About Me

Showing posts with label உங்களுடன் நான். Show all posts
Showing posts with label உங்களுடன் நான். Show all posts

2021/06/16

வாழ்க்கை நம் கையிலே



 மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியையே தேடுகின்றது. ஆனாலும் அந்த மகிழ்ச்சி நமக்குள்ளேயே இருக்கின்றது என்பதை மறந்து அடுத்தவர்களின் எதிர்பார்ப்பிற்காக நமது வாழ்க்கையை குறுக்குகின்றோம். மகிழ்ச்சியை உணர வேண்டிய மனம் அதை வீணாக இழந்து தவிக்கின்றதே!
---------------------------------------------

-
ஆசைகள் உள்ளத்தில் எழுகின்ற சிறு உணர்வுதான். ஆனாலும் ஆசைகளுக்குள் நாம் நம்மை அடக்கி வாழ முயற்சிக்கும்போதுதான் நம்மைச் சுற்றி வலி கசிகின்றது. கட்டுப்படுத்தப்படாத ஆசைகளின் நீட்சியில் கண்ணீர்க் கசிவு இருக்கின்றது என்பதை நாம் மறந்துதான் போகின்றோம்.
--------------------------------------------------


அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கின்ற வாழ்வினுள்  பல எதிர்பார்ப்புக்களை நமக்குள் தேக்கிக் கொள்கின்றோம். நாம் விரும்புகின்ற எல்லாம் நிறைவேற வேண்டுமென முயற்சிக்கின்றோம். போராடுகின்றோம். இருந்தும் ஏமாற்றங்கள் நம்மைத் துரத்துகின்ற போது எல்லாவற்றையும் இழந்ததைப் போல் தனிமைக்குள் சுருண்டு விடுகின்றோம்.

--------------------------------------------------

நமக்குள் அடங்கியிருக்கின்ற ஆற்றல்கள்தான் நமது அடையாளங்கள். பலம் நமது நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். ஆனாலும் நாம் ஏனோ பலத்தை மறந்து பலகீனங்களை நமக்குள் நிரப்பி அப்பலகீனங்களால் சந்தோசங்களை இழந்து விடுகின்றோம். தடுக்கி வீழும்போதெல்லாம் நம்மீது ஏறி மிதிக்காமல் எழுந்திருக்க கை தருவது நம்மீது அன்பு கொண்டவர்கள் மாத்திரமே!
----------------------------------------------------------

இலக்குகள் நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஓவ்வொரு தொலை புள்ளியும் தொட்டு விடும் தூரமெனும் நம்பிக்கையில் முயற்சிக்கின்றோம். ஒவ்வொரு முயற்சிக்குள்ளும் ஒளிந்திருக்கின்ற தன்னம்பிக்கை நமது பயணப் பாதையின் வலியை உறுஞ்சி வழி காட்டி நிற்கும்.
----------------------------------------------------------

நாம் நேசிப்பவர்கள் எல்லோரும் நம்மை நேசிக்கின்ற போது மனதில் புத்துணர்ச்சியுடன் வலிமை பிறக்கின்றது. புன்னகை நமக்குச் சொந்தமாகின்றது. இன்பமோ துன்பமோ நாம் தேடிச் செல்கின்ற செயல்களின் தீர்ப்புக்களே. வெற்றியை தேடும் மனம் சந்திக்கின்ற தோல்விகளையும் வலிகளையும் அக்கணமே மறந்து விடுகின்றது.    

----------------------------------------------------------


தோல்விகளிடம் நாம் தோற்றுவிடும்போது எம்மைத்  தேடி துன்பங்கள்தானே வருகின்றன. ஒவ்வொரு கணமும் நம் நிம்மதியும் தொலைகின்றதுதானே. இருந்தும் கடந்து போன சந்தோசங்கள் உதிர்ந்து போகாமல் கொஞ்சமாவது நமக்குள் நினைவுகள் எனும் பொக்கிசமாக மாறிக் கிடப்பதனால் வாழ்க்கை இன்னும் நமக்காக காத்துக் கிடப்பதாக உணர்ந்து வாழ்கின்றோம். வாழ்க்கை நம் கையிலே வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் நமக்கான வாழ்க்கை அனுபவங்களைக் கற்றபடி வாழ்வோம். வாழ்வை ரசிப்போம்.

- Jancy Caffoor - 16.06.2021


2021/06/06

விதியின் கோர முகம்


மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு நிமிட வாழ்வும்

விண்ணில் தங்குகின்ற நிரந்தர வாழ்விற்குத் தானோ?

எண்ணற்ற கனவுகளும், ஆசைகளும், ஏக்கங்களும்

புண்ணாகி ரணத்துடன் புதையுண்டு போவதுதான் விதியா?

ஆம்...

விதியின் முகம் இயற்கை அழிவாகி, மண்ணுக்குள் இழுத்துத் தள்ளிப் புதைத்த, மண்சரிவின் கோரப் பிடிக்குள் நேற்று சிக்குண்ட ஒரு குடும்பத்தின் கதையை இன்று என் விரல்கள் கண்ணீர் நனைத்து எழுதுகின்றன.

ஓன்றா.........இரண்டா...............

எத்தனை உயிர்கள் ஊனமாக, ஊமையாக இயற்கை அழிவுக்குள் தம் முகம் புதைக்கும் கோரங்களின் அகோரங்கள் நம் செவியை அவ்வவ்போது அதிரச் செய்கின்றன.

யாரை யார் குற்றம் சொல்வது?

இயற்கையை அழிக்க, இயற்கை தன் சினத்தைக் கொட்ட, இதயங்கள் கிழிந்து போகின்றன. குருதியின் வெந்தணலில் மூச்சுக்கள் கருகுகின்றன.

வெள்ளம், புயல், மண்சரிவு, சுனாமி என, இயற்கை அனர்த்தங்கள் அவ்வவ்போது உயிர்களை பலி கொண்டு வருகின்றன. இவ் அனர்த்தங்களின்போது காவு கொள்ளப்படுகின்ற உயிர்களின் இழப்புக்களை பார்க்கையில், வெளியே நிற்கின்ற வெளித்தரப்பினருக்கே மனக்கஷ்டங்கள் ஏற்படுகையில், உண்மையில் உறவுகளின் வலிக்கு வார்த்தைகள் ஏதுமில்லைத்தான்.

நாளைய வாழ்வு எப்படி இருக்கும் என நமக்கு முன்கூட்டியே அறிந்து கொள்ளுகின்ற சக்தியிருந்திருந்தால், ஒவ்வொருவரும் அதற்கேற்ப தம்மை தயார்படுத்துவார்களோ என்னவோ!...

தாய், தந்தை, மகன், மகள் என நான்கு உயிர்கள், குடும்ப உறவுகள் நேற்று 05.06.2021 ஆம் திகதி   இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிர்நீத்த செய்தியினைக் கேட்கின்றபோது இனம், மதம், சாதி எனும் புறவேறுபாடுகளையெல்லாம் தகர்த்தெறிந்து, மனிதாபிமானமுள்ள நெஞ்சங்கள் கண்ணீர் சிந்தும்.

மகள் ஆசிரியை. கல்விப் பணிபுரிந்த அந்த சகோதரியை மண் விழுங்கியபோது எத்தனை மாணவ நெஞ்சங்கள் கதறியிருப்பார்கள். எத்தனையோ ஆசைகள், கனவுகளைச் சுமந்து எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்போடு வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளம் உள்ளங்கள் தமக்கு நேரப் போகின்ற அனர்த்தங்களை அறிந்திருந்தால் உதடுகளில் விரிகின்ற அந்தப் புன்னகை மலர்ந்திருக்குமா என்ன?

மண்சரிவு நடைபெற்ற பின்னர், இருந்த வீடு முற்றாக மறைந்து விட்டது என்பது வேதனைதான். அதிலும் புதையுண்டவர்களை எங்கு தேடுவது? அத்தடுமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது அவர்கள் வளர்த்த பாச நாய்தான்;. பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மீட்புப் பணியாளர்கள் செல்ல  அந்த நாயும் சம்பவ இடத்திற்கு வந்தபோது விரட்டினர். ஆனால் அது திரும்பி வந்து, அதன் முன் பாதங்களால் சேற்றைத் கிளறத் தொடங்கியது. ஒரு துப்பு கொடுத்தது. இதன்போது சடலங்கள் அந்த இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.

வாழ்க்கை அற்பமானது, சொற்பமானது ஆனால் நாம் அதை உணர்வதாக இல்லை. ஒவ்வொரு மரணங்களும் நமக்கு உணர்த்திச் செல்கின்ற தத்துவங்கள் அவைதானே!

ஜன்ஸி கபூர் - 06.05.2021

2021/05/08

உங்களுடன் நான் - 1


அன்பு என்பது அழகான உணர்வு. அது உள்ளத்தில் பரவியிருக்கும்போது உணர்வுகளும் உறுதி பெறுகின்றன.

அன்பு இயல்பாகவே வரவேண்டியதொன்று. நம்மை உதாசீனப்படுத்துபவர்களிடமிருந்து அது கிடைப்பதில்லை. எனவே நம் அன்பை உணரும்போது அடுத்தவர்கள் நம்மைக் கௌரவிப்பார்கள். அதுவரை நாம்தான் காத்திருக்க வேண்டும்.

காலம் நிலையற்றதைப் போல் மனிதர்கள் மனமும் நிலையற்றதுதானே. சூழ்நிலைகளும், சுயநலங்களும் அவர்களின் போக்கை மாற்றக் கூடும். துரோகங்கள் நம்மை வதை செய்யும்போது அவர்களைக் கடந்து செல்வோம். நமது அமைதியும், பொறுமையும் நம் பண்பின் வெளிப்பாடுகளாக இருக்கட்டும்.

துன்பம் வரும்போது நம் நிலையைக் கண்டு வருந்துவோர் அருகி விட்ட நிலையில், நமக்கு தோள் கொடுக்க ஒரு உறவு இருந்தாலும்போதும். வலியை வெல்லும் வலிமை நமக்குக் கிடைக்கும்.

எக் காரணத்தினாலும் நம்மீதான நம்பிக்கை உடையும் விதத்தில் நாம் செயற்படக் கூடாது. ஏனெனில் அவநம்பிக்கை தருகின்ற பார்வை வாழ்வின் நிம்மதியைக் கெடுத்து விடக்கூடியது.

ஜன்ஸி கபூர் - 08.05.2021

  • Love is a beautiful feeling. Feelings are also confirmed when it spreads in the soul.
  • Love is something that comes naturally. It is not available from those who ignore us. So when we feel our love others will honor us. Until then we just have to wait.
  • The human mind is as unstable as time itself. Circumstances and selfishness may change their course. When betrayals torment us we pass them by. May our peace and patience be manifestations of our character.
  • Even when we have a relationship to give us a shoulder to go, those who regret our situation when suffering comes are gone. We get the strength to overcome pain.
  • We must not act in a way that undermines trust in ourselves for any reason. Because the vision of despair can ruin the peace of life.