About Me

2012/07/28

ஞாபக அலைகள்

1990 ஒக்டோபர் 30
-------------------------
            ******************************************
                ஐின்னா வீதி - யாழ்ப்பாணத்திலுள்ள
                 எமது  வீட்டின் முன்புறம்*
            ******************************************

யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட  கரிய நாள்...............

அத் துரோக நாளில் எலும்புக்கூடாய் மாற்றப்பட்ட எங்கள் வீட்டின் படங்களையே இப்பதிவில் இணைத்துள்ளேன்..

அந்த ஞாபகங்களின் பதிப்பிவை .....இவை இனத்துவேசத்தினை யார் மீதும் தூண்டக்கூடியவையல்ல...நான் அனுபவித்த வேதனைகளின் சங்கமம்.என் நட்பினருடன் பகிர்வதில் ஆத்ம திருப்தி. இவ்வாறான இனச்சுத்திகரிப்பு இனி ஒருபொழுதும் எந்த சிறுபான்மைக்கு எதிராகவும் கனவில் கூட நடக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடனேயே இதனை எழுதுகின்றேன்...

யுத்தம் தன்னிரைக்குள் எம் பிரதேசத்தின் வனப்பையெல்லாம் உறிஞ்சிய நிலையில் எஞ்சியிருந்தவை வறுமைப்பட்ட வாழ்வும், அவல மனநிலையும், ஊனப்பட்ட உடல்களும் ,உருக்குலைந்த மனைகளும் தான்............


வெறுமையே தேசியமாய் மாற, மலினப்பட்ட மனசாட்சியின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு,  யுத்தங்களின் எச்சங்களாய் உதிர்ந்து கொண்டிருந்தோம்..

பீரங்கித் தாக்குதலும், ஆட்லறி ஷெல் வீச்சும், ஹெலிச்சூடும், பொம்பர் குண்டுவீச்சும் பழக்கப்பட்டவையாக எம்மோடு பதிவாகிக் கிடந்தன.

மின்விநியோகம் தடைப்பட்டும், வெகுசனத்தொடர்பூடகங்களின் செல்வாக்குமிழக்கப்பட்ட நிலையில் என் பொழுதுபோக்காக ,உதிர்ந்து விழும் சன்னங்களையும் பொம்பர் குண்டுவீச்சின் எச்சங்களையும் சேகரிப்பதனைக் கொண்டிருந்தேன்.மாணவர்ப்பருவத்திலிருந்த என்னிடம், திரட்டூக்கம் அதிகமாகவே இருந்ததால் என் கவனம் இச் சேகரிப்போடு ஒன்றிக்கிடந்தது.

 மக்களில் ஓரிரு குடும்பங்கள் மட்டுமே எஞ்சியிருக்க, ஏனையோர் தம் பாதுகாப்புக் கருதி இடம் பெயர்ந்த நிலையில் , யாழ்ப்பாணம் சோனகதெரு வெறிச்சோடிக்கிடந்தது..

அந்த ஓரிரு குடும்பங்களில் நாமும் அடக்கம்...பங்கரோ வேறெந்த பாதுகாப்போ இல்லாத சூழ்நிலையில், இறைவன் துணையுடன் தலைக்கு மேல் கூவும் ஷெல்களை எண்ணுவதில் உயிர் கரைந்தது..

ஒக்டோபர் 30 காலை 6.30 மணியளவில் எமக்கு அறிவிப்பு விடப்பட்டது. சகல முஸ்லிம் மக்களும் யாழ்ப்பாணம் ஐின்னா மைதானத்தில்  கூடும்படி................
ஒலிபரப்பு காற்றிலே அலைந்து எமக்குள் பீதியைக் கரைத்துக்கொண்டிருந்தது...எம்மிருப்பிடத்தை இழக்கப் போகின்றோம் என உள்ளம் எச்சரிக்கையுணர்வில் ஆட்பட்டு தவித்தது.


                         **************************************************
                              என் கல்விக்காக ஒதுக்கப்பட்ட அறை
                         ***************************************************

நாம் வீட்டிலிருக்க என் தந்தை மட்டும் கூட்டத்திற்குச் சென்றார். அரைமணித்தியாலம் கழிந்து போகாத நிலையில் முஸ்லிம் வீதிகளை மனித அவலங்கள் நிறைத்தன. கூக்குரலும், கண்ணீருமாய் துணி மூட்டைகளை மட்டுமே ஏந்தியவர்களாய் மக்கள் தம் பாரம்பரீய பூமியிலிருந்து வீசியெறியப்பட்டார்கள். நாமும் வெளியேற்றப்பட்டோம் . எம் வீடு, வாசல், சொத்து அனைத்தையும் அந்த ஒரு நொடியில் தாரை வார்த்தவர்களாய்  வெறுமையுடன் வெளியேற்றப்பட்டோம்

இந்திய இராவணுத்தினர் எம் தேசத்தைக் கைப்பற்றிய போதெல்லாம் இடம்பெயராத நாம் அன்று எம் சமூகத்தினருடன் ஒன்றாகக் கலந்து வேரறுக்கப்பட்டோம். எங்கள் கடைசிப் பயணச்சுவட்டின் கறை வீதியில் பதிந்து மறையத் தொடங்கியது.

போகும் வழி தெரியவில்லை.....
எதிர்காலம் பற்றிய நம்பிக்கையேதுமில்லை..
அலையோடு அடிபட்டுச் செல்லும் படகுகளாய் மக்கள் போகும் திசை நோக்கி எம் கால்களும் பயணித்தன.

மரண மிரட்டல்களும், துப்பாக்கிக் கரங்களும் எம்மை வழி நடத்திச் செல்ல எமது வீதியான ஐின்னாவீதிச் சந்தியிலுள்ள அவர்களின் சோதனைச் சாவடிக்குள்   நாங்கள் உடல் சோதனைக்காகத் தள்ளப்பட்டோம்.. துப்பாக்கியேந்திவர்களாய் எம் உடல்களை அழுத்தி சோதித்தனர். பெண்களிடமிருந்த தங்க நகைகளும் பணங்களும்  பறித்தெடுக்கப்பட்டன.....

இருப்பிடத்தை இழந்து வெளியேறும் இந்நிலையில் அவர்களின் எஞ்சிய வாழ்வின் நம்பிக்கையாகக் கொண்டு செல்லும் சிறு தொகைப்பணமும் ,நகைகளும் மீண்டும் பறிக்கப்படும் அந்தச் சிறுமைத்தனம் கண்டு  பல பெண்கள் கதறி மயங்கி விழுந்தனர்...

கூட்டத்தில் 1 பவுண் நகை கொண்டு செல்லலாம் என அறிவிப்புச் செய்து விட்டு கையில், காதில், கழுத்தில் இருப்பவற்றையெல்லாம் பிடுங்கிக்கொண்டிருந்தனர் அந்த சுதந்திரவாதிகள்...

 ஒரு சிறுபான்மையினருக்காக குரல் கொடுப்போர் தம்மையண்டியிருந்த வேறொரு சிறுபான்மையினரை வேரறுப்பதென்பது  எவ் வகையிலான நியாயம் எனும் வினா மட்டும் எனக்குள் தொக்கிக் கிடந்தது இரகஸியமாய் !




                            ******************************
                            *  எங்கள் வீட்டின் பின்புறம் *
                            ******************************
நான் சோதிக்கப்பட்ட போது என் கையிலிருந்த தங்க வளையல்களும், சல்வாருக்குள் மறைந்து கிடந்த தங்கச் சங்கிலியும் பென்ரனும்   இரக்கமின்றி கழற்றியெடுக்கப்பட்டது........மனமோ விறைத்த நிலையில் எதையோ இழந்த நிலை.

அந்த ஆயுதக்கரங்கள் முன்னிலையில் நாங்கள் வலுவற்றவர்கள்...எங்களால் அவர்கள் மீது சபிக்கத்தான் முடிந்தது...இறைவனிடம் எங்கள் மனக்கவலையை ஒப்படைத்தவர்களாய் நாங்கள் கைகாட்டிய பாதையில் பயணிக்கத் தொடங்கினோம்..

தண்ணீர் கேட்டுத் துடித்த மூதாதையருக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கப்பட்டது.. இளைஞர்கள் தாக்கப்பட்டனர். வயதானவர்கள் கேலி வார்த்தைகளால் இம்சிக்கப்பட்டனர். ஒரே மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களின் பண்பாட்டுச் சிதறல்களை அன்றுதான் நான் கண்முன் கண்டேன். சிலரின்   அலட்சியங்களால் அவர்களின் இலட்சியங்களின் கனம் குறைந்து கொண்டிருந்தது எம்மவர்கள் முன்னிலையில். 

எம்மை மனோகராத் தியேட்டரில் 2 நாட்கள் தங்க வைத்தனர். பசியும் நுளம்புக்கடியும் எங்கள் அன்றைய பொழுதைப் பேரம் பேச நண்பர்கள் இரக்கத்தில் கொண்டு வந்து தந்த பாண் துண்டுகள் சோர்வைக் கொஞ்சம் போக்க  தயாரானோம் அகதி வாழ்வுக்குள் நுழைய !

அன்று அந்த இருளான வாழ்க்கைக்குக் காரணம் நாங்கள் முஸ்லிம்களாய் பிறந்தமையே! தவறு சிலர் செய்திருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு சமூகத்தின் பாரம்பரீயத்தையே உயிரறுப்பது ஆகாத, தண்டனைக்குரிய, கண்டிக்கத்தக்க செயலே !

இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வாகனங்களில் நாம் நிறைத்து  ஏற்றப்பட்டு கேரதீவு கடலருகே இறக்கப்பட்டோம். பலர் தம் உறவுகளைப் பிரிந்தார்கள். கேரதீவிலிருந்து "பரிசில்களில்" ஏற்றப்பட்டோம். சிலர் பழக்கமற்ற தன்மையால் கடலில் வீழ்ந்தார்கள். சிலரோ தாம் கொண்டு வந்த உடுப்பு பொட்டலங்களை கடலில் தவறுதலாக வீழ்த்தினார்கள். யாரை யார் ஆறுதல்படுத்துவது. 

                               *********************************
                               * எமது வீட்டு  அறையொன்று  *
                               *********************************

எங்கள் பயணம் அக்கரையை அடைந்த போது வாகானங்கள் பயணிக்க முடியாத காடுகள் தென்பட்டன. சேறும், சகதியும், முட்களும், கற்களும் எமைச் சூழ்ந்திருக்க ஈர் தினங்கள் கால்நடைகளாகப் பயணித்தோம். வயதானவர்களை அவர்கள் ஆண் மக்கள்கள் தோளில் சுமந்து சென்ற காட்சிகள் கண்ணுக்குள் இரும்பைக் காய்ச்சியூற்றின. கர்ப்பிணிகளும், சிறுவர்களும், ஊனமடைந்தவர்களும் பயணிக்கமுடியாத அந்த அந்தரிப்பு நிலை  பார்ப்பவர் நெஞ்சக்குழியில் கண்ணீரைத் தேக்கக்கூடியவை. 

இவ்வாறாகப் பயணித்த ஐந்து நாட் பயணத்தின் முடிவில் வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் எம்மை அரவணைத்தது. கொடுமையான பசியின் இரைச்சலுக்குத் தீனியாக கிடைத்த பாணும் சோறும் பருப்பும் கரட் கறியும் எமக்கு வழங்கப்பட்ட அமிர்தங்கள் அன்றைய நிலையில் !

                        ***********************************
                        *    எங்கள் வீட்டின் நடுக்கூடம்     *
                        ***********************************

எம் வருகையறிந்த அநுராதபுரத்தில் வசித்து வந்த என் மாமா, சாச்சி குடும்பத்தினரின் ஆதரவுக்குள் நாம் ஒன்றிக்கொண்டோம். எம் உடமைகளைப் பறித்தெடுத்தவர்களால் எமது கல்வியறிவைச் சுரண்ட முடியவில்லை. எமது இன்றைய வாழ்க்கை அத்தியாயத்தின் தொடக்கவுரையைப் பதிவு செய்த பெருமை நாம் கற்ற கல்விக்கே சேரும் !

இரண்டு தசாப்தம் கழிந்து விட்ட நிலையில் புதிய நேசங்கள், புதிய ஊர், புதிய வாழ்க்கை  என சுழலும் யதார்த்தங்களின் நிழலில் நாம் ஒதுங்கத் தொடங்கிவிட்டோம். 

                        ************************************
                         *   சமையலறையின் ஓர் பகுதி  *
                        ************************************

இருந்தபோதிலும் எம் பாரம்பரிய தேசத்தில் எமக்கான விடியல் எப்போது . என் பிறப்புத் தாயகத்தில் எனக்கேற்ப தாக்கத்தின் வலியைத்தான் பகிர்ந்தேன்.

அப்பாவிகளின் வாழ்வோடு விளையாடி, தமது அற்பத் தேவைகளுக்காகத் தவறிழைக்கும் மனிதர்களை நாம் தண்டிக்கத் தேவையில்லை. படைத்தவன் அவர்களுக்கான கூலியைக் கொடுப்பான். அதனை சரித்திரம் சுமக்கும்.  

 

வன்முறைகள் எமது முகமூடிகளல்ல. ஆனால் எம் சாபம், எம் குடியிருப்புக்களை அங்கறுத்து அகதிகளாக இத்தனை வருடங்களும் மனக்குறைகளுடன்  வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்றுமுண்டு..

இது தனி மனிதக் கதையல்ல.......திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஒரு சமுகத்தின் கதை. கண்ணீர்க்கதை.    அன்று நாம் சிறியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள். இன்றோ காலம் எம்மையும் பேச வைத்து விட்டது.! நிறைய பேசுவோம்.

தமிழ் எங்கள் தாய்மொழி. கறை படிந்த அந்த இறந்த காலம், நெஞ்சுக்குள்ளின்னும் வலிக்கத்தான் செய்கின்றது. நாங்கள் மரணிக்கும் வரை, அந்த வலியிருக்குமோ!

இவை தொடர்பாக கண்டெடுத்த யூரியூப் வீடியோ பதிவுகளையும் சற்று அழுத்திப் பாருங்கள்..

இது யாழ்ப்பாணத்திலுள்ள மஸ்ஜிதுகள் பற்றிய பார்வை......

மீண்டு வந்த நாட்கள்


கவிஞர்  வதிரி சி ரவீந்திரன் அவர்களின்  முதலாவது கவிதைத் தொகுதியான "மீண்டு வந்த நாட்கள்" கவிதைத் தொகுதி தொடர்பான எனது பார்வையிது..............!

என் முகநூலில் ஏற்கனவே இடப்பட்டிருந்த இக் கட்டுரையை இன்று இணைய வலைப்பூவில் பதிவு செய்கின்றேன் மகிழ்வுடன்............


இலக்கியவுலகில் தனக்கென  தனி முத்திரை பதித்தவர்களுள், புதியவர்களை ஆர்வத்துடன் வரவேற்பவர்கள் ஒரு சிலரே...! அவர்களுள் இவரும் ஒருவர்.!


"மீண்டு வந்த நாட்கள்"

தன் தாய் மண்ணின் காலடியில் வாஞ்சையோடு வீழ்ந்து கிடக்கத் துடிக்கும் துடிப்பே முகப்பட்டையாக முகங்காட்ட, 80  பக்கங்களுடன் கனமான கவிதைகளை ஏந்திக்கொண்டிருக்கும் காத்திரமான கவிதைத் தொகுதியான இதனை அவர் தன் பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்கின்றார்.

தெனியான் அவர்கள் தன் அணிந்துரையில் குறிப்பிட்டவாறு இக் கவிதைத்தொகுதி ஈழத்துக் கவிதை இலக்கியத்தில் இவர் பெயர் பொதித்து , அவரைத் தொடர்ந்தெழுத ஊக்குவிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தலைப்பைக் கண்ணுற்றதும் அனைத்துக் கவிதைகளிலும் யுத்த வாடை வீசும் எனும் எண்ண வார்ப்புடனேயே இதழ்களைப் புரட்டத் தொடங்கினேன்...

ஆனால் பல கருப்பொருட்களும் அவற்றினை அடையாளப்படுத்தும் தலைப்புக்களுமாக கவிதைகள் சிதறிக் கிடக்கின்றன. இப் பரிமாண விசாலிப்பு கவிதைத் தொகுதியின் சிறப்பாகி எம் மனதையும் நிறைத்து நிற்கின்றது........

ஏழ்மை, சாதியொழிப்பு, பொய்மை, உறவுகள், ஏக்கங்கள் , எதிர்பார்ப்புக்கள், யுத்தம் என நீளும் உணர்ச்சிச் சிதறல்கள் அழகான தமிழ்க் கட்டுக்குள் அடுக்கப்பட்டு, யாவரும் புரிந்து கொள்ளும் விதமாக பகிரப்பட்டுள்ளன. அவ்வவ்போது வார்த்தைகளில் யாழ் மண்ணின் வாசமும் கலந்து வருவது கூட சிறப்பே!

தினபதி, யாதும், வீரகேசரி, மல்லிகை, தினக்குரல்,ஞானம்,ஐீவநதி, நீங்களும் எழுதலாம், பொறிகள், தினகரன், அக்னி என்பவற்றில் வெளிவந்த இவரது கவிதைகள் "மீண்டு வந்த நாட்கள்" கவித்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவரது முப்பத்தெட்டு வருட புதுக்கவியாக்கத்தின் ஆளுமைச் செழுமையை பறைசாற்றும் விதமாக முப்பத்தொன்பது கவிதைகளும், பத்தொன்பது துளிக்கவிதைகளும், ஐந்து மெல்லிசைப்பாடல்களும் இக் கவித்தொகுப்பில் உட்பதிக்கப்பட்டு நம்முள் அழகாய், அர்த்தத்தோடு சிரிக்கின்றன...


யுத்தமானது நிமிடங்களை யுகங்களாக மாற்றக்கூடியது. ஒவ்வொருவரினதும் வாழ்வியல் அனுபவங்களை , கவிஞர்களும் தம் பேனா முனைக்குள் ஏந்தும் போது முரண்பாடு காணாத கருத்தியல்கள் ஒத்துப்போய் இலக்கியத்தில் உயிர்ப்புத்தன்மையை தக்க வைக்கின்றது.


தேசம் தொலைத்து நேசம் துறந்து செல்லும் ஆயிரமாயிரம் இதயங்களைச் சுமந்தவாறே மனப்புகையைக் கக்கிச் செல்லும் "அந்த ரயில் போகிறது" எனும் தொடக்க கவிதையே என் நெஞ்சை நிறைத்து நிற்கின்றது..

ஒவ்வொருவரும் தன் பிறப்பிடம் விரட்டப்படும் போது அவிழ்க்கப்படாத சோகங்களும், நிறைவேற்றப்பட முடியாத எதிர்பார்ப்புக்களும் ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றன..அவ்வாறான மனத்திரைக்குள் மௌனித்துக் கிடக்கும் ஊமைக்காயங்களை "மனத்திரைக்குள்" உணர்த்துகின்றது..

சேரியின் சகதி வாழ்வை "பாதை" யும், "முற்றத்து மல்லிகை" யின் அழகில் கிறங்கிக் கிடக்கும் உவமைச் செழுமையும், அடிமைத்தனத்தை அறுத்தெறியும் முனைப்புடன் களமிறங்கிய நயினாரை "புதிய கதை பிறக்கிறது" கவிதையிலும் , "போலிகளை இங்கு தேடுது பார்" கவிதையில் வேஷமிடும் மனிதர்களின் முகமூடிகளையும் கவிஞர் நமக்கு அழகாகத் தொட்டுக் காட்டுகின்றார்.

ஒவ்வொரு ஜீவனின் உற்பத்தியில் தாய்மைப் பற்றோடு மடி தரும் பூமியே பிறப்பிடமாகும். ஷெல்லடி உறிஞ்சிய ஊர் வனப்பையும், சிதைவையும் "சாவு வந்ததே "கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது."எலும்புக்கூடாய் செத்துக்கிடக்கும் சந்தை" எனும் வரிகள் முழுச் சிதைவின் மொத்தவுருவாய் நம்முன் வீழ்ந்து கிடக்கின்றது..

அவ்வவ்போது மனதுக்குள் ஒத்திகை பார்க்கப்படும் உள்ளத்தாசைகளை நிறைவு செய்ய காத்திருக்கும் எதிர்பார்ப்பு  "வள்ளம் வர வேண்டும் " எனும் கவிதையிலும், "முளையிலே கிள்ளல்" மூலம் நாளைய வரலாறு நசுக்கப்பட்ட துயரத்தையும் கவிஞர் நம் முன்னால் யதார்த்தம் சிதையாமல் நிலைநிறுத்துகின்றார்.

"இயல்பு நிலை", "கையடக்க தொலைபேசி", "உள்ளக்குமுறல்" , "புரியாமையும் புரியும்", "நயந்துரை", எனது ஆல்பம்" இக்கவிதைகள் ஒவ்வொன்றும் புலப்படுத்தும் உணர்வுகள் மனதை இறுக்கிக் கௌவிப்பிடித்து, கவிஞரின் சொல்லாடல், வரி வார்ப்பின் அழகு என்பவற்றை நமக்குள் உணர்த்தி நிற்கின்றது.

புலப்பெயர்வென்பது மறுக்கமுடியாத தேவையாகி விட்ட இன்றைய காலப் பொழுதில், ஒவ்வொருவரினதும் அந்தரிப்புக்களை "புலம் பெயர்ந்தவனின் கடிதம்" வாசித்துச் சொல்கின்றது..

இவ்வாறு இங்கு பதிவாகியுள்ள ஒவ்வொரு கவிதைகளும்  கவிஞரின் கவித்துவ செழுமையைப் பறை சாட்டிக் கொண்டிருக்கின்றதென்றால் மிகையில்லை.

மெல்லிசைப்பாடல்களின் வரிகளோ சங்கீத சந்தத்துடன் இசையேதுமின்றி நம் செவிக்குள் இனிய பாடலை நுழைத்துத் தரும் பிரமிப்போடு நம்முள் கரைந்து கிடக்கின்றன.

இக் கவிதைத் தொகுப்பின் ஈற்றுப்பக்கங்களில் "வதிரி ரவி நேச நினைவுகள்" எனும் தலைப்பில் அவரின் கலையுலகோடு சங்கமித்திருந்த கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் நாற்பது வருட கால இலக்கிய சில நினைவுகளை மீட்டுகின்றார்....வதிரி சேர் அவர்கள் கவிஞராக, எழுத்தாளராக மட்டுமல்ல நல்ல நடிகராக, விளையாட்டு வீரராக, நகைச்சுவையாளராக  வகித்த வகிபாகங்களையும் நாமறியச் செய்கின்றார்.........

விவாக பதிவாளராக தொழிலாற்றும் அவரின் மறுபுறத்தில் கலைகளின் விளைநிலம் பெரிஞ்செல்வாகி அவர் பெயர், புகழை நாற்றிசையிலும் பரப்பிக்கொண்டிருக்கின்றது.

வதிரி சேரின் எண்ண வார்ப்புக்கள் எக்காலமும் பொருந்திக் கிடப்பதே அவரது இந்தக் கவித்துவத்தின் வெற்றியாக நான் கருதுகின்றேன்.

"மீண்டு வந்த நாட்கள்" ........!
நாம் மெச்சுகின்ற நாட்கள் !!

அவரது முதல் தொகுப்பே நம் மனதில் மானசிக நிறைவைத் தந்து நிற்கின்றது வாசிப்பின் இறுதியில்..!

இன்னும் அவர் பல தொகுதிகள் வெளியிட வாழ்த்துகின்றேன்....

அவரின் கையெழுத்துடன் கூடிய (06.08.2011) அவரது கவித்தொகுப்பை எனக்கும் அனுப்பி வைத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்...................





- Jancy Caffoor -




தவிக்கும் மனசு



"இந்த அநியாயத்த கேட்க ஆருமில்லையா"

காற்றோடும் உரசும்  தாயின் அலறலும், வார்த்தைகளில் "இடி" யை இணைத்துக் கொண்ட தந்தையின் வீரமும் நெஞ்சத்தினை பிறாண்டவே கண்களை இறுக்க மூடுகின்றேன். நான் இவ்வுலகத்தில் கண்ட மிக மோசமான மிருகம் அவர்தான். என் சின்ன வயதில் முகிழ்த்த கனவையெல்லாம் அறுத்தெறிந்த வீரர். என் பெற்றோர் இருவரும் குணங்களால் முரண்படும் ஈர் துருவம். ஒருவர் கூறுவதை மற்றவர் குறை, குற்றம் காணும் மானசீக நோயாளிகள். இவர்கள் அடிக்கடி தேவையில்லாத விடயத்திற்கெல்லாம் சண்டை பிடிக்கும் போது நானோ மன சறுந்தவளாய் மௌனித்து என் அறைக் கதவைத் தாழித்து விக்கலோடு கரைந்து விடுவேன். இது என் அன்றாட நிகழ்வு 

இன்றும் சண்டைதான் பிடிக்கின்றார்கள். மௌனித்துக் கிடப்பதைத் தவிர வேறெதும் தெரியவில்லை.

தந்தையின் பாசத்துக்காய் ஏங்கிய போராட்டங்களெல்லாம் நாளடைவில் அவர் மீதான வெறுப்பாய், விரக்தியாய் மாறிக் கிடப்பதைக் கூட அறியாதவராய் அவர் ...............

எனக்கும் அப்பாவுக்குமிடையிலான இடைவெளி நீள நீள குடும்பத்திலிருந்து மெது மெதுவாக விலகிக் கொள்ளும் பிரமை.......

"சந்தோஷம் எப்படி இருக்கும்"

உணர்வுபூர்வமாக விடை தெரியாத வினாவுக்குள் என் மனம் சிக்குண்டு பல நாட்கள். சந்தோஷங்களை வெளிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றக் குடும்பத்தினரைக் காணும் போதெல்லாம் நெஞ்சவெளியின் பசுமையை பொறாமை மயானமாக்கிக் கொண்டிருந்தது..

தலை நரம்புகள் விண்ணென வலிக்க, மனசின் வலி கண்ணீராய் கரைந்து கன்னம் நனைத்துக் கொண்டிருந்தது.

எத்தனை நாட்கள் தான் இந்த நரக வேதனை.............

நினைவு தெரிந்த காலமுதல் இந்தத் தாய் படும் அவஸ்தையும், கண்ணீரும், புலம்பலும் முடிவுறாத தொடர்கதைகள்.................

என் வாலிப வோரங்களில் வந்த காதல்களில் சுருளாமல் தப்பித்துக் கொண்ட வீரத்தனம் இந்த வில்லங்கத்திற்காகத்தானா...........

கண்களை மூடுகின்றேன்...............மீண்டும் கோரங்களின் அரங்கேற்றம் மனக் கண்ணில் !

"தாயின் தலைமுடிச் சிதறலை  தந்தையின் கரங்கள் மூர்க்கத்தனமாகப் பற்றிப் பிடித்து சுவரில் மோதி சிதறிய ரத்தத்துளிகளால் அவர் விரல்களே சிவக்க"

"ஐயோ.......விடுங்கப்பா..........அம்மா பாவம் "

தடுக்க முயன்ற என்னிடம் அவர் ஆத்திரம் திரும்ப, அன்று நானும் உடல் புண்ணாகி காயங்களுடன் அம்மாவுக்கருகில் குற்றுயிராகிக் கிடந்தேன்.....

கதறல் பூச்சியமான நிலையில் இப்பொழுது நாங்களும் ஊமையாகி மரத்துப் போனோம்...

ஒவ்வொரு அழிவிலும் தான் புது விடியல் உருவாக வேண்டும்..அந்த விடியலின் குளிர்ச்சி தந்தையின் மரணத்திலா?

ஆனால் அதற்கிடையில் என் இளமை மனசு கரைந்து விடும். இருந்தும் நானும் முடிவு தெரிந்த பயணத்திற்காக பக்குவப்பட வேண்டியதாயிற்று!

தான் விடுகின்ற தவறுகளுக்கெல்லாம் எம்மீது காரணம் தேடும் இந்தத் தந்தை என் பாவப்பட்ட வாழ்வின் சேமிப்பு............!

மனம் அடிக்கடி புலம்பத் தொடங்கியது. எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. தனிமையைத் தவிர !

தந்தையின் முழக்கமும், அதனைத் தொடர்ந்து தன் புலம்பலை என்னிடம் கொட்டித் தீர்க்கும் தாயும் என் வாழ்வின் போக்கினை மாற்றி, மனசை வெறுமைப்படுத்தி விட்டனர். பிடிப்பற்ற வாழ்க்கை. மரணம் அண்டும் வரை வாழத்தான் வேண்டும்.........

பெற்றவர்களை உதற முடியவில்லை. என்னையிந்த மாயத்திலிருந்து மீட்கவும் யாருக்கும் துணிவுமில்லை. இறை பிரார்த்தனை மட்டுமே ஆறுதலாய் தோழமையோடு ஒட்டிக் கொள்ள அந்நியப்பட்டுப் போனேன் நிம்மதியான வாழ்விலிருந்து........

"உம்மா"

தந்தையின் கொடுமையால் கதறிக் கொண்டிருந்த தாயின் பார்வை என்மீது விழுந்தது..

"முடியலம்மா...................ரொம்ப தலைவலிக்குது.....நெஞ்சு கூட நோகுற மாதிரி இருக்கு "

வார்த்தைகளை நான் சிரமப்பட்டு கோர்த்த போது, தாய் நடுங்கிப் போய் தன் சோகத்திலிருந்து கழன்று வெளியே வந்தார்.

"ஏன்டீ................என்னை நீயும் கொடுமைப்படுத்துற.......வாடீ டாக்டர்கிட்ட போகலாம்"

தாய்  வற்புறுத்தி அன்றைய தினமே என்னை டாக்டரிடம் சேர்க்க, வைத்திய பரிசோதனை முடிவு என் வாழ்வின் விதிக்கு முன்னுரையாய் அமைந்தது......

"டாக்டர் .......என் புள்ளக்கு.........................."

தாய் தன் வார்த்தைகளை முடிக்காமல் விம்மினார்....அவருக்குள்ள ஒரே ஆறுதல் நான்தானே!

அழுது விடுவேனென்று அடம்பிடிக்கும் குரலில் தாய் கேட்கும் போது டாக்டர் மெதுவாக சொல்லுவது எனக்கும் புரிகிறது................

"ஓ........ப்ளட் கான்சரா..............ரொம்ப நோய் தீவிரமாகிட்டுதோ.........இன்னும் கொஞ்ச நாள்ல போய்ச் சேர்ந்திடுவேனோ "

டாக்டர் சொல்லச் சொல்ல உம்மா அழும் சத்தம் கேட்கிறது.

உம்மா அழுகின்றார்.......நானோ சிரிக்கின்றேன்.........

"இனி வாப்பாட  கொடுமை இல்ல.....உம்மாட கதறலும் புலம்பலும் நெஞ்சுக்குள்ள இறங்கப் போவதில்லை...........சமூகத்தோட விமர்சனங்களும் நெருங்கப் போவதில்லை "

எனக்கென்று நாளை யாருமே இல்லாத  இந்த வாழ்வில் என் தாயின் கண்ணோட போய்ச் சேர்ந்தா ஒரு சொட்டுக் கண்ணீராவது என் இத்தனை நாள் வாழ்வுக்காக கிடைக்கும்.

விழிகளை மீள இறுக்கிப் பொத்துகின்றேன்.............சூடான கண்ணீர் என் கன்ன வரம்பிலிருந்து மெதுவாக கசிகிறது..........

இது ஆனந்தக் கண்ணீரல்ல......அவலக்கண்ணீர்.............

என் இழப்பால் தாய்க்கேற்படும் அவலத்தை நினைந்து திர்ந்த வலிக்கண்ணீர்...

கண்களைத் திறக்க மனமின்றி. மீண்டும் மூடிக் கொள்கின்றேன் விரக்தியாய்!

கதீஜா முராத்

என் சகோதரி மகள்
---------------------------
இடம் - கட்டார் தோஹா







































2012/07/27

கவிதை எழுதலாமே

இது கவிதை எழுத ஆர்வப்படுவோர் மட்டுமே வாசிக்க வேண்டிய பதிவு.கவிஞர் அல்ல. ஏனெனில் என்னை விட கவிஞர்களுக்கு இன்னும் நன்றாகத் தெரியும். கவித்துறையில் நான் சிறு கிள்ளையே. என் அனுபவங்களை வைத்து பிண்ணப்பட்ட பதிவிது.

கவிதை என்பது உணர்வுகளின் வெளிப்பாட்டு வடிவம். அது அனுபவங்களை நாம் நேரடியாக உள்வாங்குவதாலோ அல்லது பிறரின் அனுபவத் தெறிப்புக்களால் நமக்குள் உள்வாங்கப்பட்ட படிப்பினையாகவோ இருக்கலாம்.

இன்று முகநூலில் உலா வரும் புதுவிதமான கவிதைகளின் சிறப்பு பிரமிக்கத்தக்கதாக உள்ளது. அவை சொந்தக் கவிதையாகட்டும் அல்லது பிறரின் கவிதைகளை கொப்பி பேஸ்ட் பண்ணியதாக இருக்கட்டும். அவை யாவும் மனித உணர்வுகளின் பிரதிபலிப்புக்களே!

கவிதை எழுதுவதென்பது சிறப்பானதோர் ஆற்றல். ஆவலால் தூண்டப்படக்கூடிய ஆற்றல். இந்த ஆற்றல், ஆவல் எல்லோருக்கும் இயல்பாகவே உள்ளது. ஆனால் அவர்கள் அதற்கு முயற்சிப்பதோ பயிற்சியெடுப்பதோ இல்லை. ஒருவரின் ஆக்கங்களை தன் ஆக்கம் போல் வெளியிடும் இலக்கிய திருட்டைச்  செய்வதை விட, தனது உணர்வுகளை தானே கிறுக்கி கிறுக்கல்களாக வெளியிடுவது எவ்வளவோ மேல்.
-----------------------------------------------------------------------------------------
கவிதையெழுதும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தல் வேண்டும்
-----------------------------------------------------------------------------------------
1. நிறைய இலக்கியப் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அப்பொழுது நம்மால் பலவிதமான நிறைய சொற்களை அறிய முடியும். மொழிச் செம்மைக்கு இது உதவும். ஏனெனில் கவிதையின் உயிர்ப்போட்டத்திற்கு மொழி அவசியமாகின்றது.

2. எழுதும் மனதை வேறு சிந்தனைகள் குழப்பாமல் அமைதிப்படுத்த வேண்டும்

3.எழுதப் போகும் கருப்பொருள் எது என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அல்லது ஒரு படம் ஒன்றைத் தெரிவு செய்து அதற்கேற்ப எண்ணங்களை ஓட விட்டு எழுத முயற்சிக்கலாம்.

4.அந்தக் கருப்பொருளை மனதிலிறுத்தி அதற்கு வரக்கூடிய கவிதைகளை சந்தத்துடன் கவிதைப்பாணியில் நமக்குள் நாமே சொல்லிப் பார்க்க வேண்டும்.

5.வார்த்தைகள் வெளிப்பட வெளிப்பட அவ் வார்த்தைகளை ஒரு தாளில் குறித்துக் கொள்ள வேண்டும்.

6. மீண்டும் எழுதியவற்றை வாசித்துப் பார்க்கும் போது அதனைத் திருத்தம் செய்யத் தோன்றும். அவ்வாறு நினைப்பவற்றை திருத்தம் செய்யலாம். இவ்வாறு பல திருத்தங்களின் பின்னர் முழுமையான கவிதையொன்று பிறக்கின்றது.

6. கவிதை எழுதும் போது சில வார்த்தைகளை பிரித்தும், சிலவற்றை சேர்த்தும் எழுதும் போதுதான் கவிதை சிறப்பானதாக மாறுகின்றது

5. கவிதை எழுதும் போது எதுகை, மோனையையும் கவனித்தல் வேண்டும்.

6. கவிதைகளில் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க வெகு சிலருக்கு மட்டுமே புரியக்கூடிய  வார்த்தைகளைப் பயன்படுத்தும் போதே அக் கவிதை எழுதுவோர் பிறரின் கவனிப்புக்குள்ளாகின்றார். கவிதையும் சிறப்படைகின்றது. (உதாரணம் - மௌவல் - மல்லிகை)

7.கவிதை பிறக்க நேரகாலம் சொல்லமுடியாது. எப்பொழுது எழுத வேண்டுமென மனம் நினைக்குதோ, அப்பொழுதே அக் கவிவரிகளை குறித்தல் வேண்டும்.

8. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவற்றை சம்பந்தப்படுத்தி , வார்த்தைகளை கவியில் புகுத்தும் போதுதான் அக் கவிதை பிறரின் பாராட்டைப் பெறுகின்றது

9.பிறரின் கவிதைகளை வாசித்து அனுபவியுங்கள்.  நமக்குள்ளும் அவ்வாறு எழுதவேண்டுமென்ற தாக்கம் ஏற்படும்

10.தொடர்ந்த முயற்சி, பயிற்சி, பாராட்டு, ஊக்கம் காரணமாக நமது கற்பனை ஆழம், சொல் வார்ப்பு என்பவற்றில் முன்னேற்றமும், அழகும் ஏற்பட்டு கவிதை உயிரோட்டமுள்ளதாக மாறும்.

11.தொடர்ந்து ஒரே கருப்பொருளில் எழுதாமல் வித்தியாசமான அன்றாட வாழ்வோடு தொடர்புபடக்கூடிய விடயங்களுடன் பொருந்தக்கூடிய எண்ணங்களை சற்று கற்பனையும் கலந்து பதிவிட வேண்டும்.

12.நாம் கற்பனையில் கிறுக்கிய கிறுக்கல்கள் பிற மனங்களில் நிஜமெனும் மனத் தாக்கத்தை, நெருடலை ஏற்படுத்துமேயானால் நிச்சயம் அக்கவிதை உயிர்ப்புத்தன்மை வாய்ந்ததாகும்.

12.நல்ல கவிதையொன்றை எழுதி பிறர் அதனைப் பாராட்டும் போது கிடைக்கும் மனதிருப்தியை வார்த்தைகளால் அளவிடமுடியாது.

ஒவ்வொருவர் பாணியும் வித்தியாசமானது. ஒருவரைப் போல் மற்றவர் எழுத முடியாது. கண்ணதாசனும், வைரமுத்துவும், வாலியும், அப்துர் ரஹ்மானும் எழுதும் பாணி வேறுபடக்கூடியது. நாம் நிச்சயமாக அவர்களைப் போல் வரமுடியாது. 

இருந்தும்..........

நம் ஆற்றலை நாம் ரசிக்கலாம்!
வளர்க்கலாம்!
நமக்கென ஒரு பாணியைக் கடைப்பிடிக்கலாம்!
கர்வமில்லாத நல்ல ரசிகனால் நல்ல கவிஞனாக மாறலாம்!

கவிஞராக மாற வாழ்த்துக்கள்.

பாட்டி எங்கே போறியள்



மதியம் 12 மணி...........

சுட்டெரிக்கும் வெயில் அன்றேனோ எட்டிப் பார்க்கவில்லை. லேசான சிணுங்கலுடன் கூடிய மழைச் சிவிறல்களில் வவுனியா பஸ் நிலையமும் நனையத் தொடங்கியது. என் வகுப்பு முடிந்ததும் அவசர அவசர ஆட்டோ பிடித்து ...........................பஸ்ஸூக்குள்  தாவி ஏறினேன்......ஓரிரு இருக்கைகளே என்னைப் பார்த்து கையசைக்க யன்னலோரம் அமர்ந்து கொண்டேன். மழைப் புழுக்கம் தேகத்தை வேறு வறுத்திக் கொண்டிருந்தது. பின்சீட்டில் பாட்டியொருவர் அமர்ந்திருந்தார். பெரிய நெற்றி பொட்டும் சிவப்புக்கல் மூக்குத்தியும் அவர் அடையாளங்களாக.............

பாட்டி.......

சூழ்நிலையைச் சமாளிக்கிற அளவுக்கு கொஞ்சம் சிங்களத்தை நுனி நாக்கில வைத்திருந்தார்..

"மணிக்கூட்டு கோபுரம் பக்கத்தில இருக்கிற ஆமி காம்ப் பக்கத்தில இறக்குங்க"

தன் அருகிலிருந்த எல்லோரிடமும் சிங்களத்தில் கூறிக் கொண்டே இருந்தார்..
பஸ்ஸின் பயணப்பாதையில் அவர் கூறும் அந்த இடம் இல்லாததால் எல்லோரும் குழம்பி ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தனர்..ஆனால் பாட்டி விடுவதாக இல்லை. தனது வார்த்தைகளை திருப்பித் திருப்பிச் சொல்லி எல்லோரையும் குழப்பிக் கொண்டிருந்தார். அப் பாட்டிக்கு காது வேறு கேட்காத நிலை.....உரத்து பதில் ​சொல்லுவதால் பஸ்ஸில் இருந்த எல்லோரின் பார்வையும் பாட்டி மீது நிலைப்பட்டுக் கிடந்தது...

" பாட்டி .......நீங்க போக வேண்டிய இடத்தைச் சொல்லுங்கோ"

ஒரு இளைஞன் கேட்டதற்கு தெரியாது என்று தலையாட்டினார்..

"ஏன் அம்மா.......வயசான காலத்தில இப்படி அட்ரஸ் தெரியாம அலைகிறிங்க...காலம் கெட்டுக்கிடக்கு"

அருகிலிருந்த பெரியவர் சற்று சினத்தார்.

அருகிலிருந்த பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் சொன்னார்

" அவ சிங்களம் கதைத்தாலும் கூட தமிழ்தான்........எங்கட ஆட்கள் மூக்குத்தி போட மாட்டார்கள்....நீ அவகிட்ட தமிழில பேசு "

என்னை உசுப்பி விட, நானும் பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். நான் தமிழில் பேசியதைக் கண்டு பாட்டிக்கு சரியான மகிழ்ச்சி.......
இறங்க வேண்டிய இடத்தின் அடையாளம் சொன்னார்...அவரை நான் தைரியப்படுத்தினேன்.

"பிள்ள......இறங்க வேண்டிய இறக்கம் வந்தால் சொல்லும் என்ன"

பாட்டியின் வேண்டுகோளை நான் ஏற்றுக்கொண்டதில் அவர் மகிழ்ச்சி இரட்டிப்பானது...

அவருக்கு பக்கத்தில இருந்த எனது பாடசாலை மாணவன் அவர் கூறும் இடத்தை ஊகித்தவனாக,

"பாட்டி பயப்படாதிங்க...அநுராதபுரத்தில இறங்கினதும் நான் ஆட்டோ பிடிச்சு தாரேன்.............நீங்க சொல்ற இடத்துக்கு போகலாம்"

இப்பொழுது பாட்டி மனதில் நிம்மதி ............................அது சொற்ப நேரமே ...........!
மீண்டும் புறுபுறுக்கத் தொடங்கினார்.

"உது என்ன இடம் பிள்ள"

பஸ் தரிப்பையெல்லாம் காணும் போது என் உயிரை வாங்கத் தொடங்கினா.....நானும் அவர் மேல் அனுதாபப்பட்டு இடத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே வந்தேன்.......

" ஈரப்பெரியகுளம்...............பூனாவ..........மதவாச்சி"

ஐயோ......ஏன் பஸ் இந்த றோட்டால போவுது?  ஏன் இவ்வளவு நேரம் எடுக்குது...

பாட்டியின் புறுபுறுப்பு கேட்டு பலர் எரிச்சலுடன் முகம் சுளிக்க, சிலர் அனுதாபத்துக்குள் நனைத்தனர்..

மதவாச்சி.......

சற்று பெரிய ஊர்..பாட்டி அத்தரிப்பிடத்தில அவசரமாக இறங்கப் போக, நாங்கள் வலுக்கட்டாயமாக அவரை பஸ் இருக்கையில் உட்கார வைத்தோம்..

வஹமல்கொல்லாவ....இக்கிரிகொல்லாவ......ரம்பாவ....சாலியபுர..அநுராதபுரம்

ஊர்கள் கடந்தன. அடுத்து அநுராதபுரம் பழைய பஸ் நிலையம்...............

பஸ் கன்ரக்டரின் கூவலைத் தொடர்ந்து பாட்டி இறங்கப் போனார்....

"இல்ல பாட்டி.....இது தூரம்........என்னோட  புதிய நகரத்தில இறங்குங்கோ"

மீண்டும் நம்பிக்கையூட்டினேன்...நான் சொன்ன பேச்சு அவர் காதில் விழவில்லை...என்னிடம் விடை பெற்றார்...நானும் பொறுமையிழந்து மௌனித்தேன்...

பாட்டியின் செயலால் பஸ்ஸிலிருந்த அனைவர் கவனமும் பாட்டியின் மீதுதான்...

"இந்த வயசான காலத்தில உது தேவையோ"

இன்னுமொருவர் முணுமுணுத்தார்...பாட்டி தன்னிருக்கையை விட்டெழுந்து சற்று முன்னே நடந்தவர் திடீரென இன்னுமொரு இருக்கையிலிருந்தவரிடம்
சிங்களத்தில் ,

'உதுல இறங்கினா எனக்குப் போகலாம் தானே"

பாட்டி.........தன் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்கி ஆளுக்காள் அபிப்பிராயம் கேட்டுக் கொண்டிருந்தா.....வயசானாலே பிடிவாதமும் சந்தேகமும் தான்................... என்  மனது அலுத்தது..

அம் மனிதர் பாட்டியை உற்றுப் பார்த்தவாறு தன் புருவங்களைச் சற்று உயர்த்தினார்.......

" அக்கா...நீங்க நொச்சியாகம யில இருந்தனீங்கள் தானே....மாணிக்கத்திட பெண்சாதியே நீங்க.......உங்கட வீட்டுக்கு ஒருக்கா நான் வந்திருக்கிறன்...நான் செல்வராசன்..........மறந்திட்டியள் போல...மாணிக்கம் அண்ணா சுகமே"

பாட்டி சற்று நேரம் யோசிக்கத் தொடங்கும் போதே பஸ் மீண்டும் தன் இலக்கு நோக்கி புறப்படத் தொடங்கியது..

"ஓமடா......செல்வா.........ஞாபகம் வருது...........பக்கத்தில இருக்கிறவ உன்ர மனிசியே........பார்த்து கனநாளாகுது உன்ன"

அவர்கள் பேச்சு தொடர்ந்தது....

"அக்கா.......கணேசன்ர வீட்டுக்கே போறியள்..........அவன் திசாவையில இருக்கிறான்...அவன்ர பக்கத்து வீட்டிலதான் நாங்க இருக்கிறோம்... எங்களோட வாங்கோ"

அவர்களின் உறுதிமொழியை பாட்டிக் ஏற்றுக் கொண்டே ஆகணும். உரிய இறக்கம் வந்ததும் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்களுடன் பாட்டி இறங்கினார்....

"வயதான காலத்தில் தெரியாத இடத்திற்கு பயணிப்பது எவ்வளவு பிழையான விடயம்" எனக்கு நானே கூறிக் கொண்டேன்...!




நண்பர்


ஒக்டோபர் 01 ....... 

என் வாழ்வில் மறக்க முடியாத நாள். அன்றுதான் நான் ஆசிரியர்த் தொழிலுக்குள் உள்வாங்கப்பட்ட நாள். பல வருடங்களின் பின்னர் 2010 அதே தினத்தில் தான் முகநூல் பக்கத்துக்குள்ளும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன் . அந்த நுழைவு கூட எதிர்பாராமல் கிடைத்தவொன்று !

முகநூலின் ஏற்ற இறக்கங்கள், சாதக பாதகங்கள் எதுவுமே அறிந்திராத, அனுபவமில்லாத நுழைவு என்பதால் இணைக்கப்பட்ட நண்பர்கள் மானசீகமாக என்னைத் தொட்டார்கள். அவர்களின் பதிவுகளை ஆச்சரியத்தோடு விழி பருகினேன்.

முகநூல் புதிய அனுபவம். அழகான பயணம். இலக்கிய வார்ப்புக்களுக்கு தாராளமாய் மடி தரும் களம். பல முகங்கள் நட்பு பட்டியலை மானசீகமாய் நிறைத்து நிற்க, என் பதிவுகளுக்கான அவர்களின் எண்ணப்பரிமாற்றங்கள் உற்சாகமாக என்னுள் பரவி மனதை இதப்படுத்தியது! ரசித்தேன் என் பயணப்பாதையில் கிடந்த பசுமைகளை !

இருந்தும் மறுபுறம்................. 

மிக அவதானமாகவே ஒவ்வொரு நகர்வுகளையும் பதிக்க வேண்டுமென்ற எச்சரிக்கையுணர்வு என் பயணத்திற்கு வழிகாட்டியாய் நின்றது. எல்லோரும் நண்பர்களல்லர். நண்பர்கள் வடிவில் வம்பர்களும் உள் நுழையலாம் என்பதற்காக நண்பர்களை மிக அவதானமாகவே தெரிவுசெய்தேன்.

என் பதிவுகளுக்கு விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தாராளமாக வழங்கி ஊக்குவித்த நல்ல நண்பர். வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டுமென்ற நினைப்பில் போராடும் இளைஞர். என்னை விட வயதில் இளையவர். இருந்தும் புற வேறுபாடுகளைக் களைந்தெறிந்து விட்டு தன்னகத்துள் நேசம் நிரப்பி என்னுள் நல்ல நண்பராக முகங்காட்டியவர் துன்பங்களைப் பகிர்ந்தோம். இன்பங்களை ரசித்தோம். பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி அலைந்தோம். மொத்தத்தில் அன்பு தவிர்ந்த வேறெந்த எதிர்பார்ப்புமில்லாத பிணைப்பு எமக்கு சொந்தமானது.

இன்ஷா அல்லாஹ்..................!

என் ஆரம்ப கால நகர்வுகளில் நட்புள்ளங்கள் என் பதிவுகளுக்கு தந்த ஊக்குவிப்புக்கள் தான் இன்றும் என்னை  சிந்தனைக்குள் குவியப்படுத்தி நிறைய எழுத வைத்துள்ளது. என்னாலும் எழுதமுடியும் எனும் நம்பிக்கையை என்னுள் வார்த்து நிற்கின்றது. ...இன்று முகநூலில் எனக்கென்றும் சிறு நட்பு வட்டங்களை உருவாக்க என் எழுத்துப் பிரவேசம் களம் தந்திருப்பதை நான் மறுப்பதற்கில்லை. நன்றியோடு என் நண்பர்களை நினைவுகூறுகின்றேன்

நம் வாழ்வில் நடைபெறும் எந்த முதல் சம்பவங்களும் மறக்கப்பட முடியாதவை. அவை நெஞ்சக்கல்வெட்டில் பதிக்கப்பட்டு நம் ஆயுள் முழுதும் நடமாடக்கூடியவை . அதனை அன்றுணர்ந்ததால் இன்றிந்தப் பதிவும் எனக்குச் சொந்தமாகிக் கிடக்கின்றது.........................

எல்லாம் நேற்று நடந்தது போல நாட்கள் எவ்வளவு விரைவாக நகர்கின்றன. இந்த நகர்வில் எத்தனை அனுபவங்களை உள்வாங்கி எம் நிதர்சன வாழ்வில் பதிக்கின்றோம். பல புதிய நண்பர்களின் சேர்க்கை. பழைய நட்புக்களின் பிரிதல், முரண்பாடுகள், சீண்டல்கள்,  நேசப்பகிர்வுகள், முகநூல் ராஜ்ஜியத்திலும் இவை தாராளமாக இருக்கின்றன. ஏனெனில் நாம் நடமாடிக் கொண்டிருப்பது உயிர்ப்புள்ள உலகம்.







2012/07/26

சாதனை


அன்று  எனது கல்விமாணி பட்டப்படிப்பு வகுப்பிற்கு கலந்து செல்வதற்காக வவுனியா பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தேன்........அநுராதபுரத்திலிருந்து  அந்த பஸ் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன.!

அப்பொழுது ஒருவன் கையில் சில உரித்த தேங்காய் மட்டைகளுடன் பஸ்ஸூக்குள் ஏறினான். எல்லோரும் அவனை வேடிக்கையாகப் பார்ப்பதனைக் கூட அவன் பொருட்படுத்த வில்லை..

"தேங்காய் மட்டை 3 துண்டுகள் பத்து ரூபாய் " என சிங்களத்தில் விற்பனை செய்தவனை பஸ்ஸூக்குள் அமர்ந்திருந்தோர் கேலியாகப் பார்த்தனர்..என் வாழ்க்கையிலேயே பஸ்ஸூக்குள் தேங்காய் மட்டை விற்பனையைக் கண்ட முதல் சம்பவமும் அதுதான் ! என்னிடமும் மட்டையை நீட்டினான். நானோ அவசரமாக வேண்டாமென தலையாட்டினேன்

யாருமே அவனது வார்த்தைகளை பொருட்படுத்தவில்லை..

தனது விற்பனையை முடிவுக்கு கொண்டு வந்தவனாய் எங்கள் எல்லோரையும் பார்த்து சிங்களத்தில் பேசத் தொடங்கினான்.

"ஐயோ......நான் பிபிலையிலிருந்து பல மைல் தொலைவுக்கு வந்துள்ளேன்.......நான் கொண்டு வந்த தேங்காய்மட்டையை யாருமே வாங்கவில்லையே........நான் சுமந்தது வீண்தானோ !"

எனப் புலம்பி சில நிமிடங்கள் கழியவில்லை......

"ஹா ஹா"

உரத்துச் சிரித்தான்...அவனது பைத்தியக்காரச் செயல் எமக்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட, அவனிடமிருந்து நுழைந்த சாராய வாடை அவன் மீது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது

" ஹா ஹா......நான் உங்களைச் சிரிக்க வைக்கவே இதனை விற்பதைப் போல் நடித்தேன்"

என்றவாறு தனது பழைய தோற் பையிலிருந்து நன்கு உலர்ந்த செவ்விளநீர்த் தேங்காய் ஒன்றை வெளியே எடுத்தான் ....

நான் இதனை 5 நிமிடத்தில் பற்களால் உரிக்கப் போகின்றேன்.....யாரால் இவ்வாறு செய்ய முடியும் " சவால் விட்டான்...

ஆனால் பஸ்ஸிலிருப்போர் எதுவும் பேசாமல் அவனது செயல்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்....

அந்த தேங்காயை திடீரென என் இருக்கையில் வைத்து விட்டு பஸ்ஸை ஒரு சுற்று சுற்றினான்.......நானோ பயத்தில் உறைந்து கிடந்தேன்..

சரி சரி ..........யாரும் இல்லையா........நானே உடைக்கின்றேன்.......ஆனால் நீங்கள் தர்மம் செய்ய வேண்டும் "

எனும் கோரிக்கையை பயணிகளிடம் முன்வைத்தான்.

அப்பொழுதும் அங்கே மௌனமே நிலவியது.

என்னிடம் வைத்த தேங்காயைத் திருப்பி எடுத்தவனாக சில நிமிடம் கண்களை மூடி கடவுளைப் பிரார்த்தித்தவாறே, ஆழமாக இரு தடவை மூச்சை உள்ளிழுத்தான். அதே வேகத்தில் பயணிகளின் அம்மௌனத்தை சம்மதமாகக் கருதி  பற்களால் மிக விரைவாகத்  தேங்காய் மட்டையை இழுத்தெடுத்து  சொன்னதைப் போல் உரித்து முடித்தான்.

நாங்களோ அவன் செயலால் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தோம்..உரித்த தேங்காயை என்னிடம் நீட்டி தனக்கு இருபது ரூபாய் தரும்படி கூறினான்... நான் அவன் கூற்றுக்கு இணங்காமல் வேண்டாமென தலையசைத்தேன்.

உண்மையில் அவன் சாதனை பிரமிக்கத்தக்கது. ஆனால் அவன் அந்த சாதனையை வெளிப்படுத்திய விதம், இடம், சந்தர்ப்பம் பொருத்தமற்று இருந்ததால் யாருமே அவன் செயலுக்கு கை தட்டக்கூட இல்லை..........

என் மனம் அதற்குத் துடித்தாலும் கூட, கூட்டத்தின் மௌனத்திற்கு கட்டுப்பட்டு என் கரங்களும் கை தட்ட மனமின்றி அடங்கிக் கிடந்தன......!

அவன் சாதனைக்காக பஸ்ஸில் சேகரித்த ஒரு சில நோட்டுக்களுடன் புன்னகைத்தவாறு  அடுத்த பஸ்ஸை நோக்கி நகர்ந்தான்  தன் திறமையை விற்கும் வியாபாரியாய் !


மயக்கமென்ன



அவன் ......................!

முப்பதைத் தாண்டாத அழகான வாலிபன்........நான் குடியிருக்கும் பகுதியிலேயே அவனும் அறையொன்றையெடுத்து நீண்ட காலமாக தங்கியிருக்கின்றான்..அரச வைத்தியசாலையில் தாதியாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் அரச ஊழியன் அவன்...!

நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஒற்றைப் புன்னகையொன்று மட்டுமே பரிமாறுவோம்..........ஆனால் என்னைப் பொறுத்தவரை அவன் ரொம்ப நல்லவன்....அவனிடமுள்ள பலகீனம் பெண்களுடன் இயல்பாய், சரளமாய் பேசுவான், அவன் நிற்கும் இடங்களில் கலகலப்பு பூத்துக் கிடக்கும்

அவன் அவசர அவசரமாக ஒருத்தியைக் காதலித்து கரம் பிடித்து 2 வயது பெண்பிள்ளையின் தந்தை என்பது மட்டும் எனக்குத் தெரியும்..அவன் மணவாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள் விவாகரத்து வரை நீள மீண்டும் தனிமரமாகி நிற்பதைக் காணும் போது என் மனசுக்கும் சற்றுச் சங்கடம்தான்......

மனம் நன்கு ஒன்றித்துத்தானே காதலிக்கிறார்கள்........ஏன் அந்தக் காதல் சீக்கிரம் அறுகின்றது...............ஆசை கொண்ட மனம் அலுப்பதற்குக் காரணமென்ன ...................யாரைத்தான் குறை சொல்வதோ!

ஆனால் நான் அவனை அடிக்கடி ஒரு பெண்ணுடன் கண்டிருக்கின்றேன்... அவளும் அவனுடன் வேலை செய்பவள் தான் போல்..தாதி சீருடையிலேயே அவனுடன் அவன் இருப்பிடத்திற்கு வருவாள்....

வீட்டுக்கார சகோதரியின் கண்டிப்பான உத்தரவின் பேரில் அவன் அவளை  தன்னறைக்கு அழைத்துச் செல்வதில்லை. வெளியே உட்கார்ந்து பேசுவார்கள். அல்லது இருவரும் உடனே வெளியே சென்று விடுவார்கள்..

அவள் சற்றுக் குண்டான மாநிறமான சின்ன வயசுப் பொண்ணு......அழகிய என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, அவனுடன் ரொம்ப கலகலப்பாகப் பேசுவாள்......

திடீரென ஓர் நாள் அடிக்கடி வந்தவள் காணாமற் போனாள்.  .....அவளுக்கென்னாச்சு...........அவள் யார்.......அவனின் நண்பியா...... காதலியா.....இல்லை வருங்கால மனைவியா...
வீண் ஆராய்ச்சிக்குள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை...

பாவம் தான் அவனும்...சின்ன வயதில் தன் வாழ்க்கைத் துணையை இழந்திருக்கின்றான்......தனக்கொரு வாழ்வை மீண்டும்  அமைக்க நினைப்பதில் என்ன தவறு .............அவனும் வாழத்தானே வேண்டும் !

என் மனமும் அவனுக்காகப் பரிந்து பேசியது...

ஒரு சில மாதங்களின் பின்னர் மீண்டும் ஒரு பெண்ணுடன் அவனைக் கண்டேன்...ஆனால் அவள் முன்பு கண்ட பெண்ணல்லள்..........இவள் சற்று மெல்லியவள்..........அவனுடன் மோட்டர் சைக்கிளில் வரும் போது உரசிக் கொண்டுதான் வருவாள்.......அவள் வயதின் பருவக் கிளர்ச்சி அவனுடன் நெருங்கிப் பழக வைத்துள்ளது.........

இவளும் கூட அவனின்........................

மீண்டும் ஒரு சில வாரங்களின் பின் அவனுடன் முதலில் சுற்றிய பெண் அவனைத் தேடி அவனிருப்பிடத்திற்கு வந்தாள்........முன்பெல்லாம் அவன் அறைக்குள் செல்லாதவள் அன்று நேரே அவனறைக்குள் சென்று அவனுடன் சண்டை போட்டாள்..........

அவனோ எதுவுமே பேசவில்லை.....ஆனால் அவள் கதறல் காற்றின் மௌனத்தினையும் கசக்கிப் பிழிந்தது........அவனது அறைப் பொருட்களை தூக்கியெறிந்தாள்...........சில நிமிட காதல் யுத்தத்தின் பின் அவள் அழுதவாறே வெளியேற அவனும் அவள் பின்னால் ஓடினான்..........

காதல் வளர்த்து கனவுகள் காத்து ஆசையுடன் அவள் எதிர்பார்த்துக் காத்திருக்கையில் அவன் ஏமாற்றி விட்டானா..................

அல்லது புது நண்பியின் வருகையால் அவர்களுக்குள் முரண்பாடு வளர்ந்து பிரிவுக்குள் இருவரும் தள்ளி விடப்பட்டனரா.........

காலத்தின் புதிருக்குள் அவர்கள் வினாவும் விழுந்து கிடக்கின்றது.

நான் அவனைக் காணும் போதெல்லாம் அவளைப் பற்றி கேட்பதேயில்லை...அவர்களது தனி வாழ்வின் ரகஸியங்களாக அவை இருக்கக்கூடும் இன்னும் சில நாட்களில் அவன் இடமாற்றமாகி தன்னூருக்குச் செல்லவுள்ளான்.........

அவன் காதல் சூழ்நிலைக் காதல் போலும்.........வெறுமைப்பட்ட மனதுக்கு அன்பு கிடைத்திருக்கின்றது.... ...அந்த அன்பில் சலிப்பு ஏற்படும் போது ஆளும் மாறுகின்றது..........முரண்பாடுகள் முளைக்கும் போது மனம் வெறுத்து புதிய துணையின் பால் ஈர்க்கப்படுகின்றது......

காதல் என்பது பரிசுத்தமான உணர்வுகளின் சங்கமம் எனும் நிலை மாறி, இப்பொழுதெல்லாம் அங்கு காமத்தின் சேர்க்கையும் கலந்து விடுகின்றது.
காமம் இல்லாத காதல் செல்லாக் காசாகிக் கிடக்கின்றது..

ஓர் ஆண் , பெண்ணாணவள் தன்னை நோக்கி கவரப்படுகின்றாள் எனத் தெரிந்து கொண்டதும் அவனின் மனதிலும் அவளை உள்வாங்கத் தயாராகின்றான்.....அன்பு இவ்வுலகில் மிகப் பெரும் சக்தியாக இருப்பதே அதற்குக் காரணமாகும்..

ஆனால் இது உறுதியானதாக அவளை மட்டுமே துணையாகக் கொள்ளுமளவிற்கு எல்லார் மனங்களும் ஒருமித்து கிடப்பதில்லை.ஆழமான அன்பு , காதல் இருப்பவர்கள் மட்டுமே அந்தக் காதலை திருமணம் வரை நகர்த்த, பெரும்பாலான ஆண்கள் தங்களின் தனிமைக்குள், வெறுமைக்குள் நிரம்பும் காதலி .......திருமணம் எனும் எல்லைக்குள் நகரும் போது.....பின்வாங்கி விடுகின்றார்கள்......இந்த ஆண் மனநிலையை ஒத்த பெண்களும் இருக்கின்றார்கள் என்பதும் கவலைக்குரிய விடயம் தான்...............

முள்ளில் சேலை விழுந்தாலும்
சேலையில் முள் விழுந்தாலும் பாதிப்பு சேலைக்கே!

பெண்ணும் சேலைக்கு ஒத்த மென் மனதால்.!
..அந்த பலகீனம் தான் ஆணுக்கு பலமாகி காதல் உலாவில் வலம் வர வாய்ப்பளிக்கின்றது !

உணர்ச்சிகளை அலை மோத விட்டு புரியாத வயதில் அறியாமல் நிகழும் தவறுகளின் தண்டனை பெரும்பாலும் பெண்ணுக்கே வழங்கப்படுகின்றது... அத்தண்டனையால் அவள் ஆயுட் காலமுழுவதும் முட்களும், சகதிகளும் நிறைந்த பாதையில் பயணிக்கின்றாள்..இந்த முடிவு அவளாகவே தெரிவு செய்தது...அவள்தான் அனுபவிக்க வேண்டும் !விடுகின்றன........

அனுபவங்களால் வாழ்வை பெண் உணரும் போது அவளது எதிர்காலம் அவளை விட்டு தொலைந்து போகின்றது !

வாழ்க்கைத் துணை


அமைதியான ஆற்றங்கரை ........அருகே விரல் விரித்துக் கொண்டிருக்கும் பரந்த ஆலமரங்கள் இரண்டு காற்றால் ஒன்றோடொன்று உரசிக் கொண்டு நின்றன...........அவ் ஆலமரங்களின் வேர்களை நனைத்தவாறு சிறு ஆறொன்று ஓடிக்கொண்டிருந்தது..

அக்குளிர்மையான நீரோடையின் அருகே வழமை போல் அந்த இரண்டு நட்பு புறாக்களும் சந்தித்துக் கொண்டன...அவர்களின் மடியை ஆலமரக் கிளை தாங்கிக் கொண்டது...

ஆண் புறாவுக்கு பெண் புறா மீது உயிர்........பெண் புறாவுக்கும் ஆண் புறாவே அதன் உலகமாக இருந்தது...பார்ப்பவர்கள் எல்லாம் அவைகளை காதலரென்று கிண்டல் செய்யும் போதெல்லாம் ஆண்புறா சிரிக்கும்........

"இது காதலையும் தாண்டி புனிதமானது. எங்க அன்பை நாங்க காதலுக்குள்ள சிக்க வைக்க விரும்பல........ஏன்னா காதல் வயப்படும் போது எங்க எதிர்பார்ப்பு அதிகரித்து , அன்புக்குள்ள சுயநலம் கலந்திடும் "

ஆண் புறாவின் வார்த்தைகளுடன் முரண்படாத பெண் புறா தன் நண்பனின் கன்னத்தை தன் உதடுகளால் தடவி, தன் அன்பை ஆழப்படுத்தி வெளிப்படுத்தும்.. இது தினமும் நடக்கும் நிகழ்வு.....................

ஆனால் அன்று வழமையான உற்சாகம் குன்றிய நிலையில் ஆண் புறா எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது..

அதன் இறக்கையை தன் இறக்கைகளால் தடவிய பெண் புறா தன் குரலில் சோகம் பூட்டி மெதுவாக ஆண்புறாவை நோக்கியது

"ஏன்டா ....சோகமா இருக்கே..............என்னடா ஆச்சு......நீ இப்படி இருந்ததை நான் ஒருநாளும் பார்த்ததில்லையேடா...........என் மனசும் அழுகுது தெரியுமா"

பெண் புறாவின் வார்த்தைகள் தளம்பின.....

"செல்லம்....எனக்கு எங்க வீட்டில  கல்யாணம் பேசுறாங்கடா.......எனக்கேத்த பெண்ண நான்தானடா தெரிவு செய்யணும்....எங்க வீட்டில இப்ப கல்யாணம் வேண்டாமென்று சொன்னா.....நீ யாரையாவது லவ் பண்ணுறீயாடான்னு கேட்குறாங்க......யாரைடா நான் சொல்ல .......அதுதான் மனசு கஷ்டமா இருக்கு"

ஆண் புறா பெருமூச்சு விட்டது..

அதைக் கேட்ட பெண் புறா கலகலவென்று சிரித்தது..........

"டேய் .......லூசாடா நீ.........இதுக்குப் போய்..............கப்பியா இரடா.......யாராச்சும் கிடைப்பாங்க"

பெண் புறாவின் வேடிக்கைச் சீண்டலை ரசிக்கும் மனநிலை ஆண் புறாவுக்குள் எழவில்லை..

"இல்லையடீ......இன்னும் ஒரு வாரத்தில நான் பொண்ணு யாருன்னு சொல்லணும்..இல்லைன்னா அவங்க பார்க்கிற பொண்ணத்தான் கட்டணும்.
என்னை புரிஞ்சு கொண்டவள் நீதான்டீ....என் லட்சியம் உனக்குத் தெரியும் தானே.........நீயோ இப்படி சொன்னா நான் என்னடி செல்லம் பண்ண......இன்னும் ஒரு கிழமைக்குள்ள எனக்கேத்த பொண்ண எப்படியடீ தேட.....நீயே சொல்லடீ!

ஆண் புறாவின் குரலில் இருந்த வருத்தம் பெண் புறாவையும் நோகடித்தது....

"ம்...யோசிப்போம்டா.......இன்னும் 1 கிழமை இருக்கு.......நல்ல முடிவு கிடைக்கும்.....நம்படா.............நம்பிக்கைதான் வாழ்க்கை "

"ம்....ம்"

ஆண் புறா சிறிது மௌனத்தின் பின்னர் மெதுவாகத் தலையாட்டியது..
அவர்களின் மௌனத்தில் சில விநாடிகள் கரைந்து கொண்டிருக்கும் போது திடீரென பெண் புறா ஆற்றுக்குள் குதித்தது...

"செல்லம்........"

ஆண்புறா அதிர்ச்சியில் அலறியவாறு தானும் நீருக்குள் குதித்தது..தன் நண்பியை நீருள் தேடியது. அதன் பார்வைக்குள் அவள் அகப்படவேயில்லை..
நீரின் சலன ரேகை சப்தமின்றி அமைதியாக உறைந்து கிடந்தது

பெருங்காட்டுக்குள் கண்ணைக் கட்டி விட்ட நிலை ஆண்புறாவுக்கு........

இதயம் வெடிப்பதைப் போன்ற உணர்வு.....வாழ்க்கையில் எதையோ இழந்த தவிப்பு முதன்முறையாக மனசுக்குள் முட்டியது

"செல்லம்...................."

வாய் விட்டு கதறியவாறு, அவளை மீண்டும் காண வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் கண்களை இறுக மூடி இறைவனிடம் தன் பிரார்த்தனையை ஒப்புவிக்கத் தொடங்கியதுதான் தாமதம்............

"ஏய்"

காதருகே மெல்லிய சலங்கையொலி சலசலக்க ஆண்புறா எதிரே பார்த்தது...
நம்பவே முடியவில்லை..தன் நேசப் பறவை ஈரம் சொட்டச் சொட்ட எதிரில் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும் மகிழ்ச்சியில் மனசு ஆரவாரித்தது..

":என்னடி இப்படி பண்ணிட்டே......நான் இன்னைக்கு உனக்காக எவ்வளவு அழுதேன் தெரியுமா..என்ன விட்டுப் போக உனக்கு மனசிருக்காடீ...என்னை அழவைக்கிறதே உனககு வேலையாச்சு "

ஆண்புறா உணர்ச்சி வசப்பட்டு பெண் புறாவைக் கடிந்தது..

"இல்லைடா நாம பேசிக் கொண்டிருந்த போது மரத்தில இருந்த சின்ன அணிலொன்று தண்ணிக்குள்ள விழுந்திடுச்சு. அதுதான் அதைக் காப்பாத்த போனேன்."

பெண் புறாவின் வார்த்தைகளில் வடிந்த இரக்க குணம் ஆண்புறாவின் விழிகளை மேலும் குளமாக்கியது ..மனசோரம் காதலெனும் பதிய மெல்லுணர்வு வருடிச் சென்ற உணர்வு..........பாய்ந்து சென்று பெண்புறாவை இறுகத் தழுவியது .........

பெண்புறாவோ தடுமாறியது....

"டேய் விடடா........உனக்கென்னடா ஆச்சு இன்னைக்கு ...நான் உன் ப்ரெண்டடா..............."

குரல் நெகிழ பெண் புறா கூறியது,

"செல்லம்.......உன் உயிரைக் கூட மதிக்காம அந்த சின்ன உயிரைக் காப்பாத்த நெனைச்ச உன்ன விட, என் வாழ்க்கை, உயிர பத்திரமா யாரடீ பார்த்துக்குவா...அதுதான் என் உசுரை உன்கிட்டயே கொடுக்க முடிவெடுத்திட்டன்...................புரியலியா"

அண் புறா கண்சிமிட்டலுடன் கேட்ட போது பெண் புறா "ம்ஹூம்" இல்லையென தலையாட்டியது..

"ரியூப் லைட் செல்லம்டீ நீ......என் வாழ்க்கையைய நல்லா கவனிச்சுக்க உன்ன விட யாரடீ வருவா. அதுதான் என் வாழ்க்கைத் துணை நீயென்று முடிவெடுத்திட்டேன்...ஐ லவ் யூடீ"

பெண் புறாவின் இறக்கையை தன் அலகினால் மெதுவாகத் தடவியது, பெண் புறாவோ நாணத்தில் தலை சாய்ந்து புன்னகையை மௌனத்தில் நனைத்துக் கொடுத்தது..

"ஐ லவ் யூ "

பெண் புறாவும் இதழசைத்தது.........

"ஹைய்யா...மகராணியார் சம்மதிச்சிட்டாங்க...........இனி டும் டும் டும் தான்"

ஆண் புறா உற்சாகத்துடன் கும்மாளமடிக்க, அங்கே புதிய காதல் உலகமொன்று அவர்களை உள்வாங்கிக் கொண்டது...............





பாரதம்


தென்னாசியாவிலுள்ள குடியரசுகளுள் ஒன்றே பாரதம் என அழைக்கப்படும் இந்தியாவாகும். இப்பெயர் சிந்து நதியெனும் பெயரிலிருந்து மருவி வந்துள்ளது.

இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங் கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக மேற்கே பாகிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம் , கிழக்கே வங்காளதேசம், மியான்மார் ஆகியவை அமைந்துள்ளன.


கி.மு.300ல் அசோகரால் கட்டப்பட்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சி தூபம் போன்று 40,000 வருடங்களுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, மத்திய இந்தியாவிலுள்ள பிம்பேடகா  என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.









மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலமாகும். சேர, சோழ, பல்லவ, சாளுக்கிய கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு கால கட்டங்களில் ஆண்டன. 8ம் நூற்றாண்டில் அரபியரும், 12 ம் நூற்றாண்டில் துருக்கியரும், 15 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வர்த்தகர்களும் வருகை தந்தனர்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக காந்தியடிகள் தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் காரணமாக 1947 ஆகஸ்ட் 15 ல் விடுமுறை கிடைத்தது. அன்றே இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. 1950 ஜனவரி 01 ல் குடியரசாக மாறியது. இன்று உலகின் மிகப்பெரிய குடியரசாக இந்தியா திகழ்கின்றது
















இந்தியக் குடியரசு தலைவர் 5 ஆண்டுக்கொருமுறை தெரிவு செய்யப்படுகின்றார். ஆனால் செயலதிகாரம் பிரதமரிடமும், அவரது தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமுமே உள்ளது. இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும்.  மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள்  மாநில பிரதேச சட்டப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். அவர்களது ஆட்சிக்காலம் 6 வருடங்களாகும்.

இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன.  1947 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதில் இருந்து இந்தியா பெரும்பாலான பிற நாடுகளுடன் நல்லுறவையே கொண்டுள்ளது. இந்தியா பொதுநலவாய நாடு, அணிசேரா நாடுகளின் இயக்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்றது. அண்மைக் காலங்களில் இந்தியா "ஆசியான்" எனப்படும் தென்கிழக்குஆசிய நாடுகள் கூட்மைப்பிலும் "சார்க்" எனப்படும் பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்து வருகிறது.




இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது.Operation Smiling Buddha எனப் பெயரிடப்பட்ட தொடக்க அணுக்கருச் சோதனை, பின்னர் 1998 இல் இடம் பெற்ற "நிலத்துக்கு அடியிலான சோதனைகள்" என்பவற்றின் மூலம் இந்தியா ஒரு அணு வல்லரசு என்னும் இடத்தைப் பிடித்தது. 

இந்திய நாடு 28 மாநிலங்கள் 600 மாவட்டங்கள் 6 ஒன்றியப்பகுதிகளைக் கொண்ட ஒரு கூட்டாட்சி குடியரசு ஆகும். பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமயமலைத் தொடர்கள் , இந்து - கங்கைச் சமவெளி , மேற்கில் தார் பாலைவனமாகும் .

இமய மலையில் தோன்றி இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளில் கங்கையும், பிரமபுத்திராவும் முக்கியமானவை. இவை வங்களா விரிகுடாவில் கலக்கின்றன. ஆரியோ மொழி, திராவிட மொழிக் குடும்பம் பெரிய மொழிக்குடும்பமாகக் காணப்படுகின்றது. இந்துக்கள் பெரும்பான்மையினராகவும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர் சிறுபான்மையினராகவும் வாழ்கின்றனர். இந்து சமயம், புத்த சமயம், சமணம், சீக்கிய சமயம் பிரதானமான சமயங்களாகும்.

குடிமக்களுக்கான விருதுகள்
-----------------------------------------
பாரத ரத்னா
பத்ம விபூஷண்
பத்ம பூஷன்
பத்மஸ்ரீ

பிறப்பு , தொழில், பொருளாதாரம், மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆன சாதிய கட்டமைப்பே சமூக கட்டமைப்பாகும்..பல பிரதேசங்களில் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

இந்திய பண்பாடானது பல இன , மொழி, சமயங்களின் பன்முகத்தாக்கங்களாக உள்ளது. இசை, நடனம், இலக்கியம் இந்தியப்பண்பாட்டுள் தாக்கம் செலுத்துகின்றது. இசைகளுள் வடக்கில் கர்நாடகமும், தெற்கில் இந்துஸ்தானியும் பிரபல்ய முகங்களாக உள்ளது. அவ்வாறே நடனத்துள் பரத நாட்டியம், கதகளி,ஒடிசி, குச்சிப்புடி, கதக் போன்றவை பிரபல்யமானவை.
ஐம்பெருங் காப்பியம், மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட காப்பியங்களும், காவியங்களும் இந்தியப்பய்பாட்டை உலகிற்கு காட்டி நிற்பன. அவ்வாறே அரப்பா, சிந்துவெளி, மொகஞ்சதாரோ போன்ற நாகரிகங்களும் இந்திய பண்பாட்டையொட்டியவையாகும்.


விளையாட்டுக்காக வழங்கப்படும் விருதுகள்
--------------------------------------------------------
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
அர்ஜூனா விருது

தேசிய விளையாட்டு
-----------------------------------
வளைதடிப்பந்தாட்டம்

இந்திய பொருளாதாரம், மரபுவழி வேளான்மை, தற்கால வேளான்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, மென் பொருள் உற்பத்தியிலும் தங்கியுள்ளது

சனத்தொகை அதிகரிப்பு, காஷ்மீர் பிரச்சினை, ஊழல், சுற்றுப்புறச் சூழல் கேடு போன்றவை இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பாரிய சவால்களாகும்

நன்றி - தமிழ் விக்கிப்பீடியா