About Me

2014/09/20

Football Team - Zahira Maha vid

அகில இலங்கை ரீதியிலான 15 வயதிற்கு கீழ்ப்பட்ட கால்ப்பந்தாட்டப் போட்டிக்கு அநுராதரம் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான போட்டிகள் எதிர்வரும் 23/24/25.09.2014 திகதிகளில் கொழும்பில் நடைபெறும்


இவர்களை நாமும் வாழ்த்துவோம்!

கால்ப்பந்தாட்டக்குழுவில் இடம்பெறும் மாணவர்கள்

1.   N.M. Sasan   (C)
2.   R. M. Abdullah  (K)
3.   K.R.M. Suhail
4.   M.N.M.Asjath
5.   M.M. Ilham
6.   I. Saiful
7.   A.S.Shahan
8.   N.M. Sakeer
9.   A.S.Sabri
10. K.Waseem Akram
11. B.Gavaskar
12. M.M.M.Mubasir
13. A.A.Aqeel
14. S.M.Saheel
15. A.Al Askhaf

பயிற்றுவிப்பாளர்கள் - 
Mr. P.T.Rifas
Mr. Thilina


 2014.09.19 திகதி காலைக்கூட்டத்தில் வைத்து இம்மாணவர்களுக்கான Jercy ஆடைகள் அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை அதிபர் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்..இதனை Mr. Mohamed Atheek (London) வழங்கியிருந்தார்.




படிகள்

பத்தாண்டு சிறப்பிதழ் - விமர்சனமும் நிகழ்வு பற்றிய பார்வையும்
---------------------------------------------------------------------------------------

இலக்கியமென்பது இரசனை மட்டுமல்ல தாகமிகு உணர்வுகளைத் தொகுக்கும் கலை..அந்தவகையில் ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் போக்கின் படிகளில் சிறு இலக்கிய  இதழ்களும் அவ்வவ்போது பங்களிப்புச் செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது...

எல். வஸீம் அக்ரமை ஆசிரியராகக் கொண்டு அநுராதபுரத்திலிருந்து வௌிவரும் "படிகள்" எனும் இரு மாத 34வது இலக்கிய  இதழ் தனது பத்தாவது ஆண்டின் சிறப்பிதழாக கடந்த 14 செப்ரெம்பர் 2014 ந்திகதியன்று அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழுவினரால் வௌியிடப்பட்டது..

Water Garden Hotel வரவேற்பு மண்டபத்தில் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரின் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு வௌியீட்டு மலர் மற்றும் இலக்கிய ஆய்வரங்கில் பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

எந்தவொரு நூலினதும் உள்ளடக்கத்தின் கனாதியை பிரதிபலிப்பது அதன் முகப்பட்டைதான்..இவ்விதழிலும் மயான தேசத்தில் இரை தேடும் காகமொன்றின் பிம்பமாய் முகப்பட்டை நெய்யப்பட்டுள்ளது இதனை வறட்சிப் பின்னணியிலும் ஆழமான தேடலின் ஒலிப்பாகவே நான் கருதுகின்றேன்..

தமிழ்பேசும் மக்கள் குறைந்தளவில் வாழும் அநுராதபுரத்திலிருந்து மொழியாகும் இவ் இலக்கிய இதழின் சகல ஆக்கங்களும் தனது ஆழமான உட்கிடக்கையை எளிய சொற் பதங்களால் யாரும் விளங்கிக் கொள்ளும் விதமாக தன்னகத்தை கொண்டுள்ளமையானது நமது ஆரோக்கியமான எதிர்பார்ப்பின் அடையாளங்களாக மிளிர்கின்றதென்றால் மிகையில்லை..

நூலாசிரியரின் "படிகள் தொடர்பான கடந்து வந்த ஆழ்மன யாத்திரை", அன்பு ஜவஹர்ஷா சேரின் "அநுராதபுர மாவட்ட கலை இலக்கியப் பதிவுகள்", பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்களின் நேர்காணல் எம். சீ ரஸ்மினின் "பால்நிலை சமத்துவம்" எனும் ஆய்வுக்கட்டுரை, கெகிராவை சுலைஹாவின் "இரு மொழிபெயர்ப்புக் கவிதைகள்", எம்.எஸ் றஹ்மத்நிஸாவின் " பிரதான பாட அடைவுகளில் தாய்மொழியின் செல்வாக்குப் பற்றிய இலக்கிய மீளாய்வு", சி. ரமேஷின் ஈழத்து குறுங்கதைகள், கலாபூஷணம் வைத்திய கலாநிதி தாஸிம் அகமதின் "தென்கிழக்கிழங்கை முஸ்லிம் தேசத்தார் மாண்பு",முருகபூபதியின் "பாரதியின் காதலி", மேமன் கவி அவர்களின் "தோல் நிற அரசியலும் இரு ஆவண குறும்படங்களும்" மன்சூர் ஏ காதரின் "கூட்டுப்பிரக்ஞையின்மை பற்றிய வாக்குமூலம்"  போன்ற தரமான பதிவுகளுக்கிடையே யதார்த்த கவிதைகளும் சிறுகதைகளும் படிகளை நிரப்பமாக அலங்கரித்திருந்தன..

இவற்றுக்கும் மேலாக இவ்விதழில் எனது "நட்பே நீ" எனும் கவிதையும் இடம்பெற்றிருந்தது. பிரசுரித்தமைக்கு நன்றிகள் பற்பல...

மேலும் இந்நிகழ்வானது
  • அநு.வை. நாகராஜன் அரங்கு (படிகள் 10வது ஆண்டு இதழ் வௌியீடு)
  • அன்புதாசன் அரங்கு  (இலக்கிய அரங்கு)
  • அமீர் சுல்தான் அரங்கு  (பால்நிலை சமத்துவம் , இஸ்லாமிய நோக்கு தொடர்பான கலந்துரையாடல்)
என அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன.

மேலும் இவ்விதழ் வௌியீட்டு நிகழ்வில் 

மொழிபெயர்ப்புத் துறையில் சிறு சஞ்சிகைகளின் பங்கு தொடர்பான  கெகிராவ சுலைஹாவின் ஆய்வுரையும், 

2008ற்குப் பிந்திய அநுராதபுர மாவட்ட கவிதைப் போக்குத் தொடர்பான  நாச்சியாதீவு பர்வீனின் ஆய்வுரையும்சிறப்பாக முன்வைக்கப்பட்டன.

அவ்வாறே கிண்ணியா நஸ்புள்ளா . எழுத்துக்களையும் வார்த்தைகளையும் காதலில் நனைத்தவாறே அழகான புதுக்கவிதையொன்றையும் ரசிக்கும்படியாக உலாவவிட்டார்..

எம்.பி நௌபர் வரவேற்புரையையும் நேகம பஸான் நன்றியுரையும் முன்வைத்தனர்.

நிகழ்வின் இறுதியம்சமாய் எம். சி. ரஸ்மினின் பால்நிலை சமத்துவம் தொடர்பான இஸ்லாமிய நோக்கு பற்றிய குழுக்கலந்துரையாடல் நடைபெற்றது. பெண்கள் தொடர்பான குடும்பம், கல்வி, திருமணம், தொழில் உட்பட பல சமுகத்தின் அன்றாட நிகழ்வுகள் மூல ஆதாரங்களுடன் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்தது. பத்துப் பக்கத்தினையும் மீறக்கூடிய கனமான விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பான விமர்சனங்க ளுக்காக  ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டது ஓர் குறைபாடே. ஏனெனில் மேலோட்டமான வாசிப்பு சிறப்பான விமர்சனத்தை முன்வைக்க முடியாது.​

இந்நிகழ்வில் தேனீர் உபசாரம், மதிய உணவும் பரிமாறப்பட்டது.

இனிவரும் ஆண்டுகளிலும் படிகள் இன்னும் பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி காலத்தின் சுவடுகளில் தன்னை சிகரமாக நிலைப்படுத்த வாழ்த்துகின்றேன்..

- ஜன்ஸி கபூர் -

படிகள் வௌியீட்டின்போது பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள்
                                 
                                                              கௌரவ அதிதிகள்


அன்பு ஜவஹர்ஷா சேர்  தலைமையுரை 


நூலாசிரியர் வஸீம் அக்ரம் படிகள் வௌியீட்டு உரை


மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் அவர்கள்
இலக்கிய ஆய்வரங்கின்  ஆரம்ப வுரையாற்றும்போது


எழுத்தாளர் அ.யேசுராசா  அவர்கள் 
அலை,கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களின் அனுபவங்கள் தொடர்பான ஆய்வுரை 


ஈழத்து இதழ்கள் வரிசையில் படிகளின் பங்கு பற்றி 
டொக்டர் தாஸிம் அகமது  அவர்கள் 


நாச்சியாதீவு பர்வீன், கிண்ணியா நஸ்புல்லா, ரஹ்மத்துல்லா  உட்பட
சபையோரின் ஒரு பகுதி


கெகிராவ சுலைஹா, கெகிராவ சஹானா உட்பட
சபையோரின் ஒரு பகுதி


முதற்பிரதி வழங்கும்போது



நூலின் விலை - 250

தொடர்புகளுக்கு- 

படிகள் பதிப்பகம்
அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழு
52, துருக்குராகம
கஹட்டகஸ்திகிலிய
50320



என்ன சத்தம் இந்த நேரம்



என்ன சத்தம் இந்த நேரம்...திரை விமர்சனம்
----------------------------------------------------------------------

நான் பார்த்து ரசித்த திரைப்படத்தில் இதுவுமொன்று!

அடடா....தலைப்பே ஒரு திரிலா இருக்கே..அப்போ படம் வித்தியாசமாகத்தான் இருக்குமோ?

மனசு எதையோ எதிர்பார்க்க...

கணனி காட்சிகளை உருட்டுகின்றது கண்ணுக்குள்!

4 ஒரே சூல் குழந்தைகள்...

கண்களை உருட்டி சிரிப்பூக்களை உதிர்க்கும் வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைக் கதாபாத்திரங்கள் அவை!

நம்மை திரும்பிப் பார்க்க வைக்கின்றனர்......

அதிதி, அக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி என்கிற  பேசும் திறன்கொண்ட  இந்த நான்கு பேரும் மாற்றுத்திறனாளிகளாக தங்களது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜெயம் ராஜா, மானு தம்பதிகளுக்கு காது கேட்காத , வாய்பேச முடியாத ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த 4 குழந்தைகள்..!

இக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை உழைப்பதில் ஆர்வப்படும் கணவனை விவாகரத்து செய்து விட தீர்மானிக்கின்றார் மனைவி மானு..

 தனது காதலனை அன்றைய தினம் 3 மணிக்கு பெற்றோர் அறியாமல் களவாய் திருமணம் செய்ய தீர்மானித்திருக்கும்  மாளவிகா ரீச்சர் தலைமையில் மானு தனது 4 குழந்தைகளையும் அருகிலிருக்கும் உயிரியல் பூங்காவிற்கு கல்விச்சுற்றுலா அனுப்பி வைக்கின்றார் .

அங்கு பணிபுரியும் இமான் அண்ணாச்சி, நிதின் சத்யாவின் அலட்சியத்தால் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று கூண்டிலிருந்து தப்பித்து வெளியே வந்துவிடுகிறது. அதனைக் கண்டதும் பதற்றத்துடன் எல்லோரும் பூங்காவை விட்டு வௌியே ஓடி வரும்போது அந்த நான்கு குழந்தைகளும் மலைப்பாம்பு ஊர்ந்து திரியும் பிரதேசத்தில் சிக்கி விடுகின்றனர்.

உயிரியல் பூங்காவிற்கு வௌியே காவல் துறையினருடன் பொது மக்கள் பெற்றோர்கள் மீடியாக்கள் எல்லோரும் பதற்றத்துடன் போராடிக் கொண்டிருக்க, ரீச்சர் மாளவிகாவோ, காவல்காரர் நிதின் சத்யாவுடன் சேர்ந்து உயிரியல் பூங்காவினுள் குழந்தைகளைத் தேட ஆரம்பித்து விடுகின்றார்..

அங்கே.......

குழிக்குள் வீழ்ந்த குட்டியை, மற்ற குட்டீஸ் காப்பாற்றி பூங்காவை விட்டு வௌியேற வழி தேடிக் கொண்டிருக்கும் நேரம்

 மலைப்பாம்போ வெறியுடன் ஊர்ந்து ஊர்ந்து இவர்களை விரட்டுகின்றது..

விஷயம் தெரிந்து ஜெயம் ராஜாவும் காவல் துறையினரின் அனுமதியுடன் தனது வாகனத்திலேயே உயிரியல் பூங்காவிற்குள் நுழைந்து தன் மகள்களை காப்பாற்றப் போராடுகின்றார்...

 அந்த இறுதிக்கட்டக்காட்சிகள் விறுவிறுப்பானவை..

இப்படத்தில் லேசான காதல், விறுவிறுப்பான மோதல், தந்தையின் அன்புக்கு ஏங்கும் குழந்தைகள், கொஞ்சம் சிரிக்க வைக்கும் காமடி என திரைப்படம் நகர்கின்றது...

குழந்தைகளின் பெற்றோர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?
மாளவிகா தனது காதல் கணவனுடன் ஒன்று சேர்ந்தாரா..
பாம்பு இறந்ததா...
என்பதுதான் விறுவிறுப்பான மீதிக்கதை?

நான்கு குழந்தைகளும் மிகப்பெரிய ஒரு கிராபிக்ஸ் பாம்பும் இருப்பதால் இத்திரைப்படம் நம்மை விரும்பிப் பார்க்க வைக்கின்றது..

 ‘என்ன சத்தம் இந்த நேரம்’ –

இது பாம்போட சத்தமா
இல்லை குட்டீஸ்களின் குறும்பு சத்தமா
அல்லது தற்கொலை செய்ய முயற்சித்து அடி வாங்கும் நிதின் சத்யாவின் அலறல் சத்தமா....
மாளவிகா ரீச்சரோட காதல் டூயட் சத்தமா..
பெற்றோரின் சண்டைச் சத்தமா....

நடிகர் : ஜெயம் ராஜா
நடிகை : மானு
இயக்குனர் : குரு ரமேஷ்
இசை : நாகா
ஓளிப்பதிவு : சஞ்சய் லோகநாத்

படம் பார்த்திட்டு நீங்களே முடிவு பண்ணுங்கள்..

- ஜன்ஸி-


அப்சரஸ்



அப்சரஸ் - திரைவிமர்சனம்
---------------------------------------

ஓவியர் ரவிவர்மன்!

வாழ்க்கை வரலாற்றை ஆவலுடன் பார்ப்பதற்காக அப்சரஸூக்குள் நுழைந்தேன்..

ஓவியராய் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன்...

அமைதியான பொருத்தமான தோற்றம்.

காதல் வசப்படும்போதும், ஓவியம் வரைதலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தும்போதும் உணர்ச்சி ரேகைகளின் குத்தகை அவர் அங்க அசைவுகளில்!

பிரபல ஓவியர் ரவிவர்மனின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதிதான் அப்சரஸின் கதை. ரவிவர்மன் அழகின் நயங்களை யதார்த்தமாக வரையக்கூடிய மிகச் சிறந்த ஓவியர்.

உண்மையில் ஓவியமானது உள்ளத்துணர்வுகளை உருவங்களாக்கி பரவசம் கொள்ளச் செய்யக்கூடியது.அந்தவகையில். ரவிவர்மனின் ஓவியக்கலையின் ஈர்ப்பானது பல பெண்களின் மனதை ஊடுருவிச் செல்லக்கூடியது. இதனால் ஓவியம் வரைவதற்காக வரும் மாடல் பெண்களை, தன் வசீகரத்துள் வீழ்த்தி அவர்களை ஓவியங்களாக்குவதில்  அவர் கைதேர்ந்தவர்.

அவ்வாறு வரும் மாடலழகிகளுள் ஒருத்திதான் நித்யாமேனன். அவர் வரைந்த ஓவியங்களை பார்த்த நித்யாமேனன் அவர்மேல் ஈர்ப்பு கொண்டு அவருடனேயே மானசீகமாக வாழத்தொடங்குகிறார். அவ்வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தான் ரவிவர்மன் மீதான காதல்..

காதல்........

உணர்வுகளின் சங்கமம். ஈர்மனங்களின் உற்சாகக்கூவல். அன்பின் அலையடிப்பை இருதயத்துடிப்புக்களில் சுமக்கும் அற்புத அலைவு.

ஆனால் ....

ஓவியருக்கோ நித்யாமேனனின் அன்பு பொருட்டாகத் தெரியவில்லை. அழகை ரசித்தார். அவரது கரங்களும் தூரிகைகளும் அவளின் மென்னுடலை ஸ்பரித்துச் சென்றதே தவிர , அவளின் அன்பை ஸ்பரித்துச் செல்லவில்லை. தன்னைக் கணவனாகமனதிலிருத்தி வாழும் அவளை, அவனோ  தனது தேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தும் பாண்டமாகவே கருதினான்.

விளைவு....

வேதனை உணர்ச்சிக் கொந்தளிப்புக்களின் பிராவகம் அலையடிக்க ...
அவளோ சோகத்தில் இறந்து விடுகின்றாள்.

பின்னர் .....

ரவிவர்மன்,  கார்த்திகாவை தற்செயலாக பார்க்கிறார். அவளின் அழகின் ஈர்ப்பில் மயங்கி,  கற்பனையால் தனது தூரிகையை உயிர்ப்பாக்கி பல ஓவியங்களை வரைகின்றார். தான் வரைந்த ஓவியங்களை கார்த்திகாவுக்கு காட்டும்போது, தனது மேனியை நிர்வாணப்படுத்தும் ஓவியத்தை அவள் கண்டதும் கோபத்தில் கொதித்துப் போகின்றாள்..

அவளின் கொதிப்பை ஓவியரோ பல புராணக்கதைகளைக்கூறி சமாதானப்படுத்த  ஈற்றில் இருவருக்கிடையிலும் மெல்லிய காதல் நூலிலழையோடுகின்றது.

இந்நிலையில் .....

அப்பாவி பெண்களை மயக்கி நிர்வாணப் படம் வரைந்து விற்பனை செய்வதாகவும், வேசி பெண்களின் மாடல்களைப் பயன்படுத்தி கடவுள்களின் உருவங்களை வரைந்து விற்பனை செய்வதாகவும் அவர்மீது போலீஸில் புகார் செய்யப்படுகிறது.

கூறப்பட்ட புகாரில் இருந்து சந்தோஷ் சிவன் தப்பித்தாரா?
காதலி கார்த்திகாவை கைப்பிடித்தாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஓவியருக்குரிய அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை சந்தோஷ் சிவனுக்கு வௌிப்படுத்த, மறுபுறமோ கார்த்திகாவின் கவர்ச்சி அதிரடி!

எனினும் ஓவியத்திற்கு போஸ் கொடுக்கும்போது கார்த்திகா தரும் முகபாவனைகள் ரசிக்கும்படி உள்ளது.

இது ரவிவர்மனின் கதைதான்  எனும் எதிர்பார்ப்பில் விழிகள் திரைப்படத்தை மேயும்போதுதான் நாம் ஏமாற்றப்படுவதை உணர்கின்றோம்...

ஏனெனில் .....

கதையை விட கவர்ச்சியின் பின்னனியில்தான் கதை நகர்கின்றது என்பதை இயக்குனர் லெனின் ராஜேந்திரன்மறைமுகமாகச் சொன்னாலும்கூட,
மது அம்பாட்டின் ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ்!

அப்சரஸ்...

ஓவியப் பெண்களின் மேனியழகை ஆண்கள் மனதில்  கொளுத்தும் வெடி !
ஆண்களை அசர வைக்கும் கவர்ச்சி அதிரடி!

- ஜன்ஸி-

தூறல் - 2

கூடு விட்டு தாண்டி வந்தேன்
உன் நெஞ்சவீடும் எனக்கில்லையே
குழந்தையாய் நானிருந்தால்
குற்றம் நீயும் காண்பாயோ!
---------------------------------------------------------- 

உதயத்தில் ஓர் அஸ்தமனமாம்..
உன்னால்
உருக்குலைந்த என் னுணர்வுகள்
இன்று
நடைபயில்கின்றன மயானம் தேடி!
----------------------------------------------------------- 
முற்றுப்புள்ளிகள் வெறும் நிறுத்தமல்ல
அடுத்த தொடரை ஆரம்பிப்பதற்கான அழைப்பு!
---------------------------------------------------------- 

சிலரது ஏமாற்றம் தரும் தடுமாற்றம்கூட
நல்லதோர் வாழ்வுக்கான மாற்றமாகலாம்!
-------------------------------------------------------- 

ஒருவர் நம்மீது கொள்ளும் மரியாதை யினளவை
நாம் பேசும் வார்த்தைகள்தான் தீர்மானிக்கின்றன!


- Jancy Caffoor-




வலி



மனதை திறந்த புத்தகமாகத்தான் வைத்திருந்தேன். அதனாற்றான் காற்றின் சீண்டல்களாய் நம் வார்த்தைகள் உரசிச் சென்றதில் உரிமை கோருகின்றன சண்டைகள்!

சண்டைகள் சாக்கடைகள்தான்!
இருந்தும்.........
திரும்பிப் பார்க்க வைக்கின்றன அன்பை!
-----------------------------------------------------------------------------------------

வார்த்தைகளின் போதுதான்
மௌனத்தின் மதிப்பு தெரிகின்றது!

மௌனத்தின் போதுதான்
வார்த்தைகளின் அருமை புரிகின்றது!!

ஆகவே.....
சந்தர்ப்பங்களும்  சூழ்நிலைகளும்தான்  நம்மை பேச வைக்கின்றன!
-------------------------------------------------------------------------------------------
மௌனம்
தனிமையின் மொழி!
தனிமையோ
வலிகளின் வழி!
--------------------------------------------------------------------------------------------

மொழியும் ஒலியும்
மௌனம் கொள்ளும் நேரம்...
தனிமை எனக்குள்
இனிமையின்றி!
-------------------------------------------------------------------------------------------

பிரச்சினைகளைப் புரிந்து விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் வலி இருந்தாலும்கூட, அடுத்தவர் சந்தோஷம் உணர்தலும் ஒர் இன்பமே!
--------------------------------------------------------------------------------

அவமானங்கள் தரும் வலிகூட கடும் உழைப்பால் முன்னேற்றத்திற்கான வழியாகலாம்!


- Jancy Caffoor -




தூறல்

கலைஞனுக்கு....
நம்பிக்கை இன்னும் இருக்கின்றது
நடைபாதையோரம் வீழ்ந்து கிடக்கும் கற்களைச் செதுக்க
உளிகள் கிடைக்குமென்று!

தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்போது
கற்கள்கூட
சிலைகளாய் நிமிர்ந்து நிற்கும்!



-------------------------------------------------------------------------------------

உருச் சிறிதுதான் சிலந்திக்கு...
இருந்தும்......
விடா முயற்சியின் விழுதுகளாய்
அதன் கரங்கள்!

நானும் சிலந்திதான்...

தோற்றுப்போகும் வலைகளுக்குள்ளும்
தொட்டுக் கொள்ளத் துடிக்கின்றேன்
வெற்றிச் சாயல்களை!

------------------------------------------------------------------------------------

உருவம் தேடா உணர்வின் தொகுப்பாய் - மனதுள்
உருண்டோடும் சந்தோஷ சிலிர்ப்புக்கள்தான்
பெயர் கொண்டதோ

 "அன்பென்று"!
-------------------------------------------------------------------------------------

வலி...........

பலருக்கு
கண்ணீர் தெறிக்கும் வழி!
சிலருக்கோ
தன்னம்பிக்கை செதுக்கும் உளி!
--------------------------------------------------------------------------------------

மனம் வெறும் இரும்பல்ல இறுகிக் கிடக்க..
உணர்ச்சிகளின் கலவை!

அதனாற்றான்

அறியாமை, அவசரம் தரும் பல முடிவுகளை நமது சிந்தனை மாற்றி விடுகின்றது!


- Jancy Caffoor -

சாரல்


எப்படியும் வாழலாம் என்பதை விட,
இப்படித்தான் வாழ வேண்டும் எனும் வாழ்வில்தான் நமக்கான
அழகான வாழ்க்கை காத்திருக்கின்றது!


---------------------------------------------------------------------------------------------

இரவின் புன்னகை
அழகாககத்தான் தெரிகின்றது நிலவினில்...
இருந்தும்....
உன் மௌனச் சாம்பலி லென்னைப் புதைத்து
நிசப்தத்தின் முணுமுணுப்பில் - மூச்சுக்
காற்றின் விசுவாசத்தை
மோசமாக்கத் துடிக்கின்றாய்.........
நானொரு
பீனிக்ஸ் பறவையென்பதை யறியாமல்!


----------------------------------------------------------------------------------

காலத்தின் மடியில் நமது கனவுகள், காயங்கள், சோகங்கள் ஏமாற்றங்களை பரப்பி விட்டு வலியில் துடித்து நிற்கின்றோம்.

ஆனால்

அதே காலம்தான் அவற்றை மறக்கச் செய்து நமக்குள் புது நினைவுகளை முகிழ்க்கச் செய்து நடைபயிலச் செய்கின்றது இயல்பாய் வாழ!
----------------------------------------------------------------------------------------------------

கீழ்திசை!

தொட்டுச் செல்லும் சூரிய விரல்களில் தோய்ந்த என் நிழலும், தூசு துடைத்து ஔிரத் தொடங்கியுள்ளது லேசாய்

இருள் நிரந்தரமல்ல

இயற்கை விட்டுச் செல்லும் நியதியினில்!
இறையருள் போதும்
உறைந்து கிடக்கும் சோகங்கள் உருக்க!

- Jancy Caffoor -