About Me

Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

2021/05/05

காலம் பொன் போன்றது

 வாழ்க்கை எனும் நீண்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற எமக்கு காலம் எனும் மைல் கல்லே திசைகாட்டியாக நின்று வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. நம்மைக் கடந்து செல்கின்ற அந்தப் பெறுமதியான காலத்தின் நகர்வு நமது அனுபவங்களையும் அதிகரித்துச் செல்கின்றது. 

நேரம் என்பது நம்மிடம் காணப்படுகின்ற மிகப் பெரிய சொத்து. அதனை சரியாகப் பயன்படுத்தும் அறிவு திறன் நம்மிடம் இருக்கும்பட்சத்தில் அந்நேரம் நம் வாழ்வின் பொன்னான நேரமாகி விடுகின்றது. முன்னேற்றம் நம் வாசலைத் தொட்டு விடுகின்றது.

ஆனால் காலத்தை வீணாக்கி விட்டால் அல்லது நாளை நாளை எனத் தள்ளிப் போட்டால் நகராத கடிகாரம் போல் நாமும் செயலற்றுப் போய் விடுவோம். அற்புதமான அழகிய பெறுமதியான வாழ்வும் விழலுக்கிறைத்த நீர் போல் வீணாகி விடும்.

'காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது ''காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது', 'காலம் பொன் போன்றது', "பருவத்தே பயிர் செய்",  "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து",  "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" போன்ற பழமொழிகள்கூட வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்புக்களே.

கற்கின்ற காலத்தில் கண்ணாகப் போற்றப்படுகின்ற நேரங்களின் பெறுமதியால் சிறந்த எதிர்காலம் மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. ஆனால் மாறாக வீணடிக்கப்படுகின்ற விநாடிகள்கூட வலியின் சுமையால் தளம்புவதை நாம் அறிவோம். நம் முன்னே நிழலாடுகின்ற காலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். நினைவுகளில் எழுகின்ற நல்ல எண்ணங்களை நாம் உரிய காலத்தில் செயற்படுத்த வேண்டும். ஏனெனில் சிந்தனைகளை நம்மை வழிப்படுத்துகின்றன. வளப்படுத்துகின்றன. 

இலக்கில்லாத வாழ்வு சக்கரங்கள் அற்ற வாகனம் போல் குறித்த இடத்திலேயே தரித்து விடும். எனவே செய்யப்போகின்ற ஒவ்வொரு செயல் பற்றியும் சிந்தித்து திட்டமிட்டு செய்வோமானால் நமக்கு மன நிறைவு ஏற்படும். அத்துடன் கால விரயமும் ஏற்படாது. நமது நேரம் நமக்காக உருவாக்கப்பட்டது. அதனை நாமே சிறப்பாகச் செய்ய வேண்டும். அந்நேரத்தில் சிறு துளியாகினும் தேவையற்ற விதத்தில் செலவளிக்கின்றபோது நம் மிகப் பெரிய பலம் பலகீனம் எனும் வலையினுள் சிக்கி விடும். காலத்தை சிறப்பாகப் பயன்படுத்தும்போது சாதனைகள் பல நம் வசமாகின்றன. எனவே காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றி எனும் பாதையில் செவ்வோமாக.

ஜன்ஸி கபூர் - 05.05.2021


2021/04/15

அப்துல் கலாம்


தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் ஆஷியா உம்மா தம்பதியனருக்கு   மகனாக 1931 ஆம் ஆண்டு அக்தோபர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த கலாம் அவர்கள் தனது இளமைக் காலத்திலேயே குடும்பத்தைக் காத்தவர்கள்.  

இயற்பியல் இளங்கலைப் பட்டதாரியான அவர்கள் தனது ஆர்வத்தின் காரணமாக விண்வெளி பொறியியல் படிப்பையும் மேற்கொண்டு முதுகலையும் பெற்றார்கள்;. 1960 ஆம் ஆண்டு விஞ்ஞானியாக ஆராய்ச்சிகளைத் தொடங்கியவர் விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கைக்கோள் ஏவுதலிலும் முக்கிய பங்காற்றினார்கள்;. ஹெலிகொப்டர் வடிவமைப்பு அணு ஆயுதச் சோதனை உள்ளிட்ட ஏவுகணைத் திட்டங்களிலும் பங்கேற்றார்கள். இவரது முற்போக்குச் சாதனைகளால் சகல நாடுகளின் பார்வையையும் இந்தியாமீது திருப்பியது மாத்திரமல்ல இந்தியாவும் வல்லரசானது.  

அன்பினால் மக்கள் மனங்களை வென்று 2002 ஆம் ஜூலை 25 ஆம் திகதி இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார்கள். பாரத ரத்னா உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளதுடன் அக்கினிச் சிறகுகள் உள்ளிட்ட சில நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்கள். 

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பதை வலுவூட்ட   முன்னேற்ற இந்தியாவுக்காக கனவுகளைக் கண்டு அதனை நனவாக்க பாடுபட்டு உழைக்குமாறு இளைஞர்களுக்கு உற்சாகமூட்டிய மிகச்சிறந்த தலைவர். 2007 ஆம் ஆண்டு தனது குடியரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்கள். பல்வகை ஆளுமைகளுடன்   வாழ்ந்த ஏவுகணை நாயகன் 2015 ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி இவ்வுலகை நீத்தார்கள்.  

அந்தவகையில் தனது வாழ்வை எளிமையாக ஆரம்பித்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வரலாறும் காலத்தால் மறக்கப்படாதது. 


ஜன்ஸி கபூர்  - 20.10.2020

எது சுதந்திரம்

 

 

  • சுதந்திரம் என்பது பிறர் தலையீடின்றி நாம் அனுபவிக்கும் விடுதலையாகும். உண்மையில் சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றனவா? எனும் தேடலுக்கான விடை சுதந்திரத்தின் யதார்த்த நிலையை உணர்த்தும்.
    நாம் அனுபவிக்க வேண்டிய சமூக சுதந்திரமானது அரசியல், தனிமனித, தேசிய, சர்வதேச, பொருளாதார, தார்மீக, வீட்டுச் சுதந்திரம் எனப் பல கூறுகளினாலானது.
    யாரிடம் வலிமை இருக்கின்றதோ அங்கே சுதந்திரம் காணப்படுகின்றது. அந்த வலிமை நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. ஒரு மனிதன் தான் விரும்புகின்ற செயல்களை எல்லாம் தன்னிச்சையாகச் செய்ய முடியாது. கலாசாரம், பண்பாடு போன்ற வேலிகளை இடுவதன் மூலமாக தனிமனித சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
    குடும்பக் கட்டமைப்பில் நாம் உறவுகளால் சூழ்ந்தே காணப்படுகின்றோம். அவர்கள் ஏதோவொரு விதத்தில் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். எனவே ஒரு தனிமனிதனின் வீட்டுச் சுதந்திரம் முழுமையாக அனுபவிக்கப்பட முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. இவ்வாறே தார்மீக சுதந்திரமும் மீறப்படுகின்றது.
    ஏழை, பணக்காரன் எனும் அந்தஸ்து பொருளாதாரச் சுதந்திர நிலைமையைச் சிதைக்கின்றது.
    சுதந்திர நாட்டின் முக்கிய பண்பு மனித சமத்துவமாகும். நாட்டில் முழுமையான சமத்துவம் பேணப்படுகின்றதா? அவ்வாறாயின் ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன?
    ஒரு பெண்ணால் இரவில் தனியாக நடமாட முடிகின்றதா?
    வருடாவருடம் சுதந்திரதினம் கொண்டாடுகின்றோம். ஆனால் அடிமைத்தனமான அடித்தள உணர்வினை நாம் அறுப்பதாக இல்லை. வரிகளாலும், எழுத்துக்களாலும் முன்மொழியப்படுகின்ற சுதந்திரம், உணர்வு ரீதியாக இன்னும் செயலுருப் பெறப்படவில்லை என்பதே இன்றைய உண்மை நிலையாகும். சுதந்திரமாக வாழ்கின்றோம் எனும் மாயைக்குள் நாம் நமது சுதந்திரத்தை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.
    ஜன்ஸி கபூர் - 26.10.2020
  •  

பசுமை காப்போம்

 


பரந்து விரிந்து காணப்படுகின்ற ஆகாயக் கூரைக்குள் தன்னை அடக்கிக் காணப்படுகின்ற அழகிய பூமிக்கு இறைவனால் வழங்கப்பட்ட அற்புதமான  வளங்களே பசுமை மரங்களாகும். பச்சைப் பசேலென கண்ணுக்கு இதமளிக்கின்ற இயற்கைக் கொடையினை காக்க வேண்டிய பொறுப்பு நமது கரங்களில் தங்கியுள்ளது. 

சுயநலம் எனும் குறுகிய சிந்தனையால் மனிதர்கள் தமது தேவைகளுக்காக பசுமையைத் தாக்குகின்ற விசக் கிருமிகளாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள். 

இயற்கைச் சமநிலை பேணப்படக் கூடிய விதத்தில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்குமிடையில் காணப்படுகின்ற பிணைப்பு இப்பசுமை அழிப்பினால் அறுந்து போவதனால் புவியின் உயிர்ப்பான கட்டமைப்பும் செயற்பாடுகளும் அழிவடைகின்றன.பசுமைக்குள் நாம் அழிவினை ஏற்படுத்தும்போது ஓசோன் படை சிதைவடைகின்றது. அத்துடன் தட்ப, வெப்ப சூழ்நிலை மாற்றம், அனல் காற்று, நிலத்தடி நீர் வற்றிப் போதல், பருவ மழை பொய்த்தல், சூழல் மாசடைதல் போன்ற இயற்கை நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்படுவதுடன்இ சுவாசப் பாதிப்புக்கள் உள்ளிட்ட நமது தேக ஆரோக்கியமும் பாதிப்படைகின்றன. 

நாம் இயற்கை எனும் சொத்துக்கு ஏற்படுத்துகின்ற சேதத்தால் நமக்கு நாமே அழிவினை ஏற்படுத்துகின்றோம். நமது வாழ்வின் வனப்பினையும் அழிக்கின்றோம். நாகரிக வளர்ச்சி எனும் மாயைக்குள் நாம் ஏற்படுத்தும் அழிவு உலகத்தையே ஆபத்தின் விளிம்புக்குள் தள்ளுகின்றது. பூமியை உயிர்ப்புடன் அசைத்துக் கொண்டிருக்கின்ற சுவாச மையமான இந்த பூமியைக் காக்க வேண்டுமானால் மரங்களை வெட்டுவதைத் தவிர்தது புது மரங்களை நட்டுதல் வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வுகள் மூலமாக பசுமையைக் காத்து இயற்கை இன்பத்தை நாமும் அனுபவிக்கலாம்.

ஜன்ஸி கபூர் - 01.10.2020


பெண்மையைப் போற்றுவோம்

 

மென்மை எனும் போர்வைக்குள் தன்னைப் போர்த்திக் கொண்டிருக்கும் பெண்மை இவ்வுலகின் வெளிச்சத்திற்கான கண்கள். பண்டைய காலந்தொட்டு இற்றைவரை பெண்மைக்குள் பொதிந்திருக்கும் நாற்குணங்களால்  ஈர்க்கப்படாதோருண்டோ?   நல்லறத்தின் வடிவமாகவும் பண்பாட்டின் மகுடமாகவும் வாழ்க்கைக்கான தவமாகவும் சக்திமிக்க தாய்மையாகவும் திகழும் பெண்ணானவள் ஒவ்வொரு ஆணின் இயக்கத்திற்குமான சக்தியாகவே பரிணமிக்கின்றாள். இவ்வுலக நிலவுகைக்குள்ளும் அவளின் பண்புகள் நினைவூட்டப்படுகின்றன.  இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் அவளின்; மாண்புகள்  பிரகாசித்துக் கொண்டேயிருக்கின்றது.  

பெண்ணின் சிறப்பினை உலகப் பேராசான் வள்ளுவனும் தனது குறளில் தனி அதிகாரமிட்டு சிறப்பித்துக் கூறியுள்ளார். தாயின் காலடியில் சுவர்க்கம் இருப்பதாக திருக்குர் ஆன் கூறுகிறது. ஓவ்வொரு மதமும் பெண்மையைக் கண்ணியப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு பெண்மைக்குள்ளும் குடும்பத்தைப் பரிபாலிக்கின்ற சிறந்த நிர்வாகத் திறன் காணப்படுகின்றது.  

பெண்மையைச் சுற்றிக் காணப்படுகின்ற பல்வேறு யதார்த்தங்களின் நெருக்கடிகள் அவளது போராட்டத்திற்கான தடங்களை உருவாக்குகின்றன. பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குடும்ப அடக்குமுறைகள் பொருளாதார நெருக்கடிகள் போன்ற இடர்களில்   சிக்குப்படுகின்ற   நிலை இன்றைய முன்னேற்றமான உலக வாழ்வியலிலும் அரங்கேற்றப்படுகின்றது என்பதே கசப்பான உண்மையாகும். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக் கோஷமிட்ட அன்றைய நாட்கள் தொடக்கம் ஆணுக்குச் சரிசமனாக உரிமைகளை அனுபவித்து வாழ்கின்ற  இன்றைய காலகட்டம் வரையில் காணப்பட்ட பெண்ணின் வளர்ச்சிப்படி நிலையில் பல்வேறு போராட்டங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

 பெண்ணின் முன்னேற்றத்திற்குத் தடையாகக் காணப்படும் அனைத்துக் காரணிகளையும் இனங்கண்டு தகர்த்துவதன் மூலம் பெண்ணின் மேன்மையைப் பாதுகாக்கலாம்.

எனவே பெண்ணுக்கான மதிப்பும் மரியாதையும் எள்ளளவும் குறையாது   அவளைப் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொருவரின்   கடமையாகின்றது.

ஜன்ஸி கபூர் - 12.10.2020

2021/04/14

முதியோர் இல்லம்


 
அற்புதமான மனித வாழ்வானது ஒவ்வொரு பருவங்களையும் கடந்தே செல்கின்றது. மனிதனது வாழ்க்கைப் பயணத்தில் அதிக அனுபவங்களைக் கொண்டதாக முதியோர் பருவமானது காணப்படுகின்றது. உடலும் மனமும் குழந்தைபோல் மென்மையாகி விடுகின்றது.

விரைவான காலவோட்டமானது இளமையைக் கரைக்கின்றது. சுருங்கிய தளர்ந்த தேகம் இயக்கம் குன்றிய ஐம்புலன்கள் என நகருகின்ற ஒவ்வொரு நொடிகளும் மரணத்தை எதிர்பார்த்து தன்னை முதுமை இல்லத்தினுள் ஒதுக்கி விடுகின்றது.

பாசத்தால் உணர்வூட்டி வளர்த்த பிள்ளைகள் தாம் வளர்ந்ததும் தம்மை வளர்த்த பெற்றோரை அநாதரவாகக் கைவிடும் அவலத்தினால் ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் முளைக்கின்றன. உறவுகளால் சூழ்ந்து களித்திருக்க வேண்டிய மனம் தனிமைக்குள் வருந்துகின்றது. தன்னைப் பராமரிக்க தன் உதிர உறவு அருகில்லையே எனும் ஏக்கத்தில் வேதனை தினம் கொப்பளிக்கின்றது.

உடன் வாழ்ந்த துணை பிரிந்த பின்னர் ஆதரவுடன் அணைக்க வேண்டிய பிள்ளைகள் தம் வாழ்வைப் பேணியபடி பெற்றோரை யாரோ ஒருவராக எண்ணி இம்சிக்கும்போது அவர்களைத் தாங்குவதற்காக அன்போடு வாசலைத் திறக்கின்றது முதுமை இல்லம்.

பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களை பரிவோடு அணைத்து அன்புடன் அவர்களைக் கவனிக்கின்ற பல சேவையாளர்களைக் கொண்டதாக இம்முதியோர் முகாம் காணப்பட்டாலும் கூட வாழ்ந்த உறவுகளின் வெற்றிடங்களை அச்சேவையாளர்கள் நிரப்புவார்களாக.

முதுமை இல்லமெனும்; கட்டிடச் சுவர்களுக்குள் வாழ்கின்ற ஒவ்வொரு உள்ளங்களும் அன்பைத் தேடுகின்றன. இறந்தகால நிழல்களை மீட்டிப் பார்த்தே எஞ்சிய காலங்களை வாழ்ந்திடத் துடிக்கின்றன.

கைவிட்டுப் போன உறவுகளால் வழிகின்ற கண்ணீர்த்துளிகளால் அம்முதியோர் இல்லம் நனைந்து கொண்டேயிருக்கின்றது. பிடித்த வாழ்வைத் தொலைத்துவிட்டு பிடிக்காத உலகத்தில் வாழ்கின்ற அப்பெரியோர்களின் உணர்வுப் போராட்டங்களின் அடையாளமாகவே இம்முதியோர் இல்லம் காணப்படுகின்றது.

ஜன்ஸி கபூர்

இரத்த தானம்

 

 
இவ்வுலகில் அறிவெனும் ஆறாம் விரலினூடாக முழு உலகையும் தனது சிந்திக்கும் ஆற்றல் மூலம் இயக்கிக் கொண்டிருக்கும் மனித உடலின் கட்டமைப்புக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணங்களும் விந்தைமிகு இறைவனின் படைப்பின் நுட்பம் ஆச்சரியப்படுத்துகின்றது.

தனது கைமுஷ்டியின் அளவு இதயத்தைப் படைத்து, அதன் மூலமாக இரத்தத்தை உடல் முழுதும் பாய்ந்தோடச் செய்து, உயிர்வாழ்விற்கான தகுதியை வழங்குவதற்காக குருதிச்சுற்றோட்டத் தொகுதியுடன் தொடர்புபட்டதாக ஏனைய கட்டமைப்புத் தொகுதிகளையும் அமைத்து மனிதனை உயிர்வாழச் செய்யும் இறைவனின் ஆற்றல் அபாரிதம்.

இரத்தம் என்பது மனிதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான பாயம். அத்தகைய இரத்தத்தை தேவை கருதி தானம் செய்வதே மிகச் சிறந்த தானமாகும்.

தற்காலத்தில் நவீனம் எனும் போர்வைக்குள் வாழப் பழகிக் கொண்ட மனிதன், தனது இயந்திரத் தன்மையான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும்போது, விபரீதமான முறையில் ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றான். விபத்துக்கள் மற்றும் சில நோய் நிலைமைகளின் போது இரத்தத்தின் பயன்பாடு மருத்துவ உலகத்திற்கு தேவைப்படுகின்றது. எனவே இவ்வாறான அவசரமான நேரங்களை எதிர்கொள்ளும்போது இரத்த வங்கி அல்லது இருப்பில் போதிய அளவு இல்லாவிடில் உயிரிழப்பு ஏற்படுகின்றது. இத்தகைய உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு இரத்த தானமெனும் உயரிய கொடையை வழங்க ஒவ்வொருவரும் முன்வரல் வேண்டும்.

சாதி, மத, குல வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படக்கூடிய இரத்தத்துளிகள் சமத்துவத்திற்கான ஓர் அடையாளமாகும்.

ஏற்றத்தாழ்வுகள் நீங்கி அனைவரும் இத்தானத்திற்கான பங்காளர்களாக முன்வரல் வேண்டும். நாம் இரத்ததானம் செய்யும்போது நமது உடலிலுள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிப்பதனால் நமது உடலும் ஆரோக்கியம் பெறுகின்றது. ஆபத்திலிருந்து அடுத்தவரைக் காப்பாற்றியிருக்கின்றோம் எனும் உணர்வு நம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும்போது நமக்குள் ஏற்படுகின்ற மனத்திருப்தி நமது மன ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகின்றது.

நாம் தானமாக வழங்குகின்ற ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அடுத்தவரின் ஆயுள் அதிகரிக்கப்படுகின்றது.

"இரத்தம் வழங்கும் மனிதமுள்ள மனிதர்களாக நாம் நம்மை மாற்றிக் கொள்வோமாக"

ஜன்ஸி கபூர் - 18.11.2020

மனித நேயம்

 

மனித நேயம் என்பது அன்பு அல்லது தன்னலமற்று இருத்தலாகும். இளகிய இதயமும், இரக்கமும் அடங்கியிருக்கின்ற நேயத்தினால்தான் மனிதன் தான் தனித்திருக்காது தன்னைச் சுற்றி குடும்பம், சமூகம் போன்ற கட்டமைப்புக்களினால் சமூக இசைவாக்கம் அடைகின்றான்.  

"கொடையும் தயையும் பிறவிக் குணம்" என்பது சான்றோர் மொழி. 

இவ்வுலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது எனும் சிந்தனை நம்மிடையே எழுமாயின் நம்மைச் சூழவுள்ள பிற உயிரினங்களின்மீதும் நமக்கு கருணை ஏற்படும்.

மனிதநேயத்தை வெளிப்படுத்தி பல தமிழ் இலக்கிய பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இதிகாசங்கள், திருக்குறள் என்பவற்றிலும் மனித நேயம் முன்னிலப்படுத்தப்பட்டுள்ளன. சமய நூலான புனித அல்குர்ஆன் திருமறையிலும் மனித நேயம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித நேயம் கொண்ட பலர் மக்களால் மதிக்கப்படுகின்ற மதத் தலைவர்களாகவும் இவ்வுலகினை  வழிப்படுத்தியுள்ளார்கள். பாரி, பேகன் போன்ற மன்னர்கள் மனித நேயத்தின் உச்சநிலையில் வைத்துப் போற்றப்பட்டவர்கள். 

கணியன் பூங்குன்றனார் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' எனவுரைத்தார். இது சமத்துவத்தின் குரல்.

மனித நேயம் என்றவுடன் நம் கண்முன்னால் தோன்றுபவர், மானுட சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அன்னை திரேசா அவர்கள். நெல்சன் மண்டேலா அவர்களும் நிறவெறிக்கு எதிராகப் போராடி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

 அன்பு, அஹிம்சை எனும் தடங்களினூடாக,  உண்மைக்கும், நல்லிணக்கத்திற்கும் இடையில் பயணப்பட்டவர்கள் இறந்தும் மறையாத கல்வெட்டுக்களாகப் பரிணமிக்கின்றார்கள்.

பிறரை வருத்தி அதற்குள் தனது நலன்களைப் பேணும் இன்றைய உலகில் மனிதநேயம் கொண்டவர்களைத் தேட வேண்டிய நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயமே!.

ஜன்ஸி கபூர் - 03.11.2020

2021/04/13

பொறுமை

 


வாழ்க்கை என்பது நீண்ட தேடல். நகர்கின்ற ஒவ்வொரு நிமிடங்களும் எமது எதிர்பார்ப்பினை மீறிய ஏதோ ஒன்று எம்மை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கின்றன. எதிர்பார்ப்பிற்கும் நம்பிக்கைக்கும் இடையிலான சமநிலை குழும்பும்போது ஏற்படுகின்ற ஏமாற்றங்கள் எம்மை நிலைகுலைய வைக்கின்றது. மனம் தடுமாறும்போது பொறுமை எல்லை மீறுகின்றது. அவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் அறிவை விட உணர்ச்சிகளுக்கே முதலிடம் கொடுக்கின்றோம். அவ்வாறான பொறுமையை இழந்து அல்லல்படுகின்ற சந்தர்ப்பங்களில் நான் என் பொறுமையை இழக்கவில்லை. உணர்ச்சிகளின் உத்வேகம் மரண எல்லை வரை நிறுத்தியிருக்கின்றது. ஆனாலும் சுதாகரித்தவாறே அந்த நிலைகளைக் கடந்திருக்கின்றேன். கடந்து கொண்டுமிருக்கின்றேன். இன்று நான் கடைப்பிடித்த அந்த பொறுமை எனக்கு பல வெற்றிகளைக் குவித்திருக்கின்றது என்பதே யதார்த்தம். 

இலக்குகளை நோக்கிய என் பயணத்தை புரிதலுடன் கடந்திருக்கின்றேன். அகதி எனும் போர்வைக்குள் இளமைக் காலம் அனைத்தையும் கரைத்து வாழ்க்கையுடன் போராடிய போதும் கடைப்பிடித்த பொறுமை இன்று இரண்டு தசாப்தங்களின் பின்னர் எனது தாயக பூமியில் ஓர் தலைமைத்துவ அதிகாரியாக உயர்த்தியிருக்கின்றது. எவ்வாறான துன்பச் சூழ்நிலை என்னை அணைக்கின்றபோது இறைவனைத் தியானிப்பேன். மனம் இலேசாகி அதைக் கடப்பதற்கான பொறுமை ஆட்கொள்கின்றது.

நாம் தனித்திருப்பதில்லை. பிறரால் சூழப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர்களால் ஏற்படுகின்ற குறைகள் தவறுகளையும் உடனே சுட்டிக்காட்டும்போது முரண்பாடுகள் எழுகின்றது. அக்கணங்களில் அவற்றை பொறுமையுடன் தாங்கி பின்னர் ஏற்ற தருணங்களில் அவர்கள் புரியும்படியாக வெளிப்படுத்துவேன்.

பொறுமையை நாம் இழக்கும்போதுதான் சினம் நம்மையே எரிக்க ஆரம்பிக்கின்றது. இந்நிலையில் வாக்குவாதங்களும் சண்டைகளும் மூழ்க ஆரம்பிக்கின்றது. இவற்றைத் தவிர்க்க பொறுமை உதவுகின்றது. நம்மை நாமே பொறுமையுடன் கட்டுப்படுத்தினால் மிகப் பெரிய பொக்கிஷமான நிம்மதியும் அமைதியும் நமக்குச் சொந்தமாகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பொறுமையென்பது அவசியமான உணர்வு. பொறுமைக்குள் நம்மை உள்ளடக்கும்போது அடுத்தவருக்காக விட்டுக் கொடுக்கின்றோம். விட்டுக்கொடுப்பும் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றன. 

'பொறுத்தார் பூமியை மட்டுமல்ல உறவுகளையும் ஆளலாம்'

ஜன்ஸி கபூர் - 13.10.2020


"தகவல் அறியும் உரிமைச் சட்டம்"

 

மக்களின் வரிப்பணத்தினை தனது மிகப் பெரிய வளமாக, பலமாகக் கருதுகின்ற அரசின் செயற்பாடுகள் குறித்து அறிவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. இதற்கான பிரதான வழியாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் காணப்படுகின்றது. இது ஜனநாயகம் சார்பான மக்களின் அடிப்படை உரிமையாகும்.

சுவீடன் நாட்டிலேயே முதன் முதலில் பிரஜைகள் தகவலறியும் உரிமையை அனுபவிக்க வழி ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பின் 22 ஆவது பிரிவுக்கு திருத்தம் கொண்டுவரப்பட்டதன் மூலம் அந்நாட்டு மக்களுக்கான அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இலங்கையிலும், 19 ஆம் திருத்தச் சட்டத்திற்கு பின்னர், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டம் இயற்றப்பட்டு 2017 பெப்ரவரி 03ஆந் திகதி முதல் செயல்படுத்தப்பட்டது. தகவலறியும் சட்டத்தினை அமுல்படுத்தும் பொறுப்பு வெகுசன ஊடக அமைச்சிற்கு உரியதாகும். இலங்கையின் ஊடக கலாசாரத்தில் இச்சட்டம் முக்கிய இடம் வகிக்கின்றது.

ஏதேனும் தகவலைப் பெற விரும்பும் எவரேனும் தகவல் அலுவலருக்கு, தேவைப்படும் தகவல் பற்றிய விபரங்களை எழுத்திலே கோருதல் வேண்டும். தகவல் அலுவலர் இயன்றளவு விரைவாகவும், 14 வேலை நாட்களுக்கு மேற்படாமலும், கோரப்பட்ட தகவலை வழங்க அல்லது கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்ய வேண்டும். கோரிக்கையானது நிராகரிக்க முடிவு செய்தால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தகவல் அலுவலர் கோரிக்கையை விடுத்த பிரசைக்கு அறிவிக்க வேண்டும்.

இதன் மூலமாக பகிரங்க அதிகாரசபைகளின் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புக்கூறும் பண்பாட்டைப் பேணி வளர்க்கலாம். மக்கள் ஊழலை எதிர்த்து நிற்கும் பொறிமுறையை தாபிக்கலாம். பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துதல் ஊடாக மக்கள் முழுமையாகப் பங்கேற்கக் கூடிய ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும்.

தகவலறியும் சட்டத்தினைப் பயன்படுத்தி அரச நிறுவனம் ஒன்றிடமிருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம் என ஒருவர் எதிர்பார்க்க முடியாது.

அரசின் நிதி மற்றும் பணிகள் தொடர்பாக கேள்வி கேட்கின்ற உரிமை இதன் மூலமாக சாதாரண பிரசைக்கும் கிடைக்கின்றது. இவ்வாறான அவதானப் பார்வைகளின் வீச்சு கூரியதாக இருக்கின்ற பட்சத்தில் தவறுகள் குறைவடைந்து மக்கள் திருப்தியான சேவைதனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புண்டாகும் என்பது வெள்ளிடைமலையாகும்.

ஜன்ஸி கபூர் - 23.12.2020
 

வாசிப்பை நேசிப்போம்


 
மானிட வாழ்வின் அறியாமை எனும் இருளினை அகற்றிட கிடைக்கின்ற அற்புத ஒளிச்சுடரே வாசிப்பாகும். வாசிப்பின் மூலமாக நமது பகுத்தறிவும் ஆற்றலும் வளர்கின்றது. சிறந்த வாழ்வியலைக் கற்றுக் கொள்வதற்கான பாதைகளும் திறக்கின்றன. அறிவை வளர்ப்பதற்கான கட்டமைப்பாக கல்வி காணப்படுகின்றது. அதனாற்றான் "இளமையிற்கல்வி சிலையிலெழுத்து" என பழமொழி வாயிலாக அனுபவம் தொகுக்கப்பட்டுள்ளது.

"ஓதுவீராக" என்பது புனித அல்குர்ஆன் மூலம் இறக்கப்பட்ட முதல் வசனமாகக் காணப்படுகின்றது. "ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது" என்று பேரறிஞர் விக்டர் ஹியுகோ கூறியுள்ளார். "ஓதுவது ஒழியேல்' என்பது ஔவையின் வாக்கு.

நமக்குள் எழுகின்ற தேடலின் ஆர்வத்திற்கான ஊக்க மாத்திரையாக இவ்வாசிப்பு மிளிர்கின்றது. புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் என்பார்கள். ஒவ்வொரு புத்தகங்களின் வரிகளிலும் காணப்படும் நல்ல விடயங்களைக் கருத்தூன்றி வாசிக்கையில் நமது சிந்தனையில் ஏற்படுகின்ற மாற்றம் நடத்தைகளிலும் பிரதிபலிக்கச் செய்கின்றது.

உணர்வுகளின் வெளிப்பாடுகளாக வெளிச்சமிடுகின்ற கருத்துக்களின்பால் நாம் ஈர்க்கப்படுகையில் நமது செயல்களிலும் நல்ல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் தற்போது இணையத்தில் மூழ்கியுள்ளோம். பெரும்பாலும் இளைய தலைமுறையினர் நூல்களை வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. பொழுதுகளை திட்டமிட்டுச் செலவளிப்பதில்லை. எனவேதான் அருகிவருகின்ற வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் துளிர்விடச் செய்கின்ற பொறுப்பு நம் எல்லோருக்கும் காணப்படுகின்றது.
நாம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் வாசிப்பதற்கென ஒதுக்க வேண்டும். மனமொன்றி வாசிக்கும்போதுதான் நம் சிந்தனைக்குரிய ஆழ்மனம் தூண்டப்படுகின்றது. தினமும் வாசிக்கையில் நம்மை வசீகரிக்கின்ற வரிகளை குறிப்பெடுத்து வைக்கின்றபோது நம்மையுமறியாமல் நம் நினைவுப் புலத்தில் பல விடயங்கள் சேமிக்கப்படுகின்றன.
புத்தகங்களின்பால் ஆர்வம் ஏற்படுகின்றபோதே வாசிக்க முடிகின்றது. நம் இரசனைக்கேற்ப நூல்களைத் தெரிவு செய்ய முடிகிறது. அதிகமாக வாசிக்கின்றபோது சொற்களை சரியாக எழுதவும் கற்றுக் கொள்ள முடிகிறது. வாசிப்புப் பழக்கமானது அறிவைத் திரட்டவும் மகிழ்வோடு பொழுதுகளைக் கழிக்கவும் நம்மைச் சூழக் காணப்படுகின்ற புத்துலகோடு இசைந்து வாழவும் பயிற்றுவிக்கின்றது. சிறிய வயதிலிருந்தே வாசிப்பை நேசித்து நம் அறிவை விசாலிக்கச் செய்வோம்.

ஜன்ஸி கபூர்




நான் விரும்பும் மனிதர்




எனது தந்தையார் - பெயர் முகம்மது அப்துல் கபூர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சாதாரண குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் தன் தாயாரை இழந்து, மறுமணம் புரிந்த தந்தையும் பிரிந்து, வாழ்ந்த வாப்பாவின் இளமைக்கால வாழ்க்கையின் சுவடுகள் கண்ணீர்த்துளிகளால் நிறைந்திருப்பதனை நான் பல தடவைகள் உணர்ந்துள்ளேன். தன் குடும்ப உறவுகளின் அணைப்பின்றி தனிமையில் வாழ்ந்த ஒவ்வொரு பொழுதுகளிலும் தன் துன்பத்திற்கு மத்தியிலும் தன் ஆற்றலை வளர்த்துள்ளார். 

தந்தை எனும் முகத்தினுள் நான் பல்வேறு விதமான ஆளுமைகளைக் கண்டு வியந்திருக்கின்றேன். மின்னியல் துறையாகட்டும், தையலாகட்டும், பொறியியல் துறையாகட்டும் அவர் பின்நிற்பதில்லை. எல்லா வேலைகளையும் தானே தனித்துச் செய்யும் ஆற்றலுடையவர்.

உலகத்திற்குள் தன் எழுத்துக்களை வெளிப்படுத்தாமல் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதி அவர். பல  மேடை நாடகங்களையும் அரங்கேற்றியிருப்பதை என் தாயார் மூலமாக அறிந்து கொண்டேன். வாப்பாவின் எழுத்துக்களின் அழகும், வசீகரமும் என்னையும் கவர்ந்திழுத்ததனால் இன்று நானும் இலக்கிய வெளிக்குள் சஞ்சாரிக்கின்றேன். என் எழுத்துக்களை ரசித்த முதல் ரசிகர் அவரே. சில பாடல்கள் வானொலியில் ஒலிக்கும்போது சின்ன வயதில் வாப்பா பாடி என்னைத் தூங்க வைத்த நினைவும் எழுகின்றது.

இளமைக் காலத்தில் பொலிஸாகப் பணிபுரிந்தாலும்கூட, அவரின் அபார ஆங்கிலப் புலமை மற்றும் கற்ற கல்வியின் காரணமாக கல்லூரி முதல்வராகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

வாப்பா வரைந்திருந்த பல தத்துருவான ஓவியங்கள் யுத்த இடப்பெயர்வின்போது அழிந்தது இன்றும் வேதனையே.

வாப்பா எனக்கு கற்றுத் தந்த பல விடயங்களை முன்மாதிரியாகக் கொண்டு நானும் எனது தலைமைத்துவப் பணியினை மேற்கொண்டு வருகின்றேன். அவர் தான் காணும் பிறரின் தவறுகள், குறைகளை முகத்தின் முன்னால் சுட்டிக்காட்டுவதால், அவரைச் சிலர் கண்டிப்பானவர் என்பர். ஆனாலும் அக்கண்டிப்பினுள் ஒளிந்திருக்கின்ற அன்பையும், சிரிப்பையும் நான் அனுபவித்துள்ளேன்.  

எனக்கு வழிகாட்டிய தந்தை இன்று என்னுடன் இல்லாவிட்டாலும்கூட, அவர் வாழ்த்திய இலக்கியத் துறையில் என் பெயருடனே பயணிக்கின்றார். வாப்பாமீது கொண்ட நேசம் என் ஆயுள்வரை நினைவுக்குள் நீண்டுகொண்டே இருக்கும்.

ஜன்ஸி கபூர் -8.12.2020


2021/04/12

காலத்தை வென்ற கணினி

'எண்ணும், எழுத்தும் கண்ணெணத் தகும்' என்பார்கள். எமது இன்றைய வாழ்வின் பிரதான அறிவுக் கண்ணாக கணினி விளங்குகின்றது. தகவல் தொழினுட்ப அறிவும் ஆற்றலும் நம் முன்னே விரித்து வைத்திருக்கின்ற சவால்களை நாம் வென்றெடுக்க கணினி இயக்கத்திற்கான அறிவும், அனுபவமும் தேவைப்படுகின்றது. கணினி அறிவற்றவர்களை இவ் அறிவியல் உலகம் நிராகரித்து விடுகின்றது என்றால் அது மிகையில்லை.

1642 ஆம் ஆண்டு பிளெஸ் பாஸ்கால் என்பவரால் சிறிய சிறிய எண்களைக் கூட்டுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கூட்டல் பொறியும், பின்னர் கொற்பிறீட் லைப்நிற்ஸ் வடிவமைத்த கல்குலேற்றரும், சாள்ஸ் பபேஜ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கருவியும் பல்வேறு சிந்தனைகளின் விரிகையினால் இன்றைய கணினி எனும் இயந்திரப் பொறியின் உருவாக்கத்திற்கு தளம் அமைத்துத் தந்துள்ளன.

கற்களை உராசி தீமூட்டி வாழப் பழகிய மனிதன், சொற்களை காற்றலைகளில் ஒலிகளாக்கி உலாவிட்ட மனிதன், எழுத்துக்களால் காகிதங்களை அலங்கரித்து வாழப் பழகிய மனிதன், இன்று தன் சிந்தனையால் அறிவைப் புரட்சி செய்ததன் பலனாக கணினி யுகத்தில் தம் சுவடுகளைப் பதித்துள்ளான்.

அன்றைய காலகட்டத்தில் விரல்களின் மொழியாக பேனாக்கள் காணப்பட்டன. ஆனால் இன்றோ விரல்களின் அசைவுகள் கணினி விசைப் பலகைகளுடனல்லவா ஒன்றித்து நிற்கின்றன. தொழினுட்ப வளர்ச்சியின் மூலப் புள்ளியாக இக்கணினியே காணப்படுகின்றது.

வணிகம், அறிவியல் தொழினுட்பம், தொலைத் தொடர்பு, கல்வி, மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு, விளையாட்டு, பொறியியல், வங்கி உள்ளிட்ட கணக்குத் துறை, பொழுதுபோக்கு போன்ற சகல துறைகளிலும் கணினி தனது சுவடுகளைப் பதித்துள்ளது.

பாடசாலைகளில் தகவல் தொழினுட்ப அறிவினைப் பாடங்களினூடாகப் புகுத்தி கற்பிக்க ஒவ்வொரு நாட்டு அரசும் தனது வரவு, செலவு திட்டத்தில் பல கோடி ரூபாக்களை ஒதுக்குகின்றது. எதிர்கால கல்விப் புலத்தின் சுவடாக இக்கணனியே காணப்படப் போகிறது. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள கொவிட் 19 நோய் நிலைமைகளின்போது மாணவர்கள் வீடுகளில் இருந்தே கற்க நிகழ்நிலைக் கற்றல் கற்பித்தலை வழங்க இக்கணனியே உதவுகின்றது.

இன்றைய நவீன காலத்தில் கணினி உலகத்தையே சுருக்கி விட்டது எனலாம். உலகின் பல மூலைகளிலும் உள்ள மக்களை மின்னஞ்சல், இணையங்களினூடாக இக்கணினி சில விநாடிகளிலேயே இணைத்து விடுகின்றது. முகம் பார்த்து உரையாடவும், தமக்குத் தேவையான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இலகுவான பாதையாக மிளிர்கின்றது.

தொழினுட்ப சவால் நிறைந்த இவ்வுலக இன்றைய வாழ்வில் மனிதன் தன்னைப் பாதுகாக்கப் போராட வேண்டியுள்ளது. இந்நிலையில் தன் வீட்டைச் சூழ்ந்த நிகழ்வுகளைக் கண்காணிக்க கண்காணிப்பு கருவிகளைப் பொருத்தி அவற்றின் நிகழ்வுகளைக் கண்டறியவும் கணனி தேவைப்படுகின்றது.

உடலிலுள்ள நோய்கள் மற்றும் குறைகளைக் கண்டறியவும், அவற்றுக்கான சிகிச்சைகளைச் செய்யவும் கணனி உற்ற தோழனாக நமக்கு விளங்குகின்றது.

இவ்வாறாகவே அலுவலகப் பணிகளான நிர்வாக விடயங்கள், வரவு, செலவு போன்ற கணக்கு விடயங்களைக் கையாளவும், கணனி அறிவு பயன்படுத்தப்படுகின்றது. தகவல்களைத் திரட்ட சேமிக்க, பரிமாறிக் கொள்ளவென பல்துறைப் பரிமாணங் கொண்டு இக்கணனி பயன்படுகின்றது.

'கண்டதைக் கற்கப் பண்டிதனாவான் ' என்பார்கள். வாசிக்கின்ற நூலறிவின் ஆர்வம் குறைந்திருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் இணையத்தின் வழியாக நூல்களை வாசிக்கின்ற ஆர்வம் அதிகரித்து வருகின்றது.

கற்றவர் மாத்திரமல்ல, கல்லாதவர்களும் திறமையான பயிற்சிகளின் ஊடாக கணினிகளை இயக்கிப் பயன்களைப் பெறுகின்ற ஆற்றலைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதும் நாமறிந்த உண்மையாகும்.

இருந்தும் நன்மைக்குள் ஒளிந்திருக்கின்ற தீமைகள் நம்மை அணுகாமல் நாம் கணனியைப் பயன்படுத்துவோமானால் காலம் நமக்கு வசந்தமாக மாறி நிற்கும். காலத்தை வென்று நிற்கின்ற இக்கணினி பற்றிய ஆற்றலினால் மனிதன் தன்முன்னால் எழுகின்ற பல்வேறு சவால்களை வெற்றிகரமாக முறியடிக்கின்ற மனோபலம் உருவாகின்றது என்பது நிதர்சனமே.

கணினி, காலத்தை வென்று நமக்கான உடைமையாக நம் கரங்களில் தவழ்கின்றது என்பதே யதார்த்தமாகும்.

ஜன்ஸி கபூர் - 12.04.2021

2021/01/06

தன் சுத்தம்

 

சூழலுடன் தொடுகையுறுகின்ற உடலின் வெளிப்பகுதி தினமும் நுண்ணங்கியுடன் போராடிக் கொண்டிருக்கின்றது. கோரமான தொற்று நோயின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற இன்றைய காலகட்டமானது மனிதர்களின் தனிச் சுத்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மதங்களும் மனிதனின் தன் சுத்தத்தை வலியுறுத்துகின்றன. தூய்மையான உடல் தூய்மையான மனதின் வெளிப்பாடாகும். இறைவனுடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொள்ளவும் இத் தூய்மை உதவுகின்றது.

சுகாதாரம் என்பது நலமான வாழ்வின் தொடக்கப் புள்ளியாகக் காணப்படுகின்றது. எனவே நாம் உட்கொள்ளும் உணவு, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி   போன்ற   ஆரோக்கியச்  செயற்பாடுகளில் நம் வாழ்வின் ஆரோக்கியம் தங்கியுள்ளது. தன் சுத்தமும், சமூக தூய்மையும் பேணப்படும் போது தான் சுகாதாரமான, பாதுகாப்பான வாழ்க்கை மக்களுக்கு கிடைக்கும்.  அதை ஒவ்வொருவரும் தன்னில் இருந்து தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் சமூகமும் அவ்வழியினை விருப்போடு பற்றி நடமாடும்.

நாம் வாழ்கின்ற வீடு பாடசாலை பொது இடங்கள் என நாம் நடமாடுகின்ற ஒவ்வொரு இடங்களிலும் தன் சுத்தம் மிளிரும் விதமாக நமது நடத்தைகளை மாற்றியமைக்க வேண்டும். சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே தன் சுத்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் வேண்டும். தன்னைப் பற்றிய சிந்தனையே பொது நலத்திற்கான தூண்டுகோலாகும்.இந்நிலையில் ஒவ்வொருவரும் தன் சுத்தத்தைப் பேணுவதன் மூலமாக சமூகத்தையும் காக்க முடிகின்றது.

 அழகான வாழ்வென்பது உடல், உணர்வு, வாழ்கின்ற சூழல் சார்பானது. நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடங்களிலும் நமது வாழ்வினை ரசித்து வாழ்கின்ற மனநிலையை இத் தன் சுத்தம் தருகின்றது. "சுத்தம் சுகம் தரும்" என்பது பழமொழி. தன் சுத்தமான வாழ்வியலுடன் இசைந்து வாழ்கின்றபோது நமது பழக்க வழக்கங்களும் பிறர் மதிக்கின்ற விதமாக மாறும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடி வாழ்வும் நமது உடலினதும், உளத்தினதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக வாழ  வேண்டும். அப்பொழுதுதான் உளத் தூய்மையுடனான சமூகக் கட்டமைப்பு தோற்றுவிக்கப்படும். 

எனவே தன் சுத்தம் பேணி  சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான    சிறந்த சமூகத்தையும் உருவாக்குவது எமது கடமையாகின்றது.

ஜன்ஸி கபூர் - 06.01.2021


2020/12/01

விவசாயம்



விவசாயத்தின் வரலாறானது பல்வேறு காலகட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. காட்டிலிருந்து பெறப்பட்ட விதைகளைத் திட்டமிட்டு விதைக்கச் செய்தும், ஆறு, ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளிலிருந்து மீன்களைப், பிடித்தும், உணவுத்தேவையினை நிறைவு செய்த மக்கள், இன்று தமது சிந்தனையின் விளைவாக விவசாயம் எனும் பழமைக்குள் தற்கால அறிவியலைப் புகுத்தி நீர்ப்பாசனம், உரங்கள், பயிர்ச்செய்கை முறைகள், பூச்சிகொல்லிகள் போன்ற பல்துறைகளிலும் பல்வேறான தொழினுட்ப உபாயங்கள் பயன்படுத்தி, தற்கால மனித தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய விளைவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மை போன்ற பகுதிகளைக் கொண்டுள்ள விவசாயத்தில் நிலங்கள் பண்படுத்தப்படுவதனால் மண்வாழ் உயிரிகளுக்கான வாழ்விடம் கிடைப்பதுடன், மண்வளமும் காக்கப்படுகின்றது. செழிக்கின்ற பசுமைக்குள் இயற்கையும் உயிர்க்கின்றது. அத்துடன் சூழல்வாழ் உயிரிகளுக்கிடையிலான அங்கிச் சமநிலையும் பேணப்படுகின்றது. எனவே விவசாயமானது வருமானத்தை ஈட்டித் தந்து நாட்டினதும், வீட்டினதும் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உயர்த்துவதுடன், சூழலையும் காக்கின்றது.

இவ்வுலக வாழ்வில் இணைந்த மனிதன் இயற்கையாகக் கிடைக்கின்ற இயற்கை வளங்கள் உயிரினங்கள் என்பனவற்றுடன் தொடர்புபட்டு மணணையும், விண்ணையும் ஓர் புள்ளியில் குவித்து, அதன் மூலமாக ஏற்படுகின்ற பிணைப்பினால் விவசாயத்தை உயிர்க்கச் செய்து, சமூக பொருளாதார மாற்றத்திற்கு பங்காற்றிக் கொண்டிருக்கின்றான். விவசாயத்தை ஆளுகின்ற விவசாயியின் மூலமாகவே இவ்வாறான உன்னதமான உழைப்பினை தான் வாழும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் வழங்க முடிகின்றது.

விவசாயத்தின் அடிப்படைத் தத்துவம் உழவாகும். தமிழரின் உழவு சார்ந்த வாழ்வியல் நெறிப் பண்பாட்டினை திருவள்ளுவரும் தமது குறளடிகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.  

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும். – (குறள் 1037)


ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு. – (குறள் 1038)


மேற்கூறப்பட்ட குறளடிகளில் உழவுத் தொழிலின் தொழினுட்பத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பசுமைப் புரட்சியின் மூலமாக விவசாய விளைவுகள் அதிகரிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் கூட, நாகரிக வாழ்வு, வணிகமயமாதலின் தாக்கம், காலநிலை, சனத்தொகைப் பெருக்கத்தினால் ஏற்பட்ட இடநெருக்கீடு, மண்வளம், நீர்வளம், நிலத்தோற்றம் போன்ற பல புறக்காரணிகளின் தாக்கங்களுடன், விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டங்களும் விவசாயத்தின் செழிப்பைக் குறைக்க முனைகின்றன. இவ்வாறான சூழ்நிலைகள் எதிர்கொள்ளப்பட்டாலும்கூட, இயற்கையுடன் இசைந்து வாழ்ந்து இயற்கையைப் பாதுகாக்கும்விதமாக நாம் வேளாண்மையில் நாட்டம் கொண்டு உழைப்போமாக.!


 ஜன்ஸி கபூர் - 1.12.2020


2019/05/08

சகிப்புத் தன்மை

Image result for சகிப்புத்தன்மை

வாழ்க்கை எனும் நீண்ட பயணத்தில் ஏற்படக்கூடிய  முரண்பாடுகளால் சிக்கல் நிறைந்ததாக வாழ்க்கை மாறுகிறது. சகிப்பு தன்மை இல்லாமையால் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க  வேண்டி உள்ளது.

சகிப்புத்தன்மை என்றால் என்ன ?

நான் நானாகவும், நீ நீயாகவும் இருப்பதும், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதும் சகிப்பு தன்மையின் முகங்களாகின்றன. இப் பூமியில் நாம்  ஒவ்வொருவரும் வாழத்  தகுதி உடையவர்கள். நம் வாழ்க்கை நம் வசம்.  இதனை அற்ப காரணங்களுக்காக அடுத்தவரிடம் அடமானம் வைக்க நிச்சயம் நாம் இடமளிக்க கூடாது .நமது அடையாளம் தொலைந்து போகுமானால் நமது செயல்களும்  வார்த்தைகளும் பெறுமதி இல்லாமல் போய் விடும் .  நம் வாழ்வின் சரிவை தடுத்து நிறுத்த நாம் நம்மை காக்க வேண்டும். நம் நாவின் புனிதத்தை பேணவேண்டும்.  அடுத்தவருடனான சகிப்பு தன்மையை நல்லுறவை  பேண வேண்டும்.

"பொறுத்தார் பூமி ஆழ்வார் "  என்பார்கள்.

நன்மை கிடைக்கும் என்றால் நமது பொறுமையும் சகிப்பு தன்மையும் சிறந்ததே.  அடுத்தவருக்கு மகிழ்வு வழங்கி, நமது சந்தோஷத்தையும் உறுதிபடுத்த சகிப்பு தன்மை அவசியமாகிறது. நம்மை ஏற்றுக்கொள்ளவோர் மத்தியில் நமது சுயம் பேணும் சகிப்புத்தன்மை நமது வாழ்வின் முக்கிய பண்பாகின்றது

- Ms.A.C.Jancy -
     08.05.2019

2015/02/24

எழுத்தணிக்கலை



இஸ்லாமிய எழுத்தணிக்கலை
-----------------------------------------
அரபிமொழியானது இஸ்லாம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் மக்களால் பேசப்பட்டு வந்தது. புனித இஸ்லாம் மார்க்கம் நபி(ஸல்) அவர்களால் அரபி மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புனித அல்குர்ஆனும் அரபி மொழியில் இறக்கப்பட்டது. இதனால் அரபுமொழியானது இஸ்லாமிய கலாச்சாரத்தில் மிக முக்கிய செல்வாக்கைப் பெற்றிருந்தது.

உமையா கிலாபத்தின் ஆட்சியாளர்களில் ஒருவரான கலீபா அப்துல் மலிக்கின் காலத்தில் இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசங்களில் உத்தியோகபூர்வ மொழியாக அரபிமொழி மாற்றப்பட்டது. அக்காலத்தில் அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் தாய்மொழியாக அரபுமொழி காணப்படவில்லை. அக்கால இஸ்லாமிய உலகில் அரபுமொழிக்கு அடுத்தபடியாக பெருன்பான்மை மக்களால் பாரசீக மொழி பேசப்பட்டு வந்தது. இஸ்லாமிய உலகில் ஆரம்ப காலப்பகுதியில் எகிப்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆட்டுத்தோல்களிலும், ஒரு வகையான மரஇலைகளிலும் எழுத்துக்கலைகள் வரையப்பட்டு வந்தன.

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காகிதத் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காகிதத் தாள்களில் இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் வரையப்பட்டன. இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்தமுறையில் வரைவதற்கு காகித்தாள்கள் பெரிதும் உதவிசெய்தது. அக்கால இஸ்லாமிய எழுத்தணிகளை வரைவதற்கு ‘கலம்’எனும் சாதானம் பயன்படுத்தப்பட்டது. அது கோரைப்புல் தாவரத்தால் உருவாக்கப் பட்டிருந்தது. ஆரம்பகால குர்ஆன் பெரியவையாகக் காணப்பட்டதுடன், அவை இஸ்லாமியக் கலைத்திறன்மிக்கதாகக் காணப்பட்டது. அதிலிருந்து இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்த ஓவிய முறையாக வளர்ச்சியடைந்தது.

நன்றி - தமிழ் விக்கிப்பீடியா

- Jancy Caffoor-
  24.02.2015

2014/10/09

உலக தபால் தினம்- 2014


தொலைத்தொடர்பு இலத்திரனியல் ஊடகங்களின் வருகையால் சவாலுக்குள்ளாகியுள்ள அஞ்சல் சேவையை மக்கள் புறக்கணித்து விடாத நிலையில் ஒக்டோபர்  9 ந் திகதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்த வருடத்திற்கான தொனிப் பொருள்

 "மக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட தபால்"

என்பதாகும். இதன்மூலம் இளைஞர்கள் மறந்துவிட்ட தபால்சேவையின் முக்கியத்துவம் மேலும் உணர்த்தப்படுகின்றது.

1969ம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் பெறப்பட்ட முடிவின்படி ஒக்டோபர் 9ந் திகதி உலக அஞ்சல்தினமாகக் கொண்டாடப்படுகின்றது. உலக தபால் அமைப்பில் 150 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. சுவிற்சலாந்தின் பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல்தினமாகக் கொள்ளப்படுகின்றது.

1712ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் முதலாவது தபால் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே தபால் துரித வளர்ச்சியேற்பட்டது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியினரின் தகவல் வளர்ச்சிக்காக ஒழுங்கமைக்கப்படாத தபால் சேவையொன்று கெப்டன் எ கென்னடியினால் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், தபால்துறையின் தலைமைப் பொறுப்பதிகாரி ஈ பிளாட்டமன் அவர்கள் 1815 ல் கொழும்பு, காலி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற இடங்களில் ஆறு அஞ்சல் நிலையங்களைத் திறந்தார்..

1832ல் ஆசியாவில் முதற்தடவையாக குதிரை வண்டித் தபால்சேவை கொழும்புக்கும் கண்டிக்குமிடையில் நிகழ்த்தப்பட்டது.

1857ல் (ஏப்ரல்1) முதல் வௌியிடப்பட்ட தபால் தலையில் விக்டோரியா மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்டது.

1865ல் முதற் தடவையாக கொழும்புக்கும் அம்பேஸ்ஸவுக்குமிடையிலான தபால் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1867ல் முதன்முறையாக தனியார் தபால் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

1872 ஓகஸ்டில் முதல் தபால் அட்டை வௌியிடப்பட்டது.

இன்று இலங்கையில் 609 மேற்பட்ட தபால் நிலையங்கள் சேவையாற்றுகின்றது. ஆனால் உலகிலே அதிகளவான தபால் நிலையங்களைக் கொண்ட நாடாக இந்தியா காணப்படுகின்றது. இங்கு ஒரு இலட் 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

நவீன தொழினுட்ப வளர்ச்சியின் சவாலை சந்திக்க அஞ்சல்துறை பல்வேறு புதிய திட்டங்களை வழங்கும் என நம்பலாம்...

2014/10/01

சிறுவர் தினம் - 2014


இன்று ஒக்டோபர்  01 ந் திகதி, சர்வதேச குழந்தைகள் தினம்..
-------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு குழந்தையும் தன் தாயின் கருவறையில் ஜனனிக்கும்போது தன் ஆத்மாவில் நன்மைகளை நிறைத்தே பிறக்கின்றன. நல்ல சூழல் நல்ல குழந்தைகளை சிருஷ்டித்து இவ்வுலகில் சிறப்பான மனித நடமாட்டங்களை உருவாக்குகின்றது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைக்க முடியாது என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல யதார்த்த வாழ்வியலின் ஓரம்சம். எனவே தம் நடத்தைகளைச் சீக்கிரமாக மாற்றக்கூடிய சிறுவர் பருவத்தை சரியான திசையில், இலக்கில் இட்டுச் செல்வது காலத்தின் தேவையாகும். ஏனெனில் இப்பருவத்தில் ஒழுக்கம் பிறழ்ந்து நடமாடும் ஒவ்வொரு பிறவியும் முதிர்ச்சியடைந்த பிறகு பலரின் விமர்சனத்திற்கு ஆளாகும் பாவிகளாகின்றனர்.

முதுமையின் விளைநிலம் இளமை ததும்பும் சிறுவர் பராயம். இப்பராயத்தை சிறப்பானதாக மிளிரச் செய்வது எமது- கட்டாயக் கடமையாகும்.  அந்த வகையில் குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அவையினால்(unicef) 1954 ஆம் ஆண்டு  பிரகடனப்படுத்தப்பட்ட இச் சிறுவர் தினம் இலங்கையில் ஒக்டோபர்  1 ஆம் திகதி கொண்டாடப்படுவது யாவரும் அறிந்ததே!

இந்நாளில் உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் நினைவுபடுத்தப்படுகின்றன. ஏனெனில் உலகிலுள்ள காமுகர்கள் அரங்கேற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை சட்டங்களால் மட்டும் நிறுத்த முடியாது. ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாக்க தனது பலகீனத்தைக் களைதல் வேண்டும். அதற்காக தன்னை உணர்தல் வேண்டும். ஒவ்வொரு சிறாரும் தன்னை முழுமையாக உணர, சிந்திக்க சிறுவர்தினம் களமமைத்துக் கொடுக்கின்றது

குழந்தை தனது ஒவ்வொரு செயலையும் வளர்ந்தவரைப் பார்த்தே செய்கின்றது. பின்பற்றுகின்றது. எனவே சிறுவர் பருவம் என்பது குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தின் ஓர்நிலை. சிறார் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அநீதிகளையும் தொடர்ச்சியாக உள்ளெடுப்பாராயின் காலப்போக்கில் அவர்களும் வன்முறையெனும் ஆயுதமேந்திகளாகவே மாற்றப்படுவார்கள்.

எனவே இன்றைய சிறுவன் நாளைய தலைவன் என்பதை மனதிலிருத்தி அவர்களின்  அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க ஒவ்வொரு வளர்ந்தோரும் முன்வரல் வேண்டும். இதற்கு அடிப்படையாக  கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ள வழிப்படுத்த வேண்டும்.


எனவே  இன்றைய நாளில் சிறுவர்கள் தமது அடிப்படை உரிமைகளைப் போஷித்தவாறே, சகல சௌகரிகங்களும் பெற்று தத்தமது இல்லத்தில் மனநிறைவுடன் வாழ வாழ்த்துவதோடு,  இவ்வாழ்க்கை அவர்களுக்குக் கிடைக்க நாமும் முதியோர் தினத்தை நினைவுகூர்ந்தவாறு இறைவனைப் பிரார்த்திப்போமாக!


2014/08/16

குற்றாலம்



இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த ஊர். அதற்குக் காரணம் அல்வா மட்டுமல்ல இன்னொன்றும். என் உறவுகள் அங்கும் பிணைந்துள்ளார்கள்.

இம்மாவட்டத்தில் இருக்கும் பேரூராட்சிகளுள் குற்றாலமும் ஒன்று. இது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 55 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. குற்றாலத்திலிருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் தூத்துக்குடி விமான நிலையம் அமைந்துள்ளது. தென்காசி புகையிரத நிலையம் குற்றாலத்தின் அருகிலுள்ள நிலையமாகும். எனவே குற்றாலம் தென்காசிக்கு அருகிலுள்ளது.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகை மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி இது என்பதால் குற்றாலம் எனப்பெயர் ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது குற்றால அருவிதான். இது திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது.

குற்றால அருவியின் சிறப்பு குளிர்ச்சியான காலநிலை, எண்ணெய்க்குளியல், மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்ரோசத்துடன் பாய்ந்தோடும் அருவி என்பவற்றின் அனுபவங்களாகும்.!

இங்கு குளியல் வெறும் பொழுதுபோக்கல்ல...இந்த அருவியில் பாய்ந்தோடும் நீர் பல மூலிகைச் செடிகளையும் தழுவிப் பாய்வதால் இது மருத்துவ குணம் வாய்ந்த நீரைக் கொண்டுள்ளது.



1. பேரருவி
----------------
இது குற்றாலத்தின் மிக முக்கியமான அருவியாகும். செங்குத்தான பாறையிலிருந்து நீரை வௌியேற்றுவதனால் அதிகமாக நீர் வௌியேற்றம். பல உயிர்களைக் காவு கொண்டுள்ளது. எனினும் இங்கு பாதுகாப்புக் கருதி தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இத் தடுப்புச்சுவருக்கு வௌியே நீர் பாய்ந்தால் குளிக்கத் தடை ஏனெனில் நீரின் வேகமும் வௌியேற்றமும் உக்கிரமமாக இருக்கும்.

தடுப்புச்சுவருக்குள்ளே நீர் பாய்ந்தால் யாரும் குளிக்கலாம். இக்காலங்களில் இங்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படும்.  கோவிலுக்கு அருகிலுள்ள இவ்வருவியே இன்றைய குற்றாலத்து அருவியாகும்.

2. சிற்றருவி-
-----------------
இது பேரருவிக்கு மேலே உள்ளது.பேரருவியிலிருந்தே இங்கு நீர் பெறப்படுகின்றது.

3. செண்பகதேவி அருவி -
---------------------------------
பேரருவிக்கு மேல் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. காடு போன்ற பகுதியைக் கடந்தே இதனை அடைய வேண்டும். சற்று பாதுகாப்பு குறைவு



4. தேன் அருவி -
---------------------
இங்கு பல தேன்கூடுகள் இருப்பதனால் இது அபாயகரமான பகுதியாகும். இங்கு குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.




5. ஐந்தருவி -
-----------------
இது பேரருவியிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. திரிகூடமலையில் தோன்றி சிற்றாறின் வழியே பாயும் இவ்வருவி பாறையிலிருந்து பாயும் இடத்தில் 5 பகுதிகளாகப் பிரிந்து பாய்வதனால் இப்பெயர் பெறப்பட்டுள்ளது. அதுமாத்திரமுமன்றி இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமுமாகும்.



6. பழந்தோட்ட அருவி
------------------------------
இது பேரருவியிலிருந்து 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. சுதந்திரமாகக் குளிக்கலாம்.

7. புலியருவி
-------------------
இது பேரருவியிலிருந்து 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. சுதந்திரமாகக் குளிக்கலாம்.

8. பாலருவி
-----------------
இது தேனருவிக்கு அருகிலுள்ளது. குளிக்கத் தடை

9. பழைய குற்றால அருவி
--------------------------------------
இது பேரருவியிலிருந்து 16 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. இங்கும் தண்ணீர் மிகவும் உயரத்திலிருந்து பாய்கின்றது. முன்னர் மக்கள் இதனைப் பயன்படுத்தினாலும்கூட  தற்போது இங்கு மக்கள் நடமாட்டம் குறைவு.



மேற்கூறப்பட்ட ஒன்பது அருவிகளிலிருந்தும் கிளம்பும் சாரல் வெகுதொலைவு வரை தென்படுவதனால் , அந்தக் குளிர்மை நம்மைக் கூல்படுத்தும்...

மாரிகாலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்கு பலர் வருவதுண்டு. தென்மேற்கு பரவகாலத்தில் குற்றால அருவியில் நீர் ஆர்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் "குற்றால சீசன்" எனப்படும்.

இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. சங்க காலத்தில் பெண்ணின் அழகுக்கு இவ்வூர் உவமையாகக் கூறப்பட்டுள்ளதால் இவ்வூர் தேனூர் எனப் பெயர் பெற்றது.

ஈரலிப்பில் நனைக்கும் இந்த இயற்கையை நானும் ரசிக்க ஆசை....

இன்ஷா அல்லாஹ்....

அங்குள்ள என் உறவுகளின் அருகாமையுடன் இது நிறைவேறட்டும்!