About Me

2021/04/15

அப்துல் கலாம்


தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் ஆஷியா உம்மா தம்பதியனருக்கு   மகனாக 1931 ஆம் ஆண்டு அக்தோபர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த கலாம் அவர்கள் தனது இளமைக் காலத்திலேயே குடும்பத்தைக் காத்தவர்கள்.  

இயற்பியல் இளங்கலைப் பட்டதாரியான அவர்கள் தனது ஆர்வத்தின் காரணமாக விண்வெளி பொறியியல் படிப்பையும் மேற்கொண்டு முதுகலையும் பெற்றார்கள்;. 1960 ஆம் ஆண்டு விஞ்ஞானியாக ஆராய்ச்சிகளைத் தொடங்கியவர் விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கைக்கோள் ஏவுதலிலும் முக்கிய பங்காற்றினார்கள்;. ஹெலிகொப்டர் வடிவமைப்பு அணு ஆயுதச் சோதனை உள்ளிட்ட ஏவுகணைத் திட்டங்களிலும் பங்கேற்றார்கள். இவரது முற்போக்குச் சாதனைகளால் சகல நாடுகளின் பார்வையையும் இந்தியாமீது திருப்பியது மாத்திரமல்ல இந்தியாவும் வல்லரசானது.  

அன்பினால் மக்கள் மனங்களை வென்று 2002 ஆம் ஜூலை 25 ஆம் திகதி இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார்கள். பாரத ரத்னா உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளதுடன் அக்கினிச் சிறகுகள் உள்ளிட்ட சில நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்கள். 

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பதை வலுவூட்ட   முன்னேற்ற இந்தியாவுக்காக கனவுகளைக் கண்டு அதனை நனவாக்க பாடுபட்டு உழைக்குமாறு இளைஞர்களுக்கு உற்சாகமூட்டிய மிகச்சிறந்த தலைவர். 2007 ஆம் ஆண்டு தனது குடியரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்கள். பல்வகை ஆளுமைகளுடன்   வாழ்ந்த ஏவுகணை நாயகன் 2015 ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி இவ்வுலகை நீத்தார்கள்.  

அந்தவகையில் தனது வாழ்வை எளிமையாக ஆரம்பித்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வரலாறும் காலத்தால் மறக்கப்படாதது. 


ஜன்ஸி கபூர்  - 20.10.2020

மறக்க முடியுமா

 

  • கடிகார முட்கள் மெதுவாக நகர்வதைப் போன்ற பிரமை. எவ்வளவு நேரம்தான் ரம்யாவால் விட்டத்தை வெறித்துப் பார்க்க முடியும்.

    "தாயீ........வெறும் வயித்தோட இருக்கக்கூடாது. ஏதாவது வாய் நனையம்மா. தேத்தண்ணீ ஆறப் போவுது"

    தாயின் பரிவுடன் அவளை ஆறுதல்படுத்தும் கணவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். கண்ணீரால் நிறைந்திருக்கின்ற விழிகள் வெடித்து விடுமோவென்ற பிரமை. அடக்க முடியவில்லை. நெஞ்சம் தேம்பியது.

    மனைவியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ராம். அண்மையில் நடந்து முடிந்த அந்த வலி தரும் சம்பவம் கண்முன்னால் விரிந்தது.

    ராம் குடும்பத்தின் தலைமகன். சிறுவயதிலேயே அப்பா தவறிப் போனதால் அவனே தனது குடும்பத்தைக் காக்கும் தூணானான். அவனுக்கு பின்னர் காத்திருந்த நான்கு குமர்ப்பிள்ளைகளையும் கரையேற்றும் பொறுப்பு அவனுக்கு ஏற்பட்டது. அண்ணனாக அல்லாமல் தந்தையாகிப் பாரம் சுமந்தான். தனது இளமைக் காலம் அனைத்தையும் வெளிநாட்டில் கரைத்து உழைத்தான். பாலைவன வெம்மை அவனது வனப்பையெல்லாம் சுரண்ட நான்கு குமர்களையும் கரையேற்றியவனாக நாடு திரும்புவதற்குள் நாற்பது வயதையும் தாண்டிவிட்டான். வயோதிபத் தாயை நல்ல தனயனாகிக் காத்தான். தனது எதிர்காலம் அவனுக்கு மறந்தே போனது. நாளாந்த வாழ்க்கைச் செலவினைச் சமாளிப்பதற்காக முச்சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்து வாடகைக்காக ஓட்டத் தொடங்கினான். கிடைக்கும் வருமானம் அவர்களின் அன்றாட வாழ்வைச் சமாளிக்க உதவியது.

    ஆனாலும் அவனது தாயார் அவனுக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொடுக்கப் போராடி ஈற்றில் முதிர்கன்னியாக தனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்ற ரம்யாவைத் தேடிக் கண்டுபிடித்தார். அவனுக்கேற்ற மனைவி. பெரியவர்களின் ஆசியுடன் அவளைக் கரம் பற்றினான்.

    நாட்களும் வேகமாக ஓடின. குழந்தையின்மை அவர்களுக்குப் பெருங் குறையாகத் தெரியவில்லை. அவனுக்கு அவளும், அவளுக்கு அவனுமாகக் குழந்தையாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கின்ற நேரம்தான், ரம்யாவின் சித்தப்பா மகள் அவள் வாழ்வுக்குள் குறுக்கிட்டாள்.

    "அக்கா நாலு பொட்டப் புள்ளா தொடர்ந்து பொறந்திருச்சி. சமாளிக்க முடியல. உனக்குத் தத்து தாரேன் வளர்க்கிறியாக்கா"

    தங்கையின் குரல் அவளுக்கு புது வாழ்வுப் பாதையைக் காட்டவே சம்மதித்தாள். தங்கை மகளை இருவரும் அன்போடு வளர்க்க ஆரம்பித்தார்கள். இரண்டு வயதில் வந்த குழந்தை மீனு இப்போது பன்னிரெண்டு வயதினை எட்டிப் பார்க்கின்ற அழகு நிலாவாக வளர்ந்திருந்தாள். இடைக்கிடையே பெற்ற தாய், தகப்பன் உறவுகளின் தொடர்பினைப் பேண வளர்ப்பு பெற்றோர் மறுக்கவில்லை. இரு குடும்ப உறவுகளின் பாலமாக மீனுவும் வளரத் தொடங்கினாள். வளர்ப்புப் பெற்றோர்கள் தமது வறுமைக்குள்ளும் மீனுவை செல்ல மகளாகவே வளர்த்தார்கள். அவள் தரம் ஏழில் ஊர்ப் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்தாள்.  
     
    ஒருநாள் பாடசாலைக்குப் போன மகள் வீடு திரும்பவில்லை. பதறித் துடித்துக் கொண்டே பாடசாலைக்கு சென்று விசாரித்ததில்,  பெற்றவர்கள் மீனுவை மீள அழைத்துச் சென்றிருப்பது புரிந்தது. சட்டமும் அவர்களின் கனவினைக் கருக்கியது. உறவுக்கார பெண் என்பதால் நம்பிக்கை வலுக்க சட்டப்படி தத்தெடுக்காத தவறு இன்று பெருந்துயராகி நீண்டிருக்கின்றது. 

    அழுதாள் பல நாட்கள். வளர்த்த பாசம் நெஞ்சை அமுக்கியது. காணும் இடங்களிலெல்லாம் மீனுவின் பிம்பம். உணர்வுகள் கதற நடைப்பிணமானாள் ரம்யா.

    மறக்க முடியுமா அந்தக் குழந்தை முகத்தை. அவளுடன் பறந்தோடிய நாட்களை....

    மீனுவின் குறும்புகளின் சிதறல்கள் அந்த வீடு முழுவதுமாக நிரம்பிக் கிடந்தன.

    தேம்பித் தேம்பி அழுகின்ற மனைவியை அணைத்தார் ராம். சுயநல உலகில் உணர்வுகளுடன் விளையாடுகின்ற மனிதர்கள் இருக்கும்வரை இத்தகைய உளத் துயர்களும் நீள்கின்றன.
    இடையில் வந்த உறவு சிறகினை விரித்ததில் உறவினை இழந்த வளர்ப்புப் பெற்றோர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக மாறி தமது துயரத்தைத் துடைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

    ஜன்ஸி கபூர்  - 27.10.2020


எது சுதந்திரம்

 

 

  • சுதந்திரம் என்பது பிறர் தலையீடின்றி நாம் அனுபவிக்கும் விடுதலையாகும். உண்மையில் சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றனவா? எனும் தேடலுக்கான விடை சுதந்திரத்தின் யதார்த்த நிலையை உணர்த்தும்.
    நாம் அனுபவிக்க வேண்டிய சமூக சுதந்திரமானது அரசியல், தனிமனித, தேசிய, சர்வதேச, பொருளாதார, தார்மீக, வீட்டுச் சுதந்திரம் எனப் பல கூறுகளினாலானது.
    யாரிடம் வலிமை இருக்கின்றதோ அங்கே சுதந்திரம் காணப்படுகின்றது. அந்த வலிமை நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. ஒரு மனிதன் தான் விரும்புகின்ற செயல்களை எல்லாம் தன்னிச்சையாகச் செய்ய முடியாது. கலாசாரம், பண்பாடு போன்ற வேலிகளை இடுவதன் மூலமாக தனிமனித சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
    குடும்பக் கட்டமைப்பில் நாம் உறவுகளால் சூழ்ந்தே காணப்படுகின்றோம். அவர்கள் ஏதோவொரு விதத்தில் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். எனவே ஒரு தனிமனிதனின் வீட்டுச் சுதந்திரம் முழுமையாக அனுபவிக்கப்பட முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. இவ்வாறே தார்மீக சுதந்திரமும் மீறப்படுகின்றது.
    ஏழை, பணக்காரன் எனும் அந்தஸ்து பொருளாதாரச் சுதந்திர நிலைமையைச் சிதைக்கின்றது.
    சுதந்திர நாட்டின் முக்கிய பண்பு மனித சமத்துவமாகும். நாட்டில் முழுமையான சமத்துவம் பேணப்படுகின்றதா? அவ்வாறாயின் ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன?
    ஒரு பெண்ணால் இரவில் தனியாக நடமாட முடிகின்றதா?
    வருடாவருடம் சுதந்திரதினம் கொண்டாடுகின்றோம். ஆனால் அடிமைத்தனமான அடித்தள உணர்வினை நாம் அறுப்பதாக இல்லை. வரிகளாலும், எழுத்துக்களாலும் முன்மொழியப்படுகின்ற சுதந்திரம், உணர்வு ரீதியாக இன்னும் செயலுருப் பெறப்படவில்லை என்பதே இன்றைய உண்மை நிலையாகும். சுதந்திரமாக வாழ்கின்றோம் எனும் மாயைக்குள் நாம் நமது சுதந்திரத்தை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.
    ஜன்ஸி கபூர் - 26.10.2020
  •  

பாரதியின் புதுமைப் பெண்


 


கடிகாரம் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது. ஏனோ மனது விறைத்த பிரமை. பெண்ணென்றால் வெறும் இயந்திரம் எனும் நினைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில ஆண்களுள் அவள் கணவன் முத்துவும் ஒருத்தனே எனும்போது ஆத்திரம் உடலுக்குள் அதிர்வைத் தோற்றுவித்தது. அடக்கிக் கொண்டாள் பத்மா. சிறு வயதிலிருந்து பழக்கப்பட்டிருந்த குடும்பக் கட்டுப்பாடும் பெண்மைக் குணங்களும் இன்னும் அவளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

குடும்பம் எனும் வண்டியை நகரச் செய்ய இந்நாட்களில் ஆண், பெண் இருவருமே கட்டாயமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டம். பத்மாவும் முத்தைப் போல் மாதம் ஐம்பதாயிரத்துக்கு மேல் உழைக்கின்றவள்தான். ஆனால் பெண் என்பதால் பலரும் விதிக்கின்ற கட்டுப்பாடுகள் அவளது சுதந்திரத்தை சிறை வைத்துள்ளன. 

கணவனின் ஒத்தாசைகள் கிடைக்காத வீட்டு வேலைகளைச் செய்கின்ற குடும்பத் தலைவி  அவள். இதனால் தினமும் அவளது மேனியில் ஊறும் வியர்வையினளவு அதிகம். குடும்ப வட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஓய்வின்றி சுழல்வதால் தன்னைக் கவனிக்கவே நேரமில்லை.

நாட்கள் தேயத் தேய அவள் மனமும் சலித்துப் போனது. பொறுமையும் எல்லை மீறிப் போனது. அன்பால் வழிநடத்த வேண்டிய கணவன் முத்து அதிகாரத்தினைப் பிரயோகித்து அடக்கியாள முயன்றான். சாதாரண பெண்ணுக்குக் கிடைக்கும் சுதந்திரம்கூட அவளுக்குள் இல்லை.   வேலைத் தளத்திற்கு அவளை ஏற்றி, இறக்குபவன் அவனே. தன்னுடன் வேலை செய்கின்ற பெண்களுடன் கூடக் கதைப்பதை விரும்பாதவன். சுற்றம், நட்பும் மாத்திரமல்ல அவளைத் தேடி உறவினர்கள்கூட வருவதில்லை.

மாத முடிவில் கிடைக்கும் சம்பளம் உடனடியாகவே அவனது வங்கிக் கணக்கிற்கு  சென்றுவிடும். அப்பணத்தில் அவள் கணக்குப் பார்த்தாலோ அல்லது தனது தேவைக்கு எடுத்தாலோ வீட்டில் பெரும் யுத்தமே வெடிக்கும். 

ஐந்து வயது மகள் திவ்வியா அவர்களின் சண்டையைப் பார்த்து பயந்து அழும்போது குழந்தையென்றும் பாராமல் மூர்க்கத்தனமாக அடிப்பான். குழந்தையின் உடலில் காணப்படும் இரணம் அவளது மனதைத் துண்டாக்கும். மகளின் வலியைக் குறைப்பதற்காக கணவனுடன் போராடுவதையே தவிர்த்தாள். ஆனால் அவ்வாழ்வின் நெருக்கடியை விதியென்று ஏற்க முடியவில்லை. அவனும் திருந்தவில்லை. முத்துவின் சந்தேகப் புத்தி அவளை கைபேசிப் பயன்படுத்தவும் அனுமதிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை அவன் உளவியல் குறைபாடுள்ளவன். சாதாரண உணர்ச்சிகளைக் கூட அனுமதிக்காத வக்கிரபுத்திக்காரன்.

அன்று.....

 இரவு விருந்தொன்றில் கலந்து கொள்ளச் சென்ற முத்து நடுநிசி தாண்டியும் வீடு திரும்பவில்லை. பயங்கர இருளைத் திணித்துக் கொண்டிருந்த பீதி அவளை ஆட்கொள்ளவில்லை. மனம்தான் இறுகி விட்டதே.!

நிசப்தம் கரைந்து பொழுதும் விடிந்த பின்னர்கூட, அவன் வீட்டுக்குத் திரும்பவில்லை. அப்பொழுதான் அவனுக்கு இன்னுமொரு குடும்பமும் இருக்கும் விடயம் அவளுக்குத் தெரிய வந்தது. அவளுக்குள் அருவருப்பு நெளிந்தது. இதுவரை தன் குடும்பம், சமூகம் எனும் கட்டமைப்புக்களுக்காக தனது கவலைகளை அடக்கிக் கொண்டவள் அச்சிறையிலிருந்து வெளியே வரத் துணிந்தாள்.

உத்தியோகம் புருஷ இலட்சணம் என்பார்கள். 

அவளதும் குழந்தையினதும் எதிர்காலத்தினை ஓட்ட அந்த வருமானம் போதும். ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாக தமது துணிகளை சிறு தோற்பைக்குள் திணித்தவளாக குழந்தையையும் அழைத்துக் கொண்டு முதன் முதலாக வீதிக்குள் காலடி பதித்தாள். மன உணர்வுகள் இலேசான பிரமை.  தான் வாழ்ந்த அவனது வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். இத்தனை நாட்கள் வாழ்ந்த அவ்வீடு அந்நியமான உணர்வுக்குள் காட்சியளித்தது. குட்டக் குட்டக் குனிபவர்கள் எல்லாக் காலமும் தோற்பதில்லை.  

சுதந்திரமான வெளிக்குள் பறப்பதைப் போன்ற பிரமைக்குள் வெளியேறினாள். இனி அவளும் பாரதி கண்ட புதுமைப் பெண்தான். தனது வாழ்வினை தானே தீர்மானிக்கின்ற, அடக்கியாள்பவர்களை எதிர்க்கின்ற துணிச்சலுள்ள பெண். 

தனது முடிவினை கடிதவரிகளில் எழுதியவளாக, அவனது பார்வைபடும் இடத்தில் வைத்துவிட்டு வெளியேறியவளை உலகம் எக்கோணத்திலும் நோக்கக் கூடும். சம்பிரதாயம்,  பண்பாடு ,அடங்கி வாழ்வதே கௌரவம் போன்ற வெளிப்பூச்சுக்குள் தன்னை ஒளித்து வைக்க இனி அவள் தயாரில்லை.

தெளிந்த மனதுடன்  வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். தொலைபுள்ளியில் அவளது தாய் வீடு தெரிய ஆரம்பித்தது.

ஜன்ஸி கபூர் - 16.10.2020



பசுமை காப்போம்

 


பரந்து விரிந்து காணப்படுகின்ற ஆகாயக் கூரைக்குள் தன்னை அடக்கிக் காணப்படுகின்ற அழகிய பூமிக்கு இறைவனால் வழங்கப்பட்ட அற்புதமான  வளங்களே பசுமை மரங்களாகும். பச்சைப் பசேலென கண்ணுக்கு இதமளிக்கின்ற இயற்கைக் கொடையினை காக்க வேண்டிய பொறுப்பு நமது கரங்களில் தங்கியுள்ளது. 

சுயநலம் எனும் குறுகிய சிந்தனையால் மனிதர்கள் தமது தேவைகளுக்காக பசுமையைத் தாக்குகின்ற விசக் கிருமிகளாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள். 

இயற்கைச் சமநிலை பேணப்படக் கூடிய விதத்தில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்குமிடையில் காணப்படுகின்ற பிணைப்பு இப்பசுமை அழிப்பினால் அறுந்து போவதனால் புவியின் உயிர்ப்பான கட்டமைப்பும் செயற்பாடுகளும் அழிவடைகின்றன.பசுமைக்குள் நாம் அழிவினை ஏற்படுத்தும்போது ஓசோன் படை சிதைவடைகின்றது. அத்துடன் தட்ப, வெப்ப சூழ்நிலை மாற்றம், அனல் காற்று, நிலத்தடி நீர் வற்றிப் போதல், பருவ மழை பொய்த்தல், சூழல் மாசடைதல் போன்ற இயற்கை நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்படுவதுடன்இ சுவாசப் பாதிப்புக்கள் உள்ளிட்ட நமது தேக ஆரோக்கியமும் பாதிப்படைகின்றன. 

நாம் இயற்கை எனும் சொத்துக்கு ஏற்படுத்துகின்ற சேதத்தால் நமக்கு நாமே அழிவினை ஏற்படுத்துகின்றோம். நமது வாழ்வின் வனப்பினையும் அழிக்கின்றோம். நாகரிக வளர்ச்சி எனும் மாயைக்குள் நாம் ஏற்படுத்தும் அழிவு உலகத்தையே ஆபத்தின் விளிம்புக்குள் தள்ளுகின்றது. பூமியை உயிர்ப்புடன் அசைத்துக் கொண்டிருக்கின்ற சுவாச மையமான இந்த பூமியைக் காக்க வேண்டுமானால் மரங்களை வெட்டுவதைத் தவிர்தது புது மரங்களை நட்டுதல் வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வுகள் மூலமாக பசுமையைக் காத்து இயற்கை இன்பத்தை நாமும் அனுபவிக்கலாம்.

ஜன்ஸி கபூர் - 01.10.2020


பெண்மையைப் போற்றுவோம்

 

மென்மை எனும் போர்வைக்குள் தன்னைப் போர்த்திக் கொண்டிருக்கும் பெண்மை இவ்வுலகின் வெளிச்சத்திற்கான கண்கள். பண்டைய காலந்தொட்டு இற்றைவரை பெண்மைக்குள் பொதிந்திருக்கும் நாற்குணங்களால்  ஈர்க்கப்படாதோருண்டோ?   நல்லறத்தின் வடிவமாகவும் பண்பாட்டின் மகுடமாகவும் வாழ்க்கைக்கான தவமாகவும் சக்திமிக்க தாய்மையாகவும் திகழும் பெண்ணானவள் ஒவ்வொரு ஆணின் இயக்கத்திற்குமான சக்தியாகவே பரிணமிக்கின்றாள். இவ்வுலக நிலவுகைக்குள்ளும் அவளின் பண்புகள் நினைவூட்டப்படுகின்றன.  இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் அவளின்; மாண்புகள்  பிரகாசித்துக் கொண்டேயிருக்கின்றது.  

பெண்ணின் சிறப்பினை உலகப் பேராசான் வள்ளுவனும் தனது குறளில் தனி அதிகாரமிட்டு சிறப்பித்துக் கூறியுள்ளார். தாயின் காலடியில் சுவர்க்கம் இருப்பதாக திருக்குர் ஆன் கூறுகிறது. ஓவ்வொரு மதமும் பெண்மையைக் கண்ணியப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு பெண்மைக்குள்ளும் குடும்பத்தைப் பரிபாலிக்கின்ற சிறந்த நிர்வாகத் திறன் காணப்படுகின்றது.  

பெண்மையைச் சுற்றிக் காணப்படுகின்ற பல்வேறு யதார்த்தங்களின் நெருக்கடிகள் அவளது போராட்டத்திற்கான தடங்களை உருவாக்குகின்றன. பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குடும்ப அடக்குமுறைகள் பொருளாதார நெருக்கடிகள் போன்ற இடர்களில்   சிக்குப்படுகின்ற   நிலை இன்றைய முன்னேற்றமான உலக வாழ்வியலிலும் அரங்கேற்றப்படுகின்றது என்பதே கசப்பான உண்மையாகும். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக் கோஷமிட்ட அன்றைய நாட்கள் தொடக்கம் ஆணுக்குச் சரிசமனாக உரிமைகளை அனுபவித்து வாழ்கின்ற  இன்றைய காலகட்டம் வரையில் காணப்பட்ட பெண்ணின் வளர்ச்சிப்படி நிலையில் பல்வேறு போராட்டங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

 பெண்ணின் முன்னேற்றத்திற்குத் தடையாகக் காணப்படும் அனைத்துக் காரணிகளையும் இனங்கண்டு தகர்த்துவதன் மூலம் பெண்ணின் மேன்மையைப் பாதுகாக்கலாம்.

எனவே பெண்ணுக்கான மதிப்பும் மரியாதையும் எள்ளளவும் குறையாது   அவளைப் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொருவரின்   கடமையாகின்றது.

ஜன்ஸி கபூர் - 12.10.2020

2021/04/14

வல்வரவு வாழ்வார்க்கு உரை

 

 

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை (1151)

இன்பநலன் நுகர்ந்திடும் காதல் மணத்தில்/

இதமற்ற பிரிவும் பெருந் துன்பமே/

இன்னுயிர் வருத்திடும் பிரிவின் வலிதனை/

உணர்த்துதே பிரிவாற்றாமை அதிகாரச் சுவை/


இல்லறச் செழுமையில் வருங்காலம் வனப்புற/

தலைவனின் சிந்தைக்குள் உயிர்க்கின்றதே பொருளீட்டல்/

தேடல்ச் சிந்தனை தோழியூடாக உரைத்தால்/

தெரிந்திடுவாளே தலைவியுமதை தாக்கமில்லாச் செய்தியாய்/


வாழ்விற்கே காப்பாம் வளமான துணையே/

நிழலென நீண்டிட வேண்டுமே எதிர்காலத்தினில்/

உணர்வுகளைப் பொருத்திய உடல்கள் பிரிதல்/

உத்தம கற்பின் நியதியோ இவ்வையகத்தில்/


அறிந்திட்டாள் தலைவியும் அணைத்தாள் அக்கினியை/

பிரிந்திடேன் என்றவரே துன்பத்துள் தள்ளுகின்றார்/

பிரியமே நீங்கிடாதே நானும் இறக்கும்வரை/

பிரிந்துப் போகாமை உண்டென்றால் சொல்/


மாறாக விரைந்து வருவேன் என்றுரைத்தால்/

உரைத்திடு அடுத்தாரிடம் உன் வருகையை/

நானோ அறியேன் உன் வாசனையை/

உறைந்திருப்பேன் மரணத்துள் என்னுயிரும் மெலிந்திருக்கும்/


ஜன்ஸி கபூர் - 15.10.2020


 
 
  


 

தாலாட்டு


 

அம்மாவெனும் உணர்வினை எனக்குள் உருத்துலக்குகின்றேன்
உயர்ந்து கொண்டே செல்கின்றது பாசத்தினளவு
உருவத்தினுள் அடங்காத உணர்வுகளின் பிம்பமவர்
 
உணர்வுகளை மெல்ல வருடுகின்ற அம்மாவின் தாலாட்டில்
ஏதோ வசீகரம் வீசுவதை உணர்கின்றேன்
கன்னம் வருடி காதோரம் கிசுகிசுப்பாகத்
தன் அன்பினை அள்ளிப் பிசைகையில்
மனம் எங்கோ சிறகடிக்கின்றது அடிக்கடி

வயது என்பது வெறும் எண்பெறுமானம்தானே
ஆழ்மனதினைத் தொட்டு இதப்படுத்தும் பக்குவம்
அம்மாவுக்கு கைவந்த கலையோவென நினைக்கின்றேன்
அதனால்தானோ எல்லோரையும் தூங்கவைக்க முடிகின்றது

அப்பா எனக்குள் ஒரு பிரமை
நிதர்சனத் தரிசிப்புக்களில் காணாமல் போனவர்
அப்பாவும் இவ்வாறான தாலாட்டில்தான் உறங்கினாரோ
எங்கோ அவர் உருவமற்ற ஆத்மாவாக
எனைச் சுற்றியும் இருந்திடக் கூடும்
அம்மா செய்ததெல்லாம் சரியெனும் நினைப்பில்
அம்மாமீதான நம்பிக்கை எனக்குள் விரிகின்றது  

தாலாட்டு உறக்கத்தையும் மரணத்தையும் தொடர்புபடுத்துகின்றதோ
இரண்டினதும் ஆழ்மன அமைதி தொடர்பிலிருக்கின்றதே
விழிகள் மூடிய மௌனநிலை நீள்கையில்
விண்ணேவுகின்றது நம் ஆத்மாவும் மீளாது
இருதயத்துடிப்பின் ஓய்வு நிலையுடன் அஸ்தமிக்கின்றதோ
இவ்வுலக வாழ்வின் தேடல் வேட்கை 

உறக்கத்தின்போது மெதுவாக நகருகின்ற ஆழ்மனம்
மரணம் காண்கையில் மிகையாகச் சுழல்கின்றதே
ஈற்றில் மீளா இருளுக்குள் மூழ்கி
மீளாத் திசையின் சிதைவுகளுக்குள் அடங்கி 
மண்ணுக்குள் தன்னைப் பிணைத்தும் விடுகின்றது

அம்மாவும் உறவுகளின் வலிகளைத் தனக்குள்
அனுபவித்தே துடிப்புடன் மரணம் தொட்டிருக்கின்றாள் 
குழந்தையினதும் முதுமையினதும் மரண அலைவுகளால் 
தனது வலியினைப் புதுப்பித்தும் இருக்கின்றாள்

சடத்துவமான இப்புவியின் ஒவ்வோர் அணுவுக்குள்ளும்
தன்னைப் பிணைத்திருக்கின்றதோ உயிரின் ஆத்மா 
உடல் உடைகையில் ஆன்மாவும் அவாக்கொள்கின்றது
எல்லாப் பரும்பொருளையும் போலவே தன்னையடக்காது
சுதந்திரமாகச் சிறகினை விரித்திடத் துடிக்கின்றது. 

எங்கோ வெகுதொலைவில் அம்மாவின் தாலாட்டு
எனை அழைக்கின்ற பிரமைக்குள் வீழ்கின்றேன் 
அத்தாய்மைக்குள் தவழ்ந்திட மனமும் துடிக்கின்றதே
இருந்தும் வாழ்வியல்நெறிகளின் தடைகளுக்குள் நான்

தொலைவில்  மேக நிழல்களின் அலைவுகளுக்கிடையில்
அணுக்களாக உதிர்ந்து கிடக்கின்ற தங்கையினை
தன்கரங்களிலேந்தி அம்மாவும் புன்னகைத்துக் கொண்டிருக்கின்றார்

எனைப் பார்த்தே கரமசைக்கும் தாய்மையை
ரசித்தவாறே காத்திருக்கின்றேன் நானும் அம்மாவுக்காக

ஜன்ஸி கபூர் - 31.10.2020

 
Kesavadhas
 --------------
ஜன்ஸி கபூர் ஆழ்கடல் முத்தெடுப்பில் அவதானிக்கிறது இந்த கவிதை!
அம்மா என்பது உணர்வு பிம்பம்
உருவத்துள் அடங்காத பாசத்தின் கொள்ளுரு
இது தாய்மை!
கன்னம் வருடி காதோரம் கிசுகிசுக்கும் தாலாட்டில் ஏதோ வசீகரம் வீசுகிறது மலரின் மருவாக!
வயது என்பது ஓர் அளவலகே! பக்குவம் என்பது மனநிலை!
அது தாய்மையின் உயிர்க்கலை!
நிதர்சன தரிசிப்புகளில் காணாமல் போன தந்தையை அன்னையின் தாலாட்டில் ஆசுவாசப் படுத்துகிறது கவிதை!
உறக்கம் விழிப்பு பிறப்பு இறப்பு
ஆன்மா மண்தொடும் ஆகம் என ஆன்மிக வெளியில் சஞ்சரிக்கிறது கவிதை!
வெளி விரிகிறது.. முடிவில்லையே!
அணுவின் அணுவாய் திகழும் ஆன்மாவின் தரிசனமும் தடைபடுகிறது வாழ்வியல் நெறிகளின் தடைகளுக்குள்!
எல்லாமே நாம் விரித்தது தாம்!
இது ஆன்ம வெளிப் பயணம்... தொடரும்...
வாழ்த்துக்கள் கவிஞரே!
 ·

கூடலிற் தோன்றிய உப்பு

விழியின் மொழியோ விளைந்திடும் காதல்/
வீழ்த்திடும் அன்பும் மொழிந்திடும் காமம்/ 
விடிந்திடா இரவுகள் நீள்கின்றதே இன்பத்தில்/
விளைகின்ற வியர்வையும் பிணைகின்றதே நுதலில்/

அணைக்கும் கரங்கள் மீட்டுகின்ற தேகங்கள்/
அடங்கிடுமோ காதலும் மொழிகின்ற சுகத்தில்/
புலவியின் பயனாய் பொங்கும் கலவி/
புளாங்கிதமே மேனிக்கு புத்துணர்ச்சியும் உணர்வுகளுக்கே/

செய்யாத தவற்றின் தவிப்பும் படரும்/
செல்ல ஊடலோ கூடலின் வழியோ/
பிரியத் தலைவனும் மொழிகின்றான் பிரிவிற்கே/
பிரிந்திடாக் காதலில் இணங்கி வாழ்வதற்கே/ 

உப்பும் விளைந்திட பூக்கட்டும் வியர்வை/
உச்ச இன்பமும் சுவைத்திடலாம் ஊடலில்/
உன் னுறவுக்குள் ஊறலைத் தூவடி அன்பே/
ஊட்டம் பெறுவோம் அன்புநிலையும் உயிர்த்திட/

ஜன்ஸி கபூர் - 29.10.2020



வீடு அடையா வெளி

 


மனதின் வலியும் வரைகின்ற கோடுகள்
வரைபடமாகித் தாங்கி நிற்கின்றதே மனையை
எனக்குள்ளும் இனிய கனவுத் தேடல்
நீண்டு தொடுகின்றது இன்னும் முடிவிலியில்

யுத்தம் சிதைக்கின்ற வீட்டின் எச்சங்கள்
துரத்திக் கொண்டிருக்கின்றன வேறொரு இருப்பிடத்திற்கு
ஓவ்வொரு ஆண்டுகளும் ஒவ்வொரு வீடாய்
அவலங்களையும் இடமாற்றிப் பழகிக் கொண்டிருக்கின்றேன்

இருந்தும் சொந்த வீட்டிற்கான ஏக்கம்
இன்னும் புகைக்கின்றது அடங்காப் பெருமூச்சுக்களை
இந்த வருடத்திற்குள் வாழ்வதற்கான வீடொன்றென்ற
ஆசைகளின் உதிர்ப்பில் கருகுகின்றதே எதிர்பார்ப்பும்

வறுமையின் உச்சம் வழிகாட்ட மறுக்கின்றதே
இருந்தும் முயல்கின்றேன் சிதைவுகளை மீள்வுருவேற்ற
வீடு அமைத்திடத் துடிக்கின்ற கனவுகளை
மீள உருத்துலக்கிப் புனரமைக்கின்றேன் மெல்ல
சேமிப்பு என்னவோ நிறைக்கின்றது பெருமூச்சுக்களைத்தானே

அவலங்களின் உழைப்பால் சிந்தியவை கொஞ்சம்
மஞ்சாடிப் பவுண்களால் கைகளில் கிடைத்தவை
கெஞ்சி வாங்கிய கடன்களின் கருணை
பணத்திற்கான வடிகால்களாகின என் தேடலில்

அவிழ்க்கின்றேன் கனவினை எழுகின்றது அடித்தளம்
ஆசைகளைத் தெளித்து கற்களை அடுக்குகின்றேன்
உணர்வுகளின் துடிப்பினைச் சுமந்தவாறே நிமிர்கின்றது
அரை குறைகளுடன் கட்டிடச் சுவர்கள்
வெற்றுக் கைகள் முடிவுறுத்துகின்றனவோ கனவினை

முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தூண்கள்
முகவரிகளாகி முணுமுணுக்கின்றன சதைகளற்ற எலும்புக்கூடுகளாகி
கற்பனைகளுடன் பிசைகின்ற கனவு வீடு
வெறும் சொற்களாகிச் சிரிக்கின்றதே வரைபடத்தில்

வெயிற் பூக்களும் வெண்மதியும் நிறைவாக
மலர்கின்ற எழில் சுற்றுக்கட்டுத் தாழ்வாரமும்
காற்றின் விரல்களை இதமாகத் தடவுகின்ற
சாளரங்களையும் அமைத்திட ஆசைதனைக் கொண்டேன்

இயற்கைச் சுகத்தினை அறுத்திடாத ஆர்வம்
இறுக்கிப் பிடிக்கின்றது கூரைத் தெரிவில்
வெற்றாசைகள் தாங்குமோ காசின் எடைக்கே

கூரைக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன
கட்டியெழுப்பப்பட்ட பாதிச் சுவர்களைத் தாங்கியவாறு
குட்டித் தூண்கள் குற்றுயிர்களாகிக் கிடக்கின்றன
கட்டி முடிக்கப்படாத வீடும் அழுகின்றதே

கொட்டும் மழையும் நனைக்கின்ற போதெல்லாம்
வெட்டி விட முளைக்கின்ற பற்றைகள்
தொட்டுக் காட்டுகின்றதே பூச்சில்லாத தரையினை

உரிய பரிமாணச் செதுக்கல்களைத் தாங்கியவாறு
உருவாக்கப்பட்ட பெரிய அறைகள் இரண்டும்
பளிங்குகள் பதிக்கப்பட்ட விசாலத் தரையும்
அடக்கமான அழகிய குட்டிச் சமையலறை

வித விதமான வண்ணங்களைத் தாங்கியவாறு
உயிர்க்கின்ற எனக்கான இருப்பிட இல்லம்
வாய்த்துவிடக் கூடியதுதானோ வீடடையும் பேறு
இன்னும் முற்றுப்பெறாத வாழிடக் கூட்டினை
முழுமையாக நிறைக்கின்றன பெருமூச்சுக்களும் வறுமையும்

ஜன்ஸி கபூர் - 22.10.2020

கன்னமிரண்டும் கிள்ளாதே


விழிகள் நான்கும் பேசுகின்ற அன்பிலே/
விழுகின்றேனே நானும் உன்றன் மனதுள்/ 
விரல்கள் பேசிடும் மொழியில் மெல்ல/
விரிகின்றதே நாணமும் நனைகிறேன் நானுமே/
 
சொருகுகின்றாய் காந்தப் புன்னகையை நெஞ்சில்/
சொக்கி நிற்கின்றேனே நினைவுகளை வருடியே/
செதுக்குகிறேன் சொந்தமாக உன்னையே என்னில்/
சோகத்தை உதிர்க்கின்ற சுகமும் நீதானே/

கன்னமிரண்டும் கிள்ளாதே சிலிர்க்குதே உயிருமே/
கன்னியென்னை மூடுகின்றாய் உன்றன் நிழலாலே/
 
 ஜன்ஸி கபூர் - 25.10.2020

கடும் புனல்

 





 
ஒளி உமிழ்கின்ற ஒற்றை வெண்ணிலாவும்
கொட்டிக் கிடக்கின்ற நட்சத்திரக் கலவைகளும்
தென்றலின் வருடல் விரல்களும் எனக்குள்ளே
தனிமையை விரட்ட சூழ ஆரம்பிக்கின்றன

நள்ளிரவு நிசப்தத்தை கரைக்கின்ற உணர்வினை
மெல்ல அவிழ்க்கின்றது மெல்லிருட்டுக் கரங்கள்.
எட்டிப் பார்க்கின்ற பத்திரப்படுத்தப்பட்ட பசியின்
திணிப்பில் தேகம் திணறிக் கொண்டிருக்கின்றது.

வெறுமையைத் துடைக்கும் கடிகாரத்தின் புறுபுறுப்போடு
தனிமை கொஞ்சம் முரண்பட ஆரம்பிக்கின்றது 
பூமியின் உறக்கத்தில் விழிக்கின்ற துடிப்பில் 
நீள்கின்ற காத்திருப்பின் அலறல் ஆன்மாவுக்குள்

காற்றில் தீயூற்றும் இம்சைக்குள் எதிர்பார்ப்புக்கள்
ஏக்கத்தில் பிசையப்பட்ட மனதோ கசங்குகின்றது
எதிர் சுவற்றில் துணையுடன் பிணைகின்ற
பல்லியின் மோக முணங்கல் நாடியுடைக்கின்றது

எங்கோ நாயின் ஊளைச் சப்தம்
நள்ளிரவின் ஓட்டம் நாடித் துடிப்பினுள்
 
கதவு தட்டப்படுகிறது எதிரே ஆன்மா
நறுமணக் குவியலின் வீரியப் பார்வையில்
நாணம் கசக்கப்படுவது புரிந்தும் ரசிக்கின்றேனதை

உள்ளே மெல்லிய காற்று நுழைந்து
மோகப் பூக்களை பஞ்சணைக்குள் நிறைகின்றது
பசியை அவிழ்ப்பதற்கான அழகிய தருணமிது
இதழோரங்களில் பத்திரப்படுத்தப்படுகின்றது இதமான ஈரம்
அன்பின் விரல்கள் பிசைகின்ற ஆசைகளை
பரிமாறுகின்ற மடியும் ஏந்துகின்றது ஏக்கத்தினை

இருள் தன்னை மறைப்பதாக இல்லை
எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது இரகசியங்களை
இழுத்திப் போத்திக் கொண்டிருக்கின்ற ஆன்மாக்களை
இரசிக்கின்றது போலும் சிவக்கின்றது இராப்பசி
மயக்கத்தில் அப்பிக் கொண்ட காதல்
இன்னும் விடுவதாக இல்லை அணைக்கின்றது

விழிக்குள் துயிலினை ஊற்றாமல் துரத்தும்
ஏதோவொன்று என்னைப் பிழிந்தெடுக்க விழுகின்றது
பார்வையும் நிதர்சனத்தில்.....ஓ.......பிரமை

பற்றிக் கொள்கின்ற பனியின் விரல்களை
வேகமாக உதறுகின்றேன் மூச்சுக்குள் அனல்
வெளியே நிலாக்கீற்றின் பிரகாச வளையங்கள்
தவிப்புக்களின் பிழம்புகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன

ஆழ்மனதைப் புரட்டுகின்ற மலையின் ஓசை
இடிக்கின்றது உணர்வுகளை துடிக்கின்றது வலி

ஓவ்வொரு இரவும் விட்டுச் செல்கின்ற
எதிர்பார்ப்பின் வேட்கையில் மனம் தினமும்
புதிதாகவே உயிர்க்கின்றது விடியல் காணாது

மௌனமாக வடிந்தோடுகிறது இரவுத் துளிகள்
எண்ணுவதற்குள் ஒளிப்பிழம்பு தட்டியெழுப்பி
உளத்தில் ஊறும் தணல்பொறியினைச் சீண்டுகின்றது

ஜன்ஸி கபூர் - 17.10.2020'

 

நெல்லியும் உதிரும் கனிகளும்

யுத்தம் துப்பிய உதிரத்தின் சாயலில்

செம்மண் பரப்பிய கொல்லைப் புறம்

அங்கே காற்றை விரட்டிக் கொண்டிருந்தது

அகன்ற கிளைகளைக் கொண்ட வேம்பு

அசையும் இலைகள் குவிக்கின்ற நிழலுக்குள்

ஒடுங்கி நிற்கின்றது ஒற்றை நெல்லி


எல்லைச் சுவரை முட்டும் கொப்புக்களில்

உராய்வுக் கீறல்கள் எம் இரணங்களாய்

கொப்புக்களை உதைக்கின்ற கொத்துப் பூக்களும்

கொழுத்த குண்டுப் பழங்களின் அழகும்


கண்களை ஈர்த்து கைகளை உயர்த்துகின்றன

பழங்களின் சுவையில் நாவும் இனிக்கின்றதே

பழச்சுமையில் பாதி சாய்ந்து இருக்கின்ற

மரத்தினை தினமும் பார்க்கின்றேன் விருப்போடு


கனி உதிர்க்குமந்த சிறு நெல்லியில்

உப்பும் ஊற்றி காயைச் சுவைக்கையில்

அருகில் இருப்போர் உமிழ்நீர் சுரக்கின்றனர்.

சில பழங்கள் சீனிப் பாகினுள்

நாவுக்குள் தேனும் ஊறுகின்றது சுவையுடன்


தெருவோரம் எட்டிப் பார்க்கும் கொப்பெல்லாம்

கல்லெறிக் காயத்தினால் சிவந்திருக்கின்றன

ஒவ்வொன்றாய் பொறுக்கி பாதுகாக்கின்றேன் எனக்குள்

உதிரும் வலிக்குள் எனையே பொருத்துகின்றேன்


யுத்தத்தின் சத்தம் செவியைக் கிழிக்கின்றது

அந்நேரம் கொப்பும் தகரத்தில் உரசுகின்றது

எழுகின்ற சப்தத்தில் கலக்கின்றது அவலம்

வருந்தும் மனதின் பிம்பமாக நெல்லியும்

தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றது பதற்றத்தில்


நெல்லியின் நீளமான நிழலில் பதிக்கும்

என் தடங்களுக்குள் கொட்டுகின்றேன் துன்பத்தை

மரணத்தைப் பற்றியதான பேசுபொருள் அது

அணைத்த உறவுகளின் சிதைவுப் பிழம்புகள்

என் விழிநீராலும் அணைக்காத சுவாலையாய்

எரிந்து கொண்டிருக்கின்றது வெயிலின் இம்சைபோல்


விண்ணை உடைக்கின்றதோ இயந்திரப் பறவை

இரும்புச் சிறகுகளின் உரப்பான அதிர்வில்

தேகம் மட்டுமல்ல நெல்லியும் உதிர்க்கின்றன

முதுமைக்குள் போராடும் சில இலைகளை

தரைக்குள் மொய்க்கின்ற சருகுகளின் ஆக்கிரமிப்பும்

விமானத்தின் உறுமலில் சிதறி ஓடுகின்றன


விண்ணையும் மண்ணையும் பொசுக்குகின்ற தீப்பிழம்பும்

என்னில் அச்சத்தை விதைக்கவில்லை மாறாக

இறப்பையும் புறந்தள்ளி சுவைக்கின்றேன் கனியை

உறவாகித் தழுவுகின்றது வேப்பக் காற்றும்

துரத்துகின்றேன் வெயிலையும் எனைப் போர்த்தாமல்


வட்டமிடுகின்ற இயந்திரத் தும்பியும் பொம்பரும்

சகடையும் உரசுகின்றன ஒலியை உமிழ்ந்து

செவிப்பறையின் கிழிசலில் உயிரும் அலறுகின்றதே

அக்கணத்தில் தொலைத்த நிம்மதியைத் தேடுகின்றேன்


ஆன்மாவின் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் நிரம்புகின்ற

வலி இறுக்கிப் பிடிக்கின்றதே மேனியை

தசாப்தங்களைக் காலங்கள் புரட்டுகின்றன விரைவாக

அடையாளப்படுத்துகின்றன அடுத்த ஊர்கள் அகதிகளென

கழிகின்ற ஒவ்வொரு விநாடியும் கலியே

களிப்பினைத் தொலைக்கின்ற அந்தக் கணங்கள்

ஆயுள் வரை நீட்டுகின்றதே அக்கினியை


மின்சாரமும் மறந்து விட்டதே ஒளியூட்ட

குப்பி விளக்கின் தொடுகையிலும் சிரிக்கின்றதே

பவளமாக மின்னும் கற்றைக் கனிகளும்

காற்றை நனைக்கும் வேம்பின் இலைகளும்


தினமும் நெல்லிக்கனியில் தினக்குறிப்பு எழுதுகின்ற

என்னுள் விரக்தி நலம் விசாரிக்கின்றது

மூச்சேந்தும் ஒவ்வொரு நொடியும் தெளிக்கப்படுகின்ற

மரண அவஸ்தையினை நுகர்ந்தவாறே வாழ்கின்றேன்


என் சுவாசப் பாதையை நிரப்புகின்றது

நெல்லியின் சுவைக்குள் நனைந்த காற்று

அவ்வையும் சுவைத்த நெல்லி யன்றோ

என்றன் உயிரையும் சேதமின்றிக் காக்கின்றது

இன்றுவரை உணர்வுக்குள் விருட்சமாகின்றது அழிவின்றி

ஜன்ஸி கபூர்  09.10.2020

தூங்காதே தம்பி தூங்காதே

 

தூங்காதே தம்பி தூங்காதே நீயும்/
சோர்வினில் துன்பம் வாங்காதே வீணாய்/
சரித்திரத்தில் பதிவாகும் உன் பெயரெல்லாம்/
தரித்திரமாக மாறிப் போகுமடா தம்பி/

உன் குறட்டையால் அருகிருப்போர் உறக்கமிழப்பார்/
உறங்காத விழிகளின் சாபத்திலே நீயும்/
சுகமிழப்பாய் வீழ்த்திடுவாரே உன்னையும் கேலிக்குள்ளே/ 
சும்மா நீயும் தூங்காதே தம்பி/

வேலைத் தளத்திலே நீயும் உறங்கும்போது/
தொழிலை இழப்பாய் வறுமையும் தழுவும்/
போரினில் தூங்கினாலோ தேசம் பறிபோகும்/
பள்ளியிலே தூங்கினாலோ புள்ளிகள் இழப்பாய்/
 
விற்பனையில் தூங்கியவன் சொத்து இழந்தான்/
மேடையினில் உறங்கியவன் பேச்சும் இழந்தான்/
கடமையில் தூங்கியவன் தொழிலும் துறந்தான்/
தூக்கத்தை நேசிப்பவன் துக்கத்தில் விழுந்தான்/

உன்தன் தூக்கத்தால் பலமிழப்பாய் தினமும்/
நீண்ட உறக்கத்தில் கண்டிடுவாய் நோய்தனை/
கண்ட கண்ட நேரத் தூக்கத்தினாலே/
உன்றன் புகழும் பறிபோகுமே கண்முன்னாலே/

நீ விரும்பும் இந்தத் தூக்கத்தினால்/
உனைச் சாரந்தோரெல்லாம் பாவம் அப்பா/
தூங்காதே தம்பி இனித் தூங்காதே/
தூங்கிய பின்னர் தேம்பி அழாதே/

ஜன்ஸி கபூர்  - 11.10.2020



நெஞ்சு அலையுதடி

 

நெஞ்சுக்குள்ள அலையுதடி உன்னோட நினைப்புத்தான்/
கரும்பும் ஒளிக்குதடி உதட்டின் மொழிக்குள்ள/
கடலும் சுருளுதடி சின்ன விழிகளுக்குள்ள/
மனசும் துடிக்குதடி உன்னோட வாழந்திடவே/

காற்றிலே கரைக்கிறே வாசத்தை தினமும்/
காதலை ஊத்துறீயே தவிக்கிற உணர்வுக்குள்ளே/
மோதுறீயே விழியாலே வீழ்கிறேன்டி வலியின்றி/
தங்கச் சிற்பமே தழுவடி உயிர்ப்பேனடி/

கொட்டுற மழைக்குள்ள நனைகிறேன்டி நானும்/
வெட்டுற மின்னலாப் பூக்குறே அருகாக/
என்னைத் தொட்டுக்கொள்ளடி விரலும் வெட்கப்பட/
பனியைத் தூவுறீயே இரவும் குளிருதடி/

உன்னோட பாசம் மிதக்குதடி நிழலா/
விண்ணுக்கும் கேட்குதடி உன்பெயர் நிலவா/
ஆசைகளைப் பேசுகின்ற கனவுக்கும் தூக்கமில்லை/
அனலுக்குள்ள எரிகிறேன்டி தழுவடி பூந்தென்றலே/ 

ஜன்ஸி கபூர் - 9.11.2020
 

பச்சைப் பசுங்கிளி வாராய் வாராய்

 

 

தாவரச் சாற்றினில் வார்த்தெடுத்த எழில்/
சோளக்கதிர் மேனியும் அதில் பொருத்திய/
கருமுத்துக் கண்களும் நெட்டிலை வாலும்/
கண்களைக் கவருதே களிப்பினில் உளமாட/

காற்றை உதைத்தே சிறகை உயர்த்துகையில்/
மோதுகின்ற ஓளியும் தீண்டுவதில்லையோ மேனிதனை/
செம்மிளகாய்ப் பழத்தைக் கொத்துகையில் சிதைந்ததுவோ/
சிவப்பும் உன்றன் அலகை நிரப்பி/

நீள்வானில் கரைகின்ற வண்ணங்கள் ஏழும்/
வளையமாகி வீழ்கின்றதோ வட்டக் கழுத்தினில்/
கொலுசும் கொழுவியதோ உன் குரலுக்குள்/
வலித்திடாதோ வட்டக்கழுத்தும் வெட்டவெளிக்குள் பறக்கையில்/

ஓவியன் தூரிகையும் பாவலன் எழுதுகோலும்/
உணர்வுக்குள் உனையேற்றி கற்பனைக்குள் உருவேற்றுகையில் /
உலகமதைச் சுற்றுகின்றாய் உளங்களில் மகிழ்வேற்றி/
பணத்தோடு புகழும் சேர்த்திடும் உறவாகின்றாய்/

குறவன் கரமதில் குவிக்கின்றாய் பணமதை/
சொன்னதைச் சொல்லும் நற்கிளியே நீயும் /
இலவு காத்த கிளியென்றாகி எமக்குள்/
அனுபவங்கள் துளிர்த்திட தடமும் பதிக்கின்றாய்/

ஜன்ஸி கபூர் - 17.11.2020

 ---------------------------------------------------------------
இராஜபுத்திரன் கவிதைகள்
----------------------------------------------------------------
ஜன்ஸி கபூர்
முதற்கண் வணக்கங்க அக்கா ..
தாவரச் சாற்றில் வார்த்தெடுத்த எழில் .. வெண்மேகமாகும் நீர்போல வர்ணிக்க வார்த்தைதேடி முதல்வரியே பெருமழையாக பெய்கிறது .. சோளக்கதிர் மேனி கருமுத்து கண்கள் நெட்டிலை வால் பிரமாதம்.

சிறகு விரித்து பறக்கும்போது மேனி தீண்டும் கதிரவன் ஒளி சரண் அடைகிறது செம்மிளகாய் கொத்தும்போது .. அதுவே அலகின் வர்ணமும் ஆகிறது. அழகோ அழகு.

கொழுசும் கொழுவியதோ உன் குரலுக்குள் .. வலித்திடாதோ வட்டக்கழுத்தும் வெட்டவெளி பறக்கையிலே ...

Kesavadhas ஐயா நீங்களே சொல்லுங்கள். எனக்கு கழுத்து வலிக்கிறது. இவ்வளவு அழகாக எழுத Meera Shree அம்மா அவர்களது குழுமம் நமக்கெல்லாம் உற்றதுணையாக கருத்துச்செறிவாக கவிதைகள் தேடித்தருகிறது. இவ்விடம் குழுமத்தார் கவியுறவுகள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கூறிக்கொள்கிறேன்.

ஓவியன் தூரிகையும் பாவலன் எழுதுகோலும் பாவேந்தர் குரலுக்கு உயிர்தருகின்றன.  அன்பு வாழ்த்துகள்
 

காத்து நிற்கின்றேன்




மூடப்பட்ட அறை இருட்டின் முடிச்சு
இறுக்குகின்றது என் பத்திரப்படுத்தப்பட்ட மூச்சினை 
உடைகின்ற உணர்வுகளால் தடுமாறுகின்றேன் அச்சத்துக்குள்
என்னைச் சிறைப்படுத்தியிருக்கின்ற இயலாமையின் விரல்களை
நானும் விடுவதாக இல்லை பற்றுகின்றேன்

வெளியே மழை மண்ணைத் தோண்டுகின்றது
இடியின் குரல் துடிக்கின்றது அதிர்வுடன்
போர்வைக்குள் ஒளிந்து துரத்துகின்றேன் மின்னலையும்
நனையாமல் மனதையும் பத்திரப்படுத்துகின்றேன் ஆடைக்குள்

காற்று வாசலை மெல்லத் தட்டுகின்றது
தொற்றுக்களைக் கொட்டி விடுமோ சுவாசத்துக்குள்
சன்னல் துளைகளை மறைக்கின்றேன் அவசரமாக
முணுமுணுக்கின்றன உடம்பின் வியர்வைத்துளிகள் இருந்தும்
புழுதியையும் தும்மலையும் புறந்தள்ளுகின்ற திருப்தி

யார் யாரோ புத்தகங்களை எழுதுகிறார்கள்
அவற்றால் என் வாசிப்பறையும் நிரம்புகின்றது 
படித்துக் களைத்ததில் மங்கிய பார்வைக்குள்
எட்டிப் பார்க்கின்றது ஞானமற்ற அறிவு
வரிகளால் மெருகூட்டப்படாத சிந்தனை கண்டு
என் தலையணையும் ஏற்பதில்லை புத்தகங்களை

ஆசைக்குள் ஒதுங்கிக் கொண்ட மனது
காதலை மெல்லத் தொட்டுப் பார்க்கின்றது
நாடிய காதலிக்காக நாடித்துடிப்பும் அதிகமாகின்றது
ஆனாலும் மறைந்து கொள்கின்றேன் கதவுக்குள்
சாவித் துவாரத்தினுள் தெரிகின்றாள் அவளும்
அவளோடு உரசிச் செல்கின்ற அந்தத் துணையும் 
அடுத்தவர்களுக்காக என்னை அடக்கி அடக்கியே
சுமையொன்றை உயிருக்குள் இறக்கி வைக்கின்றேன்

ஓவ்வொரு நொடியும் பிழிகின்ற அவஸ்தைகள்
மரணத்துக்குள் பதுங்கப் பேரலையாகத் திரள்கின்றன
இருந்தும் சாவின் அனுபவங்களைப் பகிர்வதற்காக
இன்னுமொரு சாவுக்காகக் காத்திருக்கின்றேன் நானும்

ஜன்ஸி கபூர் - 21.11.2020

 
Kesavadhas
 
ஜன்ஸி கபூர் எந்தவொரு விளையாட்டையும் அதற்கென வழங்கப் பட்ட அரங்கில் அந்த விளையாட்டிற்குரிய விதிகளின் படி விளையாட வேண்டும்!!
இங்கு நவீன கவிதைதான் அரங்கு!
கொடுக்கப்பட்ட சான்று கவிதைதான் விளையாட்டு!
விதிகளின் படி தன்திறமையைக் காட்டி விளையாடுவது கவிஞரின் திறமை!
இதை எதற்கு சொல்கிறேன் எனில் அதைப் போலவே தன்தனித்தன்மை மாறாது கவிதை எழுதுவதில் இவர் வித்தகர்!
இந்த கவிதையும் விதிவிலக்கு அல்ல!
சான்றுக் கவிதைக் காட்டிய அச்சம் தயக்கம் துணிவின்மை
அதனால் எழும் வேதனை இவ்வுணர்வுகளை இக்கவிதையும் மிகத்துல்லியமாக வழியவழியக் காட்டுகிறது!
ஒவ்வொரு நொடியும்.... நானும்'
வரையுள்ள வரிகள் மனுஷ்யபுத்திரன் கவிதைவரிகளை ஞாபகப் படுத்துகிறது!
மனுஷ்ய புத்திரன் உலகளவில் கொண்டாடப்படும் நவீன கவிதை எழுத்தாளர்கள் வரிசையில் முன்னிருக்கைகளில் இருக்கும் கவிஞர்களில் ஒருவர்!
வாழ்த்துகள் கவிஞரே!

மழைக்காலம்

 

கார்மேகப் பொழிவினைக் கவிபாடும் கவிமணி/
சேர்க்கின்றார் உள்ளமதில் மழைப்பொழிவின் மகிழ்வினை/
வியர்வையை ஒற்றியெடுக்கும் முத்துக்களின் பேரணியால்/
விளைகின்றதே விளைச்சலும் விசாலமான பூமிக்குள்/

காற்றினில் கலைந்தோடும் கார் மேகங்கள்/  
பற்றிப் பிடிக்கின்றனவே வேர்களெனும் மின்னலைத்தான்/
வானும் குவித்த சாம்பர் மேடெல்லாம்/
கரைந்தே யூற்றுகின்றதே வறட்சியும் குறைந்திடவே/

மலர்க் கண்ணாய் மகிழ்ந்திடும் நீர்த்துளிதானே/
மனங் குளிர தடவுகின்றதே ஈரத்தை/ 
மழையும் வள்ளலாகி ஏரிக்குள் இறங்கிட/
அசையுதே நீரோட்டம் தாராக்களும் நீராடவே/ 

விரிந்திருக்கின்ற ஆகாயமும் உதிர்க்கின்ற ஊசிகள்/
துளைக்கின்றதோ நிழல்களை விலகுதே பொற்கதிர்கள்/ 
கள்ளமில்லாப் பெருமழையில் உள்ளமும் நனைகையில்/
வீட்டினுள் இருந்திடவே மனமது இசைந்திடுமோ/

மண்ணில் சிதறுகின்ற நுரைப் பூக்களை/
எண்ணாமல் எடுத்தே தேகம் சூட்டுகையிலே/
கண்ணோரமும் வியர்க்கின்றதே தேன்துளிகள் பட்டு/
இன்பத்தின் துளிர்ப்பில் கலக்கின்றதே மண்வாசமும்/

துடிக்கின்ற அலை நடுவே அசைந்திடும்/
துடுப்பினையும் விரட்டுதே விசாலக் காற்றும்/
இடுக்கண் கலைத்திடாமல் புயலும் மோதுகையில்/
புன்னகைக்குள் நசிகின்றதே கண்ணீரின் ஈரமும்/

நெஞ்சில் மோதுகின்ற மழைத் தோரணங்களை/
கொஞ்சி மகிழுதே வனத்தின் வண்டுகளே/
அஞ்சிடாமலே அணைக்கிறதே ஆற்றின் கரங்களும்/
பாய்ந்தோடுதே பவள மீன்களும் தாராளமாக/

வானீரம் சிந்தும் பசுமை நேசம்/
வருடுமே மண்ணையும் உள்ளமும் குளிர்ந்திடவே/
உயர்ந்த வானும் குவித்திடும் மழையும்/
குன்றாச் செல்வமே என்றும் எமக்கே/

ஜன்ஸி கபூர் - 24.11.2020
 

காண்டலின் உண்டு என்னுயிர்

 


அன்பினை அணிந்தே அகமகிழ்ந்த காதலின்/
அற்புதச் சுவையினில் நனைந்திட்ட இதயங்கள்/
இறக்கை விரிக்கின்ற இன்பவெளிக் கூடலும்/
இடைக்கிடையே அமிழ்கின்றனவே பிரிவுத் துயரினில்/

பொருளீட்டும் துடிப்பினில் பொன்மகன் காந்தனும்/
நகர்ந்திடுவான் நகர்களுக்கே நங்கையவளும் கரைந்திட/
கனவின் இதழ்களுக்குள் காளையவனைப் பூட்டிடவே/
நாடித்துடிப்பினில் ஏக்கம் நட்டே காத்திருப்பாள்/

பிரிவின் வலிக்குள்ளும் பிரிந்திடாக் காதல்/
பிரகாசம் கண்டே பிரிய தோழியும்/
மொழிகின்றாள் தலைவியிடம் பொலிவிற்கான காரணத்தை/
தழுவுகின்ற காதலவன் தவிப்பைப் போக்கிடும்/
வழிதனை வஞ்சியவள் கோர்க்கின்றாள் வார்த்தைகளில்/

நனவில் இன்பம் நல்கா காதலன்/
கனவில் பதிக்கின்றான் தன் முகமதை/
கனவின் உயிர்ப்பில் துளிர்க்கின்றதே உடலும்/
என்னுயிர் இவனென எழுதிடும் வாழ்வினை/
கனவது பகிர்கின்றதே இரவின் தரிசனத்தில்/
காண்டல் இல்லையெனில் மாண்டழியுமே உயிர்/
என்றுரைத்தாள் தலைவியும் தோழியும் புரிந்திடவே/

ஜன்ஸி கபூர் - 12.11.2020

மேகங்களோடு

 

சிறகுகளை உதிர்த்தவாறே நகர்கின்ற மேகங்களை
தன் விரல்களால் வருடிக்கொள்கின்றது வானம்
காற்றின் முடிச்சுக்களால் சிறைப்பட்டிருக்கின்ற மேகத்தினை
தன் இதழ்களால் அவிழ்ப்பது சுகம்தான்போலும்
வான் துளைகளுக்குள் தம் முத்தங்களை
நிரப்பியவாறு பயணிக்கின்ற பஞ்சு மேனிதனை
தன் இதழ்களால் ஈரப்படுத்துகின்றது வானும்
காதலின்பத்தின் இதம் வரையத் தொடங்குகின்றது
மேகங்களுக்கும் வானுக்குமிடையிலான அற்புதக் காதலை

கீற்றுமின்னலெனும் மாங்கல்யமும் முழங்குகின்ற இசையும்
வானுக்கும் மேகத்திற்குமான உறவுநிலையை வெளிப்படுத்தும்போது
மேகங்கள் தன்னைக் கருங்கூந்தலுக்குள் ஒளித்தே
மொய்க்கின்ற நாணத்துக்குள் நனைந்து அலைகின்றன

வானும் விடுவதாக இல்லை துரத்துகின்றது
வெவ்வேறு திசைகளில் கலைந்தோடுகின்றன அவை
மகிழ்வின் சிதறல்கள் ஆங்காங்கே அப்பிக்கொள்கின்றன
பொன்னிறத்தூறல்களின் சங்கமத்தில் இசைகின்றது இயற்கையும்

பூமிக்கும் வானுக்கும் இடையிலான வெளிதனில்
தொங்கிக்கொண்டே சென்றாலும் விழுவதாக இல்லை
ஈர்ப்பின் இரகசியம் இயற்கையின் இசைவாக்கம்
நிலத்தின் வரைகோடுகளையும் சலனமற்ற குளங்களையும்
அவை கடந்து செல்கையில் இணைகின்றன
உயிர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களின் திரட்சிகளும்
கண்ணீர்ப் பாறைகளின் வெடிப்பொலிச் சப்தங்களும்

மேகங்கள் நகர்வை நிறுத்துகின்றன நிதானத்துடன்
கீழே எட்டிப் பார்க்கின்றன கவலையுடன்
கருகிய வயல்களின் சாம்பல் மேடுகள்
ஒட்டியுலர்ந்த தேகங்களின் கூக்குரல்களின் தரிசனங்கள்

பேரன்பு கொண்ட மேகங்களைத் தீண்டுகின்றது
இருண்ட விழிகளில் வெடிக்கின்றது அழுகை
அவற்றின் ஈரம் தரையைப் போர்த்துகின்ற
ஆடையாக மாறத் தொடங்குகின்றது பேரிரைச்சலுடன்

விண்ணை நோக்கியதாக வீழ்கிறது என்பார்வை  
மேகங்களின் கண்ணீர் தெறிக்கின்றது கன்னங்களில்

ஜன்ஸி கபூர் - 6.11.2020
--------------------------------------------------------------- 
 Kesavadhas
--------------------------------------------------------------- 
ஜன்ஸி கபூர் சிறகுகளை உதிர்த்தவாறே
நகரும் மேகங்கள்
விரல்களால் வருடும் வானம்
காற்றின் முடிச்சுகளால் சிறைப்பட்டிருந்த மேகம் தன் இதழ்களால் அவிழ்க்கிறதாம் வானம்
வான்துளைகளுக்குள் தன்முத்தங்களால் நிரப்புகிறதான் மேகம்
பயணிக்கும் மேகங்களை வானும் தன்னிதழ்களால் ஈரப்படுத்துகிறது வானம்!
இஃது வானமும் மேகமும் கொண்ட காதலின்பம்!

இதுதான் நவீன கவிதை!

இயல்பான நிகழ்வுகளின் மீது இயல்பான கற்பனை உணர்வுகள்!
தோற்ற மெய்ப்பாடுகள்!
கீற்றுமின்னல் முழக்கும் இசை மங்களகரமாக ஒலிக்கிறது
நாணி மேகங்கள் தம்மை கருங்கூந்தலுக்குள் ஒளித்து மொய்க்கும் நாணத்துடன் நனைந்து அலைகின்றன!

பூமிக்கும் வானுக்குமிடையிலான அந்தரிக்ஷத்தில் தொங்கிக் கொண்டிருப்பினும் விழுவதில்லை மேகம்!
ஈர்ப்பின் காந்தமது!

மேகங்களுக்காக பொழிவிற்காக ஏங்கும் உயிர்களை சலனமற்ற குளங்களை நிலத்தின் வரை கோடுகளை கடந்து செல்கையில் இந்தவரிகளில் மேகங்களின் மீதான ஜீவன்களின் காதலை உணர முடிகிறது!

இது ஒரு வித்தியாசமான அனுபவ விவரிக்கை!

கவலையுடன் எட்டிப் பார்க்கும் மேகங்கள்!
கருகிய வயல்களின் சாம்பல் மேடுகள்!
ஒட்டியுலர்ந்த தேகங்களின் கூக்குரல்களின் தரிசனங்கள்!
மனிதர் விலங்குகள் பறவைகளுக்கு தொண்டையிலிருந்து கூக்குரல் எழும்பும்!
இங்கே கருகிய வயல்களும் வறண்ட குளங்களும் தேகங்களின் முழுமையால் கூக்குரலிடுகின்றன!
இயல்பு நவிற்சி உயர்வு நவிற்சி யாகி வித்தியாசமாக மிகவும் அற்புதமாக ஒலிக்கிறது!
நல்லதொரு கவிமழையில் நனைந்தெழுந்தேன்!
வாழ்த்துகள் கவிஞரே!

 

வாசிக்க வழிதேடு

 

வறுமைச் சுழியில்  வாழ்கின்ற மானிடர்க்கும்/
விழிக்கனாக்களின் ஏக்கமாக  வீழ்கின்றதே பெருஞ்செல்வம்/
துரத்தும் துன்பங்கள் நம்மை வருத்திடும்போது/
தரிக்கின்ற  பெருநிழலாய் நமக்கிங்கே கல்விக்கரை/
                                                                        
வாழ்வியலின் பண்பாடு வாசிப்பின் மேம்பாடு/
வாழ்கின்ற வாழ்வினில் வழிகாட்டுமே நூலறிவு/
வாட்டிடும் அறியாமையை விரட்டிடும் உலகறிவும்/
வனப்பாகும் நம்மாற்றல் வாசிப்போம் பூரணமடைய/

யாசித்து வாழ்ந்தாலும் போற்றுகின்ற வாசிப்பால்/
நேசிக்குமே நல்லுலகும் நெருங்கிடும் வல்லமையும்/

உதரப் பசி உறுத்தும் போதிலும்/
உணர்வின் தாகமும் தீர்க்குமே நற்புத்தகங்கள்/
குப்பிவிளக்கின் ஒளிர்வுக்குள் குடியிருந்த மேதைகள்/
குவலயத்தின் வரலாறும் மறந்திடாச் செல்வங்கள்/

அறிவுத் தாகமெடுத்தால் அடங்கிடுமோ தேடற்பசியும்/
அண்டத்தைப் பிளக்கும் விஞ்ஞானமும் விருப்பாகும்/
எண்ணத்தின் வார்ப்பினை எழுதிடும் விரல்களும்/
ஏற்றிடும் கற்பனைகள் எழிலாகும் காவியங்களாய்/
                                                                              
பெற்றிடும் அறிவு போக்கிடும் துயரை/
போற்றிடும் அகிலம் ஏற்றிடுவோம் நலன்களை/
தற்றுணிவும் தன்னம்பிக்கையும் தன்னையாள வலுவாகும்/
தன்னிகரில்லாச் செல்வமும் தடமாகும் தரிசனத்தில்/

எதிர்காலம் சிறந்திட எமக்கான அடையாளம்/
எக்காலமும் நம்மைத் தொடர்கின்ற கல்வியே/

ஜன்ஸி கபூர் - 02.11.2020

உயிரின் ஒலியா


 

நுதலும் இதழும் அழகாகப் பிணைந்தே

நுகர்கின்றதே விழிகளும் காதலைச் சுகமாக

இதய மகிழ்வில் இசையும் அன்பும்

இறக்கை விரிக்கும் உயிரினை வருடி


அணைப்பில் தழுவும்ஆனந்தச் சிலிர்ப்பு

அடங்குமோ காற்றும் விலக்கா நெருக்கமிது

உயிரின் ஒலியினில் உணர்வின் துடிப்புக்கள்

உவகை மனங்களின் உல்லாசத் தூறல்கள்


சங்கமிக்கும் ஆசைகள்வரைந்திடும் கோலங்கள்

சந்திக்கத் துடிக்கின்றனவோ மங்கல மேடைதனில்


ஜன்ஸி கபூர் - 01.11.2020


காதலெனும் நதியினிலே

 

காதலெனும் நதியினிலே 
காத்திருந்தேன் தவிப்புடனே/
காலமெல்லாம் களித்திருக்க 
கனிந்திருக்கே அன்புதானே/

பருவத்தின் துடிப்பினிலே 
படருதே ஆசைகளே/
இருவரும் படகுகளாய் 
இனிமைக்குள் உலாவவே/

வெண்பனியாய் மூடுகின்ற
உன்றன் தழுவலுக்குள்/
வெட்கம் விரித்தே 
சாய்கிறேன் மெதுவாக/

கனவுக்குள்ளும் மிதக்கிறே 
நினைவாகிப்  பூக்கிறே/
நனவுக்குள்ளும் சிரிக்கிறே 
நிழல்கூட நடக்கிறே/

இல்லறக் கரையினில் 
இன்பமாக ஒதுங்குகையில்/
இழுக்கிறே வம்புக்குள்ளே 
இதயமதைக் கொஞ்சித்தானே/

உணர்வுகள் ஊஞ்சலாட 
உயிரும் வருட /
உள்ளத்தின் அசைவுக்குள்ளே 
உறவாகி வாழுறே/

ஜன்ஸி கபூர் - 15.11.2020   

முதியோர் இல்லம்


 
அற்புதமான மனித வாழ்வானது ஒவ்வொரு பருவங்களையும் கடந்தே செல்கின்றது. மனிதனது வாழ்க்கைப் பயணத்தில் அதிக அனுபவங்களைக் கொண்டதாக முதியோர் பருவமானது காணப்படுகின்றது. உடலும் மனமும் குழந்தைபோல் மென்மையாகி விடுகின்றது.

விரைவான காலவோட்டமானது இளமையைக் கரைக்கின்றது. சுருங்கிய தளர்ந்த தேகம் இயக்கம் குன்றிய ஐம்புலன்கள் என நகருகின்ற ஒவ்வொரு நொடிகளும் மரணத்தை எதிர்பார்த்து தன்னை முதுமை இல்லத்தினுள் ஒதுக்கி விடுகின்றது.

பாசத்தால் உணர்வூட்டி வளர்த்த பிள்ளைகள் தாம் வளர்ந்ததும் தம்மை வளர்த்த பெற்றோரை அநாதரவாகக் கைவிடும் அவலத்தினால் ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் முளைக்கின்றன. உறவுகளால் சூழ்ந்து களித்திருக்க வேண்டிய மனம் தனிமைக்குள் வருந்துகின்றது. தன்னைப் பராமரிக்க தன் உதிர உறவு அருகில்லையே எனும் ஏக்கத்தில் வேதனை தினம் கொப்பளிக்கின்றது.

உடன் வாழ்ந்த துணை பிரிந்த பின்னர் ஆதரவுடன் அணைக்க வேண்டிய பிள்ளைகள் தம் வாழ்வைப் பேணியபடி பெற்றோரை யாரோ ஒருவராக எண்ணி இம்சிக்கும்போது அவர்களைத் தாங்குவதற்காக அன்போடு வாசலைத் திறக்கின்றது முதுமை இல்லம்.

பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களை பரிவோடு அணைத்து அன்புடன் அவர்களைக் கவனிக்கின்ற பல சேவையாளர்களைக் கொண்டதாக இம்முதியோர் முகாம் காணப்பட்டாலும் கூட வாழ்ந்த உறவுகளின் வெற்றிடங்களை அச்சேவையாளர்கள் நிரப்புவார்களாக.

முதுமை இல்லமெனும்; கட்டிடச் சுவர்களுக்குள் வாழ்கின்ற ஒவ்வொரு உள்ளங்களும் அன்பைத் தேடுகின்றன. இறந்தகால நிழல்களை மீட்டிப் பார்த்தே எஞ்சிய காலங்களை வாழ்ந்திடத் துடிக்கின்றன.

கைவிட்டுப் போன உறவுகளால் வழிகின்ற கண்ணீர்த்துளிகளால் அம்முதியோர் இல்லம் நனைந்து கொண்டேயிருக்கின்றது. பிடித்த வாழ்வைத் தொலைத்துவிட்டு பிடிக்காத உலகத்தில் வாழ்கின்ற அப்பெரியோர்களின் உணர்வுப் போராட்டங்களின் அடையாளமாகவே இம்முதியோர் இல்லம் காணப்படுகின்றது.

ஜன்ஸி கபூர்

ஆண்-பெண்கள்

 

 
ஓர் குடும்பத்தின் கட்டமைப்பை நிர்வகிக்கும் பாரிய பொறுப்பை பெண்கள் சுமக்கின்றார்கள்.அவளுக்குக் கிடைக்கின்ற ஓய்வும் மிகக் குறைவே. அக்குறைந்த  ஓய்வுக்குள்ளும் நேரத்தைத் திட்டமிட்டு தம் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இலக்கிய கலையுலகில் தடத்தினைப் பதித்து முகநூல்க் குழுமங்களில் முன்னணி வகிக்கின்றார்கள் பெண்கள். ஆனாலும் இந்நிலையை எய்த அவர்கள் பல சவால்களை ஏற்க வேண்டியுள்ளது. ஆணாதிக்கச் சிந்தனையுடைய சிலர் விமர்சனம் எனும் பெயரில் அவளது ஆற்றலை ஆசைகளைக் கிள்ளியெறியத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  முகநூல் என்பது சர்வதேசத்தை தனது கரங்களுக்குள் அடங்கியிருக்கின்ற குழுமம் என்பதால் அவளின் கருத்துக்களை வெவ்வேறு திசைகளில் பரப்பிவிட சில குடும்ப உறவுகளும் தடையாக இருக்கின்றன. இருந்தும் இத்தடைகளையும் கடந்தே பெண்களின் கலைப் பயணம் முன்னணியில் திகழ்கின்றது என்பதே உண்மையாகும்.

இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். பெண்கள் ஆண்களின் தடைகளைத் தாண்டியே தமது ஆற்றலை வெளிப்படுத்துகின்றார். பெண்ணின் கலை வளர்ச்சி உச்சம் அடைகின்ற பட்சத்தில் ஆண்கள் மௌனம் சாதிக்கின்றார்கள். இத்தகைய ஆண்கள் இல்லாதபட்சத்திலும் பெண்களின் தன்னம்பிக்கை அவளைத் தனித்து இயங்கச் செய்யும். ஆண்களின்றி அவர்களால் சுயமாகப் பயணிக்க முடியும்.

 ஆண்களின் அனுமதியைப் பெற்றுத்தான் பெண்கள் இயங்க வேண்டுமென்றால் பெண்களை முகநூலில் காணவே முடியாது. ஆண்களின் தடைகளையும் இலகுவாகக் கடக்கின்ற சாமர்த்தியம் பெண்களுக்கு உண்டு.

 நிறைய பெண்கள் எழுதுகின்றார்கள். போட்டி நடத்துனர்களுக்கு இது தெரியும். ஆனால் வெற்றி வாய்ப்புக்கள் அனுபவமுள்ள ஆண்களுக்குப் போய் விடுகின்றன போலும். இதுதான் உங்கள் கருத்துக் கணிப்பிற்கான விளக்கம்

ஜன்ஸி கபூர் - 7.11.2020

இரத்த தானம்

 

 
இவ்வுலகில் அறிவெனும் ஆறாம் விரலினூடாக முழு உலகையும் தனது சிந்திக்கும் ஆற்றல் மூலம் இயக்கிக் கொண்டிருக்கும் மனித உடலின் கட்டமைப்புக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணங்களும் விந்தைமிகு இறைவனின் படைப்பின் நுட்பம் ஆச்சரியப்படுத்துகின்றது.

தனது கைமுஷ்டியின் அளவு இதயத்தைப் படைத்து, அதன் மூலமாக இரத்தத்தை உடல் முழுதும் பாய்ந்தோடச் செய்து, உயிர்வாழ்விற்கான தகுதியை வழங்குவதற்காக குருதிச்சுற்றோட்டத் தொகுதியுடன் தொடர்புபட்டதாக ஏனைய கட்டமைப்புத் தொகுதிகளையும் அமைத்து மனிதனை உயிர்வாழச் செய்யும் இறைவனின் ஆற்றல் அபாரிதம்.

இரத்தம் என்பது மனிதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான பாயம். அத்தகைய இரத்தத்தை தேவை கருதி தானம் செய்வதே மிகச் சிறந்த தானமாகும்.

தற்காலத்தில் நவீனம் எனும் போர்வைக்குள் வாழப் பழகிக் கொண்ட மனிதன், தனது இயந்திரத் தன்மையான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும்போது, விபரீதமான முறையில் ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றான். விபத்துக்கள் மற்றும் சில நோய் நிலைமைகளின் போது இரத்தத்தின் பயன்பாடு மருத்துவ உலகத்திற்கு தேவைப்படுகின்றது. எனவே இவ்வாறான அவசரமான நேரங்களை எதிர்கொள்ளும்போது இரத்த வங்கி அல்லது இருப்பில் போதிய அளவு இல்லாவிடில் உயிரிழப்பு ஏற்படுகின்றது. இத்தகைய உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு இரத்த தானமெனும் உயரிய கொடையை வழங்க ஒவ்வொருவரும் முன்வரல் வேண்டும்.

சாதி, மத, குல வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படக்கூடிய இரத்தத்துளிகள் சமத்துவத்திற்கான ஓர் அடையாளமாகும்.

ஏற்றத்தாழ்வுகள் நீங்கி அனைவரும் இத்தானத்திற்கான பங்காளர்களாக முன்வரல் வேண்டும். நாம் இரத்ததானம் செய்யும்போது நமது உடலிலுள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிப்பதனால் நமது உடலும் ஆரோக்கியம் பெறுகின்றது. ஆபத்திலிருந்து அடுத்தவரைக் காப்பாற்றியிருக்கின்றோம் எனும் உணர்வு நம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும்போது நமக்குள் ஏற்படுகின்ற மனத்திருப்தி நமது மன ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகின்றது.

நாம் தானமாக வழங்குகின்ற ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அடுத்தவரின் ஆயுள் அதிகரிக்கப்படுகின்றது.

"இரத்தம் வழங்கும் மனிதமுள்ள மனிதர்களாக நாம் நம்மை மாற்றிக் கொள்வோமாக"

ஜன்ஸி கபூர் - 18.11.2020