About Me

2012/08/22

பபா அம்புலி


வான் இருளை சற்றுக் கலைக்கும் வண்ணம் வானில் கால்வாசி மாத்திரம் நிரப்பப்பட்ட வண்ண நிலாவொன்றும், தம் மழகையும் ரசிக்கும்படி கண் ஜாடை செய்யும் பல நட்சத்திரங்களும், தம் ஒளியை வானில் அள்ளி வீசி இருளை சற்று அகற்றிக் கொண்டிருந்த அந்த நேரம் எங்கள் வீட்டுச் செல்லம் அஸ்கா, என் கைகளைப் பற்றி யிழுத்தவாறே வீட்டின் முற்றத்தில் கொண்டுபோய் நிறுத்தினாள்....

" என்ன குஞ்சு காட்டப் போறீங்க எனக்கு " 

நான் அவள் கன்னத்தை செல்லமாக வருடியவாறே கேட்டேன்.

"பபா அம்புலி வந்திருக்கு......அதைப் பார்க்கணும் "

என்றாள் அந்த மூன்று வயதும் நிரம்பாத மழலை!

பபா அம்புலி..........!

பாதி உடைந்திருக்கும் அந்த நிலாவுக்கு அவளிட்ட அந்தப் பெயர் கூட அழகாகத்தான் இருக்கின்றது. நானும் ரசித்தேன் அந் நிலவின் எழில் கசியுமந்த அழகை அவளுடன் சேர்ந்து நெடுநேரமாய்!

அஸ்கா............

வழமையாக அம்புலிக்குப் பயம்...அவளுக்கு தினமும் உணவூட்டுவதென்பது எங்கள் வீட்டில் பெரும் போராட்டம் தான். குழந்தை சாப்பிடுவதில் அக்கறை காட்டமாட்டாள். இரவில் உணவுண்ண அடம் பிடித்தால் இந்த நிலாவைக் காட்டித்தான் உணவூட்டல் நடைபெறும். அம்புலி மீதான பயத்திலும், தனதுணவை அம்புலிக்கு கொடுத்து விடுவார்களோ எனும் ஆதங்கத்திலும் உண்ணச் சம்மதிப்பாள். இப்படியாவது ஏதோ சிறு உணவுக் கவளங்கள் அவள் சமிபாட்டுத் தடத்தில் இறங்கி விடுகின்றதே எனும் திருப்தி எமக்கு!

அம்புலிக்குப் பயப்படும் பிள்ளை என்னை இழுத்து வந்து வானத்தைக் காட்டும்படி இன்று கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்......

"அஸ்கா பபா........நீங்க அம்புலிக்குப் பயமில்லையா"

நான் அப்பாவி போல் பிள்ளையிடம் கேட்க, அவள் பயம் என தலையாட்டினாள்

"நான் உம்மா அம்புலிக்குத்தான் பயம் , ஏன் நம்ம வீட்டுக்கு வருது" 

பிள்ளை தொடுத்த வினாக்களை ரசித்தேன் மெல்லிய புன்னகையை என்னுள் பரப்பியபடி !

ஏனோ சின்னப் பிள்ளைகள் தொலைவில் எட்டிப் பார்க்கும் நிலா மீது ஆசையை வைத்தாலும் கூட, பயத்தையும் வெளிப்படுத்துகின்றார்கள்..நிலா பற்றிய பிரக்ஞ குழந்தைகளுக்கு வெறும் கற்பனையுருவாகவே அமைந்து விடுகின்றது..கொஞ்சம் வெளியுலகைப் பார்க்கும், பிரித்தறியும் பக்குவம் வரும் போது நிலாவைத் தோழியாக்கி ரசிக்கின்றது பிள்ளை மனம்!

"ஓ..........உம்மா அம்புலி (பூரண நிலா) இன்னும் கொஞ்ச நாள்ல வந்திடுவா..அதுவரைக்கும் இந்த பபா அம்புலிதான் நம்மட வீட்டுக்கு வரும் " 

நானும் குழந்தையுலகில் பயணித்து அவளுக்கு சில விடயங்களைப் புரிய வைக்கத் தொடங்கினேன்.

"பபா அம்புலி எங்க போயிருந்தது " 

குழந்தை வினவ, நானும் சளைக்காமல் அவளுக்கேற்ப பதில் சொன்னேன்..

"பபா அம்புலி காலைல ஸ்கூல் பொயிட்டு, நைற்தான் அச்சா பபாவ பார்க்க வந்திருக்கு.......அந்த பபா அம்புலியோட விளையாடுவோமா நாம ரெண்டுபேரும்"

நான் இயல்பாகக் கேட்க, குழந்தை அபிநயத்து தான் அதற்குப் பயமென்பதை கூறி அவசரமாக மறுத்தாள்.

குழந்தையின் ஆர்வம் திடீரென நட்சத்திரங்கள் மீதும் பரவியது.

"இது என்ன"  வினவினாள் ஆவலுடன்...........

"இது தான் நட்சத்திரம்....ஸ்டார் .........."   

ஒற்றை நட்சத்திரமொன்றைச் சுட்டிக் காட்டிச் சொன்னேன். பிள்ளையும் கஷ்டப்பட்டு தன் மழலை மொழியில் நான் கூறிய அந்த வார்த்தைகளை மீள எனக்கு சொன்ன போது, அந்த மழலைத் தமிழை சில நிமிடங்கள் மெய்மறந்து ரசித்தேன்.

"அப்ப ஸ்டார் என்ன செய்யுது  ஏன் அங்கு வந்துது"  

பிள்ளையின் அடுத்த வினாத் தேடல் களத்தில் இறங்கியது.

"பபா நிலாட விளையாட்டுச் சாமான்கள் தான் நட்சத்திரம்.........பபா நிலா குழப்படி அதுதான் தன் விளையாட்டுச் சாமான்கள வானத்தில வீசியிருக்கு.... அஸ்கா பபா அச்சாவா கூடாதா, இப்படி விளையாட்டுச் சாமான்கள வீசியெறிவீங்களா"

நான் கேட்க, குழந்தை தன் கைகளை விரித்துக் காட்டியபடி  "அச்சா பபா" என்றாள். அவளை வாரியணைத்து கன்னத்தில் என் அன்பைப் பதித்து அவள் தலையை மெதுவாக வருட ஆரம்பித்தேன். 

இரவில் மெதுவாக வீசிக்கொண்டிருக்கும் கூதல் நிரம்பிய காற்றின் வருடலில் அவள் மழலை சுகம் மனதுக்குள் மானசீகமாக இறங்கிக் கொண்டிருந்தது.

இந்த வயதில்தான் பிள்ளை தன் சூழல் அனுபவங்களால் உலகையறிய முயற்சிக்கின்றது.  குழந்தையின் புத்திக்கூர்மையும் மெதுவாகப் பட்டை தீட்ட ஆரம்பிக்கப்படுகின்றது.  எனவே எதற்கெடுத்தாலும் வினாக்களே சிந்தனைத் தூண்டலாக மாற்றப்படுகின்றது. ஏன்.............எப்படி......எங்கு......இவ்வாறான வினவல்கள் தான் அவள் வார்த்தைகளுடன் இணைந்து தன்னைச் சூழவுள்ள நிகழ்வுகளை மனதுக்குள் படமாக்க வுதவுகின்றது. நான் குழந்தை உளவியல் பற்றி அறிந்திருப்பதால் அவளின் வினாக்களுக்குப் பொறுமையுடன் உண்மையான விவரங்களை அவள் புத்திக்கேற்ப அவள் பாணியில் கூறுவேன்.......இது எனக்கும் பிள்ளைக்குமிடையிலான தின நிகழ்வு..பிள்ளை விரும்பும் உலகத்திற்கு நான் அழைத்துச் செல்லத் தயங்குவதில்லை....

"யூ டியூப்பில்" குழந்தை விரும்பும் ரயில் கார்ட்டூன்களும், வானத்து நிலாவும் தினமும் இரவில் பிள்ளை ரசிக்கும் உலகங்களாக கவிழ்ந்திருக்கின்றன!

நாளையும் நிலா வரும்...........பிள்ளை கேட்கும் இதே கேள்விகளுக்கு , எனது விடைகள் மாத்திரம் வேறுபடும்.........

இயற்கையின் ரசிப்புடன் கூடிய மழலை சுகம், என் இரவுத்துளிகளை பனித்துளிகளாக்கி என்னுள் உலாவவிடத் தொடங்கின வாஞ்சையுடன் ! 

அகம் மெய்மறந்து அந்த வுலகில் வேரூன்றத் தொடங்கினேன் யதார்த்த வுலகின் இம்சைகளைக் கலைந்தபடி!

ஆசிரியர் கீதம்


தேசியரீதியில் தமிழ்மொழியில் இசைக்கப்படும் ஆசிரியர் கீதம்!
ஆ ஆ ஆ......ஆ ஆ ஆ..........

முத்து முத்தான சித்திரங்கள்
இலங்கை முற்றத்தில் சிந்திய ரத்தினங்கள்  (முத்து)
பற்றும் பாசமும் வைத்தவற்றை
நல்ல பாதையில் சேர்க்கும் பணி எமதே!    (2)

                                                                                           (முத்து)
அன்னை மடியில் அரவணைத்த பிள்ளை
பள்ளி வரும் பிஞ்சு பாலகனாய்  (அன்னை)
அவன் தன்னம் தனிமையைப் போக்கிடவே
உள்ளத்தில் நம்பிக்கை அன்பை ஊற்றிடுவோம் (அவன்)
                                                                                            (முத்து)

எண்ணும் எழுத்தும் உணர்ந்திடுவோம்
உள்ள தேவைகள் அறிந்து பூர்த்தி செய்வோம்   (எண்ணும்)
அவன் ஒழுங்குடன் ஒழுக்கமும் பேணி நல்ல
சிந்தை ஆற்றலை தூண்டிடுவோம்                         (அவன்)
    
                                                                                            (முத்து)

கற்பித்தல் கற்றல் நிகழ்ந்திடவே
நல்ல கட்டுப்பாட்டுடன் வகுப்பறையில்        (கற்பித்தல்)
தினம் பெற்ற கடமையை பேணி ஏற்றே
ஞாலம் போற்றும் சமூகத்தை நாம் படைப்போம்   (தினம்)

                                                                                             (முத்து)

முன்மாதிரி



தான் பருகிய நீரை இளநீராக்கித் தரும் தென்னையைப் போல், தான் கற்ற , அறிந்த விடயங்கள் மூலம் சேவையை மூச்சாக்கி சமுகத்தினருக்கு வழங்கக் காத்திருப்பவரே அரச ஊழியர்கள்....

"கற்றவர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு"

இது தொன்மைக் காலம் தொடக்கம் நம் வரலாற்றில் பதிவாக்கப்பட்டு வருகின்ற குரல்........குறள் !

"அரச உத்தியோகம் புருஷ லட்சணம்"  என்பார் நம்மவர்கள் !

உண்மையில் சிறிதளவு கற்றவர்கள் பெறும் மாத ஊதியத்தை விட அதிகம். கற்றவர்கள் பெறும் மாத ஊதியம் குறைவாக இருந்தாலும் கூட, சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் கிடைக்கும் ஓய்வூதியமும், அதனால் கிடைக்கும் சுயமரியாதையும், நற்சமுகம் எப்பொழுதும் தருகின்ற மதிப்பும், கௌரவமும் எமக்குக் கிடைக்கும் வரப்பிரசாதங்கள்!

ஒரு அரச ஊழியரிடமிருந்து உச்ச பலனை எதிர்பார்த்து, அதன் மூலம் திருப்தியான சேவையைச் சமூகத்திற்கு நுகர்ந்தளிப்பதே அரசின் நோக்கம்..

எனவே ஓய்வுபெறுவதற்கென ஒருவர் தனது உடலாலும், உள்ளத்தாலும் ஒத்துழைக்கக்கூடிய இறுதி வயது  தீர்மானிக்கப்பட்டு , அவரது சேவைப் பயணம் கட்டாயப்படுத்தப்பட்டு நிறுத்தப்படுகின்றது.  இதற்கென இறுதி வயதினைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசின் கரங்களில் உள்ளது.

ஓய்வுபெற்ற ஒருவர் கௌரவமாக, தன் காலில் நிற்கும் உழைப்பவர் போல் மாத வருமானமொன்றைப் பெற்றுக் கொள்ளக்கூடியவராக மாற்றப்படுவதன் மூலம் அவர் தனது வயதான காலத்தில் பிறரைச் சார்ந்திராது, முன்பு உழைத்த அதே மனநிலைக்குள் தக்கவைக்கப்படுகின்றார். இதன் மூலம் அவர் உளநிலையும் மேம்படுத்தப்படுகின்றது.

ஒருவர் தனது சேவையிலிருந்து ஓய்வுபெறும் போது, மனஅழுத்தத்திற்கு சிறிதளவாவது உள்ளாக  நேரிடும். ஏனெனில் அதுவரை கடமைகளுடன் தன்னைப் பழக்கப்படுத்தியவர், வீட்டில் எவ்வித வேலைகளுமற்று தனிமைப்படுத்தப்படும் போது அவரின் மன அழுத்தமும் அவரை லேசாக தொட்டுச் சொல்கின்றது. ......கொல்கின்றது..

உத்தியோக வாழ்வின் இரண்டாம் நிலையே ஓய்வு நிலை. அதுவரை அடிக்கடி அவரது நிறுவனங்களில் முதன்மைப்படுத்தப்பட்டவர், ஓய்வுபெற்றதும் வெறுமைப்படுத்தப்படுகின்றார். குடும்பம், உறவுகள் என அவரின் முழுக் கவனத்தையும் மானசீகமாகத் திசை திருப்புகின்றார். இது சாதாரணமான நிகழ்வாகின்றது.

ஓய்வு என்பது கடினமான உடலுழைப்புக்கே அன்றி நம்மிலெழும் மன  மகிழ்ச்சிக்கல்ல...அவர்களும் சிறு குழந்தைகள் போலவும்,, ஆலோசனை வழிப்படுத்தலை வழங்கும்  முதியோர் போலவும், அநுபவசாலிகள் போலவும் நம் கருத்தினை நிறைத்திருப்பார்...

ஓய்வூதியம் பெறும் வயதினை அண்மிக்கும் போது ஆரோக்கியமும் மெதுவாக அகல ஆரம்பித்து, நோய்ப்படுக்கையில் தேகம் விழ ஆரம்பிக்கின்றது..மருத்துவமே அவர்களின் வார்த்தைகளாகின்றன,

இத்தகைய மனப்பண்புகளால்  இலட்சியப்படுத்தப்பட்ட , சேவை மூலம் தன் சமூகத்தினருக்கு நல்ல விளைவுகளைப் பெற்றுக் கொடுத்த அரச ஊழியர்களைக் கௌரவிக்கும் நற்பண்பை முதன் முதலில் அநுராதபுரம் சீடீசீ குழுமம் வெளிப்படுத்தியுள்ளது .

அநுராதபுரம் மண்ணில் பிறந்து சேவையாற்றி ஓய்வுபெற்றவர்களும், வெளி மாவட்டத்திலிருந்து இங்கு வந்து சேவை செய்து ஓய்வுபெற்றவர்களும் கெளரவிக்கப்படவுள்ளார்கள். இக் கௌரவிப்பு எதிர்வரும் சனி (25.08.2012) மாலை 3.30 ற்கு நடைபெறவுள்ளது. சின்னம் வழங்குதல் , மலர் வெளியீடு என காலம் மறக்காத நினைவுத்தடங்களுள் இவர்களது சேவை பதிக்கப்படவுள்ளது

"வாழும் போதே வாழ்த்தப்படல் வேண்டும் " எனும் கொள்கை முனைப்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் பலர் கௌரவிக்கப்படவுள்ளார்கள். அதில் எனது தந்தை ஜனாப் ஓ.எஸ.எம். ஏ கபூர் (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்.. அதிபர் சேவைத்தரம் 1)அவர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்கள் எனும் செய்தி மகிழ்வு தருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இவ்வாறான ஓர் நிகழ்வுகூடலுக்குத் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றும் அன்பு ஜவஹர்ஜா சேர் அவர்களும், டில்ஷானும், அவரது செயற்பாட்டுக்கு பக்க பலமாக நிற்கும் விழாக் குழுவினரும் நன்றியுடன் எம்மால் நினைவுகூறப்படுகின்றனர்.

இம் முன்மாதிரியும், முயற்சியும், வழிநடத்தப்படலும் தொடர்ந்தும் நடத்தப்பட்டு , காலத்தின் ஞாபகக் கரங்களுள் தன்னை எப்பொழுதும் முழுமைப்படுத்தப்படல் வேண்டுமென்பதே எமது அவவாகும் !

அல்லாஹ் வழித்துணையுடன் இவர்களின் இப்பயணம் தொடர வாழ்த்துக்கள்!


2012/08/21

என்று தணியும்


விஞ்ஞானம் விசமம் செய்ததா........
அஞ்சுகின்றதே நம் வாழ்க்கை!
சூரியன் சூட்சுமத்தில் எரிகின்றது - எம்
பூமியிலோ வரட்சி வருத்துகின்றது!

எம் தரைப் பாதங்களில் - பல
பித்தவெடிப்புக்கள் வரையப்பட்டுள்ளனவே!...........
வைத்தியர்களில்லையோ சிகிச்சைக்கு
சித்தம் கலங்கு தியற்கை ஒவ்வொரு நாளும்!

பசுமை மரங்களெல்லாம் நீர் மறந்து
எலும்புகளாய் உருமாறியதில்.............
எரிகின்றது மரப்பற்றை - தீக்குச்சிகள்
உரசாமலே !

இலையுதிர்த்த மரங்களெல்லாம்
விலைமாதராய் அவிழ்த்துக்கிடக்க............
நறுஞ்சோலை கூடப் புழுக்கம் கண்டு
தலை கவிழ்த்து முறைத்து நிற்கின்றது!

பாலைவனங்கள் சொகுசாயிங்கு
தரையோடு உறவாகிப் போக - நம்மிள்
இறந்து போகும் நீரூற்றுக்காய் - தேகம் கூட
மரத்துப் போய் வெடிக்கின்றது!

நீரோடைகளின் சலசலப்பெல்லாம்
நீராவியாய் கலைந்தேதான் போனதில்........
குளங்களிலெல்லாம் குஷியாய் நிதமும்
எட்டிப்பார்க்கின்றது மணற்றரை!

வளியெங்கும் வெப்பமுறிஞ்சி
அழகான தேசம் இறந்தும் போனதில் - நீர்
வாழ் உயிரினங்களின் மூச்சைப் பிடுங்கும்
வெயில்தானின்னும் எரிக்கின்றது!

கார் மேகமிங்கு மிரண்டோட
பாரெங்கும் மழைக்கு மேங்க - ஈரலிப்பு
தார்மீகம் சிதைந்தே போக ...........
வரண்டுதான் போனதெங்கள் சூழல்!

நா வரண்டு தொண்டை யும் காய்ந்து
நாடியெல்லாம் துடிப்பையுமடக்கி.........
வாடி நிற்குமெம் தேகம் கதற
ஓடி வந்த காலநிலை யாதோ!

இனங்களாலும் மதங்களாலும்
கோடு கிழித்தவர்கள் யாவரும்..........
பேதமேதுமின்றி குரல்வளை குளற
தாகமுற்று  துடிக்கின்றார்கள் தேசத்தில்!

ஜன்ஸி கபூர் 

2012/08/20

மிஸ்ட் கால் (missed call )


2010ம் வருடம்............. ...........!

என்  ரிங்டோனாய் இடப்பட்டிருந்த  ஒலியின் அலைவு பலமாக என்னுள் நுழைந்து என் கவனத்தை அதன்பால் திசை திருப்பியது...

கைபேசியை அவசரமாக எடுத்து அழைத்தவர் யாரெனப் பார்ப்பதற்கு முயல்வதற்கிடையில், அது "மிஸ்ட் கோலாக"ப் பதிவாகியிருந்தது. அன்றைய தினம் கைபேசியில் அந்த அழைப்பு ஒலிப்பதும், நான் தூக்குவதற்கிடையில் அது துண்டிக்கப்படுவதும், ...........எரிச்சல் என் மனதின் கொதிநிலையைக் கூட்டியது....

"யாராவது என்னுடன்  விளையாடுகின்றார்களா !"

என் வினாவின் தொக்கலில் மனதின் அடித்தளத்தில் எரிச்சலும், ஆச்சரியமும் மாறி மாறி என்னைக் கௌவிப் பிடித்துக் கொண்டன. இருந்தபோதும் என் சினத்தைக் கட்டுப்படுத்தி உண்மைநிலையை எனக்குள் ஆராய்ந்தேன்.

"எனது அந்தத் தொலைபேசி இலக்கம் என் குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் நான் பரிமாறியதில்லை. எனவே இவ்வழைப்பில் வம்பு நோக்கமில்லை. இது அறியாத பிழையான அழைப்புத்தான் "

என முடிவெடுத்த நிலையில் நானே குறித்த அவ்விலக்கத்தை டயல் செய்தேன்...

"ஹலோ".........நான்

"ஹலோ"..........மறுமுனை

"ஓயா கவுத".......... நான் ( நீங்கள் யார் )

".................... இன்னவாத " மறுமுனை  (...........இருக்கின்றாரா)

" ஓ சொறீ.....ரோங் நம்பர் " ........நான்

தொடர்பைத் துண்டித்த நான்,  அவ்வழைப்பை மறந்தவளாய் என் கடமைகளுடன் மூழ்கியிருக்க,  குறித்த நம்பரிலிருந்து இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் எனக்கு அழைப்பு வந்தது.

எடுத்தேன் அதே குரல்.............!

என்னைப் பற்றிய தேடலுக்கான அழைப்பது. வழமையாக என்னைப் பற்றிய விபரங்களை அறிமுகமில்லாதவர்களுக்கு நான் கொடுப்பதில்லை. அதிலும் அவர் பெண்ணாக இருப்பதனால்  "பாத்திமா" என ஒற்றைச் சொல்லில் அறிமுகப்படுத்தினேன்.

தன் விபரங்களையும் அப் பெரும்பான்மைத் தோழி கூறினார். அவ பேசின விதமும், பண்பும் என்னைக் கவர்ந்ததால் எங்கள் உரையாடல் உடனே அறுபடவில்லை. ஆவலுடன் .....நீளமானது

"எனக்கு நீங்கள் உதவவேண்டும். நான் தமிழ் பயிற்சிநெறி கற்கின்றேன். தேவைப்பட்டால் உதவுவீர்களா" 

என அவர் சிங்களத்தில் கோரிக்கை விட, நானும் அவரிடம் சிங்கள உச்சரிப்பை பழகிக்கொள்ளலாமென்ற நப்பாசையில் மகிழ்வோடு சம்மதித்தேன்.

அன்று தொடக்கப்பட்ட எம் நட்பு பாலம் மூன்று மாத காலமாக சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பில் தன்னை முழுமையாக அடக்கிக் கொண்டது, இருவருமே மொழிப்பயிற்சி நன்கு பெற்றோம். காலங்கள் மூன்றும் மறைந்த போது அவள் பரீட்சையும் திருப்தியுடன் எழுதி முடித்திருந்தாள்.

ஒருநாள் அவளழைப்பே எனக்கு அலாமானது. பதறித்துடித்தெழுந்தேன்.

"ஏய் என்னடி ஆச்சு"

மனம் பதற்றப்பட, சிரித்தவாறே கைபேசியினூடே என் தலையில் ஒரு "நறுக்" வைத்தாள்.

"எப்ப பாரு........ஒரே பயம்தான்.....நான் 90 மாக்ஸ் என் தமிழ் கோர்ஸில் எடுத்து பர்ஸ்டா வந்திருக்கிறேன்டீ. உனக்குத்தான் இத பர்ஸ்ட்  சொல்லனும் என்று நெனைச்சேன்"


அவள் மகிழ்வு எனக்குள்ளும் நிரம்ப, அன்று முழுவதும் எங்கள் அன்புத் தொல்லையினால் எங்கள் கைபேசியின் பற்றரி மின்வலுவை இழந்து பல தடவை உயிர்ப்பிக்கப்பட்டது!


இவ்வாறாக எங்கள் நட்பும் நாட்களின் விரைவான சிறகடிப்பில் இறுக்கமாகப் பிணைந்தது . இந்த இரண்டு வருடமும் நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காத நிலையில் உண்மையான நட்பைத் தினமும் பரிமாறிக்கொண்டோம் இப்போது எங்கள் நட்புக்கு இரண்டு வயதும் கடந்துவிட்டது.

சென்றமாதம் திடீரென அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

"உன்னைப் பார்க்க எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கிறதடீ....இனியும் எனக்கு பொறுமையில்ல..உன்ன நேரில பார்க்கணும், வீட்டுக்கு வரட்டா" 

அவள் கைபேசியில் தன்னுணர்வைப் பதித்த போது.....


"வாவ்" 


நானும் உற்சாகமாக அவள் வருகைக்கு நாள் குறித்தேன், அந்த நாளும் வந்த போது அவள் காலடி என் வீட்டுத்தரையில் படிந்து அன்பைச் சிதறியது.

பல நாள் முகந்தெரியாமல், ஏதேதோ உருவ எதிர்பார்ப்புக்களுடன் நாங்கள் பண்ணியிருந்த கற்பனையுரு அன்று கலைந்தது..

அவள் அழகாய் இருந்தாள்.......ரொம்ப ரொம்ப ....பல கோணங்களில் அவளழகை, அன்பை, குறும்பை ரசித்தேன்...கண்களால் பார்வையுருட்டி , அபிநயத்து பண்ணும் பகிடியை.......அவள் எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது.

அவளுக்கும் என்னை................ரொம்ப ரொம்ப !

இத்தனை நாளும் அகத்தின் ஆட்சியில் அடங்கிப் போயிருந்த எங்கள் நட்பு , முதன்முதலாய் அன்று உருவங்கள் கண்டு மகிழ்வின் பேரலையில் சிக்கித் தவித்தது. நிறையப் பேசினோம்...இந்த இரண்டு வருடங்களும் பேசி முடிக்காத பல விடயங்களை அந்த இரண்டு மணித்தியாலத்தில் பேசி முடித்த திருப்தி!

அவளைப் பிரியும் நேரம் இருவர் கண்களும் கலங்கியது. என் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.....

விடைபெறும் இறுதி நொடியில் .........!

அவள் கரம் என் கரத்துடன் பிணைக்கப்பட்டபோதுதான் எதையோ அவள் என் கைகளுக்குள் அழுத்தும் விசையொன்றை உணர்ந்தேன். பார்க்க முயற்சித்த போது அழகாய்ச் சிரித்தாள்....

"இது என் அன்பான கிப்ட் உனக்கு! நான் வெளில போனதும் பாரு " .....

அவள் கோரிக்கையேற்று மௌனமாகத் தலையாட்டிய பின்னர்  சற்று குரலில் சூடேற்றினேன் !

" ஏய் .........என்னடி இது ! இத நான் உன்கிட்ட எதிர்பார்த்தேனா" 

நான் சற்று உரப்பை அதிகரித்த போது அவள் வார்த்தைகளி னன்பு  என்னைச் சற்றடக்கின.

"கூல்மா...........நீ.........ஏசுவேன்னு தெரிஞ்சுதான் நான் முதல்ல இத சொல்லல"

அவள் என்னை விட்டு மறையும் போது, அவள் எனக்காக சற்றுமுன் உதிர்த்த வார்த்தைகளும் தொலைவாகிப் போகின!

என் கரங்கள் அவள் விட்டுச்சென்ற அடையாளத்தை எனக்கு காட்சிப்படுத்த மெதுவாக விரிந்தது . உள்ளே...  கண்ணாடி மூடியால் மூடப்பட்ட சிறு பெட்டி ஆறு வெவ்வேறு நிறங்களுடன் கூடிய இரத்தினக்கற்களுடன் !

இரத்தினக்கற்களை விடப் பெறுமதியான அவள் நட்பைத்தான் எனக்கு விட்டுச் சென்றுள்ளாளே!................... அதை  நிரூபிக்கவா இது!

மனம் மிகையாக நெகிழ்ந்தது கண்ணீர்த்துளிகளுடன்!

அவள் என்றோ ஒரு நாள் சொன்ன அந்த வார்த்தைகளின் நிருபணமாய் இரத்தினக்கற்கள் என்னைப் பார்த்து சிரித்தன. ஒளிக்கதிர்களை ஞாபகங்களாக வெளிவிட்டபடி!

"நான் உன்ன எப்ப சந்திக்கிறேனோ அன்று உனக்கொரு இரத்தினக்கல் செட் தருவேன். அந்தக் கற்களைப் பாவித்து நீ மோதிரம் செய்து , உன் கைல அதப் போட்டுக்கணும்...ஏன்னா எப்பவும் நான் உன் கூட இணைந்திருக்கனும்"

அவள் அன்று  கூறிய வார்த்தைகளை நான் வேடிக்கையாக நினைத்து அதனையே , மறந்திருக்கின்ற ஓர் பொழுதில், அவள் அதனை உயிர்ப்பித்து என்னைக் கடனாளியாக்கிச் சென்று விட்டாள்...

அடுத்த எங்கள் சந்திப்பில்  நானும் அவளுக்கொரு ஏதாவது ...................

அவள் அன்பு மனசுக்குள் வீழ்ந்து கண்ணீர்த்துளிகளையும் கிளறிவிட்ட போது, அழுதேன் அந்தக் கணத்தில் நிறைய கண்ணீர்த்துளிகள் கன்னத்தில் உருண்டன..............

அவை ...........

ஆனந்தக் கண்ணீர்!

முகம் பார்க்கும் நட்புக்கள் கூட சீக்கிரம் அற்பக் காரணத்தால் முறிந்து விடும் இக்காலத்தில் அந்த "மிஸ்ட் கோல்" பாசம் உயிரில் நினைவுகளை விதைத்து போஷித்து வருகின்றது......

எங்கள் ஆயுள் வரை இவ்வன்பு தொடரும் எனும் நம்பிக்கையுடன் அவளை நினைவுகளால் அரவணைத்தவாறே பயணிக்கின்றேன் எங்கள் நட்புலகில்!





2012/08/19

மரணப்பூக்கள்


ஒவ்வொரு விடிகாலையும் - எனக்கு
நிச்சயமற்ற பொழுது !

இரவின் சயனத்தில் வீழ்ந்துகிடக்குமிதயம்
அறுந்துவிடத் துடிக்கின்றது பலமாய்!

கனாக்கள் காலாவதியாகிப் போனதில்
காவுகொள்ளப்பட்டனவோ உணர்வு வேரறுக்கப்பட்டு!

பறக்கத் துடிக்குமென் எத்தனங்களில் - யாரோ
சிறகுகளை கத்தரிக்கின்றனர் சளைக்காமல்!

வெந்நீரின் சகவாசத்தில் வீழ்ந்த மனசும்
ஆவியாகிபோகின்றது  அடிக்கடி மகிழ்வும் துறந்து!

எங்கோ தொலைந்த சந்தோஷங்கள்- நீராய்
இங்கிதமின்றி  விழிமடலுக்குள்  ஊற்றப்படுகின்றன!

குரல்வளையின் பட்டிகையாய் தூக்குக்கயிறொன்றும்
வரமாகி மூச்சுக்காற்றில் தரித்து நிற்கின்றது!

ஒட்டடைபடியாத மயானமொன்று எனக்காய்
காத்துக் கிடக்கின்றது அந்தரிப்புடன்!

பாறைகளின் போர்க்களத்தில் பதியமிடப்பட்ட வாழ்க்கை
கோரமாகிக் கிடக்கின்றது தினமும் !

ஒருவேளை சந்தோசங்களின் மீள்பிறப்பு
இறப்பின் காலடியிலோ!

இளமையின் போஷிப்பில் துடிக்கும் நாடியே..........
உனக்கேனின்னுமென் மூச்சறுக்கத்  தயக்கம்!

சபிக்கின்றேன் என் ஆரோக்கியத்தை.........!

இருந்தபோதும்...................!

நாளை சேதியொன்றும் வரும்!- என்
ஆயுள் அண்டம் ஆறடிக்குள் சிதைக்கப்பட்டதாய்!

அன்று மண்ணறை மடி  தர- உறவினர்
கண்ணீர்த்துளிகளென்னைத் தாங்கிப் பிடிக்க...

பதித்துக் கொண்டிருப்பேன் என்னையும் .....
மதியில் இம்சைகள் தொடாத புதுத்தேசத்தில்!

ஜன்ஸி கபூர் 

Azka + Sahrish (19.08.12)....