2013/05/04
என் இரவாய்
இப்பொழுதெல்லாம் - என்
ஒவ்வொரு இரவுகளும் விழித்திருக்கின்றன
என்னைப் போல
உன் நினைவுகளையும் சுமந்து!
வெட்ட வெளியாய் பரந்த வானில்
கொட்டக் கொட்ட முழித்திருக்கும்
நட்சத்திரங்கள் கூட
உன்னையே சுமந்து காத்திருக்கின்றன
என் வெறுமை நீக்க!
யன்னல் திறந்து உள் நுழையும் காற்றுக் கூட
நள்ளிரவில் குளிர் களைந்து
வெப்பப் பிரளயத்தில் என் மேனி நசிக்குது
இதமாக!
இருள் வெளியின் குரல்வளைச் சத்தமாய்
ஒலிக்கும் ஆந்தை அலறல் கூட
உன் கைபேசி அழைப்பாய்
என்னை முட்டிச் செல்கின்றது ஆர்வமாய்!
உனக்காக காத்திருப்புக்கள் சுகமானதுதான்
உன் குரல் வயலில் எனை நாட்டத்துடிக்கும்
உனக்கான காத்திருப்பு சுகமானதுதான்!
உனக்குத் தெரியுமா
உன் காத்திருப்பு மட்டுமல்ல
உன் முத்தவோசை இன்றிக் கூட - என்
இரவுகள் விடிவதில்லை!
- Jancy Caffoor-
04.05.2013
ஏன் தானோ
வேர் தந்த பெற்றோர் மறுத்து
நேற்று முளைத்த காதலோடு சரசமாடி
உற்றார் வெறுத்து நிற்போர் மனசு
பாழடைந்த கல்லறைச் சாலை!
தொப்புள் நாண் அறுத்தெறிந்து - தமக்கென
தொட்டில் குழந்தை தான் வார்ப்போர்
பாவத்தின் சிலுவைதனை போர்த்துகின்றனர்
தம் பரம்பரைக்கே!
மலர் வாசம் வீசும் பாசம் - என்றும்
நமக்குள் அழகான பசுமைக் கோலம்
வளமான வாழ்க்கை வாழ
பெரியோர் ஆசி வேண்டுமென்றும்!
- Jancy Caffoor-
04.05.2013
2013/05/02
சட்டம்
சிறுபான்மைக்கு அநீதி விளைப்பார்
உரிமை மறுக்கும் பெரும்பான்மை!
எதிர்த்துக் குரல் கொடுப்போர் பயங்கரவாதியாம்!
ஏக்காளமிடுகின்றதய்யா இனவாதம்!
கண்கொத்திப் பாம்புகள்
தன்னினத்திற்கு கரி பூசுவார் சொகு வாழ்விற்காய்!
காட்டிக் கொடுக்கும் வல்லுறுக்கள்
வந்தமரும் உயர் பதவிகளில்!
சட்டத்தில் அறைகின்றனர் அதர்மங்களை!
ஏட்டளவில் சத்தியம் கதறுதைய்யா - நம்
மன எரிமலைக் குழம்பின் அகோரத்தில்
கருகிப் போகுமோ சட்டத்தின் ஓட்டைகள்!
- Jancy Caffoor-
02.05.2013
யாரோ
வெற்றி பெறப் போவது
விண்ணா மண்ணா!
புவிக்குள் மின்சாரம் பாய்ச்சி
வேவு பார்க்கின்றது மின்னல்
தோற்றது யார் காற்றா நாற்றா!
புழுதிக்குள் கூத்தடித்த மலர் மேனி
குளிருக்குள் விறைத்துக் கொள்ளுது
அழுக்குக்காகவா அழகுக்காகவா !
இங்கோ மழையோ மழை!
எட்டு திக்கெங்கும் முரசறையும்
கொன்றல் சத்தத்துடன்!
- Jancy Caffoor-
02.05.2013
2013/05/01
புரிதலின்றி
பேசித் தீர்த்துவிடு
நம் வாழ்வை நம் முன்றலில்!
இல்லையென்றால்
பிளவுபடுவது நாமல்ல - நம்
வளமான குடும்பம்!
சமாந்தரங்களாய் நாம் பயணிக்கையில்
நம் குழந்தைகள்
எதிர்காலம் முடிவிலியில்!
மனசு பார்த்து இணைந்த நாம்
இன்று
சட்டம் பேசி நிற்கின்றோம்
வாழ்வை சிறைப்பிடுத்த!
வனப்பைச் சிதைக்க!!
விவாகத்திலிருந்து விமோசனமா
இல்லை
விவாகரத்திலிருந்து விடுதலையா!
புதிராகி நீ எனக்குள்!
சொல்லிவிடு
நல்ல பதிலை!
என் மரணத்திற்காய் நாள் குறிக்கும்
உன்னிடம்தான் கேட்கின்றேன்!
- Jancy Caffoor-
30.04.2013
இம்சை
மொழி மறந்து விழி கிறங்கி
உள்ளத்தை ...........
அழகின் இம்சைக்குள் ஆழ்த்தும் காதல்
அற்புதமானது!
உண்மைக் காதல் உருவம் பாராது
உணர்ச்சிக்குள் காமம் தேடாது......
உலகம் உருளும் வரை
உயிர் விட்டும் போகாது!
காதலின் காத்திருப்புக்களும்
வியர்வைத் துளிகளும் கூட.....
நாணத் தாழ்ப்பாளிட்டு
மௌனத்துள் இம்சித்துக் கொண்டிருக்கும்!
இருதயங்கள் சங்கமித்தால்
இருளில் கூட ஒளிப் பிழம்பு தோன்றும்
கரு விழிகளில் மின்னும் காதல் பார்வைகளை
உருத்துலக்கி உயிரேற்ற!
காதல் அழிவதில்லை
காலமுள்ளவரை உணர்வோடு வாழும்!
காதல் அழிவதில்லை
காலமுள்ளவரை உணர்வோடு வாழும்!
உன்னில் நான்
உன் கால்கள் பதிந்திருப்பது வயலல்ல
நம் காதல்!
நீ ஏறியது மரமல்ல
என் வாழ்க்கை!
நீ பறித்தது கொடுக்காப் புளியங்காயல்ல
என் மனசு!
உன் கைகளின் ஸ்பரிசத்தில் காய்களல்ல
நான்!
நீ சுவைப்பது பழங்களல்ல
என் நினைவுகள்!
உன் ஒவ்வொன்றிலும்
உன்னை நான் காண்பேன்
இதுதான் அன்படா
உண்மையான அன்படா!
- Jancy Caffoor-
30.04.2013
2013/04/30
தொழிலாளி
ஒவ்வொரு நாட்களும்
வியர்வையின் முகவரிக்குள்
தேகம் அடங்கிக் கிடப்பவர்!
வயிற்றோர தசைகளின் வருடல்களில்
மயங்கிக் கிடக்கும் உதரத்திற்கு
மெல்ல மனுக் கொடுத்து பசி விரட்டுபவர்!
இவர்கள்
கனவு வாழ்க்கைக்குக்குள் கூட
ஒதுங்கத் தெரியாத அப்பாவிகள்!
விடியலும் இரவும் மாறி மாறி வரும் உலகில்
இவர்களேனோ
அந்தகரத்துக்குள் வேரூன்றிக் கிடப்பவர்கள்!
தினமும் வாழ்க்கைப் போராட்டத்தில்
வலிகளை மட்டும் பதியமாக்கும்
உற்பத்தியாளார்கள்!
ஒன்றிக் கிடக்கும் உறவுகளின்
நேசங்களிலில் கூட வசந்தங்ளை நெருங்கிடாத
அபாக்கியசாலிகள்!
வாழ்க்கைச் "சீவனத்தில்"
ஜீவனோபாயமாய் வறுமையைத் தேர்வு செய்யும்
தேர்வு நாடிகள்!
உரிமைகள் மறுக்கப்படும் போதுதான்
விலங்குகள் உடைக்கப்படுகின்றன
இவர்களும் வாழ்க்கையை கற்றுக் கொடுக்கின்றார்கள் பலருக்கு!
இவர்களின்
நாளைய வாழ்க்கை வெறும்
ஏக்கங்களின் சேமிப்பு!
கண்ணீர்கூட காய்ந்து போனதில்
வரண்டு போன திட்டுக் கன்னங்கள்
சரிதம் எழுதுகின்றன எலும்பின் கூட்டணியுடன்!
இவர்கள்
தின உழைப்பில் வாழ்வேங்கும்
சராசரிக் கூலிகள்!
முதலாளித்துவ முடக்கலில்
மூச்சடங்கி
சுகபோகங்களை பறி கொடுக்கும் அப்பாவிகள்!
தேய்ந்து போன கை ரேகைகளில் கூட
உழைப்பைச் சின்னமாக்கும்
கடின உழைப்பாளிகள்!
விண் நட்சத்திரங்களை
வீசி விட்டுச் செல்லும் வானம் கூட
ஒரு கணம் தரித்து கண்ணீர் சிந்துகின்றன
புழுதி படிந்த வாழ்வுக்குள்ளும்
ஓர் நாள்
முழு உலகுமே வாழ்த்தி நிற்கும்!
நாளை
நாமும் வாழ்த்துவோம்
உழைப்பின் உரிமைகளைப் போற்றி!
- Jancy Caffoor-
30.04.2013
2013/04/29
கணனியும் நானும்
என் மடிக் கணனியில்
சாப்ட்வெயராய் நுழைந்தாய்!
மௌசாய் என் தொப்புள் நாண்
உனை ஸ்பரிசிக்கையில்
மெல்ல எட்டி உதைத்தாய்!
கீபோர்டாகி என் உணர்வுகளை உனக்குள்
பதியமிடுகின்றேன் தினமும்!
என் கருவறை சிஸ்டத்தில் சேமிக்கின்றேன்
உன்னை வைரசுக்கள் தாக்காமலிருக்க
என் கனவு மொனிட்டரில்
உன் முகம் ரசித்தே களித்தேன்!
என் பிரசவ ப்ரிண்டரில் வெளியுலகிற்காய்
உனை அச்சேற்றும் நாள் எப்போது!
- Jancy Caffoor-
28.04.2013
விதியின் வழியில்
தூக்கம் மறந்த இரவுகளில் இனி
தூளியாய் தரித்திருக்கும் ஏக்கம்!
பசுஞ் சோலைகளில் பாய் விரித்த தென்றல்
வங்கம் தேடி மறைந்திருக்கும்!
ஹிருதயச் சிறகடிப்பில் கிறங்கிய மனம்
சந்தத் துடிப்புக்களை நிறுத்திட விழையும்!
பாலைவெளிகளில் பாகாய் உருகும் நிஜம்
சோலைக் கனவுகளை கரைத்திட்டு மறையும்!
நீயும் நானும் ஈர் சமாந்திரங்களாய்
நீர்த்திரை விழி மறைக்க பயணிப்போம்!
இழப்புக்கள் வசந்தங்களைத் திரையிட
பாழாய்ப் போன விதியைச் சபித்தபடி நான்!
- Jancy Caffoor-
28.04.2013
என்றோ ஒரு நாள்
என்றோ ஒர் நாள்
உரமொன்று உயிர் வழியாய் நழுவிச் சென்றதில்
தவறுதலாய்
களைகள்
கலை வடிவத்தில் என் தேசத்தில்!
தலையறுக்கும் வெறியோடு - என்
குரல்வளை நசுக்க அவை துடிக்கையில்
மிரட்சியோடு ஓடுகின்றேன்
திக்கேதுமறியாமலே!
முட்களுக்கிடையியே
மென் மலரொன்று அணைத்து நிற்கின்றது
மனசோரம்
"நான் உனக்கிருக்கேன்"
- Jancy Caffoor-
28.04.2013
வண்ணாத்தி
இரவொன்றில்...........!
சிறகடித்து பறந்து வந்த வண்ணாத்திப்பூச்சியொன்று தவறுதலாய் என்னறைக்குள் நுழைந்தது...
அதன் பரபரப்பில் என் உறக்கம் அறுந்தது. அடித்து விரட்ட ஆவேசம் கொண்டபோதும் , என்னிடம் சிக்காமல் ஜாலியாய் அறையை நோட்டம் விட்டு பறந்து கொண்டே இருந்தது, நானோ அதனுடன் போராடித் தோற்ற நிலையில் களைத்துறங்கினேன் வண்ணாத்திப்பூச்சியை வெளியே விரட்ட முடியாதவளாய்....!
ஆழ்ந்த உறக்கத்தில் வண்ணாத்திப்பூச்சி மறந்தே போக,
எழுகின்றேன் ஏதுமறியாதவளாய் அதிகாலையில்........
கண்ணெதிரே சிறகிரண்டு பிய்ந்து தரையில் சிதறிக் கிடக்க, பதற்றத்துடன் வண்ணாத்தியைத் தேடுகின்றேன்.
நேற்று சபித்த நான், இன்றோ வேதனையுடன் அச்சிற்றுயிரைத் தேடுபவளாய்.......
நச்....நச்....
பல்லியொன்றின் சப்தம் உரப்போடு என்னருகில் கேட்க,
அறைச் சுவற்றை உற்று நோக்குகின்றேன்...
வண்ணாத்தியின் சுதந்திரம், பல்லியின் இரையாகிக் கொண்டிருந்தது..
"எப்போதும் ஆபத்துக்கள் எம்மை நெருங்கிக் கொண்டுதானிருக்கின்றன. தவிர்ப்பதும், சிக்குவதும் நம் மதி, விதி வசப்பட்டது.
ஊஞ்சல்
மன எண்ணங்கள் நிறைவேறும் போது மகிழ்ச்சி தானாய் வரும். ஆனால் நம் கையை விட்டுப் போன பொருள் திரும்ப எதிர்பாராத நேரத்தில் நம்மை வந்து சேருமாயின் , கிடைக்கும் சந்தோஷத்தை அளவிட வார்த்தைகள் கிடையாது!
----------------------------------------------------------------
புகழ்ச்சி என்பது சாத்தானின் வேதம்....
அடுத்தவர் அளவின்றிப் புகழ்ந்தால், கொஞ்சம் அவதானமாக இருங்கள்..
அவர் உங்களிடம் எதையோ எதிர்பார்க்கின்றார்
-------------------------------------------------------------
சித்திரை முழக்கம்..............
நித்திரை குழப்புது!
யாத்திரை போகும் மழையோ
மாத்திரை யாகுது விழித்திரைக்கு!
மழையோ...மழை!
அதுவும் ஐஸ்கட்டி மழை!
ஹய்யா.....ஒரே குளிரடிக்குது!
------------------------------------------------------------
உயிர்மெய்யில் உன் பெயர்........
என் மெய்யில் நீ உயிராய் இருப்பதனால்!
--------------------------------------------------------------------
அழகான இதயம்....
அழுகிப் போகும்...
விழிகள் வீங்கிப் போகும்
பழி சொல்லும் உறவுகள்!!
---------------------------------------------------------------
உணர்வுகள் , உள்ளத்தின் குரல்கள்......!
அதுவே குரல்களாக, எழுத்துக்களாக வெளி வருகின்றன. !!
பிறருக்கு பாதிப்பு வராமல் தனி மனிதன் தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் தவறிருப்பதாக எனக்குப் படவில்லை.
அளவோடு பேசுங்கள்....ஆனந்தம் நம்மை விட்டு சிதறிப் போகாது!
கருத்துச் சுதந்திரம் இருப்பதற்காக பண்பற்ற ரீதியில் ஒருவர் செயற்படுபவராக இருந்தால் அவரைக் கண்டிக்கும் முதல் ஆள் நான்தான். அதே நேரம் பிறர் மனதை புண்படுத்தாமல் வெளிப்படுத்தும் கருத்துக்களை ஆதரிக்கும் முதல் ஆளும் நான்தான்......
![]() |
Add caption |
நாணயத்தின் முன்பு சிலவேளை "நாணயம்" கூட தோற்றுப் போகும்,
புழக்கத்திலுள்ள எமது இலங்கை நாணயம் இது . இதிலும் தமிழ் உண்டு
-----------------------------------------------------------
மன்னிப்பு என்பது மேலும் தவறுகள் தொடர்வதற்கான சந்தர்ப்பங்களாகும்.
தவறுகளை தண்டிக்கும் போது, உரியவர் அதனை உணர்தல் வேண்டும். மௌனம் அந்த உணர்தலை புரிய வைக்கும்.
--------------------------------------------------------- நாம் தவறவிடும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும்
அடுத்தவர் தமக்குள் பற்றிக் கொள்ளும் அற்புத தருணங்கள்!
-----------------------------------------------------------
தங்கத்தை உரசி அதன் தரம் அறியலாம்...
மனிதனை , அவன் வார்த்தைகளை
ஒளியில் விழுந்து கிடக்கின்றேன்
விட்டிலாய்........
விலகிச் செல்கின்றாய் நீ - என்
முறிந்து கிடக்கும் சிறகைக் கூட சீர் செய்யாது!
----------------------------------------------------------
வெத்திலை பாக்கு சுண்ணாம்பு
வெளுத்து வாங்கிறார் சின்னப்பு- அட
கொக்கு காத்திருக்கு மீனுக்கு
சொக்கு பொடி போட்டு மயக்கினது யாருக்கு!
---------------------------------------------------------
வரையெல்லாம் கடந்து.......
சிறை மீட்பாய் என்றிருந்தேன்...நீயோ
இரையானாய் பிரிவுக்கே- நமை
திரையிட்டு மறைத்ததும் யாதோ!
------------------------------------------------------------
சில நேரங்களில் நாம் விடும் சிறு தவறுகள் கூட .......
நீண்டகால நன்மைக்காக நமக்காக உருவாக்கப்பட்ட விளைநிலமாகக் கூட இருக்கலாம்.
- Ms. Jancy Caffoor -
ஏனடா
இப்பொழுதெல்லாம் நீ
உறக்கம் மறந்த இரவுகளை
என்னுள் எழுதிச் செல்கின்றாய்!
என் உணர்வுகளின் அனல்வெப்பத்தில்
நீ தயாரிக்கும் மின்சாரம்............
ஆயிரம் வாற்று ஏக்கமாய்
கசிந்து மருகின்றது!
உன் பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு அணுக்களிலும் நானாய்......
நம்புகின்றேன் உன்னை!
இன்னொரு தடவை இம்சிக்காதே வார்த்தையாகி!
சீனப் பெருஞ்சுவராய்
உயர்ந்திருக்கும் உன் உள்ளத்தில்....
சிறு வெடிப்புக்களை யார் தூவியது
நம்மை யழிக்க!
உன் குழந்தை மனசுக்குள்
நானிருக்கின்றேனா...........
ஊடுருவிப் பார்க்கின்றேன் மெல்ல
நம் குழந்தையாய் மீள நீ என்னுள்!
இதுதான் காதலா....!
பிரிவுக்குள் உறவையும்
உறவுக்குள் ஊடலையும் பிசையும்
அழகிய அவஸ்தையாய்!
Subscribe to:
Posts (Atom)