About Me

2014/08/16

அவள்




அவள்.....
தினமும்
என்னுடன் சண்டையிடும்
செல்ல உறவு!

அவள் ...
என் மனதை வசீகரிக்கும்
காதலிக்கும் மேலானவள்!

உணர்வுகளை ஆகர்ஷிக்கும்
தோழிக்கும் மேலானவள்...

அதனால்தான்....

மானசீகமாக என் மனதில்
மனைவியாக ஜீவிக்கின்றாள்

இதமான அன்பைப் போஷித்து!
எனக்குள் விரியும் கற்பனையுலகில்
அவளென்....
ரெண்டு குழந்தைகளுக்கும்
தாயானவள்!

இருந்தும்...!

அவளுக்கு மூன்று குழந்தைகள்
என்னையும் சேர்த்து!
எனக்கும்
அவள் குழந்தைதான்!

ஏனெனில் .......!

கபடமற்ற அவள் அன்பில்
தினம் மெய்மறந்து...
என்னையும் செதுக்குகின்றேன்
தாய்மையுடன்!

Jancy Caffoor




குற்றாலம்



இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த ஊர். அதற்குக் காரணம் அல்வா மட்டுமல்ல இன்னொன்றும். என் உறவுகள் அங்கும் பிணைந்துள்ளார்கள்.

இம்மாவட்டத்தில் இருக்கும் பேரூராட்சிகளுள் குற்றாலமும் ஒன்று. இது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 55 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. குற்றாலத்திலிருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் தூத்துக்குடி விமான நிலையம் அமைந்துள்ளது. தென்காசி புகையிரத நிலையம் குற்றாலத்தின் அருகிலுள்ள நிலையமாகும். எனவே குற்றாலம் தென்காசிக்கு அருகிலுள்ளது.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகை மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி இது என்பதால் குற்றாலம் எனப்பெயர் ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது குற்றால அருவிதான். இது திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது.

குற்றால அருவியின் சிறப்பு குளிர்ச்சியான காலநிலை, எண்ணெய்க்குளியல், மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்ரோசத்துடன் பாய்ந்தோடும் அருவி என்பவற்றின் அனுபவங்களாகும்.!

இங்கு குளியல் வெறும் பொழுதுபோக்கல்ல...இந்த அருவியில் பாய்ந்தோடும் நீர் பல மூலிகைச் செடிகளையும் தழுவிப் பாய்வதால் இது மருத்துவ குணம் வாய்ந்த நீரைக் கொண்டுள்ளது.



1. பேரருவி
----------------
இது குற்றாலத்தின் மிக முக்கியமான அருவியாகும். செங்குத்தான பாறையிலிருந்து நீரை வௌியேற்றுவதனால் அதிகமாக நீர் வௌியேற்றம். பல உயிர்களைக் காவு கொண்டுள்ளது. எனினும் இங்கு பாதுகாப்புக் கருதி தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இத் தடுப்புச்சுவருக்கு வௌியே நீர் பாய்ந்தால் குளிக்கத் தடை ஏனெனில் நீரின் வேகமும் வௌியேற்றமும் உக்கிரமமாக இருக்கும்.

தடுப்புச்சுவருக்குள்ளே நீர் பாய்ந்தால் யாரும் குளிக்கலாம். இக்காலங்களில் இங்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படும்.  கோவிலுக்கு அருகிலுள்ள இவ்வருவியே இன்றைய குற்றாலத்து அருவியாகும்.

2. சிற்றருவி-
-----------------
இது பேரருவிக்கு மேலே உள்ளது.பேரருவியிலிருந்தே இங்கு நீர் பெறப்படுகின்றது.

3. செண்பகதேவி அருவி -
---------------------------------
பேரருவிக்கு மேல் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. காடு போன்ற பகுதியைக் கடந்தே இதனை அடைய வேண்டும். சற்று பாதுகாப்பு குறைவு



4. தேன் அருவி -
---------------------
இங்கு பல தேன்கூடுகள் இருப்பதனால் இது அபாயகரமான பகுதியாகும். இங்கு குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.




5. ஐந்தருவி -
-----------------
இது பேரருவியிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. திரிகூடமலையில் தோன்றி சிற்றாறின் வழியே பாயும் இவ்வருவி பாறையிலிருந்து பாயும் இடத்தில் 5 பகுதிகளாகப் பிரிந்து பாய்வதனால் இப்பெயர் பெறப்பட்டுள்ளது. அதுமாத்திரமுமன்றி இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமுமாகும்.



6. பழந்தோட்ட அருவி
------------------------------
இது பேரருவியிலிருந்து 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. சுதந்திரமாகக் குளிக்கலாம்.

7. புலியருவி
-------------------
இது பேரருவியிலிருந்து 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. சுதந்திரமாகக் குளிக்கலாம்.

8. பாலருவி
-----------------
இது தேனருவிக்கு அருகிலுள்ளது. குளிக்கத் தடை

9. பழைய குற்றால அருவி
--------------------------------------
இது பேரருவியிலிருந்து 16 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. இங்கும் தண்ணீர் மிகவும் உயரத்திலிருந்து பாய்கின்றது. முன்னர் மக்கள் இதனைப் பயன்படுத்தினாலும்கூட  தற்போது இங்கு மக்கள் நடமாட்டம் குறைவு.



மேற்கூறப்பட்ட ஒன்பது அருவிகளிலிருந்தும் கிளம்பும் சாரல் வெகுதொலைவு வரை தென்படுவதனால் , அந்தக் குளிர்மை நம்மைக் கூல்படுத்தும்...

மாரிகாலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்கு பலர் வருவதுண்டு. தென்மேற்கு பரவகாலத்தில் குற்றால அருவியில் நீர் ஆர்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் "குற்றால சீசன்" எனப்படும்.

இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. சங்க காலத்தில் பெண்ணின் அழகுக்கு இவ்வூர் உவமையாகக் கூறப்பட்டுள்ளதால் இவ்வூர் தேனூர் எனப் பெயர் பெற்றது.

ஈரலிப்பில் நனைக்கும் இந்த இயற்கையை நானும் ரசிக்க ஆசை....

இன்ஷா அல்லாஹ்....

அங்குள்ள என் உறவுகளின் அருகாமையுடன் இது நிறைவேறட்டும்!








அந்தக் கடைசி நிமிடங்கள்



அந்தக் கடைசி நிமிடங்கள்
----------------------------------------------
இருள் கௌவும் நேரம்.....

உடல் அதிகமாக வியர்க்கும் உணர்வு. மெல்லத் தலையை உயர்த்த முயற்சிக்கின்றேன். முடியவில்லை.

உஷ்ணம்................

மூச்சுக் காற்றில் உட்காந்து விளையாட ஆரம்பித்தது. ஆனாலும் வியர்வையால் நனைந்து போன உடல் மட்டும் ஜில்லென்று....

"ம்"

முனகுகின்றேன்.....

கண்களில் கண்ணீர் கன்னம் வழியே கோடு கிழிக்க...

மனசும் உப்புக் கரிக்கின்றது.

"ஓவென" கத்த வேண்டுமென்ற உணர்வு!

இறுதி ஊர்வலத்திற்காக டாக்டர் நாள் குறித்தாகியாச்சு..இந்தப் பூமியை விட்டு நீங்குவதற்கு ஏதோ ஒரு காரணம் கிடைத்து விடுகின்றது..

நிமிடங்களின் நச்சரிப்பையும் பொருட்படுத்தாது இதயம் மீண்டும் துடிக்கின்றது..

"வலியால் மெல்ல முனங்குகின்றேன்"

"மாரடைப்பு" எனக்கும் நாள் குறித்து விட்டதா...

மரண வலியிலும் என் கண்கள் பனிக்கின்றன. இதயத்தின் மாறுபட்ட துடிப்பை என்னால் உணர முடிகின்றது.

அது வலியா.........அழுகையா!

என்னைச் சுற்றியுள்ள கூட்டத்தை விலக்கி கண்கள் இரகஸியமாக அவனைத் தேடுகின்றது..

"அவன் வருவானா"

நப்பாசையில் விரிந்த மனதை, பகுத்தறிவு அடக்குகின்றது..

"இந்த இறுதி ஊர்வலத்தை அவனுக்கு யார்தான் அறிவிப்பார்கள். பக்கத்திலா இருக்கின்றான். கண்கலங்கி விடையனுப்ப!

இதயம் மீண்டும் வலிக்கின்றது..

"அவன் நினைவுகள் வாழ்ந்த கூடு அது. உயிர்ப்போடு ஆசைகளையும் கனவுகளையும் செல்லச் சண்டைகளையும் சேமித்த கூடு அது"

கண்கள் நனைவதையும் பொருட்படுத்தாமல், விழிகள் நிரந்தரமாக மூடத் தொடங்குகின்றன...

அவன் நாளை என்னைத் தேடி வருவான். அதுவரைக்குமாவது என் இற்றுப் போன இதயம் துடிப்பை மறக்கலாமா...

ஆத்மாவின் ஓலம் புலப்படாமலே, வெறும் மெய்க்கூட்டை நால்வர் சுமந்து செல்கின்றனர் கண்ணீருடன்!

கைவிலங்கு


உன்னைச் சுற்றும் சிலந்தி
நான்....
சிறைபடுகின்றாய் தினமு மென்
பார்வைக்குள்...!

விடுதலை யுனக் கிருந்தும்
நீ ......
விரும்பிக் கிடக்கு மென் சிறையின்
கைவிலங்காய் என் அன்பு!

Jancy Caffoor

நாங்கள்

விடை தேடும் விடுகதையொன்று!

நாங்கள் 
தினமும் சண்டை பிடிக்கின்றோம்!

ஆனால்
நாங்கள் விரோதிகளல்லர்!

நாங்கள் 
அன்பாகவும் சில நேரங்களில்
பேசுகின்றோம்!

ஆனால் 
நாங்கள் நண்பர்களுமல்லர்!

நாங்கள் யார்?

உணர்வுகள்



நம் உயிர் வாழும் கூடு மெய்
இருந்தும்....
மெய் யன்பில் நாட்டமில்லா வாழ்வோர்தான்
அதிகம்...
இந்த பொய் உலகில்!
-------------------------------------------------------------------------------------

நாம் பெறும் அனுபவங்களே உணர்வுகளில் பதிந்து நமது செயல்களாய் இயக்குகின்றன. எனவே நாம் எவ்வாறு நம்மை நினைக்கின்றோமோ, அவ்வாறேதான் பிறரையும் நினைப்போம்..

நமது எண்ணங்களுக்கும், யதார்த்த சூழலுக்கும் இடையில் ஏற்படும் இடைவௌிகளே மனக்குழப்பங்களையும், பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும்.....

எனவே................

நல்லதையே நினைப்போம்!
-----------------------------------------------------------------------------------

பல வருடங்களாக களிப்போடு
சிறகு விரித்த என் கல்விச்சாலை...இன்று
சிறைக்கூடமாய்!
யார் செய்த தவறிது!
----------------------------------------------------------------------------------
அன்று ன்னை
என் தனிமைக்குள் நிரப்பி வைத்தேன்

ஆனால்....

இன்று .....

தனிமையோ....
துணையின்றி!
---------------------------------------------------------------------------------

சில புதிர்களுக்கு இப்பொழுதுதான்
விடை கிடைத்திருக்கின்றது!

காத்திருந்து இற்றுப் போன இதயம்
காலனிடம் மண்டியிடாமல்...
காலம் காயம் ஆற்றட்டும்!
--------------------------------------------------------------------------------
எல்லாம் கடந்த பின்னர்தான்
வாழ்க்கை பற்றிய தேடல் ஆரம்பிக்கின்றது!
விளைவாய்..........
விரக்திக் கோடுகள்!
அவை...............
அழியா வரங்கள்!
-----------------------------------------------------------------------------
என் குடும்பம்
என் கணவன்
என் பிள்ளைகள்
எனும் "என்' பற்றிய சுயநலத்தினால் பொறாமையும், பாவங்களும், விரோதங்களும் உருவாகின்றன. இச்சுயநலம்தான் உறவுகளுக்கிடையிலும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன.

- Jancy Caffoor -

WhatsApp



உணர்வுகளின்
அன்புப் பாலம்!

செல்லச் சண்டைகளின்
உஷ்ண கூடம்!

புகைப்படங்களைப் பரிமாற்றும்
கொடையாளி!

நம் மனதை மெஸேஜ்களாய்
வாசிக்கும் செய்திச்சாலை!

இரவும் பகலும்
நமக்குழைக்கும் தூதன்!

பேச்சொலி மறுத்து
மூச்சொலிக்குள் ஸ்பரிசம் சேர்க்கும்
காதல் பரிசு!

ஞாபகங்களைப் பதுக்கி வைக்கும்
களஞ்சியசாலை!

லாஸ்ட் ஸீனில் நம் வருகையைப்
போட்டுக் கொடுக்கும் துரோகி!

அட.....

இத்தனைக்குள்ளும்
எனக்குப் பிடித்தது..........

உன்னை தினமும் என்னுள்
அடையாளப்படுத்தும் பொக்கிஷ மது!


viber


காதல் வைரசின்
சைபர் குற்றமோ !

பேச்சின் அதிர்வுகளின்
ஒலிப்பதிவோ !

கைபேசிகளின் நுழைவை
அம்பலப்படுத்தும் அந்தரங்கமோ !

IDD கொள்ளையடிப்பை
ரத்துச் செய்யும் இராஜாங்கமோ!

இலவச சேவையினுள்
உலகம் சுருங்கி விட்டதடா...

உன்னையும் என்னையும்
உள்ளிழுத்தவாறு!

Jancy Caffoor



புரிந்து கொள்


கொற்றனே !
உன்னில் தடுமாற்றம் 
ஏன் என்னுள் மாற்றம்!

இற்றைவரைக்கும்
நீயென்னை  
வார்த்தைகளால் இம்சித்தும்
என்னுணர்வில் மாற்றமில்லை 

அன்பென்றும்
நிறமாறா பூக்கள் - இவ்
வகிலத்தில் 
நீயும்
நானும் விதிவிலக்கா சொல்!

புரிந்து கொண்டால்
இன்னும்
பரிவு வளரும் நமக்குள்!

Jancy Caffoor

இவன்


கேலியோடு பார்த்தவர்களெல்லாம் - இன்று
கேள்வியோடு!
மாற்றங்கள் தோலால் அல்ல
மானசீக உணர்வுப் பரிமாற்றங்களின்
உந்தல்களால்!

பிணத்திற்கும் உயிர் பாய்ச்சி
பிழைக்க வைத்த குணவாளன் நீ யென
காரணம் சொல்லவா எல்லோருக்கும்
காதைக் கொடுங்கள்!

இவன்......!

எரிமலைக்குள்ளும்
முத்துக் குளித்தவன்!

சூறாவளியையும்
ஆறத் தழுவி சுவாசம் தந்தவன்!

முடிந்து போன வழிச்சுவட்டுக்குள்ளும் - புதுத்
தடம் பதித்தவன்!

அழகுக்காக அலையும் ஆயிரம் பேர்களுள்
என்னுள்....
ஆத்மா தேடும் இவன்
வித்தியாசமானவன்தான்!

ஏனெனில்.....
தினமும் சண்டைதான் பிடிக்கின்றோம்..
அதுகூட
அன்பின் பரிமாணமாய்!

ஜன்ஸி கபூர்

ஒருபோதும் மறவாத


என் இமைக்குள்ளும் பல கனவுகள்தான். 
ஒருநாள் இமைக்காமல் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் 
என் கனவுகள் உன்னையும் லேசாக உரசிச் சென்றது. திடுக்கிட்டு விழித்தாய் புன்முறுவலுடன்!

விரல் நீட்டினேன். 
பற்றிக் கொண்டன நம் ரேகைகள். 
உரிமையுடன் கைகளை உரசி அன்புணர்த்தினாய் .
இதழ்கள் படபடத்தபோது அடக்கினாய் சில துளிகள் முத்தங்களையிட்டு!

மனசு காற்றிலே பறந்தபோது ஆரத்தழுவினாய்.
நானோ விழிகள் உடைந்து முதன் முதலாய் உன் அன்பில் நெகிழ்ந்து அழுதபோது உன் கண்களும் உப்பேற்றின. 

புரியாமல் விழித்தோம். 
அன்பு வார்த்தைகளாய் கசிந்தன.

அன்று 

வெட்கம் வெடிக்க இருவரும் நம்மைப் பார்வைக்குள் ஔித்துத் திரிந்தோம் சந்திக்காமலே! 

நாட்கள் பறந்தன 
உருவங்கள் பருவங்கள் திறந்தன. 

நிறையப் பேசினோம். 
ஒருவரையொருவர் புரிந்து கொள்வோமென்ற நப்பாசையில்!

ஒருநாள்...... 
நம் உதடுகள் மூடிக் கொண்டன ஊமையாய். 
திறந்த போது வெடித்தன சண்டைகளாய். 

முதன்முதலாய் 
புரிதலுடன் பிரிதலும் தலைகாட்ட, 
ஒன்றோடொன்று உறைந்த நம் நிழல்கள் திசை பிரிந்தன.
யதார்த்தக் கதவுகளில் நம் காதல் தொலைந்து போனதா!

ஏனோ ........

இப்போதெல்லாம் நமக்குள் நாமே முள்வேலிகளிட்டு 
அன்பை மறைத்துக் கொண்டிருக்கின்றோம்!

இருந்தும் 

சில துளிகள் வற்றாத அன்பினால் நம் கனவுகளிலும் இரகஸிய ஈரலிப்புக்கள்!