About Me

Showing posts with label நவீன கவிதைகள். Show all posts
Showing posts with label நவீன கவிதைகள். Show all posts

2021/05/01

புன்னை மரம்

 

அழகும் இதமாகின்றது புன்னையின் புன்னகைபோல்

அருமையின் அடையாளமாகவே உயிர்க்கின்றது தானாகவே

வறுமையும் வளமற்ற சூழல்ப் போராட்டமும்

நிறுத்துவதில்லை இயல்பான இயற்கை வளர்ச்சியை

இருந்தும் சூழ்கின்ற சிறைக்கரத்தின் வன்மத்தில்

கரைந்தே விடுகின்றது மென்மையான மனம்


அடுத்தவரால் மலினப்படுத்தப்படுகின்ற உணர்வுக் குவியலுக்குள்

புதைந்தே புகைகின்ற பெண்மைத் தடத்திலும்

எதிர்பார்ப்புக்களை ஏந்தியவாறே பூத்துக் குலுங்குகின்றன

அடக்கமான அமைதியான வாசனைப் பூக்கள்


ஊர்விழிகளால் மொய்க்கப்படாமல் மூடி மறைகின்ற

இயற்கை பராமரிக்கின்ற இதமான அழகும்

இதழ்களுக்குள் நசிகின்ற மென் புன்னகையும்

சிந்துகின்ற வாசம் மௌனத்திலேயே உறைகின்றது


அடுத்தவரோடு இசைந்து வாழ்கின்ற வாழ்விலும்

விரிக்கப்படுகின்ற சுதந்திரச் சிறகின் நீளுகை

முறிக்கப்படுகின்றது முற்றத்தில் தறித்து நிற்போரால்

நிழலாகின்ற கொடைக்குள்ளும் குறிவைக்கின்றது செந்தணல்


தன்னலம் களைந்து வாழ்கின்ற வாழ்விலும்

விண்ணைத் தொட முயற்சிக்கும் போதெல்லாம்

புண்ணாய்ச் சிதைக்கின்றனர் உணர்வினை உடைத்து

நாற் சுவருக்குள் நாடித்துடிப்பை அடக்கி

பெண்ணைப் போலவே புன்னையும் 

மொண்ணையாகவே மாற்றுகின்றனர் தரணிப் பரப்பிலே


ஜன்ஸி கபூர்

துளியும் கடலும்


தரையைத் தொட்டு மீளுகின்ற அலைகளாய்

தவிக்கின்ற உன் நெஞ்சம் புரிகிறது!

கரையினில் உடைகின்ற அலைகளாய் உன்னாசைகளும்

மனதினில் துடிப்பது எனக்கும் புரிகின்றது!

இருந்தும் புரியாதவனாய் நழுவுகின்றேன் அடிக்கடி!


வீசுகின்ற காற்றுக்குள் நிரப்புகின்றாய் சோகங்களை

மரத் துடிப்பினில் வீழ்கின்ற இலைகள்

நினைவூட்டுகின்றது உன்னை எனக்குள் எப்பொழுதும்

நானின்றி வெறும் சருகாய் உருமாறுகின்ற

உன்னைக் கண்டும்கூட கடந்துதானே செல்கின்றேன்.


உன் சாய்விற்கு என் தோள்கள்

உன் ஆசைகள் என்னைத் துரத்துகின்றன

நான் முற்றும் துறந்தவனா இல்லையே

உன் அன்பு புரிந்தும் ஊமையாகின்றேன்

யாருக்காகவோ உன்னைத் தனிமைப்படுத்துவதாகவே நினைக்கிறேன்


இசை எனக்குப் பிடிக்கும் இசைப்பேன்

மூங்கில் துளைகளை அருட்டுகையில் விழுகின்றது

பொங்கும் உணர்வுகளுடன் போராடும் உன்னினைவு

இருந்தும் தயங்குகின்றேன் உன்னைத் தாங்கிட

உன் அருகாமை என்னை உடைத்திடுமோ


காதல் உணர்வல்ல வாழும் வாழ்க்கை

காதலை நான் கற்கும் வரைக்கும்

நமது விம்பங்கள் மோதுவதை விரும்பவில்லை

நம்மை நாம் புரிந்து கொள்ளும்வரை

தள்ளியே நிற்கின்றேன் உறுதி மனதில்தான்

சந்திப்பு வேண்டாம் உறுதியுரைக்கு என்னாச்சு

உன் உருவைக் கண்டதும் உராய்கின்றது

உந்தன் விழியோரம் செருகியிருக்கும் நீர்

எந்தன் மனசுக்குள் பாய்கின்றது தாராளமாக


நாம் பேசியிருக்கிறோம் நிறைய ரசித்திருக்கிறோம்

காதல் சாயமில்லா நட்புத்தானே அது

அப்படித்தானே நினைத்துப் பழகினேன் உன்னோடு

அருகிலிருந்தால் உந்தன் அமைதியை ரசிக்கிறேன்

உரு மறைந்தால் உறுத்துகிறதே இதயமும்

இருவரின் பேச்சிலும் வாழ்வியல்தானே நிறைந்திருக்கின்றது

இருந்தும் நமது தோழமைக்குள் காதலா

கண்டுபிடிக்க காத்திருக்க வேண்டும் நாம்தான்


உனது நீட்சிக்குள் நானென்ற எல்லையை

எனது மனம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது

உன் துயரங்களுக்கு காது கொடுக்கிறேன்

விழி நீரையும் துடைக்கிறேன் தாயாகி

இன்பத்திலும் துன்பத்திலும் ஒருங்கிசைகின்றோம் நேர்கோட்டில்

இருந்தும் சேமிக்கின்றாய் துடிப்புக்களை என்னுள்ளே


நான் வாசிக்கையில் வீழ்கின்றாய் வரிகளாக

உன் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன்

நம் அன்பின் எல்லையை உணரும்வரை

தள்ளியே நிற்கிறேன் முல்லைக் கொடியே


நீயும் விடுவதாக இல்லை தொடர்கிறாய்

உந்தன் சோகங்களை என்னிடம் கொட்டுகையில்

கண்களின் வேதனையைப் படிக்கின்றேன்

கன்னக் கதுப்பில் உறைந்திடும் உனதீரத்தில்

உள்ளம் நனைந்து விடுகின்றது தானாய்

உந்தன் இமையோரம் வடியும் நீர்த்துளிகள்

எனக்குள் அல்லவா கடலாகப் பெருகின்றது.

காரணம் புரியாமல் நானும் தவிக்கிறேன்


உன் அண்மையை ரசிக்கிறேன் எப்பொழுதும்

உனக்காகப் பிரார்த்திக்கிறேன் சோகங்களைப் பிடுங்க

உந்தன் கரங்களைப் பற்றிக் கொஞ்சிட

உள்ளத்தில் மெல்ல ஆவல் முளைக்கிறது

விலகலே நலன் என்கிறது மனசு

விலகினாலும் இணையத் துடிக்கின்றது அன்பு


என் விலகலில் நீ மௌனிக்கிறாய்

அப்பொழுதெல்லாம் அனலாகின்ற தவிப்பும் கடலாகின்றது

நீ உதிர்க்கின்ற கண்ணீர்த் துளிகளை

சேமிக்கின்ற மனதுக்குள் எப்பொழுதும் சுனாமிதானே

பொங்குகின்ற கடலை ஏக்கம் தகர்க்கின்றது

உந்தன் உருவுக்குள்ளே ஒன்றிக்கிடக்கும் என்னைப்

பத்திரப்படுத்து வந்திடுவேன் நானும் உன்னிடத்தில்


ஜன்ஸி கபூர்

நிழல்

 


நிழல் உண்மையை உணர்த்துகின்றது

ஒளியின் சத்தியத்தில் உயிர்க்கிறது

இருளெனும் பொய்மையை மறைக்கிறது


மனசாட்சிக்கும் மதிப்பளிப்பதனால்

அது மனிதனுடனேயே எப்போதும் தொடர்கிறது


வண்ண பேதங்கள் இல்லையதற்கு

எப்போதும் கருமைதான்

சமத்துவத்தைக் கற்றுத் தருகின்றது


சூழ்நிலைக்கேற்ப மாறுகின்றன அதன் அளவுகள்

மாறுகின்ற மனிதர்களின் மனங்களைப் போல


உச்சி வெயிலில் பாதணிகளாகவும்

சுருங்கிக் கொள்கின்றன எமக்குள்

சந்தர்ப்பங்களைக் கற்றுத்தருவதைப் போல


பல உருக்கள் அமைத்து

வித்தைகள் செய்கின்ற விரல்களும்

முதலீட்டு வணிகப் பொருள்தான்


இருளையும் ஒளியையும்

தொடர்புபடுத்தும் நிழல்

இன்பமும் துன்பமும் ஒன்றித்து வருகின்ற

வாழ்க்கையை நினைவூட்டுகிறது


பௌர்ணமி  அமாவாசைகள் கூட

நிழலின் உணர்ச்சி நிலைகள்தான்

மனிதனுக்கும் தத்துவமாகின்றன


வறுமை நிலையில் பயமுறுத்தும்

உயர்ந்து செல்லும் விலைவாசிபோல்

சிறு பொருட்களையும் உருப் பெருத்துக்காட்டுகின்றது

நிழல்


பொய்கள் மெய்யாகலாம்

மெய்யென்ற மாய நிலைக்குள்

பொய்யும் கலக்கலாம்


நிழலும் நம்மை நேசிப்பதனாலேயே

கூட வருகின்றது உயிர்போல


ஜன்ஸி கபூர்

யாழ்ப்பாணம்

சில காதல்கள்

 

சில காதல்கள் தீ போன்றன

முதலில் இதமான பார்வைகள் வீசுகின்றன

பின்னர் இதயத்தில் உணர்வுகள் பொங்குகின்றன

அடுத்து உடலெங்கும் மின்சாரம் பாய்கிறது

சந்திப்புக்களில் மெல்லிய காமம் பூக்கிறது

பிறகு அதுவும் அடங்கி விடுகிறது

நீ யாரோ நான் யாரோவென்று

நம் மனங்களையும் முறித்து விடுகின்றன


சில காதல்கள் கனவுகளில் வாழ்கின்றன

கற்பனைகளில் மாத்திரம் கவிதைகளைச் சுமக்கின்றன

நிஜ வாழ்க்கைக்கு ஏனோ பயப்படுகின்றன

அடி மனதில் ஆசை துடித்தாலும்

எல்லாவற்றையும் மறந்ததாக நாமும் நடிக்கிறோம்

விருப்பமின்றி வேறு வழியில் பயணிக்கிறோம்

நம்மிடம் எஞ்சுகின்றன வடுக்கள் மாத்திரமே


சில காதல்கள் காதலர்தினத்தில் பொங்குகின்றன

நாகரிக உலகத்தில் வாழ அலைகின்றன

வாழத் தெரியாத காதல்கள்தானே இவை

அருகிருந்தால் அணைக்கின்றன தொலைவென்றாலோ மறக்கின்றன

ஆனாலும் உண்மை அன்பைக் கடக்கின்றோம்

அடுத்தவர் பாவத்தையும் நாம்தான் சுமக்கின்றோம்


காதலுக்குள்ளும் அகம் புறக் கண்களுண்டு

நம் உலகம் சுருங்கிக் கிடக்கின்றன

கனவு நிலைக்குள் நாம் தள்ளப்படுகிறோம்

பிறர் புறக்கண்கள் நம்மிடம் நீளுகின்றபோதெல்லாம்

மாயை உலகின் விமர்சனங்களைக் கடக்கின்றோம்.


சில காதல்கள் பேருந்துகள் போன்றவை

இலக்கின்றி இதயத்தில் ஏற்றி இறக்குகின்றன

கொஞ்ச நினைவுகளே நமக்குள் எஞ்சுகின்றன.

கடைசியில் காதலின் புனிதத்தை இழக்கின்றோம்


சில காதல்கள் மலர்களைப் போன்றன

உதிர்ந்து எருவாகின்ற பூக்களாய் மாறுகின்றன

இறந்தாலும் உயிர் வாழ்கின்றன நமக்குள்

அவை ஒருபோதும் நினைவுகளை மறப்பதில்லை


சில காதல்கள் பாதணிகள் போன்றன

எம்மை அருகிலிருந்து அன்போடு பாதுகாக்கின்றன

நாமாக உதறித் தள்ளும் வரை

நம்முடனே இணைந்து வருகின்றன தினமும்

அந்த அன்புடனே நாமும் அலைகின்றோம்


சில பிஞ்சுக் காதல்களும் வாழ்கின்றன

இலக்கணம் அறிந்திருக்காத புதுமைக் காதல்கள்

மற்றோரைப் போல நாமும் காதலிக்கின்றோம்

எல்லா உணர்வுகளும் அதில் இருக்கின்றன

ஆனாலும் முதிர்ச்சிக்கு முன்னரே தோற்கிறோம்

வலி மாத்திரம் எஞ்சுகின்றது நமக்குள்


சில காதல்கள் நமக்கு ஏணிகள் போன்றன

நம்முடன் நினைவில் நடந்து முன்னேற்றுகின்றன

தொலைவிலிருந்து ரசிக்கும் இந்த அன்பை

நினைவுகளில் மாத்திரமே நாமும் சுமக்கிறோம்


காதல்கள் சூழ்நிலைக்கேற்ப பண்புகளை மாற்றுகின்றன

கற்பனைகள் வலிகள் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள்

எல்லாம் வந்துதான் போகின்றன அழகாக.

சிதையாத உண்மைக் காதல் வாழ்கின்றது

நாம் சுமக்கின்ற அன்புடனதுவும் வளர்கின்றது


ஜன்ஸி கபூர்

யாழ்ப்பாணம்

யாரோ கிசுகிசுத்தார்



இருள் தொலைகின்ற நிலவுப் பயணத்தில்

அலைப் புன்னகையினை ரசித்தபடி தழுவுகின்ற

ஈரக் காற்றின் இதமான வருடலில்

ஓராயிரம் கனவுகளை உயிர்ப்பிக்கின்ற ஆசைகளுடன்

நாமிருவர் தனியாகப் படகேறிப் பயணமொன்று

செல்ல வேண்டுமென்று யாரோ கிசுகிசுத்தார்


முற்றுப் பெறாத கடலலைத் துடிப்பினைப் போல

ஒருவரை ஒருவர் அன்பினால் பற்றி

வெற்றிட வாழ்விற்குள்ளும் உயிர்ப்பினை நிரப்பி

அடுத்தவர் விழித் தேடலுக்குள் விரிகின்ற

அழகான வாழ்க்கையாக நாமும் மாறுவோமென

நமதான பயணம்பற்றி யாரோ கிசுகிசுத்தார்


துள்ளியோடுகின்ற மீன்களை அள்ளிச் செருகி

கள்ளத்தனமாக விழிகளில் வைத்திருக்கின்ற உன்னுடன்

இசைகின்ற எனது இதயத் துடிப்பொலிகளையும்

ஏந்திக் கொண்டே அலைகின்ற அலைகளில்

நீ நனைகின்ற போதெல்லாம்

நுரைப் பூக்களால் உனக்கு மாலையிட்டு

கரை தொட்டிடாத நீண்ட பயணத்தில்

உன்னிழலுடன் ஒன்றிக்கிடக்க மனம் ஏங்குகின்றது


ஏன்தானோ இக்காலம் இன்னும் வரவில்லை

இன்னும் என் பணிகள் உள்ளனவோ


ஆதவன் சிறகசைத்து மெல்லக் கீழிறங்குகையில்

நீயும் எனது எதிர்பார்ப்பிற்கு கைவிலங்கிட்டு

பிரிய ஆயத்தமாகின்றாய் பிரியமனமின்றி நானும்

தொலைக்கின்றேன் உன்னை மறைகின்றாய் அந்திக்குள்


விண்ணுக்கே முகவரியாகி மின்னும் உன்னை

நினைவூட்டுகின்றன குறையொளியில் கண்ணுக்குத் தெரிகின்ற

கரையை நாடுகின்ற கடல்ப் பறவைகள்


நீ ஒளிந்து கொண்டிருக்கின்ற தொலைப்புள்ளியின்

முடிச்சவிழ்த்து மூச்சினை நிரப்பிடத் துடிக்கின்றேன்

அடுத்தவர் அறிந்திடாத நமக்கிடையிலான தூரம்

எமக்கு மட்டும் தானே தெரியும்

வேறு எவருமே அறிந்திருக்க மாட்டார்கள்.


ஜன்ஸி கபூர்

வழி கூறும் பட்டாம்பூச்சி

  

அசைகின்ற காற்றில் தடுமாறுகின்ற மலர்களை

அனுதாபத்துடன் பார்க்கின்றேன் இயற்கைக்குள் இசையாவிட்டால்

துடிதுடித்து வீழுமே இதழ்களும் மெல்ல

தரையைத் தொட்ட சிறகுகளாகப் பறந்திடுமே


மலரின் அமைதி பற்றிக் கவலைப்படாத

பட்டாம்பூச்சிகளை இரசித்துப் பார்க்கின்றேன் நானும்

தன் படபடப்பால் மலருக்குள் துடிப்பேற்றும்

தேன் உண்ணும் தீவிரவாதத்திலும் வியக்கின்றேன்


வானவில்லும் உடைந்து பறக்கின்றதோ தரையில்

வனப்பான சிறு உயிரின் துடிப்பில்

மனதும் ஒன்றித்துப் போகின்றதே அடிக்கடி

மகிழ்வின் உச்சத்தில் உறைந்து போகின்றேன்


வாசத்தை வளியில் பிழிந்தூற்றி வனப்புடனே

பூத்திருக்கின்ற மலர்களை நோக்குகின்றேன் புளாங்கிதத்தில்

காத்திருக்கின்றதோ தவிப்புடனே அமைதியும் அலைய

காதலில் படபடக்கின்ற பட்டாம்பூச்சிக்கான அழைப்பிது

அறிந்ததால் ஏந்தினேன் அதனசைவை எனக்குள்


தன் ஊசித்துளை உறிஞ்சியால் தினமும்

ஊனம் ஏற்றாத மென்னிதழ்களைக் கசக்காத

உயர்ந்த ஒழுக்கத்தினை எங்கு கற்றதோ

உராய்ந்து மகரந்தம் அள்ளும் பணியும்

உயிரோடு இசைகின்ற மேலான தாய்மைதானே

உருவாகின்ற ஒவ்வொரு பிறப்பிற்கும் வழிகாட்டும்

உத்தம குணம் கண்டு வியக்கின்றேன்.


உறிஞ்சிய தேனைக் காற்றும் உலர்த்தவில்லை

வருத்தத்தில் இதழ்கள் சிவக்கவும் இல்லை

அரு உயிர் கடத்திடும் பணிக்காக

விருப்பும் கொண்டதோ சிறு இதழ்களசைத்து

மறுப்பில்லாத அமைதிக்குள் அலங்கார மலர்களும்

மயக்கத்தின் தித்திப்பில் பட்டாம்பூச்சியும் சூழ்கின்றதே


உருக்களில் பல வண்ணங்கள் ஏந்தி

உற்சாகமாகப் பறக்கின்ற பட்டுடலைத் தொட்டுவிட

காற்றையும் துரத்துகின்ற சிறுவர்களின் மனதாக

உருமாறுகின்றேன் நானும் பட்டாம்பூச்சியை தொட்டுவிட


விண் நோக்கி நீண்டிருக்கும் பூவுக்குள்

இன்பம் துளைக்குதோ பட்டாம்பூச்சியும் அடிக்கடி

மலரைப் பற்றிய சிந்தனை இல்லாக்

காமத்தின் சூத்திரம் இதுவாக இருக்கலாம்

ஒவ்வொரு பூக்களாக நுகர்ந்திடும் சேர்க்கைக்குள்

கொஞ்சம் கற்பினையும் கற்றுக் கொடுத்திருக்கலாம்


அமைதியான மலர்களுக்குள் பரபரப்பை ஊற்றுகின்ற

அழகான பட்டாம்பூச்சியின் சுறுசுறுப்பும் ஈர்க்கின்றது

நானும் அந்த ரசிப்பினில் உறைகின்றேன்

நானிலத்தின் உயிர்ப்பிற்கும் கருதானே இவ்வுருவும்


குவிந்த இதழ்களின் விரல் நீட்டத்தில்

குதூகலகமாகப் பற்றுகின்ற பட்டாம்பூச்சியின் துடிப்புக்குள்

கலக்கின்றதோ உற்சாகமும் விடியலைத் துடைத்தவாறு

விரைவினைக் கற்றுக் கொள்ளும் நேரமிது


பட்டாம்பூச்சியின் பக்குவ முட்டைக்குள் நெளிகின்ற

முட்களைக் கொண்ட கம்பளிப்பூச்சியை விரும்புவாரோ

தொடுகையில் தெளிக்கின்ற விடத்தினை வெறுக்கின்றோம்

தீயதினைத் துரத்திடும் வேட்கையில் ஒதுங்கியே

நசுக்கிக் கொல்கின்றோம் பறந்திட முன்னரே

தீயோராகி துன்பத்தினை நுகர்கின்றதே பாவம்


ஆனாலும் பட்டாம்பூச்சியாக துளிர்க்கையில் துள்ளும்

மனதால் அள்ளுகின்றோம் அழகினை ஆசையாக

வெறுப்பும் விருப்பும் வாழ்வின் பக்கங்களாய்

வாழ்கின்றதே நம் எதிரில் பட்டாம்பூச்சியாக


ஜன்ஸி கபூர்

மேகங்களோடு



சிறகுகளை உதிர்த்தவாறே நகர்கின்ற மேகங்களை

தன் விரல்களால் வருடிக்கொள்கின்றது வானம்

காற்றின் முடிச்சுக்களால் சிறைப்பட்டிருக்கின்ற மேகத்தினை

தன் இதழ்களால் அவிழ்ப்பது சுகம்தான்போலும்

வான் துளைகளுக்குள் தம் முத்தங்களை

நிரப்பியவாறு பயணிக்கின்ற பஞ்சு மேனிதனை

தன் இதழ்களால் ஈரப்படுத்துகின்றது வானும்

காதலின்பத்தின் இதம் வரையத் தொடங்குகின்றது

மேகங்களுக்கும் வானுக்குமிடையிலான அற்புதக் காதலை


கீற்றுமின்னலெனும் மாங்கல்யமும் முழங்குகின்ற இசையும்

வானுக்கும் மேகத்திற்குமான உறவுநிலையை வெளிப்படுத்தும்போது

மேகங்கள் தன்னைக் கருங்கூந்தலுக்குள் ஒளித்தே

மொய்க்கின்ற நாணத்துக்குள் நனைந்து அலைகின்றன


வானும் விடுவதாக இல்லை துரத்துகின்றது

வெவ்வேறு திசைகளில் கலைந்தோடுகின்றன அவை

மகிழ்வின் சிதறல்கள் ஆங்காங்கே அப்பிக்கொள்கின்றன

பொன்னிறத்தூறல்களின் சங்கமத்தில் இசைகின்றது இயற்கையும்


பூமிக்கும் வானுக்கும் இடையிலான வெளிதனில்

தொங்கிக்கொண்டே சென்றாலும் விழுவதாக இல்லை

ஈர்ப்பின் இரகசியம் இயற்கையின் ஆற்றல்

நிலத்தின் வரைகோடுகளையும் சலனமற்ற குளங்களையும்

அவை கடந்து செல்கையில் இணைகின்றன

உயிர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களின் திரட்சிகளும்

கண்ணீர்ப் பாறைகளின் வெடிப்பொலிச் சப்தங்களும்


மேகங்கள் நகர்வை நிறுத்துகின்றன நிதானத்துடன்

கீழே எட்டிப் பார்க்கின்றன கவலையுடன்

கருகிய வயல்களின் சாம்பல் மேடுகள்

ஒட்டியுலர்ந்த தேகங்களின் கூக்குரல்களின் தரிசனங்கள்


பேரன்பு கொண்ட மேகங்களைத் தீண்டுகின்றது

இருண்ட விழிகளில் வெடிக்கின்றது அழுகை

அவற்றின் ஈரம் தரையைப் போர்த்துகின்ற

ஆடையாக மாறத் தொடங்குகின்றது பேரிரைச்சலுடன்

மேகங்களின் கண்ணீர் தெறிக்கின்றது கன்னங்களில்


ஜன்ஸி கபூர்

அழகென்னும் அபாயம்



குடையென விரிந்திருக்கின்ற மரக் கிளைகள்

ஓன்றோடொன்று மோதி விரிக்கின்றனவோ நிழலை

மறுப்பின்றி இருளும் விழுந்து கொண்டிருக்கின்றது

ஆதவன் மேலிருந்தும்கூட சாமத்துச் சாயலில்

அகன்ற வனமும் மாறிக் கொண்டிருக்கின்றது.


ஒளியைத் தனக்குள்ளே உறுஞ்சாப் பாதையில்

உராய்ந்து நிற்கின்றது என்றன் ஊர்தி.

இயந்திர அதிர்வின் துடிப்பொலி கேட்டு

எட்டிப் பார்க்கின்றன கானகத்துச் சருகுகள்


ஆதவச் சுவாலையின் அணைவை சூட்சுமமாக

அறிவித்துக் கொண்டிருக்கின்றது மாலை நேரமும்

தரைக்குள் பதிக்கின்ற காலடிச் சத்தமும்

விரட்டத் தொடங்குகின்றது கானக அமைதியை


இலைச் சருகுகளில் ஒளிந்திருக்கின்ற எறும்புகள்

விளையாடத் தொடங்குகின்றன கால் விரல்களுக்கிடையில்

குறும்பான கருவண்டுகளின் சிறகடிப்பின் ஓசையும்

செவிக்குள் நுழைகின்றது இரைச்சலை நிரப்பியபடி


சிறகுகளை மடித்து உறங்குகின்ற பறவைகள்

சீற்றத்துடன் பறக்கையில் காற்றும் அலறுகின்றதே

மென்மேனியைத் தழுவிய இம்சையின் முறைப்புக்குள்

தைரியத்தையும் மெல்லத் தொட்டுப் பார்க்கின்றேன்


மங்குகின்ற வெளிச்சத்தில் தொங்குகின்ற குளவிக்கூடு

மொய்க்கின்ற பிரமையில் நிம்மதியும் அறுந்துவிட

வேகமாக நடக்கின்றேன் ஒற்றையடிப் பாதையில்

சோகமாகச் சரிகின்றன பற்றைப் புற்கள்

என்னாடையின் உரசலினால் மெல்ல நிமிர்கின்றன

வெட்டவெளிக்குள் பூத்துக் கிடக்கின்ற பூக்களின்

உறக்கத்தினை கலைக்கின்றேன் போலும் அவற்றின்

கலக்கப் பார்வைகூட துளைக்கின்றது உயிரை


தொலைவில் நகர்கின்றனவோ பெரும் மலைகள்

பிளிறல் ஓசைக்குள்ளும் பின்னலிடுகின்றது பீதி

அலறுகின்ற உணர்வினை அடக்கிக் கொண்டே

மெதுவாகப் பதுங்குகின்றேன் பெருமரத்தின் பின்னால்


உயர்ந்த மரக்கொப்பை முறிக்கின்ற ஆவேசத்தில்

ஊஞ்சலாடுகின்ற செங்குரங்குகளின் கண்களும் பளிச்சிடுகின்றன

வெஞ்சினத்தின் எதிரொலியாய் குரங்குகள் வீசுகின்ற

காய்களின் மோதலில் வலிக்கின்றதே தலையும்


பறக்கின்ற வண்ணாத்திகளின் சிறகுத் தொடுகையும்

உயிரின் உயிர்ப்பைத் தடுக்கின்ற நஞ்சோ

காதோரம் வெடிக்கின்றது அச்சத்தின் பிரமை

படர்கின்ற வியர்வைக்குள் மூச்சும் கரைகின்றதே


அனுபவங்கள் திணிக்கின்ற மரண பயத்திலிருந்து

உணர்வுகள் மீள்கின்றபோது சுவாசமும் சுகமாகின்றது

புன்னகைக்கும் சிறு குழந்தைபோல் பிறப்பெடுக்கின்றேன்

மனதுக்குள் மகிழ்வையும் நிறைத்துக் கொள்கின்றேன்

ஜன்ஸி கபூர்

நெல்லியும் உதிரும் கனிகளும்

 

யுத்தம் துப்பிய உதிரத்தின் சாயலில்

செம்மண் பரப்பிய கொல்லைப் புறம்

அங்கே காற்றை விரட்டிக் கொண்டிருந்தது

அகன்ற கிளைகளைக் கொண்ட வேம்பு

அசையும் இலைகள் குவிக்கின்ற நிழலுக்குள்

ஒடுங்கி நிற்கின்றது ஒற்றை நெல்லி


எல்லைச் சுவரை முட்டும் கொப்புக்களில்

உராய்வுக் கீறல்கள் எம் இரணங்களாய்

கொப்புக்களை உதைக்கின்ற கொத்துப் பூக்களும்

கொழுத்த குண்டுப் பழங்களின் அழகும்

கண்களை ஈர்த்து கைகளை உயர்த்துகின்றன

பழங்களின் சுவையில் நாவும் இனிக்கின்றதே

பழச்சுமையில் பாதி சாய்ந்து இருக்கின்ற

மரத்தினை தினமும் பார்க்கின்றேன் விருப்போடு


கனி உதிர்க்குமந்த சிறு நெல்லியில்

உப்பும் ஊற்றி காயைச் சுவைக்கையில்

அருகில் இருப்போர் உமிழ்நீர் சுரக்கின்றனர்.

சில பழங்கள் சீனிப் பாகினுள்

நாவுக்குள் தேனும் ஊறுகின்றது சுவையுடன்


தெருவோரம் எட்டிப் பார்க்கும் கொப்பெல்லாம்

கல்லெறிக் காயத்தினால் சிவந்திருக்கின்றன

ஒவ்வொன்றாய் பொறுக்கி பாதுகாக்கின்றேன் எனக்குள்

உதிரும் வலிக்குள் எனையே பொருத்துகின்றேன்


யுத்தத்தின் சத்தம் செவியைக் கிழிக்கின்றது

அந்நேரம் கொப்பும் தகரத்தில் உரசுகின்றது

எழுகின்ற சப்தத்தில் கலக்கின்றது அவலம்

வருந்தும் மனதின் பிம்பமாக நெல்லியும்

தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றது பதற்றத்தில்


நெல்லியின் நீளமான நிழலில் பதிக்கும்

என் தடங்களுக்குள் கொட்டுகின்றேன் துன்பத்தை

மரணத்தைப் பற்றியதான பேசுபொருள் அது

அணைத்த உறவுகளின் சிதைவுப் பிழம்புகள்

என் விழிநீராலும் அணைக்காத சுவாலையாய்

எரிந்து கொண்டிருக்கின்றது வெயிலின் இம்சைபோல்


விண்ணை உடைக்கின்றதோ இயந்திரப் பறவை

இரும்புச் சிறகுகளின் உரப்பான அதிர்வில்

தேகம் மட்டுமல்ல நெல்லியும் உதிர்க்கின்றது

முதுமைக்குள் போராடும் சில இலைகளை

தரைக்குள் மொய்க்கின்ற சருகுகளின் ஆக்கிரமிப்பும்

விமானத்தின் உறுமலில் சிதறி ஓடுகின்றன


விண்ணையும் மண்ணையும் பொசுக்குகின்ற தீப்பிழம்பும்

என்னில் அச்சத்தை விதைக்கவில்லை மாறாக

இறப்பையும் புறந்தள்ளி சுவைக்கின்றேன் கனியை

உறவாகித் தழுவுகின்றது வேப்பக் காற்றும்

துரத்துகின்றேன் வெயிலையும் எனைப் போர்த்தாமல்


வட்டமிடுகின்ற இயந்திரத் தும்பியும் பொம்பரும்

சகடையும் உரசுகின்றன ஒலியை உமிழ்ந்து

செவிப்பறையின் கிழிசலில் உயிரும் அலறுகின்றதே

அக்கணத்தில் தொலைத்த நிம்மதியைத் தேடுகின்றேன்

ஆன்மாவின் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் நிரம்புகின்ற

வலி இறுக்கிப் பிடிக்கின்றதே மேனியை


தசாப்தங்களைக் காலங்கள் புரட்டுகின்றன விரைவாக

அடையாளப்படுத்துகின்றன அடுத்த ஊர்கள் அகதிகளென

கழிகின்ற ஒவ்வொரு விநாடியும் கலியே

களிப்பினைத் தொலைக்கின்ற அந்தக் கணங்கள்

ஆயுள் வரை நீட்டுகின்றதே அக்கினியை


தினமும் நெல்லிக்கனியில் தினக்குறிப்பு எழுதுகின்ற

என்னுள் விரக்தி நலம் விசாரிக்கின்றது

மூச்சேந்தும் ஒவ்வொரு நொடியும் தெளிக்கப்படுகின்ற

மரண அவஸ்தையினை நுகர்ந்தவாறே வாழ்கின்றேன்

என் சுவாசப் பாதையை நிரப்புகின்றது

நெல்லியின் சுவைக்குள் நனைந்த காற்று

அவ்வையும் சுவைத்த நெல்லி யன்றோ

என்றன் உயிரையும் சேதமின்றிக் காக்கின்றது

இன்றுவரை உணர்வுக்குள் விருட்சமாகின்றது அழிவின்றி


ஜன்ஸி கபூர்

கடும் புனல்

ஒளி உமிழ்கின்ற ஒற்றை வெண்ணிலாவும்

கொட்டிக் கிடக்கின்ற நட்சத்திரக் கலவைகளும்

தென்றலின் வருடல் விரல்களும் எனக்குள்ளே

தனிமையை விரட்ட சூழ ஆரம்பிக்கின்றன


நள்ளிரவு நிசப்தத்தை கரைக்கின்ற உணர்வினை

மெல்ல அவிழ்க்கின்றது மெல்லிருட்டுக் கரங்கள்

எட்டிப் பார்க்கின்ற பத்திரப்படுத்தப்பட்ட பசியின்

திணிப்பில் தேகம் திணறிக் கொண்டிருக்கின்றது


வெறுமையைத் துடைக்கும் கடிகாரத்தின் புறுபுறுப்போடு

தனிமை கொஞ்சம் முரண்பட ஆரம்பிக்கின்றது

பூமியின் உறக்கத்தில் விழிக்கின்ற துடிப்பில்

நீள்கின்ற காத்திருப்பின் அலறல் ஆன்மாவுக்குள்


காற்றில் தீயூற்றும் இம்சைக்குள் எதிர்பார்ப்புக்கள்

ஏக்கத்தில் பிசையப்பட்ட மனதோ கசங்குகின்றது

எதிர் சுவற்றில் துணையுடன் பிணைகின்ற

பல்லியின் மோக முணங்கல் நாடியுடைக்கின்றது


எங்கோ நாயின் ஊளைச் சப்தம்

நள்ளிரவின் ஓட்டம் நாடித் துடிப்பினுள்


கதவு தட்டப்படுகிறது எதிரே ஆன்மா

நறுமணக் குவியலின் வீரியப் பார்வையில்

நாணம் கசக்கப்படுவது புரிந்தும் ரசிக்கின்றேனதை


உள்ளே மெல்லிய காற்று நுழைந்து

மோகப் பூக்களை பஞ்சணைக்குள் நிறைகின்றது

பசியை அவிழ்ப்பதற்கான அழகிய தருணமிது

இதழோரங்களில் பத்திரப்படுத்தப்படுகின்றது இதமான ஈரம்

அன்பின் விரல்கள் பிசைகின்ற ஆசைகளை

பரிமாறுகின்ற மடியும் ஏந்துகின்றது ஏக்கத்தினை


இருள் தன்னை மறைப்பதாக இல்லை

எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது இரகசியங்களை

இழுத்திப் போத்திக் கொண்டிருக்கின்ற ஆன்மாக்களை

இரசிக்கின்றது போலும் சிவக்கின்றது இராப்பசி

மயக்கத்தில் அப்பிக் கொண்ட காதல்

இன்னும் விடுவதாக இல்லை அணைக்கின்றது


விழிக்குள் துயிலினை ஊற்றாமல் துரத்தும்

ஏதோவொன்று என்னைப் பிழிந்தெடுக்க விழுகின்றது

பார்வையும் நிதர்சனத்தில்.....ஓ.......பிரமை


பற்றிக் கொள்கின்ற பனியின் விரல்களை

வேகமாக உதறுகின்றேன் மூச்சுக்குள் அனல்

வெளியே நிலாக்கீற்றின் பிரகாச வளையங்கள்

தவிப்புக்களின் பிழம்புகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன


ஆழ்மனதைப் புரட்டுகின்ற மலையின் ஓசை

இடிக்கின்றது உணர்வுகளை துடிக்கின்றது வலி


ஓவ்வொரு இரவும் விட்டுச் செல்கின்ற

எதிர்பார்ப்பின் வேட்கையில் மனம் தினமும்

புதிதாகவே உயிர்க்கின்றது விடியல் காணாது


மௌனமாக வடிந்தோடுகிறது இரவுத் துளிகள்

எண்ணுவதற்குள் ஒளிப்பிழம்பு தட்டியெழுப்பி

உளத்தில் ஊறும் தணல்பொறியினைச் சீண்டுகின்றது


ஜன்ஸி கபூர்

2021/04/29

கள்ளிச் செடி

முட்கள் கூட என் கிரீடங்களே

இருந்தும் சாம்ராஜ்யம் மறுக்கப்பட்டிருக்கின்றது எனக்கு

வனப்புக்களால் வசீகரமாகின்றவர்கள் தருகின்ற வலி

தினமும் என் மொழியாகிப் போகின்றது


வீழ்கின்ற ஒவ்வொரு நீர்த் துளிகளுக்குமாக

விரிகின்ற முட்களுக்குள்தானே என் உலகு

விரும்பிப் பார்க்காதோரை திரும்பிப் பார்க்க

விரல் பற்றுகின்றேன் அவாவின் உச்சத்தில்

முட்களின் பாஷைக்கு அவர்கள் செங்குருதிதானே 

நலம் விசாரித்து தொட்டுப் பார்க்கின்றது.  


பாலைவனங்களும் மயானங்களும் என் முகவரியானதில்

வலை விரிக்காத ஏமாற்று உலகு

தொலைபுள்ளியாகி தள்ளியே நிற்கின்றது தினமும்

வறட்சிக்குள்ளும் பசுமையைக் காக்கின்ற என்னை

யாருமே திரும்பிப் பார்ப்பதாக இல்லை. 


முட்களாக திரிபடைந்த மென் மலர்களுக்காக

பட்டுடல் விரிக்காத வண்ணாத்திகளை சபிக்கவில்லை

புறக் கவர்ச்சி தேடும் உலகில்

தோற்றுப் போகின்றது என் மென்மை


இருந்தும் என்  தேடல் நீள்கின்றது  

தூசிகளுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்ற மலர்களின்

மகிமையை பறை சாட்டுமோ பறவைகள்

வெந்தணலைச் சுவைக்காத கவிஞர்களின் கருக்கள்

பூஞ்சோலைகளைத்தானே  எட்டிப் பார்க்கின்றன மோகத்துடன்


இருந்தும் என்னை தினமும் மதிக்காத

ஓட்டகங்களும் வணிகர்களும் கடந்து செல்கையில்

கடும் வெப்பமும் சிதைக்காத அழகு

என்னிடம் இருப்பதாக பெருமிதம் கொள்கின்றேன்  


வறண்ட தேசங்களின் வைரம் நானே

வளர்கின்றேன் பசுமையை உயிர்க்கும் தருவாக


ஜன்ஸி கபூர் - 29.04.2021


2021/04/14

தாலாட்டு


 

அம்மாவெனும் உணர்வினை எனக்குள் உருத்துலக்குகின்றேன்
உயர்ந்து கொண்டே செல்கின்றது பாசத்தினளவு
உருவத்தினுள் அடங்காத உணர்வுகளின் பிம்பமவர்
 
உணர்வுகளை மெல்ல வருடுகின்ற அம்மாவின் தாலாட்டில்
ஏதோ வசீகரம் வீசுவதை உணர்கின்றேன்
கன்னம் வருடி காதோரம் கிசுகிசுப்பாகத்
தன் அன்பினை அள்ளிப் பிசைகையில்
மனம் எங்கோ சிறகடிக்கின்றது அடிக்கடி

வயது என்பது வெறும் எண்பெறுமானம்தானே
ஆழ்மனதினைத் தொட்டு இதப்படுத்தும் பக்குவம்
அம்மாவுக்கு கைவந்த கலையோவென நினைக்கின்றேன்
அதனால்தானோ எல்லோரையும் தூங்கவைக்க முடிகின்றது

அப்பா எனக்குள் ஒரு பிரமை
நிதர்சனத் தரிசிப்புக்களில் காணாமல் போனவர்
அப்பாவும் இவ்வாறான தாலாட்டில்தான் உறங்கினாரோ
எங்கோ அவர் உருவமற்ற ஆத்மாவாக
எனைச் சுற்றியும் இருந்திடக் கூடும்
அம்மா செய்ததெல்லாம் சரியெனும் நினைப்பில்
அம்மாமீதான நம்பிக்கை எனக்குள் விரிகின்றது  

தாலாட்டு உறக்கத்தையும் மரணத்தையும் தொடர்புபடுத்துகின்றதோ
இரண்டினதும் ஆழ்மன அமைதி தொடர்பிலிருக்கின்றதே
விழிகள் மூடிய மௌனநிலை நீள்கையில்
விண்ணேவுகின்றது நம் ஆத்மாவும் மீளாது
இருதயத்துடிப்பின் ஓய்வு நிலையுடன் அஸ்தமிக்கின்றதோ
இவ்வுலக வாழ்வின் தேடல் வேட்கை 

உறக்கத்தின்போது மெதுவாக நகருகின்ற ஆழ்மனம்
மரணம் காண்கையில் மிகையாகச் சுழல்கின்றதே
ஈற்றில் மீளா இருளுக்குள் மூழ்கி
மீளாத் திசையின் சிதைவுகளுக்குள் அடங்கி 
மண்ணுக்குள் தன்னைப் பிணைத்தும் விடுகின்றது

அம்மாவும் உறவுகளின் வலிகளைத் தனக்குள்
அனுபவித்தே துடிப்புடன் மரணம் தொட்டிருக்கின்றாள் 
குழந்தையினதும் முதுமையினதும் மரண அலைவுகளால் 
தனது வலியினைப் புதுப்பித்தும் இருக்கின்றாள்

சடத்துவமான இப்புவியின் ஒவ்வோர் அணுவுக்குள்ளும்
தன்னைப் பிணைத்திருக்கின்றதோ உயிரின் ஆத்மா 
உடல் உடைகையில் ஆன்மாவும் அவாக்கொள்கின்றது
எல்லாப் பரும்பொருளையும் போலவே தன்னையடக்காது
சுதந்திரமாகச் சிறகினை விரித்திடத் துடிக்கின்றது. 

எங்கோ வெகுதொலைவில் அம்மாவின் தாலாட்டு
எனை அழைக்கின்ற பிரமைக்குள் வீழ்கின்றேன் 
அத்தாய்மைக்குள் தவழ்ந்திட மனமும் துடிக்கின்றதே
இருந்தும் வாழ்வியல்நெறிகளின் தடைகளுக்குள் நான்

தொலைவில்  மேக நிழல்களின் அலைவுகளுக்கிடையில்
அணுக்களாக உதிர்ந்து கிடக்கின்ற தங்கையினை
தன்கரங்களிலேந்தி அம்மாவும் புன்னகைத்துக் கொண்டிருக்கின்றார்

எனைப் பார்த்தே கரமசைக்கும் தாய்மையை
ரசித்தவாறே காத்திருக்கின்றேன் நானும் அம்மாவுக்காக

ஜன்ஸி கபூர் - 31.10.2020

 
Kesavadhas
 --------------
ஜன்ஸி கபூர் ஆழ்கடல் முத்தெடுப்பில் அவதானிக்கிறது இந்த கவிதை!
அம்மா என்பது உணர்வு பிம்பம்
உருவத்துள் அடங்காத பாசத்தின் கொள்ளுரு
இது தாய்மை!
கன்னம் வருடி காதோரம் கிசுகிசுக்கும் தாலாட்டில் ஏதோ வசீகரம் வீசுகிறது மலரின் மருவாக!
வயது என்பது ஓர் அளவலகே! பக்குவம் என்பது மனநிலை!
அது தாய்மையின் உயிர்க்கலை!
நிதர்சன தரிசிப்புகளில் காணாமல் போன தந்தையை அன்னையின் தாலாட்டில் ஆசுவாசப் படுத்துகிறது கவிதை!
உறக்கம் விழிப்பு பிறப்பு இறப்பு
ஆன்மா மண்தொடும் ஆகம் என ஆன்மிக வெளியில் சஞ்சரிக்கிறது கவிதை!
வெளி விரிகிறது.. முடிவில்லையே!
அணுவின் அணுவாய் திகழும் ஆன்மாவின் தரிசனமும் தடைபடுகிறது வாழ்வியல் நெறிகளின் தடைகளுக்குள்!
எல்லாமே நாம் விரித்தது தாம்!
இது ஆன்ம வெளிப் பயணம்... தொடரும்...
வாழ்த்துக்கள் கவிஞரே!
 ·

2020/09/12

சமாதானம்


மனசுக்குள் போர்ச் சூழல் அலைகிறது

கொந்தளிக்கின்ற உணர்வுகளால் உதடுகள் துடிக்கின்றன

சிவக்கின்றது அவளது மலர் முகம்

மௌனத்தில் கரைந்து வழிகின்ற விழிநீரும்

சினத்தில் ஆவியாகி கன்னத்தில் உறைகிறது.


கரையை அரித்துச் செல்லும் அலையாக

என் விழிகளை உற்றுப் பார்க்கிறாள்

சிவப்பின் தெறிப்பில் அது துடிக்கிறது

சிந்திய வார்த்தைக்குள் பொய் கண்டாளோ

சினக்கிறாள் சிதறிய வார்த்தைகளைப் பொறுக்குகின்றேன்

சில்லறைகளாக உதிர்ந்திருக்கின்றதே; ஊடலும் சிறிதளவு


பொறுக்குகின்றேன் உடைந்திருக்கின்ற அவளின் சினத்தை

பொங்கும் கண்ணீர் ஈரத்தில் புதைகின்ற

என் தவற்றினையும் நான் பரிசீலிக்கின்றேன்

என்னை மீள நியாயப்படுத்துகையில் மீண்டும்

உலகப் போரொன்று வெடிக்கலாம் வீட்டுக்குள்


அவள் உலகம் எனக்குள் விரிந்திருக்கின்றது

அணுதினமும் உணர்த்துகின்றாள் தன் அன்பால்

இருந்தும் தளிர்க்காத ஆசைகளின் ரணம்

அவளுக்குள் ஊற்றுகின்றது அமிலத்தினை செறிவுடன்


வேகமான வேலையுலகின் கீற்றுக்களாக நேரமின்மை

நெருடுகின்ற போதெல்லாம் துடிக்கின்றாள் தனக்குள்

எதிர்பார்ப்புக்கள் வெடிக்கின்றதே நிறைவேறாத வலியினில்

மனம் துகிலுரிக்கின்றதோ அவள் கனவுகளை

கல்லெறிகின்றேனே உழைப்பு எனும் முகமூடியால்


மனம் உறுத்துகின்றதுதான் மலரைக் கசக்குகின்றேனென்று

கசக்கினாலும் மடிப்பு அவிழாத அற்புதமவள்

சினத் தீக்குள் கருக்காதவள் அவள்

நம்பிக்கை இருக்கின்றது நாடி யறுக்காதவள்

பிறப்புடன் இசைந்திட்ட அவள் பண்பினை

அறிகின்றேன் தினமும் தனிமைக்குள் ரசித்தாலும்கூட

கலைக்கின்றேனே அவள் கூட்டையும் சுயநலத்தினால்


அவள் அடங்காத பேராற்றுக் கிளையல்ல

அணைத்தால் அடங்குகின்ற தேனாறுதான் எனக்கு

இருந்தும் விட்டுப் பிடிக்கிறேன் நீளமாக

இதயத்தின் அன்பின் வலிமை பெரிதென்று

வலிந்து சொல்லிடுவாள் வலியையும் மறைத்தே


வாழ்க்கைப் பகிர்வில் விட்டுக்கொடுப்பு நானாக 

அன்பிடம் தோற்பதில் அடம் பிடிக்கக்கூடாதுதான்

அவளின் எதிர்பார்ப்பு உடைந்தது என்னால்தானே

காற்று வாங்கி கடலில் நனைந்திட

நேற்றுக் கொடுத்த உறுதியும் கரைந்ததில்தானே

அனல் கொட்டுகிறாள் இன்றும் எரிமலையாகி


சமாதானம் அவளுக்கான உணர்வு தானம்

காதலின் வருடலும் அவள் உயிருக்குள்

துளையிடும்போது தூக்கியெறிவாள் கோபத்தை தன்னில்

துன்பத்தில் கரைந்து கொண்டிருக்கின்ற மனதும்

துவளாதிருக்க ஏந்துகின்றேன் சமாதானப் புறா

அவள் கண்களிலோ ஏக்கங்கள் மீள

அணைக்கையில் அடங்கி விடுவாள் குழந்தையாக


ஜன்ஸி கபூர் = 12.09.2020

 


Kesavadhas

ஜன்ஸி கபூர் இதனை விட உணர்வுகளை விண்டு உரைக்கும் நவீன கவிதையினை மொழிநீர் ஊற்றி வரைய முடியாது!

உளந்தொட்ட சில வரிகளை மட்டும் தொட்டுக் காட்டுகிறேன்!

'வழிகின்ற விழிநீரும் சினத்தில் ஆவியாகி கன்னத்தில் உறைகிறது- கண்ணீரின் கறையை இதைவிட அழகாக சொல்வதெப்படி?

பார்வை அலையாகி படிமம் காட்டுவது அழகு!

சிதறிய வார்த்தைகளை சில்லறைகளாகப் பொறுக்கிறேன்!

உடலும் உதிர்ந்திருக்கிறது!

அவள் உலகம் எனக்குள் விரிந்திருக்கிறது-

தோன்றாத கற்பனை உணர்வு!

உழைப்பெனும் முகமூடி கல்லெறிகிறது!

சினத்தீக்குள் கருகாதவள்!

அணைத்தால் அடங்கும் தேனாறு

கசக்கினாலும் மடிப்பு அவிழாத அற்புதம்!

இந்த சொல்லாடல்கள் சிறப்பு!

வாழ்த்துக்கள்!


நவீன கவிதைகளில் ஒரு நிகழ்விற்கு கவிஞனின் உணர்வுகள் எவ்வாறு அமைகிறது என்பதுதான் பார்க்கப் படுகிறது.அதனால் தான் நிகழ்வு நிலையில் பேசப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது.அதனால் தன்மை நிலையில் உணர்ந்து எழுதுவது இதில் முக்கியமான யோக்கியதாம்சமாக கருதப்படுகிறது.

.ஒரு குறிப்பிட்டச் சூழலில்(நிகழ்வில்) என்ன நிகழ்வுகள் உளவியல் ரீதியாக மற்றும் செயல் ரீதியாக அமையும் என்பது தான் தன்மை உணர்வு. அதற்காக நான் என்பது ஒரு பாத்திரமாக மாறவேண்டிய அவசியமில்லை.

அவ்வாறு எழுதுவது உணர்வுகளைப் பிரதிபலிப்புச் செய்திட வசதியாக அமையலாம்.. சமாதானம் தலைப்பில் சில கவிதைகள் அந்நிகழ்வினைத் தாண்டி கதாபாத்திரங்களின் வாழ்வினைப் பற்றிப் பேசியிருந்தார்கள்.பொதுமைப் படுத்தி எழுதியிருந்தார்கள்;

அது நவீன கவிதை அல்ல;

'சமாதானம்' கவிதையில் ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ளக் கவிஞர்கள் நவீன கவிதை உத்திகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தி கவிதை செய்துள்ளார்கள்; இஃது

வழிகாட்டலுக்கு உதவும்.