About Me

2012/10/13

ஓ....மானிடா!


வண்ணப்பூச்சிகளின்
சின்னச் சிறகினில்.............
சிலுவையறையும் மானிடா!
செவி நுழைத்திடு- என்
ஆவேச வார்த்தை சில கேட்டிட!

உன்..........
சொப்பன ஒளியூட்டலுக்காய்.......
இன்னுமா
சீதன  நாவால்
பெண்மையை நக்கி........
சத்தியத்தின் இமைதனில்
சத்தமின்றி ஆணி அறைகின்றாய்!

வறுமைக் காதலால்
வனப்பைக் காவாக்கி.............
பள்ளியறை தொடாத இருண்ட
நிலவறைக்குள்.........
முதிர்கன்னியாய் மறைந்திருக்கும்
பல பெண் வாழ்வினில்- சீ
தனமே விதிக்குரலாய்
அரங்கேற்றப்படுகின்றதுன் இச்சையால்!

கன்னக் கதுப்பில்
கண்ணீர் கரைத்து........
விழிச்சிவப்பை இமைக்குள் மறைத்துப்
போராடும்
பெண் நிலாக்க ளென்றும்
சாம்பர் முகட்டுக்குள் பதுங்கும்
அமாவாசைகளோ உன்னால்!

வசந்தம் மறந்த தெருக்களாய்...........
வாலிபத்தை தனிமைக்குள்
ஏலமிட்டு....................வெறும்
ஏக்கத்தைச் செந்தணலில் குலைத்து
காத்திருக்கும் குமரிகள்- இன்னும்
கல்யாணச் சந்தையில் விலை போகாத
பண்டங்கள்!

நிறம் மாறும் வாழ்வினில்
பருவங்களைத் தொலைவில் நகர்த்தி............
ரணங்களால்
கனவுகளைக் காயமாக்க
காரணமாகும் அற்பர்களே!

உம் வாழ்க்கையை விலை பேசும்
தரித்திரர்களா நீங்கள்..........
சிந்தியுங்கள் ...........
உங்கள்  யதார்த்த நெருடலில்
எமக்கான  நிந்திப்புக்களை!

அன்பை மட்டுமே யாசிக்கும்
ஆடவனுண்டோ
இவ்வுலகினில்!
ஈரம் உதிர்க்கும் கண்ணீரை
உறிஞ்சியெடுக்கும் உத்தமனாய்..........
ஊர் போற்ற
எவனுண்டு - பெண்ணவள்
ஏக்கம் கலைத்து - அவள்
வாழ்வைப் பேணிட!

பெண்ணவள் ..........
விடியலின் குரலுக்காய்
விழிபார்த்து.......................
காத்திருக்கும் காத்திருப்புக்களை
காமுகர்கள் எச்சில்படுத்த முனைகையில் !

பணத்தின் மாயைக்குள் வீழ்ந்திருக்கும்
மானிடங்கள்.........
வெறும் விமர்சனங்களால்
மட்டுமே
அனுதாபங்களைத் துப்பிச்செல்லும்!

இன்னுமா மயக்கம்.....!

மானிடா..............
உன் சுரண்டல்களால் உருக்குலைந்த
பெண்ணவளுக்குள் வாழ்க்கை பூட்டு
அதுவே போதும் - உன்
ஆண்மையின் அடையாளமாய்!


2012/10/12

உனக்கான கவிதைகள்


நாட்காட்டி கிழிக்கப்படுகின்றது
நாடி நரம்புகளில்
மின்சாரம் பாய்ச்சுது உனக்கான
என் நினைவுகள்!

உதடுகளை நசித்து
வெளியேற்றப்பட்ட  என் வார்த்தைகள்.......
மொழிபெயர்க்கப்படுகின்றன
அழகானவுன் பெயராய்!

உன் சுயம் நானானதில் - என்
சுற்றுப்புறங்களெல்லா முன் தேடலில்
வீழ்ந்து முரண்படுகின்றன
உன் காதலின் ஆழம் புரியாமல்!

மனசைத் தட்டிப் பார்க்கின்றேன்.........
தரிப்புக்களாய் உன்
அந்தரிப்புக்கள் ................
ஏக்கத்தையும் பிணைந்தபடி!

இரவின் மௌன வாசிப்புக்களில்
எனை நீயுறிஞ்சி
கனவுகளால் மோகிப்பதால்
நிதமும்
கருத்தரிக்கின்றேன்
உன் கவிக்குழந்தைகளைப் பிரசவித்தே!

என்............
விரல் பற்றி
நீ பயணிக்கும் சாலையெங்கும்.........
காற்றின் துளைகளிலும்
காதலின் சுகமப்பிச் செல்கின்றது
நம்மை அணைத்தவாறு!

என் வாழ்க்கைப் பிரமிட்டுக்களின்
ஒவ்வொரு அணுக்களும்....................
அணு அணுவாயுன்னைச் சேமித்தே
ரசிப்பில்
உறைந்து கிடக்கின்றது
உன்னுடன் வாழ்ந்தபடி!

நினைவுகளில்
மிருதுவாய் யென்னைத் தழுவி..............
ஸ்பரிசங்களால்............
செல்களை புல்லரிக்கும் நீ!

செல்களிலுன் குரலை
நிரப்புகையில்.........
பல நிமிடங்கள் மறந்து
காற்றலைகளுடன் மோதல் செய்கின்றேன்
நம் சமுத்திரங்களின்
எல்லைச்சுவரை கரைக்கும்படி!

உனக்கான என் கவிதைகளை
கவர்ந்தெடுத்து வா!
தாஜ்மஹாலின் படிவுகளாய்
நாமும் வீழ்ந்து கிடக்கலாம்
காலத்தின் மடிகளில்!






2012/10/11

இமைக்க மறுத்த விழிகள்


சூரிய தீப்பந்தமொன்று
மெதுவாய் அணைந்த பிரமை
எனக்குள்!

வெட்ட வெளிகளின் பசுமையில்......
ஒட்டிக்கொண்டது வெம்மையின்
பிசுபிசுப்பொன்று!

என் பேனாக்கள்
பயணித்த வரம்போரங்களெல்லாம்.........
முள்வேலியாய்
ஈரம்சொட்டுதுங்கள் மௌன யாகம் !                          

வண்ணச்சிட்டுக்களுக்காய்
பா விசைத்து ...........
களிப்பால் பறக்க வைத்த வுங்கள்
சிறகுகளில்  யாரிட்டது மரணச்சிலுவை !

எழுத்தணியில்
அழுத்தமாய் முற்போக்கு நுழைத்து.........
இலக்கிய வேள்விக்குள்
இரசனையோடு யதார்த்தம் நுழைத்த
நீங்களின்று..............
இரகஸியமாய் சுவாசமறுத்தே
மீளாத்துயிலுக்குள் நிரம்பிக் கொண்டீர்கள்!

வெள்ளிச்சிறகடித்த வுங்கள்
வெண்புறாவோ..............
இன்று
சுதந்திரமாய் தேசம் தொடுகையில்.........
தொலைதூரத்தி லும் வுரு துறந்து
ஏதுமறியாத குழந்தையாய் நீங்கள்!

தினகரன்
புதுப்புனலில் தடம் நெய்து - எனை
புதுவுலகில்   நிலைநாட்டிய
உங்கள் ........
பேனாக்களின் ஈரலிப்பினை
உலர்த்தியது யாரோ!

எனை வார்த்த வுங்கள்
இலக்கியச்சாளரம்
சாய்ந்துதான் போனாலும் - என்
விழிச்சாரளத்தின்
விம்ப வெளியெங்கும்..........
உலா வருகின்றதே - உங்கள்
ஆசிபெற்றவென்
இலக்கிய நீரோடையின்று !

உதிர்ந்து விட்ட பல வருடங்கள்
இன்னும் நேற்றுப் போல்...................
நெஞ்சிலாணி யறைந்தே செல்கின்றது
உங்கள் ஞாபகங்களை
இலக்கியங்களாய்ப் பரப்பி!

உங்கள்.........
மரணத் தூரிகையின் வடு
இன்னும் என்னுள்
உலராத மேடுகளாய் வலிப்புடன்
விட்டுச் செல்கின்றது வெடிப்புக்களை!

மீள வரமாட்டீர்கள்!
புரிகிறது - இருந்துமென்
பதிவுகளின் ஸ்பரிசிப்பெல்லாம்.........
குருதாட்சணையாய்
உங்கள் ஞாபகத்தில் தொக்கி நிற்கும்
நல்ல மாணவராய்!

- Ms.A.C.Jancy -


(காலம் சென்ற எழுத்தாளர்  ஸம்ஸ் சேர்..............அவர்கள்!

முன்னர் தினகரன் பத்திரிகையில் (சனிக்கிழமையில் )பிரசுரிக்கப்பட்ட  புதுப்புனல் இலக்கிய சோலையில் என்னையும் உட்பதித்தவர்....அன்று துணிச்சலாக அவர் ஏற்றுக்கொண்ட என் கதைகளும், கவிதைகளும் தான் இன்று எனக்குள் ஓர் அடையாளத்தைப்பதித்து சர்வதேசத்தில் என்னையும் உலாவ , எழுத வைக்கின்றது!)

2012/10/10

விரல் தொடும் தூறல்


கோடை விரண்டோட
கொடை வள்ளலாய் - சிறு தூறல்
நடைபயில்கின்றது
என் மண்வெளியில்!

படையாய் இறங்கு மின்னலும்
குடைந்தெடுக்கும் இடியும்..........
தடையின்றி யெமக்குச் சொந்தமாக
விடை தர மனமின்றியே

கரைந்து வழிகின்றது மண்வாசம் - சுவாசம்
நிறைத்தே சுகமாய்!


-Jancy Caffoor -

உன்னோடு ..........


சிறகு நெய்தேன் - உன்
உணர்வோடு பறந்து வர !

உன்......
காதல் விரல்களில்
ரேகையாகிப் படர்ந்தேன் - நீ
செல்லும் பாதைகளில்
விழி விரித்துக் கிடக்க!

உன்..........
பெயர் உச்சரித்தே
பழக்கப்பட்ட என்னுதடுகளின்று
உரிமையோடு நடைபயில்கின்றன - உன்
ஸ்நேக வெளிகளில் உல்லாசமாய்!

சரம்












r




2012/10/09

முயன்றோர் தோற்றதில்லை....



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக,


(08.10.2012ந் திகதியன்று பாடசாலைக் காலைக்கூட்டத்தில் சொற்பொழிவாற்றும் சந்தர்ப்பம் எனக்களிக்கப்பட்டது. நான் உரையாற்றிய விடயத்தின் பதிவிது )

வாழ்க்கை என்பது இறைவனால் மனிதனுக்களிக்கப்பட்ட மிகச் சிறந்த கொடையாகும். அவ் வாழ்வை நாம் வசப்படுத்துவதும்,  இழப்பதும் நம் கையில்தான் உள்ளது. நல்ல அனுபவங்களை நாம் தேடிப் பெற்றுக் கொள்வோமாயின், அவ் வாழ்வும் நம்மை பிறருக்குச் சிறந்தவர்களாக அடையாளப்படுத்திக் காட்டும்.

எனவே நாம் சிறப்பான வாழ்க்கை வாழவேண்டுமானால், நமது வாழ்க்கைப் பயணம் தேடல் மிகுந்ததாக இருக்க வேண்டும், இத் தேடல் தானாக வராது. நமது முயற்சியின் அளவுக்கேற்பவே தேடலும்  நம் வசப்படும். எனவே முயற்சி நமக்கவசியம். நம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் முயற்சியின் வலிமையுடன் ஆரம்பிக்கப்படும் போது, வெற்றியும் இலகுவாக தன்னை நம்முள் விட்டுச் செல்கின்றது. "முயன்றார் ஒருபோதும் தோற்பதில்லை"
எனவே முயற்சி பற்றிய வார்த்தைகளை இங்கு சொல்வது பொருத்தமென்று நினைக்கின்றேன்.

ஒரு செயலைச் செய்ய முன்னர் அச்செயல் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நமது சிந்தனை சரியாக அமைந்து விட்டால், அதன் பின்னரே அதனுடன் தொடர்பான  செயலிலீடுபட வேண்டும். இச் செயலுக்கு அதிக ஊக்கம், முயற்சி, கவனம் கொடுக்கும் போது வெற்றியும், சிறப்பும் நம் செயலுக்குள் பொருந்திக் கொள்ளும்.

மாணவராகிய உங்கள் வாழ்க்கையின், வெற்றியின் ஆரம்பப் படிக்கற்களாக விளங்குவது கல்வி கற்றலேயாகும். கல்வியை உணர்ந்து கற்றல் வேண்டும். அப்போதுதான் அதன் பயனை மாணவர்களாகிய நீங்கள் முழுமையாக உங்கள் வாழ்நாளில் அடைய முடியும்.

முயற்சி என்றால் என்ன.......ஒரு விடயத்தை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக நம்மால் மேற்கொள்ளப்படும் அதிக பிரயத்தனம்..அல்லது செயற்பாடுகள் என்றும் கொள்ளலாம் .

இம்முயற்சியுடன் தெடர்புடையதாக, சிந்திக்கத்தக்க சிறு கதையொன்றைச் சொல்லப் போகின்றேன்.....

படிப்பில் ஆர்வமுள்ள மாணவனொருவன் சில நாட்களாக மனம் சோர்வுற்றிருந்தான். காரணம் அவன் படிக்கின்ற விடயங்கள் யாவும் அவனுக்கு சீக்கிரம் மறந்து விட்டன. இப்பிரச்சினையால் பரீட்சைகளிலும் அவன் குறைவாகவே புள்ளிகளையும் பெறத்தொடங்கினான்..எவ்வளவு நன்கு படித்தும் ஏன் மறக்கின்றன...சிந்தித்தும் அவனுக்கு விடை தெரியவில்லை.

ஒருநாள் இப் பிரச்சினைக்குப் பதில் தேடி அவனுக்குப் பிடித்தமான அவன் குருவாகிய ஓர் ஆசிரியரிடம் போனான். ஆனால் அன்று அவ்வாசிரியர் அவனைக் கண்டு கொள்ளவேயில்லை. வருத்தத்துடன் வீடு திரும்பியவன், மீண்டும் தன்னைப் பற்றிச் சிந்தித்தான். அவர் தன்னை இப்போது விரும்பாமைக்கான காரணங்களாக சில விடயங்களைத் தானே யோசித்து, அவற்றை தன்னிலிருந்து நீக்கியவனாக 

ஒரு மாதம் கழித்து மீண்டும் அவரைச் சந்திக்கப் போனான். ஆனால் அன்றும் அவ்வாசிரியர் அவனைப் பொருட்படுத்தவில்லை. அவர்  இம் முறையும் சந்திக்கவில்லையே. மனக்கவலை மாணவனுக்குள் அதிகமானது..

ஆனால் அவன் சோரவில்லை. அவரைச் சந்திக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் மாற்றவில்லை." மீண்டும் தன்னிடம் காணப்படக்கூடிய குறைகளை நன்கு சிந்தித்து, அவற்றையெல்லாம் முழு மனதுடன் நீக்கியவனாக . அவ்வாசிரியரை மீண்டும் சந்திக்க முயன்றான். இவ்வாறு பல தடவைகள் முயன்று தோற்ற பின்னர், ஒரு நாள் அவனாசை நிறைவேறியது.

அவரைப் பணிந்து தான் வந்த நோக்கத்தை அவருக்கு கூறமுற்படும்போது, ஆசிரியர் திடீரென் பறக்கும் வண்ணாத்துப்பூச்சியொன்றை தன் கைகளுக்குள் பொத்தினார். பின்னர் அவனைப் பார்த்து,

"என் கைகளுக்குள் உள்ள வண்ணாத்திப்பூச்சி உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா, இதற்கு பதில் சொல்லிய பிறகு, உன் பிரச்சினையை எனக்குச் சொல்லலாம்" என்றார்.

மாணவனுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டது. இறந்துவிட்டது எனக் கூறினால், உயிருடன் பறக்க விடுவார், உயிருடன் இறக்கின்றதென்று கூறினால், கைகளால் நசிக்கு சாகடித்து விடுவார்........என்ன பதிலைச் சொல்வது...
சிறிது நேரம் யோசித்த பின்னர், மாணவன் கூறினான்

"வண்ணாத்துப் பூச்சியின் உயிர் உங்கள் கைகளிலேயே உள்ளது குருஜி" என்றான்.

மாணவனின் பதிலைக் கேட்ட ஆசிரியர் அகமகிழ்ந்து, அவனைப் பாராட்டினார்.."

நீ திடீரென பதில் சொல்லாமல் நன்கு யோசித்தே பதில் சொன்னாய். உன் சிந்தனையின் வெளிப்பாடு முயற்சியின் பின்னரே வெளிவந்துள்ளது. உன் பிரச்சினை எனக்குப் புரிகிறது......

நீ கற்கும் நேரத்தில் வேறு திசையில் உன் கவனத்தைத் திருப்பத் தொடங்கியதால்  கல்வி உன்னை விட்டு மெல்ல போகத் தொடங்கியது. இப்போதெல்லாம் அதிக முயற்சியுடன் நீ படிப்பதுமில்லை. படிக்கின்ற விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை. நீ வேறொரு உலகத்தில் சஞ்சரித்ததால் கல்வியுமுன்னை விட்டுப் போகத் தொடங்கியது. கற்ற விடயங்கள் உன் ஆழ் மனதைத் தொடாததால்  ஞாபகமறதியும் உனக்குள் தோழமையாகி, உன்னை வழிகெடுக்கப் பார்த்தது. ஆனால் இப்பொழுதுதான் நீ உன்னை உணர்கின்றாய்....உன் மீதுள்ள தவறுகள், குறைகளைக் கண்டறிய முயற்சிக்கின்றாய்..இந்த முயற்சியெனும் ஆற்றல் உன்னுள் சேரத் தொடங்கிவிட்டது..இம் முயற்சியின் துடிப்பால் இப்போது உன்னால் படிக்கின்ற விடயங்களை ஞாபகப்படுத்த முடியும். நீ கற்றலில் முதலிடம் பெறுவாய்"

எனக் குருஜி அவனுக்குள்ளேற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தினார்.

மாணவர்களே........இக் கதையில் வரும் மாணவனாக உங்களை நினையுங்கள். உங்களுக்கும் இப்பிரச்சினை வரலாம்......வரும்.....பிரச்சினைகள் வரும்போதே தீர்வுகளும் வரத் துடிக்கின்றன..படிக்கின்ற விடயங்களை மறந்து போவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் உங்களுக்குள்ளும் உள்ளது..

ஞாபக மறதி ஏன் ஏற்படுகின்றது?

படிக்கின்ற விடயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட  மனதில் ஆழமாகப் பதியாமையே இதற்குக் காரணமாகும். அவசர அவசரமாகப் படிக்கின்ற மாணவர்கள், தாம் கற்கும் விடயங்களை தெளிவாக உணர்ந்து படிக்க முயற்சிப்பதில்லை. இதனால் படிக்கின்ற விடயங்கள் மறந்து போகின்றன. தினமும் நாம் உட்புகுத்தும் விடயங்களை நினைத்துப் பாருங்கள்..உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர் முகங்கள்....நெருங்கிய நண்பர்கள், நமது வீடு....
இவை யாவும் நம்மால் மறக்க முடியாதவை. எனவே ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கற்க வேண்டும். அப்போதே மறதியேற்படாது. ஞாபகம் நிலைக்கும்.

அவ்வாறே நீங்கள் கற்கும் போது, சில விளங்கிக் கொள்ள முடியாத விடயங்களை சுயமாக விளங்கிக் கொள்ள முயற்சிப்பதில்லை. பக்கத்திலுள்ளவர்களிடம் கொப்பியடித்து சரி வாங்க வேண்டுமென்ற ஆர்வம் , அவ்விடயத்தை நீங்களாகவே விளங்கிக் கொண்டு, உங்கள்  மனதில் ஆழமாகப் பதிக்க முயற்சிப்பதில்லை.

நமது செயல்களை முயற்சிக்காமல் சோர்வுடன் உதாசீனப்படுத்தும் பழக்கத்தால், நாம்  நல்ல பல வாய்ப்புக்களை இழக்கின்றோம். "செய்வன திருந்தச் செய்ய" முயற்சிக்க வேண்டும். அவ்வாறு நாம் முயற்சிப்போமானால் நமக்கான வெற்றிக்கான சக்தியும் திரட்டப்படுகின்றது. அறிவுபூர்வமான நம் முயற்சித் தேடலின் விளைவாக எதிர்காலமெனும் அழகிய வாழ்விடம் உங்களைத் தேடி நடைபயின்று, நீங்கள் ஆர்வப்பட்டிருந்த இலட்சியங்களையும் உங்கள் சொத்தாக்கிச் செல்லும்.

மாணவர்களே...எனவே முயற்சியின் கரங்களுக்குள் உங்களை வலுவாகப் பிணைத்து உங்கள் கல்வியுலகைச் சிறப்பாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கண்டெடுத்த தனித்திறமைகளால்  தலைநிமிர்ந்து நில்லுங்கள். அவ்வாறான நிலையில் நீங்கள் வாழும் போதே வாழ்த்தப்படுவீர்கள். காலத்தின் சுவர்களில் உங்கள் பெயரும் பொறிக்கப்பட இறையாசியுடன் முயற்சியுங்கள்!