About Me

2012/08/11

அல்(f) பாத்திஹா




திருமறை தரும் அருள் வசனங்கள் அல்லாஹ் எனும் அழகிய 
எழுத்துருக்களுடன் இன்றைய பதிவாக  என் வலைப்பூவில் வாசம் தருகின்றன...அல்ஹம்துலில்லாஹ்!

---------------------------------------------------------------------------------
"அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)  "  (1:1)





"அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது "(1:2)


"(அவன்) அளவற்ற அருளாளன் மிகக் கிருபையுடையவன் "( 1: 3)



"(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி "( 1:4)



"(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம் "(1:5)



"நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! "  ( 1:6)






முகநூலும் தவறுகளும்


உலகமானது நவீன தொழினுட்பத் தொடர்பாடல் மூலமாக கைக்குள் சுருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் முகநூலின் வளர்ச்சியும் நம்முள் ஏறுமுகம் காட்டி நிற்கின்றது. நம்முன்னால் ஒருவரின் முகநூலின் பயணத்தடங்களாக அடையாளப்படுத்தி நிற்பவை அவர்கள் வெளிப்படுத்தும் பதிவுகளும், பின்னூட்டங்களுமே!

ஒருவர் மனதை அறியவேண்டுமானால் அவர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தைகளை அவதானிக்க வேண்டும். ஏனெனில் வார்த்தைகள் என்பது ஒருவரின் மனவோட்டத்தின் பிரதிபலிப்பே!

முகநூலானது ஓர் திறந்த புத்தகம். யார் வேண்டுமானாலும் கட்டுப்பாடின்றி உட் செல்லலாம். நண்பர்கள் வடிவில் தீங்கு பயக்கும் உளவாளிகளும் நம்முலகில் புகுந்து தீங்கினை நமக்குள் எத்திவைக்கலாம். ஆனால் மறுபுறம் தேச எல்லைகள் கடந்து பல திசைகளிலும், பல நாடுகளிலும் வாழும் பல மனிதர்களின் கரங்களை பேதமைகள் களைந்து நட்புடன் இணைக்கும் பாலமாகவும் முகநூல் எனும் இணையத்தளம் விளங்குகின்றது. தொலைவில் வாழும் முகம் நோக்காத பலர் அக எண்ணங்களின் ஒருமைப்பாட்டுடன் ஆரோக்கியமாக இங்கே ஒன்றிணைகின்றனர். இந்நட்புக்களில் வெகுசிலவே வாழ்வின் கடைசிக் காலங்கள் வரை தொடர்ந்துவருகின்றன.

எந்நட்பாயினும் அதன் செழுமைக்கு புரிந்துணர்வு மிகவும் அவசியம். நட்பும், அன்பும் அதிகரித்த நிலையில் புரிந்துணர்வின்றி பிரயோகிக்கப்படும் சிறுவார்த்தைகளாயினும் மன மகிழ்வைக் காயப்படுத்தி, நட்பை அழவைக்கக் கூடியவை.

 "கிட்டவிருந்தால் முட்டப் பகை"

இது நம் வாழ்வின் அனுபவங்களால் பிரயோகிக்கப்பட்ட முதுபழமொழி ....

பழமொழிகள் யாவும் மறுக்கப்படாத உண்மைகள்..முகநூலில் நாம் நட்பின் ஈர்ப்பால் அடிக்கடி  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் செய்திப் பரிமாற்றம் காரணமாக சாதாரணமான இருவர்  நட்பின் உலகிற்குள் வசீகரத்துடன் தள்ளப்படலாம். நண்பர்கள் காதலர்களாக மாற்றப்படலாம். அவ்வாறே அதிக சுதந்திரமான புரிந்துணர்வில்லாத கருத்தாடல்களின் மூலமாக நல்ல நண்பர்களுக்கிடையே மௌனமாகத் தோன்றும் மனக்கசப்பு, பகைமை மூலம் இடைவெளியையும் ஏற்படுத்தப்படலாம்.

அன்பான நட்பினர் பிரிவையும் வென்று நிற்பர் என்பது பொதுமொழி. ஆனால் இவை வெறும் சொல்லாடல்களுக்குப் பொருந்தினாலும். நிஜ நட்பில் அதிக அன்பே எதிர்பார்ப்பாக அமைந்து மனவேதனைக்கு வழிகோலும்.

முகநூல் நட்பை உறுதிப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமாயின் அடிக்கடி குறித்தவொருவருடனான  அநாவசிய செய்திப்பரிமாற்றம் செய்வதைத் தவிர்த்தல் வேண்டும், உண்மையில் முகநூல் "இன்பாக்ஸ்" என்பது விரோதத்தை வளர்க்கக் கூடிய அழுக்குக் கூடை முகநூலில் அவ்வவ்போது இடப்படும் பதிவுகளுக்கான விருப்புக்களையும், வெளிப்படையான நல்ல ஏற்புடைய பின்னூட்டங்களையும் இடுவது கூட நல்ல நட்புக்கான வழிமொழிதல்களே!  தனிப்பட்ட  செய்தியாடல்களைத் தவிர்த்து நட்பைக் காக்கலாம்.

சில நிகழ்வுகள் தரும் படிப்பினைகள் நமக்கு துன்பம் தருபவையாக ஆரம்பத்தில் இருந்தாலும் கூட அவை நம் நிம்மதியை வார்க்கும் நிகழ்வுகளே என்பது காலம் நமக்குள் காட்டி நிற்கும் உண்மைகளாகின்றன. சில மாற்றங்கள் ஏமாற்றமாக மாற்றப்படுவதை தவிர்க்க "இன்பாக்ஸ்" செயலிழக்கப்படுவது அவசியம்.

மேலும் முகநூல் பலர் சங்கமிக்கின்ற பொதுச்சந்தை. இவற்றில் பல நல்ல விடயங்கள் பரிமாறப்படும் அதே நேரம் தீமைகளும் பரிமாறப்படுகின்றன. "போலி" முகங்கள் பல இங்கு உலாவுவதற்குக் காரணம் ஒருவர் எத்தனை முகநூல் பக்கங்களையும்  உருவாக்கலாம் எனும் தாராளமயக் கொள்கை யாக்கமாகும். ஈமெயில் முகவரி மட்டுமேயிருந்தால் போதும் முகநூல் உருவாக்கத்திற்கு தடையேதுமில்லை. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முகநூல்களை உருவாக்குவதை கட்டுப்படுத்தினால் தான் போலிகள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்படலாம்.

மேலும் முகநூலில் அவதானிக்கப்படும் சில தவறுகளாக பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர்க்குமாறு வலைப்பின்னல் துறைவல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


தவறு 1 -சுலபமான ஓர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தல் (Using a Weak Password)
----------------------------------------------------------------------------
பெயர்கள், சுலபமான வார்த்தைகள், பிறந்த திகதி, இலக்கங்கள் என்பவற்றைக் கடவுச்சொற்களாகப் பயன்படுத்தும் போது அவற்றை விஷமிகள் இலகுவில் திருடி, நம் பெயரில் அநாவசியமான முறைகேடான பக்கங்களை உருவாக்கி உலாவ விடுவார்கள். இவர்கள் இறைவனுக்கே அஞ்சாத மிருகங்கள். மனிதர்களை மதிக்கவோ, மனிதாபிமானத்தை வெளிப்படுத்தவோ மாட்டார்கள். இவர்கள் நமது அழகிய முகநூல் பக்கங்களுக்குள் உலாவுவதை தடுக்க முறையான பாதுகாப்பு வேலியை திருடப்படாத கடவுச்சீட்டுக்கள் மூலம் உருவாக்குதல் வேண்டும். நமது கடவுச்சீட்டுக்களில் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் என்பவற்றையும் ஒருமித்த நிலையில் கலவையாக்கியிடல் வேண்டும்.

தவறு 2 - நமது பிறந்த திகதியை முழுமையாக வெளிவிடுதல்
-------------------------------------------------------------------------------
(Leaving Our Full Birth Date in Our Profile)
ஏனெனில் இத் தகவல்களைக் கொண்டு வங்கிக் கணக்குகளைக் கூடத் திருடத் தயாராகவே இருப்பார்கள் இம் முகநூல்த் திருடர்கள்........

தவறு 3 - சுய பாதுகாப்பு வாய்ப்புக்களை அலட்சியப்படுத்துதல்
(Overlooking Useful Privacy Controls)
-------------------------------------------------------------------------------
நமது தொடர்புகளை எப்போதும் நண்பர்கள் மட்டும் எனும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இதில் சொந்த, குடும்ப, தொழில் விபரங்கள், தொலைபேசி இலக்கம், முகவரி என்பன காட்சிப்படுத்துவது தவிர்க்கப்படல் வேண்டும்.

தவறு 4 :-நமது உறவினர், குழந்தைகளின் பெயரை அடிக்கடி பயன்படுத்துதல்
--------------------------------------------------------------------------------
தவறு 5 :-நமது நிகழ்கால செயல்களைப் பற்றிக் குறிப்பிடுதல்.
--------------------------------------------------------------------------------
உதாரணமாக நான் வெளியூருக்குச் செல்கின்றேன். இந்த திகதியில் வீட்டுக்கு திரும்புகின்றேன் போன்ற தகவல்கள் இடப்படுவதைத் தவிர்த்தல்.

தவறு 6 : கூகுள் போன்ற தேடு இயந்திரங்களின் பார்வையில் நம் பெயர்கள் சேரச் செய்தல்..
---------------------------------------------------------------------------------
இதனால் அறிமுகமில்லாதவர்களுக்கும் நமது பெயர் விபரங்கள் சென்றடையக் கூடிய வாய்ப்புண்டாகும். எனவே பேஸ்புக்கின் சுய பாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook's Privacy controls)
நண்பர்கள் மட்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்தல்.

தவறு 7 : _ மேற்பார்வையில்லாமல் சிறுபிள்ளைகள் முகநூல் பயன்படுத்த அனுமதித்தல்.
----------------------------------------------------------------------------------
மேலே கூறப்பட்ட விடயங்கள்  தவறுகளாகக் அனுபவசாலிகளால் குறிப்பிடப்பட்டாலும் கூட அவை பாதிப்பன பெண்களைத் தான். ஏனெனில் ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி உல்லாசமாய், உற்சாகமாய் உலாவும் கலைக்கூடம், இலக்கிய இல்லம், விளையாட்டுத்தளம், அரட்டை அரங்கம் என எல்லாப்  பரிமாணங்களும் இந்த முகநூலில்தான் சங்கமிக்கின்றன. ஆண்கள் எதிரிகளின் விமர்சனங்களால் பாதிக்கப்படும் போது அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றார்கள். ஆனால் பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் குடும்பம், சமூகம் அனைத்துமே சகதிக்குள் அமிழ்கின்றன.

முகநூல் எனும் தொலைநூலில் நல்ல விடயங்களை மட்டுமே நாம் வாசிக்க முயற்சிக்கும் போது நம்மைச் சூழவெழும் இந்த இடர்பாடுகளைத் தவிர்ப்பது நமது கட்டாயக் கடமையாகும். நாம் இங்கு சஞ்சரிக்கப்போகும் சொற்ப நேரத்திற்குள் நமக்கிடையே மன அழுத்தங்களையும், துன்பங்களையும் இம் முகநூல் தருமாயின், நாம் இதனை விட்டு நகர்ந்து விடுவது நலம் பயக்கும். எனினும் இயன்றவரை நம்மைச் சூழ வீசப்படும் மனஅழுத்தக் காரணிகளைத் கண்டறிந்து, அவற்றைக் களைபிடுங்க பழக்கப்படுவோமாயின் நம் இயல்பான நடமாட்டம் நமக்குமிங்கே வசந்தத்துடன் கைகுலுக்கும்.

தவறுகளைத் திருத்துவோம்.......அது நம் நிம்மதிக்கான அறைகூவல் !



2012/08/10

சிறுகதைகள், விமர்சனங்கள் - ஒரே நோக்கில்



இன்று வரை கவிதாயினி வலைப்பூவில் பதிவான என் சிறுகதைகள், விமர்சனங்கள், படத் தொகுப்புக்கள்  ஒரே பார்வையில் :- 

(உள்ளே)

இத் தலைப்புக்களின் மீது நேரடியாக அழுத்தி உரிய பதிவுக்குள் நுழைக

சிறுகதைகள்/ குட்டிக் கதைகள்
-------------------------------------------
01. வழி மாறும் பயணமொன்று
02. கானல் நீர்
03. ஆட்டோ கிராப்
04. வாழ்க்கைத்துணை
05. மயக்கமென்ன
06. சாதனை
07. பாட்டி எங்கே போறியள்
08. தவிக்கும் மனசு
09. அந்த சில நிமிடங்கள்
10. என் வாழ்வு உன்னோடுதான்
11. கருகும் மலரொன்று
12. மனசே மனசே
13. மாற்றங்களும் ஏமாற்றங்களும்

---------------------------------
விமர்சன வெட்டுமுகம்
--------------------------------
01. வேரறுதலின் வலி
02. அடையாளம்
03. கவிதைக்காரன்
04. முத்து
05. கண்ணீர் பேசும் ஞாபகங்கள்
06. நண்பனுக்கோர் மடல்
07. மீண்டு வந்த நாட்கள்
08. என்றும் நேசத்துடன்
09. முன்மாதிரி

---------------------------------------------------------------
பதிவிடப்பட்டுள்ள படங்களின் தொகுப்புக்கள்
---------------------------------------------------------------
01. நான் வரைந்தவை 
02. சில நினைவுகள்
03. கதீஜா முராத்
04. உறவுகள் தொடர்கதை
05. நினைவு முகங்கள்
06. நினைவிலிருத்தி
07. நன்றி சொல்லவே
08. Azka & Sahrish



ஒற்றைச் சொல் !


நீயுதிர்த்த ஒற்றைச்
சொல் ............
என் உயிரறுக்கும் தீப்பந்தமாய்
மிரட்டி நிற்கின்றதென்னுள்!

உன் முகம் காணா நேசத்தில்
சிலிர்த்தவென் பாசத்தில்..........
விஷம் தடவும் தேளானாய்
அடுத்தவர் வார்த்தைக்காய்!

தீப்பற்றியெரிகின்றேன்
நீரூற்ற யாருமின்றி .........
ஒற்றை வழி போகின்றேன் - உன்
ஒற்றைச் சொல் வழிநடத்த!

உன் வெந்நீராய் வார்த்தைகள்
வெறித்தனமாய் எனைக் கருக்கவே........
இற்றுப் போன இதயமும்
குற்றுயிராய் வெந்ததுவே!

நீ தந்த கனவுகள்
விழித்திரையறுத்தே மிரண்டோட.....
என் உறக்கமறுத்து கூவுகின்றாய்
நானுன் அந்நியமென!

 நீர்க்குமிழி வாழ்க்கையிலே
நீ விதைத்த வர்ணங்கள்..............
கலைந்ததுவோ  ரசிக்கின்றாய்
உளமதை சிதைத்தே தான்!

இற்றுவரை நானுன்னை
வேற்றவனாய் நினைக்கவில்லை!
நெஞ்சுடைத்தே போகின்றாய்
பஞ்சென்னை காற்றிலுதிர்த்தே!

வெற்றுக் காகிதமென்னில்
நீ போட்ட  கோலங்கள்...........
உன்னொரு சொல்லாலின்று
முற்றுப்புள்ளியாய் ஆனதுவோ!

ஐயகோ...................!
என் பயணத்திலினி தடைக்கல்லாய்
உன் ஒற்றைச் சொல்.........
உயிர் துறந்து போகின்றேன்
சமுத்திரங்களை விழியேந்தி!

பல நிஜங்கள் தெரிந்ததில்
சில கனவுகள் எரிந்ததுவே!
இன்னலின் அகதேசத்தில்
அனலும் புனலுமுறவானேதே!

அடுத்தவருக்காய் எனை விரட்டி- யுன்
நினைவுப் படுக்கையில் முள்விரித்தே.................
நீ தந்த முகவரிகள் - இனியென்
மயான  நிலவறைகள்!

ஆகாயவெளியில் அந்தரிக்கும்
விண்மீன்கள் கதறியழ.................
வெள்ளிநிலா உள்ளம் நொந்து
இருளுக்குள் இறங்கிக் கிடக்கும்!

"நிஜங்கள் வலிக்குமென்ற"
உன் வார்த்தையென் சொத்தாக்கி......
தனிவழியே போகின்றேன்
இனியுன் பார்வை  மறைந்தே!

கள்ளிப்பால் நீயூட்டி விட்டாலே
களிப்போடு அமுதமாகும் என்னுள்............
ஐயத்திலென் னன்பைக் குலைத்தே
சொல்லிட்டாய் ஒற்றைச் சொல்!

ஜன்ஸி கபூர் 

பேசும் எண்ணங்கள் - கட்டுரைகள்



இன்று வரை கவிதாயினி வலைப்பூவில் பதிவான என் கட்டுரைகள் ஒரே பார்வையில் :- (உள்ளே)

எனக்கு ஊக்கம் தந்து, என் இலக்கிய பயணத்திற்கு தடமாக உங்கள் விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தந்த, தருகின்ற, தரும் சகல என் நட்புள்ளங்களுக்கு நேச நன்றி பல
--------------------------------------------------------------------------------------------

இத் தலைப்புக்களின் மீது நேரடியாக அழுத்தி நுழைக.

01. கவிதாயினி - அறிமுகம்

02. சூரியனும் சந்திரனும் சந்தித்தால்

03. முகநூலும் நானும்

04. நோபல் பரிசு

05. கவிஞர் கண்ணதாசன்

06. மைக்கல் ஜாக்ஸன்

07. என் பதிவுகள்

08. விபத்துக்கள்

09. சிகிரியா

10. திருடிய இதயத்தை

11. கற்றலில் வீழ்ந்தே

12. அறிவோம் எம்மை

13. பெண்ணே

14. உயிர்

15. மரபணு டெங்கு சிகிச்சை

16. யாழ்ப்பாணக் கோட்டை

17. கண்ணேறு

18. சிறுவர் உரிமைகள்

19. கோபம்

20. குழந்தைத்தனமான காதல்

21. ரமழான் சிந்தனை

22. ஒலிம்பிக் போட்டி

23. யப்பானின் 5 எஸ் முறை

24. அயலவர்

25. கவிதை எழுதலாமே

26. ஞாபக அலைகள்

27. சர்வதேச தொலைத் தொடர்பு தினம்

28. உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

29. அன்னையர் தினம்

30. சர்வதேச மலேரியா ஒழிப்புத்தினம்

31. அன்பு வந்ததே

32. புகைவண்டி தரும் சிந்தனை

33. பெண் சாரணிய சில நினைவலைகள்

34. வறியவர்க்குதவுவோம்

35. ரமழான் சிந்தனை

36. இறைவனிடம் கையேந்துவோம்

37. பிர் அவ்ன் அழிப்பு

38. பத்ர் போர்

39. பர்மிய முஸ்லிம்கள்

40. 67 வது ஹிரோஷிமா தினம்

41. வலைப்பூவில் விழுந்த கவித்துளிகள்

42. பேசும் எண்ணங்கள்

43. சிறுகதைகள், விமர்சனங்கள்

44. ஐ லவ் யூ சொன்னால்

45. காதலென்பது

46. பகை வேண்டும் புகையில்

47. முகநூலும் தவறுகளும்

48. திருமறையின் அருள்மொழிகள் சில

49. திருவசனங்கள்

50. அல் f பாத்திஹா

51. உலக ஊடக தினம்

52. உலக தாதியர் தினம்

53. சத்தியமும் அசத்தியமும்

54. சித்திரம் பேசுதடீ

55. அஜந்தா இணைப்பு

56. விடைபெறும் ரமழானே

57. சித்திரம் பேசுதடீ

58. முகநூலும் தவறுகளும்

59. சிந்திப்போம்

60. கசங்கிய மலர்கள்

61. பபா அம்புலி

62. ஆசிரியர் கீதம்

63. மிஸ்ட் கால்

- Ms.A.C.Jancy -







மாற்றங்களும் ஏமாற்றங்களும்


சுஹிர்தா............!

அவள் நகரிலுள்ள பிரபல்யமான தொலைத் தொடர்பகத்தில் சேவையாற்றிக் கொண்டிருந்தாள். மாதாந்தம் என் கைபேசி பாவனைக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காக அந்நிறுவனத்திற்கு அடிக்கடி  செல்வதுண்டு. ஆரம்பத்தில் நிறுவன வாடிக்கையாளர் பிரதிநிதியாகப் புன்னகைத்தவள் நாளடைவில் நட்புடன் பேசத்தொடங்கினாள்.. அரிதான புகைப்படங்களை மின்னஞ்சல் வழியாக எனக்குப் பரிமாறுமளவிற்கு எங்கள் நட்பு  இறுக்கமடைந்திருந்தது.

அவள் எனக்குள் அறிமுகமாகி மூன்றாண்டுகள் உதிர்ந்து விட்டன. அழகான மெழுகுச்சிலை போன்ற உடல் வார்ப்பும், பளிச்சென்ற வெண் தோலும் அவளை எனக்குள்ளுமொரு அழகியாகவே பறைசாற்றியது. அவள் சூழல் கல்வி கற்ற மொழித் தாக்கத்தால் அவள் பாவனை மொழியாக ஆங்கிலமும் சிங்களமும்  நுனி நாக்கில் தவழும். அவள் என்னுடன் ஒருநாளும் தமிழில் பேசியதில்லை.

அந்நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்காக நான் செல்லும் போதெல்லாம் அவளுடன் இரண்டு வார்த்தைகளையாவது பேசாமல் வருவதில்லை. எனது அலுவல் முடிந்ததும் அங்கு சனக்கூட்டம் குறைந்திருக்கும் நேரத்தில் சிறிது நேரம் எங்கள் சொந்த விடயங்களைப் பற்றியும் கதைத்து விட்டு வருவேன்.

ஓருநாள்  அவளுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். கைபேசி சிணுங்கியது . தன் மென்விரலால் கைபேசியை அழுத்தியவள் "ஹலோ" வென்றவாறே என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"என்  லவ்வர்தான் லைனில் நிற்கிறார் ..........பேசுங்க அவர் உங்களுக்கும் தெரிந்தவர்தான்"

நான் எதிர்பார்க்காமலே தன் 3ஜி கைபேசியை என்னுள் திணிக்க, நான் தடு மாறிப்போனேன்.

 "பரவாயில்ல சுஹி ! "

நான் மறுத்த போதும் வற்புறுத்தி என்னை அவனுடன் பேசவைத்தாள். அவனும் வீடியோ கோலில் புன்னகைத்தவாறே ஸலாம் கூறி சகஜமாய் நலம் விசாரிக்கத் தொடங்கினான்"

"அவன்.......எனக்குத் தெரிந்தவன்..அவளது வருங்காலக் கணவன்............!"

மகிழ்ச்சியில் என் வாழ்த்துக்களை அவர்கள் வசப்படுத்திவிட்டுப் புறப்பட்டேன் என் வீட்டுக்கு!

தொடர்ந்து வந்த நாட்களில் அவள் காதலின் வளர்பிறைச் செழிப்பை எனக்குள் அடிக்கடி காட்சிப்படுத்துவாள்.

"எப்போ உங்கட கல்யாணம், என்னைக் கூப்பிடுவீங்க தானே"

ஒருநாள் நான் வேடிக்கையாகக் கேட்டேன்.

"இன்ஷா அல்லாஹ்! சீக்கிரம் முடிப்போம், நீங்க இல்லாமலா" காதலின் வசந்தத்தை அனுபவித்துச் சிரித்தாள். அவள் நாணத்தை அன்று ரசித்த போது அந்த அழகியின் இளமை பூத்த வெண் கன்னங்கள் செக்கச் சிவந்து கிடந்தன.

வருடங்கள் இரண்டு தாவியோடியது. நாங்கள் பல தடவைகள் சந்தித்தாலும் கூட அவளின் காதல் பற்றியும், அவனைப்பற்றியும்  துருவியாராயவில்லை. அவளும் எதுவும் சொல்லவில்லை. வாடிக்கையாளர்கள் தொகை அதிகரிப்பும், எம் வேலைப்பளுவும்  எங்களுக்கிடையில் சிறிய இடைவெளியை ஏற்படுத்தி நின்றது. கண்டால் கதைப்போம் ..........அதுவும் ஓரிரு வார்த்தைகளாகச் சுருங்கிப் போனது

அண்மையில் ஓர்நாள் வழமைபோல்  எனது கைபேசியழைப்பிற்கான மாதக் கொடுப்பனவைச் செலுத்த  அந்நிறுவனத்திற்கு காலையில் சென்றிருந்தேன்.  அவள் வழமைக்குமாறாக கவுண்டரில் அமர்ந்திருந்தாள். என்னைக்கண்டதும் புன்னகைத்தவாறே ஸலாம் கூறி சுகம் விசாரித்தாள்.  எங்களைப்பற்றி சிறிது நேரம் நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த போதுதான் அவதானித்தேன் அன்றவள் மிக அழகாகவிருந்தாள். கழுத்து ,கை, விரல்களில் புதிய தங்க நகைகள் மின்னிக்கொண்டிருந்தன.

"ஏதும் விஷேசமா.............இயல்பாய் நானும் கேட்க, "

சிறிது மௌனித்தவாறு "ம் ம் " எனத் தலையாட்டினாள்.

அவள் காதல் கைகூடிவிட்ட மகிழ்வை நானும் வாழ்த்துக்களாக்கி அவளுக்கு முன்வைக்கப் போகும் போது, இடைமறித்தாள்

அவள் குரல் உடைந்து தளர்ந்து போனது . தான் கல்யாணம் முடிக்கப் போறவர்  பற்றிய விபரங்களைச்  சொன்னாள்.

"என் லவ்வர் என்னைப் பிரிஞ்சு இப்ப ஒரு வருஷமாச்சு!. எங்ககிட்ட பிரச்சினை வந்திட்டுது....அவர்ட்ட நிறைய முரண்பாடுகளிருக்கு. காதலிக்கும் போது அது எனக்குத் தெரியல. ஆனால் கல்யாணத்துக்கு நெருங்கும் போதுதான் அவரோட சுயரூபம், சுயநலம் எல்லாமே வெளியில தெரிஞ்சுது, அவர எங்கட வீட்டாக்கள் வேணாமென்று சொல்லிட்டாங்க"

அவள் தன் சோகங்களை அவிழ்த்தபோது நான் பிரமித்துப்போனேன். அவர்கள் தங்கள் காதலில் காட்டிய உற்சாகமும், நெருக்கமும் நன்கறிந்தவள் நான். சுஹி அவனுக்காக தன் வாழ்வில் காட்டிய மாற்றமும் கூட எனக்குத் தெரியும். அவனது விருப்புக்கேற்பவே அவளது நடை, உடை, பாவனை கூட அவளிடமிருந்து மாறிப்போனது. பிரச்சினைகள் வாழ்வில் ஏற்படுவது இயல்பே! ஏதோ சில அற்பங்களுக்காகவும், அடுத்தவர்களுக்காகவும் அவர்களின் அன்பு   காணாமல் அழுகிப் போனதுதான் எனக்கு கவலையாகவிருந்தது. அந்தப் பிரிவுத் தாக்கமும், ஏமாற்றங்களும், கோபமும் அவர்களிருவரையுமே அந்தக்கனவு  வாழ்க்கையிலிருந்து வேரறுத்து மறுத்து வேறொரு திசைக்குள் தள்ளிவிட்டது.

அவளை நான் கண்ணிமைவெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். தன் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்த துன்பத்தை அவள் மறைத்தவளாக,

"திருமணத்தைப் பற்றியும், தனக்கு மாப்பிள்ளை வீட்டார் அணிவித்துச் சென்ற திருமண அடையாளத்தைப் பற்றியும் அவள் கூறத் தொடங்க நானோ அதிர்ச்சியிலிருந்தும் கலையாதவளாய் விக்கித்து நின்றேன்..

மனப் பொருத்தப்பாடில்லாத இருவர் திருமணத்தி லிணைவதை விட, பிரிந்து செல்வது மேல்தான். ஏனெனில் சொற்பகால வாழ்வின் சந்தோஷங்களை  அத்துன்பங்கள் எரித்துவிடுகின்றனவே!.

"பெருநாளைக்குப் பிறகு எனக்கு கல்யாணம் வைச்சிருக்கிறாங்க........உங்கள இன்வைட் பண்ணுவேன்.........கட்டாயம் வரணும் "

சுஹா தன்னைச்சுற்றி வரையப்பட்டிருக்கும் விதியின் போக்குகளை எனக்குள் அவிழ்த்துக் காட்ட முயற்சிக்க, நானோ, அவர்கள் கசக்கியெறிந்த அந்த காதல் ஞாபகங்களை எனக்குள் நிழற்படுத்தியவாறு மெதுவாய் வீதிக்குள் இறங்கிக்கொண்டிருக்கின்றேன்.  





வலைப்பூவில் வீழ்ந்த என் கவித் துளிகள்


என் இக் கவியார்வத்திற்கு ஊக்கம் தந்து, என் இலக்கிய பயணத்திற்கு தடமாக உங்கள் விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தந்த, தருகின்ற, தரும் சகல என் நட்புள்ளங்களுக்கு நேச நன்றி பல

இன்று வரை கவிதாயினி வலைப்பூவில் பதிவான என் கவிதைகள் ஒரே பார்வையில் :-
---------------------------------------------------------------------------------------------

          001. பிறப்பிட நிழலிலே
 
          002. கவிதைக்காரா 

          003. ரகஸியமாய்
   
          004. வலி
 
          005. நவீனத்துவம்   

          006. வருவாரோ 
 
          007. ஊடலேனோ 

          008. வெளிநாட்டு வாழ்க்கை
 
          009. போ நீ போ 

          010. மின்னல்

          011. சுனாமி 
   
          012. முதியோர் இல்ல முகவரிகள்

          013. தாய்மை
   
         014. திறந்து பார்க்காதே   

         015. நிலா நிலா ஓடி வா 
       
         016. காதலித்துப் பார்

        017. நீ

        018. உறக்கம்

        019. ஞாபகம் வருதே

        020. யதார்த்தம்

        021. மணவேலி

        022. நீயே என் உயிராகி

        023. போராளி

        024. பிரிவலை

        025. என்னால் முடியும்

         026. இவர்கள்

         027. பேரினவாதம்

         028. மழை

         029. மே தினம்

         030. முற்றுப்பெறாத பயணம்

        031. புதிர்

        032. என் தாயே

       033. ஏக்கம்

       034. தனிமை

       035. வறுமை தேசம்

       036. நண்பனே

       037. ஏட்டுக்கல்வி

       038. காதலும் அவஸ்தையும்
        
       039. பெப்ரவரி

       040. அன்னைக்கு விண்ணப்பம்

       041. மலரே

      042. முதிர்கன்னி

      043. தேசத்தின் மகுடம்
   
      044. பயணம்

      045. எப்போதும் நீ

      046. ஒரு நாளும் உனை மறவாத
                           
      047. அடிக்கடி
       
      048. அருவி
     
       049. பெண் மனசு

       050. ஒளி நாயகன்
     051. ஓர் நாள்

     052. முதுமையினில்

     053. ஞாபகம் வருதே

     054. அன்றும் இன்றும்

     055. தோழமைக்காக

     056. மாற்றம்
       
     057. மனசெல்லாம்

     058. ஒற்றையாய்

     059. மௌனம்

     060. காத்திரு

    061. சொர்க்கத்தீவு

    062. அட செல்லமே

    063. சிறகறுந்து

    064. மனசு

    065. வருடும் நினைவு
   
    066. சிப்பிக்குள் முத்து

    067. பரீட்சை

    068. பேபி அஸ்கா

    069. ப்ரிய சகி

   070. வந்ததே ரமழான்

   071. தன்னம்பிக்கை

   072. நினைவகம்

   073. ஒற்றை மழைத்துளி

   074. இயற்கை உன் வாசம்

  075. மழைத்தோரணங்கள்

  076. என் அழகிய தேசம்

  077. இரவின் மடியில்

  078. விடியல் பொழுதில்

  079. நிஜங்களின் வலி

  080. உன்னில் நான்

  081. சிறகு விரிக்கின்றேன்

  082. உணர்வோசை

  083. சின்னத்தாமரை

  084. என் தேவதை

  085. அன்பின் வலி

  086. உயிரறுந்து

  087. கவிதை + காதல் = காதலி

  088. ப்ரிய சகி

  089. அழகான பெண்டாட்டியே

  090. முரண்பாடு

  091. இதயம் கிழிந்து

  092.விதியின் காலடியில்

   093. ஆதவன்

   094. பிரிவில்

   095. உன்னால்

   096. நீயின்றி

   097. தகுமோ சொல்

   098. தேர்தல்

    099. செல்வம்

    100. அன்னை

   101. பெண் அவலம்

   102. கண்ணீர்ச்சிலை

   103. கவி தந்து போனவனுக்காய்

   104. அழகி

   105. சொந்தம் எப்போதும்

  106. விதவை

  107. கார்ட்டூன்

  108. மயக்கம்

  109. நினைவெல்லாம் நீ

  110. ஒற்றைச் சொல்

  111. ஆசை ஆசை

  112. விஷமிகள்

  113. வாழ்க பல்லாண்டு

  114. மரணப்பூக்கள்

  115. என்று தணியும்

  116. மழை நின்ற பொழுதில்




- Ms.A.C.Jancy -





2012/08/09

நினைவெல்லாம் நீ


என் நினைவோரங்களில்
நிழலாடுமுன்னை ...........
களவாய் இறுக்கிப் பிடித்தே
கன்னம் தேய்த்தேனின்று........
கதறினாய் காதலில் நசிந்து
இறுக்காதே இன்னும்
நானுன்னில் தானிருக்கின்றேனென!

நறுக்கென்றோர் குட்டு
எனக்கிட்டாய்!
இருட்டிலுமுன் குறும்பு விழியோரம்
விசமம் பூட்ட
ஏதுமறியாதவளாய் நானும் .........
மௌனித்துக் கிடந்தேனுன்னருகில்!
மெல்லவென்னுயிரில் அலைந்தே
கன்னமிட்டாய் வாஞ்சையுடன்!

குட்டியது யாரோ............!- என
எட்டி நின்ற என்னையும் நீயிழுக்க
வட்ட நிலாச்சாறும் கசிந்தே
சட்டென்றே என்னுள் பரவ....
இட்டத்துடன் பற்றிநின்றாய்- என்
இடைவெளிகள் மறுத்தே தான்!

இடை  நெரித்து  நீயும்  ........
தடையேதுமின்றியென்
குரல்வளைக் காற்றிலுன் மூச்சை நசித்து
வருத்துக்கின்றாய் காதல் அனலால் -உன்
பருவச் செழிப்பையென்னுள் பாய்ச்சி
இருவரும் ஒருவராய் மாற!

போடா...........!
பொறுக்கியென்றேன்!!
தினமுன் னன்பை என்னுள் நீ
பொறுக்கியெடுப்பதால்!

சிலிர்த்து நின்றாய் சிங்கமாய் !
வலித்திடாமல்  கன்னம் கிள்ளி
சிறுக்கி மகளே..............உனை
இறுக்கியே என்புடைப்பேன்
மிரட்டிச் சொன்னாய் மிருதுவாய்
என் பெயருரைத்து!

பருவத்து பூவெடுத்து- உன்
புருவத்தில் சூடியவளே!
இன்னுமா நானுன்னைப்
பிரிவேனென்றாய்.............

பிரியேனொருபோதுமுனை  - அகிலச்
சூரியக்குழம்பு குளிர்ந்திட்டாலும்
மறவேனுன்னையென
வார்த்தைகளில் நேசம் நிரப்பி
கோர்த்திட்டாய் என்னுசிரினிலே!

ஏனடா நமக்குள்ளிந்த மயக்கம்
என்னடா செய்திட்டாயென்னை!
ஏக்கத்தின் பெருமுச்சில் நெஞ்சம் புடைக்க
பாராடா எனையென்றேன்- என்
பாரின் சுழற்சியவன்
கரங்களைப் பற்றிக் கொண்டே!

உன்னோடு பகிர்ந்தது
உன்னோடு இறந்ததென-என்
உசிருக்குள் முத்தச் சூடேற்றி
வசிகரித்துச் சென்றிட்டான் காதலாய்!

மறைந்திட்டாய் திடீரென!
நாளை வருவேனென  - என்
கருத்தினிலுன்னை  நிறைத்தபடி!
நொடிகள் யுகங்களாய் நகர
நாடியில் விரல் பதித்து
தேடி நிற்கின்றேனுன் திசையோரம்!

ஜன்ஸி கபூர் 




பகை வேண்டும் புகையில்!


அழகான வாழ்க்கையின் ஆனந்தம் ஆளுக்காள் வேறுபடுகின்றது. நம் வாழ்வின் ஆரோக்கியம் நம்மால் சீரழிக்கப்படும் போது துயரும், நிம்மதியின்மையும் நமது சொத்தாகின்றது. அற்பமான சந்தோசத்தில் தம் ஆயுளை இழக்கும் பலர் புகையிலையுடன் நட்பைப் பேணி வருவது ஆரோக்கியமற்ற செயலே!

"நிச்சயமாக அல்லாஹ் , ஒருவர் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாத வரை அவர்களை மாற்ற மாட்டான்" ( திருக்குர்ஆன் 13:11)

எனவே அழிவுப் பாதையில் நாம் பயணிக்கும் போது , அதனை உணர்ந்து வாழ்வை திசை திருப்பி நம்மை நாமே  பாதுகாத்துக் கொள்ள  வேண்டும். மனிதனை அழிக்கும் சக்தி வாய்ந்த பொருட்களுள் புகையிலையும் ஒன்றாகும்.

ஆரம்ப காலத்தில் அமெரிக்கர்கள் புகையிலையை காயங்களைச் சுத்தப்படுத்தவும், தொற்று நீக்கவும் பயன்படுத்தினர். 1847 ல் "பிலிப் மொரிஸ்" என்பவரே புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட் தயாரித்தார்.


1953 ல் டாக்டர் எமல் என்பவர் சிகரெட் பாவனையால் புற்றுநோய் ஏற்படுவதை கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து 1964 களில் அமெரிக்க அரசு புகைபிடிப்பதால் சுகாதாரத்திற்கு கேடு எனும் நோக்கில் சிகரெட் விற்பனைக்கெதிராக சட்டம் இயற்றியது. 

1988 ம் ஆண்டு பின்லாந்தும்,1994 ல் பிரான்சும் புகையிலை விளம்பரத்துக்குத் தடை விதித்தது.

மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய இரண்டாவது காரணிகளுள் ஒன்றாக புகையிலை விளங்குகின்றது.

வெற்றிலையுடனும், மூக்குப் பொடியுடனும் சேர்த்து பாவிக்கப்படும் புகையிலையை பீடி, சுருட்டு, சிகரெட் போன்ற வடிவங்களிலும் பயன்படுத்துகின்றனர்.

புகையிலை என்றதும் நம் நினைவுக்கு வரும் சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சுப்பொருள் உண்டு. இப் பொருளுடன் மேலதிகமாக பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிக் , அமோனியா , நாப்தலமைன், போலோனியம் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களும் உடலோடு சேர்கின்றன. இந்நச்சுப் பொருட்களுள் பல வெடிகுண்டு செய்யப் பயன்படுபவை. எனவே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சிகரெட்டும் ஓர் வெடிகுண்டே! இதிலுள்ள 4000 இரசாயனப் பொருட்களுள் 43 இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. புற்றுநோயானது சுவாசப் பாதை வழியே கடும் தொற்றுதலை ஏற்படுத்துகின்றது.

புகையிலையிலுள்ள 4000 ற்கு மேற்பட்ட நச்சுப்புகையை சுவாசிக்கும் பலர் ஒரு நிமிடத்துக்கு 6 பேர் எனும் வீதத்தில் இறந்து போகின்றார்கள். ஆண்டுக்கு 60 லட்சத்துக்கும் மேல் பலியாகும் இப் புகையிலைப் பாவனைக்கு அதிகம் பலியாகுவது வளர்முக நாட்டவர்களே!

வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம், நண்பர்களின் இணைவு,ஸ்டைல், காதல் தோல்வி, தனிமை, மகிழ்ச்சி வாழ்க்கைப்பிரச்சினைகளை சமாளிக்க முடியாமை, பொழுதுபோக்கு எனத் தொடரும் சாதாரண புகைபிடிக்கும் பழக்கம் காலப்போக்கில் அவர்களை நிரந்தரக்குடிப்பழக்கத்திற்கும்  அடிமையாக்குகின்றது. 

புகை பிடிப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில் பின்வரும்  விகிதப் பெறுபேறுகள் கிடைத்துள்ளன

மகிழ்ச்சிக்காக                           - 22 %
பொழுது போக்குக்காக          - 8.2 %
விடுபட முடியாத காரணம்  - 17 %
பரீட்சித்துப் பார்க்க                 -  8.7 %
தனிமையைப் போக்க            - 10.5 %
மன அழுத்தம்                            -  10 %
பிரச்சினை                                   - 15 %



புகைப்பழக்கத்தின் மூலம் அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன. மாரடைப்பு, நுரையீரல்ப்புற்று, இரத்தக் கொதிப்பு, ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக்குறைவும் போன்ற பல விளைவுகள் ஏற்படுகின்றன. அத்துடன் புகை பிடிப்பவர்களின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் என்பவையும் ஏற்படலாம். ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கத்தினால் அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். "புகை பிடிப்பது உடல நலத்திற்கு கேடு" என எச்சரிக்கை விடப்பட்டும் கூட அதனைப் பாவிப்போர் தொகை குறைந்தபாடில்லை.

நிறுத்தும் வழிகள்
--------------------------
உடனடியாக இதனை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஏனென்றால் தொடர்ந்து ஒரு செயல் செய்யப்படும் போது அது பழக்கமாக மாற்றமடைகின்றது. இப் பழக்கத்தை உடனடியாக முற்றாக நிறுத்த மனவுறுதியுடன் கூடிய கட்டுப்பாட்டு பயிற்சி அவசியம். இருந்தாலும் கூட "முயன்றால் ஆகாதது ஒன்றுமில்லை." என்பதற்கேற்ப  புகை பிடித்தலின் தீங்கின் பால் மனதை நிலைப்படுத்தி அதன் விளைவுகளை ஆராய்ந்து உணர்ந்து, மனவுறுதியுடன் அந்த ஆர்வத்தைத் தடுக்க வேண்டும். புகைக்கும் ஆர்வம் ஏற்படும் போதெல்லாம் வாயில் மெல்லும் சுவிங்கம், சாக்லேட், நீர், எலக்ட்ரானிக் சிகரெட், வாயில் ஒட்டிக் கொள்ளும் நிகோட்டின் கலந்த கம், பேஸ்ட் என்பவற்றைப் பயன்படுத்தலாம். படிப்படியாகக் கட்டுப்படுத்துவது தவறு ஓரேயடியாக அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு புகை பிடிப்பதனை நிறுத்தினால்
----------------------------------------------------------
20 நிமிடங்களில் புகை பிடிப்பவரது இரத்தஅழுத்தம், இரத்தவோட்டம் போன்றவை  சீராகும்.  8 மணி நேரத்தில் இரத்தத்திலுள்ள ஒட்சிசன், காபனீரொட்சைட்டு போன்ற சுவாசத்துடன் தொடர்பான வாயுக்களினளவு சீரடையும். 72 மணித்தியாலயத்தில் இச்செயற்பாடு காரணமாக நுரையீரல் உள்ளிட்ட சுவாசப் பாதையிலுள்ள பகுதிகள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட ஆரம்பிக்கப்படும் .சுவாசிக்கும் திறனும் அதிகரிக்கப்படும். 9 மாதங்களில் இருமல், சளி என்பவற்றின் தாக்கமும் குறைகின்றது.ஓராண்டின் பின்னர்  மாரடைப்பு படிப்படியாக குறைய ஆரம்பிக்கின்றது, 10 வருடங்களின் பின்னர் சுவாசப் புற்று நோய் அறவேயில்லாமற் போகின்றது.

இலங்கை , இந்தியா போன்ற நம் நாடுகளில் புகைபிடிக்கும் பழக்கம் பெரும்பாலும் ஆண்களிடையேதான்  காணப்படுகின்றது.அரிதாகவே பெண்களிற் காணப்படுகின்றது. பலசிந்தனைச் சிற்பிகள் கூட இப் பழக்கத்தால் இன்று சீரழிந்து காணப்படுகின்றனர். தினந்தோறும் உழைக்கும் பணத்தில் ஓர் பகுதியை இதற்கென செலவளித்து உபாதைகளையும், துன்பத்தையும் விலை கொடுத்து வாங்கும் பழக்கம் இன்றைய நம் இளைஞர்களிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இன்று புகைப்பிடிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை மிக அரிதாகவே காணப்படுகின்றது. விருந்துகளில் ஒன்று சேரும் இளைஞர்கள் புகைபிடித்தலையும், குடிப்பழக்கத்தையும் தம் அம்சமாக பெரும்பாலும் சேர்த்திருப்பார் என்பது மறுப்பதற்கில்லை.

புகையிலை நிறுவனங்களின் வர்த்தக தந்திரோபாயங்களும், புகைத்தலின் கேடு தொடர்பாக அக்கறைப்படுத்தப்படாத மனநிலையும் இன்றைய நவீன உலகில் புகை பிடிக்கும் பாவனையை அதிகரிக்கச் செய்துள்ளன. மறுபுறம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் 170 நாடுகள் புகையிலைக் கட்டுப்பாட்டினை நடைமுறைப்படுத்தும் வகையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.அரசானது விநியோகம், விளம்பரம் தொடர்பாக உரிய நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களையும் மேற்கொண்டுள்ளன.

ஆனால் புகைத்தலைத் தடை செய்தல் எனும் மிகப்பெரிய கனவினை நிறைவேற்றும் கடமையினை ஒவ்வொரு நாடும் உணர்ந்தாலும் கூட, இதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தை இழப்பதாக இல்லை. சிகரெட் போன்ற பொருட்களுக்கு அதிக வரி அறிவித்தும் கூட, அதிக விலை கொடுத்து வாங்கி தம்மை சீரழிக்க பலர் தயாராகவே உள்ளனர். எனினும் பாவனையைக் கட்டுப்படுத்தும் வெற்றி பொதுமக்களின் அர்ப்பணிப்பு மிகு உணர்ந்து கொள்ளலிலேயே தங்கியுள்ளது.

இவ்வாறாக புகை பிடிப்பதனால் ஏற்படும் தீங்குகளை மக்கள் முன் எடுத்துக் காட்டி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் மே மாதம் 31 ம் திகதி " சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக" அறிவித்துள்ளது புகையிலையினால் ஏற்படும் ஆபத்துக்களையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். 

.புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட புகையிலை பாதிப்பினால் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கே அதிகளவு பணம் அரசுக்குச் செலவாகின்றது. தனி மனிதன் சமூகமாக,  சமூகத்தினரோ ஒன்றிணைந்து நாட்டின் அங்கத்தவராகின்றனர் . எனவே தனி மனித ஆகேகியமின்மையால் நாட்டின் நலமும் பாதிக்கப்படுகின்றது. 

நம்மவர்கள் சிந்திப்பார்களா.......புகையின் மீது பகை கொண்டு அதனை நிந்திப்பார்களா! காலம் பதில் சொல்லும் !


காதலென்பது


என் தோழி சுஜா......................!

அனாதைப் பெணணவள். திருமணம் எனும் வாழ்வியலின் மறுபக்கம் அவள் வறுமை நிலையால் எட்டாக் கனியாயிற்று. அழகில் மயங்கிக் கிடக்கும் பல ஆண்களுக்கு அவளின் வறுமை, அழகின்மை கண்களை உறுத்த, அவளைத் திருமணம் செய்யத் தயங்கினர். அவள் கறுப்பென்றாலும் அம்சமாகவே இருந்தாள். புற அழகின்மையால் அவள் மன அன்பின் இனிமை கூட செல்லாக் காசாகிப் போனது.

வயது 30 ஜத் தொட்டும் கூட வறுமையால் வாழ்க்கை பற்றிய கனவுகள் நிஜம் தொடாமலே எட்டாத் தொலைவில்  அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது 

அவள் குடும்பம் வறுமைப்பட்டிருந்தாலும் கூட அவளது கல்விப் பயணத்திற்கு ஒருபோதும் தடை விதிக்கவில்லை. படித்தாள். அரச வேலையொன்றைப் பெற்றுக் கொள்ளுமளவிற்கு அவள் கற்றல் வாய்ப்பளிக்கவில்லை.

சுஜா பெற்றோருக்கு ஒரே மகள்.   பெற்றவர்களிருவருவருமே   ஊமைகளானதால்    பேச்சுத்துணைக்கு கூட ஆள் யாருமேயில்லாத நிலையில்  தனிமைப்பட்டுத்தான் போனாள். காலவோட்டத்தில் பெற்றவர்கள் வயதாகிப் போனதால் அதுவரை காலமும் கூலி வேலை மூலம் கிடைத்த சம்பாத்தியமும்  நின்று போனது. ஒருவேளை உணவுக்கே போராடும் நிலையில் அவள் புற வாழ்வின் ஆடம்பரத்திலிருந்து அகன்று அந்நியப்பட்டுப் போனாள்.

என் உறவினரொருவரின் தொலைத்தொடர்பகத்தில் அவளுக்கேற்ற வேலை யொன்றைப் பெற்றுக் கொடுத்தேன். அவள் உயர்தரம் வரை கற்ற கல்வி அந்தத் தொழிலுக்குக் கைகொடுத்தது. அவள் அவ்வுழைப்பில் தன்னை யீடுபடுத்திய  பின்னர் வாழ்க்கைச் சுமையும் லேசாய் தணிந்தது. அத் தொலைத் தொடர்பகத்தில் கணனித் தட்டச்சுக்கள் , இணைய செயற்பாடுகளை இவளே நேர்த்தியாய் செய்து கொடுப்பாள். கிராபிக்டிசைன் வடிவமைப்பு, ஆட்டோசொப் போன்றவற்றிலும் முன்னர் பெற்றுக் கொண்ட பயிற்சி அவள் தொழிலுக்கு துணையானது. அவள் திறமை கூட ஓய்வுநேரங்களில் அவளுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் துறையாக மாற, கடன் அடிப்படையில் கணனி ஒன்றையும் வாங்கியவளாய் இணையத் தொடர்பையும் பெற்றாள்.

அவள் வாழ்க்கையின் நெருக்கடிகள் ஓரளவு தணிய ஆரம்பிக்கவே முகநூல் பக்கமொன்றும் ஆரம்பித்து, அதில் பல டிசைன்களைக் காட்சிப்படுத்தத் தொடங்கினாள். அது அவளது பொழுதுபோக்காக அமைந்ததுடன் வருமானம் பெற்றுத் தரும் வழியாகவும் மாறியது.

அவள் முகநூல் நண்பர்களில் ஜெய்சங்கரும் ஒருவன். அதுவரை ஆண்களுடன் பழகியிராத அவளுக்கு ஜெய்யின் அன்புத் தாக்குதல் புதியதோர் அனுபவமாக மாற மனசு நெகிழ்ந்தாள். அவனது வார்த்தை நெருடல்களில் அவளுக்குள் கருகியிருந்த கற்பனைகள் மீண்டும் தளிரிடத் தொடங்கின .அவளும் உணர்ச்சியுள்ள சாதாரண பெண்தானே ..அவன் காதல் அவ​ளைப் பரவசப்படுத்தி வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புக்குள் தள்ளியது.

அவன் அயல் நாட்டைச் சேர்ந்தவன். அவனால் கூறப்பட்ட வார்த்தைகளே அவளுக்கு நிஜமாக்கப்பட்டது. அவன் தன் காதல் ஞாபகங்களாகத் தினம் தவறாமல் அனுப்பும் செய்திகளும், தொலைபேசி அழைப்புக்களும் அவனது உலகத்தில் அவளையும் ஈர்த்துக் கொள்ளவே காதலின் நினைவுகளாக அவர்களுக்கிடையில் புகைப்படங்களும்,  முத்தங்களும், முகிழ்க்கும் கனவுகளும் , எதிர்கால எதிர்பார்ப்புக்களும் பரிமாறப்பட்டன.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.  அவர்கள் முகங்கள் சந்திக்காத காதல் பாதி கற்பனை வாழ்க்கையில் நகர்ந்து இரகஸியமாக குடும்பமும் நடத்தினர். அவர்கள் காதல் முகநூல் நண்பர்களுக்கிடையிலும் கசியத் தொடங்கியது்.

இச்சுகந்தமான நெருடலில் மாதமொன்று நாணியவாறே ஓட்டமெடுத்த பின்னரே. ஜெயசங்கரின் மறுபக்கம் பற்றி அவளுக்குள்ளும் லேசாகத் தெரிய ஆரம்பித்தது. அவன் பெண்களுடன் சகஜயமாக பழகுபவன். ஆரம்பத்தில் அவள் சாதாரணமாக அதை எடுத்துக்கொண்டாலும் கூட நாளடைவில் ஏதோ உறுத்தலுக்குள்ளானாள். ஜெய்யை ரகஸியமாகப் பின்தொடர்ந்தாள். அவன் தன்னைப் போலவே இன்னும் சில காதல் தொடர்புகளுடன் உல்லாசமாக இருக்கும் நாயகன் என்பது அவளுக்கு உறுதியான போது உலகமே இடிந்து அவளிதயத்தை நொறுக்கிய பிரமை. அழுகை மட்டுமே அவள் சொந்தமாக விரக்தி தணலில் விழும் புழுவாய் துடித்தாள்.

முன்பின் தெரியாத ஒருவனை, அவன் வார்த்தைகளை நேசித்த பயங்கரம் அவளுக்குள் உறுத்தியது. தன் மடமை, தவறு உணர்ந்தவளாக ஓர் மாலைப் பொழுதொன்றில் அவன் காதலை முற்றாகத் துண்டித்து அவனையும் தன் நண்பன் பட்டியலில் இருந்து நீக்கி விட்டாள். இவ்வாறான மன விகாரம் படைத்தவர்கள் காதலித்தவர்களை மட்டும் காயப்படுத்த வில்லை. புனிதமான காதலையும் கொச்சைப்படுத்துகின்றார்கள்.

அவள் அவனை நேசித்தது உண்மையான உணர்வே. அவ் வலி பல காலம் நீடித்திருந்தாலும் கூட, அவனிடம் ஏமாறாமல் அவளது வாழ்க்கை காப்பாற்றப்பட்ட திருப்தியில் மனசு லேசானது.

சில ஆண்களே.............!

காதலை நீங்கள்  கற்றறிந்த பின்னர் தூது விடுங்கள். முகநூல் தொலை பக்கம் என்பதால் பலர் பெண்களின் அன்பு செய்யும் மனதை பலகீனமாகக் கருதி, பொழுதுபோக்கிற்காக தினம் விளையாடும் தமது மைதானமாக அவர்களது வாழ்வை மாற்றி விட முயற்சிக்கின்றார்கள். தங்களுக்குத் தேவைப்படுகின்ற பொழுது அவர்களை நெருங்கவும், தேவையற்ற போது புறக்கணிக்கவும் ,தமது காமத்தின் வேட்டைக்கு அவர்களை இரையாக்குவதும் அநாகரிகமான செயல் என்பதை அவர்கள் ஏனோ மறுக்கின்றார்கள்.

"ஊசி இடம் கொடுத்தாலே நூல் உள்ளே செல்லும்."

பெண்கள் எப்பொழுதும் தமது துன்பத்துக்கு தாமேதான்  காரணமாகின்றார்கள். இவ்விடயத்தில் பெண்கள் அவதானமாக இருத்தல் வேண்டும். தம் வாழ்வில் சந்திக்கின்ற ஆண் நண்பர்களுடன் நட்புடன் பழகுவதில் தவறில்லை. ஆனால் அந்த நட்பெல்லையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.காலவோட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் அனுபவங்களைப் பெற்று விடுவோம். ஆனால் அந்த அனுபவங்கள் கிடைப்பதற்குள் பல துன்பங்களும் நமக்குள் சொந்தமாகி விடும். இதுவே இன்றைய கால யதார்த்தம்!



2012/08/08

ஐ லவ் யூ சொன்னால்....


இப்பொழுதெல்லாம் .  வீதியோரங்களில் அநாவசியமாக   வீசியெறிப்படுகின்ற உணர்வே காதலாகி விட்டது. காதலாகி கசிந்து மனமுருகி உணர்வுகளை வார்க்க வேண்டிய இந்தக் காதல், இன்று நாகரீகவுலகில் அதன் அர்த்தம் தெரியாமல் அலைமோதுகின்றது.

பல போலிக்காதல்கள் சிறு சலன தூறல்களில் காளான்களாகி கண்காணும் இடங்களிலெல்லாம் பூத்திருக்க, உண்மைக் காதல்களும் உயிர் தளிர்த்து  கண்களை குளிர்ச்சிப்படுத்துகின்றன.

இத்தகைய இயல்புமிகு இக் காதலை என் பார்வையின்று "ஐ லவ் யூ" எனக் குதூகலிக்கும்  அசையும் படங்களினூடாக ரசிக்கின்றது. இப்பதிவைக் கண்டதும் சிலர் ரசிக்கலாம். சிலர் முகம் சுளிக்கலாம். 

வார்த்தை "தீ"யென்று உச்சரிக்கும் போது நா சுடுவதில்லை. காதலைப் பற்றி சொல்பவர்கள் எல்லாம் காதல் அனுபவம் கொண்டவர்கள் அல்ல.

இந்த முன்னுரையோடு உங்களுக்கும் "ஐ லவ் யூ " சில விசயங்களை ரகஸியமாகச் சொல்லப் போகின்றது.


வாலிபப் பருவமென்பது வசந்தங்களைத் தேடியழைக்கும் பருவம். சுடுகின்ற யதார்த்தங்களை விட சுகமான கனவுகளை நாடிக் கிடக்கும் பருவம். உள்ளம் ரகஸியமாய்த் தேடும் சுகந்தமான உணர்வின் அறைகூவலில் எதிர்பாலினர் தொடர்பான இரசாயனமாற்றங்கள் அதிகளவில் கசிந்து பொசிந்து கலவையாகும் போது தூதுக்கள் மன்மத அம்புகளாகி குறித்த இதயத்தின் காலடி தேடி ஓடும்.

ஏற்றுக் கொள்ளப்படும் காதல்கள் முத்தத்தை மொத்தமாய் கொள்வனவு செய்ய, நிராகரிக்கப்படும் காதல் தூது தன் வாழ்வை சோகத்துள் நனைத்து நிற்கும்.குறித்த இருவரிடத்தில் பற்றுதல் கூடுதலாகி ஈர் இதயங்களும் கிறக்கத்தில் ஓரிதயமாய் வீழ்ந்து தமக்கிடையே தம் உயிர்சாசனத்தில் காதல் ஒப்பந்தத்தை எழுதிவிடுகின்றனர். மன்மதன்களின் கூடலிலே பல ரதிக்கள் மயங்கிக் கிடக்க காதல் வரலாறு அவர்களுக்குள் ஆனந்த புன்னகையை விசிறியவாறு எழுதப்படத் தொடங்குகின்றது.



மனித மனங்களை நந்தவனங்களாக்குவதும், மயானங்களாக்குவதும் இந்தக் காதல்தான். காதல் என்பது இதயவேலிகளில் நாட்டப்படும் முள்வேலி என்பதால் பிறரின் காதல் தூதுக்களை  உள்ளே நுழைய விடாமல் தடுக்கின்றது. கற்பனைகளின் அரங்கேற்றம் காதல் மனங்களிலேயே பெரும்பாலும் ஒத்திகை பார்க்கப்படும் போது காதல் வயப்பட்ட இருவரும் ஒருவரையொருவர் தமக்குள் ஆபரணங்களாய் அணிந்து தம் காதல் உறவுக்குள் வலிமை சேர்க்கின்றனர். அவர்கள் எந்நேரம் உச்சரிக்கும் மந்திரம் "ஐ லவ் யூ " தான்.



கண்கள் வழியாக இறங்கும் காதல் கருத்துக்களில் படிந்து இதயத்தில் சங்கமித்து உணர்வாகி உயிராகும் போது திருமணம் எனும் சடங்கால் அந்தஸ்து பெற முனைகின்றது. மனங்களால் ஒன்றித்தவர்கள் தங்கள் கனவுகளை உயிர்ப்பிக்கும் வரை நிஜம் தொலையும் கற்பனை உலகில் கலந்து கிடக்கின்றனர். அவர்கள் இதயம் இடமாறிக் கொள்ள, விழிகளும் அவர்களைச் சுற்றியே படர்கின்றது. அவர்கள் இதயம் சங்கமிக்கும் உலகில் அவர்களது காதல் நினைவுகள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன. பிறர் பற்றிய பார்வைகளை அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.


தங்களுக்குள் நிதம் நிதம் நிரம்பும் கனவுகளுக்கு உருவேற்றி, அக் கனவுகளின் சிலிர்ப்புக்குள் தன் அன்பானவர்களையும் அடக்கி விடத் துடிப்பார்கள். உணர்வுகள் ஏந்தும் ஆசைகள், கனவுகளை மையாக்கி, அவர்களின் மென் கரங்களைச் சூடேற்றி மோகத்தில்  தவிக்கும் காதல் கடிதங்களாய் மாற்றி, தன் துணையின்  முகம் தரித்திருக்கும் முகவரிக்குள் கடிதங்களைச் நுழைத்து விட காதல் மனங்கள் துடிக்கின்றன.  அக் கடிதத்தின் அழைப்பு மணி "ஐ லவ' யூ' என கோஷித்துக் கொண்டேயிருக்கும் அடுத்த கடிதம் காணும் வரை!


 எதிர்காலம் அவர்கள் கண்முன் விரிய  அக் கடிதங்களில் பல முறை பார்வையைப் பதித்து  அடிக்கடி தம் நிஜ வாழ்விலிருந்து விலகி, கற்பனை ராஜாங்கத்தின் சிம்மாசனத்தில் இருவருமே ஏறியமர்ந்து  முடி சூடிக் கொள்கின்றனர்.காதலர் கரம் சேரும் கடிதங்களும், அவர்களின் நேச அன்பளிப்புக்கும், உயிர்ப்பான வார்த்தைகளின் ஞாபகங்களுமே இவர்களின் ஆயுட்கால ஆவணங்களாய் உயிருக்குள் ஏறி உட்கார்ந்து கொள்ளும் காலம் முழுதும்!

காதல் ஒரு போதையாகவும், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாகவும் விளங்குவதால் காதல் வயப்பட்டவர்கள் மகிழ்ச்சியூற்றுக்களில்  நிதம் தம்மை நனைத்து துன்பமிகு யதார்த்தங்களிலிருந்தும் விலகி விடுகின்றனர்.  சிறகடிக்கும் அழகிய வண்ணத்துப்பூச்சிகளாய் இருவரும் தம்முலகில் பறக்க முயற்சிப்பதால் புறவுலகை அவர்கள் மறந்து பிறரின் பார்வையில் வெறும் கண்காட்சிப் பொருட்களாய் மாறி விமர்சனத்துக்குள்ளும் வீழ்ந்து விடுகின்றனர் சிறு பிள்ளைத்தனமாய்!


புகையைப் போல காதலையும் மறைக்க முடியாதென்பார். இருவர் மனப்பூர்வமாக ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து வாழ முயற்சிக்கையில் அவர்களையுமறியாமற் காதல் மோகத் தீயை அடுத்தவர் கண்களுக்குள் விசிறி விடுகின்றனர்.அவனும் நோக்க அவளும் நோக்க அவர்களிருவரையும் ஊரார் நோக்க உள்ளத்தில் மோகித்து சுடர் விட்டெரியும் காதலொளி பிறர் பார்வையில் தீப்பந்தமாய் வெளியே எட்டிப் பார்க்கின்றது. ஊர் பார்வைக்குள் உருளும் காதல்களில் சில  திருமண முழக்கத்தில் மனம் மகிழலாம். சில பெரியவர்கள்  எதிர்ப்பில் முறிந்தும் போகலாம்.


அழகு ஒரு கவர்ச்சியான ஊக்கியாகவிருந்தாலும் கூட  பல காதல் முக வழகு தேடாது அகத்தின் இருப்பில் படிந்திருக்கும் மெய் யன்பின் எதிர்பார்ப்பிலேயே குறி வைத்திறங்குகின்றன. நண்பர்கள் துணை நிற்க தம் எதிர்பார்ப்புக்களை வாழ்க்கையாக்க பல மனங்கள் போராட்டத்தில் களம் குதித்தாலும், சில மனங்களோ எதிர்ப்பின்றி இல்லற பந்தத்தில் பெரியோர் ஆசியுடன் நுழைந்து வாழ்வைத் தொடங்கி விடுகின்றனர்.



வாழ்த்துவோம் நாமும் காதலர்களை!

அவர்களின்  அன்பு தாலியாய் பெண் கழுத்தில் மங்கள நாண் பூட்ட, அவர்கள் தடங்கள் பயணிக்கும் வாழ்க்கை யோரங்களில் வீழ்ந்து கிடக்கும் முட்களெல்லாம் மென்மலர்களாய் உருமாறி அவர்களை ஏந்திக் கொள்ளட்டும் கால முழுவதும் !


இனி அவர்கள் மௌன வுலகில் நமக்குள் அனுமதியில்லை.  அவர்கள் உலகில் அவர்களே தனித்திருக்கட்டும் தம் கனவுகளைப் பரிமாறிக் கொள்ள !


-Jancy Caffoor-


உன்னுயிர் பற்றி


இருள் கிழித்து ...........
மௌனமாய் உருகும் நிலவெளியில்
மானசீகமாய் மயங்கிக் கிடக்கின்றன
நம் நினைவுகள்!

உன்னருகாமையில் - நான்
படர்ந்திருக்கும் - அந்த
நிசப்த தணலில் ............
பற்றியெரியும் தீயாய்
மோகித்துக் கிடக்கின்றது
நம்மன்பு!

விரல்களின் மோதல்களைத்
தவிர்த்திட மனமின்றி ...........
நம் மேனியோ
உஷ்ணத்தின் வெளிநடப்பால்
வெட்கம் தொலைத்து நிற்கின்றன
ஏக்கங்களை ரசித்தபடி!

எங்கோ.................
சிறகறுத்து வரும் தென்றல்
கொஞ்சம் முறைத்துச் செல்கின்றன
இடைவெளி மறந்த
நம் .............
இதழோரங்களைக் கண்டு!

நம்.......
உயிர் தள  மூச்சோரங்கள்
எகிறிக் குதிக்கின்றது
நேசத்துடன் வாசிக்கப்படும்
உணர்வுப் பரிமாற்றத்தின்
வீரியம் கண்டு!

சத்தமின்றி நம் சந்திப்புக்காய்
கை காட்டும் நாட்காட்டி
வெட்கத்தோடு ஒதுங்கிக் கிடக்கிறது........
இடையிடையே
தடையின்றி மோதும் நம்
முத்தச் சிலிர்ப்பில்!

கொந்தளிக்கும் அலை நடுவே
தத்தளிக்கும் சிறு மீனாய் ........உன்
அணைப்பினிறுக்கத்தில்
சிவந்து கிடக்கின்றேன்
விடுதலை தேடா கைதியாய்
மாறி!

உன் உயிர் பற்றி
உருளுமென்னுலகில் ......
கடிகார அலைவுகள்
நிதானித்தே செல்கின்றன
உன்னை.......
என்னுள்ளிடமாற்றும் வரை!




ஜன்ஸி கபூர் 



கனவொன்று


இப்பொழுதெல்லாம்
அடிக்கடி............
கனவொன்று கிள்ளுது  என்னுள்!
நம்..........
காதல் சரித்திரங்களை
நூறாண்டு வாசித்தபடி!

பனித்துளிகளின் சில்மிஷங்களுக்குள்
சிலிர்த்துக்கிடக்கும் ரோஜாக்களாய் ..........
நாம்
நடப்படுகின்றோம் தினம் - நம்
காதல்வெளியில்!

நிதம் நீயென்
இரவுச் சொப்பனத்திலே - என்
உறக்கமறுத்து
உணர்வு பிழியும்
இரகஸிய  கணவனாய்
இம்சிக்கின்றாய் இதமாய்!

விளக்கெரிக்கும் நேரத்தில்
விட்டிலாய் என்னைச் சுற்றிச் சுற்றி
வில்லத்தனம் பண்ணும் - உன்
முரட்டுக் கரங்களில் - தினம்
முடிச்சவிழத் திணறுகின்றன
என் நாணம்!

உன் சீண்டலும்
என் சிணுங்கலும்
அன்பின் பரிமாற்றங்களாயானதில்.......
சில் வாண்டுகள் பல- நம்
வண்ணச்சோலையின் அங்கத்தவராய்
புது முகம் காட்டினருன் சாயலில்!

நாட்களின் நடைப்பயணத்தில்
நம்.........
வாலிபம் கரைந்தோடுகையில்
திரையாய் நரை  பல.............!

தளர்ந்த சுருக்கங்களும்
தள்ளாடும் நடையும்
துள்ளியோடும் பேரர்களை
அள்ளியணைத்து ரசிக்கையில்
குழந்தையாய் நாமும்
நமக்குள் புதைந்து போகின்றோம்!

நம்
மனக் கருவறைக்குள்
உயிர் கொண்ட காதல்...............
கல்லறைக்குள் வீழ்கின்ற போது
நம்
ஆத்மாக்கள்  இணைந்தே செல்கின்றன
நமக்கிடையிலான
பிரிவை மறுத்தபடி!

உறக்கம் சிரிக்கின்றன
கனவுகள் அறுகின்றன!
மெதுவாய் கண்ணவிழ்த்து
உனைத் தேடுகின்றேன் அருகாமையில்!

நீயோ தொலைவில் நின்று
கண்சிமிட்டியவாறே.........
கன்னம் கிள்ளுகின்றாய்
காத்திரு
நாளை வருவேனென்று!

ஜன்ஸி கபூர் 

2012/08/07

மனசே மனசே


வீட்டு முற்றத்தில் சிதறிக்கிடந்த  இரையை உற்சாகமாகத் தேடிப் பொறுக்கித் தின்னும் சின்னச்சிட்டுக்களின் சிரிப்பொலியும் அவ்வொலி ஞாபகப்படுத்தும் சலங்கை யொலியும் பலமாய் என் காதுகளுக்குள் விழுந்த போது மேலும் உறங்க முடியவில்லை. தூக்கம் சிதறியோடியது. கண்களை விரித்து உறக்கத்திற்கு விடை கொடுத்தேன்.....நன்றாக விடிந்து விட்டது. கடிகார முட்கள் ஏழைத் தொட்டு நின்றன.

விடிந்து விட்ட இயற்கையின் பரபரப்புக்குள் ஒன்றித்துக் கிடக்க மனசேனோ இடம் தரவில்லை. அமைதிக்குள் அடங்கிப் போனவளாய் வெளி முற்றத்தில் என் கால்களைப் பதித்தேன்.

என் பார்வை என்னையுமறியாமல் மேல் மாடியில்  வீசப்பட்டது.  காயப் போடப்பட்டிருக்கும் வெள்ளை நிற தாதி யூனிபார்ம் கோட்டுக்களால் நிரப்பப்பட்டிருக்கும் கயிற்றுக் கொடிகள் பொலிவிழந்து வெறுமையாகிக் கிடந்தன. மனம் சங்கடப்பட அப் பார்வையை அறுத்தவளாய் மறு புறத்திலுள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தைப் பார்க்கின்றேன். அங்கும் வெறுமை......... மீண்டும் மனசு வெறுமைப் பிரளயத்தில்  கரைந்தோட சில நினைவுகள் எனக்குள் உட்கார்ந்து விழிகளை அரிக்கத் தொடங்கின!

" நிசங்க"

பார்க்குமிடத்திலெல்லாம் அவன் விம்பமாய் பூத்து நின்றான்.

நாங்கள் குடியிருக்கும் வீட்டின் மேல் மாடியிலுள்ள அறையொன்றில்தான் அவனும்  வாடகைக்கு எடுத்துத் தங்கிருந்தான்.அவன் ஒரு பயிலுநர் தாதி. எங்களூர் வைத்தியசாலையிலேயே நியமனம் கிடைத்திருந்தது. ஆரம்பத்தில் அவனுக்கும் எனக்கும் இடையில் வெறும் புன்னகை மட்டுமே பாஷையாக இருந்தாலும் கூட  காலப் போக்கில் எங்கள் சின்னப் பாப்பா மூலம் அவனுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

"நர்ஸ் மாமா வாறார் "

இரண்டரை வயதுக்குழந்தையின் மழலை மொழி கேட்கும் போதெல்லாம் அவன் பாப்பாவுடன் கதைக்க எங்கள் வீட்டு முற்றத்திற்கே  வந்துவிடுவான். அவன் கதைக்கும் சிங்களப் பாஷை குழந்தைக்கு விளங்காவிட்டாலும் கூட அவன் காட்டும் அன்பும், அவன் சிரித்த முகம் காட்டும் அபிநயமும்  அவளுக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டன.

எங்கள் வீதியில் அவன் மோட்டார் சைக்கிள் உறுமிக் கொண்டு வரும் போதெல்லாம் பிள்ளை அவனை வீட்டுக்குள்ளிருந்தே அடையாளம் கண்டவளாய் , "நர்ஸ் மாமா" என கூவிக் கொண்டு வீட்டுக்குள் மறைந்து நின்று அவன் வருகையை எதிர்பார்த்து  காத்து நிற்பாள். அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் வெளி முற்றத்துக்குள் வந்து அவனது மேல்மாடி அறையை அண்ணார்ந்து பார்ப்பாள்.. அவனுக்கு அவளைப் பற்றித் தெரியும் என்பதால் வீட்டுக்குள் போவதைப் போல் பாசாங்கு செய்து கதவுக்குள் மறைந்து நின்று அவள் வெளியே வந்ததும் ஓடி வந்து தூக்குவான். அவள் சிரித்துக் கொண்டே அவன் பிடியிலிருந்து விலகி வீட்டுக்குள் ஓடி வரத் துடிக்கும் போதெல்லாம், அவர்கள் இருவருக்குமிடையில் நடுவராக நின்று அவன் பிடியிலிருக்கும் அவளைச் சமாதானப்படுத்துவது  நானே என்பதால் தொடர்ந்து வந்த நாட்களில் அவன் புன்னகை என்னைக் கண்டதும் வார்த்தைகளாக மாறின. பிள்ளையின் செயலைப் பற்றி கதைப்போம். அந்த நல்ல நட்பில் அவன் என் மனதுக்குள் மெதுவாக இறங்கினான்.பாப்பாவுக்கும் அவனுக்குமிடையிலான இந்த அன்பு விளையாட்டை நான் அதிகம் ரசித்தேன். சில நேரங்களில் அவர்களின் சிரிப்பில் என் சிரிப்பும் கலந்து கிடக்கும்

நாட்களின் வேகமான பயணத்தில் அந்த நாட்களும் வந்தது. அவன் தாதிப் பயிற்சி நிறைவடைந்து தன் ஊருக்கே மாற்றலாகிப் போகும் அந்த இறுதித் தருணங்களும் வந்தன..சின்னவளோ இந்த உண்மையை அறியாமல் வழமைபோல் அவனுடன்  ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவன் எங்கள் ஊரைவிட்டுப் போகும் கடைசி நிமிடங்களையும் சந்தித்து எம்மிடமிருந்து விடைபெற்றும் சென்றுவிட்டான் ....

உர்ரென்று வீதியை உரசிச் செல்லும் மோட்டார் சைக்கிளின் ஓசையொன்றின் அதிர்வைக் கேட்டு  சின்னவள் கைதட்டி உற்சாகமாகச் சிரிக்கின்றாள்

"நர்ஸ் மாமா வாறார்" "நர்ஸ் மாமா வாறார்" "நர்ஸ் மாமா வாறார்"

அவள் குரலதிர்வு எனக்குள் வேதனையைக் கிளற ,மெதுவாக குழந்தையிடம் சொல்கின்றேன்.

" நர்ஸ் மாமா , இனி வரமாட்டார் செல்லம்"

மனசின் வேதனையோடு  நான் கூறும் வார்த்தைகளை அவள் கேட்பதாக இல்லை. புரிந்து கொள்ள முடியாத அந்த வயசு, தன்னிடம் பதிவாகியுள்ள நம்பிக்கையை மட்டுமே சுமந்தவாறு மீண்டும் மீண்டும் உற்சாகமாக குரல் கொடுக்கின்றாள்.........

"நர்ஸ் மாமா வாறார்............நர்ஸ் மாமா வாறார்"

அவள் அன்பு .......வார்த்தைகளாகி காற்றோடு வேகமாக மோதி வீடெங்கும் ஒலிக்கத் தொடங்க,  நானோ   பிள்ளையின் தவிப்பைக் கண்டு கண்கலங்கி நிற்கின்றேன் சோகத்துடன் !............

இந்த அன்பின் அவஸ்தையில் தவித்துக் கிடப்பதென்னவோ மனசுதானே!

67 வது ஹிரோஷிமா நினைவு தினம்


ஆகஸ்ட் - 6 - ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 67 வது நினைவு தினமாகும்.

கொல்லப்பட்ட அம் மக்களுக்கான மௌன அஞ்சலியை எனது வலைப்பூ செலுத்தியவாறு, அப் பின்னணியை இன்று என் நினைவகம் ஏந்தி பகிர்ந்து  கொள்கின்றது.

புவிச்சுற்றுகை, புவிச்சுழற்சியினால் நாட்கள் வேகமாகப் பயணிக்கின்ற போதிலும் நம் ஆழ்  மனதில் ஆணியறையப்பட்ட ஞாபகங்கள் யாவும் உதிர்ந்து விடாமல் பத்திரப்படுத்தப்பட்டு ஏற்ற உரிய காலங்களில் விழிக்கின்றன.  இதுவே நியதி !

 பொதுவாக மானிட வாழ்க்கை போராட்டங்களால் சூழப்பட்டுள்ளன. அப் போராட்டங்களுக்கான தீர்வுகளும் பல்வேறு அணுகுமுறைகளில் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் நாடுகளின் ஆட்சித்தலைமைகள் தமது வல்லமையை உலகில் நிலைநாட்டுவதற்காகவும், மண்ணாசை, பொருளாதாரப்  பேராசை போன்ற தீய குணங்களால் ஆட்பட்டமையினாலும், நாடுகளுக்களுக்கிடையே போர் முரசுகளைக் கொட்டி போராடும் அநாச்சாரம்  வரலாறாகி உலகக் கோளத்தில் கறைப் படிவுகளுடன் படிந்து கிடக்கின்றன.
அரசபீடங்களில் முடிசூட்டிக் கொண்டோர் தம் ஆதிக்கக்கரங்களின் வலுவூட்டலுக்காக  அப்பாவி மக்களைப் பலியாக்கி தம் ஆட்சிக் கிரீடங்களை அழகுபடுத்தி  வந்தமை, வருகின்றமை மறக்கப்பட முடியாத கசப்பான உண்மையாகும்.

 1  செப்ரெம்பர் 1939 ம் ஆண்டு தொடக்கம் 1945 ம் ஆண்டு செப்ரெம்பர் 2 ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற பாரிய உலகப்போரே இரண்டாம் உலகப் போராகக் கருதப்படுகின்றது.

இது ஐரோப்பா, பசுபிக், தெற்கு-கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், ஆபிரிக்கா போன்ற இடங்களை மையங் கொண்டன.


இதில் அச்சு நாடுகள், நேச நாடுகள் எனும் ஈரணியில் உலக நாடுகள் சில பிரிந்து போரிட்டன. இப்போரில் 10 கோடி இராணுவத்தினர் ஈடுபட்டனர். இப் போரிலீடுபட்ட நாடுகள் தமது சகல பொருளாதாரம், உற்பத்தி, தொழில் என்பவற்றை போர்க்களத்திலீடுபடுத்தியே போரிட்டதால் அதுவரை உலகம் கண்டிராத பாரிய அளவிலான உயிரழிவு இப் போரால் ஏற்படுத்தப்பட்டது.


1939 செப்ரெம்பர் 1 ல் நாசி ஜெர்மனியின் போலந்துப் படையெடுப்புடன் இப்போர் தொடங்கியது. பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் நேச அணியையும், நாசி ஜெர்மனி, பாசிச இத்தாலி என்பவை இணைந்து அச்சு அணியையும் உருவாக்கின. சீனாவுடன் போர் தொடுத்துக் கொண்டிருந்த ஜப்பானும் அச்சு அணியில் இணைந்து இரண்டாம் உலகப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டது.

 1939-1941 வரையிலான காலப்பகுதியில் பிரிட்டனைத் தவிர மேற்கு ஐரோப்பிய நாடுகள் அச்சு அணியால் கைப்பற்றப்பட்டன. பின்னர் வடக்கு ஆபிரிக்காவை தம் வசப்படுத்த அச்சு அணி முயன்றன. சோவியத் ஒன்றியத்தின் மீதும் 1941 ஜூனில் அச்சு அணி போர் தொடுத்ததால் சோவியத் ரஷ்யா நேச அணியில் தன்னை இணைத்தவாறு போரிலீடுபட்டது.

ஜப்பான் படைகள் தென்கிழக்காசியாவின் பல பகுதியைக் கைப்பற்றி கிழக்கிந்தியாவின் எல்லை வரை முன்னேறிக் கொண்டிருந்தது. தானும் ஓர் வல்லரசாக மாற வேண்டுமென்ற முனைப்பில் ஜப்பான் 1941 டிசம்பரில்  பசுபிக் சமுத்திரத்தின் "பேர்ள்"  துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கப்பலை மூழ்கடித்ததன் மூலம் அதுவரை வெறும் பார்வையாளராக இருந்த ஐக்கிய அமெரிக்காவைச் சீண்டி,  இரண்டாம் போருக்குள் அது நுழைய வழியமைத்துக் கொடுத்தது. இரண்டாம் உலகப் போரில் உள் நுழைந்ததால் அமெரிக்காவும் நேச நாட்டுப் படையணியுடன் கூட்டுச் சேர்ந்தது.

1942 ம் ஆண்டு வரை அச்சு நாடுகளுக்கு சாதகமாக இருந்த போர் நிலைமை , அமெரிக்காவின் பிரவேசத்தைத் தொடர்ந்து மாற்றமடையத் தொடங்கியது. அச்சுப்அணியின் மேலதிக நகர்வு சோவியத் படையால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆபிரிக்காவிலும் அச்சு படையணி பின்வாங்கியது. பசுபிக் கடலோரத்தில் நேச நாடுகள் இழந்த பகுதிகளை அமெரிக்கா மீண்டும் கைப்பற்றத் தொடங்கியது.

1943 ல் நேச நாட்டுப் படையெடுப்பால் இத்தாலி சரணடைந்தது.1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்கும் பணிக்கான போரில் நேச நாடுகள் கடல் மார்க்கமாக ஈடுபட்டன. கிழக்குப்புறமாக சோவியத் படையும், மேற்குப் புறமாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா நேச அணிகளும் கூட்டாகச் சேர்ந்து ஜெர்மனியைத் தாக்கத் தொடங்கின. ஈராண்டுகள் தாக்குதலின் பின்னர் நாசி ஜெர்மனும் 1945 ம் ஆண்டு மே மாதம் 8 ந் திகதி சரணடைந்தது. அதே நாளில் "சரண் ஆவணம்" ஜெர்மனால் கையெழுத்திடப்பட்டது.

ஆனால் ஜப்பான் தனது போர் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. இதனால் பசுபிக் பிராந்தியத்தில் தொடர்ந்தும் உக்கிரப் போர் நடைபெற்றது.நேச நாடுகள் ஜப்பான் மீது தொடர்ந்தும் பல தீக்குண்டுகளை வீசியது. 1945 ஜூலை மாதம் 26 ந்திகதி சீனா,ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஒன்றிணைந்து "பாட்சுடம் அறிக்கை " யை வெளியிட்டது. அவ்வறிக்கை மூலம் "ஜப்பான் தனது தோல்வியை ஏற்று உடனடியாக சரணடைய வேண்டுமெனவும், அல்லாவிடில் உடனடி முழு அழிவுக்குள்ளாக வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்தது"

 ஆனால் ஜப்பான் அவற்றின் கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் உக்கிரப்பார்வை ஜப்பானை நோக்கி திரும்பியதில் 1945 ஆகஸ்ட்டி6-9 ம் திகதிக்குள் ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுக்குண்டுகளை அது வீசி அவ் ஜப்பானின் இரு நகரங்களையும் அழித்து தன் வல்லமையை உலக அரங்கில் நிருபித்தது.

இவ்வாறு அழிவுக்குள்ளான "இரேசிமா அல்லது ஹிரோஷிமா" என்பது ஜப்பானிலுள்ள பெரும் நகரமாகும். இது ஹோன்ஷூ தீவிலுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது முதன் முதலில் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ந்திகதி காலை 8.15 நேரத்திற்கு ஹிரோஷிமா நகரத்தின்  மீது ஐக்கிய அமெரிக்கா தனது சின்னப்பையன் (Little Boy) எனும் அணுகுண்டை  வீசியது. இவ் அணுகுண்டு விமானப்படைத் தளபதியாக இருந்த "போல் டிபெட்ஸ்" எனும் விஞ்ஞனியால் "எனோலா கே" எனும் பி-29 ரக விமானத்திலிருந்து வீசப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். "எனோலா கே"  என்பது இவ் விமானியின் தாயார் பெயராகும். இதன் நிறை 4000 கிலோ கிராமாகும். நீளம் 3 மீற்றராகவும், விட்டம் 0.7 மீற்றராகவும் காணப்பட்டது.


ஹிரோஷிமா 905.1 கிலோ மீற்றர் பரப்பைத் தன்னகத்தே கொண்ட மாகாணமாகும். இப் பிரதேசத்தில் அணுகுண்டு விழுந்ததும் அது பாரிய சப்தத்துடன் வெடித்தது. சுமார் 2000 அடிகளுக்கு மேல் தீச்சுவாலை மேலெழுந்தது.16 கிலோ மீற்றருக்குட்பட்ட சகல கட்டிடங்களும் தரை மட்டங்களாகின. 900,00 மக்கள்  தொடக்கம் 166,000 வரையிலான மக்கள் மடிந்தனர். இந் நகரின் தொடர்புசாதனங்கள் யாவும் உடனடியாக செயலிழக்கப்பட்டமையால்  இந் நகர அழிவின் கொடுமை பற்றி ஜப்பான் இராணுவத் தலைமையகம் உடனடியாக அறிந்து கொள்ளவில்லை. அதன் பின்னரே அறிந்து கொண்டது. அணுகுண்டு வீசி 16 மணித்தியாலத்தின் பின்னர்  அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அவ் அப்பாவிகளின் உயிரோடு தான் விளையாடி சாதனை படைத்ததை வெளி உலகிற்கு அதிகாரபூர்வமாகப்  பறைசாட்டியது.


 அன்று வீசப்பட்ட  அவ் அணுகுண்டின் தாக்கத்தால் பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், குழந்தைகளும் சதைப்பிண்டங்களாகவும், அங்கவீனர்களாகவும் தமது பிறப்பை வெளிப்படுத்தினர். இற்றைவரை கதிர்வீச்சின் தாக்கக் கொடுமையை அம் மக்கள் அனுபவித்து வருவது வேதனைக்குரியது..அவ் அணுக்குண்டின் கதிர்வீச்சின் சிதறல்களால் சூழலும் பாதிப்புற்று உயிரின வாழ்விற்கு அச்சுறுத்தலாகவுள்ளது.

(இது வீசப்பட்ட 3ம் நாள் ஆகஸ்ட் 9 ந் திகதி கொழுத்த மனிதன் (Fat Man) எனும் பெயரில் 2வது அணுகுண்டு ஜப்பானின் இன்னுமொரு நகராகிய நாகசாகியில் வீசப்பட்டது.)

அமெரிக்காவின் புதிய அணுகுண்டு பரிசோதனைக் கூடங்களாக ஜப்பானின் நகரங்கள் பயன்படுத்தப்பட்டமையினால் 120,0000 ற்கு மேற்பட்ட உயிரிழப்புக்களும் இன்றுவரை முடிவு காணப்படாத கதிர்வீச்சுத்தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன.ஜப்பானும் தனது நகரங்களின்  மீது வீசப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலையடுத்து 15 ஆகஸ்ட் 1945 ம் ஆண்டு சரணடைந்தது. அதே ஆண்டு "சரண் ஆவணத்தில்" அது கையெழுத்திட்டதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய அரசுகள் தம் வல்லமையை இழந்தன. ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் காலனிமயமழித்தல் தொடங்கியது. ஐரோப்பியா பனிப்போர் கசியத் தொடங்கியது. அமெரிக்க ,ரஷ்யா புதிய வல்லரசாகியது, உலக அமைதிக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இருந்தும் இங்கு இழக்கப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்களின் இழப்புக்கு முன்னால் அவை வெறும் பூச்சியங்களே!

இவ் அணுகுண்டு வீச்சானது அறநெறிக்கப்பாற் பட்டதே. தன் நாட்டுக்கேற்பட்ட இழப்புக்களுடன் கூடிய அந்த பயங்கர வலியினால் ஜப்பான் 1967 ல் "அணு ஆயுத விலக்கு பற்றிய 3 தத்துவங்களை" வெளியிட்டது.

இதனடிப்படையில் தான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லையென்றும், அணு ஆயுதங்களை தன் கைவசம் கொண்டிருப்பதில்லையென்றும், அணு ஆயுதங்களை நாட்டுக்குள் வர அனுமதிப்பதில்லையென்றும்  தத்துவங்களை இயற்றி செயற்படுத்தியது.

ஹிரோசிமா நகரத்தின் மீது அமெரிக்கா அணுக்குண்டினை வீசி பாரிய உயிரிழப்புக்களுடன் கூடிய அவலங்களை ஏற்படுத்தியதை நினைவு கூறும் வகையில் 1996ல் ஹிரோசிமா நகரில் "ஹிரோசிமா சமாதான நிலையம்" நிறுவப்பட்டுள்ளது. இதன் பெயர் ஜப்பானிய மொழியில் "கென்பாக்கு டோம்" (அணுகுண்டு குவிமாடம்) ஆகும்.  ஆக் கட்டிடத்தின் வடிவமைப்பின் ஆரம்ப கர்த்தா ஜான் லெட்செல் ஆவார்.


இவ்வாறு ஏதோ சில சுயநலங்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற யுத்தங்களும் அவற்றின் இழப்புக்களும் நிம்மதியுடன் வாழ முனைகின்ற ஆரோக்கிய மனித சமூகத்திற்கிடப்படுகின்ற  சாபங்களே! இவ்வாறான அவலங்கள் இனி இப் புவிக் கோளத்தின் நிலப்பரப்புக்களை ஒருபோதும் மாசுபடுத்தக்கூடாதென்பதே நம் அவாவும் பிரார்த்தனையுமாகும்!

- Ms.Jancy Caffoor -