2020/12/25
2020/12/21
விவசாயம் தலைமுறை அறியுமா
வாழ்க்கை
மனம் போகும் போக்கிலே
காணும் யாவும் வேண்டும் என்றே/
களிக்கும் பேராசை கலியின் வேட்கையே/
பலிப்பார் அடுத்தார் பயனற்ற செயல்களால்/
வலியினைச் சூடி வாழ்தல் நன்றோ/
தன்னம்பிக்கை இல்லாத் தனித்த பயணம்/
வென்றெடுக்குமோ தடைகளை வெகுமதியும் தந்திடுமோ/
மதிப்பினை இழக்கின்ற மதியின் வேகம்/
தகுதியைக் குறைக்கும் தடுமாறும் நிம்மதியும்/
இலக்கில்லா வாழ்வில் இல்லையே ஈடேற்றம்/
இரவெனவே நீளும் விடிவில்லா எதிர்காலமும்/
மனம் போகும் போக்கிலே வாழ்தல்/
மாறிடல் வேண்டும் மாண்போடு வாழ்ந்திடவே/
வெற்றிகளை விரட்டி வெறுமையினைச் சேர்த்தே/
குற்றுயிராகும் உணர்வோடு குடியிருக்கும் தேகம்/
குரங்காகித் தாவும் உள்ளத்தின் குடியிருப்பே/
குறிக்கோள் தீட்டி குதூகலிப்போம் ஆற்றல்களால்/
ஜன்ஸி கபூர் - 21.12.2020
2020/12/20
உனது உறவாகி வந்தேன்
உணர்வினில் உனைக் கோர்த்தே மகிழ்ந்தேனே/
மகிழ்ந்தேனே தினமும் உன் தரிசனத்தால்/
தரிசனத்தால் சிரித்தனவே நம் காதலும்/
காதலும் களித்ததே இராக் கனாக்களில்/
கனாக்களின் நீட்சிக்குள் மறந்தேனே பிரிவினை/
பிரிவினை வென்ற அன்பும் உறவுக்குள்ளே/
ஜன்ஸி கபூர் - 21.12.2020
2020/12/18
குழந்தையும் தெய்வமும்
2020/12/13
பொய்யை மறைக்கும் மெய் முகங்கள்
பொய்யை மறைக்கும் மெய் முகங்கள்
*****************************************
நிலையில்லா வாழ்வில் அலைகின்ற பொய்கள்/
கலைக்குமே மெய்யை கலங்குமே மனமும்/
வேடங்கள் மறைக்கும் உள்ளத்தின் உணர்வை/
போடுகின்ற மாயைக்குள் தீதே நிறையும்/
உத்தமத் திரைக்குள் உக்கிர வார்த்தைகள்/
சத்திய மொழிக்குள் சாக்கடைத் தூறல்கள்/
மூடிய முகத்தின் வக்கிரப் பார்வைகள்/
தேடிய திசைதனில் தடமும் பதிக்குமோ
மனிதம் மறக்கும் நிழல்களின் போராட்டம்/
இனிமை துறக்கும் இனிய பொழுதெல்லாம்/
நொடிக்கொரு கோலமாகப் பேசும் வார்த்தைகள்/
நிதர்சனம் காட்டா வஞ்சகத் தோற்றமே/
ஜன்ஸி கபூர் - 13.12.2020
குற்றம் குற்றமே
நாவோடு செந்தமிழ்த் தேன் சுவையிருக்க/
நோவெடுக்க உதட்டில் மொழிகின்றனர் பிறமொழியை/
தாயக நிழலுக்குள் தூய்மை வாழ்விருக்க/
நாடுகின்றனர் அந்நிய தேசத்தில் அணைந்திடவே/
அனுபவம் தராத அறிவினை யேற்றி/
அடைக்கலமாகின்றனர் ஏடுகளுக்குள் திறனற்றுக் கற்க/
மனிதம் தொலைத்து அணிகின்ற வேடங்கள்/
புனிதம் இழந்தே புகழையும் பறிக்கும்/
உறவுகள் வருந்துகையில் பஞ்சணை உறக்கம்/
உணரார் உணர்வுகளை மிதித்தல் குற்றமென/
தவறுகளை மறைத்தே வாழ்ந்திட நினைக்கையில்/
ஏறுகின்றதே குற்றங்கள் நிம்மதியும் அழிய/
ஜன்ஸி கபூர் - 13.12.2020
-----------------------------------------------------------------------------------------
குற்றம் குற்றமே
-----------------------
நாவில் செந்தமிழ்த் தேன் சுவையிருக்க/
நாகரிக உலகில் கைகோர்க்கின்றனர் பிறமொழியுடன்/
தாயக நிழலின் அருமை புரியாமல்/
நாடுகின்றனர் அந்நிய தேசத்தில் வாழ்ந்திடவே/
அனுபவம் இல்லாக் கல்வியைக் கற்றால்/
அடுத்தவரிடம் கையேந்தும் அவலம் நீளும்/
மனிதம் தொலைத்தே அணிகின்ற வேடங்கள்/
புனிதம் இழந்து தவற்றில் குவியும்/
சட்டம் மதிக்காமல் பண்பாடும் பேணாமல்/
கழியும் பொழுதுகள் கறைகள் சூழுமே/
செய்கின்ற குற்றங்கள் சிதையாது தொடரும்/
உண்மையை ஏற்காப் பண்புகளும் இழுக்கே/
ஜன்ஸி கபூர்
2020/12/10
மகிழ்வுப் பயணம்
நீரோட்ட மடியும் தாங்குகின்ற பாதையில்/
வேரோடுகின்றதே உறவுப்பாலமும் வேற்றுமைகளை மறைத்தே/
ஓடையை ஊடறுத்த நடைப்பயணச் சுவட்டினில்/
ஓற்றுகின்றதே உற்சாகமும் அழகை உறிஞ்சியபடி/
விழிகளும் ரசிக்கின்ற அழகிய இயற்கைக்குள்/
எழுதியதே விஞ்ஞானமும் அறிவின் விரல்களால்/
நழுவும் காற்றையும் ஆற்றுக்குள் விழுத்திடாது/
தழுவுகின்றதே தேகமும் குளிரை ஏந்தியபடி/
பேதங்களைக் களைந்தே பயணத்தில் இணைவோர்/
சேதமின்றி மறுகரையைச் சேர்ந்திடுவார் அறிவியலால்/
வான் கருணையால் வாழ்கின்ற பசுமையைக்/
காண்கின்ற மனங்களும் களிக்கின்றதே இரசனைக்குள்/
ஜன்ஸி கபூர் - 10.12.2020
2020/12/09
Sahrish cert
உலா வரும் நிலா
+++++++++++++++++
இருளும் கலைகின்றதே ஒளியினிலே/
விருந்தும் ஆகின்றாய் விழிகளுக்கே/
ஒளிரும் உந்தன் அழகினிலே/
மிளிருதே வானும் மகிழ்வினிலே/
சஹ்ரிஸ் சதாத் - 9.12.2020
---------------------------------------------------------------------
காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன்
2020/12/08
எங்கே நிம்மதி
நிலையற்ற வாழ்விலும் ஊசலாடுகின்றதே ஆசைகள்
கலைக்கின்றதே அமைதியை மனமோ கலக்கத்தில்
தினமும் படருகின்ற எதிர்பார்ப்பின் கவனமும்
திகைக்குதே வழி தெரியாப் பயணத்தில்
தேடலுள் தொலைகின்ற நாகரிகத் தாக்கம்
தேடுகின்றதே ஆபத்துக்களை வாட்டமும் சூழ்ந்திடவே
நாடுகின்ற தீமைகள் நகைக்கின்றதே அழிவிற்காக
நகையும் மறந்த கன்னங்களும் வலிக்கின்றதே
அன்பைத் துறக்கின்ற அவல வாழ்வும்
குவிக்கின்ற பிணக்கால் பிரிகின்றதே இணக்கமும்
வரவும் மறந்த செலவின் தாக்கம்
வடிக்கின்ற கண்ணீரும் வனப்பை அழிக்கின்றதே
நோயும் வறுமையும் துரத்துகின்ற வாழ்வில்
நோவும் வலியும் பிணைந்தே வருகின்றதே
முட்பாதைகளின் முகவரியில் முடிசூடுகின்ற காயங்கள்
தலைகாட்டுகின்ற வாழ்வினில் நிம்மதியும் தொலைகின்றதே
ஜன்ஸி கபூர் - 8.12.2020
2020/12/06
சொந்தம்
உருவம் கைகோர்த்துக் கொண்டாலும்/
உணர்வில் படியாத உறவாகவே கடக்கின்றது/
நம்மைச் சூழ வாழ்கின்ற சொந்தம்/
ஜன்ஸி கபூர் - 6.12.2020
2020/12/05
மழை
நம்பிக்கை
நம்பிக்கை
++++++++
நம்பிக்கை கொண்டோர்/
வாழ்வில் தோற்பதில்லை/
ஊக்கத்துடனான முயற்சி/
அவநம்பிக்கை தருவதுமில்லை/
ஜன்ஸி கபூர் - 5.12.2020
2020/12/04
மழை
கருத்துப் போன முகில்களின் நீரோட்டம்
கடல் அலைகளை வேகமாகத் துரத்துகின்றது
அச்சப்பட்ட அலைகள் அடைக்கலம் தேடி
ஊருக்குள் நுழைகின்றது வெள்ளமெனும் பெயரில்
கனமழையின் நிழலுக்குள் ஒளிகின்ற உயிர்களைத்
தேடி ஒலிக்கின்ற உறவுகளின் கதறல்களும்
கலக்கின்றது காற்றோடு போராடுகின்ற ஈரத்தில்
மழைக்குள்ளும் ஈரமான மனசு இருக்கின்றது
அதனாற்றான் வறட்சியின் துன்பம் கண்டு
அடிக்கடி கண்ணீர் சிந்தி அழுகின்றது
ஓவெனும் ஒப்பாரிச் சத்தம் கேட்டு
எட்டிப் பார்க்கின்றன குளம் குட்டைகள்
தம் நெஞ்சத்தில் அணைத்தே ஆறுதல்படுத்துகின்றன
வழிந்தோடும் விழிநீரால் நனைக்கின்றன இருப்பிடங்களையும்
குடைக்குள் ஒளிந்து கொள்கின்ற கொடை
பற்றியதான புரிதல்கள் இங்கு யாருக்குமில்லை
எப்போது அணைக்கும் அழிக்குமென்ற மணக்கணக்கும்
தப்பாகிப் போய்விடுகின்றமையால் தவிக்கின்றேன் வாழ்வில்
விழுகின்ற நீர்த்துளிகள் பரிகசிக்கின்றன முன்னறிவிப்புக்களை
எதிர்வுகூறல்களை எட்டி உதைக்கையில் தடுமாறுகின்றன
முன்னாயத்தம் இல்லாத் தாவரங்களும் இயற்கையும்
சினத்தில் வானமும் முகம் கறுக்க
முகில்களும் கல்லெறிகின்றன தகரக் கூரைகளில்
அதன் பேரிரைச்சல் சப்தம் கேட்டு
தலைதெறித்து ஓடுகின்ற அமைதியான ஆறுகளை
நானும் அனுதாபத்துடன் பார்த்துக் கலங்குகின்றேன்
எவருக்கும் தெரியாது மழையின் குறும்பும்
பிறரை வருத்தும் துன்பத்தின் தீவிரமும்
வாட்டம் தீர்க்கின்ற இதமான அன்பும்
மழையின் இரகசியம் நானும் அறிந்திருந்தால்
ஒவ்வொரு துளிகளையும் அனுபவித்தே மகிழ்ந்திருக்கலாம்
கிடைக்கின்றபோது சலிப்பதும் காணாதபோது ஏங்குவதும்
நிலையற்ற மனதின் எதிரொலியாகவே காண்கின்றேன்
நினைக்கின்ற போதெல்லாம் மழையும் கிடைத்துவிட்டால்
துன்பங்கள் நம் அனுபவங்களைத் தொட்டிருக்காது
வெளியே மழையின் ஓசை கேட்கின்றது
மண்வாசம் சுவாசத்தினைத் தொட்டுச் செல்கின்றது
குளிரைப் போத்தியபடி இரசிக்கின்றேன் மழையை
அது விரும்பும்வரை என்னையும் நனைக்கட்டும்
ஜன்ஸி கபூர் - 4.12.2020
Kesavadhas
ஜன்ஸி கபூர்
இயற்கை நிகழ்வுகளை மழையின் ஒவ்வொரு நகர்வையும் மனித உணர்வுகளௌடு ஒப்பிட்டு படிமங்களாய் பதிய வைத்திருக்கிறார் கவிஞர்!
கவிதையைப் புரிந்துணர்வு செய்யும் முயற்சியில் புதிய சொல்லாக்கங்களும் அரங்கேறுகிறது அழகு!
முகில் நீரோட்டம் கடல் அலைகளை துரத்த அவை அடைக்கலம் தேடி ஊருக்குள் நுழைகிறதாம்!
கனமழையின் நிழலுக்குள் ஒளிகின்றனவாம் உயிர்கள்
அந்த உயிர்களைத் தேடும் உறவுகளின் கதறல்கள் காற்றோடு போராடுகின்றனவாம்!
மழைக்கும் ஈரமான மன்சு இருக்கிறதாம்!
அதனால்தான் வறட்சி கண்டு அடிக்கடி கண்ணீர் சிந்துகிறதாம்!
ஓவெனும் ஒப்பாரி கேட்டு எட்டிப் பார்க்கின்றனவாம் குளங்குட்டைகள்!
தம் நெஞ்சில் அணைத்து ஆறுதல் படுத்துகின்றனவாம்!
பெய்யும் மழையின் ஓலமும் பாயும் நீரும் நிரம்பும் குளங்குட்டைகளும் படிமக் கடலில் புணைகள் ஆகின்றன!
அணைப்பதும் அழிப்பதும் கொடுப்பதும் கெடுப்பதும் மழைக்கு கைவந்தகலை!
நம் கணக்குதான் தப்பாகிப் போகிறது!
என்ன அழகான புரிதல்!
விழுகிற நீர்த்துளிகள் பரிகசிக்கின்றன முன்னறிவிப்புகளை எதிர்வுகூறல்களை..
முன்னாயத்தம் இல்லா தாவரங்களுடான இயற்கை சினத்தில் வானமும் முகமும் கறுக்க முகில்கள் கல்லெறிகின்றனவாம்! கற்பனை விரைந்து பாய்கிறதே விரியனின் விஷமாய்!
அடுத்த நாலைந்து வரிகள் மழையின் தாண்டவம் காட்டும்!
குறும்பு காயப்படுத்தல் அன்பு
என பலமுகம் காட்டுகிறது மழை!
மழை மர்மம் புரியாமையால் ரசிக்க முடியவில்லை!
புரிந்து ஆயத்தமாய் பாதுகாப்பாய் இருந்திட எல்லாவற்றையும் ரசிக்கலாம் மழையின் துளிகள் அதட்டல் மிரட்டல் எல்லாவற்றையும்!
கிடைத்தால் சலிப்பாகும்!
கிடைக்காதபோது ஏக்கம் தரும்!
மனதைப் போலவே மழையும்!
நினைக்கும் போதே எல்லாம் சாத்தியமானால் வாழ்வு சுவாரசியம் இழந்து போகாதோ!
மழையின் ஓசை வெளியில்
மழைதொட்ட மண்ணின்
மணம் நாசியில்
குளிரைப் போர்த்தி என்னை நினைக்கின்றது மழை!
குளிரால் போர்த்தமுடியுமா?
போர்த்தினாலும் நனையுமா!
எதிர்களின் அடுக்கினால் கோட்டையே கட்டிவிடுகிறார் கவிஞர்!
வாழ்த்துகள்!
மழையானுபவம் பேரின்பமே!
*****+
------------------------------------------------------------------------------------------
2020/12/03
உதிரும் பூவே
விடிகாலைப் பொழுதினில் விருப்பாகும் இதழ்கள்/
மடிகின்ற போதெல்லாம் இழக்கின்றதே இரசிப்பினை/
உதிரும் பூவே உணர்கின்றேன் உண்மையை/
அழகும் இளமையும் அழியும் வாழ்வினில்/
பழகும் அன்பே பண்பினிற் சிறந்ததென/
ஜன்ஸி கபூர் -3.12.2020
மழைக்கால மேகம்
இருண்ட வானின் இறக்கைகளோ மழைமேகம்/
வருணன் வடிவெடுத்து வனப்பாக்குது மண்ணையும்/
துள்ளுகின்ற நீர்த்துளிகள் துயரினைப் போக்கிட/
உள்ளச் செழிப்பினால் உழைப்பும் உயருது/
உழவும் களித்திடும் பெருமழையால்/
கழனிப் பெருவெளியும் களிக்குதே பசுமைக்குள்/
ஜன்ஸி கபூர் - 3.12.2020
உறவுகள் நமக்கு உறுதுணையே
வாழ்க்கை என்பது தனிப் புள்ளியல்ல. உணர்வுகளால் சூழப்பட்ட கோலம். இந்த உணர்வுகளை ஆள்வோர் நமது உறவுகளே. நாம் நமது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய இதயங்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை குறித்த பாதையில் நகர்த்தக் கூடியவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை எப்பொழுதும் அவதானித்துக் கட்டுப்படுத்தும் சக்தியாக இவ்வுறவுகள் இருப்பதனால் நாம் நமது எல்லைகளை விட்டு வெளியேறாது நம்மை நாமே கட்டுப்படுத்தி வாழக்கூடியவர்களாக இருக்கின்றோம் என்பதே உண்மை.
உறவுகளை நம்முடன் இணைப்பது அன்பு பாசம் சார்ந்த பிணைப்பே. உண்மை அன்பானது உபத்திரமாக மாறாது. நம்மைச் சூள்கின்ற ஆபத்துக்களைக் கூடத் தடுக்கின்ற சக்தி உண்மை உறவுகளுக்கு உண்டு
2020/12/02
மனம் விரும்புதே
ஏழ்மையும் சிதைக்காத எழில்ப் பூவழகி/
வீழ்கின்றேனடி தினமும் விழிகளின் ஒளிர்வினில்/
கன்னத்தில் கரைந்திடும் வசீகரப் புன்னகையில்/
இன்பத்தைச் சுவைக்கின்றேன் இதயமும் சிறகடிக்க/
அன்பைக் குலைத்தே அமுதாய் ஊட்டுகையில்/
உன்னோடு வாழ்ந்திடவே மனம் விரும்புதே/
ஜன்ஸி கபூர் - 2.12.2020
2020/12/01
விழிகளின் மொழி
விழிகளின் மொழி
-------------------------------
விழி அன்பிற்கு மொழியும் உண்டோ/
பழகும் பண்பில் பேதங்கள் கலையும்/
அழகான சிரிப்பினில் தந்தையும் இங்கே/
கலங்குகின்றதே மனமும் அவர் பிரிவினிலே /
ஜன்ஸி கபூர் -1.12.2020
-------------------------------------------------------------------------------------
அன்பினால் அரவணைப்போம்
அவலம் சூடும் அனாதைகளைத் தினமும்/
அன்பினால் அரவணைத்தே வாழ்ந்திட வழிகாட்டுவோம்/
இருப்பிடம் தொலைக்கும் இயற்கைச் சீற்றத்தின்/
இடரினைத் துடைக்க இரக்கமும் விதைப்போம்/
வழியின்றித் தவிக்கின்ற வறுமை நெஞ்சின்/
விழி நீரினைத் துடைப்போம் கருணையுடன்/
ஜன்ஸி கபூர் - 1.12.2020
விவசாயம்
விவசாயத்தின் வரலாறானது பல்வேறு காலகட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. காட்டிலிருந்து பெறப்பட்ட விதைகளைத் திட்டமிட்டு விதைக்கச் செய்தும், ஆறு, ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளிலிருந்து மீன்களைப், பிடித்தும், உணவுத்தேவையினை நிறைவு செய்த மக்கள், இன்று தமது சிந்தனையின் விளைவாக விவசாயம் எனும் பழமைக்குள் தற்கால அறிவியலைப் புகுத்தி நீர்ப்பாசனம், உரங்கள், பயிர்ச்செய்கை முறைகள், பூச்சிகொல்லிகள் போன்ற பல்துறைகளிலும் பல்வேறான தொழினுட்ப உபாயங்கள் பயன்படுத்தி, தற்கால மனித தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய விளைவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மை போன்ற பகுதிகளைக் கொண்டுள்ள விவசாயத்தில் நிலங்கள் பண்படுத்தப்படுவதனால் மண்வாழ் உயிரிகளுக்கான வாழ்விடம் கிடைப்பதுடன், மண்வளமும் காக்கப்படுகின்றது. செழிக்கின்ற பசுமைக்குள் இயற்கையும் உயிர்க்கின்றது. அத்துடன் சூழல்வாழ் உயிரிகளுக்கிடையிலான அங்கிச் சமநிலையும் பேணப்படுகின்றது. எனவே விவசாயமானது வருமானத்தை ஈட்டித் தந்து நாட்டினதும், வீட்டினதும் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உயர்த்துவதுடன், சூழலையும் காக்கின்றது.
இவ்வுலக வாழ்வில் இணைந்த மனிதன் இயற்கையாகக் கிடைக்கின்ற இயற்கை வளங்கள் உயிரினங்கள் என்பனவற்றுடன் தொடர்புபட்டு மணணையும், விண்ணையும் ஓர் புள்ளியில் குவித்து, அதன் மூலமாக ஏற்படுகின்ற பிணைப்பினால் விவசாயத்தை உயிர்க்கச் செய்து, சமூக பொருளாதார மாற்றத்திற்கு பங்காற்றிக் கொண்டிருக்கின்றான். விவசாயத்தை ஆளுகின்ற விவசாயியின் மூலமாகவே இவ்வாறான உன்னதமான உழைப்பினை தான் வாழும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் வழங்க முடிகின்றது.
விவசாயத்தின் அடிப்படைத் தத்துவம் உழவாகும். தமிழரின் உழவு சார்ந்த வாழ்வியல் நெறிப் பண்பாட்டினை திருவள்ளுவரும் தமது குறளடிகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். – (குறள் 1037)
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. – (குறள் 1038)
மேற்கூறப்பட்ட குறளடிகளில் உழவுத் தொழிலின் தொழினுட்பத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
பசுமைப் புரட்சியின் மூலமாக விவசாய விளைவுகள் அதிகரிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் கூட, நாகரிக வாழ்வு, வணிகமயமாதலின் தாக்கம், காலநிலை, சனத்தொகைப் பெருக்கத்தினால் ஏற்பட்ட இடநெருக்கீடு, மண்வளம், நீர்வளம், நிலத்தோற்றம் போன்ற பல புறக்காரணிகளின் தாக்கங்களுடன், விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டங்களும் விவசாயத்தின் செழிப்பைக் குறைக்க முனைகின்றன. இவ்வாறான சூழ்நிலைகள் எதிர்கொள்ளப்பட்டாலும்கூட, இயற்கையுடன் இசைந்து வாழ்ந்து இயற்கையைப் பாதுகாக்கும்விதமாக நாம் வேளாண்மையில் நாட்டம் கொண்டு உழைப்போமாக.!
ஜன்ஸி கபூர் - 1.12.2020
2020/11/23
azka cert
2020/11/22
கல்லறையும் கார்த்திகையும் கல்நெஞ்சைக் கரைத்திடுமா
1.கல்லறையும் கார்த்திகையும் கல்நெஞ்சைக் கரைத்திடுமா
---------------------------------------------------------------------------------------------
உதிரம் துளைத்தே உமிழ்ந்த சன்னங்கள்/
உயிரினை அறுத்தே உயிர்ப்பித்ததோ கண்ணீரினை/
புதைகுழிகளில் வீழ்ந்தே துளிர்க்கும் வீரம்/
வெறும் கதையல்ல வென்றெடுக்கும் சரித்திரம்/
இதயம் சுமந்த இலட்சிய வேட்கையில்/
இன்னுயிர் துறந்தே மீளாத்துயில் கொள்ளும்/
கல்லறைப் பூக்களின் வாசம் கரைத்திடுமோ/
கல்நெஞ்சாகி மனிதம் மறந்த மாக்களை/
விதைத்த கனவுகளைச் சிதைத்த போரால்/
விழுந்த விதைகளும் மீள எழுகையில்/
மயானத்தில் ஒளிரும் கார்த்திகை தீபங்கள்/
இருட்டின் நிழலுக்குள்ளும் விடியலைத் தேடுகின்றனவே/
ஜன்ஸி கபூர் - 22.11.2020
2020/11/19
கதியின்றி சகதியில் வாழ்வு
கவிதை சாரல் குழு
****--------*******-**----
சமூக விழிப்புணர்வுக் கவிதைப்போட்டி.
சமூக விழிப்புணர்வுக் கவிதைப்போட்டியின் இன்றைய தலைப்பு:
***********
#கதியின்றி_சகதியில்_வாழ்வு
#நெறியாளர் - #த.#இளங்கோவன்
நடுவர்
********
#கவிஞர்
#ஜன்ஸி_கபூர் அவர்கள்
இவரை பற்றி-
******** ******
இலங்கை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட இவர் இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சொந்த ஊரிலிருந்து அகதியாக இடம்பெயர்ந்து இரண்டு தசாப்தங்களின் பின்னர் மீளவும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அரச பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியையாகக் கடமையை தொடங்கியுள்ளார். தற்போது கடந்த ஐந்து வருடங்களாக யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலயம் எனும் அரச கல்லூரியில் அதிபராக (கல்லூரி முதல்வர்) பணியாற்றுகின்றார். B.Ed பட்டதாரியான நான் முதுகல்விமாணி (M.Ed) பட்டதாரியாக உயர் தொழிற்றகைமை கொண்டுள்ளார்.
சிறு வயதிலிருந்தே ஏற்பட்ட இலக்கிய ஆர்வம் இன்றுவரை தொடர்கின்றது. கவிதைகளையும் சிறுகதைகளையும் முன்பு எமது நாட்டுப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதி வந்த இவர் தற்போது இணைய வழியாக குழுமங்களில் எழுதி வருகிறார்.
கவிதாயினி எனும் வலைப்பூவைத் தயாரித்து அதில் தனது கவிதைகளை பதிவிட்டும் வருகிறார். கல்வித் துறையிலும் இலக்கியத் துறையிலும் சில விருதுகளைப் பெற்றுள்ளார்.
நாள்:
*******
பதிவிட்ட இந்நேரம் முதல் ....21.11.2020,சனி இரவு 10.மணிவரை கவிதை படைக்கலாம்.
--------------------------------------------------------------------------------
நடைபெற்ற கவிதைப் போட்டியில் எல்லோரும் சிறப்பாக எழுதியிருந்தீர்கள். எனினும் கவிதைப் போட்டிக்கென சில வரையறைகளும், விதிகளும் உண்டு. ஆங்கிலச் சொல் பயன்பாடு, திருத்தம் மேற்கொள்ளாமை, அதிக சொற்கள், ஒரே சொல்லை ஒன்றிற்கு மேற்பட்ட தடவை பாவித்தல், கவித்துவம் குறைந்த தன்மை போன்ற சில காரணங்களால் சில கவிதைகளைத் தெரிவு செய்ய முடியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். வெற்றிக்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு பற்றியவர்களுக்கும், என்னை நடுவராக நியமித்த நிறுவுநர், துணைத்தலைவர் உள்ளிட்ட கவிக் குழுமத்திற்கும் எனது நன்றிகளும், வாழ்த்துகளும்-
*********************
45 வெற்றியாளர்கள்
*********************
ஊரடங்கால் இழந்ததைப் பெற்றோம்
--------------------------------------------------
அரசாங்க ஊழியர்களின் வேலைகள் பறிபோகவில்லையே. அவர்கள் ஊரடங்கிலும் சம்பளம் பெற்றார்கள். தனியார் துறைகளில் வேலை செய்தோர்கள் எல்லோருக்குமா வேலை பறிபோனது. வேலையிழந்தோர் மாற்றுவழி பற்றி யோசித்தனர். அடுத்தவரிடம் கையேந்தாமல் சுயமாகத் தொழில்களைச் செய்யக் கற்றுக் கொண்டனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை
குடும்பத்துக்குள் மனம் விட்டுப் பேசிப் பழகினால்தான் அடுத்தவருடனும் இங்கிதமாகப் பழக முடியும் அறையில் ஆடிய பிறகே அம்பலத்தில் ஆடவேண்டும் என்பது பழமொழிதானே சகோ. அயலாருடன் வம்புப் பேச்சுக்கள் குறைந்துள்ளன. குடும்பத்தினரைப் புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன. குடும்பத்தாருடனும் பட்டும் படாமல் பழகிவிட்டு அயலாருடன் சந்தோசமாகப் பழக முடியுமா
விளையாட்டும் தொலைக்காட்சி பார்த்தலும்கூட மனதை அழுத்தத்திலிருந்து நீக்கி சற்று அமைதிப்படுத்துகின்றது. மன ஆரோக்கியத்திற்கு குடும்ப உறவுகளுடன் இணைந்து விளையாடும்போது சுவாரஸியமான மனநிலை உருவாகின்றது. வெளியே திரிந்து வாங்கும் வம்பு இல்லாமல் போகின்றதல்லவா
தனிமையிலே இனிமை கிடைக்குமோ. கிடைக்கும் நேரங்களுக்கேற்ப குடும்பப் பொறுப்புக்களைத் திட்டமிட்டு பகிர்ந்தளித்தால் தனிமை தானாகவே கிடைக்கும் சகோதரி.
நம்மைப் பற்றி மாத்திரம் சிந்திப்பது சுயநலம்தானே. பொதுநலச் சிந்தனையை நமக்குள் வளர்த்து விட்டதால் நம்மைச் சுற்றியுள்ளோரின் வளமான வாழ்விலும் நாம் பங்களிப்புச் செய்கின்றோம் இல்லையா
இப்போதும் அந்த சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் எல்லா வேலைகளையும் நீங்களாக இழுத்துச் செய்யாமல் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள். அவரவர்களை அவரவர் எல்லைகளுக்குள் இருக்கும் பயிற்சியை வழங்க இது சிறப்பான நேரம். கணவனோ பிள்ளைகளோ உறவுகளோ ஒருவரின் உரிமை விருப்பு வெறுப்புகளுக்குள் தலையிடாமல் வாழும் பக்குவத்தை நிச்சயம் குடும்பத் தலைவியால் ஏற்படுத்த முடியும். ஏனெனில் குடும்பத் தலைவியும் ஒரு நிர்வாகிதானே.
வீதியில் நடப்பதை விட வீட்டுக்குள் சுற்றிச் சுற்றி நடப்பதும் ஆரோக்கியமே. எல்லாவற்றிற்கும் மனம்தானே காரணம். கிடைக்கும் சூழ்நிலையில் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் மனப்பக்குவம் வந்துவிட்டால் எத்தடையும் ஏற்படாது.
சந்திப்பு என்பது நேரில்தானா இடம்பெற வேண்டும். மொபைலிலும் நேரலைச் சந்திப்புக்களில் ஈடுபடும் நவீய காலத்திலல்லவா வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
பொருளாதாரமயமான குடும்பக் கட்டமைப்பில் வருமானமே பிரதான இடம் வகிக்கின்றது. இதனால் இயந்திரமயமான வாழ்க்கைக்கு முகம் கொடுத்து ஓய்வு என்பதே இல்லாத நிலையில் ஓடிக் கொண்டிருந்தோம். குடும்ப உறவுகள் மனம் விட்டுப் பேச முடியாத நிலை. இந்நிலையைத் தவிர்த்துள்ளது ஊரடங்கு.
வேலை வேலை என வெளியே நடமாடிக் கொண்டிருக்கின்ற ஆண்கள் அரைகுறையாக தமது காலை மதிய உணவுகளை உணவுச்சாலை கடைகளிலேயே பெற்று வந்தனர். ஆனால் இந்த ஊரடங்களில் இரசித்து ருசித்து வீட்டு உணவுகளை உண்ண முடிந்துள்ளது.
வெளியே பொழுதுபோக்கென நேரத்தை விரயமாக்கி அங்கே இங்கே என வீணாகச் சுற்றிய வாலிபர்கள் தமது வீடுகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டு வம்புகளில் மாட்டாமல் மீண்டுள்ளதோடு எதிர்காலம் தொடர்பாகவும் தம் வாழ்க்கையின் போக்கு தொடர்பாகவும் சிந்திக்க நீண்ட நேரம் கிடைத்துள்ளது.
நிறைய பேர் தமது சுயதொழில்களை ஆரம்பிக்க இக்காலம் துணையாகியுள்ளது. பிறரிடம் கைநீட்டி சம்பளம் பெற்றவர்கள் தாமே சுயமாகத் தொழில் செய்யும் சிந்தனையை நடைமுறைப்படுத்தியுள்ளனர். வீட்டுத்தோட்டங்களில் உணவுப் பயிர்களை பயிரிட ஆர்வம் செலுத்தியுள்ளதனால் மரக்கறி கொள்வனவு அவசியமில்லை. புதிய காய்கறிகளை சமையலுக்குப் பயன்படுத்த முடிகிறது.
பாடசாலைக் கல்வி தனியார் கல்வி என அலைந்து திரிந்ததில் சுய கற்றலில் ஆர்வமில்லாமல் சோர்ந்திருந்த மாணவர்களுக்கு தாம் கற்றதை சுயமாக பிறரின் தலையீடு இல்லாமல் கற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சில பெண்கள் தமது மகள்களிடம் சமையல் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு உறவினர் அயல் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று வம்பளப்பார்கள். இதனால் முரண்பாடுகளும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வழியேற்படுகின்றது. இந்நிலை தவிர்க்கப்பட்டு போடப்பட்ட வாய்ப்பூட்டுக்கள் மூலம் மனித நலன் மேம்படுத்தப்பட்டுள்ளது
மிக முக்கியமாக ஒவ்வொருவரும் தமது ஆரோக்கியம் தொடர்பாகச் சிந்தித்து சுகாதாரமான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதற்கான சூழலும் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.
குடும்ப உறவுகள் மனம் விட்டுப் பேச சந்தர்ப்பங்கள் கிடைத்தமை ஆரோக்கியமான குடும்ப கட்டமைப்பிற்கு வழிகொடுத்துள்ளது.
மொபைலிலும் முகம் பார்த்து பேச முடியும் என்பது உங்களுக்குத் தொரியாதா சகோதரி. தேநீர் குடித்துத்தான் அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்ன....தொலைவில் உறவுகள் இருக்கும்போது அன்பு வலிமையானது
ஆசிரியரிடம் நேரடியாக் கற்காவிட்டாலும் அவர்களுடன் தொடர்பு கொண்டுதானே கற்கின்றார்கள். கணனி யுகத்தில் வாழ்கின்றோம். வெளிநாடுகளில் இத்தகைய கல்விமுறைகள்தானே வெற்றி பெற்றுள்ளன. நம்மாணவர்கள் பழக்கப்படவில்லை. அதனால்தான் இத்தவிப்பு. வெளிநாட்டுக் கல்வி முறை சார்பான பயிற்சியை ஊரடங்கு வழங்கியுள்ளது.
சுதந்திரமான திரிச்சல் கட்டுப்படுத்தப்பட்டது சிறந்த வாழ்வுக்கான அடித்தளமே
மாற்றம் ஒன்றே மாறதது. எனவே காலத்தின் வேகத்திற்கேற்ப நமது வாழ்க்கை முறையும் மாற்றப்பட வேண்டுமென்பதை கொரோனா ஊரடங்கு விழிப்புணர்வுச் செய்தியாகத் தருகின்றது
அரச பாடசாலையின் தலைமைப் பதவியில் இருக்கின்ற எனக்கு ஓய்வினை இக்கொரோனா பெற்றுத் தந்தது. ஐந்து வருடங்களாக மூட்டை கட்டி வைத்த கவிதைச் சிந்தனையைக் கிளறியெடுத்தேன். இன்றும் எமக்கு பாடசாலை விடுமுறை தரப்பட்டிருப்பதனால் இவ்விவாதத்திலும் கலந்து கொண்டிருக்கின்றேன். இந்த ஊரடங்கு ஓய்வில் நிறைய கவிதைகளை எழுதும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பல நல்ல இலக்கிய உள்ளங்களை அடையாளப்படுத்தி உள்ளது ஊரடங்கு. நான் இழந்த கவிதைகளை மீளப் பெற்றுக் கொண்டேன். கூட்டுப்பறவைகள் உள்ளிட்ட கவிக் குழுமங்கள் சிலவற்றில் முகங் காட்டிக் கொண்டிருக்கின்றேன். இலக்கியவாதிகளின் எழுதுகோல் முனையைத் தீட்டியுள்ளது என்பதும் உண்மை.
ஆடம்பரம் அற்ற திருமண நிகழ்வில் கலகலப்பு இல்லையா சகோ. கடன்பட்டு செலவளித்து விட்டு திண்டாடுவதை விட நிம்மதியுடன் சிக்கனமாக வாழ்வதே சிறப்பு மீனா கோபி சகோ
வேறு வழியில்லை. நம்மைப் பார்ப்பதற்கு வீட்டு பீரோ கண்ணாடியாவது இருக்கின்றதே. நமது திருப்தியே மிகப் பெரிய சக்தி. மனநிலை கொஞ்சம் மாற்றப்பட வேண்டும். மீனா கோபி சகோ
இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கென்றே நீளும் செலவினை ஓரளவாவது தவிர்ப்பதற்காக எரிபொருள் விலையேற்றம் இருக்குமல்லவா. மலிவாக கிடைத்தால் தற்கு மதிப்பு இருக்காது
மீனா கோபி ஓய்வின்றி உழைத்த ஆட்டோ உள்ளிட்ட சாரதிகள் பலரின் பணம் சாராயக் கடைகளுக்குச் செல்வதை தாங்களும் அறிவீர்கள். உழைக்காத போது வீண் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு ஓய்வாக தங்கள் குடும்பத்துடன் காலம் கழித்தார்கள்.
மீனா கோபி எந்தவொரு செயலும் விருப்பத்துடன் செய்தால் அலுக்காது
எண்ணெய் நிறுவனங்கள் உள்ள நாடுகளிலும் கொரோனா அசாதாரண நிலைதானே. பாம்பின் கால் பாம்பறியுமல்லவா
மீனா கோபி நீங்கள் சொன்ன வர்க்கத்தினர் இந்த ஏழ்மையிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள கொரோனா வழியமைத்துக் கொடுத்துள்ளது என்றுதான் நாங்கள் சொல்கின்றோம்.
மனிதாபிமான உதவிகள் மூலம் ஏழைகள் முன்னரை விட அதிகமாக பசியாற்றுகின்றார்கள் என்பதை எதிரணியினர் மறந்து விட்டார்கள்போல்
மனிதாபிமான நிறுவன உதவிகள் மூலம் சில ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.
மீனா கோபி தனித்தன்மை இழப்பு ஊரடங்கு காலத்தில் மட்டுமா இருந்தது. இழந்தது மீளக் கிடைத்துள்ளது
மீனா கோபி - அமைதிஇ மௌனம் தனக்குள் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும். மீன்பிடிக்க வேண்டும் எனும் சிந்தனை ஊரடங்கு காலத்தில் ஏற்படுத்தப்படுகிறது. ஒரு செயலைப் பழக்க முதலில் வேண்டும் சிந்தனைதானே சகோ.
குழந்தைகள் விளையாடினார்கள் தானே வீட்டுக்குள்ளே அதுவும் வித்தியாசமான அனுபவம்தானே. உறவுகளுடன் நேரம் செலவிடல்.
ஜன்ஸி கபூர்
#ஊரடங்கால்_இழந்ததைப்_பெற்றோம்
--------------------------------------------------
---குடும்பத்தின் அன்பும் நெருக்கமும் புரிந்துணர்வும்
---சுவையான சாப்பாடு. சமையற்கலை மேம்பாடு. ஆண்களும் சமைக்கக் கற்றுக் கொள்ளல்
---பெண்களின் வேலைச் சுமையை அருகிருந்து ஆண்கள் கண்டு கொள்ளும் வாய்ப்பு
----சுய சுத்தம் பற்றிய விழிப்புணர்வு
----மனிதாபிமான உதவிகள் வழங்கல்.
----பொருளாதாரம் தடைப்பட்டபோது சுயதொழில் பற்றிய சிந்தனை. சுயதொழில்களில் ஈடுபடல்
----வீட்டுத் தோட்டம் அமைத்தல்
----குடும்ப உறுப்பினர் ஒன்றிணைந்து பொழுதுபோக்குகளில் ஈடுபடல்.
----சேமிப்பின் முக்கியத்துவம் உணரல்
----ஓவ்வொருவரும் தமது பாதுகாப்பில் கரிசனை
----ஆன்லைன் முறையிலான நவீன கல்வித் திட்டத்திற்குப் பயிற்றப்படல்
----பிச்சைக்காரர்கள் நடமாட்டம் குறைவு
----பிறருடனான வீண் முரண்பாடுகள் தவிர்ப்பு
---கை வைத்தியத்தின் பால் கரிசனை
---ஆடம்பர நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டன.
---இலக்கியத் துறையில் ஈடுபட சந்தர்ப்பம்
---அரச துறையினருக்கு சற்று ஓய்வும் வீட்டாருடன் இணைந்திருக்கும் சந்தர்ப்பம்.
----நிலையற்ற வாழ்க்கை பற்றிய உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ளல்.
----அநாவசியமான பிரயாணங்கள் தவிர்ப்பும் கட்டுப்படுத்தலும்
----சுகாதாரமான முறையில் உணவு உட்கொள்ளப் பழகல்
----தேவையற்ற விதத்தில் பொருட் கொள்வனவு செய்வதைத் தவிர்த்தல்
----சிறந்த குடிமகனாக அரசின் சட்டத்திற்கு கட்டுப்படும் தன்மை
இவ்வாறாக இன்னும் பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்
இறுதி வாதம்
எப்படியும் வாழலாம் என்று சுதந்திரமாகத் திரிந்தவர்களை இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வாழ்க்கைமுறையைக் கற்றுக் கொடுத்ததுடன் தனது குடும்பம் பற்றியும் தன்னைப் பற்றியும் ஆழமாக சிந்திப்பதற்கான வாய்ப்பும் கிடைத்ததுடன் தனது ஆரோக்கியமான வாழ்வுக்கான சுகாதாரமான நடைமுறைகளையும் மேற்கொள்ளும் வாய்ப்பையும் ஊரடங்கு காலம் வழங்கியுள்ளது. புதிய வாழ்வுக்குள் நுழைவதற்கான இடித்தளத்தையும் இது வழங்கியுள்ளது. இயந்திரமயமான வாழ்வுக்குள் மூழ்கி தொலைத்த பலவற்றை மீளப் பெற்றுக் கொடுத்துள்ளது. ஒவ்வொன்றையும் பெறும்போதும் கற்றுக் கொள்ளும்போதும் சில இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை.
--------------------------------------------------------------------------------------------------
Osly Caffoor
"இழந்ததைப் பெற்றோம்"
அன்று ருசியான,விதவிதமான அருஞ்சுவை உணவுகளை ருசித்திட வேண்டுமென்றால் ஹோட்டலுக்கும்,ரெஸ்டுரான்டுக்கும்தானே ஓடி ஓடி உண்டி பெருக்க உண்டு வந்தோம்..அதன் பின் விளைவுகளை உணராமல்!
ஆனால் வீட்டுச்சாப்பாடுதான் கதி என்று ஆன போது அதனை ருசிக்க,மணக்க ,விதவிதமாக சமைக்கக் கற்றுக் கொண்டோம் .உடல் நலனையும் ,நா ருசியையும் கருத்திற் கொண்டு சமையலும் ஒரு கலைதான் என்பதை உணர வைத்தது இந்த ஊரடங்குக் காலம் !
"இழந்ததைப் பெற்றோம்"
அன்று வீட்டில் ஒருவருக்குக் காய்ச்சலா..தலைவலியா..உடல் வலியா..போ டாக்டரிடம் !இப்படித்தானே எடுத்ததெற்கெல்லாம் ஓடினோம் நவீன மருத்துவத்திற்கு ! 3 நாட்களில் சுகம் தந்து மீண்டும் 30 நாட்களில் மீண்டு வரும் அந் நோய்களைப் பற்றி உணராமலேயே ! ஆனால் ஊரடங்குக் காலத்தில் அப்படி ஓட முடியாத நிலை . 'கை வைத்தியம் ,வீட்டு வைத்தியம் என்று "இயற்கை வைத்தியங்களையும் " கற்றுக் கொண்டோம் இக் காலத்தில் . பக்க விளைவுகளற்ற இயற்கை வைத்தியம் உடலுக்கு ஒத்துப் போவதுடன் ஆரோக்கியமாகவும் வாழ வைக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டோம் !!
Osly Caffoor
பணத்தை நோக்காகக் கொண்டு இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்த நாம் நமது வயோதிப காலத்தில் வீட்டில் முடங்கினால் எப்படி இருக்கும் என்ற அச்ச உணர்வை உணர வைத்தது இந்த ஊரடங்குக் காலம் !
அந்த வயோதிபத்தில் எம்மை அரவணைப்பது பணம் அல்ல ! நாம் சேமித்து வைக்கும் அன்புள்ளங்களும் ,உறவுகளுமே !இதை உணர்த்தியது இந்த ஊரடங்குக் காலம் !!