About Me

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

2021/04/15

மறக்க முடியுமா

 

  • கடிகார முட்கள் மெதுவாக நகர்வதைப் போன்ற பிரமை. எவ்வளவு நேரம்தான் ரம்யாவால் விட்டத்தை வெறித்துப் பார்க்க முடியும்.

    "தாயீ........வெறும் வயித்தோட இருக்கக்கூடாது. ஏதாவது வாய் நனையம்மா. தேத்தண்ணீ ஆறப் போவுது"

    தாயின் பரிவுடன் அவளை ஆறுதல்படுத்தும் கணவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். கண்ணீரால் நிறைந்திருக்கின்ற விழிகள் வெடித்து விடுமோவென்ற பிரமை. அடக்க முடியவில்லை. நெஞ்சம் தேம்பியது.

    மனைவியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ராம். அண்மையில் நடந்து முடிந்த அந்த வலி தரும் சம்பவம் கண்முன்னால் விரிந்தது.

    ராம் குடும்பத்தின் தலைமகன். சிறுவயதிலேயே அப்பா தவறிப் போனதால் அவனே தனது குடும்பத்தைக் காக்கும் தூணானான். அவனுக்கு பின்னர் காத்திருந்த நான்கு குமர்ப்பிள்ளைகளையும் கரையேற்றும் பொறுப்பு அவனுக்கு ஏற்பட்டது. அண்ணனாக அல்லாமல் தந்தையாகிப் பாரம் சுமந்தான். தனது இளமைக் காலம் அனைத்தையும் வெளிநாட்டில் கரைத்து உழைத்தான். பாலைவன வெம்மை அவனது வனப்பையெல்லாம் சுரண்ட நான்கு குமர்களையும் கரையேற்றியவனாக நாடு திரும்புவதற்குள் நாற்பது வயதையும் தாண்டிவிட்டான். வயோதிபத் தாயை நல்ல தனயனாகிக் காத்தான். தனது எதிர்காலம் அவனுக்கு மறந்தே போனது. நாளாந்த வாழ்க்கைச் செலவினைச் சமாளிப்பதற்காக முச்சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்து வாடகைக்காக ஓட்டத் தொடங்கினான். கிடைக்கும் வருமானம் அவர்களின் அன்றாட வாழ்வைச் சமாளிக்க உதவியது.

    ஆனாலும் அவனது தாயார் அவனுக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொடுக்கப் போராடி ஈற்றில் முதிர்கன்னியாக தனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்ற ரம்யாவைத் தேடிக் கண்டுபிடித்தார். அவனுக்கேற்ற மனைவி. பெரியவர்களின் ஆசியுடன் அவளைக் கரம் பற்றினான்.

    நாட்களும் வேகமாக ஓடின. குழந்தையின்மை அவர்களுக்குப் பெருங் குறையாகத் தெரியவில்லை. அவனுக்கு அவளும், அவளுக்கு அவனுமாகக் குழந்தையாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கின்ற நேரம்தான், ரம்யாவின் சித்தப்பா மகள் அவள் வாழ்வுக்குள் குறுக்கிட்டாள்.

    "அக்கா நாலு பொட்டப் புள்ளா தொடர்ந்து பொறந்திருச்சி. சமாளிக்க முடியல. உனக்குத் தத்து தாரேன் வளர்க்கிறியாக்கா"

    தங்கையின் குரல் அவளுக்கு புது வாழ்வுப் பாதையைக் காட்டவே சம்மதித்தாள். தங்கை மகளை இருவரும் அன்போடு வளர்க்க ஆரம்பித்தார்கள். இரண்டு வயதில் வந்த குழந்தை மீனு இப்போது பன்னிரெண்டு வயதினை எட்டிப் பார்க்கின்ற அழகு நிலாவாக வளர்ந்திருந்தாள். இடைக்கிடையே பெற்ற தாய், தகப்பன் உறவுகளின் தொடர்பினைப் பேண வளர்ப்பு பெற்றோர் மறுக்கவில்லை. இரு குடும்ப உறவுகளின் பாலமாக மீனுவும் வளரத் தொடங்கினாள். வளர்ப்புப் பெற்றோர்கள் தமது வறுமைக்குள்ளும் மீனுவை செல்ல மகளாகவே வளர்த்தார்கள். அவள் தரம் ஏழில் ஊர்ப் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்தாள்.  
     
    ஒருநாள் பாடசாலைக்குப் போன மகள் வீடு திரும்பவில்லை. பதறித் துடித்துக் கொண்டே பாடசாலைக்கு சென்று விசாரித்ததில்,  பெற்றவர்கள் மீனுவை மீள அழைத்துச் சென்றிருப்பது புரிந்தது. சட்டமும் அவர்களின் கனவினைக் கருக்கியது. உறவுக்கார பெண் என்பதால் நம்பிக்கை வலுக்க சட்டப்படி தத்தெடுக்காத தவறு இன்று பெருந்துயராகி நீண்டிருக்கின்றது. 

    அழுதாள் பல நாட்கள். வளர்த்த பாசம் நெஞ்சை அமுக்கியது. காணும் இடங்களிலெல்லாம் மீனுவின் பிம்பம். உணர்வுகள் கதற நடைப்பிணமானாள் ரம்யா.

    மறக்க முடியுமா அந்தக் குழந்தை முகத்தை. அவளுடன் பறந்தோடிய நாட்களை....

    மீனுவின் குறும்புகளின் சிதறல்கள் அந்த வீடு முழுவதுமாக நிரம்பிக் கிடந்தன.

    தேம்பித் தேம்பி அழுகின்ற மனைவியை அணைத்தார் ராம். சுயநல உலகில் உணர்வுகளுடன் விளையாடுகின்ற மனிதர்கள் இருக்கும்வரை இத்தகைய உளத் துயர்களும் நீள்கின்றன.
    இடையில் வந்த உறவு சிறகினை விரித்ததில் உறவினை இழந்த வளர்ப்புப் பெற்றோர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக மாறி தமது துயரத்தைத் துடைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

    ஜன்ஸி கபூர்  - 27.10.2020


பாரதியின் புதுமைப் பெண்


 


கடிகாரம் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது. ஏனோ மனது விறைத்த பிரமை. பெண்ணென்றால் வெறும் இயந்திரம் எனும் நினைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில ஆண்களுள் அவள் கணவன் முத்துவும் ஒருத்தனே எனும்போது ஆத்திரம் உடலுக்குள் அதிர்வைத் தோற்றுவித்தது. அடக்கிக் கொண்டாள் பத்மா. சிறு வயதிலிருந்து பழக்கப்பட்டிருந்த குடும்பக் கட்டுப்பாடும் பெண்மைக் குணங்களும் இன்னும் அவளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

குடும்பம் எனும் வண்டியை நகரச் செய்ய இந்நாட்களில் ஆண், பெண் இருவருமே கட்டாயமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டம். பத்மாவும் முத்தைப் போல் மாதம் ஐம்பதாயிரத்துக்கு மேல் உழைக்கின்றவள்தான். ஆனால் பெண் என்பதால் பலரும் விதிக்கின்ற கட்டுப்பாடுகள் அவளது சுதந்திரத்தை சிறை வைத்துள்ளன. 

கணவனின் ஒத்தாசைகள் கிடைக்காத வீட்டு வேலைகளைச் செய்கின்ற குடும்பத் தலைவி  அவள். இதனால் தினமும் அவளது மேனியில் ஊறும் வியர்வையினளவு அதிகம். குடும்ப வட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஓய்வின்றி சுழல்வதால் தன்னைக் கவனிக்கவே நேரமில்லை.

நாட்கள் தேயத் தேய அவள் மனமும் சலித்துப் போனது. பொறுமையும் எல்லை மீறிப் போனது. அன்பால் வழிநடத்த வேண்டிய கணவன் முத்து அதிகாரத்தினைப் பிரயோகித்து அடக்கியாள முயன்றான். சாதாரண பெண்ணுக்குக் கிடைக்கும் சுதந்திரம்கூட அவளுக்குள் இல்லை.   வேலைத் தளத்திற்கு அவளை ஏற்றி, இறக்குபவன் அவனே. தன்னுடன் வேலை செய்கின்ற பெண்களுடன் கூடக் கதைப்பதை விரும்பாதவன். சுற்றம், நட்பும் மாத்திரமல்ல அவளைத் தேடி உறவினர்கள்கூட வருவதில்லை.

மாத முடிவில் கிடைக்கும் சம்பளம் உடனடியாகவே அவனது வங்கிக் கணக்கிற்கு  சென்றுவிடும். அப்பணத்தில் அவள் கணக்குப் பார்த்தாலோ அல்லது தனது தேவைக்கு எடுத்தாலோ வீட்டில் பெரும் யுத்தமே வெடிக்கும். 

ஐந்து வயது மகள் திவ்வியா அவர்களின் சண்டையைப் பார்த்து பயந்து அழும்போது குழந்தையென்றும் பாராமல் மூர்க்கத்தனமாக அடிப்பான். குழந்தையின் உடலில் காணப்படும் இரணம் அவளது மனதைத் துண்டாக்கும். மகளின் வலியைக் குறைப்பதற்காக கணவனுடன் போராடுவதையே தவிர்த்தாள். ஆனால் அவ்வாழ்வின் நெருக்கடியை விதியென்று ஏற்க முடியவில்லை. அவனும் திருந்தவில்லை. முத்துவின் சந்தேகப் புத்தி அவளை கைபேசிப் பயன்படுத்தவும் அனுமதிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை அவன் உளவியல் குறைபாடுள்ளவன். சாதாரண உணர்ச்சிகளைக் கூட அனுமதிக்காத வக்கிரபுத்திக்காரன்.

அன்று.....

 இரவு விருந்தொன்றில் கலந்து கொள்ளச் சென்ற முத்து நடுநிசி தாண்டியும் வீடு திரும்பவில்லை. பயங்கர இருளைத் திணித்துக் கொண்டிருந்த பீதி அவளை ஆட்கொள்ளவில்லை. மனம்தான் இறுகி விட்டதே.!

நிசப்தம் கரைந்து பொழுதும் விடிந்த பின்னர்கூட, அவன் வீட்டுக்குத் திரும்பவில்லை. அப்பொழுதான் அவனுக்கு இன்னுமொரு குடும்பமும் இருக்கும் விடயம் அவளுக்குத் தெரிய வந்தது. அவளுக்குள் அருவருப்பு நெளிந்தது. இதுவரை தன் குடும்பம், சமூகம் எனும் கட்டமைப்புக்களுக்காக தனது கவலைகளை அடக்கிக் கொண்டவள் அச்சிறையிலிருந்து வெளியே வரத் துணிந்தாள்.

உத்தியோகம் புருஷ இலட்சணம் என்பார்கள். 

அவளதும் குழந்தையினதும் எதிர்காலத்தினை ஓட்ட அந்த வருமானம் போதும். ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாக தமது துணிகளை சிறு தோற்பைக்குள் திணித்தவளாக குழந்தையையும் அழைத்துக் கொண்டு முதன் முதலாக வீதிக்குள் காலடி பதித்தாள். மன உணர்வுகள் இலேசான பிரமை.  தான் வாழ்ந்த அவனது வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். இத்தனை நாட்கள் வாழ்ந்த அவ்வீடு அந்நியமான உணர்வுக்குள் காட்சியளித்தது. குட்டக் குட்டக் குனிபவர்கள் எல்லாக் காலமும் தோற்பதில்லை.  

சுதந்திரமான வெளிக்குள் பறப்பதைப் போன்ற பிரமைக்குள் வெளியேறினாள். இனி அவளும் பாரதி கண்ட புதுமைப் பெண்தான். தனது வாழ்வினை தானே தீர்மானிக்கின்ற, அடக்கியாள்பவர்களை எதிர்க்கின்ற துணிச்சலுள்ள பெண். 

தனது முடிவினை கடிதவரிகளில் எழுதியவளாக, அவனது பார்வைபடும் இடத்தில் வைத்துவிட்டு வெளியேறியவளை உலகம் எக்கோணத்திலும் நோக்கக் கூடும். சம்பிரதாயம்,  பண்பாடு ,அடங்கி வாழ்வதே கௌரவம் போன்ற வெளிப்பூச்சுக்குள் தன்னை ஒளித்து வைக்க இனி அவள் தயாரில்லை.

தெளிந்த மனதுடன்  வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். தொலைபுள்ளியில் அவளது தாய் வீடு தெரிய ஆரம்பித்தது.

ஜன்ஸி கபூர் - 16.10.2020



2020/08/03

வரம்

நீண்ட நேரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் அலைபேசியை இயக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் உஷா. கைபேசி அதிர்வை விட அவளின் மனம் கூடுதலாக படபடத்துக் கொண்டிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டி இதழ்கள் காற்றிலே அசைந்தாடி அந்தத் திகதியை காட்சிப்படுத்தியபோது மனதுக்குள் ஏனோ அமைதியின்மையை உணர்ந்தாள். இத்தனை நாட்களாக தனக்குள்ளேயே ஒரு வட்டத்தைக் கீறி வெளியுலகத் தொடர்பின்றி வாழ்பவளுக்கு கைபேசி அழைப்பு விசனத்தைக் கொடுத்தது. நிலத்திலே ஊன்றிக்கிடந்த தனது வலது காலைப் பார்த்தவளுக்கு மனசுக்குள் நறுக்கென்று முள் குத்திய பிரமை.

இரண்டு வயதில் அந்த ஊரில் வேகமாகப் பரவிய இளம் பிள்ளை வாத நோய் அவள் வாழ்வையும் முடக்கியது. பண்ணாத வைத்தியமில்லை. மனம்தான் புண்ணானது. நோய்த் தாக்கம் கண்ட கால் வளர்ச்சியடையாத நிலையில் ஒரு காலை இழுத்து இழுத்து நடப்பதற்கும் பழகிக் கொண்டாள்.

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. பருவம் அவளுக்குள்ளும் பூச்சூடியது. இருபதைக் கடந்த பேரழகி  இன்று. ஆனாலும் அடுத்தவர் கண்களுக்குள் புலப்படாத கால் ஊனம் அவள் மனதுக்குள் வலியைப் பிறாண்டிக் கொண்டிருந்தது.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை அவர்களை  அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. பொழுதுபோக்காக தைக்க ஆரம்பித்தவள் இன்று அதன் மூலமாக வருவாயும் ஈட்ட ஆரம்பித்துள்ளாள்.

மனம் ஒரு நிலையில்லாமல் தடுமாறியது.

அவன் ஜெகன்.....

அண்ணன் முகேஷின் நண்பன். அடிக்கடி வீட்டுக்கு வருவான்.
எதிர்பாராதவிதமாக தனிமையில் அவனும் அவளும் சந்திக்க நேரிட்ட அந்த நாளில்  வெளிப்படுத்தினான் தன் விருப்பத்தை.

'உஷா..........'

அவள் மௌனமாகவே நின்று கொண்டிருந்தாள்.

' ஏன்............உனக்குள்ளேயே உன்ன சிறைப்பிடிச்சு வச்சிருக்கிறே. வெளியே வா..... எனக்கு உன்ன ரொம்பப் பிடிச்சிருக்கு. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.

அவனின் காதலுக்குள் தாய்மை நிரம்பியிருந்தது. உணர்ந்தாள். ஆனாலும் உள்ளத்துத் துயர் அவள் மௌனத்தை அவிழ்க்க விடவில்லை. வீட்டுக்குள் மறைந்து கொண்டாள்.

அதன் பின்னரான முயற்சியாக ஜெகன் கைபேசியில் அவளைத் தொடர்பு கொள்ள முயன்றும் தோற்றுப் போனான். அவள் தனது பிடிவாதத்திலிருந்து இறங்குவதாக இல்லை. சிந்னையிலிருந்தவள் தாயாரின் குரல் கேட்டு சுயநினைவுக்குள் திரும்பினாள்.

'மக........... இங்க வாம்மா யாரு வந்திருக்கிறாங்னு பாரு'

அம்மாவின் குரல் கேட்டு வெளியே வந்தவள் அதிர்ந்து நின்றாள்.

அங்கே..................

ஜெகன் ......அவனது அம்மாவுடன் வந்திருந்தான். அவளுக்கு எல்லாம் புரிந்தது.  அம்மாவின்  நீளமான சந்தோச உரையாடலில் தாயாரின் சம்மதம் தொக்கி நிற்பதை உணர்ந்தாள்.

அவனோ இமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்;. அந்தப் பார்வையில் வழிந்த காதல் அன்பு பாசம் எல்லாமே ஒன்றிணைந்து அவனை அவளுக்குள் இமயமாய் உயர்த்தி வைத்தது.

அவன்.............

அவளுக்கான வரம்.........

முதன்முதலாக அவனது பார்வை அவளுக்குள் மகிழ்வைக் கிளற ஆரம்பித்தது. உதடுகள் அவளையுமறியாமல் நாணத்துடன் உரசி நின்றது. ஒரு புதிய வாழ்க்கை தன் கண் முன்னால் ஒளிர ஆரம்பிப்பதை உணர்ந்தாள் உஷா.

ஜன்ஸி கபூர்
 




 

2020/08/01

அன்புக்குப் பஞ்சமில்லை

 

'என்னப்பா....செய்யுது.......காய்ச்சல் காயுதே.......இந்த இரவுல ஆசுபத்திரிக்கு எப்படி போறது......எனக்கென்டா ஒன்னுமே புரியல'

கண்கலங்கிய சாரதாவை ஆறுதல்படுத்தினார் மணி.

'இங்க........பார் புள்ள எனக்கு ஒன்னுமில்ல லேசான காய்ச்சல்தான். நாளைக்குப் பார்க்கலாம்'

என்றவரை மீண்டும் இடைமறித்தாள் மனைவி சாரதா. 

'சொன்னா கேப்பியளோ.........ஒங்களுக்கென்ன மழயில நனைஞ்சிட்டு சும்மா இருமிட்டு இருப்பீங்க. என்ர மனுசு படுற வேதனை ஒங்களுக்குத் தெரியுமா' 

தான் அணிந்திருந்த சேலைத் தலைப்பால் தனது மூக்கை உறிஞ்சித் துடைத்தாள் அவள்.

'புரியுது சாரு........ஒனக்கு நான்........எனக்கு நீயுன்னு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அன்ப ஆண்டவன் உடைப்பான்னு நெனைக்கிறியா. பேசாம தூங்கும்மா...நாளைக்குப் பார்க்கலாம்'

என்றவரை கவலையுடன் பார்த்தாள் மனைவி. 

'சரி இந்த மாத்திரைகளையாவது குடிச்சிட்டுப் படுங்கோ என்னப்பா' 

என்றவாறு மனைவி கொடுத்த மாத்திரைகளை வாங்கி விழுங்கினார் மணி.

மணி சாரதா தம்பதியினருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. யாரிடம்  குறையிருக்கிறது என்பதை அவர்கள் தேடிப் பார்க்கவுமில்லை. மணி ஓய்வு பெற்ற அரச ஊழியர். அந்த ஊரில் நடைபெறும் எல்லா   விடயங்களிலும் அவரைக் காணலாம். 'மாஸ்டர் சுகமோ' என காண்பவர்களெல்லாம் கேட்டு விட்டே செல்வார்கள். அவரின் மனைவி சாரதா அவருக்கு முறைப்பெண் என்பதால் அன்புப் பொருத்தத்தை தவிர வேறெந்த பொருத்தத்தையும் குடும்பத்தார் பாராமலே  திருமணத்தில் இணைத்து வைத்தார்கள்.
  
'என்னங்க....இப்ப எப்படி இருக்குது'

இருளையும் துளைத்துக் கொண்டு வந்த அவளின் குரல் அவரை மெதுவாக உசுப்பியது. அவளைப் போல அவரும் தூங்காமல் தன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

'இப்ப பரவாயில்ல தூங்கு புள்ள'

அவரின் வார்த்தைகளில் நம்பிக்கையில்லாதவளாக அவரின் உடலைத் தொட்டுப் பார்த்தாள். மனசு லேசான உணர்வு. நிம்மதியாக உறங்கப் போனாள்.

இந்த உலகத்தில் சிறு துன்பம் வந்தாலே நெடுந் துயர் கொண்டு வருந்துகின்ற அன்புள்ளங்களை சம்பாதிப்பதே மிகப் பெரும் சேமிப்பு. அந்த இனிய தம்பதிகளின் அன்புக்குத்தான் பஞ்சமேது....ஆனந்த உலகம் அவர்களுக்காக விரிந்து கொண்டிருக்கிறது அழகாக.

ஜன்ஸி கபூர்  
 



 

2020/07/25

எதிர்பாராதது

 சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் மணி ஆறென்பதை உணர்த்தியதும் வனஜாவின் நெஞ்சுக்குள் ஏதோ பிசைய ஆரம்பித்தது. தன் முன் மேசையில் பரவிக்கிடக்கும் கோவைகள் அனைத்திற்கும் இன்று கையொப்பம் இட்டால்தானே நாளை அவற்றை உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். இந்த அலுவலகத்தில் முகாமைத்துவ அதிகாரியாக இருக்கும் அவளுக்குள் பயமெல்லாம் வேரூன்றக் கூடாதுதானே. மனதைத் திடப்படுத்திக் கொண்டவளாக தனது வேலையில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினாள். 

நிமிடங்கள் இரவுடன் கசியத் தொடங்கவும் அறையினுள் ஒளிர்ந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அணைத்து விட்டு வெளியேறத் தொடங்கினாள். கடைசிப் பேருந்தினை பிடித்துவிடலாம் எனும் நம்பிக்கை அவளை விரைவுபடுத்திய போது.      யாரோ பின்தொடரும்  ஓசை   கேட்கத் தொடங்கியது. நடையின் வேகத்தை துரிதப்படுத்தினாள். 
வீட்டில் அவளும் அம்மாவும்தான். தம்பி வெளி மாவட்டத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். சிறு குளியலொன்றையும் எடுத்தவள் அம்மா தூங்கியதும் தன்னறைக்குள் வந்தாள்.

அம்மா பாரிசவாத நோயினால் கடந்த இரண்டு வருடங்களாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவளைப் பொறுத்தவரை அம்மா  இன்னமும் சிறு குழந்தைதான். இயக்கமற்று நாற்காலியே கதியென்று வாழும் அவரைக் கவனிக்க   ஏற்பாடும் செய்திருந்தாள்.

உறக்கம் கண்களைச் சுழற்ற தன்னறைக்குள் திரும்பியவள் அதிர்ந்தாள். மீண்டும் காலடிச் சப்தம் அருகில் கேட்கத் தொடங்கியது. பிரமையோ தன்னைச் சமாதானப்படுத்த முயன்றாலும்கூட அவளது அடிமனமோ மீண்டும் அச்சத்தில் உறைய ஆரம்பித்தது.

திடீரென அவளது கண்முன்னே அவன் நின்று கொண்டிருந்தான். 

வயது முப்பதுக்குள்.....

முகக் கவசத்தினால் தன்னை மறைத்திருந்தான். கையில் வைத்திருந்த கைத் துப்பாக்கி அவளது நெஞ்சின் முன்னால் நீண்டு பயமுறுத்திக் கொண்டிருந்தது. அவன் திருடனென்பதைப் புரிந்து கொண்டாள். 

'வீட்டு பீரோச் சாவியைக் குடு'

'ஓ..இதுதான் காரணமா என தனக்குள் சொல்லிக் கொண்டு' அவனது கட்டளைக்கு இயங்க ஆரம்பித்தாள். சப்தம் போட்டால் அம்மா பயப்படுவாரென்ன கவலை அவளுக்குள்.

'அவள் கண்முன்னே....... அலுமாரி திறக்கப்பட்டு பொருட்கள் வீசப்பட்டன. அவன் எதையோ தேட ஆரம்பித்தான். அவன் தேடி வந்த பொருள் கிடைக்கவில்லைபோலும். கண்ணுக்குள் அகப்பட்ட பொருட்களை எட்டி உதைத்து தன் ஆத்திரத்தை தீர்த்தவன் வந்த வேகத்திலே மறைந்தும் போனான்.

அம்மாவின் அறையினை மெல்ல எட்டிப் பார்த்தாள் வனிதா. அம்மா கலவரத்தோடு போராடிக் கொண்டிருப்பது புரிந்தது.

'யாரு மக...........'

'அவள் விடயம் சொன்னதும் அம்மாவின் முகம் பயத்தில் இறுகத் தொடங்கியது.

'அம்மா பயப்பிடாதீங்கோ....அவன் இனி இந்தப் பக்கம் வரமாட்டான். கொஞ்ச நாளா யாரோ என்னைப் பின்தொடர்ந்தாங்க. எனக்கு சந்தேகமா இருந்திச்சு. அதான் வீட்டிலிருந்த நம்ம நகையையெல்லாம் வங்கிப் பெட்டகத்தில நேற்றே பாதுகாப்பா வைச்சிட்டேன். விடிஞ்சதும் பொலிஸுக்கு போகலாம்மா.'  

 என்ற வனிதாவிடம் திருடனைத் தந்திரத்தில் வென்ற மகிழ்ச்சி வெளிப்பட்டது.   தனது எதிர்பார்ப்பு திருடனுக்குள் எதிர்பாராத முடிவைக் கொடுத்த திருப்தியுடன் உறங்கச் சென்றாள் அவள்.  

ஜன்ஸி கபூர் 
 







2020/07/19

காத்திருப்பு


கருப்பாயி.................!

தோட்டத்துரையின் குரல் சற்று அதிகாரமாக ஒலித்தபோது உறிஞ்சிக் கொண்டிருந்த தேயிலைக் கோப்பையை கீழே வைத்தவளாக ஓடிச் சென்றாள் அருகே....

துரையின் பார்வையில் சூடு கொதித்துக் கொண்டிருந்தது. அவர் கோபிக்கும் அளவிற்கு தான் செய்த தப்பு என்ன.... அவனால் அனுமானிக்க முடியவில்லை.

'ஐயா..........'

அப்பாவித்தனமாய் அவரைப் பார்த்தாள்.

'இப்ப நேரம் என்ன......எத்தனை கூடை கொழுந்து பறிச்சே'

'ஓ.....இன்று கொஞ்ச நேரம் தாமதித்து வந்ததற்கான விசாரணதானா இது'

மனம் காரணத்தைக் கண்டறிந்தது. தாமதித்து வேலைக்கு வந்தால் அவளது நாட்கூலிதானே குறையும். இது அவளுக்கும் தெரிந்ததுதானே. ஆனாலும் வரமுடியாத சூழ்நிலை. கொதிக்கும் அனலோடு வந்திருக்கிறாள். அவளுக்கென்று இந்த உலகத்தில் இருப்பது எண்பது வயது அப்பத்தா மாத்திரம்தானே. அவள் பிறந்ததும் அம்மா இறந்து விட்டதாகச் சொன்னார்கள். குடிகார அப்பாவோ   இவளைக் கைவிட்டுவிட்டு யாரோ ஒருத்தியின் பின்னால் ஓடிவிட்டதாக ஊரார் பரிகசித்தார்கள்;. வறுமையுடன் அல்லல்பட்ட இந்த வாழ்வே வெறுத்துப் போய்விட்டது. இருந்தும் அவளை நம்பி வாழும் அப்பத்தாக்காக  வாழ்ந்தே ஆக வேண்டும். அழகை ரசிக்கும் இந்த உலகம் முகத்தில் தழும்புகளுடன் பிறந்த அவளை சற்று ஒதுக்கியே வைத்து விட்டது. தன்னை நிராகரிப்பவர்களின் பின்னால் சரணடைந்து ஓட அவளும் தயாரில்லை. இந்த சமூகத்தில் தன்னையும் நிலைநிறுத்தும் அவளின் போராட்டம் தொடர்ந்தே கொண்டே இருக்கிறது. காலையில் அப்பத்தாக்கு உடம்பு கொஞ்சம் முடியாமலிருந்தது. அவருக்கு கசாயம் வைத்துக் கொடுத்தாள். நாட்டுப்புற வைத்தியம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பத்தா முன்பு சொல்லிக் கொடுத்த கை வைத்தியங்களின் பலனாக தன்னை நாடி வருவோருக்கு ஏதோ தன்னாலான கை வைத்திய உதவிகளை செய்து கொடுப்பதில் திருப்தியை உணர்கிறாள் கருப்பாயி.

'விசாரணைக் கைதியாக குறுகி நிற்பவள் இந்தத் துரையிடம் தன்னை நியாயப்படுத்த விரும்பவில்லை. நியாயம் கிடைக்காத இடத்தில் வாதிட்டு என்ன பயன். சுகவீனமுற்றிருக்கும் அப்பத்தாவின் நினைவும் மனதை வருத்திக் கொண்டிருந்தது. லீவு கேட்டாலும் தரமாட்டாங்க. கஞ்சி குடிக்கிற காசில கொஞ்சத்தை வெட்டும்போது அந்த ஈர் உயிர்களும் பட்;டினியால் வாட வேண்டுமே. முழித்திருந்து விடிய விடிய அப்பத்தாவை கவனித்ததில் அவளது உடலும் சற்று அசௌகரிகப்பட்டது போன்ற பிரமை. நண்பகல் 12 மணிக்குள்ள அஞ்சு கூடையாவது கொழுந்து பறிக்கணும். மனதால் தன்னை தயார்படுத்தினாள்.

'என்ன பேசாம நிற்கிறே. போ அந்தப் பக்கம் நெறைய கொழுந்திருக்கு பிய்ச்சுட்டு வா'

துரை சுட்டிக் காட்டிய திசையில் விழிகள் குத்தி நின்றதும் லேசான படபடப்பை உணர்ந்தாள். அந்தப் பகுதியில் உள்ள மரங்களில் பெரிய பெரிய குளவிக் கூடுகள் இருப்பதை அவள் அறிவாள். துரைக்குப் பிடித்தவர்கள் அந்தப் பக்கம் செல்வதில்லை. யாராவது இப்படி மாட்டிக் கொண்டால் பலிவாங்குவதைப் போல் அந்தக் குளவிகளுக்கு இரையாக்குவதில் கொடூர இன்பம் போல்.

வேறு வழியின்றி வயிற்றுப் பசி தணிக்கும் அந்த நாட்கூலிக்காக துரை கூறிய பகுதியில் கொழுந்து பறிக்கச் சென்றாள். அங்கே ஓரிரு முகங்கள் தெரிந்ததும் மனம் சற்று ஆறுதலடைந்தது. மனதுக்குள் இறைவனை துதித்தவளாக கொழுந்து பறித்து முதுகில் சுமந்து கொண்டிருந்த கூடைக்குள் போடத் தொடங்கினாள். சிறிது நேரத்தில்,

'கிர்...கிர்...........'

தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்த குளவிக் கூட்டங்கள் அவளை மொய்க்கத் தொடங்கின. உயிருக்குள் தீ வார்த்த பிரமை.

'ஐயோ...........'

அவளின் சப்தம் கேட்டு அருகிலிருந்தோர் அவளை நெருங்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆவர்களின் ஆரவாரச் சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக அவளது ஞாபகத்திலிருந்து குறைந்து போக ஆரம்பித்தது. கண்களும் மயக்கத்தில் சொருவ ஆரம்பித்தது. அந்த மயக்கநிலையிலும் அப்பத்தாவை நினைத்துபோலும் அவளது கன்னங்கள் கண்ணீரால் நனையத் தொடங்கின.
அங்கே... அவள் குறித்த நேரத்தில் வருவாளென்ற நம்பிக்கையில் அப்பத்தா காத்துக் கொண்டிருக்கிறார்.

ஜன்ஸி கபூர் - 19.07.2020
யாழ்ப்பாணம்




2020/07/16

மகிழ்ச்சிப் பயணம்

தங்கமாக ஜொலித்துக் கொண்டிருந்த பூரண நிலவின் முகம் யன்னல் கண்ணாடிக்குள் கசிந்து கொண்டிருந்தது. உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் ஜனனி எனும் ஏழு வயதுச் சிறுமி. 

'நள்ளிரவில் காணும் கனவுகள் பலிக்குமென்று அம்மா சொன்னாவே! ஒருவேளை இந்தக் கனவும் பலித்து விட்டால் '

அச்சமும்இ ஆர்வமும் பிசைந்த கலவையாக மனமும் இறுகிக் கொண்டது. சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் மணி இரண்டு என்பதை உணர்த்திக்; கொண்டிருந்தது. பக்கத்தில் அம்மா தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவும் இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டார். ஆர்வம் அவளைத் தைரியபபடுத்தியது. யாருமறியாமல் வீட்டு முன்வாசல் கதவைத் திறந்தாள். குளிர்மையான தென்றல் காற்றில் உடல் விறைப்பதைப் போன்ற பிரமை. 

அங்கே.............!

கனவில் கண்ட அதே வெள்ளைக் குதிரை வாசலில் இவளுக்காகக் காத்திருந்தது. ஆர்வத்தில் அருகில் சென்று குதிரையைத் தொட்டாள். கண்ணிமைக்கும் நொடிக்குள் குதிரைக்குள் இரண்டு இறக்கைகள் முளைத்தன.

 'பயப்படாமல் சீக்கிரம் என்மீது ஏறு. உனக்கொரு அதிசயம் காட்டுகிறேன்' 

எனக் குதிரை சொன்னதும் வேகமாக மறுத்தாள்.

'வீட்டுக்குத் தெரிஞ்சா ஏசுவாங்க ............. நான் வரல நீ போ' 

என்றாள். மனம் போக விரும்பினாலும் உதடுகள் மறுப்பை வெளிப்படுத்தின. 

ஆனாலும் குதிரை அவளை விட்டு நகரவேயில்லை. திடீரென்று மரங்களைச் சுழற்றியவாறு வேகமான காற்று வீசத் தொடங்கியது. ஜனனிக்குள் மயக்கம் வருவதைப் போன்ற பிரமை. தன்னையுமறியாமல் மந்திரத்தில் கட்டுப்பட்டவளாக   குதிரையில் ஏறி அமர்ந்தாள். எல்லாம் கனவுபோல் சுழலத் தொடங்கியது. குதிரையும் வேகமாகப் பறக்கத் தொடங்கியது. ஓரிடத்தை அடைந்ததும் குதிரை தனது பயணத்தை நிறுத்தியது. இறங்கினாள் மெதுவாக.

'இது எந்த இடம்........:'

பாதி மயக்கத்திலிருந்து விழித்தவளாக கேட்டாள்.

அவளைப் பார்த்து மாயக் குதிரையும் சிரிக்கத் தொடங்கியது. 'குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்த மாயக்குதிரை திடீரென தன் சிரிப்பை நிறுத்தியதும்இ அவள் திகைத்துப்போய் திரும்பிப் பார்க்க அங்கே...'

ஒளி பிம்பமொன்று  அவளருகில் வந்து நின்றது.  ஆச்சரியத்தில் ஜனனியின் கண்கள் விரிந்தன. இத்தனை நாட்களாக தனது வீட்ட முற்றத்திலிருந்து பார்த்துப் பார்த்து ரசித்த பௌர்ணமி நிலாவின் அருகிலா அவள்? நம்பவே முடியவில்லை. மாயக்குதிரையின் இறக்கைகளை பௌர்ணமி வருடிக் கொண்டிருந்தாள்.

' நீ சின்னக் குழந்தையாக இருக்கும்போதே என்னைக் காட்டி சோறு ஊட்டினாத்தான் நீயும் சாப்பிடுவே. அப்போ உனக்கு ஐந்து வயதிருக்கும். ஒருநாள் என்னைக் கூட்டிக் கொண்டு வரும்படி உங்க அம்மாக்கிட்ட சொல்லி ரொம்ப நேரமா அழுதே. அப்பவே உன்னை இங்கே கூட்டிக் கொண்டு வரணுமென்று நினைச்சேன். ஆனால் ஒரு குறித்த நாளில்தான் என்னுடைய ஒளியும் வெப்பமும் மனிதர்களுக்கு தீங்கு செய்யாது.   அந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன். இன்றுதான் அந்த நாள். வா வானத்தைச் சுற்றிப் பார்க்கலாம்'

என்றதும் ஜனனிக்குள்ளும் இறக்கை முளைத்த உணர்வு. மாயக் குதிரையும் பௌணமிச் சந்திரனும் விடியும் வரை வானத்தை சுற்றிக் காட்டி மகிழ்வூட்டினார்கள். 

விடியல் ஆரம்பிக்கும் நேரம் மாயக்குதிரை யாருமறியாமல் ஜனனியை வீட்டில் இறக்கி விட்டது. அவளும் எதுவும் நடக்காததைப் போல் அம்மாவுக்கு அருகில் உறங்குவதுபோல் பாவனை செய்யத் தொடங்கினாள்.

ஜன்ஸி கபூர்  




2020/07/11

எதிர்பார்ப்புக்கள் (சித்திரக்கதை)


'பானு... ஏம்மா.....எப்பா பாரு இந்தப் பெட்டியை நோண்டிக்கிட்டுதானே இருக்கிறே.   எனக்கும் வயசாச்சு. இந்த சமையலக் கத்துக்கிட்டாத்தானே நாளைக்கு வாக்கப்படப் போற வீட்டிலும் வாழலாம்'

பாட்டியின் முணுமுணுப்பை காதில் வாங்காதவளாக, பானு மடிக்கணனியில் எதையோ தேடிக் கொண்டு இருந்தாள். அவளின் மௌனம் பாட்டியின் கோபத்தை கொஞ்சம் அதிகரித்தது.  

பானுவும் மடிக்கணனியை நிறுத்தியவளாக, பாட்டி சொன்ன சமையல் உதவிகளைச் செய்யத் தொடங்கினாள். கண்களிலிருந்து இரகஸியமாக கண்ணீர் வழியத் தொடங்கியது.  

வறுமை வழியும் இந்த வாழ்க்கையோடு தன்னை நிலைப்படுத்த பானு ஒவ்வொரு கணமும் போராடிக் கொண்டிருக்கின்றாள். அவளுக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே   விபத்தொன்றில் பெற்றவர்கள் இறந்து போனார்கள். அன்றிலிருந்து இந்த  பாட்டிதான் அவளது உலகம். அயல் வீடுகளுக்குச் சென்று உழைக்கும் பாட்டியின் வருமானமே அவர்கள் இருவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தனது கிராம ஏழை மக்களுக்கு வைத்தியராகச் சேவை செய்ய வேண்டுமென்ற இலக்கோடு பானுவும் கல்விக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள். அவளது முயற்சி, திறமை கண்டு அரசு வழங்கும் புலமைப்பரிசிலுடன்  சில தனவந்தர்களும் படிப்பதற்கு உதவி செய்வதனால் அவளுக்கான க.பொ.த.உயர்தர விஞ்ஞானப்பிரிவில் கற்பதற்கான வாய்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் பரீட்சையும் நெருங்க இருப்பதனால் அவளது முழுக்கவனமும் படிப்பிலேயே இருந்தது.  

இது கொரோனாக் காலம். திடீர் விடுமுறையிலிருக்கும் பாடசாலைகளில் பரீட்சையை இலக்காக வைத்து இணையவழியிலான வகுப்புகள் நடைபெறுவதால் பானுவுக்கும் அவ்வூர் தனவந்தர் மடிக்கணனியொன்றை அன்பளிப்புச் செய்தார். அவளும் தனது மடிக்கணனி மூலம் தினமும் கல்வியுலகிற்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தாள்.

பாவம் பாட்டி...அந்தக் கால மனுஷி. வீட்டுக்குள்ளேயே உலகமென்று வாழ்ந்து வருபவர். இந்த இணையவழிக் கல்வி பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ எதுவுமே அறிந்திருக்கவில்லை. தனது வயோதிப இயலாமையும் நோய் நிலைமையும் தன்னைச் சார்ந்திருக்கும் பானுவின்மீது கோபப்பட வைக்கின்றது.  

வீட்டுக்கடிகாரம் காலை எட்டு மணி என்பதை தெரியப்படுத்தத் தொடங்கும்போதுதான் பானுவின் மனசும் பதறத் தொடங்கியது.

'பாட்டி..........நான் படிக்கப் போகணும். இப்ப பள்ளிக்கூடம் விடுமுறை என்டாலும் இணையவழியில் படிப்பிச்சு தாராங்க. பொறகு பரீட்சையும் வைப்பாங்க. அதில கூடப் புள்ளி எடுத்தா புலமைப்பரிசிலா காசு கொடுப்பாங்க. என்ட படிப்புக்கும் இந்த உதவி கிடைச்சா நல்லதுதானே பாட்டி..........' 

என்றவளுக்கு, பாட்டியின் அனுமதி கிடைக்கவே சிட்டென பறந்தாள் மடிக்கணனி அருகில்.

அந்த இணையவழி நிகழ் பரீட்சை ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. அவசர அவசரமாக குறித்த கற்றல் இணைய முகவரியைத் தேடி தன்னையும் குறித்த நிகழ் நிலைப் பரீட்சைக்குத் தயாராக்கினாள். கணனித் திரையில் தென்பட்ட வினாக்கள் விழிகளில் வீழ்ந்ததும் மகிழ்ச்சி சிறகடித்தது. அவள் கற்றது வீண்போகவில்லை. எல்லாவற்றுக்கும் திருப்தியுடன் விடையளித்தாள். மனக் கண்ணில் புலமைப்பரிசில் கனவு அழகாய் விரிந்தது. 

'பாட்டி' 

தன்னையுமறியாது மகிழ்ச்சியில் கத்தினாள் பானு.

பாட்டியோ எதுவுமே புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம், எங்கிருந்தோ கூவும் குயிலின் நாதம் அந்த ஏழைக் குடிசைக்குள்ளும் இனிமையை நிரப்பிக் கொண்டிருந்தது. .

ஜன்ஸி கபூர் - 11.07.2020






2020/06/29

இன்ப அதிர்ச்சி - நுண் கதை

அன்று அவள் பெயருக்கு வந்திருந்த தபாலை விரித்துப் படித்தாள் சுகன்யா. ஆச்சரியத்தில் விழிகள் விரிந்து துடித்தன.

' அம்மோய்'  எனக்கு நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் வந்திருக்குது.

அவளின்  உற்சாகம் அம்மாவுக்குள்ளும் மகிழ்ச்சியை ஊற்றியது. தான் ஆசிரியராக வர வேண்டுமென்ற அவளின் கனவு நிறைவேறியதை எண்ணி அந்தத் தாயுள்ளம் மகளை வாரி அணைத்தது.

'மகள்................ நல்ல உடுப்பு வேணுமல்லா போட்டுக்கொண்டு போக'

அம்மா தனது கவலையை வெளிப்படுத்தினார்.

'அம்மா............உங்ககிட்ட இருக்கிற சாறில ஒன்னு தாங்கம்மா. அது போதும்.'

தன்னடக்கத்துடன் கூறிய மகளை பெருமிதத்துடன் பார்த்தார் தாய். வறுமையிலும் வாழப் பழகிய தனது மகள் தனக்குக் கிடைத்த பொக்கிசமாகவே தெரிந்தாள்.

'அம்மா லாட்டரி டிக்கற்'

லாட்டரி சீட்டுக்காரன் அவர்கள் வீட்டுக்கதவைத் தட்டினான். எப்போதாவது ஒரு நாள்  இவர்கள் வீட்டுக்கு பக்கம் எட்டிப் பார்ப்பான். எவ்வளவு கஷ்டத்திலும் நம்பிக்கையுடன் இருபது ரூபா சுரண்டல் லாட்டரி சீட்டினை வாங்குவார்கள். இன்றும் இருபது ரூபாவுக்கு வாங்கிச் சுரண்டினாள் சுகன்யா. 
ஒரே ஒரு நொடி.......கண்கள் மலர்ச்சியுடன்.................. அம்மாவைப் பார்த்தாள்.

'அம்மா ...ஆயிரம் ரூபா பரிசு கிடைத்திருக்கு'

அவள் வார்த்தைகள் அறுந்து கண்கள் நனைந்தன. அவளுக்கு கிடைக்கவுள்ள தொழில் ஓன்றுக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசாகவே அப்பணத்தை நினைத்தாள்.

ஒவ்வொரு துன்பத்திற்கும் தீர்வாக இன்பம் காத்திருக்கும். ஆனால் அதை நாம் கண்டறிவதற்குள் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

ஜன்ஸி கபூர்

- 29.06.2020

 

Comments


2020/06/28

காணாமல் போன சைக்கிள் (தந்திரக்கதைகள்)

மனசு ஏனோ வலியால் துடித்தது.. அவள் பேச்சை அப்பா பாலா கேட்பதாக இல்லை. வெளியே போவதற்கு ஆயத்;தமாக செருப்பை அணிந்து கொண்டிருந்தார். பவானி பின்னால் ஓடி வந்தவளாக,
"இப்ப நீங்க போகத்தான் வேணுமாப்பா, சரியான வெயிலப்பா"
வயது போகப் போக வைராக்கியமும் கூடி விடுகின்றது போலும். மகளின் வார்த்தைகளை காதில் ஏந்தாதவராக வெளியேறினார்
'அம்மா ..............அம்மா'
விசும்பிக் கொண்டிருந்தான் ஆறு வயது மகன் தனுஜன். அவனது பிறந்தநாளைக்காக போன கிழமைதான் அப்பா வாங்கிக் கொடுத்த குட்டிச் சைக்கிள் காலையில் காணாமல் போயிருந்தது. அந்தச் சைக்கிள் மகனின் கனவு என்பதும் அதனை வாங்குவதற்காக அப்பா கஷ்டப்பட்டு பணம் சேர்த்ததும் ஞாபகத்தில் விழ கண்களை கசக்கிக் கொண்டாள். யாரோ களவெடுத்து விட்டார்கள். எடுத்தவர்களுக்கு அது வெறும் பொருள் தான். ஆனால் அவள் மகனுக்கு அதுதானே உயிர். விபத்தில் கணவனை இழந்து வாழ்பவளுக்கு இருக்கும் சொத்து மகனும் அப்பாவும்தானே. வேதனை அதிகரிக்க கண்ணீர் கன்னத்தில் உறைந்தது.
"கடைசியாக வீட்டிற்கு வந்து போன கோபி மீது அப்பாக்கு சந்தேகம் வர, அவனது வீட்டுக்குத்தான் போறார். ஒருவேளை அவன் எடுக்காட்டி பிரச்சனையாகுமே.' பயந்தாள்.
கோபி அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வருவான். அக்கா....அக்கா...என்று வளைந்து வீட்டுவேலை யெல்லாம் செய்து கொடுப்பான். தனுஜன சைக்கிளில் வைத்து உருட்டுவான்.
"இந்த குடிகாரப் பயல வீட்டு வாசல்ல எடுக்காதே'
என்று அப்பா அவனைக் காணும் ஒவ்வொரு முறையும் சத்தம் போடுவார். கோபியின் வீடு அடுத்த தெருவில்தான் இருக்கிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் அவனது வீட்டுக்குத்தான் பாலா சென்றிருந்தார். கதவைத் தட்டினார். கதவைத் திறந்த கோபியின் மனைவி கலவரத்துடன் அவரைப் பார்த்தாள்.
சப்தம் கேட்டு உள்ளேயிருந்த கோபியும் வெளியே ஓடி வந்தான். தந்திரமாக தனுஜனின் குட்டிச் சைக்கிளை வீட்டுக்கு கொண்டு வந்ததை மோப்பம் பிடித்து விட்டாரோ எனும் பீதியில் அவன் முகமெல்லாம் பேயறைந்த பீதியில் கறுத்தது.
அவனைக் கண்டதும் எதுவும் சொல்லாமல் அருகில் கிடந்த கதிரையொன்றை தானே இழுத்துப் போட்டவராக பாலா உட்கார்ந்தார்.
"ஐயா திடீரென்று வீட்டுப் பக்கம்'
எதுவும் தெரியாதவன்போல் கோபி; வார்த்தைகளை இழுத்தான்.
"உன்னப் பாக்கத்தான்"
என்றவாறு எல்லாப் பக்கமும் நோட்டமிட்டார். வீட்டுத்தோட்டத்தின் ஓர் மூலையில் அவர் பேரனின் குட்டிச்;சைக்கிள் தெரிந்தது.
"அதைக் கண்டதும் அவர் கண்கள் விரிய உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்'
ஒரு சில கணங்கள்தான் அந்த உற்சாகம் கரைய, கோபத்துடன் பாய்ந்து அவனது பெனியனைப் பிடித்து உலுக்கினார்'.
'உன்ன பொலிஸில புடிச்சுக் குடுக்கிறன். என்ட பேரன்ட சைக்கிள களவெடுத்தியா' கத்தினார்.
'ஐயா மன்னிச்சிடுங்கய்யா. தெரியாம கஷ்டத்தில எடுத்திட்டார்'
அருகில் அவனது மனைவி கெஞ்சி அழுதாள்.
"குடிகாரப் பயல். குடிக்கத்தான் களவு எடுத்திருக்கிறான்.. தர்ம அடி கிடைச்சாத்தான் திருந்துவான்"
அவர் கோபம் குறையவில்லை. தலையைக் குனிந்து கொண்டிருந்த கோபியோ மௌனமாக நின்று கொண்டிருந்தான்.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. கோபி மனைவியின் கண்ணீர் பாலாவின் தீர்மானத்தை மாற்றவும் கோபியை எச்சரித்தவாறே பேரனின் குட்டிச் சைக்கிளுடன் வெளியேறினார்.
ஜன்ஸி கபூர்



2020/06/15

நட்பே துணை


'அவள் கணவன் இறந்த செய்தி  இடியாய் இறங்கியது. அவள் மனதில் துளிர்த்திருந்த/ எதிர்கால கனவுகள் எதிர்பார்ப்புக்கள் அனைத்துமே ஒரு நொடியில் காணாமல் போயின. இனி ஒன்றுமே இல்லை.  அழுவதைத்தவிர......

'அம்மா பசிக்குது'/

மெல்லிய குரலில் விசும்பிய  மூன்று வயது மகள் அனுஜாவை அணைத்தவாறே கண்ணீரில் கரைந்தாள் செல்லம்மா.

செல்லம்மா............ வறுமைப்பட்ட பெற்றோருக்கு செல்லமாகப் பிறந்த மகள்தான். பெற்றோரின் ஆசியுடன் , கூலித் தொழிலாளி நடேசனுடன் வாழ்வில் இணைந்தாள். அவ் வசந்த வாழ்வின் பொக்கிஷமாக அனுஜா

அன்று ஒரு மாலைப்பொழுதில் வேலைக்குச் சென்றவன்  உரிய நேரத்திற்கு வீடு திரும்பவில்ல.
அந்த இரவு கண்ணீரில் கரைந்தது.

மறுநாள்..........

அதிகாலை காவல் நிலையத்திலிருந்து கைபேசி அழைப்பு வந்தது. விபரம் சொன்னார்கள்.

மரக்கிளைகளை வெட்டும்போது/ கால் தவறி வீழ்ந்து பிணமாகி இருந்தான் அவள் கவலைக்குள் மூழ்கி விரக்தியடைந்தாள்.
 
யார் யாரோ எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்தார்கள்.

ஆனாலும் வாழ்க்கை இன்னும் முற்றுப் பெறவில்லை.
மகளின் வாழ்வுக்கான ஆரம்பமாக இருந்தது./ வாழ்ந்துதான் ஆக வேண்டும்

சிந்தனைக்கோலங்களில் சிறைப்பட்டிருந்தவளை யாரோ சுயநினைவுக்குள் இழுத்தார்கள்.மெல்ல நிமிர்ந்தாள்..

எதிரே...........

சோகத்தின் இறுக்கத்திலும் கண்கள் ஆச்சரியப்பட்டு விரிந்தன.

'பவ்யா'........சிரிக்க முயன்றாள்.  சிறைப்பட்டிருந்த சோகம் வென்றது.

தன் பள்ளிக்கூட நண்பியை இத்தனை வருடங்களின் பின் சந்திப்பாளென்று கனவில்கூட அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.நண்பியின் விழிகளில் வழியும் கண்ணீர் அவளை இன்னும் உசுப்பேத்தி இருக்க வேண்டும்.  அழுகை வெடித்தது. தோழியை சிறு குழந்தையாய் அணைத்தாள்.

'எல்லாம் கேள்விப்பட்டேன். இனி உனக்கு யாரும் இல்லையென்று நினைக்காதே. உனக்கு நான் இருக்கிறேனடி.. உன்னோட வாழ்க்கை இன்னும் அழிஞ்சு போகல  செல்லம்"
.
என்றவாறு அணைத்த தன் தோழியின் கரங்களுக்குள் சிறைப்பட்டாள் செல்லம்மா.

கண்ணீர் சோகம் கலந்த ஆனந்தத்தின் கலவையாக மாறிக் கொண்டது. அறுந்து போன அவள் வாழ்க்கை . நட்பின் துணையால் மீண்டும் தளிர்க்க ஆயத்தமாகிக் கொண்டது.

கதையாக்கம்
ஜன்ஸி கபூர்

2020/06/14

நட்பே துணை


'அவன்......அவள் கணவன் இறந்த செய்தி இடியாய் இறங்கியது.

அவள் மனதில் துளிர்த்திருந்த எதிர்கால கனவுகள் ,எதிர்பார்ப்புக்கள் அனைத்துமே ஒரு நொடியில் காணாமல் போயின.

இனி ஒன்றுமே இல்லை. அழுவதைத்தவிர.......!

'அம்மா பசிக்குது'

என மெல்லிய குரலில் விசும்பிய மூன்று வயது மகள் அனுஜாவை அணைத்தவாறே கண்ணீரில் கரைந்தாள் செல்லம்மா.

செல்லம்மா............

வறுமைப்பட்ட பெற்றோருக்கு செல்லமாகப் பிறந்த மகள்தான். இளமையிற் கொடிது வறுமை என்பார்களே...அந்த வறுமையின் வலியின் முன்னே வாழ்க்கை தோற்றுப் போனது.

சீதனம் எனும் அரக்கன் விதியின் முன்னே  பண்பான அவளது நற்குணத்திற்காக வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டான் நடேசன்

பெற்றோரின்  ஆசியுடன் கூலித் தொழிலாளி நடேசனுடன் வாழ்வில் இணைந்தாள். அவ் வசந்த வாழ்வின் பொக்கிஷமாக அனுஜா

கூலித் தொழிலாளி என்பதால் நீண்ட பொழுதுகள் அலைந்து திரிந்தால்தான் கொஞ்சமாவது பணம் கிடைக்கும்.

அன்றாடம் உழைக்கும் வருமானத்தில் கடன் தொல்லையில்லாத நிம்மதியான வாழ்க்கை.

அன்று ஒரு மாலைப்பொழுதில் வேலைக்குச் சென்றவன் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவில்லை. துடித்தாள். அந்த இரவு கண்ணீரில் கரைந்தது.

மறுநாள்..........

அதிகாலை காவல் நிலையத்திலிருந்து கைபேசி அழைப்பு வந்தது.

விபரம் சொன்னார்கள்.

உயிருடன் சென்றவன் பிணமாகி இருந்தான்.

மரக்கிளைகளை வெட்டும்போது கால் தவறி வீழ்ந்து மரணம் அது.

அவள் கவலைக்குள் மூழ்கி விரக்தியடைந்தாள்.  உணர்ச்சியற்றவளாக மாறியிருந்தாள்.

யார் யாரோ எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்தார்கள்.

ஆனாலும் வாழ்க்கை இன்னும் முற்றுப் பெறவில்லை. மகளின் வாழ்வுக்கான ஆரம்பமாக இருந்தது.வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

சிந்தனைக்கோலங்களில் சிறைப்பட்டிருந்தவளை யாரோ சுயநினைவுக்குள் இழுத்தார்கள்.

 மெல்ல நிமிர்ந்தாள்.

எதிரே...........

சோகத்தின் இறுக்கத்திலும் ஆச்சரியப்பட்டு கண்கள் விரிந்தன.

'பவ்யா'

சிரிக்க முயன்றாள். சிறைப்பட்டிருந்த சோகம் வென்றது.

தன் பள்ளிக்கூட நண்பியை இத்தனை வருடங்களின் பின் சந்திப்பாளென்று கனவில்கூட அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

நண்பியின் விழிகளில் வழியும் கண்ணீர் அவளை இன்னும் உசுப்பேத்தி இருக்க வேண்டும். அழுகை வெடித்தது. தோழியை சிறு குழந்தையாய் அணைத்தாள்.

'எல்லாம் கேள்விப்பட்டேன்.  இனி உனக்கு யாரும் இல்லையென்று நினைக்காதே. உனக்கு நான் இருக்கிறேனடி. நம்ம அன்புக்கு அவ்வளவு சக்தி இருக்கடி. உன்னோட வாழ்க்கை இன்னும் அழிஞ்சு போகல செல்லம்.
உன் பொண்ணுக்கு இனி இரண்டு அம்மாடி'

தன் தோழியின் கரங்களுக்குள் சிறைப்பட்டாள் செல்லம்மா.

கண்ணீர் சோகம் கலந்த ஆனந்தத்தின் கலவையாக மாறிக் கொண்டது.
அறுந்து போன அவள் வாழ்க்கை.  நட்பின் துணையால் மீண்டும் தளிர்க்க ஆயத்தமாகிக் கொண்டது. 

கதையாக்கம்  
ஜன்ஸி கபூர்


2014/08/16

அந்தக் கடைசி நிமிடங்கள்



அந்தக் கடைசி நிமிடங்கள்
----------------------------------------------
இருள் கௌவும் நேரம்.....

உடல் அதிகமாக வியர்க்கும் உணர்வு. மெல்லத் தலையை உயர்த்த முயற்சிக்கின்றேன். முடியவில்லை.

உஷ்ணம்................

மூச்சுக் காற்றில் உட்காந்து விளையாட ஆரம்பித்தது. ஆனாலும் வியர்வையால் நனைந்து போன உடல் மட்டும் ஜில்லென்று....

"ம்"

முனகுகின்றேன்.....

கண்களில் கண்ணீர் கன்னம் வழியே கோடு கிழிக்க...

மனசும் உப்புக் கரிக்கின்றது.

"ஓவென" கத்த வேண்டுமென்ற உணர்வு!

இறுதி ஊர்வலத்திற்காக டாக்டர் நாள் குறித்தாகியாச்சு..இந்தப் பூமியை விட்டு நீங்குவதற்கு ஏதோ ஒரு காரணம் கிடைத்து விடுகின்றது..

நிமிடங்களின் நச்சரிப்பையும் பொருட்படுத்தாது இதயம் மீண்டும் துடிக்கின்றது..

"வலியால் மெல்ல முனங்குகின்றேன்"

"மாரடைப்பு" எனக்கும் நாள் குறித்து விட்டதா...

மரண வலியிலும் என் கண்கள் பனிக்கின்றன. இதயத்தின் மாறுபட்ட துடிப்பை என்னால் உணர முடிகின்றது.

அது வலியா.........அழுகையா!

என்னைச் சுற்றியுள்ள கூட்டத்தை விலக்கி கண்கள் இரகஸியமாக அவனைத் தேடுகின்றது..

"அவன் வருவானா"

நப்பாசையில் விரிந்த மனதை, பகுத்தறிவு அடக்குகின்றது..

"இந்த இறுதி ஊர்வலத்தை அவனுக்கு யார்தான் அறிவிப்பார்கள். பக்கத்திலா இருக்கின்றான். கண்கலங்கி விடையனுப்ப!

இதயம் மீண்டும் வலிக்கின்றது..

"அவன் நினைவுகள் வாழ்ந்த கூடு அது. உயிர்ப்போடு ஆசைகளையும் கனவுகளையும் செல்லச் சண்டைகளையும் சேமித்த கூடு அது"

கண்கள் நனைவதையும் பொருட்படுத்தாமல், விழிகள் நிரந்தரமாக மூடத் தொடங்குகின்றன...

அவன் நாளை என்னைத் தேடி வருவான். அதுவரைக்குமாவது என் இற்றுப் போன இதயம் துடிப்பை மறக்கலாமா...

ஆத்மாவின் ஓலம் புலப்படாமலே, வெறும் மெய்க்கூட்டை நால்வர் சுமந்து செல்கின்றனர் கண்ணீருடன்!