About Me

2020/08/07

பிரியாத நிலாக்கள்

பிரிய நிலாக்களின் பிஞ்சு விழிகளில்./

பிறைக்கீற்றாய் வீழ்கின்றதே சோகங்களும் விழிநீரில்/

வெடித்தெழும் துடிப்பினிலே தாயவளும் நினைவிலெழ/

வடிகின்ற ஈரத்தால் அணைக்கின்றான் தங்கையினை/


வறுமை யிடர் பெருகிடும் வாழ்வினில்/

சிறு தொழிலும் செய்திடவே தாயவளும்/

தொலைபோக அழுகின்றாள் சேயிங்கு வருந்தித்தான்/

விலைதானேது பாசத்திற்கே உணர்வும் வயதறியாதே/


அழகான மழலை தெய்வத்தின் அருளே/

அகிலத்தின் பரிவுக்குள்ளும் நிழலும் விரிந்திட/

அழுகின்ற உறவினை அணைத்தே தழுவி /

அன்பைக் குலைத்தூட்டும் பிரியநிலா இவனே/

ஜன்ஸி கபூர்



நிழல் - நவீன கவிதை

நிழல் உண்மையை உணர்த்துகின்றது/

ஒளியின் சத்தியத்தில் உயிர்க்கிறது/

இருளெனும் பொய்மையை மறைக்கிறது/


மனசாட்சிக்கும் மதிப்பளிப்பதனால்/

அது மனிதனுடனேயே எப்போதும் தொடர்கிறது/


வண்ண பேதங்கள் இல்லையதற்கு/

எப்போதும் கருமைதான்/

சமத்துவத்தைக் கற்றுத் தருகின்றது/


சூழ்நிலைக்கேற்ப மாறுகின்றன அதன் அளவுகள்/

மாறுகின்ற மனிதர்களின் மனங்களைப் போல/


உச்சி வெயிலில் பாதணிகளாகவும்/

சுருங்கிக் கொள்கின்றன எமக்குள்/

சந்தர்ப்பங்களைக் கற்றுத்தருவதைப் போல/


பல உருக்கள் அமைத்து/

வித்தைகள் செய்கின்ற விரல்களும்/

முதலீட்டு வணிகப் பொருள்தான்/


இருளையும் ஒளியையும்/

தொடர்புபடுத்தும் நிழல்/

இன்பமும் துன்பமும் ஒன்றித்து வருகின்ற/

வாழ்க்கையை நினைவூட்டுகிறது/


பௌர்ணமி,அமாவாசைகள் கூட/

நிழலின் உணர்ச்சி நிலைகள்தான்/

மனிதனுக்கும் தத்துவமாகின்றன/


வறுமை நிலையில் பயமுறுத்தும்/

உயர்ந்து செல்லும் விலைவாசிபோல்/

சிறு பொருட்களையும் உருப் பெருத்துக்காட்டுகின்றது

நிழல்/


பொய்கள் மெய்யாகலாம்/

மெய்யென்ற மாய நிலைக்குள்

பொய்யும் கலக்கலாம்/


நிழலும் நம்மை நேசிப்பதனாலேயே

கூட வருகின்றது உயிர்போல/


ஜன்ஸி கபூர்-06.08.2020

யாழ்ப்பாணம்


Kesavadhas

ஜன்ஸி கபூர் கவிதை முதற் கவிதை எனக் குறிப்பிடினும் தேர்ச்சி தெரிகிறது!

முதலவரி உண்மையை உணர்த்துகின்றது

என மாற்றி

அடுத்த வரியில் தன்னையே வேண்டாம்!

அதன் பின்னர் கவிதை பேசுகிறது!

வண்ணப் பேதங்கள் இல்லா சமத்துவம்

மனிதர்கள் மனங்கள் போல சூழலுக்கு ஏற்ப மாறுகிறது!

உச்சி வெயில் பாதணிகள்

இன்ப துன்ப வாழ்க்கையை தொடர்ந்து கூடவந்து நினைவூட்டுகிறது!

பௌர்ணமி அமாவாசை உவமங்கள் அருமை!

விலைவாசியோடு ஒப்புமை அழகு!

முடிவும் நன்றே.

வாழ்த்துகள் கவிஞரே!****




2020/08/06

நிழல் - நவீனத்து கவிதை

ஒளியில்லாவிட்டால் நிழலும்

பயந்து 

மறைந்து கொள்கிறது/


மதிய வெயிலுக்கு

நிழல் 

செருப்பாகின்றன கால்களுக்கே/


கைவிரல்களின் நிழல்களும்

ஒளியுள்ளபோது 

வித்தை காட்டிச் சம்பாதிக்கின்றன./


நிலவு மறைப்பில்

பூமியின் நிழல் கண்டு

நிலவும்

கொதிக்கின்றது கோபத்தில்/


கதிரவ மறைப்பில்

நிலவின் நிழல் கண்டே

சூரியனும்

பயத்தில் கண்களை மூடுகின்றதே/


சூரியனைக் கண்டதுமே

எமது நிழல்களும் வழுக்கி வீழ்கின்றன

தரையில்/


தகரத் துளைகளில் விழும்

சிறு ஒளிப்பொட்டின் நிழலும்

புகைகின்றன

ஏழையின் மனக்குமுறலாய்/


A.C.Jancy

மனசுக்குள்ளே பூக்கும் மழை



வானம் தேடும் முகில்கள் கூட்டம்/
தினம் ஊற்றாதோ நீரைத்தான் பூமிக்குள்/
கானம் இசைத்திடுமே குயில்களும் கூதலில்/
மனதும் இசைந்திடுமே ஈரப் பூக்களுடன்/
வான்மழை கண்ட வண்ணமயில் ஆட்டம்/
காண்போர் விழியினில் செருகிடுமே வசந்தத்தை/
வானவில் கோலமும் வண்ணத்திரை விரித்திட/
தானமாய் உதிர்ந்திடுமே வான்மழையும்  வையகத்திற்கே/

ஜன்ஸி கபூர்  
 





  

அஃதாண்டு அவள் செய்தது


சோலைத் தென்றலில் சிறகுவிரித்த வாலைக்குமரியவள்/
காளையைக் கண்டதுமே காதலும் மலர்ந்ததுவே/  
கூர் விழிகளிற் இசைந்திட்ட காதலும்/
கூடியே களித்ததே மகிழ்வின் பேரொளியாய்/

கசிந்த காதலும் கனிந்ததே திருமணத்தில்/
கன்னி மனதை காளையும் வென்றான்/
இணைந்தனரே இன்பவெளியிற் இதயங்களும் சிரித்திடவே/
இல்வாழ்வின் அமுதத்தில் தித்தித்தனர் ஆருயிராய்/

மன்னவனும் பொருளீட்ட பிரிவதாய் சொன்னதும்/
மங்கையவள் துடித்திட்டாள் பிரிவின் வலியுணர்ந்து/
தொலைவிலவர் நீங்கிடின் மெலிந்திடுமே தோள்களும்/
வளையலுமே நழுவிடுமே கரங்கள் விட்டே/

உளத்துயர் தாங்கிடாதே உயிரதுவும் பிரிந்திடுமே/
உறவின் திசையினில் பாதங்களும் போகுமே/
உன்னதக் காதலின் குறிப்புணர்ந்த தோழியும்/
உரைத்தாலே தலைவனுக்கே தலைவியின் மனதினையே/

ஜன்ஸி கபூர் - 05.08.2020
யாழ்ப்பாணம் 





 

2020/08/05

காதோடு குழையாட


காதோடு குழையாட கன்னமெல்லாம் நாணமா/
கருத்தோடு இசைந்த புள்ள கண்ணம்மா/
கரும்புக் காட்டுப் பக்கம் தான் வாறியா/
அரும்பியிருக்கிற ஆசகளத்தான் பேசிடலாம் கண்ணால/

ஒத்தயடிப் பாதையில ஒய்யாரமாய் நடக்கையில/
சித்தமெல்லாம் ஒன்மேலதான் சாயுதடி செல்லம்மா/ 
சிக்கினேனடி உன்னிடம்தான் விக்கலெடுக்குது நெனவுக்குள்ள/ 
பக்கம் வந்து பேசடி மாதுளம்பிஞ்சே/ 

தாமரை மொட்டெடுத்த சாற்றிலதான் ஒடம்பிருக்கு/
சாமத்து கோழிபோல  நீளுறே கனவுக்குள்ள/
பூமரத்து வாசம் நெஞ்சுக்குள்ள பேசும்/
பூமாதேவியும் பூரிப்பா ஒன்னப்பாத்து மனசுக்குள்ள/ 

சொப்பனச் சொக்கியே மச்சான மயக்கித்தானே/
சொல்லாமப் போறியே ஆத்துப்பக்கம் தனித்துதான்/
மல்லிகை வாசம் மனசோட பேச/
அல்லியே வாறேன்டி உந்தன் பின்னாடி/

ஆக்கத்தான் பொறுத்திட்டேனே ஆறத்தான் பொறுக்கலயே/
ஏக்கங்கள் வெட்டுதடி எந்தன் நெஞ்சுக்குள்ள/
ஏழு மணிக்குள் வந்திடி ஏலத்தோப்புக்குள்ள/
விழுந்திட்ட மனச இழுக்கிற ஒனக்குள்/

நீயும் வாழும் நெஞ்சக்கூடு தனியாத்தாயிருக்கு/
சாஞ்சிட தோளத் தந்திடடி சொகமாயிருக்கும்/
கொஞ்சிடும் குழைதான் மிஞ்சிடுது அழகில்/
வஞ்சியே வாக்கப்படு தவிப்படங்கும் நெஞ்சுக்குள்ள/

ஜன்ஸி கபூர் 
 



கவிபாடும் காந்தப்பூக்கள்

காற்றும் துளைத்திட துள்ளிடும் அலைகளெல்லாம்/
ஒற்றிடுமே மணலைத்தான் ஈரத்தையும் பிழிந்தே/
கற்றையாய் புன்னகைக் கொத்துக்கள் வதனமேற/
ஊற்றாறாய் நீந்துகின்ற நீரோடைகளாய் சிறார்களிங்கே/

வெண் மணலைக் கோர்த்தெடுக்கும் மொட்டுக்களால்/
நண்டூறும் குழிகளும் நிரம்பிடுமே குறும்புகளால்/
கண்களுக்குள் வாசப்பூக்கள் நளினத்துடன் விரிந்திடவே/
எண்ணச் சிறகின் தொடுகையில் உயிர்த்திடுமே ஆகாயம்தான்/

உருள்கின்ற சோகிகள் உதிர்க்கின்ற குறுநகையில்/
வருமே யின்பமும் நுரைக்கும் கடற்பூக்கள் பிசைந்தே/
விரும்பியே ரசித்திடலாம் மொட்டுக்களின் தாளவோட்டம்/
கரும்புச்சாற்றிலும் நனையுமிந்த அலைத் தோப்பு/

உணர்வுடன் கலக்கும் நட்பின் பேரானந்தம்/
திணறுமே ஒய்யாரக் கனவின் தித்திப்பிலே/
உணரும் உள்ளங்களும் இளமையின் சுகந்தங்களை/
கணந்தோறும் அனுபவித்திடும் வசந்தப் பேருவைகையில்/

தரை தட்டுமிந்த மனிதப் படகினில்/
கரையும்தானேது.../
கறையில்லா அன்பின் களிப்புடனே இடர்/
திரை நீக்கி மலருமிந்த
கவிபாடும் காந்தப்பூக்கள்/

ஜன்ஸி கபூர் 

  

நல்லாட்சி

வாக்குரிமை உரிமை காக்கும் மக்களாட்சியில்/
ஆக்கிடும் அபிவிருத்தியை வாழ்வின் நலன்களுடன்/
போக்கிடும் ஊழலையும் பொல்லாத ஆட்சியையும்/
வாக்கிடுகையில் சிந்தித்தால் நல்லாட்சியும் நமதாகுமே/

ஜன்ஸி கபூர்  
 


உத்தமமே காதலின் உன்னதமே

விழிகளின் ஈர்ப்பினில் விழுமியக் காதலும்/
விழுந்ததே இதயத்தினில் இன்பமும் இசைந்திட/
அழகிய உணர்வும் உயிருடன் பிசையவே/
ஆனந்த வரமாய் என்னுள் உவந்தாயே/

காதலின் சுகம்தான் காற்றினில் நனைகையில்/
மோதியதே உன் குரலும் இசையாக/
கனவுக்குள்ளும் உதிரு முந்தன் புன்னகைக்குள்ளே/
கரைகிறதே எந்தன் வாலிப வயசும்தான்/

பெண்ணழகியே நொறுங்கினேனே உந்தன் கூர்விழியில்/
எண்ணத்திலும் பூசி நின்றேன் உன்னைத்தானே/
வண்ணமலரே மலர்கிறாயே நெஞ்சுக்குள்ளே இதமாக/
கண்டெடுத்தேன் நிலவுக்குள் பிரிந்திடாத வரமுன்னை/

அமுதச் சிற்பமே பிழிகின்றாய் மெல்லிசையே/
அழைக்கின்றாய் எந்தன் பெயரும் கற்கண்டாக/
பழகிய நொடியெல்லாம் பாசமாய் உறைந்திட/
பவளக்கொடியே பாருமே போற்றுமே உனையே/

விழிகள் நான்கும் வீழ்ந்திட்ட காதலில்தான்/
எழுந்திடுமே ஓருயிராய் அன்பும் சிறகடித்தே/
விழுதாய் பற்றிடும் உந்தன் கரங்களும்/
தழுவுதடி என்னை உத்தமக் காதலினால்/

உயிரோடு இசைந்திட்ட உன்னத காதலே/
உணர்வுக்குள் பிசைவேனே உத்தமி உனையே/
உன்னைத் தொடரும் எந்தன் நிழலுக்குள்ளும்/
உத்தமமுண்டு அது உனக்குத்தானே சொந்தமென்று/

ஜன்ஸி கபூர் - 05.08.2020
யாழ்ப்பாணம்




வான வீதியில் பறக்க வா


தனிமைச் சிறை நீள்கின்றதே தவிப்புடன்/
தாவும் நொடியெல்லாம் பூக்கின்றதே அக்கினியாய்/
இனிமைத் துடிப்பெல்லாம் சிதைகின்ற இதயத்தில்/
இன்னலும் உருகிடுதே விழிநீர் வெம்மைக்குள்/

கன்னச் சிவப்பும் குறுநகை விழியசைவும்/
என்னைத் துளைக்குதடி காதலும் சுகமாக/
இன்பத்தின் வாசலாய் வானம்தான் நமக்கிருக்கே/
அன்றிலே உந்தன் சிறகாய் நானே/

ஜன்ஸி கபூர் - 05.08.2020



 


 

தாயே நானும் உனக்கே


சேரி சுமக்கும் வாழ்க்கை நமக்குள்
சோகம் ஏனோ சோதரி யுன்னில் 
சோர்ந்திடாதே தாயே  நானும் உனக்கே

---------------------------------------------------------
சேரிக்குள்ளும் கூர்மை யன்பு 
வாரியணைக்கும் நெஞ்சங்களும் பிணைய
கறையுமுண்டோ வறுமைக்கிங்கு  

ஜன்ஸி கபூர்


வயலோரம் விளையாட வா புள்ள


வயலோரம் காத்திருக்கேன் மனசுக்குள்ளே பூத்திருக்கேன்/
வாறியாடி வெளையாட வரம்போரம் கோடிழுப்போம்/
சறுக்கிடாதே சேத்துக்குள்ள சிறுமீன்கள் துடிப்பிருக்கு/
கருவேப்பிலை வாசத்திலே கருத்தள்ளி போறவளே/

பருவத்தில வெளஞ்சிருக்கு வெண்டக்கா விரலப்போல/ 
துரும்பாக எளச்சிட்டேனே கரும்பே வந்துடடி/
இறுங்கும் வெளஞ்சிருக்கு குறும்பாய் பாத்திருக்கு/
இறுக்கி அணைச்சுக்கோடி இன்பம் கோடிதான்/

உச்சி சூரியன் இளகிப் போச்சே/
உழுத வயலும் காத்திருக்கு புள்ள/
உழுந்துக் கொடியும் உந்தன் இடையினில்/
தழுவுதடி நாத்துப்போல
தளிர்க்கொடியே வெட்கமேனோ/

சமைஞ்ச புள்ளே வெளஞ்ச நாத்தே/
சக்கரைத் தண்ணீ ஊறுதடி நாக்குல/
தேக்குமரம் வயலோரம் தேடுதடி என்னப்போல/
ஆக்கிடலாம் சிறுசோறும் அள்ளிப்போடு வாழயிலைல/

வெக்கம் ஏனோ வெள்ளரிப் பிஞ்சே/
பக்கம் வந்திடு மாமனும் சொக்க/
அக்கம் பக்கம் யாருமில்லை அன்பே/
அந்திக்குள் வந்திடு ஆனந்தம் நெறைஞ்சிருக்கு/

வடக்கில பரணிருக்கு மச்சானும் அருக்கிருக்கேன்/
குடத்தோட வந்திடடி கும்மியும் ஆடிடலாம்/
எட்டிப் பார்த்தால் யாரும்தான் பதுங்கிக்கலாம்/
கட்டழியே நமக்கிருக்கு நெல்லுமணித் தொட்டில்தான்/

ஜன்ஸி கபூர்

கொரோனாவும் கொள்ளையும்

கொட்டமடிக்கும் கொரோனாவால் வாட்டத்திலிங்கு மாந்தரும்
திட்டமிட்டே ஏறுது விலைவாசியும் இமயமாக
நீட்டிடும் பணத்திற்கே நிறையுது கூடைகளும்
பட்டினி வயிரெல்லாம் வெறுமையில் சிதையுது

வீட்டுச் சிறையினில் வாழ்வும் பதுங்கிடவே
தட்டுப்பாடென்ற மாயையினில் நட்டுகின்றனரே கொள்ளையைத்தான்
கட்டுப்பணம் கறந்தாலே கைமாறும்  பசியடங்க
கேட்கத்தான் நாதியில்லை பதுங்கிடுதே பொருட்களும்தான்

நீளுகின்ற ஊரடங்கை வசப்படுத்தும்  முதலைகள்
மாளுகின்றன உயிர்கள்தான் தொற்றுடன் விலைவாசியால்
தளும்புகின்ற சோகங்கள் நெறிக்கின்றதே குரல்வளையை
ஆளுகின்ற கொள்ளையிதை மதிதான் மாற்றிடுமோ

ஜன்ஸி கபூர்
 
 

 

2020/08/04

முட் தேசத்து வாசம்

நேசமே உயிர்த்தாய் மெல்லிழைக் காதலால்/
வாசமும் நுகர்ந்தேன் சுவாசமே நீயுமானதால்/
தேசமும் துறந்தே ஆழியும் கடந்தாய்/
பாசமும் மாறியதோ பாவையிவள் தொலைவாகவே/
வேசமும் கலைந்தாயே அன்பும் வெருண்டோட/
மோசமான நடத்தையால் வாழ்வும் நாசமாகியது/

ஜன்ஸி கபூர்  
 




தமிழ்


உயிர் மூச்சினில் உறைந்திட்ட மொழி
உலக உயிர்ப்பினில் இசைந்திட்ட இன்பத்தமிழ்

04.08.2020

மனைமாட்சி

 மங்களம் வந்தமரும் நல் மனைமாட்சியில்
பொங்குமே புன்னகையும் குங்குமச் செழிப்பினில்
இல்லறத்தின் நற்பயனை இல்லமே சுவைத்திட
நல்லமுதாய் காத்திடுவாள் தன் குலத்தினையே

ஆண்மையும் பெண்மையும் இசைந்திடுமே இல்லறமாய்
எண்ணமும் வசமாகும் வாழ்வின் சிறப்பினில்
கண்ணாளன் கருத்தினில் கலந்திடும் நல்மனையாள்
தொண்டெனவே ஊறிடுவாள் தன் உறவுகளுக்கே

சொற்களைக் கலப்பாள் நாவடக்கமும் சுவையாகும் 
கற்பின் செழுமையினில் பண்பும் உயர்வாகும்
வள்ளுவன் வாக்கோடு தன்னையும் கோர்த்தே  
மங்களப் பேருவைகையால் வாழ்த்திடுவாள் மனையை  

இகழ்ந்திடார் அறிந்தோர் இதயத் தினன்பை 
புகழும் மணக்கும் வாழ்ந்திடும் வாழ்வினில்
அகமும் மகிழும் அணிகலனாய் மக்கற்பேற்றுடன்
அகிலமும் போற்றுமே அவள் மனையாட்சியை

ஜன்ஸி கபூர்  



வாழ்க்கை வாழ்வதற்கே

தள்ளாடும் முதுமை  தளராத தன்னம்பிக்கை/
உள்ளத்து உறுதி  உடைந்திடாத உயர்வு/
எள்ளி நகையாடுவோர் புறந்தள்ளும் வீரம்/
வெள்ளமாய் வழிந்தோடும்   வியர்வைக்குள் வாழ்க்கை/

ஈருருளி உருளுகையில்  உயிரேந்தும் மூச்சில்/
ஈரமாய் படியுமே  ஏழ்மையின் சுவடே/
இரவும் பகலுமறியாத   சுமையேற்றும் உழைப்பினில்/
இணைந்திட்ட உறவுகளும்  வாழப் பழகுமே/

அடுத்தவர் தயவேந்தா  ஆணிவேராய் மனசும்/
வடுக்களை உரித்தெடுக்கும்  பக்குவமும் வளர்ந்திருக்கு/
பாடுபட்டு உழைப்பதெல்லாம்  எண்சாண் உடம்பிற்கே/
தடுமாற்றம் காணா  எளிமைக்குள்ளும் உயர்விருக்கு/

ஜன்ஸி கபூர் 
 




 

2020/08/03

ஈன்றவள் மடியே இறைவனின் கோயில்



கருவறைத் தொட்டிலினில் குறையின்றி ஈன்றவளே
அரு உயிரையும் காத்திட்டாள் அமுதாய்
மருதாணி வாசத்தில் அன்பினைக் குலைத்தே
தருகின்ற தாய்மையில் இறையோனின் பரிவு

அல்லல் தொடர்கையில்; களைந்திடும் துடிப்பில்
தொல்லைகளும் விரண்டோடும் கனிவின் மனங்கண்டே
கல்லும் கரைந்திடுமே தாய்மைப் பண்பினிலே
சொல்லேதுமுண்டோ அன்னைக் கீடாய் இவ்வுலகில்தான் 

கொடுந்தணலும் குளிரும் தாயவள் நிழலில்  
வாட்டிடும் துன்பமும் வடிந்திடுமவள் பரிவினில்
தேடும் பார்வையும் குவித்திடும் நினைவுகளை 
 நாடுகின்ற தாய்மடிதான் புனிதமான இறைகோயில் 

ஜன்ஸி கபூர் - 03.08.2020









எழுதாத வரம் நீ


விழிகளைத் திறக்கிறேன் வீழ்கிறாய் பார்வைதனில்/
தழுவுகிறேன் உனையே நழுவுகிறாய் நாணத்துடன்/
மெழுகுச் சிலையே உருகுகிறேனடி உன்னன்பில்/
விழுதாய் பற்றுகிறேன் உனையே என்னுள்/

புன்னகைச் சரந்தொடுத்த உந்தன் வதனமதில்/
அன்பும் சுவைத்தேன் ஆருயிரும் வருடவே/
தென்றலின் வாசம் நனைத்த மூச்சுக்குள்/
நின்றேன் உந்தன் சுந்தர சுவாசிப்பாய்/ 

இருள் நனைக்கும் கனவெல்லாம் உயிர்த்தாய்/
இதயவெளியில் இணைந்திட்ட உறவாய் முகிழ்த்தாய்/
இன்பச் சாரலிலும் நனைந்திட்ட அமுதுமானாய்/
இணைந்தாய் நீயே எழுதாத வரமாய்/

ஜன்ஸி கபூர்
 



 


மங்கள நாள்

பொங்கிடும் ஆறுகள் தாங்கிடும் நீர்வளம்
மங்கள விழாவில் மகிழ்ந்திருக்கும் காவிரியும்
நுரைத்தெழும் நீரோட்டத்தில் உயிர்த்தெழும் முளைப்பாலிகையும்
கரையோர மங்கலத்தில் சுமங்கலிகள் தாலியுமேறும்

ஜன்ஸி கபூர்  


வயலோரம் விளையாட வா புள்ள

வயலோரம் காத்திருக்கேன் மனசுக்குள்ளே பூத்திருக்கேன்/
வாறியாடி வெளையாட வரம்போரம் கோடிழுப்போம்/
சறுக்கிடாதே சகதியிருக்கு மனசுக்குள்ள சங்கதியிருக்கு/
இறுக்கி அணைச்சுக்கோடி இன்பம் கோடிதான்/

சத்தம் போடுற வெள்ளிக் கொலுசே/ 
சித்தம் குளிருதே அவளை நெனைச்சா/
உச்சி சூரியனும் இளகிப் போச்சே/
உத்தமிப் புள்ள ஊஞ்சலாடலாம் காத்துக்குள்ள/

சந்திரப் பெண்ணே கிட்ட வாடி/
மந்திரமிட்டாய் மாதுளங்கன்னி செவக்குதடி உதடுதான்டி/
வந்திடு அருகில் வாசிக்கணும் உன்னத்தான்/
சந்திப்போமடி நாம சடுகுடு ஆடலாம்டி/

சமைஞ்ச புள்ளே  வெளஞ்ச நாத்தே/
சக்கரைத் தண்ணீ ஊறுமடி நாவில/
சந்தனம் தெளிக்கிறே தென்றலும் மணக்குதே/
அந்திக்குள் வந்திடு ஆனந்தம் நெறைஞ்சிருக்கு/

வெக்கம் ஏனோ வெள்ளரிப் பிஞ்சே/
பக்கம் வந்திடு மாமனும் சொக்க/
அக்கம் பக்கம் யாருமில்லை புள்ளே/
ஆக்கிப் போடு கூட்டாஞ் சோறும்/

வட்டச் சூரியன் கிட்ட வாரான்/
சுட்டெரிப்பான் வெள்ளத் தோலும் வேக/
கட்டழகியே பதுங்கிக்கலாம் நெல்லும் காத்திருக்கு/
சிட்டுக்குருவியே பறந்து வாடி வெளையாடத்தான்/

ஜன்ஸி கபூர் - 03.08.2020
யாழ்ப்பாணம்   



வரம்

நீண்ட நேரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் அலைபேசியை இயக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் உஷா. கைபேசி அதிர்வை விட அவளின் மனம் கூடுதலாக படபடத்துக் கொண்டிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டி இதழ்கள் காற்றிலே அசைந்தாடி அந்தத் திகதியை காட்சிப்படுத்தியபோது மனதுக்குள் ஏனோ அமைதியின்மையை உணர்ந்தாள். இத்தனை நாட்களாக தனக்குள்ளேயே ஒரு வட்டத்தைக் கீறி வெளியுலகத் தொடர்பின்றி வாழ்பவளுக்கு கைபேசி அழைப்பு விசனத்தைக் கொடுத்தது. நிலத்திலே ஊன்றிக்கிடந்த தனது வலது காலைப் பார்த்தவளுக்கு மனசுக்குள் நறுக்கென்று முள் குத்திய பிரமை.

இரண்டு வயதில் அந்த ஊரில் வேகமாகப் பரவிய இளம் பிள்ளை வாத நோய் அவள் வாழ்வையும் முடக்கியது. பண்ணாத வைத்தியமில்லை. மனம்தான் புண்ணானது. நோய்த் தாக்கம் கண்ட கால் வளர்ச்சியடையாத நிலையில் ஒரு காலை இழுத்து இழுத்து நடப்பதற்கும் பழகிக் கொண்டாள்.

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. பருவம் அவளுக்குள்ளும் பூச்சூடியது. இருபதைக் கடந்த பேரழகி  இன்று. ஆனாலும் அடுத்தவர் கண்களுக்குள் புலப்படாத கால் ஊனம் அவள் மனதுக்குள் வலியைப் பிறாண்டிக் கொண்டிருந்தது.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை அவர்களை  அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. பொழுதுபோக்காக தைக்க ஆரம்பித்தவள் இன்று அதன் மூலமாக வருவாயும் ஈட்ட ஆரம்பித்துள்ளாள்.

மனம் ஒரு நிலையில்லாமல் தடுமாறியது.

அவன் ஜெகன்.....

அண்ணன் முகேஷின் நண்பன். அடிக்கடி வீட்டுக்கு வருவான்.
எதிர்பாராதவிதமாக தனிமையில் அவனும் அவளும் சந்திக்க நேரிட்ட அந்த நாளில்  வெளிப்படுத்தினான் தன் விருப்பத்தை.

'உஷா..........'

அவள் மௌனமாகவே நின்று கொண்டிருந்தாள்.

' ஏன்............உனக்குள்ளேயே உன்ன சிறைப்பிடிச்சு வச்சிருக்கிறே. வெளியே வா..... எனக்கு உன்ன ரொம்பப் பிடிச்சிருக்கு. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.

அவனின் காதலுக்குள் தாய்மை நிரம்பியிருந்தது. உணர்ந்தாள். ஆனாலும் உள்ளத்துத் துயர் அவள் மௌனத்தை அவிழ்க்க விடவில்லை. வீட்டுக்குள் மறைந்து கொண்டாள்.

அதன் பின்னரான முயற்சியாக ஜெகன் கைபேசியில் அவளைத் தொடர்பு கொள்ள முயன்றும் தோற்றுப் போனான். அவள் தனது பிடிவாதத்திலிருந்து இறங்குவதாக இல்லை. சிந்னையிலிருந்தவள் தாயாரின் குரல் கேட்டு சுயநினைவுக்குள் திரும்பினாள்.

'மக........... இங்க வாம்மா யாரு வந்திருக்கிறாங்னு பாரு'

அம்மாவின் குரல் கேட்டு வெளியே வந்தவள் அதிர்ந்து நின்றாள்.

அங்கே..................

ஜெகன் ......அவனது அம்மாவுடன் வந்திருந்தான். அவளுக்கு எல்லாம் புரிந்தது.  அம்மாவின்  நீளமான சந்தோச உரையாடலில் தாயாரின் சம்மதம் தொக்கி நிற்பதை உணர்ந்தாள்.

அவனோ இமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்;. அந்தப் பார்வையில் வழிந்த காதல் அன்பு பாசம் எல்லாமே ஒன்றிணைந்து அவனை அவளுக்குள் இமயமாய் உயர்த்தி வைத்தது.

அவன்.............

அவளுக்கான வரம்.........

முதன்முதலாக அவனது பார்வை அவளுக்குள் மகிழ்வைக் கிளற ஆரம்பித்தது. உதடுகள் அவளையுமறியாமல் நாணத்துடன் உரசி நின்றது. ஒரு புதிய வாழ்க்கை தன் கண் முன்னால் ஒளிர ஆரம்பிப்பதை உணர்ந்தாள் உஷா.

ஜன்ஸி கபூர்
 




 

அன்பே .......எழிலே

அன்பே என்னுயிரே
அமுதூட்டும் விழியாளே/ 
ஆரத்தழுவினேன் உனையே
ஆனந்தம் வழிந்தோட/
இளமைச் சிற்பமே 
இன்பவூற்றின் செங்கரும்பே/
ஈகையாய் எனக்களித்தாய்
உனைத்தானே எழிலே/

ஜன்ஸி கபூர் - 03.08.2020



தடம் மா(ற்)றும் எதிர்காலம்



நவீனத்தின் உருமாற்றம் மதியதை மயக்க/
நாகரிக மோகமும் வாலிபத்தை வீழ்த்தும்/
நாடித்துடிப்போடு கைபேசி அலைவின் சுதந்திரமும்/
நாளைய சந்ததியின் உறவுகளை உடைத்தெறியும்/

இயந்திரச் சுழற்சியாய் இசைந்திடும் வாழ்வில்/
இதயங்களும் தானறியாது அன்பின் அருமைதனை/
இடரறுக்கும் வலிமையின்றி மரணத்துள் வீழும்/
இளையோரின் தன்னம்பிக்கையும் சுருங்கும் தானாய்/

உழைக்கும் கரங்களும் கரைக்கும் பணத்தை/
உறுஞ்சுமே நாவும் போதை மதுவை/
உன்னதப் பணியாற்றும் பண்பாடும் கலாசாரமும்/
உடைகையில் எதிர்காலமும் தடம் மா(ற்)றுமே/

ஜன்ஸி கபூர் - 28.07.2020