About Me

2020/12/18

குழந்தையும் தெய்வமும்




குழந்தையும் தெய்வமும்
+++++++++++++++++++++++ 
குதூகலச் சிரிப்பினில் உள்ளம் உவந்தேனே//
உவந்தேனே நிதமும் உன்றன் அழகிலே//

அழகிலே செதுக்குகின்றாய் மழலைக் குறும்புகளை//
குறும்புகளைச் சுவைக்கின்றேன் பொழுதுகள் மகிழ்ந்திடவே//

மகிழ்ந்திடவே மலர்ந்தாய் உறவின் நிழலாய்//
நிழலாய்த் தொடர்கின்றாய் நினைவுகள் தித்திக்கின்றதே//

தித்திக்கின்றதே இல்லமும் உன்றன் அன்பினால்//
அன்பினால் உயிர்த்தே கருவுக்குள் உயிரானாய்//

உயிரானாய் உறவுக்குள் உணர்வுக்கும் அருளானாய்//
அருளானாய் வாழ்விற்குள் நீயென்  தெய்வமுமாகி//

ஜன்ஸி கபூர் - 18.12.2020
 


 

2020/12/13

பொய்யை மறைக்கும் மெய் முகங்கள்



பொய்யை மறைக்கும் மெய் முகங்கள்

***************************************** 

நிலையில்லா வாழ்வில் அலைகின்ற பொய்கள்/

கலைக்குமே மெய்யை கலங்குமே மனமும்/

வேடங்கள் மறைக்கும் உள்ளத்தின் உணர்வை/

போடுகின்ற மாயைக்குள் தீதே நிறையும்/


உத்தமத் திரைக்குள் உக்கிர வார்த்தைகள்/

சத்திய மொழிக்குள் சாக்கடைத் தூறல்கள்/

மூடிய முகத்தின் வக்கிரப் பார்வைகள்/

தேடிய திசைதனில் தடமும் பதிக்குமோ


மனிதம் மறக்கும் நிழல்களின் போராட்டம்/

இனிமை துறக்கும் இனிய பொழுதெல்லாம்/

நொடிக்கொரு கோலமாகப் பேசும் வார்த்தைகள்/

நிதர்சனம் காட்டா வஞ்சகத் தோற்றமே/


ஜன்ஸி கபூர் - 13.12.2020

 

குற்றம் குற்றமே

 



 

 

 நாவோடு செந்தமிழ்த் தேன் சுவையிருக்க/

நோவெடுக்க உதட்டில் மொழிகின்றனர் பிறமொழியை/

தாயக நிழலுக்குள் தூய்மை வாழ்விருக்க/

நாடுகின்றனர் அந்நிய தேசத்தில் அணைந்திடவே/


அனுபவம் தராத அறிவினை யேற்றி/

அடைக்கலமாகின்றனர் ஏடுகளுக்குள் திறனற்றுக் கற்க/

மனிதம் தொலைத்து அணிகின்ற வேடங்கள்/

புனிதம் இழந்தே புகழையும் பறிக்கும்/


உறவுகள் வருந்துகையில் பஞ்சணை உறக்கம்/

உணரார் உணர்வுகளை மிதித்தல் குற்றமென/  

தவறுகளை மறைத்தே வாழ்ந்திட நினைக்கையில்/

ஏறுகின்றதே குற்றங்கள் நிம்மதியும் அழிய/


 ஜன்ஸி கபூர்  - 13.12.2020

-----------------------------------------------------------------------------------------

குற்றம் குற்றமே

-----------------------

நாவில் செந்தமிழ்த் தேன் சுவையிருக்க/

நாகரிக உலகில் கைகோர்க்கின்றனர் பிறமொழியுடன்/

தாயக நிழலின் அருமை புரியாமல்/

நாடுகின்றனர் அந்நிய தேசத்தில் வாழ்ந்திடவே/


அனுபவம் இல்லாக் கல்வியைக் கற்றால்/

அடுத்தவரிடம் கையேந்தும் அவலம் நீளும்/

மனிதம் தொலைத்தே அணிகின்ற வேடங்கள்/

புனிதம் இழந்து தவற்றில் குவியும்/


சட்டம் மதிக்காமல் பண்பாடும் பேணாமல்/

கழியும் பொழுதுகள் கறைகள் சூழுமே/

செய்கின்ற குற்றங்கள் சிதையாது தொடரும்/

உண்மையை ஏற்காப் பண்புகளும் இழுக்கே/


ஜன்ஸி கபூர்