About Me

2021/05/01

நித்தம் உன் ஞாபகம்

 

விழிகளின் ஈர்ப்பால் கலந்த காதல்/

தழுவுகின்றதே நெஞ்சில் ஏக்கமும் சுமந்தே/

மெல்லிடை தழுவும் சேலை முடிச்சுள்/

ஒழிந்த வாலிபமும் குறும்பாச் சிரிக்குதே/


உன் கொலுசின் சத்தத்தில் உயிர்க்கும் /

பாதச் சுவடுகளும் பரவுதே உன்னோடு/

ஆசைகள் முடிந்த அத்தான் மனதுள்/

ஏக்கத்தின் ஓசைகள் வெடிக்குதே இமயமாக/


காமம் கிள்ளும் நறுமணக் கனாக்களில்/

உன் வாசம் உணர்வுள் மலருதே/

தேகம் சிலிர்க்க செந்நிற உதட்டின்/

மோக முத்தம் கற்பனைக்குள் உறையுதே/


கன்னக் கதுப்பில் செதுக்கிய வெட்கம்/

பக்கம் வருகையில் திரைக்குள் மறையுதே/

வானவில்லும் மையங் கொள்ளும் உன்னை/

வசந்தமும் மெல்லத் தொட்டுச் செல்லுதே/


உந்தன் புன்னகைச் சாரலில் நனைகையில்/

மெல்ல அழியுதே எந்தன் தனிமையும்/

வாழ்வின் முகவுரையாக உன்னை எழுதுகையில்/

உதிர்கின்றன சோகங்களும் உலகின் காலடியில்/


உள்ளத்தின் நினைவாக நீயும் நிரம்புகையில்/

மெல்லக் கரைகின்றதே சூழ்ந்திடும் தனிமை/

உறக்கத்திலும் உறங்காத உன்னோடு பயணிக்கையில்/

உன் ஞாபகமே மொழியாகிப் போகின்றதே/


ஜன்ஸி கபூர் - 01.05.2021



இன்றைய இந்தியா

இன்றைய இந்தியா

உலகத்தின் தலைப்புச் செய்தி

கொரோனாவுடனான யுத்தம்


ஜன்ஸி கபூர் - 01.05.2021


புன்னை மரம்

 

அழகும் இதமாகின்றது புன்னையின் புன்னகைபோல்

அருமையின் அடையாளமாகவே உயிர்க்கின்றது தானாகவே

வறுமையும் வளமற்ற சூழல்ப் போராட்டமும்

நிறுத்துவதில்லை இயல்பான இயற்கை வளர்ச்சியை

இருந்தும் சூழ்கின்ற சிறைக்கரத்தின் வன்மத்தில்

கரைந்தே விடுகின்றது மென்மையான மனம்


அடுத்தவரால் மலினப்படுத்தப்படுகின்ற உணர்வுக் குவியலுக்குள்

புதைந்தே புகைகின்ற பெண்மைத் தடத்திலும்

எதிர்பார்ப்புக்களை ஏந்தியவாறே பூத்துக் குலுங்குகின்றன

அடக்கமான அமைதியான வாசனைப் பூக்கள்


ஊர்விழிகளால் மொய்க்கப்படாமல் மூடி மறைகின்ற

இயற்கை பராமரிக்கின்ற இதமான அழகும்

இதழ்களுக்குள் நசிகின்ற மென் புன்னகையும்

சிந்துகின்ற வாசம் மௌனத்திலேயே உறைகின்றது


அடுத்தவரோடு இசைந்து வாழ்கின்ற வாழ்விலும்

விரிக்கப்படுகின்ற சுதந்திரச் சிறகின் நீளுகை

முறிக்கப்படுகின்றது முற்றத்தில் தறித்து நிற்போரால்

நிழலாகின்ற கொடைக்குள்ளும் குறிவைக்கின்றது செந்தணல்


தன்னலம் களைந்து வாழ்கின்ற வாழ்விலும்

விண்ணைத் தொட முயற்சிக்கும் போதெல்லாம்

புண்ணாய்ச் சிதைக்கின்றனர் உணர்வினை உடைத்து

நாற் சுவருக்குள் நாடித்துடிப்பை அடக்கி

பெண்ணைப் போலவே புன்னையும் 

மொண்ணையாகவே மாற்றுகின்றனர் தரணிப் பரப்பிலே


ஜன்ஸி கபூர்

துளியும் கடலும்


தரையைத் தொட்டு மீளுகின்ற அலைகளாய்

தவிக்கின்ற உன் நெஞ்சம் புரிகிறது!

கரையினில் உடைகின்ற அலைகளாய் உன்னாசைகளும்

மனதினில் துடிப்பது எனக்கும் புரிகின்றது!

இருந்தும் புரியாதவனாய் நழுவுகின்றேன் அடிக்கடி!


வீசுகின்ற காற்றுக்குள் நிரப்புகின்றாய் சோகங்களை

மரத் துடிப்பினில் வீழ்கின்ற இலைகள்

நினைவூட்டுகின்றது உன்னை எனக்குள் எப்பொழுதும்

நானின்றி வெறும் சருகாய் உருமாறுகின்ற

உன்னைக் கண்டும்கூட கடந்துதானே செல்கின்றேன்.


உன் சாய்விற்கு என் தோள்கள்

உன் ஆசைகள் என்னைத் துரத்துகின்றன

நான் முற்றும் துறந்தவனா இல்லையே

உன் அன்பு புரிந்தும் ஊமையாகின்றேன்

யாருக்காகவோ உன்னைத் தனிமைப்படுத்துவதாகவே நினைக்கிறேன்


இசை எனக்குப் பிடிக்கும் இசைப்பேன்

மூங்கில் துளைகளை அருட்டுகையில் விழுகின்றது

பொங்கும் உணர்வுகளுடன் போராடும் உன்னினைவு

இருந்தும் தயங்குகின்றேன் உன்னைத் தாங்கிட

உன் அருகாமை என்னை உடைத்திடுமோ


காதல் உணர்வல்ல வாழும் வாழ்க்கை

காதலை நான் கற்கும் வரைக்கும்

நமது விம்பங்கள் மோதுவதை விரும்பவில்லை

நம்மை நாம் புரிந்து கொள்ளும்வரை

தள்ளியே நிற்கின்றேன் உறுதி மனதில்தான்

சந்திப்பு வேண்டாம் உறுதியுரைக்கு என்னாச்சு

உன் உருவைக் கண்டதும் உராய்கின்றது

உந்தன் விழியோரம் செருகியிருக்கும் நீர்

எந்தன் மனசுக்குள் பாய்கின்றது தாராளமாக


நாம் பேசியிருக்கிறோம் நிறைய ரசித்திருக்கிறோம்

காதல் சாயமில்லா நட்புத்தானே அது

அப்படித்தானே நினைத்துப் பழகினேன் உன்னோடு

அருகிலிருந்தால் உந்தன் அமைதியை ரசிக்கிறேன்

உரு மறைந்தால் உறுத்துகிறதே இதயமும்

இருவரின் பேச்சிலும் வாழ்வியல்தானே நிறைந்திருக்கின்றது

இருந்தும் நமது தோழமைக்குள் காதலா

கண்டுபிடிக்க காத்திருக்க வேண்டும் நாம்தான்


உனது நீட்சிக்குள் நானென்ற எல்லையை

எனது மனம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது

உன் துயரங்களுக்கு காது கொடுக்கிறேன்

விழி நீரையும் துடைக்கிறேன் தாயாகி

இன்பத்திலும் துன்பத்திலும் ஒருங்கிசைகின்றோம் நேர்கோட்டில்

இருந்தும் சேமிக்கின்றாய் துடிப்புக்களை என்னுள்ளே


நான் வாசிக்கையில் வீழ்கின்றாய் வரிகளாக

உன் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன்

நம் அன்பின் எல்லையை உணரும்வரை

தள்ளியே நிற்கிறேன் முல்லைக் கொடியே


நீயும் விடுவதாக இல்லை தொடர்கிறாய்

உந்தன் சோகங்களை என்னிடம் கொட்டுகையில்

கண்களின் வேதனையைப் படிக்கின்றேன்

கன்னக் கதுப்பில் உறைந்திடும் உனதீரத்தில்

உள்ளம் நனைந்து விடுகின்றது தானாய்

உந்தன் இமையோரம் வடியும் நீர்த்துளிகள்

எனக்குள் அல்லவா கடலாகப் பெருகின்றது.

காரணம் புரியாமல் நானும் தவிக்கிறேன்


உன் அண்மையை ரசிக்கிறேன் எப்பொழுதும்

உனக்காகப் பிரார்த்திக்கிறேன் சோகங்களைப் பிடுங்க

உந்தன் கரங்களைப் பற்றிக் கொஞ்சிட

உள்ளத்தில் மெல்ல ஆவல் முளைக்கிறது

விலகலே நலன் என்கிறது மனசு

விலகினாலும் இணையத் துடிக்கின்றது அன்பு


என் விலகலில் நீ மௌனிக்கிறாய்

அப்பொழுதெல்லாம் அனலாகின்ற தவிப்பும் கடலாகின்றது

நீ உதிர்க்கின்ற கண்ணீர்த் துளிகளை

சேமிக்கின்ற மனதுக்குள் எப்பொழுதும் சுனாமிதானே

பொங்குகின்ற கடலை ஏக்கம் தகர்க்கின்றது

உந்தன் உருவுக்குள்ளே ஒன்றிக்கிடக்கும் என்னைப்

பத்திரப்படுத்து வந்திடுவேன் நானும் உன்னிடத்தில்


ஜன்ஸி கபூர்

நிழல்

 


நிழல் உண்மையை உணர்த்துகின்றது

ஒளியின் சத்தியத்தில் உயிர்க்கிறது

இருளெனும் பொய்மையை மறைக்கிறது


மனசாட்சிக்கும் மதிப்பளிப்பதனால்

அது மனிதனுடனேயே எப்போதும் தொடர்கிறது


வண்ண பேதங்கள் இல்லையதற்கு

எப்போதும் கருமைதான்

சமத்துவத்தைக் கற்றுத் தருகின்றது


சூழ்நிலைக்கேற்ப மாறுகின்றன அதன் அளவுகள்

மாறுகின்ற மனிதர்களின் மனங்களைப் போல


உச்சி வெயிலில் பாதணிகளாகவும்

சுருங்கிக் கொள்கின்றன எமக்குள்

சந்தர்ப்பங்களைக் கற்றுத்தருவதைப் போல


பல உருக்கள் அமைத்து

வித்தைகள் செய்கின்ற விரல்களும்

முதலீட்டு வணிகப் பொருள்தான்


இருளையும் ஒளியையும்

தொடர்புபடுத்தும் நிழல்

இன்பமும் துன்பமும் ஒன்றித்து வருகின்ற

வாழ்க்கையை நினைவூட்டுகிறது


பௌர்ணமி  அமாவாசைகள் கூட

நிழலின் உணர்ச்சி நிலைகள்தான்

மனிதனுக்கும் தத்துவமாகின்றன


வறுமை நிலையில் பயமுறுத்தும்

உயர்ந்து செல்லும் விலைவாசிபோல்

சிறு பொருட்களையும் உருப் பெருத்துக்காட்டுகின்றது

நிழல்


பொய்கள் மெய்யாகலாம்

மெய்யென்ற மாய நிலைக்குள்

பொய்யும் கலக்கலாம்


நிழலும் நம்மை நேசிப்பதனாலேயே

கூட வருகின்றது உயிர்போல


ஜன்ஸி கபூர்

யாழ்ப்பாணம்

சில காதல்கள்

 

சில காதல்கள் தீ போன்றன

முதலில் இதமான பார்வைகள் வீசுகின்றன

பின்னர் இதயத்தில் உணர்வுகள் பொங்குகின்றன

அடுத்து உடலெங்கும் மின்சாரம் பாய்கிறது

சந்திப்புக்களில் மெல்லிய காமம் பூக்கிறது

பிறகு அதுவும் அடங்கி விடுகிறது

நீ யாரோ நான் யாரோவென்று

நம் மனங்களையும் முறித்து விடுகின்றன


சில காதல்கள் கனவுகளில் வாழ்கின்றன

கற்பனைகளில் மாத்திரம் கவிதைகளைச் சுமக்கின்றன

நிஜ வாழ்க்கைக்கு ஏனோ பயப்படுகின்றன

அடி மனதில் ஆசை துடித்தாலும்

எல்லாவற்றையும் மறந்ததாக நாமும் நடிக்கிறோம்

விருப்பமின்றி வேறு வழியில் பயணிக்கிறோம்

நம்மிடம் எஞ்சுகின்றன வடுக்கள் மாத்திரமே


சில காதல்கள் காதலர்தினத்தில் பொங்குகின்றன

நாகரிக உலகத்தில் வாழ அலைகின்றன

வாழத் தெரியாத காதல்கள்தானே இவை

அருகிருந்தால் அணைக்கின்றன தொலைவென்றாலோ மறக்கின்றன

ஆனாலும் உண்மை அன்பைக் கடக்கின்றோம்

அடுத்தவர் பாவத்தையும் நாம்தான் சுமக்கின்றோம்


காதலுக்குள்ளும் அகம் புறக் கண்களுண்டு

நம் உலகம் சுருங்கிக் கிடக்கின்றன

கனவு நிலைக்குள் நாம் தள்ளப்படுகிறோம்

பிறர் புறக்கண்கள் நம்மிடம் நீளுகின்றபோதெல்லாம்

மாயை உலகின் விமர்சனங்களைக் கடக்கின்றோம்.


சில காதல்கள் பேருந்துகள் போன்றவை

இலக்கின்றி இதயத்தில் ஏற்றி இறக்குகின்றன

கொஞ்ச நினைவுகளே நமக்குள் எஞ்சுகின்றன.

கடைசியில் காதலின் புனிதத்தை இழக்கின்றோம்


சில காதல்கள் மலர்களைப் போன்றன

உதிர்ந்து எருவாகின்ற பூக்களாய் மாறுகின்றன

இறந்தாலும் உயிர் வாழ்கின்றன நமக்குள்

அவை ஒருபோதும் நினைவுகளை மறப்பதில்லை


சில காதல்கள் பாதணிகள் போன்றன

எம்மை அருகிலிருந்து அன்போடு பாதுகாக்கின்றன

நாமாக உதறித் தள்ளும் வரை

நம்முடனே இணைந்து வருகின்றன தினமும்

அந்த அன்புடனே நாமும் அலைகின்றோம்


சில பிஞ்சுக் காதல்களும் வாழ்கின்றன

இலக்கணம் அறிந்திருக்காத புதுமைக் காதல்கள்

மற்றோரைப் போல நாமும் காதலிக்கின்றோம்

எல்லா உணர்வுகளும் அதில் இருக்கின்றன

ஆனாலும் முதிர்ச்சிக்கு முன்னரே தோற்கிறோம்

வலி மாத்திரம் எஞ்சுகின்றது நமக்குள்


சில காதல்கள் நமக்கு ஏணிகள் போன்றன

நம்முடன் நினைவில் நடந்து முன்னேற்றுகின்றன

தொலைவிலிருந்து ரசிக்கும் இந்த அன்பை

நினைவுகளில் மாத்திரமே நாமும் சுமக்கிறோம்


காதல்கள் சூழ்நிலைக்கேற்ப பண்புகளை மாற்றுகின்றன

கற்பனைகள் வலிகள் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள்

எல்லாம் வந்துதான் போகின்றன அழகாக.

சிதையாத உண்மைக் காதல் வாழ்கின்றது

நாம் சுமக்கின்ற அன்புடனதுவும் வளர்கின்றது


ஜன்ஸி கபூர்

யாழ்ப்பாணம்

யாரோ கிசுகிசுத்தார்



இருள் தொலைகின்ற நிலவுப் பயணத்தில்

அலைப் புன்னகையினை ரசித்தபடி தழுவுகின்ற

ஈரக் காற்றின் இதமான வருடலில்

ஓராயிரம் கனவுகளை உயிர்ப்பிக்கின்ற ஆசைகளுடன்

நாமிருவர் தனியாகப் படகேறிப் பயணமொன்று

செல்ல வேண்டுமென்று யாரோ கிசுகிசுத்தார்


முற்றுப் பெறாத கடலலைத் துடிப்பினைப் போல

ஒருவரை ஒருவர் அன்பினால் பற்றி

வெற்றிட வாழ்விற்குள்ளும் உயிர்ப்பினை நிரப்பி

அடுத்தவர் விழித் தேடலுக்குள் விரிகின்ற

அழகான வாழ்க்கையாக நாமும் மாறுவோமென

நமதான பயணம்பற்றி யாரோ கிசுகிசுத்தார்


துள்ளியோடுகின்ற மீன்களை அள்ளிச் செருகி

கள்ளத்தனமாக விழிகளில் வைத்திருக்கின்ற உன்னுடன்

இசைகின்ற எனது இதயத் துடிப்பொலிகளையும்

ஏந்திக் கொண்டே அலைகின்ற அலைகளில்

நீ நனைகின்ற போதெல்லாம்

நுரைப் பூக்களால் உனக்கு மாலையிட்டு

கரை தொட்டிடாத நீண்ட பயணத்தில்

உன்னிழலுடன் ஒன்றிக்கிடக்க மனம் ஏங்குகின்றது


ஏன்தானோ இக்காலம் இன்னும் வரவில்லை

இன்னும் என் பணிகள் உள்ளனவோ


ஆதவன் சிறகசைத்து மெல்லக் கீழிறங்குகையில்

நீயும் எனது எதிர்பார்ப்பிற்கு கைவிலங்கிட்டு

பிரிய ஆயத்தமாகின்றாய் பிரியமனமின்றி நானும்

தொலைக்கின்றேன் உன்னை மறைகின்றாய் அந்திக்குள்


விண்ணுக்கே முகவரியாகி மின்னும் உன்னை

நினைவூட்டுகின்றன குறையொளியில் கண்ணுக்குத் தெரிகின்ற

கரையை நாடுகின்ற கடல்ப் பறவைகள்


நீ ஒளிந்து கொண்டிருக்கின்ற தொலைப்புள்ளியின்

முடிச்சவிழ்த்து மூச்சினை நிரப்பிடத் துடிக்கின்றேன்

அடுத்தவர் அறிந்திடாத நமக்கிடையிலான தூரம்

எமக்கு மட்டும் தானே தெரியும்

வேறு எவருமே அறிந்திருக்க மாட்டார்கள்.


ஜன்ஸி கபூர்

வழி கூறும் பட்டாம்பூச்சி

  

அசைகின்ற காற்றில் தடுமாறுகின்ற மலர்களை

அனுதாபத்துடன் பார்க்கின்றேன் இயற்கைக்குள் இசையாவிட்டால்

துடிதுடித்து வீழுமே இதழ்களும் மெல்ல

தரையைத் தொட்ட சிறகுகளாகப் பறந்திடுமே


மலரின் அமைதி பற்றிக் கவலைப்படாத

பட்டாம்பூச்சிகளை இரசித்துப் பார்க்கின்றேன் நானும்

தன் படபடப்பால் மலருக்குள் துடிப்பேற்றும்

தேன் உண்ணும் தீவிரவாதத்திலும் வியக்கின்றேன்


வானவில்லும் உடைந்து பறக்கின்றதோ தரையில்

வனப்பான சிறு உயிரின் துடிப்பில்

மனதும் ஒன்றித்துப் போகின்றதே அடிக்கடி

மகிழ்வின் உச்சத்தில் உறைந்து போகின்றேன்


வாசத்தை வளியில் பிழிந்தூற்றி வனப்புடனே

பூத்திருக்கின்ற மலர்களை நோக்குகின்றேன் புளாங்கிதத்தில்

காத்திருக்கின்றதோ தவிப்புடனே அமைதியும் அலைய

காதலில் படபடக்கின்ற பட்டாம்பூச்சிக்கான அழைப்பிது

அறிந்ததால் ஏந்தினேன் அதனசைவை எனக்குள்


தன் ஊசித்துளை உறிஞ்சியால் தினமும்

ஊனம் ஏற்றாத மென்னிதழ்களைக் கசக்காத

உயர்ந்த ஒழுக்கத்தினை எங்கு கற்றதோ

உராய்ந்து மகரந்தம் அள்ளும் பணியும்

உயிரோடு இசைகின்ற மேலான தாய்மைதானே

உருவாகின்ற ஒவ்வொரு பிறப்பிற்கும் வழிகாட்டும்

உத்தம குணம் கண்டு வியக்கின்றேன்.


உறிஞ்சிய தேனைக் காற்றும் உலர்த்தவில்லை

வருத்தத்தில் இதழ்கள் சிவக்கவும் இல்லை

அரு உயிர் கடத்திடும் பணிக்காக

விருப்பும் கொண்டதோ சிறு இதழ்களசைத்து

மறுப்பில்லாத அமைதிக்குள் அலங்கார மலர்களும்

மயக்கத்தின் தித்திப்பில் பட்டாம்பூச்சியும் சூழ்கின்றதே


உருக்களில் பல வண்ணங்கள் ஏந்தி

உற்சாகமாகப் பறக்கின்ற பட்டுடலைத் தொட்டுவிட

காற்றையும் துரத்துகின்ற சிறுவர்களின் மனதாக

உருமாறுகின்றேன் நானும் பட்டாம்பூச்சியை தொட்டுவிட


விண் நோக்கி நீண்டிருக்கும் பூவுக்குள்

இன்பம் துளைக்குதோ பட்டாம்பூச்சியும் அடிக்கடி

மலரைப் பற்றிய சிந்தனை இல்லாக்

காமத்தின் சூத்திரம் இதுவாக இருக்கலாம்

ஒவ்வொரு பூக்களாக நுகர்ந்திடும் சேர்க்கைக்குள்

கொஞ்சம் கற்பினையும் கற்றுக் கொடுத்திருக்கலாம்


அமைதியான மலர்களுக்குள் பரபரப்பை ஊற்றுகின்ற

அழகான பட்டாம்பூச்சியின் சுறுசுறுப்பும் ஈர்க்கின்றது

நானும் அந்த ரசிப்பினில் உறைகின்றேன்

நானிலத்தின் உயிர்ப்பிற்கும் கருதானே இவ்வுருவும்


குவிந்த இதழ்களின் விரல் நீட்டத்தில்

குதூகலகமாகப் பற்றுகின்ற பட்டாம்பூச்சியின் துடிப்புக்குள்

கலக்கின்றதோ உற்சாகமும் விடியலைத் துடைத்தவாறு

விரைவினைக் கற்றுக் கொள்ளும் நேரமிது


பட்டாம்பூச்சியின் பக்குவ முட்டைக்குள் நெளிகின்ற

முட்களைக் கொண்ட கம்பளிப்பூச்சியை விரும்புவாரோ

தொடுகையில் தெளிக்கின்ற விடத்தினை வெறுக்கின்றோம்

தீயதினைத் துரத்திடும் வேட்கையில் ஒதுங்கியே

நசுக்கிக் கொல்கின்றோம் பறந்திட முன்னரே

தீயோராகி துன்பத்தினை நுகர்கின்றதே பாவம்


ஆனாலும் பட்டாம்பூச்சியாக துளிர்க்கையில் துள்ளும்

மனதால் அள்ளுகின்றோம் அழகினை ஆசையாக

வெறுப்பும் விருப்பும் வாழ்வின் பக்கங்களாய்

வாழ்கின்றதே நம் எதிரில் பட்டாம்பூச்சியாக


ஜன்ஸி கபூர்

மேகங்களோடு



சிறகுகளை உதிர்த்தவாறே நகர்கின்ற மேகங்களை

தன் விரல்களால் வருடிக்கொள்கின்றது வானம்

காற்றின் முடிச்சுக்களால் சிறைப்பட்டிருக்கின்ற மேகத்தினை

தன் இதழ்களால் அவிழ்ப்பது சுகம்தான்போலும்

வான் துளைகளுக்குள் தம் முத்தங்களை

நிரப்பியவாறு பயணிக்கின்ற பஞ்சு மேனிதனை

தன் இதழ்களால் ஈரப்படுத்துகின்றது வானும்

காதலின்பத்தின் இதம் வரையத் தொடங்குகின்றது

மேகங்களுக்கும் வானுக்குமிடையிலான அற்புதக் காதலை


கீற்றுமின்னலெனும் மாங்கல்யமும் முழங்குகின்ற இசையும்

வானுக்கும் மேகத்திற்குமான உறவுநிலையை வெளிப்படுத்தும்போது

மேகங்கள் தன்னைக் கருங்கூந்தலுக்குள் ஒளித்தே

மொய்க்கின்ற நாணத்துக்குள் நனைந்து அலைகின்றன


வானும் விடுவதாக இல்லை துரத்துகின்றது

வெவ்வேறு திசைகளில் கலைந்தோடுகின்றன அவை

மகிழ்வின் சிதறல்கள் ஆங்காங்கே அப்பிக்கொள்கின்றன

பொன்னிறத்தூறல்களின் சங்கமத்தில் இசைகின்றது இயற்கையும்


பூமிக்கும் வானுக்கும் இடையிலான வெளிதனில்

தொங்கிக்கொண்டே சென்றாலும் விழுவதாக இல்லை

ஈர்ப்பின் இரகசியம் இயற்கையின் ஆற்றல்

நிலத்தின் வரைகோடுகளையும் சலனமற்ற குளங்களையும்

அவை கடந்து செல்கையில் இணைகின்றன

உயிர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களின் திரட்சிகளும்

கண்ணீர்ப் பாறைகளின் வெடிப்பொலிச் சப்தங்களும்


மேகங்கள் நகர்வை நிறுத்துகின்றன நிதானத்துடன்

கீழே எட்டிப் பார்க்கின்றன கவலையுடன்

கருகிய வயல்களின் சாம்பல் மேடுகள்

ஒட்டியுலர்ந்த தேகங்களின் கூக்குரல்களின் தரிசனங்கள்


பேரன்பு கொண்ட மேகங்களைத் தீண்டுகின்றது

இருண்ட விழிகளில் வெடிக்கின்றது அழுகை

அவற்றின் ஈரம் தரையைப் போர்த்துகின்ற

ஆடையாக மாறத் தொடங்குகின்றது பேரிரைச்சலுடன்

மேகங்களின் கண்ணீர் தெறிக்கின்றது கன்னங்களில்


ஜன்ஸி கபூர்

அழகென்னும் அபாயம்



குடையென விரிந்திருக்கின்ற மரக் கிளைகள்

ஓன்றோடொன்று மோதி விரிக்கின்றனவோ நிழலை

மறுப்பின்றி இருளும் விழுந்து கொண்டிருக்கின்றது

ஆதவன் மேலிருந்தும்கூட சாமத்துச் சாயலில்

அகன்ற வனமும் மாறிக் கொண்டிருக்கின்றது.


ஒளியைத் தனக்குள்ளே உறுஞ்சாப் பாதையில்

உராய்ந்து நிற்கின்றது என்றன் ஊர்தி.

இயந்திர அதிர்வின் துடிப்பொலி கேட்டு

எட்டிப் பார்க்கின்றன கானகத்துச் சருகுகள்


ஆதவச் சுவாலையின் அணைவை சூட்சுமமாக

அறிவித்துக் கொண்டிருக்கின்றது மாலை நேரமும்

தரைக்குள் பதிக்கின்ற காலடிச் சத்தமும்

விரட்டத் தொடங்குகின்றது கானக அமைதியை


இலைச் சருகுகளில் ஒளிந்திருக்கின்ற எறும்புகள்

விளையாடத் தொடங்குகின்றன கால் விரல்களுக்கிடையில்

குறும்பான கருவண்டுகளின் சிறகடிப்பின் ஓசையும்

செவிக்குள் நுழைகின்றது இரைச்சலை நிரப்பியபடி


சிறகுகளை மடித்து உறங்குகின்ற பறவைகள்

சீற்றத்துடன் பறக்கையில் காற்றும் அலறுகின்றதே

மென்மேனியைத் தழுவிய இம்சையின் முறைப்புக்குள்

தைரியத்தையும் மெல்லத் தொட்டுப் பார்க்கின்றேன்


மங்குகின்ற வெளிச்சத்தில் தொங்குகின்ற குளவிக்கூடு

மொய்க்கின்ற பிரமையில் நிம்மதியும் அறுந்துவிட

வேகமாக நடக்கின்றேன் ஒற்றையடிப் பாதையில்

சோகமாகச் சரிகின்றன பற்றைப் புற்கள்

என்னாடையின் உரசலினால் மெல்ல நிமிர்கின்றன

வெட்டவெளிக்குள் பூத்துக் கிடக்கின்ற பூக்களின்

உறக்கத்தினை கலைக்கின்றேன் போலும் அவற்றின்

கலக்கப் பார்வைகூட துளைக்கின்றது உயிரை


தொலைவில் நகர்கின்றனவோ பெரும் மலைகள்

பிளிறல் ஓசைக்குள்ளும் பின்னலிடுகின்றது பீதி

அலறுகின்ற உணர்வினை அடக்கிக் கொண்டே

மெதுவாகப் பதுங்குகின்றேன் பெருமரத்தின் பின்னால்


உயர்ந்த மரக்கொப்பை முறிக்கின்ற ஆவேசத்தில்

ஊஞ்சலாடுகின்ற செங்குரங்குகளின் கண்களும் பளிச்சிடுகின்றன

வெஞ்சினத்தின் எதிரொலியாய் குரங்குகள் வீசுகின்ற

காய்களின் மோதலில் வலிக்கின்றதே தலையும்


பறக்கின்ற வண்ணாத்திகளின் சிறகுத் தொடுகையும்

உயிரின் உயிர்ப்பைத் தடுக்கின்ற நஞ்சோ

காதோரம் வெடிக்கின்றது அச்சத்தின் பிரமை

படர்கின்ற வியர்வைக்குள் மூச்சும் கரைகின்றதே


அனுபவங்கள் திணிக்கின்ற மரண பயத்திலிருந்து

உணர்வுகள் மீள்கின்றபோது சுவாசமும் சுகமாகின்றது

புன்னகைக்கும் சிறு குழந்தைபோல் பிறப்பெடுக்கின்றேன்

மனதுக்குள் மகிழ்வையும் நிறைத்துக் கொள்கின்றேன்

ஜன்ஸி கபூர்

நெல்லியும் உதிரும் கனிகளும்

 

யுத்தம் துப்பிய உதிரத்தின் சாயலில்

செம்மண் பரப்பிய கொல்லைப் புறம்

அங்கே காற்றை விரட்டிக் கொண்டிருந்தது

அகன்ற கிளைகளைக் கொண்ட வேம்பு

அசையும் இலைகள் குவிக்கின்ற நிழலுக்குள்

ஒடுங்கி நிற்கின்றது ஒற்றை நெல்லி


எல்லைச் சுவரை முட்டும் கொப்புக்களில்

உராய்வுக் கீறல்கள் எம் இரணங்களாய்

கொப்புக்களை உதைக்கின்ற கொத்துப் பூக்களும்

கொழுத்த குண்டுப் பழங்களின் அழகும்

கண்களை ஈர்த்து கைகளை உயர்த்துகின்றன

பழங்களின் சுவையில் நாவும் இனிக்கின்றதே

பழச்சுமையில் பாதி சாய்ந்து இருக்கின்ற

மரத்தினை தினமும் பார்க்கின்றேன் விருப்போடு


கனி உதிர்க்குமந்த சிறு நெல்லியில்

உப்பும் ஊற்றி காயைச் சுவைக்கையில்

அருகில் இருப்போர் உமிழ்நீர் சுரக்கின்றனர்.

சில பழங்கள் சீனிப் பாகினுள்

நாவுக்குள் தேனும் ஊறுகின்றது சுவையுடன்


தெருவோரம் எட்டிப் பார்க்கும் கொப்பெல்லாம்

கல்லெறிக் காயத்தினால் சிவந்திருக்கின்றன

ஒவ்வொன்றாய் பொறுக்கி பாதுகாக்கின்றேன் எனக்குள்

உதிரும் வலிக்குள் எனையே பொருத்துகின்றேன்


யுத்தத்தின் சத்தம் செவியைக் கிழிக்கின்றது

அந்நேரம் கொப்பும் தகரத்தில் உரசுகின்றது

எழுகின்ற சப்தத்தில் கலக்கின்றது அவலம்

வருந்தும் மனதின் பிம்பமாக நெல்லியும்

தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றது பதற்றத்தில்


நெல்லியின் நீளமான நிழலில் பதிக்கும்

என் தடங்களுக்குள் கொட்டுகின்றேன் துன்பத்தை

மரணத்தைப் பற்றியதான பேசுபொருள் அது

அணைத்த உறவுகளின் சிதைவுப் பிழம்புகள்

என் விழிநீராலும் அணைக்காத சுவாலையாய்

எரிந்து கொண்டிருக்கின்றது வெயிலின் இம்சைபோல்


விண்ணை உடைக்கின்றதோ இயந்திரப் பறவை

இரும்புச் சிறகுகளின் உரப்பான அதிர்வில்

தேகம் மட்டுமல்ல நெல்லியும் உதிர்க்கின்றது

முதுமைக்குள் போராடும் சில இலைகளை

தரைக்குள் மொய்க்கின்ற சருகுகளின் ஆக்கிரமிப்பும்

விமானத்தின் உறுமலில் சிதறி ஓடுகின்றன


விண்ணையும் மண்ணையும் பொசுக்குகின்ற தீப்பிழம்பும்

என்னில் அச்சத்தை விதைக்கவில்லை மாறாக

இறப்பையும் புறந்தள்ளி சுவைக்கின்றேன் கனியை

உறவாகித் தழுவுகின்றது வேப்பக் காற்றும்

துரத்துகின்றேன் வெயிலையும் எனைப் போர்த்தாமல்


வட்டமிடுகின்ற இயந்திரத் தும்பியும் பொம்பரும்

சகடையும் உரசுகின்றன ஒலியை உமிழ்ந்து

செவிப்பறையின் கிழிசலில் உயிரும் அலறுகின்றதே

அக்கணத்தில் தொலைத்த நிம்மதியைத் தேடுகின்றேன்

ஆன்மாவின் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் நிரம்புகின்ற

வலி இறுக்கிப் பிடிக்கின்றதே மேனியை


தசாப்தங்களைக் காலங்கள் புரட்டுகின்றன விரைவாக

அடையாளப்படுத்துகின்றன அடுத்த ஊர்கள் அகதிகளென

கழிகின்ற ஒவ்வொரு விநாடியும் கலியே

களிப்பினைத் தொலைக்கின்ற அந்தக் கணங்கள்

ஆயுள் வரை நீட்டுகின்றதே அக்கினியை


தினமும் நெல்லிக்கனியில் தினக்குறிப்பு எழுதுகின்ற

என்னுள் விரக்தி நலம் விசாரிக்கின்றது

மூச்சேந்தும் ஒவ்வொரு நொடியும் தெளிக்கப்படுகின்ற

மரண அவஸ்தையினை நுகர்ந்தவாறே வாழ்கின்றேன்

என் சுவாசப் பாதையை நிரப்புகின்றது

நெல்லியின் சுவைக்குள் நனைந்த காற்று

அவ்வையும் சுவைத்த நெல்லி யன்றோ

என்றன் உயிரையும் சேதமின்றிக் காக்கின்றது

இன்றுவரை உணர்வுக்குள் விருட்சமாகின்றது அழிவின்றி


ஜன்ஸி கபூர்

கடும் புனல்

ஒளி உமிழ்கின்ற ஒற்றை வெண்ணிலாவும்

கொட்டிக் கிடக்கின்ற நட்சத்திரக் கலவைகளும்

தென்றலின் வருடல் விரல்களும் எனக்குள்ளே

தனிமையை விரட்ட சூழ ஆரம்பிக்கின்றன


நள்ளிரவு நிசப்தத்தை கரைக்கின்ற உணர்வினை

மெல்ல அவிழ்க்கின்றது மெல்லிருட்டுக் கரங்கள்

எட்டிப் பார்க்கின்ற பத்திரப்படுத்தப்பட்ட பசியின்

திணிப்பில் தேகம் திணறிக் கொண்டிருக்கின்றது


வெறுமையைத் துடைக்கும் கடிகாரத்தின் புறுபுறுப்போடு

தனிமை கொஞ்சம் முரண்பட ஆரம்பிக்கின்றது

பூமியின் உறக்கத்தில் விழிக்கின்ற துடிப்பில்

நீள்கின்ற காத்திருப்பின் அலறல் ஆன்மாவுக்குள்


காற்றில் தீயூற்றும் இம்சைக்குள் எதிர்பார்ப்புக்கள்

ஏக்கத்தில் பிசையப்பட்ட மனதோ கசங்குகின்றது

எதிர் சுவற்றில் துணையுடன் பிணைகின்ற

பல்லியின் மோக முணங்கல் நாடியுடைக்கின்றது


எங்கோ நாயின் ஊளைச் சப்தம்

நள்ளிரவின் ஓட்டம் நாடித் துடிப்பினுள்


கதவு தட்டப்படுகிறது எதிரே ஆன்மா

நறுமணக் குவியலின் வீரியப் பார்வையில்

நாணம் கசக்கப்படுவது புரிந்தும் ரசிக்கின்றேனதை


உள்ளே மெல்லிய காற்று நுழைந்து

மோகப் பூக்களை பஞ்சணைக்குள் நிறைகின்றது

பசியை அவிழ்ப்பதற்கான அழகிய தருணமிது

இதழோரங்களில் பத்திரப்படுத்தப்படுகின்றது இதமான ஈரம்

அன்பின் விரல்கள் பிசைகின்ற ஆசைகளை

பரிமாறுகின்ற மடியும் ஏந்துகின்றது ஏக்கத்தினை


இருள் தன்னை மறைப்பதாக இல்லை

எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது இரகசியங்களை

இழுத்திப் போத்திக் கொண்டிருக்கின்ற ஆன்மாக்களை

இரசிக்கின்றது போலும் சிவக்கின்றது இராப்பசி

மயக்கத்தில் அப்பிக் கொண்ட காதல்

இன்னும் விடுவதாக இல்லை அணைக்கின்றது


விழிக்குள் துயிலினை ஊற்றாமல் துரத்தும்

ஏதோவொன்று என்னைப் பிழிந்தெடுக்க விழுகின்றது

பார்வையும் நிதர்சனத்தில்.....ஓ.......பிரமை


பற்றிக் கொள்கின்ற பனியின் விரல்களை

வேகமாக உதறுகின்றேன் மூச்சுக்குள் அனல்

வெளியே நிலாக்கீற்றின் பிரகாச வளையங்கள்

தவிப்புக்களின் பிழம்புகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன


ஆழ்மனதைப் புரட்டுகின்ற மலையின் ஓசை

இடிக்கின்றது உணர்வுகளை துடிக்கின்றது வலி


ஓவ்வொரு இரவும் விட்டுச் செல்கின்ற

எதிர்பார்ப்பின் வேட்கையில் மனம் தினமும்

புதிதாகவே உயிர்க்கின்றது விடியல் காணாது


மௌனமாக வடிந்தோடுகிறது இரவுத் துளிகள்

எண்ணுவதற்குள் ஒளிப்பிழம்பு தட்டியெழுப்பி

உளத்தில் ஊறும் தணல்பொறியினைச் சீண்டுகின்றது


ஜன்ஸி கபூர்

உழைப்பு.

 


உழைக்கும் கரங்கள்

உயர்வின் உரங்கள்

வாழ்வும் செழிக்க

வாழ்வோம் உழைத்தே

ஜன்ஸி கபூர் - 01.05.2021


ஐந்தறிவும் அன்பால்

 


சொல்லும் கேட்கும் ஐந்தறிவும் அன்பால்
துள்ளும் கன்றும் உணர்வை வருடுமே
அள்ளும் விழிகளின் அழகை மறந்தே
கொல்லும் மானிடர் வதைத்தே புசிப்பினும்
வெல்லும் காருண்யம் மாக்களும் நலமாக

ஜன்ஸி கபூர் - 01.05.2021


2021/04/30

உழைப்பின் மகிமை

 


 தொழிலாளர் சிந்துகின்ற வியர்வைத் துளிகள்

வழியும் செல்வங்களாக நாட்டின் அபிவிருத்தியில்

ஆற்றலும் அர்ப்பணிப்பும் முயற்சியும் வலியும்

குவிக்கும் வெற்றிகளால் உழைப்பும் பெருமையுற

வையகத்தில் புகழும்  என்றும் ஓங்கும்


ஜன்ஸி கபூர் - 30.04.2021

உழைக்கும் கரங்கள்

உணர்வுக்குள் உழைப்பேற்றி 
              செய்தொழில் தெய்வமென்றே 
உயிர்த்தே உவக்கின்ற 
              செந்நிறக் கரங்கள்/
வியர்வைத் துளிகளால் 
              உரமேறுகின்றன தினமும் 
விளைச்சல் மேட்டில் 
              வெற்றிகளைக் குவித்திடவே/

தொடுகின்ற வறுமையும் 
              தொடர்கின்ற வலியும் 
மிடுக்குடன் மிரட்டும் 
              போதும் தடுமாறாது 
விடியலைத் தேடி 
             விருப்புடன் பயணிக்கும் 
துடிப்பான மனிதர்கள் 
             வெற்றித் திலகங்கள் 

பொங்கும் வெயிலிலும் 
            பொழுதினை வீணாக்காது 
உழுதே மண்ணையும் 
            பொன்னாக்கும் தங்கங்கள் 
ஊனை உருக்கி 
            உடலை வருத்தி 
தரணிக்குள் தலைகாட்டுகின்ற 
            செல்வங்கள் இவர்கள் 

நித்திரை துறந்து 
             நித்திலம் காத்தே 
சொத்தென வளங்களை 
            நாட்டுக்குள் குவிக்கும் 
முத்தான மனிதர்கள் 
             பெருமையின் வித்தவர்கள் 
சத்தான வாழ்விற்கும் 
           சரிதமாகும் வீரர்கள் 

ஜன்ஸி கபூர் -30.04.2021

பிரச்சினைகள்


இப்படித்தான் வாழ வேண்டுமென எல்லோருக்கும் எதிர்பார்ப்புக்களும், ஆசைகளும் இருக்கும். ஆனால் எதிர்பாராத சூழ்நிலைகள் நம்மை திசை திருப்பி விடுகின்றபோது நிலைகுலைந்து போய் விடுகின்றோம். 

பிரச்சினைகள் சூழ்கையில் ஏன் பிறந்தோமென்ற தவிப்பிலும், விரக்தியிலும் மூழ்கி, நகர்கின்ற ஒவ்வொரு நாட்களும் நரக நெருப்பில் நிற்பதாக உணர்வோம். ஆனாலும் பிரச்சினைகள் நம்மைச் சூழும்போதுதான் சிந்திக்கின்றோம். அதற்குள் உருவாகின்ற புதிய பாதைகளைக் கண்டறிகின்றோம்.


ஜன்ஸி கபூர் - 30.04.2021

எசப்பாட்டு


 💓💓💓💓💓💓💓💓💓💓 

கன்னக்குழி வேர்த்திருக்க 
கருத்தமணி கழுத்திலாட
கருதுமேடும் கலங்கிடவே 
காத்திருக்கும் புள்ள
துடிக்காதே  நீயும் 
சீக்கிரமே வந்திடுவேன்

கத்தரி வெயிலால கருத்திடுவே  
சித்திர விழியும் நொந்திடுமே புள்ள
சத்தியமா உன் நெனைப்புதான்
சாமத்துலயும் அணைக்குதடி மெல்ல  

நெத்தியில பூத்த மச்சம்
வெட்கத்தில சுருங்காதோ 
பக்கத்தில வாரேன் புள்ள
காதோரம் காதல் கொஞ்ச                    
 
ஜன்ஸி கபூர் - 30.04.2021

 

2021/04/29

தன்மானம்

 


தன்மானத்தையும் சுரண்டுகின்ற மிகப் பெரிய ஆயுதம் வறுமையே. தன்மானம் இழந்து அடுத்தவரின் புறக்கணிப்பிற்கும் ஆளாகின்ற ஒவ்வொருத்தரின் சோகத்தின் வலி கண்களின் வழியாகிச் செல்கையில் அதனை தனது மொழியாகி உணருமோ உணர்வுகள்.  

நாவிலே பொய்யும் புரட்டும் இயல்பாகவே சரளமாகின்றபோது மெய்யும் மெய்க்குள் மௌனமாக அடங்கி விடுகின்றது.

ஜன்ஸி கபூர் - 29.04.2021


கள்ளிச் செடி

முட்கள் கூட என் கிரீடங்களே

இருந்தும் சாம்ராஜ்யம் மறுக்கப்பட்டிருக்கின்றது எனக்கு

வனப்புக்களால் வசீகரமாகின்றவர்கள் தருகின்ற வலி

தினமும் என் மொழியாகிப் போகின்றது


வீழ்கின்ற ஒவ்வொரு நீர்த் துளிகளுக்குமாக

விரிகின்ற முட்களுக்குள்தானே என் உலகு

விரும்பிப் பார்க்காதோரை திரும்பிப் பார்க்க

விரல் பற்றுகின்றேன் அவாவின் உச்சத்தில்

முட்களின் பாஷைக்கு அவர்கள் செங்குருதிதானே 

நலம் விசாரித்து தொட்டுப் பார்க்கின்றது.  


பாலைவனங்களும் மயானங்களும் என் முகவரியானதில்

வலை விரிக்காத ஏமாற்று உலகு

தொலைபுள்ளியாகி தள்ளியே நிற்கின்றது தினமும்

வறட்சிக்குள்ளும் பசுமையைக் காக்கின்ற என்னை

யாருமே திரும்பிப் பார்ப்பதாக இல்லை. 


முட்களாக திரிபடைந்த மென் மலர்களுக்காக

பட்டுடல் விரிக்காத வண்ணாத்திகளை சபிக்கவில்லை

புறக் கவர்ச்சி தேடும் உலகில்

தோற்றுப் போகின்றது என் மென்மை


இருந்தும் என்  தேடல் நீள்கின்றது  

தூசிகளுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்ற மலர்களின்

மகிமையை பறை சாட்டுமோ பறவைகள்

வெந்தணலைச் சுவைக்காத கவிஞர்களின் கருக்கள்

பூஞ்சோலைகளைத்தானே  எட்டிப் பார்க்கின்றன மோகத்துடன்


இருந்தும் என்னை தினமும் மதிக்காத

ஓட்டகங்களும் வணிகர்களும் கடந்து செல்கையில்

கடும் வெப்பமும் சிதைக்காத அழகு

என்னிடம் இருப்பதாக பெருமிதம் கொள்கின்றேன்  


வறண்ட தேசங்களின் வைரம் நானே

வளர்கின்றேன் பசுமையை உயிர்க்கும் தருவாக


ஜன்ஸி கபூர் - 29.04.2021


கார்கால வானம்

வறண்ட பூமி வரைந்த பிளவுகள்

வறுமைக்  கீறலாய் வாழ்வைச் சிதைக்கையில்

கார்கால வானம் களித்ததே மழையாகி

வயலின் பசுமை வனப்பாகி பூக்கையில் 

இதயமும் மகிழ்ந்ததே இயற்கையின் அழகில்


ஜன்ஸி கபூர் - 29.04.2021

புதிய விடியல்

அடி வானின் 

            அழகின் உதயம் 

படிகின்றது மனதில் 

              பரவசப் பேரொளியாக 


விடிகின்ற பொழுது 

            விரிக்கின்ற நம்பிக்கைகள் 

மடி தவழ்கின்றன 

           மகிழ்வையும் ஏந்தியபடி 


இரவு கரைந்து 

           இரக்கத்தின் ஊற்றாகி 

வற்றிய வாழ்வும் 

          வசந்தமாகப் பூக்கட்டும் 


தொற்றின் தொல்லை 

          தொலைவில் கலைந்தே 

பற்றாகட்டும் ஆரோக்கியம் 

           பரவசம் நமதாக 


வியர்வையின் விளைச்சலால் 

           விமோசனம் வரலாறாக 

துயரின் நிழலுக்குள் 

           துளிர்க்கட்டும் மகிழ்வும் 


பகைமைகள் மறந்த 

         பண்பான உறவுகளின் 

புன்னகை தேசத்தில் 

         புலரட்டும் விடியல் 


ஜன்ஸி கபூர் - 29.04.2021



2021/04/28

COVID-19 முக்கியமான தகவல்

 

COVID-19 முக்கியமான தகவல்

  • 15-20  நிமிடங்கள் வெயிலில் இருங்கள்

  • குறைந்தது 7-8 மணி நேரம் ஓய்வெடுத்துத் தூங்குங்கள்.
                                                               
  • ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
                                    
  •  அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக அல்ல).
  • கொரோனா வைரஸின் pH 5.5 முதல் pH8.5 வரை இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே வைரஸை அகற்ற நாம் செய்ய வேண்டியதெல்லாம், வைரஸின் அமில அளவை விட அதிகமான கார உணவுகளை சாப்பிடுவதுதான்.

      •   வாழைப்பழங்கள், எலுமிச்சை → 9.9 pH

      •   மஞ்சள் எலுமிச்சை → 8.2 pH
                                            


      •   Avocada fruit - pH 15.6
      •   பூண்டு - pH 13.2
      •   மாம்பழம் - pH 8.7  

      •     ஆரஞ்சு பழம் - pH 8.5 

      •   அன்னாசிப்பழம் - 12.7 pH

      •   ◉ வல்லாரைக் கீரை - 22.7 pH

நீங்கள் குடிக்கும் சூடான நீர் உங்கள் தொண்டைக்கு நல்லது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் உங்கள் மூக்கின் பரணசால் சைனஸின் பின்னால் 3 முதல் 4 நாட்கள் வரை மறைக்கப்படுகிறது. நாம் குடிக்கும் சுடு நீர் அங்கு செல்வதில்லை. 4 முதல் 5 நாட்களுக்குப் பிறகு, பரணசால் சைனஸின் பின்னால் மறைந்திருந்த இந்த வைரஸ் உங்கள் நுரையீரலை அடைகிறது. நீங்கள் சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும். அதனால்தான் நீராவி பிடிப்பது  மிகவும் முக்கியம், இது உங்கள் பரணசால் சைனஸின் பின்புறத்தை அடைகிறது. இந்த வைரஸை மூக்கில் இருக்கும்போதே  நீராவியால் கொல்லப் பட வேண்டும்.

50°C இல், இந்த வைரஸ் முடக்கப்பட்டுள்ளது.  60° C வெப்பநிலையில் இந்த வைரஸ் மிகவும் பலவீனமாகி எந்த மனித நோய் எதிர்ப்பு சக்தியும் அதற்கு எதிராக போராட முடியும். 70°C க்கு இந்த வைரஸ் முற்றிலும் இறந்துவிடுகிறது. நீராவி இதைத்தான் செய்கிறது.

வீட்டில் தங்கியிருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு முறை நீராவி பிடிக்க வேண்டும்.

காய்கறிகளை வாங்க சந்தைக்குச் சென்றால், ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். சிலரைச் சந்திக்கும் போதோ அல்லது அலுவலகத்திற்குச் செல்பவர்களோ ஒரு நாளைக்கு 3 முறை நீராவி எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் வெறும் 5 நிமிடங்கள் நீராவியை உள்ளிழுக்க, ஒரு வாரம் காலை மற்றும் மாலை செயல்முறையைத் தொடங்கவும்.        

அனைவரும் ஒரு வாரத்திற்கு இந்த நடைமுறையைப் பின்பற்றினால் கொடிய கோவிட் -19 அழிக்கப்படும்.

இந்த நடைமுறைக்கு பக்க விளைவுகளும் இல்லை.

நாம் அனைவரும் இந்த கொரோனா வைரஸைக் கொன்று இந்த அழகான உலகில் சுதந்திரமாக வாழ முடியும்.

Copied-

      Jancy Caffoor







அறிவோம்


 

Thank You Dr. Nithiyananda Sir

2021/04/26

பிரார்த்தனை

இரவு பகல் இறைவனின் படைப்புக்களின் இரகஸியம்தான். நிச்சயம் இன்றைய இரவின் முடிவில், நாளைய விடியல் தொடரத்தான் போகிறது. 

ஆனால் வாழ்வில் ...............

கண்களை மெல்ல மூடுகின்றேன். ஈரத்தின் சுமையில் விழிகள் இன்னும் நனைந்தே இருந்தன.

வாழ்வா சாவா எனத் தெரியாமல் மூச்சுத் துவாரங்களை அழுத்தும் கடன் பற்றிய நினைவோடு மனம் மெலிதாக உரசியபோது பயம் பற்றிப் படர்ந்தது.

கண்களில் மரண பயம்!

நாளைய எதிர்காலம் நம்பிக்கையற்றுப் போனது.

நாளை விடிந்தால் கடன்காரர்கள் வீட்டைச் சுற்றுவார்கள். அவர்களைச் சமாளிக்கும் அளவிற்கு மன தைரியம் இல்லை.

விரக்தியின் முன்றலில் அலைந்த மனம் மரணத்தை பற்றியே சிந்தித்தது.

விடியலைத் தர மறுக்கின்ற தொடர் சிக்கல்களின் அழுத்தங்களை தாங்கும் மனநிலை இனியுமில்லை.

வறுமையைச் சமாளிக்க வாங்கிய கடன், இன்று வாழ்வையே மூழ்கடிக்கும் பிரமை  .

கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்த கண்ணீர், பெருமூச்சில் ஆவியாக்கி கொண்டிருந்தது.

"பெரியம்மா"

என்ற அழைப்போடு பிஞ்சுக் கரங்கள்   தோளைத் தொட்டன. திரும்பிப் பார்த்தபோது................

ஏழு வயது நிரம்பிய சின்ன மலர் சிரித்துக் கொண்டு நின்றாள்.

"உங்க கஷ்டம் தீர இப்போ தொழுதிட்டு வாரேன்"

எனச் சொன்னவளை அணைத்தபோது, எனது அழுகை இருளின் நிசப்தத்தையும் உடைத்தவாறு வெடித்தது.

ஜன்ஸி கபூர் - 26.04.2021



சந்தோசம்

நம் சந்தோசம் நம் வசமே. நமது இயல்பான நடத்தைகளிலேயே அது தங்கியுள்ளது. ஆனாலும் கிடைக்கின்ற சொற்ப சந்தோசங்களையும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் வட்டத்தினுள் நம்மைச் சுழற்றி அடுத்தவர்களுக்காகவே நம்மை நம்மிடமே விட்டுக் கொடுத்து மனதின் நிம்மதியை இழந்து விடுகின்றோம்.

ஜன்ஸி கபூர்

அவசரம்

இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்ற உலகம் இயற்கையால்  சூழப்பட்டிருக்கின்றது. மண்ணில் வீழ்கின்ற வித்துக்கள் மறு விநாடியே மரம் ஆவதில்லை. கருவுக்குள் உருவாகின்ற உயிர்கள் இவ்வுலகைக் காண பத்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். பருவ மாற்றங்களோ, காலநிலையோ படிமுறைச் சுழற்சிக்கமைவாக செயற்படுகின்றன.

'மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான்' (17:11) 

என்ற திருக்குர் ஆனின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை   நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆனால்   இந்த நவீன உலகத்தில் வாழ்கின்ற மனிதர்களின் செயல்களில் காட்டப்படுகின்ற அவசரம் எனும் மாயையின் விளைவாக பல எதிர்பாரத விளைவுகள் நம்மை ஆட்கொள்கின்றன. 

நிதானமே பிரதானம் என்பார்கள். ஆனால் பொறுமை இழக்கப்படும்போது நிதானமும் காணாமற் போய்விடுகின்றது.

 ஏன் அவசரப்படுகின்றோம்?

எதற்கு அவசரப்படுகின்றோம்?

சிந்திக்கின்றோமா .....

நினைத்தவுடன் கிடைக்க வேண்டுமென்ற அவசரப் பண்பால் நமது அவசியமான சிந்தனைகள் செயலிழந்து போய் விடுகின்றன. 

பல சந்தர்ப்பங்களில் நாம் எடுக்கின்ற அவசர தீர்மானங்கள், முடிவுகள் என்பன நமது இயல்பான வாழ்வையே திசை திருப்பி விடக் கூடியன.

தற்கொலை செய்வதும் அவசர உணர்வுக் கோளாறே!

விபத்தும்கூட அவசர வேகத்தின் வேதனைப் பக்கமே!!

அவசர வார்த்தைப் பிரயோகங்கள் நம் பெறுமதியான ஆளுமையையே கேலிப்படுத்தி விடும். மன உணர்வுகளை சினம் ஆட்கொள்ளும்போது ஏற்படுகின்ற வார்த்தைப் பிரயோகத்தை அவசரமாக வெளியேற்றும்போது பிறரின் பகைமையும், குரோதங்களும் நமக்குச் சொந்தமாகின்றன.

தோல்வியில் முடிகின்ற சில காதல்கள்கூட அவரமாக எழுகின்ற எதிர்பால் கவர்ச்சியே....

அவசர அவசரமாக கொறித்து உண்பதைப் போல் ஆகாரமெடுக்கின்ற இன்றைய பலருக்கு ஆரோக்கியமும் கெட்டே போய்விடுகின்றது.

நாம் அவசரப்படும்போது பதற்றம் நம்மை அணுகுகின்றது. எதிலும் திருப்தியற்றுப் போகின்றோம். நம் நம்பிக்கை பொய்த்து விடுகின்றது. ஈற்றில் செய்யப்படுகின்ற வேலைகள் செல்லக் காசாகி விடுகின்றன.

திட்டமிடலுடன் கூடிய தீர்மானம் நமக்குள் இருந்தால் நாம் எதற்கும் அவசரப்படமாட்டோம்.

எனவே அவசியமான வாழ்வில் அவசரம் தவிர்த்து வாழ்வோம்

ஜன்ஸி கபூர் - 26.04.2021

 


மயிலிறகே மயிலிறகே


 காதல்

இளமைப் பருவத்தின் சொப்பனம். கனவுக் கூட்டுக்குள் தம் உணர்வுகளை நிரப்பி உல்லாசமாக பவனி வருகின்ற இரதம் இது. காதலை மையப்படுத்தி நகர்கின்ற மனங்களை சோகங்களும், கண்ணீர்த்துளிகளும் எட்டிப் பார்ப்பதில்லை. கவிதைகள் பல பிறப்பெடுக்க இந்தக் காதலே வரம்பமைத்துக் காட்டுகின்றன. 

ஒவ்வொரு பாடலைக் கேட்கும்போது கவிஞனின் கற்பனைத் திறன் நம்மை வியக்க வைக்கும். ஒவ்வொரு வரிகளும் நாம் கடந்து போனவைதான். ஆனால் நம் கண்களுக்குப் புலப்படாத அந்த கைவண்ணம் கலை உணர்வுகள் கவிஞனின் வரிகளை வசப்படுத்தும்போது நாம் ஆச்சரியத்தில் விழிகளை உயர்த்துகின்றோம்.

இந்தப் பாடலைக் கேட்கும்போது.

அதன் இசை நம்மை மானசீகமாக வருடிச் செல்கின்றது. 

அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட திருக்குறளில், மூன்றாம் பால் இன்பத்திற்குரியது என்பார்கள். இன்பத்தின் நிழலில் இதயங்களை குளிர்விக்கக் கூடிய காதலை மையப்படுத்தி இப்பாடல் எழுதப்பட்டாலும்கூட, ஒவ்வொரு வரிகளின் ஆழமான நகர்வு இப்பாடலை ரசிக்க வைக்கின்றது. 

தனது மடியில் அவனை சாய்த்து உணர்வுகளால் வருடுகின்ற பொய்கையாக அவள் மாற, அவனோ தன்னை வசீகரிக்கின்ற பொதிகைத் தென்றலாக அவளை ரசிக்கின்றான்.

காதலின் மையப் புள்ளியே இந்த இரசிப்புத்தான். ஒருவரை ஒருவர் இரசிக்கின்ற அந்த அன்பின் வருடலே சுகந்தமான உணர்வுகளுக்குள் ஒருவரை ஒருவர் தள்ளி விடுகின்றது

மயில் இறகால் வருடும்போது கிடைக்கின்ற மென்மை இந்தக் காதல் உணர்வால் ஏற்படுகின்றது போலும். உயிரும் மெய்யுமின்றி ஏது இலக்கணம். அவள் அவனுக்கு மெய்யெழுத்து. உரிமையோடு அடையாளப்படுத்துகின்ற கையெழுத்து.... 

விழிகளில் உலாவுகின்ற மழைக்கால நிலவாக அந்தக் காதல் அழகாக மாறுகின்றது. 

ஒ ...  ஆத்மார்த்தமான அந்தப் பிணைப்பிற்கு எல்லைகளின் வரையறைகள் இல்லையோ...

வரிகளை இரசிக்கின்றேன் இசை என்கிற உயிர்ப்பினையும் சேர்த்து

 ஜன்ஸி கபூர் - 26.04.2021



வெற்றியைத் தேடி

சாதனையாளர்களின் சரித்திரப் பக்கங்களை வாசிக்கையில் எந்தவொரு சாதனைகளும் இலேசில் கிடைப்பதில்லையெனத் தோன்றும். அந்த வெற்றியாளனின் வாழ்க்கைக்குள் இருக்கின்ற கடினமான உழைப்பு நம் கண்களுக்குள் தெரியும்.   மானசீகமாக உழைக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் வெற்றியைத் தேடுகின்ற நம்பிக்கை இருக்குமாயின் கிடைக்கின்ற ஒவ்வொரு சிறு வெற்றிகளுமே நமது      வாழ்வையே மாற்றியமைக்கின்ற சக்திகளாக மாறி விடுகின்றன.

உயரப் பறக்கின்ற பறவையின் முதல் அடி கூட மெல்லிய தத்தித் தத்திப் பறப்பதற்கான முயற்சிதான். நம்பிக்கையுடனான அந்தப் பயிற்சிதான் நீண்ட வானில் சுதந்திரமான உலாவுகைக்கான உத்வேகமாக மாறுகின்றது. நாமும் சாதனையாளர்களாக மாறுவோம்.

ஜன்ஸி கபூர் - 26.04.2021


2021/04/25

நலம் வாழ சில வார்த்தைகள்








 Thank You - Dr.S.Nithiyananda

நலம் வாழ சில வார்த்தைகள்




Thank You - Dr. S. Nithiyananda 
 

பைத்தியம்

 

மெல்லிய கூதல் காற்றும், கருக்கட்டிய மேகமும் மழை வருவதற்கான அறிவிப்புக்களோ... 

வெறிச்சோடிக்கிடந்த வீதியில் அந்த வயோதிபப் பெண் வேகமாக நடந்து வருகின்றார். வயது எழுபதைத் தாண்டிய தோற்றம். கிழிசலும், அழுக்கான ஆடையும் அவருடைய மனநிலை சரியில்லை என்பதை அடுத்தவர்களுக்கு சொல்லக் கூடியனதான்.

"அந்த மனுஷிக்கு கொஞ்சம் மூளை சொகமில்ல. அங்கால போ புள்ள"

 என தன் மகளை விரட்டும் பக்கத்து வீட்டு ஆன்டியின் குரல் கேட்டு நானும் அம்மணியைப் பார்க்கின்றேன். 

அடுத்தவர்கள் சொல்லிச் சொல்லியே எனக்கும் அவர்மேல் சற்றுப் பயம்தான். தலையை வாசல் கேற் உள்ளுக்குள் இழுத்து மறைகின்றேன். ஆனாலும் பாவம் எனது அம்மா தெரு வாசல் பக்கம் துப்பரவு செய்து கொண்டிருந்தார். அம்மாவைத் தாண்டித்தான் அப்பெண் தன்னிருப்பிடத்திற்குச் செல்ல வேண்டும். 

எல்லோரும் பயந்து ஒதுங்கும்போது அம்மாவோ எந்தப் பதற்றமும் இல்லாமல் வாசல் பெருக்கிக் கொண்டேயிருக்கவே மெல்லத் தலையை நீட்டி வெளியே பார்த்தேன். அம்மாவைக் கடந்து சென்ற அப்பெண் திடீரென நின்றார். திரும்பி அம்மா அருகில் வந்து நின்றார். அம்மாவுடன் ஏதோ பேச்சுக் கொடுக்க, அம்மாவும் இயல்பாக பேச ஆரம்பித்தார். எனது விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்தன.

எல்லோரும் பைத்தியம் என முத்திரை குத்திய பெண் இப்பொழுது,போக மனமின்றி அம்மாவுடன் பேசிக் கொண்டே நின்றா.

அம்மா மாட்டிக் கொண்டாவோ?

சற்று தைரியத்துடன் அம்மாவின் அருகில் சென்றேன்.

"புள்ள உன்ர முகம் மகாலக்ஷிமிகரமா இருக்கு. உனக்கு என்ன உதவி வேணுமோ கேள். செய்து தாரேன். கைவிளக்குமாறு செய்து தாரேன். அதால தெரு வாசலக் கூட்டினா வடிவாயிருக்கும்."

அப்பெண் பேச்சு தொடர்ந்தபோது அதிர்ந்தேன். 

அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். அம்மாவின் முகத்தில் புன்னகை மாறவேயில்லை.

அந்தப் பெண் சென்றதும் அம்மாவே சொன்னா,

"அவக்கு பைத்தியம் என்று சொல்றாங்க. ஆனா என்ன மட்டும் றோட்டில கண்டா நின்று கதைப்பா. பாவம் அவ"

  அப்பெண்ணின் மெல்லிய மனமும் உதவி செய்கிற எண்ணமும் தெரியாமல் வெளியே நின்று விமர்சிக்கும் பலரே எனக்குள் பைத்தியங்களாகத் தெரிகின்றார்கள் இப்போது.

ஜன்ஸி கபூர் - 25.04.2021


ஒவ்வொரு விடியலும்

 

ஒவ்வொரு விடியலும் எல்லோருக்கும் நம்பிக்கைக்கான ஒளி விளக்குதான். மனதிலே தேங்கிக் கிடக்கின்ற நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள் இன்றாவது நிறைவேறுமென மீள எதிர்பார்த்து காத்திருக்க வைக்கின்றது. நினைத்த எண்ணங்கள் மீள ஏமாற்றமாகி சோர்ந்து விழுகையில் நாளைய விடியலாவது விடை தருமென மீள மனதில் புதிய நம்பிக்கையுடன் வாழ்தல் தோல்வியை வாழ்விலிருந்து நகர்த்தி விடுகின்றது.

இலவசமாகக் கிடைக்கின்ற கற்பனைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் காலம் இலேசில் பதில் தருவதில்லை. சோர்வான மனங்கள் சோபை இழக்கையில் விரக்தி நம்மைச் சூழ்ந்து விடுகின்றது. எனவே கிடைக்கின்ற தோல்விகளை உதிர்க்கின்ற வரையில் நம்பிக்கையுடன் வாழ்வோம்.

Jancy Caffoor - 25.4.2021


Covid 19


Thank You - Dr.Nithiyananda