும்!

நண்பர்களாக இணையும் நீங்கள் நண்பர்களாகவே பயணியுங்கள். உங்கள் சில்மிஷங்களில் மயங்கி, உங்களில் ஈர்ப்புக் கொள்ளாதோரை விட்டு விலகுங்கள். உங்களுக்குப் பொருத்தமில்லாத நட்பை ஏன் முதுகில் சுமந்து செல்வான். யாரும் கட்டாயப்படுத்தவில்லையே! வேடிக்கை எனும் பெயரில் அடுத்தவர் மனதையறுக்கும், அடுத்தவர் சிறப்பை நறுக்கும் பண்பற்ற வார்த்தைகளை வெளிப்படுத்தாதீர்கள். சட்டத்தின் பிடியில் நீங்கள் சிக்குண்டால் அதன் விபரீதம் பயங்கரமானது.

"உன் நண்பனைக் காட்டு, உன்னைப்பற்றிக் கூறுகின்றேன் " என்பார்கள் ! நல்ல நண்பர்கள் என்ற  எம் எண்ணத்தில் கல்லறை கட்டும் சில மன விகாரிகளால், நட்பைக் கோரி கை நீட்டும் புதிய நட்புள்ளங்களை வரவேற்பதில் தயக்கம் எழுகின்றது...

இப்பொழுதெல்லாம் நான் திருப்தியடையும் ஓர் விடயம், கலையுலகோடு ஈடுபாடுள்ள நல்ல உள்ளங்களை என் நட்புப் பயணத்தில் இணைத்துள்ளேன். இருந்தும் சில சாக்கடைகளும் சத்தமில்லாமல் உள் நுழைந்து தன் கோரப் பற்களை நீட்டுகின்றன...

தவறானவர்களுக்கான பிரவேசம் நிச்சயம் என் முகநூலில் இல்லை. என் பதிவுகள் மூலம் என்னைப்பற்றிய ஒரு எண்ணக்கருவினை என் நட்பினர் பெற்றிருப்பார்கள்...என் இயல்போடு ஒத்தவர்களுக்காக என் நட்புக்கரங்கள் நீட்டப்படுகின்றன..பற்றிப்பிடியுங்கள்....பரிமாறுங்கள் நல்ல பதிவுகளையும் சிந்தனைகளையும்!

இயல்பில் ஒவ்வாதோர் என் முகநூல் பக்கத்திலிருந்து விலகிச்சென்று, உங்களைப் போன்ற கீழ்த்தரமான உணர்வுள்ளோருடன் கூட்டுச் சேருங்கள்!
அதுதான் எல்லோரின் மேன்மையைப் பேணும் வழி...!

நாம் பெண்கள். பலகீனமானவர்கள் எனும் நினைப்பில் எம் வாழ்வோடு விளையாட முனைவோர்க்கு மன்னிப்பென்றுமில்லை. ஆள் தரம், குணமறிந்து பின்னூட்டங்களையும் வார்த்தைகளையும் வெளிவிடுங்கள் !

உலகம் சுருங்கிக் கைக்குள் அடங்கிக் கிடக்கும் இன்றைய நாட்களில் முகநூலில் பிரவேசிப்பவர்கள் வெறும் கைநாட்டுப் பெண்களல்ல... படித்தவர்கள் பெரும்பாலும். தம்மைச் சூழவுள்ள அக்கிரமங்களை வேட்டுவைக்கும் துப்பாக்கி ரவைகளாக மாறவும் கூடியவர்கள்! ஏனெனில் அவர்களை விழிப்பேற்றுவது சில ஆண்கள்தான்!

மனிதர்கள் தவறு விடக்கூடியவர்களே! அவர்களின் தவறுகளை சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் தீர்மானித்து விடுகின்றன. நாம் தவறு விட்டால் பண்போடு சுட்டிக்காட்டுங்கள். ஏற்றுக் கொள்வோம். எமைச் சிதைப்பதாய் நினைந்து வன்முறையேந்தினால் அழிந்து போவது நீங்களே!

உங்கள் (பொறாமைக்)  கோஷங்களால் நிச்சயம் எம் கலைப்பயணம் தடைப்படாது. இன்னும் சிறக்கும். நானே ஆச்சரியப்படுமளவிற்கு என் திறமைகளை எனக்கு இனங்காட்டியவர்கள் எனது சில விரோதிகளே! அவர்கள் இன்னும் என் முகநூல் தடைப்பட்டியலில் உயிரறுந்து கிடக்கின்றனர்.

சிலருக்கு பொது அரங்கில் எதைப் பேசுவதென்று தெரியாமல் நட்பு அந்தஸ்தை இழந்து நிற்கின்றனர். இன்பொக்ஸூக்கும், பொதுப் பின்னூட்டத்திற்கும்  வித்தியாசம் தெரியாத இந்த மனநோயாளிகளை என்ன வென்று சொல்வதாம்!

முகநூல் பெண்களுடன் கேலி விளையாட அவர்கள் உங்கள் வீட்டு முறைப்பெண்கள் அல்ல...விதிவிலக்காக நீங்கள் இளித்தால் உங்கள் பின்னால் ஓடிவரும் சிலரை உங்களுக்காகத் தேர்ந்தெடுங்கள்..

சமூகத்தில் நல்ல முகம் காட்டும் எம்மை விட்டு விடுங்கள் உங்கள் அற்பமான பார்வைகளை எம் மீது வீசாமல்!

இது என்னைப் போன்ற பல பெண்களின் குரல்.. நாங்கள் சிறுமிகளல்ல. பருவக்குமரிகளுமல்லர்.  பருவக்கிளர்ச்சியால் மயங்கிக் கிடக்க!

வாழ்க்கையை அனுபவத்தால் நிறைத்தவர்கள்! உங்கள் நலிவான வார்த்தைகள் கண்டு பயந்து ஒடாத வலிமை பொருந்தியவர்கள்!

இதனைக் குறிப்பிடும் என்னைத் தலைக்கணம் பிடித்தவள் எனக் கருதினால் அது உங்கள் குற்றம். சிலவற்றைப் பாதுகாக்க சில போராட்டங்கள் தேவை!

இன்று என்னுடன் முகநூல் பயணத்தில் இணைந்த  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்ற சகோதரியொருவர் எனக்கனுப்பிய செய்தியொன்று என்னை வெகுவாகக் கவரவே, அந்த செய்தியை இதில் இணைக்க முடிவெடுத்தவளாய் என் ஆதங்கத்தைப் பதிவாக்கி வெளியிடுகின்றேன் என் வலைப்பூவில்! வாசித்துப்பாருங்கள்! அச் சகோதரியின் அனுமதியைப் பெற்றே இதனை நான் இணைத்தேன். இன்பொக்ஸில் நம்பிக்கையினடிப்படையில் பரிமாறப்படும் விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை எனும் கருத்தில் உறுதியாக இருப்பவள் நான்)


இத்தகைய ஆண்கள் நாம் அவர்களை இனங்கண்டு நீக்க முன்னர் தாமாகவே எம்மை விட்டு விலகி, முகநூல் நண்பர் பட்டியலின் புனிதத்தை பேணுவார்களா எனும் வினாக்குறி தொக்கி நிற்க , அக் கடிதத்தைப் பதிகின்றேனிங்கு அதன் செம்மை கலையாதவாறு!


நண்பி எழுதியுள்ளார்.................-


சோதரி, முகநூலில் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டுமெனின் முதலில் நாங்கள் எம்மை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமான கால கட்டமாக இது உள்ளது. முகநூலுக்கு நான் புதிது. இணைந்த ஒரு சில வாரங்களிலே முகநூலின் போலிமுகங்களை இனங்கண்டு கொண்டேன். பெரும்பாலும் பெண்கள் பெயரில் உள்ளவர்கள் ஆண்களாகவே உள்ளார்கள். இவர்களை ஜீரணிக்க முடியவில்லை. 13 பேரை நான் நீக்கிவிட்டேன்.



உங்கள் பெயர் எனக்குப் பரிச்சயமானது. நீங்கள் ஒரு பெண் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடிகின்றது. உங்களைப் போன்ற சமூக ஆர்வமுள்ள பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்த நான் ஆசைப்படுகின்றேன்......................


கடிதம் தொடர்கின்றது..................................


இத்தகைய குறுகிய மனம் படைத்த ஆண்கள்  இனியாவது திருந்துவார்களா... இன்றும் இவ்வாறான ஒருவரை இனங்கண்டு அவர் என் முகநூலைப் பார்வையிடாதவாறு தடைப்படுத்தினேன். சிறு வார்த்தைகள் கூட மனதை புண்படுத்தி நட்பை முறிக்கும்!


இந்தப் பெண்ணடிமைத்தனப் பிரதிநிதிகள் தம் கோஷங்களைத் தவிர்ப்பார்களா. நான் ஓர் ஆசிரியை. என் பாலின சகோதரிகளுக்கும் சேர்த்து குரல் கொடுப்பது எனது கடமையும் கூட!

நல்ல என் நண்பர்களை மதித்திடும் அதே நேரம், பாம்பின் விசமாகக் கருதி தீயவர்களை வெறுக்கின்றேன் !

இவர்களை என்னவென்று சொல்வதாம்...!

மனநோயாளிகளா....ஆணாதிக்கக்காரர்களா.......வெருளிகளா........இல்லை நல்ல வார்த்தைகளைப் பேசிப் பழகாதவர்களா...........

எதுவோ ஒன்று!




2012/08/17

மழை நின்ற ஓர் பொழுதில்


காலை பெய்த சிறு மழையில்
சாலையோரம் வியர்த்திருக்கும்.!

வானவில்லுச்சாறும் கொஞ்சம்
வீதியோரம் சிதறிச் சிரிக்கும் !

வண்ணம் தொலைக்கா வண்ணப்பூச்சி
சிறகடித்து தம் மீரம் விரட்டும் !

முன்றல் நிரப்பும் மண்வாசனை
மூச்சுக்காற்றின் பேச்சாய் நிரம்பும் !

வீட்டோரம் நாட்டமிட்ட சின்னச்சிட்டு
வெட்ட வெளியில்   பறந்திடத் துடிக்கும் !

மெல்லக் குடை விரிக்கும் குள்ளக்காளான்
அந்தரித்து காற்றில் சுற்றிப் பார்க்கும்!

தண்ணீர்ச்சிறையில்  வீழும் பூவோ..
வண்ணமிழந்து சகதியாய் முகங்காட்டும்!

எங்கிருந்தோ சங்கூதும் கருந்தவளை
இங்கிதமின்றி நிசப்தத்தை விரட்டும்!

இத்தனைக்கும் நானோ........!!

வாசிக்கத் தொடங்குவேன்.........
ஈரம் சொட்டும்  இயற்கையழகை வாஞ்சையாய் !


-Jancy Caffoor -

எல்லோரும் கொண்டாடுவோம்


விண்முகட்டில் வீழ்ந்து கிடக்கும்
வெண்ணிலாக் கீறலொன்று
கார்க் கொன்றல் மிரட்டல் கண்டும்
சிரிக்கும் லேசாய் மெல்ல
ஷவ்வல் பிறையாகி!

நால் திங்கள் நடைபயில
நூலிடையாய் "ஷவ்வல்" எட்டிப்பார்க்க
வேலியிட்டுத் தடுத்த  உண்ணலும் பருகலும்
இறையாணையால் மீளெழுந்து எமை நோக்க
மறைந்துதான் போகும் நோன்பும்
மாண்பு பல தந்துவிட்டே!

நோன்புச்சாலை வழியோரம்
சிதறி வீழ்ந்த  நம் தவறு!
கதறியழுதே துடித்திடுகையில்!
எமைக் காக்கும் கேடயமாய்
தழுவிக் கிடக்கும் "பித்ர் தர்மம்"  !

உதரத் தசையீரங்களில்
உலர்ந்து கிடக்கும் ஆகாரங்களும்
தொண்டையோர வெளிதனில்
வற்றிக் கிடக்கும் நீர்ச்சுணைகளும்
மீண்டும் சிலிர்த்துத்தான் தளிர்த்திடவே
வந்துவிடும் "ஈதுல் பித்ர் "நம்மருகே!

வறுமை கொண்ட ஆத்மாக்கள்
உருக்குலைந்தே வீழ்ந்து கிடக்கையில்
வசந்தமாய் எம் "ஸதக்கத்துல் பித்ர்"  - அவர்க்கே
சுகந்தத்தை மெல்ல நெருடிக் கொடுக்க
பேதம் துறந்து புன்னகைக்க பெருநாளும்
வாசம் வீசி வந்திடுமே!

சாமம் கடந்து பொழுதும் புலர்ந்து
ஆதவன் மெல்ல வானேறுகையில்
தென்றலின் நலனோம்பலும்
முன்றல் வந்து எட்டிப் பார்க்க
வெட்ட வெளிகளும் மடி தந்திடும்
அல்லாஹ்வைத் துதித்திடும் பள்ளிகளாய்

நல்லமல்கள் செய்தோர் தம்
பேதமை துறந்து தக்பீர் முழக்கிட
வல்லோன் புகழ் வசனங்களில்
எல்லோர் வார்த்தைகளும்  உறைந்தே கிடந்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும்  சந்தன வாசம்!

"இரண்டு ரக்அத்தில்"  இறைவன் இறைஞ்சி
மறைவேதமாம் திருக்குர்ஆனுமோதி - நம்
மூச்சுக்காற்றிலே பரக்கத்தைச் சுமந்து
முழு வாழ்வுமே ஒளியினைப் பொருத்த
வந்திடும் பெருநாளும்
தந்திடும்  சந்தன வாசம் !

புத்தாடையும் பெருநாள் காசும்
புளாங்கிதமாயுண்ணும் பலகாரங்களும்
உறவுகளின் சந்தோஷிப்புக்களும்
இறைவனின் அருள் மணமும் - எம்
இல்லங்களை நிறைத்திடவே
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம்!!

ஈகைத் திருநாளில் கறையிடரகற்றி
உள்ளமதை உவப்பேற்றி
பாசத்துடன் எமைத் தரிப்போருக்கே
தேன் சுவை விருந்தும் பரிமாற
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம்!!

உறவுகளின் வாழ்த்துச் சரத்தில் - எம்
மனைகளும் பூத்துச்  செழித்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் - தன்
சிறப்பை தரணிக்குணர்த்தியே

என்னைச் சூழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நட்பினருக்கும் எனதினிய நோன்புப் பெருநாள் (முன்கூட்டிய) வாழ்த்துக்கள்
ஈத் முபாரக்

-Jancy Caffoor -

2012/08/16

வாழ்க பல்லாண்டு




பெண்ணெணப் பிறந்திட்ட போதும்
விண் தொடும் காற்றாயுன் சேவை.......!
ஊரெங்கும் கரமசைத்து வாழ்த்தும் - நீ
பார் போற்றும் வைத்தியக் கலாநிதியென !

பருவ வாழ்வில் மருத்துவம் சுமந்து
அறுவைச் சிகிச்சைக் கூடமேயுன் நிழலாக .- உன்
சிறுபராயத்து வழிகாட்டி நானானதில்
பெருமைதானெனக்குமென் தங்கையே!

உன் மனசோரம் கனவுகள் கோர்த்து
திருமாங்கல்யமுன் நெஞ்சிலேற்றி - கால
வசந்தங்கள் வாழ்த்தும் சொல்ல
வந்ததேயுன்  திருமண நாளும்!

சிறகடிக்கும்  நாட்காட்டியும்
சீக்கிரமாய் நம்மிடையே பறந்தோட..........
வந்ததோ  நாலாண்டும் நொடிப் பொழுதில்
தந்ததேயுன்  வசந்த ஞாபகங்களை!

கார்க் கொன்றல் சாறு பிழிந்தே
என் மனவெளியில் ஈரம் பதிக்க.- உன்
உலராத திருமண உலாவும்
புதிதாய்ப் பூத்தவுன்னினைவுகளும்..........
உணர்வுக்குள் உயிரூட்டிக் குலாவும்
இன்றைய தருணங்களாய்...........
அன்றைய நகர்வுகளை!

உறவுகள்  உயிருரசி மகிழ்விலாட
நறவாயுனக்கு வாழ்க்கைத் துணையும் சேர.....
அறம் செழிக்கும் இல்லறச் சோலையிலின்று
வரவாய் பூத்துக்குலுங்கும் ஈர் செல்வங்கள் !

நேசம் நிரப்பும் உறவுகள் அரவணைப்பும்.........
காதலில் வருடுமுன் கணவன் நெகிழ்வும்
பாசத்தில் வருடும் ஈர் மழலைகளும்
கரகோஷிக்கும்  இன்பங்களாய் என்றுமுன்னுள்!

இறையோன் தந்த இத்திருமண வாழ்வில்
கறை தரும் இடர்தனை என்றுமகற்றி......................
மறை நெறி வழி நின்றேயுன் குடும்பம்
நூறாண்டு வாழ வாழ்த்தும் ...........
உடன்பிறப்பாய் நானின்று!

வலைப்பூவில் நீயின்றமர்கின்றாய் - என்
விலைமதிப்பற்ற அன்பாலென் சோதரீயே..........

என் சகோதரி ஜனொஸ் சதாத் அவர்களின் 4வது ஆண்டு திருமண நாள் ஞாபகங்களை கவிதையால் பகிர்கின்றேன்
( 2012. 08.16) 


       dear ( Doctor ) Janoss Sadath (sister )


"Wishing you all the health and happiness 
in this world on your wedding"










விடைபெறும் ரமழானே !



என் சின்ன வயது நோன்பின் ஞாபகங்களினூடாக , யாழ்ப்பாணம் சோனகதெரு இப்பொழுது என் கண்முன்னால் எட்டிப்பார்க்கின்றது. நோன்பென்றாலே வசந்தத்தை வாசமாக்கி எம்முள் பரவச்செய்து நிற்கும் அந்த நாட்கள்....

சோனகதெருவில் வீதிக்கு வீதி பள்ளிவாசல்களுள்ளன. "ஸஹர்" பொழுதுகளில் பள்ளிவாசல்களிலிருந்து ஒலிபரப்பாகும் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையின் விசேட  ஒலிபரப்புக்களும் அறிவிப்புக்களும் இன்னும் மறக்கமுடியாமல் மனசுக்குள் மயங்கிக் கிடக்கின்றன. அது மாத்திரமில்ல இந்தியா நாகூரிலிருந்து வருகின்ற பக்கிரிசாக்கள் ஸஹர் பொழுதில் மேளம் தட்டி எம்மை எழுப்பி நிற்கும் அந்த நிகழ்வுகளும் என் சின்ன வயது நெஞ்சுக்குள் மகிழ்வோடு பதியப்பட்ட தருணங்கள்.............!

நோன்பு ........................!

இஸ்லாத்தின் உன்னதமான கடமைகளுள் ஒன்று. நாம் இறைவனுடன் ஆன்மீகத் தொடர்பை நோன்பின் மூலம் ஏற்படுத்தி, இறைவனின் அன்பையும் அருளையும் பெற்று அம் மனத்திருப்தியை புனித "ஈதுல் பித்ர்"  எனும் நோன்புப்  பெருநாளில் வெளிப்படுத்துகின்றோம்..

அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல் பருகாமல் மட்டுமல்லாது, இறைவன் தவிர்க்கச் சொன்னதைத் தவிர்த்து அவனின் திருப்தி நாடி, நாம் பிடிக்கும் நோன்பானது, நல்ல பண்புகளையுடைய மனிதர்களை உருவாக்குவதன் மூலம் சமூகத்திற்கும், அதன் அங்கத்தவனாகிய மனிதனுக்கும் பாதுகாப்பளிக்கின்றது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் நோன்பை ஓர் கேடயம்" எனக் குறிப்பிட்டார்கள்.

நோன்பானது அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையிலான ஓர் தொடர்பு............நிய்யத்தை ஒருவர் வாய்மொழிந்த மறுவிநாடியே , இறைவன் தன்னை அவதானித்துக்கொண்டிருக்கின்றான் என உறுதியாய் நம்பி, அன்றைய பொழுதின் நோன்புக்கான வேளைகளில் தன் இச்சைகள், உணவுகள் அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிவிடுகின்றான். எனவே நோன்பு உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாய் அமைகின்றது!

நோன்பானது தொடர்ச்சியாக இறையச்சம், திருமறையின் வசனங்கள், நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி, சட்டதிட்டங்களைப் பின்பற்றும் பயிற்சியைக் கொடுக்கின்றது. இந்தப் பயிற்சி ஒருமாதம் வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டாலும் கூட வாழ்க்கை முழுவதும் நீடிக்கின்ற சிறப்புரையாக அமைகின்றது..

அத்துடன் நோன்பானது அன்புடன் ஒருவர் பசியுணர்ந்து, ஏழை வாழ்வின் துக்கம் பகிர்ந்து ,அவர்கள் உணர்வை உணர்வதன் மூலம், ஏற்கனவே அந்தஸ்து மாயையுடன் விரிக்கப்பட்டிருந்த ஏழை, பணக்காரன் எனும் பேதத்தைக்  களைத்து , சமத்துவத்தைப் போற்றுகின்றது. 

அத்துடன் சகோதர ஒற்றுமையை மேம்படுத்த ஏழைகளுக்குதவும் வழிமுறைகளையும் நோன்பு சொல்லித்தருகின்றது. "ஸகாதுல் பித்ர்" எனப்படும் ஏழைகளுக்கான பித்ராவையும் வழங்க நம்மை வழிப்படுத்தி நிற்கின்றது. நோன்பை விட்டவர்களும், ஏதும் குறையையுணர்ந்தவர்களும் இப் பித்ராவை வழங்க வேண்டும்.

அதுமட்டுமல்ல நோன்பானது, நம் உடலாரோக்கியத்திற்கும் அத்திவாரமாய்த் திகழ்கின்றது. ஒருமாத ஓய்வின் மூலம் உடலுறுப்புக்கள் சீராகத் தொழிற்பட வழியேற்படுகின்றது.

இதனையே நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்
"நீங்கள் நோன்பு நோற்பதன் மூலம் சுகதேகிகளாக மாறிக் கொள்ளுங்கள்"

இஸ்லாம் ஒவ்வொரு தனி மனிதனையும் அவதானத்துடனும், அனுதாபத்துடனும் நோக்குகின்றது. புத்திசுவாதீனமற்றவர்கள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் , முதியோர், கடும் நோயாளிகள் , நீண்ட தூர பிரயாணிகள் என்போர் நோன்பை விடுவதற்கான அனுமதியையும் இஸ்லாம் தந்து நிற்கின்றது.

புனித நோன்பின் மகுடமாகவிருக்கும் நாட்களுள் "லைலதுல் கதிர்" இரவுமொன்றாகும். அல்குர்ஆன் , நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டது இவ்விரவிலேயே ஆகும்.இது ரமழான் மாதத்தின் கடைசி நாட்களில் வரும் இரவாகும்.

 "லைலதுல் கதிர் ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தில் ஒற்றையான இரவுகளில் இந் நாளை எதிர்பாருங்கள் "

என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

ஆனால் என் சிறுபராயமுதலின்று வரை நோன்பின் இருபத்தேழாம் நாளன்றே லைலதுல் கதிர் இரவாகக் கொள்ளப்பட்டதாக எனக்கு ஞாபகம்..

(இந்த நாட்கணிப்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதை நான் இணையத்தில் வாசித்துள்ளேன். இது சரியா, தவறா என நான் வாதவிடவில்லையிங்கு..... ஆனால் என் வாழ்வில் கடந்து சென்ற நாட்களில் 27ம் நாளை லைலதுல் கதிராக தியானித்தது ஞாபகம். )

சிறுபராயத்தில் அன்றைய தினவிரவில் கைகளுக்கு மருதாணியிட்டும் உறக்கம் கலைத்து , நல்லமல்கள் புரிந்ததும் இன்றுபோல் உலர்ச்சியின்றி ஞாபகத்திரையிலோடுகின்றது...

மனிதனொருவனின் முழு வாழ்விற்கும் தேவையான நன்மைகளை அல்லாஹ் இந்த இரவினிலேயே இறக்கி வைத்துள்ளான்.


" மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். அகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு என்றால் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அதில் மலக்குகளும் ஆன்மாவும் (ஜிப்ரீல்) தம் இறைவனின் கட்டளைப்படி சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். அந்த சந்தியானது விடியற்காலை வரை இருக்கும்." (97:1-5)


எனவே நமக்கு அதிகம் நன்மை தரும் இந்த இரவை நன்மையான செயல்களுடன் கழிக்க வேண்டும். குர்ஆன் ஓதுதல், தொழுதல் போன்றவை நம்மை இறைவன்பால் நெருங்க வைக்கும்.

இத்தகைய சிறப்புமிகு ரமழான் மாத நோன்பு நிறைவுற்ற பின் ஷவ்வல் மாத தலைப்பிறை தென்படும். அன்றைய தினம் ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் நம்முள்ளத்தை நீராட்டிச் செல்கின்றது.

நாம் செய்கின்ற ஒவ்வொரு நற்செயல்களும் நம்மை மறுமைக்குள் உள்ள நிம்மதியான அழகுமிகு வாழ்க்கைக்குள் இட்டுச் செல்கின்றது. ரமழான் மாதம் இன்னும் ஓரிரு நாட்களில் எம்மை விட்டுச்செல்லவுள்ளது.  இத்தருணத்தில் எம் தவறுகளுக்கும் இறைவனிடம் கெஞ்சி பாவ மன்னிப்பையும் பெற்றுக் கொள்வதுடன் ,அவனருளையும் ஏந்திக்கொள்வோமாக!

இதனை வாசிக்கும் என் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்

                                       ஈத் முபாரக்



2012/08/15

விஷமிகள்


முகநூல் தொலைநூல்.......!
தொலைநூல் தொல்லைநூல்   !!

கலைப் பயணத்தில் தடைக்கற்களாய்
சில களைகள்  வழிபார்த்திருக்க..........
தறுதலைகளை அழித்தெடுக்கும் நேரமிது
அறந்தோய்ந்த வாளுக்கேயினி பேச்சு!

திருமறையைப் புறந்தள்ளி - பிறர்
வருத்துமிந்த கறுப்பர்கள் .............
அறம் பிடுங்கும் அரக்கர்கள்தான்
வேரறுத்தலே தகுமாகும் !

ஜொலி தேடி நிதம் நிதமே- பிறர்
வேலிதாண்டும் வெள்ளாடுகளை..,,,,
அழித்திடல் மனித தர்மமென்பேன்
பழுதடையா பெண்ணியம் காத்திடவே!

இளிப்பார் வெறிகொண்டு - முகம்
சுளித்திட்டால் பெண்ணவள் ..........
பழி சொல்லியே ஆர்ப்பரிப்பார்
குள்ளநரியாய் உருமாறி !

வாழவின்னும் வக்கில்லைதான்
தொழிலேதும் தேடவில்லைதான்......
ஆழிக்கடல் பேரலையாய் ஆவதென்ன........
எழிலாம் தாய்மையைச் சிதைப்பதென்ன!

போலி முகமூடிதனையணிந்தே...........
கேலி செய்வார் பெண்மைதனை மிதித்தே!
கோழையாய் மிரண்டோட மாட்டேன் -என்
அழையா விருந்தாளி உமைக் கண்டே!

விசம் பிடுங்க வன்முறை தேவையில்லை
கசப்பில்லா அஹிம்சையொன்றே போதுமெனக்கு!
வேசமிடும் கோஷங்களும் தேவையில்லை
சாபமிடும் சத்தியங்கள் போதுமெனக்கு!

கத்தரித்தால் மீளத் தளிர்க்குமென்று
சத்தமின்றி முகநூல் "புளக்" கிலிட்டால்................
நித்தமெம்மை இம்சித்தே வெறி தணிக்கும்
சித்தமில்லாக்  காவாலிகளிவர்கள்!

சாது மிரண்டால் காடு கொள்ளாதென
சூதுமிகு இவரறியார்.........தம்மை..
ரத்தமின்றி தலையறுக்கத் தாமே
கத்தி தரும் காட்டேறிகளிவர்கள்!

எச்சரிக்கைகள் தேவையில்லை- இந்த
எச்சில் விழுங்கும் பிசாசுகளிற்கே!
தாய்மைக்குள்ளும் காமந்தேடுமிவர்கள்
காய்ந்த மணற்குன்றுகள்

தம் விளையாட்டுப் புத்திதனை
விபரீதமாய் நகர்த்தும் போக்கிரியிவர்கள்...........
சட்டவேலிக்குள்ளும் நுழைந்திடாத
எட்டப்ப துரோகிகள்!

வீடு தேடி வந்தென்............
விரல் சுற்றும் நாகங்களே !
நெஞ்சுரங்கொண்டும் நகம் பிடுங்கும் நான்
 மகுடியல்ல ...........இடி!

இருபது கழியவில்லையின்னும்
இளைப்பாற  பிறர்  நிழலாம் !
பழி சொல்லியே பழகிட்டார்- அடுத்தவர்
விழிக்கண்ணீர் சுவைத்திடவே!

கழி தின்னுமிந்தக் கழுகுகள்
நாளை யிறை சந்நிதானத்தில் ......
கவலையோடு தரித்து நிற்பார்
நீர்த்திவலையாய்க் கண்ணீர் சுரந்து!

அழுதிட மாட்டேன் ......ஆரும்
வாழ விடாமல் தடுத்திட்டால்.......
அழித்திடுவேன் போராளியாகி - என்
அழகான  தேசம் மீட்கவே!

பெயரின் வீரம் கொண்டு .............
புறப்பட்டேன்  வளிக்காற்றாய்  !
காவு கொள்வேனந்தக் காளான்களை
சாவு மணியும் என் கரந்தனில்!

எழுச்சியென் பேனாவிலுண்டு........
எழிலென் மனசிலுண்டு !
விழலில் சிந்துமந்த நீர்ச்சுணையை
கழுவியே விரட்டுவேன் - அந்த
வல்லோன் துணையுடனே!

ஜன்ஸி கபூர் 

2012/08/14

அஜந்தா இணைப்பு


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் அஜந்தா எனும் ஊரில் உள்ள குகையில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்களே அஜந்தா ஓவியமெனப்படுகின்றது.

இவை கி.மு 200 முதல் கி.பி 650 வரையிலான காலப்பகுதியில் வரையப்பட்ட பௌத்த மதக் கொள்கையை முதன்மைப்படுத்தி வரையப்பட்ட ஓவியங்களாகும்.

குகையின் மீது களிமண்ணும் சாணியும் கலந்து கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பல வண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக் கொண்டு வரையப்பட்டவையாகும். இவை தாவர வர்ணங்களல்ல என்பதால் மங்காதிருக்கின்றன. எனினும் இங்குள்ள 5 குகையோவியங்கள் மங்கியுள்ளன.

முன்பக்கத்திற்குச் செல்ல

- Ms. Jancy Caffoor -



சித்திரம் பேசுதடீ


மனிதனது அறிவின் வெளிப்பாடாக அறிவியற் கலைகளும், உணர்வின் வெளிப்பாடாக அழகியற் கலைகளும் தோற்றம் பெற்றுள்ளன. ஓவியம் அல்லது சித்திரம் என்பது அழகியற் கலையாகும்.

ஓவியம் எனக்கு மிகவும் பிடித்தமான கலை. என் தந்தை மிகச்சிறந்த ஓவியர். தனது ஆசிரியர்ப் பயிற்சிசாலையில் அவர் வரைந்து தயாரித்த ஓவிய ஆல்பத்தினைப் புரட்டிப் புரட்டி பார்த்து ரசித்தே, என் பிஞ்சு விரல்கள் அன்றைய நாட்களில் பலதடவைகள் பூரித்திருக்கின்றன. அந்தப் பரம்பரை வழிக்கடத்தலால் எங்கள் குடும்பத்தில் நானும் என் சகோதரிகளும் பாடசாலை நாட்களில் ஓவியத்தில் மிக விருப்புடன் வரைந்துமுள்ளோம். அந்த ஓவிய ஈர்ப்பு அதன் வரலாற்று நகர்வுகளையும் என் வலைப்பூவில் விருப்புடன் பதிக்கின்றதின்று.

உலக வரலாற்றில் கிரேக்கர். எகிப்தியர், உரோமர் , சீனர் , இந்தியர் போன்றே முஸ்லிம்களும் கலைத்துறையில் தம் முத்திரை பதித்துள்ளனர். இஸ்லாம் மனித, மிருக உருவங்கள் வரைவதைத் தடைசெய்வதால், அவர்களின் கவனம் அரபு எழுத்தணிக்கலையில் சிறப்புற்று விளங்கியது.

"அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான்" எனும் ஹதீஸின் எண்ணக்கரு இக்கவின்கலைக்கு ஆதாரமாகக் காணப்படுகின்றது. அல்குர்ஆனாலும், ஸூன்னாவாலும் தூண்டப்பட்ட இவ் எழுத்தணிக்கலை முஸ்லிம்களின் அழகுணர்ச்சியை மேவிநிற்கின்றது எனும் முகவுரையுடன்
ஓவியத்தின் மீதுள்ள என் ரசிப்பை எழுத்தாக்கி நகரவிடுகின்றேன் நளினத்துடன்!

ஓவியம் என்ற சொல்லானாது " ஓவம்" எனக் குறிப்பிடப்பட்டு, சங்க காலத்தில் செய்யுள்கள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ளன. இது அக்காலத்தில் ஓவியம் வளர்ச்சியடைந்துள்ளதை நிருபிக்குமொரு சான்றாகும்.

ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்
              (பதிற்றுப்பத்து.88 : 28)
ஓவத் தன்ன இடனுடை வரைப்பின்
              (புறநானூறு. 251 1)
வத் தன்ன வினைபுனை நல்லில்
              (அகநானூறு. 98 11)

நற்றிணைப் பாடல் (118:7) ஒன்று ஓவியரை 'ஓவ மாக்கள்' என்கிறது. 

மதுரைக் காஞ்சியோ, ஓவியர்களை பின்வருமாறு கூறுகின்றது எக்காட்சியினையும் தமது ஓவியத்திற்குள் கொண்டு வந்து ஒப்பிட்டுக் காட்டுவர்; ஓவியர்கள், எதனையும்  நுட்பமாக உணர்ந்தவர்கள். ஆழமான நோக்குடையவர் என்று கூறுகிறது. 
இதனால் 
அவர்களைக் 'கண்ணுள் வினைஞர்' என்று பெயரிட்டு அழைக்கிறது அது!

உண்மையில் ஓவியர்கள் தாம் வரையும் ஓவியத்தினூடாக காட்சிகளின் உயிர்ப்புத்தன்மையை நம் கண்ணுக்குள் ஊடுகடத்தி நிறுத்தி வைப்பவர்கள் என்பதை அக்கால மக்கள் ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடே  மேற்கூறப்பட்ட செய்யுளின் கருத்தாக அமைகிறது.


ஓவியர்களின் எழுதுகோல்கள் தூரிகை எனப்படும். சங்க காலத்தில்  இத்தூரிகையை  நற்றிணைப் பாடலொன்று " துகிலிகை"  என அழைக்கின்றது. இதன் கருத்தாவது , பாதிரி மலரானது அரக்கு மூலமாக இறக்கை ஒட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய
துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி (நற்றிணை. 118)


ஓவியமானது தூரிகையால் முதலில் இரேகைகளால் வரையப்படும். இவ்வாறு வரையப்படும் வர்ணங்கள் தீட்டப்பட முன்னர் காட்சிப்படுத்தப்படும் இவ்வோவியங்களை சங்ககாலப் பாடல்கள்  "புனையா ஓவியம் " என விளித்துள்ளன.


சங்க காலமென்பது காதலொழுக்கத்தை மேவிய காலமாகும். இக் காலத்தில் காதலனொருவன், தன் காதலை தலைவி ஏற்காவிட்டால்,  அவள் உருவத்தை புனையா ஓவியமாக வரைந்து, அதனை பனை மடலில் செய்யப்பட்ட குதிரையில் அமர்ந்து ஊருக்குக் காட்சிப்படுத்தி முறையிடுவான்

நாமின்று ஓவியங்கள்  வீடுகள், கடைகள், காட்சிசாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். சங்ககால மக்களும் தாம் வரையும் ஓவியங்களை  வீடுகள், பொது இடங்களிலும், மன்னர்கள் தமது அரண்மணை , அந்தப்புரங்களிலும் காட்சிப்படுத்தினார்கள்.

"சித்திர மாடத்துத் துஞ்சிய மணிமாறன் " என பாண்டியன் மன்னன் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவதற்குக் காரணம் அவர் தனது தங்குமிடத்தில் நிறைய சித்திரங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்.


பாண்டிய மன்னரின் அரண்மனை அந்தப்புரச் சுவர்களிலும் அழகிய மலர்க்கொடிகளினாலான சித்திரங்கள் வரையப்பட்டிருப்பதாக  "நெடுநல்வாடை  -  ( 110  - 114  )  யிலுள்ள செய்யுட்பாக்கள் குறிப்பிடுகின்றன.


17ம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரையிலுள்ள சுவரோவியங்கள்

அவ்வாறே சோழர் மன்னரின் அரண்மனைச் சுவரின் வெளிப்புறத்திலும் பல ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. சாலைகளில் செல்லும் தேர்கள் எழுப்பிய புழுதிகள் வெந்நிற அச் சுவர்கள் மீது படிந்து சாம்பலில் புரண்ட யானையொன்றின் தோற்றத்தை ஏற்படுத்தியிருந்ததாக பட்டினப்பாலை  பாக்கள் அழகுற விளக்கின்றன.












சோழர்கால ஓவியங்கள் பாண்டி மாதேவி அமர்ந்திருந்த அந்தப்புரக் கட்டிலுக்கு மேலே இருந்த விதானச் சுவரில் ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன. இவற்றில் மேட இராசி முதலிய இராசிகளின் உருவங்கள் இருந்தன. மேலும் பாண்டியரது குல முதல்வனான சந்திரனோடு அவனது காதல் மனைவி உரோகிணி சேர்ந்திருக்கும் காட்சியும் தீட்டப் பட்டிருந்ததென நெடுநல் வாடை கூறுகிறது.


அவ்வாறே மதுரைக்கண்மையிலுள்ள திருப்பரங்குன்றத்திலுள்ள "எழுத்து நிலை மண்டபத்தில்"  ரதி, மன்மதனின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன என பரிபாடல் விளக்குகின்றது.

                                  மன்மதனும் ரதியும்
அரசர்களின் சிந்தையையே வென்ற ஓவியங்கள், சாதாரண நம்மனங்களைச் சுண்டியிழுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஓவியங்களின் வரலாற்றை விழிகள் மேயும் போது பல சுவாரஸியமான விடயங்களுடன் நாம் ஒருமித்து விடுகின்றோம்.

ஓவியத்தின் உரிமையாளர் ஓவியராவார். ஓவியர் என்பவர் தன் உள்ளத்தில் நிழலாடும் நகர்வுகளை தூரிகை வழியாக உயிர்ப்பிக்கின்ற கலைஞராவார். ஓவியர் தன்னகத்தே கொண்டுள்ள கலைத்துவம் படிந்துள்ள அருந்திறன் கருத்துப்புலப்படுத்தலோடு வெளிப்படுத்தப்படும் போது அவ்வோவியம் உயிர்ப்படைகின்றது. அழகான உயிரோட்டமுள்ள எந்தவொரு  ஓவியமும் என் ரசிப்பைத் தொட்டு நிற்கும்.


ஓவியத்துறையானது 16ம் நுற்றாண்டிலிருந்து இன்றுவரை பரிணாமவளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவுகளை நம்முன்னால் நிலை நிறுத்திய ஓவியர்கள் பலர். அவர்களுள் சிலராக ரவீந்திரநாத் தாகூர்,  ரவி வர்மா, மைக்கல் ஏஞ்சலோ, எம்ரான் வான்கோ பிக்காசோ  என்போரை இப்பட்டியலில் இணைத்துள்ளேன்.


                   லியாடோனோ டாவின்சி மொனோலிசா


                             இந்திய ஓவியர் ரவிவர்மாவின் ஓவியம் -
                            அர்ச்சுனனும் சுபத்திரையும் தனித்திருத்தல்


    பிக்காஸோ 


                       மைக்கல் ஏஞ்சலோவின் ஓவியமொன்று

சிகிரியா, அஜந்தா (அழுத்தி இதனைப் பார்க்க ) குகை ஓவியங்கள் இன்றும் ஓவியத்தின் மகிமைகளை உலகிற்குப் பறைசாற்றும் சிறப்புமிகு குகை ஓவியங்களாகும்.பழைமையான குகை ஓவியமானது பிரான்ஸ்- ஸ்பெயின் எல்லையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சான் ஓவியங்களாகும். இங்கு மிருக உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சான் மக்களின் தலைவனான மருத்துவன் மிருகங்களின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து வலிமை பெற்று அவ்வலிமையால் , தன் குடியானவர்களை காக்கும் செயற்பாடுகளின் பின்னனியில் இவ்வாறான மிருகங்களின் உருவங்களை அவர்கள் விரும்பிப் பொறித்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் பல தகவல்களை நமக்கு முன்வைக்கின்றனர்.


                  சீகிரியா குகை ஓவியம் ( இதனை அழுத்திப் பார்க்க)


                                                    அஜந்தா குகைச்சிற்பங்கள்


                        அஜந்தா குகை ஓவியமொன்று

குகையோவியங்களுக்குப் பிறகு ஓவியக்கலை ஆசிய, மற்றும் எகிப்தில் நன்கு வளர்ச்சி பெற்றது.

எகிப்தியர்கள் தமது ஓவியங்களை கணிதசூத்திரத்தைக் கொண்டு வரைந்தார்கள். இவை இருபரிமாண முறையில் வரையப்பட்ட ஓவியங்களாகும். இவர்களின் ஓவியங்களில் தலை,கால் எல்லாம் பக்கவாட்டில் வரையப்பட்டுள்ளது. தசை, விரல்கள் காணப்படாது. பொருட்கள் ஒரே சீரான அளவில் காணப்படும். இதில் உயிரோட்டத்தைக் காணமுடியாது. எல்லோரின் முகங்களும் அந்தஸ்து, பால் வேறுபாடின்றி ஒரே விதமாகவே காணப்படுகின்றன.
எகிப்தியர் ஓவியம்
மூவாயிரம் வருடமாக எகிப்தியர் ஒரே விதமான ஓவியங்கள் , சிற்பத்தையே வரைந்தார்கள். இதனால் இவர்களின் ஓவியத்திலும், மெசப்பதேமியர்களின் ஓவியத்திலும் மலர்ச்சி பெறப்படவில்லை. ஏனெனில் இவர்களின் ஓவியத்தில் கற்பனையே இருந்தது.

எகிப்தியர்களை அடியொற்றி ஓவியத்தினுள் நுழைந்தவர்கள் கிரேக்கர்கள் ஆவார்கள். இவர்கள் தமது  கண்களால் உள்வாங்கியதை தம் ஆத்மாவுக்குள் செருகி உயிரோட்டமுள்ளதாகவும், ஒளிமயமானதாகவுமுள்ள ஓவியங்களை வரைந்தார்கள். அங்க  அசைவுகளும், தசை, நரம்பமைப்புக்களும் துல்லியமாகத் தெரியும் விதத்தில்  நுட்பமாக அவதானித்து வரையப்பட்டது. இயற்கையாக உள்ளதை உள்ளபடியே தந்தவர்கள் இக்கிரேக்கர்களே.. !



ஓவியத்திற்கான விதி, எடை, சமனிலை என்பவற்றை நிர்ணயித்து அழகான ஓவியங்கள் பிறப்பெடுக்க கிரேக்கர்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் அளப்பரியது. இவர்களது ஓவியங்கள் முப்பரிமாணத்தைக் காட்டி நின்றன. இங்கு நரம்பு, தசையமைப்புக்கள் வெளிப்படுத்தப்படுவதால் உயிர்ப்புத்தன்மையை நாம் காணலாம்



                                     கிரேக்க ஓவியம்
யதார்த்த வாழ்வியலின் செயற்பாடுகள், இயற்கைக் காட்சிகள், வரலாற்றுச் சம்பவங்கள், உயிரினங்கள், இறைவனின் அற்புதப் படைப்புக்கள், திருவிழாக்காட்சிகள், சமய நிகழ்வுகள், கடவுளின் உருவம், அரச வாழ்வியலின் பிரதிபலிப்புக்கள் போன்ற பலவற்றுடன் தொடர்புபட்டே பெரும்பாலும் ஓவியங்கள் வரையப்படுகின்றன.        வரையப்பட்டுள்ளன.


இவ் ஓவியங்களில் மக்களின் கலை, கலாசார, பின்னணிகளும், சமூக நலன்பாடுகளும் , அரசியலீடுபாடுகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.


                                                    ராஜஸ்தானியப் பெண்கள்
ஓவியமானது நமது வாழ்வின்  நிகழ்வுகள், தேவைகளை பிரதிபலிப்பவையாக அமையும் போதே காலத்தையும் வென்று நிற்கின்றன. நவீனத்துவம் ஓவியத்திலும் புகுத்தப்படுகின்றது. ஆனால் அவை தலைமுறையினரை நெறிப்படுத்தக்கூடியதாக அமைதல் வேண்டும். இல்லாவிடில் காலக்கண்ணாடி அதனை நிராகரித்து விடும். அந்த நவீனத்துவ சிந்தனை நமக்குள் கேலி எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.


                           ரிமெக்ஸ் செய்யப்பட்டுள்ள மொனோலிசா

 ஓர் ஓவியத்தின் உயிர்ப்புக்கு அவற்றின் வண்ணக்கலவையின் பொருத்தப்பாடே காரணமாக அமைகின்றதெனலாம். ஆரம்ப காலங்களில் இயற்கை வர்ணங்களாகத் தாவரச்சாறுகளைப் பயன்படுத்தி வந்தாலும், இன்றைய நெருக்கடி வாழ்வுக்குள் சிக்குண்டதன் பிரதிபலிப்பாக இயற்கை வர்ணங்கள் தயாரிப்பிற்கான நேரமின்மையாலும், நீண்டகாலம் வர்ணங்கள் மங்காமலிருப்பதற்காகவும் கடைகளில் விற்பனை செய்யப்படும் இரசாயன வர்ணங்களே பயன்படுத்தப்படுகின்றன.


முற்காலத்தில் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் தற்காலத்தில் பெரும்பாலும் கடதாசிகளிலேயே வரையப்படுகின்றன. ஓவியம் வரையும் கடதாசி சாணம் நனைத்த நீரில் தோய்த்து வரையப்படும் போது சுவர்களில் வரையப்படும் தோற்றத்தை அளிக்கின்றது எனக்கூறப்படுகின்றது.

எந்தவொரு சிறப்பான செயலொன்றை நாம் முன்வைக்க வேண்டுமாயின் அதற்கான உரிய பயிற்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


ஓவியம் வரையும் ஆர்வம் பெரும்பாலும் சிறுவர்களிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இதனாலேயே அவர்களின் மனங்களில் மகிழ்ச்சியை நிரப்புவதற்காக கார்ட்டூன் சித்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அரசியல் எண்ணக்கருக்கள் கேலிச்சித்திரங்களாக வெளிப்படுத்தப்படும் போது அவற்றை நாம் நமது மூளையைப் பயன்படுத்தி கருத்துக்களை ஆராயவும் வேண்டியுள்ளது.

நாம் பார்ப்பதை வரைவதை விட, பார்த்ததை மனதுள் உள்வாங்கி அவற்றை வரையும் போதே அவ்வோவியங்களும் பேச ஆரம்பிக்கின்றன. எனவே ஓவியம் வரைவதாயின் நாம் நமது மனக்கண்ணில் வரைய வேண்டிய சித்திரத்தை நிலை நிறுத்த வேண்டும். ஒரு காட்சியை அவ்வாறே நகலெடுப்பதும், அதனை வரைவதும் ஓவியர்களின் உத்தியாகக் கருதப்படுகின்றது. தான் கண்டு ரசித்தவற்றை, அதே ரசனையுடன் வாசகர்களுக்கு வழங்குவதில் பெரும் சவால்கள் ஓவியர்களுக்கு ஏற்படும். அச் சவால்களை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் போது நமக்குள் சிறப்பான ஓவியங்கள் கிடைக்கின்றன.


நான் முன்பு "இண்டியன் இங்க் " எனப்படும் வர்ணத்தை , நிப் பேனாவால் நனைத்து வரைந்த ஓவியங்கள் என் கண்முன்னால் நிழலாடுகின்றன இத் தருணத்தில் !

கருத்து வெளிப்பாடுகளாகவோ, அலங்காரமாகவோ ஓவியத்தை வரையலாம். பொருத்தமான கடதாசி, உரிய இலக்கம் கொண்ட தூரிகை பொருத்தமான வர்ணங்கள் மற்றும் துடைப்பதற்கான துணி, பென்சில் அல்லது நிப் பேனா உள்ளிட்ட எழுதுகருவிகளுடன் நாம் நமது சித்திரப்பயணத்தைத் தொடரலாம்.


முதலில் அகக்கண்ணில் நிறுத்தப்பட்ட உருவத்தை பென்சிலில் அல்லது நிப் பேனாவால்  நேர்த்தியாக அதாவது ஒருசீராக வரையவேண்டும். உருவம் வரைந்த பின்னர் பொருத்தமான வர்ணங்களை உபயோகித்து அதன் வெளிப்புறக் கோடுகளை வரைய வேண்டும் (Out line). அதன் பின்னரே பிரஷ்ஷை உரிய விதத்தில் வர்ணங்களில் நனைத்து, அவ் வர்ணங்களை ஓவியத்தின் உட்பகுதிகளில் சீராக நிரப்ப வேண்டும். ஏனைய பகுதிகளில் வரணங்கள் தவறுதலாகப் பட்டுவிட்டால் அதனை துணி மூலம் அகற்றலாம். அவ்வாறே தூரிகையையும் நன்றாக நீரில் கழுவியே பயன்படுத்த வேண்டும். சிறப்பான ஓவியங்களாயின் அதற்குரிய சட்டகமிட்டு (பிரேம்) வீடுகளில் காட்சிப்படுத்தலாம். அல்லது விற்பனை செய்யலாம்.


ஓர் சினிமா வெற்றி பெற வேண்டுமாயின் அதில் காட்சியமைப்புக்கள் சிறப்பாகக் காணப்படல் வேண்டும். இதற்கும் ஒவியத்திற்குமிடையிலான தொடர்பு அவசியமாகப்படுகின்றது. எனவே திரைப்படம் சார்ந்த தொழினுட்ப வளர்ச்சி, ஆன்மீகம், அரசியல், வாழ்க்கைத்தரம், புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஓவியம் தன் முத்திரையைப் பதித்துள்ளது. சினிமா நடிகர் சிவகுமார் அவர்களின் பல சிறப்பான ஓவியங்களை நான் ரசித்துள்ளேன். அவ்வாறே எனது பாடசாலை நண்பி ஆசிரியை சிசிலியா பெட்டர்ஸன் அவர்களின் ஓவியங்களையும் நான் ரசித்துள்ளேன்.


ஓவியமானது மனநிறைவுடன் கூடிய பொழுதுபோக்கு மாத்திரமல்ல, வருமானத்தையும் நமக்குப் பெற்றுத் தரக்கூடிய துறையாகவும் விளங்குகின்றது.

 நமது கரங்களால் ஓவியம் வரைந்து அது மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தினால் அந்த இன்பத்திற்கு எல்லைகள் வகுக்கமுடியாது.


இன்று நாம் காணும் இந்த ஓவியத்துறையானது பல தசாப்தங்களில் பல்வேறு பரிமாணங்களைத் தாண்டி வந்துள்ளன. பல வரலாறுகளைக் கொண்டுள்ளன. கண்களால் ஓவியங்களைப் பார்க்கும் போது நம்மனக்கவலைகளை உறிஞ்சி நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் சக்தி இவ் ஓவியத்திற்கு இருக்கின்றது
நான் ரசித்த சில ஓவியங்களை நீங்களும் ரசித்திருப்பீர்கள்  மகிழ்ச்சியே !


இதில் என் கைவண்ணமுள்ளது. விரும்பினால் இதனை அழுத்திப் பாருங்கள்.

- Ms. Jancy Caffoor -

2012/08/13

சத்தியமும் அசத்தியமும்


நம் வாழ்க்கை அற்புதமானது. நம்  வாழ்வின் ஒவ்வொரு  நகர்வும், இயற்கை அருட்கொடைகளுடன் பிண்ணிப்பினைந்துள்ளது. அவ்வியற்கையழகை, தேவையை நிராகரிப்போர் இப்புவியின் மனிதப் பிறவிகள் எனும் அந்தஸ்தைப் இழந்து விடுகின்றனர்.

ஒவ்வொரு படைப்புக்களும் இறைவனால் படைக்கப்பட்டு , அவற்றுக்கான வாழ்வியல்  விதிமுறைகளும்  வகுக்கப்பட்டு, இப் பிரபஞ்சத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அவை உயிருள்ளவை, உயிரற்றவை,சக்தியென பேதப்பட்டவாறே, ஒவ்வொன்றும் தத்தமது இயல்புகளினால் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆனாலும் இவ் வேற்றுமைகளிலும் ஒற்றுமையிருப்பதன் மூலமாக நமது வாழ்விலும் இவை தொடர்புபட்டுள்ளது.

ஆறறிவு படைத்த உயிருள்ள மனிதன் தன் செயல்களினாலேயே தன்சூழலில் வாழும் ஏனைய ஐந்தறிவு  கொண்ட மாக்களிலிருந்தும் வேறுபடுகின்றான். அவனாற்றும் செயல்களில் கலந்துள்ள நன்மை, தீமைகளிலிருந்தே மறுமை வாழ்வுக்கான அத்திவாரமும்  பலமாக இடப்படுகின்றது. நாம் செய்கின்ற செயல்களுக்கான அடித்தளமாக  சத்தியமும், அசத்தியமுள்ளடங்குகின்றன.  செயல்களினடிப்படையில் நம்மை இனங்கண்டு, இயற்கையுடன் உவமித்து ஏகவல்ல இறைவன்  அருளிய பல திருவசனங்களை அல்குர்ஆன் தன்னகத்தை ஏந்தியுள்ளது. அவற்றுலொன்று -


"வானத்திலிருந்து நீரை அவன் இறக்கினான் பின் ஓடைகள் அளவுக்குத்தக்கவாறு  (நீரைக் கொண்டு)ஓடின. பிறகு வெள்ளம் ( நீருக்கு மேல் மிதக்கும்) நுரையை மேலே சுமந்து சென்றது. (இதுபோன்றே) ஆபரணங்களையோ அல்லது சாமான்களையோ செய்வதற்காக நெருப்பில் அவர்கள் (உலோகங்களை) உருக்குவதிலிருந்தும், அதுபோன்று நுரை உண்டாகின்றது. இவ்வாறே சத்தியத்தையும், அசத்தியத்தையும் அல்லாஹ்  உதாரணமாகக் கூறுகின்றான். எனவே (அழுக்கு) நுரையோ வீணாகிப் போய்விடுகிறது. (ஆனால்) மனிதர்களுக்கு பலன் அளிக்கக்கூடியதோ பூமியில் தங்கிவிடுகிறது. இவ்வாறே (நிராகரிப்போரை அழுக்கு நுரைக்கும், விசுவாசிகளைப் பூமியில் பயன் தரும் பொருட்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் உவமைகளை விவரிக்கின்றான் ( 13:17)