About Me

2012/08/04

மயக்கம்


தொலைவின்................
நிசப்த நெருடலில் - தன்
ஒளி விரல்களால் எனை வருடும்
நிலாக்கசிவில்.........
அலைந்து கொண்டிருக்கின்றது
மங்கலாய் உன் முகம்!

அன்றுன்னால்............
அழுகிப் போன - என்
கருவளையங்களின் மூச்சிரைப்பில்
மீண்டுமுன்............
ஆத்மாவின் முனகல்
ரகஸியம் பேசுகின்றது!

எல்லாமே நேற்றுப் போலிருக்கின்றது
உன்னிடம் தோற்றுப் போன
என் அன்பும்...........
கரைந்து போன கன்னமும்.........
கனவாகிப் போன நிஜங்களும்.........
எல்லாமே தோற்றுப் போய் !

எதுவுமேயில்லை என்னிடம்
இப்போது............!
நீ தந்த சோகங்களும்
காயங்களும்
அவமானங்களும் தவிர!

என் உயிரணுக்களைப் பிழிந்து
நீயிட்ட தீ..........
இன்னும் வெம்மைக் கசிவோடு
நசிந்து கொண்டுதானிருக்கின்றது
இன்னொரு ஆதவனாய்!

உன் மனதோரத்தில்
மரித்துக்கிடந்த என் ஞாபகங்கள்
மீண்டும் உயிர்த்தனவோ
உன்னுள்!
மெல்லக் கதவைத் தட்டுகின்றாய்
என்னுள் - ஆனால்
நான் மரணித்ததையறியாமலே!

அன்றுன் சுயத்திற்காய்- என்
சுயவரக் கனவுகளில்
முட்கீரீடம் வார்த்தவுன்
கரங்கள்...........
மீண்டுமென் திசைநோக்கி
அணைக்கத் துடிக்கின்றன
அப்பாவித்தனமாய்!

உன்னால்
எனக்குச் சொந்தமாகிப் போன
சமுத்திரமும்...........
பாலை நிலங்களும்
எனைப் பரிதாபமாய் பார்க்க
நீயோ
புறப்பட்டுவிட்டாய்- என்
சாலைகளில் உலா வர!

ஜன்ஸி கபூர் 










2012/08/03

என்றும் நேசத்துடன்


முகநூலில் நான் கலைப் பயணம் மேற் கொள்ள, நீங்களும் தடமாகியுள்ளீர்கள் என்பதை நன்றியுடன் நினைவுகூறுகின்றேன். என் பதிவுகளுக்கு விருப்புக்களும், பின்னூட்டங்களும் தந்துள்ள உங்களுக்கு என் நன்றி.......என்றும்


முத்து சதீஷ் குமார்


மலீக்  Sfn ***



சீனா ஷரீப் ***



உதயதர்சினி குமார் ***




பிரதீபன் ஸ்ரீனிவாசன் ***



செல்வ குமாரன் ***




Rasna Sajith



Selvi Maran



MJ Rita Raj ***





Fazaan Abdul ***



Siman  Tg




Jaffna Menan ***


Shiyam Sahana ***
Sree Dhandapani
 Mohamed Gani






இறைவனிடம் கையேந்துவோம்


புகழ் அனைத்தும் அவன் ஒருவனுக்கே!

மனித இனத்தை அற்புதமாகப் படைத்து அருள் பரிபாலிப்பவன் இறைவன் ஒருவனே. எமக்குரிய அழகிய வாழ்க்கையை , வாழ்வின் ஒழுக்க நெறிகளை அழகாக கற்றுத் தந்தவனும், கற்றுத் தருபவனும் அவனே!

நம்மைப் படைத்து நமது செயல்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் அவனே, நம் எண்ணங்களை அளந்தும், அடையாளமிட்டும் அதற்கேற்ற கூலியைத் தருபவனாக இருக்கின்றான்.

இம்மை, மறுமையின் விளைநிலம். எனவே நாம் செய்கின்ற செயல்கள் இவ்வுலகத்துடன் முற்றுப் பெறாமல், மறுமைக்கான நிகழ்வுகளின் அடித்தளமாகவும் இருக்கின்றது. மறுமை நமது நிம்மதி கூடமாக இருக்க வேண்டுமானால் இம்மையில் நாம் செய்யும் நமது செயல்கள் யாவும் இறைவனின் அருளைப் பெற்றுத் தருபவையாக இருக்க வேண்டும். அந்த வகையில் இறைவனுடன் நாம் நேரடியாகப் பேசவும், அருளையும், இறை மன்னிப்பையும் பெற்றுத் தரக்கூடியதுமான  மாதமாக ரமழான் மாதமிருக்கின்றது.

இம் மாதத்தில் ஒருவர் நோன்பிருப்பது இறைவனுக்காகவே. அந்த நோன்பினூடாகவே இறைவன் தன் அடியார்களுடன் நெருக்கமாகின்றான் .நமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இறைவன் நோன்பை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளான்.

அல்லாஹ் முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக நபி (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள்.

"ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும், நடுப்பத்து நாட்கள்  மக்ஃ  பிரத் எனும் பாவ மன்னிப்புக்குரியதாகவும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக்க;டியதாகவும் உள்ளது "

என நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக  நூல் இப்னு குஜைமா வை ஆதாரப்படுத்தி ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நாம் நமது வாழ்வில் பல நல்ல செயல்களைச் செய்யவே முயற்சிக்கின்றோம். ஊக்கப்படுத்தப்படுகின்றோம்.  எனினும் நமது தேவைகளை நிறைவேற்ற நாம் முற்படும் போது நம்மையுமறியாமல் பலஹீன நுழைவாயினுள் தள்ளப்படுகின்றோம். சுயநலம் என்பதும் ஓர் பலஹீனமான உணர்வே. ஏனெனில் சுயநலத்தின் பொருட்டு நமது உளம் உறுதியற்று தளம்பலடைந்து பிறருடன் முரண்படக்கூடிய, பாவம் தரக்கூடிய செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றது. நாம் ஒருபுறம் இறையருளை நாடி நற்செயல்களிலீடுபட்டுக் கொண்டிருக்க மறுபுறம் நம்மையமறியாமல் சில பாவங்களையும் தொட்டு விடுகின்றோம். பொய் பேசுதல், புறங் கூறுதல், விரோதம் கொள்ளுதல், பொறாமைப்படல், களவெடுத்தல் போன்ற உணர்வுகள் கூட பாவத்திற்கான சமிக்ஞ ஆகும்.

எனவே எம்மை நாம் உணர்ந்து, எமது செயல்களை அடையாளப்படுத்தி அவற்றில் அதிகமதிகமான நன்மைகளைச் சேர்க்கவும்,  அறியாமற் செய்த தவறுகளை மானசீகமான உணர்ந்து, இறையோனிடத்தில் மன்றாடி பாவ மன்னிப்புக் கோரவும்  நமது சிந்தனையை வழிப்படுத்த வேண்டும். எனவே இந்த மாதம் அல்லாஹ்வுடன் நம்மை அதிகம் நெருங்க வைப்பதால் நமது சிந்தனையை அவன் பால் பொருத்தி அதிக சிரத்தையுடன் நம்மை வழிப்படுத்த முயலவேண்டும்.

றமழான் மாதத்தில் அதிகமாக "லாஇலாஹா இல்லல்லாஹ் "என்ற திருக்கலீமா ஓதுவதும், குர் ஆனுடன் அதிக தொடர்பு கொள்வதும், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்பதும், அல்லாஹ்விடம் சொர்க்கம் தரும்படி கேட்பதும், நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும் நாம் இம் மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய விடயங்களாக உள்ளது. இவை அல்லாஹ்வுடனான நெருக்கத்தை மேலும் பலப்படுத்தும். இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் செய்கின்ற எந்த நன்மைகளும் பர்ளுக்கான அந்தஸ்தைப் பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்காகும்.

எனவே முதல் பத்து நோன்பிருந்து அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக் கொண்ட நாம், தற்போது அடுத்த பத்திற்குள் உள்ளடங்கும் நோன்பிலிருக்கின்றோம். இரண்டாவது பத்து நோன்பு நமக்கு பாவமன்னிப்பு பெற்றுத் தருகின்ற நாட்களாகும். எனவே இந் நாட்களில் நாம் இறைஞ்சுகின்ற பாவமன்னிப்புக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக எம் பெருமானார் (ஸல் ) அவர்கள் கூறுகின்றார்கள்.

"நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி, இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன்"

எனக் கூறுகின்றார்கள். (ஆதாரம் - நூல் புகாரி )

இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் நாம் உதவிகோரி கையேந்தும் போது அவன் தன் அருளினாலும், நோன்பின் பரகத்தினாலும் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். ஷிர்க்கைத் தவிர நாம் செய்த தவறுகளையும் மன்னித்து தனது கருணையால் நமக்குள் ஈடேற்றம் தருகின்றான்.

இறைவன் கூறியதை நபிகள் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:-

"ரமளானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்"

(நூல் - புகாரி)

ஒரு நோன்பாளி, இறைவன் தன்னை எந்நேரமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் எனும் சிந்தனை மேலீட்டால் , கடந்த காலத்தில் தான் செய்த பாவங்களை நினைத்துப் பார்ப்பான். அப்பொழுது அப்பாவ நினைவுகள் அவன் மனதை வருத்தும். அப் பாவங்களை மீண்டும் செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமன்ற எண்ண மேலீட்டால், மீண்டும் அப்பாவங்களின் பால் தான் செல்லக்கூடாதென உறுதியெடுத்தவனாக, மனமுறுகி முறையாக பாவ மன்னிப்புக் கேட்கும் போது, அவனது நோன்பின் பரகத்தால் அல்லாஹ்வும் பாவ மன்னிப்பைத் தருபவனாக இருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின் பின்பும் , தஹஜ்ஜத் தொழுகையின் பின்னும் பாவ மன்னிப்பு நாம் கோர வேண்டும்.

நம்மை இறைவன் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். அதனால் நமது நல்ல செயல்களுக்கு நன்மையும், தீய செயலுக்கு தீமையும் நிச்சயம் வழங்குபவனாகவும் இருக்கின்றான் எனும் எண்ணத்தை உள் வாங்கி
நோன்பிருப்போமானால், அந் நோன்பு நிச்சயம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ரஹ்மத் எனும் கருணையை நமக்குப் பெற்றுத் தரும். அது மாத்திரமின்றி இறை மன்னிப்பால் நரக நெருப்பில் வீழாமல், ஈடேற்றம் பெற்று சுவர்க்கத்தில் நுழையும் பாக்கியவாதிகளாக மாறுவோம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்-

"சொர்க்கத்தில் "ரய்யான்" என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும்
அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்"

(அறிவிப்பவர் :- ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ , நூல் - புஹாரி )

நமது குற்றங் குறைகளின் கறை போக்கிடவே, அல்லாஹ் த ஆலா விடம் பாவமன்னிப்பைப் பெற்று ஈடேற்றம் காண எமது நோன்பும், துஆ ப் பிரார்த்தனைகளும் வழி தரட்டும்........மனதில் ஈமானிய பசுமைகள் பூக்கட்டும்!

வஸ்ஸலாம்



2012/08/02

அனல் பூக்கள்



ஒவ்வொரு மனங்களும் அன்பு பற்றிய ஏக்கங்களுடனேயே தத்தமது வாழ்க்கையை நகர்த்துகின்றன. அழகான வாழ்க்கை.........எதிர்பார்ப்புக்களின் சேர்க்கைகளால் நெகிழும் வாழ்க்கை...ஆனால் சில , பல சமயங்களில் அவ் வாழ்க்கை ஏமாற்றங்களால் காவு கொள்ளப்பட்டு விதிக் காற்றில் சீரழிந்து விடுகின்றன.

என் மனதை அண்மையில் நெகிழ்ச்சியடையச் செய்த , நான் கேள்விப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிண்ணப்பட்ட கதையை என் தமிழில் பகிர்கின்றேன் ......சம்பவம் உண்மை....பெயர்கள் மட்டும் கற்பனை.............

வடமத்திய மாகாணத்தின் சிற்றூர்தான் பதவியா. அங்கு வாழ்ந்த ஜெயசிங்க- ஹேமா காதல் மணம் புரிந்த ஜோடிகள்....ஜெயசிங்கவுக்கு தொழிலென்று ஒன்றும் பெரிதாக இருக்கவில்லை...எப்படியோ அன்றாடம் கூலித்தொழில் செய்து அவன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான்..அவன் போகும் திசையில் ஹேமாவும் இழுபட்டுச் சென்றாள்...

வாழ்க்கை வறுமைப்பட்டாலும் கூட, மனதின் பசுமையால்  இல்லறம் அவர்களுக்குள் இனித்தது. அவர்கள் காதல் நறுமணத்தில் நனைந்தவளாய் அழகான மகள் சிரோமியும் பிறந்தாள்...

வருடங்கள் வேகமாக நகர, வறுமையிலும் வாழ்வை செழிப்பாக்க போராடிக் கொண்டிருந்தனர் அவ் இளம் ஜோடிகள்........

மகள் சிரோமி ஐந்து வயதைத் தொட்டு நின்றாள். அருகிலிருந்த பாடசாலையில் மகள் சிரோமியின்  வாழ்க்கைக்கான கல்வி அத்திவாரமிடப்பட்ட போது , வாழ்க்கைப் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் ஜெயசிங்க தம்பதிகள் தடுமாறினர்....

" மகளும் வளர்ந்திட்டாள் இனி கஷ்டப்பட ஏலாது..பணம் சேர்க்கணும், நான் வெளி நாட்டுக்கு போறன், நீங்க மகள பார்த்துக்குங்க"

ஹேமா , தன் கணவனிடம் மகளை ஒப்படைத்து விட்டு அவசர அவசர மாக பலரிடம் கையேந்தி கடன்பட்டு அரபு நாடொன்றுக்குப் பயணமானாள்.......

பல இரவுகள் வியர்வையில் நனைந்து, தன் உணர்வுகளை மரக்கச் செய்து ஹேமா சிறுகச் சிறுக சேமித்த, உழைத்த பணத்தை தன் கணவன் பெயருக்கு தவறாமல் அனுப்பினாள்..அவள் ஒன்றரை வருடமாக அனுப்பிய சேமிப்பில், அவள் காதல் கணவன் லீலா எனும் பெண்ணை தன் வீட்டுக்கே அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினான்..லீலா தன் கணவனைப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவள்.ஜெயசிங்கவை வளைத்துப் பிடித்து, அவன் வீட்டுக்கே இராணியாய் முடிசூட்டிக் கொண்டாள்.

ஜெயசிங்கவின் கள்ளக் காதல் பற்றிய விடயம் அவன் மனைவி ஹேமா கேள்விப்பட முன்னரே, அவள் உழைப்பெல்லாம் அவன் காலடி சேர்ந்து லீலாவின் ஊதாரித்தனத்தில் வீணாகியது........புது மனைவியின் உல்லாச வாழ்வில் கணவன் ஜெயசிங்க மிதக்கத் தொடங்கினான்....

சிரோமி சிற்றன்னையிடம் ஒப்படைக்கப்பட்டாள். .லீலாவின் கொடுமையில் அந்த ஆறரை வயதுப் பிள்ளை  உருக்குலைந்தது, புது மனைவி மோகத்தில் ஜெயசிங்க எதனையும் கண்டு கொள்ளாதவனாய் ஊமையானான்...

சிரோமியின் உடலில் தினம் தினம் காயங்கள் தம் முகத்தைக் காட்டத் தொடங்கின...

அன்று...........

ஞாயிற்றுக்கிழமை....வீட்டில் கணவனுக்கான விசேட விருந்தோம்பலுக்காக விதம் விதமாய் சமையல் படைக்க முடிவு செய்தாள் புது மனைவி லீலா!
வேலையில் மும்முரமாய் ஈடுபட்டு அறுசுவையில் தன் கணவளைத் திணறடிக்க காத்திருந்தவளுக்கு சிரோமி இடையூறானாள்......

உரிய நேரம் தாண்டியும் அவள் அந்தச் சின்னப்பிள்ளைக்கு உணவு கொடுக்க வில்லை.பெற்றவனுக்கே இல்லாத அக்கறை புறத்தியாளுக்கு வருமா என்ன?

சிரோமி பசியால் அழுதாள்...ஆத்திரம் கொண்ட சிற்றன்னை எனும் அந்தப் பூதம் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நாக்கை இழுத்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலால் சூடு போட்டாள்......

சிரோமி கதறிய கதறல் கேட்டும் கூட ஜயசிங்க ஊமையாய் இருந்தான். புதுப் மனைவி மயக்கத்தில் பிள்ளைப் பாசம் பூச்சியமானது...

நாக்கில் தீக்காயத்தால்  உணவு உண்ணவும் முடியாமல், யாருடனும் பேசவும் முடியாமல் சிரோமி எனும் அந்த 2ம் வகுப்புப் பிள்ளை தனிமைக்குள் சிறையிருந்தது..

ஒருவாரம் நெருப்புக்கணங்களாய் சிரோமி உணர்ந்தாள். உடல் மெலிந்து , அவள் அழகும் உருக்குலைந்தது. .ஒரு வாரம் பாடசாலைக்கு செல்லாததால் சிரோமியின் வகுப்பாசிரியை சிற்றன்னை லீலாவைக் காணும் போதெல்லாம் சிரோமியை விசாரிக்கத் தொடங்கினார்....

இனியும் அவளை சிறை வைக்கமுடியாத நிலையில் சிற்றன்னைப் பிசாசு அவளை பாடசாலைக்கு மீள அனுப்பினாள்..

ஆனால் பிள்ளையால் பாடசாலையில் பேச முடியவில்லை.கற்க இயலவில்லை..எந்த நேரமும் அழுது கொண்டே இருந்தாள். வகுப்பாசிரியை விடவில்லை..துருவித் துருவி சிரோமியை ஆராய்ந்ததில் தீப்பட்ட நாக்கின் புண்கள் பற்றிய கதையும் கண்ணீரும் அவலமும் வெளியே கசிந்தன..

சிற்றன்னையின் கொடுமையால் கொதித்தெழுந்த பாடசாலை நிர்வாகம் உடனடியாக பொலிஸூக்குத் தகவல் அனுப்ப, பொலீஸார் லீலாவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினர்..

இப்பொழுது அவள் சிறைக்கம்பிகளின் பின்னால் தனது மனிதாபிமானமற்ற இதயத்தை காட்சிப்படுத்திக் கொண்டிருக்க, கணவனோ தலைமறைவாகி விட்டான்..

சிரோமி எனும் அந்த ஆறரை வயதுப்பிள்ளை பூக்க முன்னரே கருகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாள்..

பெற்றவளுக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளதா.........தாய் மீள மகளைத் தேடி வருவாளா......தந்தை எங்கே இருக்கிறான்.......இனி அந்தப் பிள்ளையின் வாழ்க்கைக்கு யார் காவல்...இவை போன்ற பல வினாக்கள் எனக்குள் தொக்கிக் கிடக்கின்றன...!

வாழ்க்கையில் பிண்ணப்பட்ட வறுமையும், சபல புத்திக்காரக் கணவனின் புத்தியும் சேர்ந்து ஹேமாவின் வாழ்க்கையுடன் மட்டுமல்ல, அவள் வயிற்றில் கருவாகிய பாவத்திற்காய் அவள் மகளின் வாழ்வையும் விளையாடி விட்டன.  புழுதியில் வீணே வீசியெறியப்பட்டுள்ள அந்தக் கருகிய மலர்........இன்று அனாதையாய் விடியலின் முன் இருளாகி நிற்கின்றாள் தன் சந்தோஷங்களை யும் உதிர்த்தபடி !.....

லீலாவைப் போன்ற இரக்கமற்ற பிசாசுகளும் நாக்கறுபட்டு , தீக்குவியலுக்குள் தள்ளி விடப்பட்டு எரிக்கப்பட வேண்டும். இந்தக் கொடுமை இனி எந்த மலரையும் கசக்கி விடக்கூடாது என்பதே என் பிரார்த்தனையும் கூட !




ரமழான் சிந்தனைகள்





******
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் போது அவன் மகிழ்ச்சி அடைகிறான்"

(அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, புகாரி)

******
உண்ணுங்கள் , பருகுங்கள் , விரயம் செய்யாதீர் " (7:31)
******
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்

"மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்கு பத்து நன்மைகள் முதல் எழுநூறு மடங்கு வரை. இறைவன் சொல்கிறான் நோன்பைத் தவிர, ஏனெனில் நிச்சயமாக எனக்குரியது. நானே அதற்கு கூலி வழங்குகிறேன். காரணம் அடியான் தனது ஆசையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகிறான் "  (முஸ்லிம்)

******
நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன"
- நபி மொழி_
(அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, திர்மிதி - 619 )

******
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்

"அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது "
( அறிவிப்பவர் - அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, நூற்கள் : அஹ்மது , நஸயீ, பைஹக்கீ )

******

ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன"
- நபிமொழி-

( அறிவிப்பவர் - அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ ,
நூல் :முஸ்லிம் 1957)

******
"வைகறை எனும் வெள்ளைக் கயிறு (இரவு எனும்)
 கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்.

(திருக்குர்ஆன் 2:187)

******
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் ( நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகிறாரோ, அவர் அம் மாதம் நோன்பு நோற்க வேண்டும் .

(அல்குர் ஆன் 2 :185)



வறியவர்க்குதவுவோம்


புனித ரமழான் நமக்கு கற்றுத் தரும் பயிற்சிகள் மகத்தானவை. ஏனெனில் நோன்பானது நம் உடல், உள, ஆன்மீகத்துடன்  தொடர்புபட்ட புனித கடமையாகும்.

புனித நோன்பானது பசியின் கோரத்தை, வறுமையை, ஒட்டியுலர்ந்த வயிற்றின் அலறலை, நமக்குள் மானசீகமாக உணர்த்தி, ஏழ்மையின் இடரை செல்வந்தன் உணரச் செய்யக்கூடிய சிறந்த வழியாக உள்ளது. இது ஓர் சமத்துவத்திற்கான பாதையாகும். ஏனெனில் ஏழை , பணக்காரன் இரு சாரரும் ஒரே திசையில் பயணித்து அல்லாஹ்வுக்கு நோன்பெனும் வரியைச் செலுத்த வேண்டும்.

ஏழ்மையுடையவர்களை நினைந்து, உள்ளம் உருகி, கண்ணீர் சிந்தக்கூடிய சந்தர்ப்பத்தை நோன்பு தருகின்றது. இவர்களின் துயருணர்ந்து அவற்றை ஓரளவாவது களைய முயற்சிப்பது கூட சன்மார்க்க நெறியாகும். புனித ரமழானில் நாம் நோற்கும் நோன்பு மூலம் ஏழைகள், அனாதைகள், அகதிகள் மீது எம் கருணை வளர்க்கப்படல் வேண்டும். அக் கருணையின் உந்தலால் நாம் அவர்களுக்கு ஈகையை வழங்க வேண்டும்

" தர்மத்தில் சிறந்தது ரமழானில் வழங்கப்படும் தர்மமாகும்"

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் நோன்பு காலங்களில் அதிக தான தர்மங்களை மேற் கொண்டார்கள்.

வறுமையானது கொடியது. வாழ்க்கைக்கே சவால் விடக்கூடியது. இதனால் சிந்தனை, பகுத்தறிவு என்பன மந்தநிலையை அடையும். ஈமானைக் கூட பறித்துவிடக்கூடிய கொடிய மிருகம். ஏனெனில் வறுமைப்படும் போது மனிதன் அறநெறிகளிலிருந்து தவறி தன் நற்பண்புகளைத் துறக்கும் மிருகநிலைக்குச் சமனாகின்றான். இதனால் பண்பற்ற செயல்களும், துர்நடத்தைகளும், முறைகேடுகளும் நடந்து வாழ்வின் பெறுமதியை இழிவுபடுத்தலாம்.பல வறுமைப்பட்ட குடும்பங்களின் கட்டமைப்புக்களும், நடத்தைச் சிறப்புக்களும் சீரழிந்துள்ளன.  எனவே இதன் பயங்கர நிலைக்குள் முஸ்லிம்கள் வீழாமல் நிலைத்திருக்க ரமழான் உதவுகின்றது.இந்த ஆபத்துக்களை நீக்க நாமும் முயல்வதன் மூலம் நல்ல ஆரோக்கியமான சமூகத்தின் இருக்கைக்கான அத்திவாரங்களையும் இடலாம்..

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள்,

" வறுமையானது குப்ரையும் ஏற்படுத்தி விடக்கூடியது."

குப்ரிலிருந்து பாதுகாப்புத் தேடிய நபியவர்கள், அதனுடன் இணைத்து 'பக்ர்' என்ற வறுமையிலிருந்தும் பாதுகாப்பு தேடியமை அவையிரண்டுக்குமிடையிலான தொடர்பை நம் முன்வைக்கின்றது.

இஸ்லாம் அநாதைகள் மீது அதிக கரிசனை காட்டுகின்றது.ஏழைகளை ஆதரித்து வறுமையை ஒழித்துக் கட்டாதவன் தீனை உண்மைப்படுத்துவனல்லன் என்பதை திருமறையும், ஹதீஸ்களும் நவின்றுள்ளன.

தீனைப் பொய்ப்பிப்பவன் பற்றிக் கூறும் ஸூறா அல்மாஊன் பின்வருமாறு கூறுகின்றது-

"அவன்தான் அநாதைகளைக் கடிந்து விரட்டுபவன்"

" அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டவும் மாட்டான் "

உண்மையில் ஏழைக்கு தானும் உணவளித்து, பிறரையும் தூண்டி வறுமையை அழிக்கும் செயலில் ஈடுபடாதவர் இஸ்லாம் மார்க்கத்தை பொய்ப்பிப்பவராகவே கருதப்படுகின்றார். இதனை அல்-குர்ஆனும் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றது.

"நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை விசுவாசிக்கவில்லை. ஏழைகளுக்கு ஆகாரமளிக்கவும்படி தூண்டவுமில்லை. ஆகவே இன்று அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இல்லை. புண்களில் வடியும் சீழைத் தவிர அவனுக்கு வேறு ஆகாரமும் இல்லை எனக் கூறப்படும் . அதனைக் குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் புசிக்க மாட்டார்கள்"

தன் மீதுள்ள கடமை, பொறுப்புக்களை மாத்திரமே நிறைவேற்றி , சமூகக் கடமைகளை உதாசீனம் செய்வோரை இஸ்லாம் ஆதரிப்பதில்லை.

எமது உள்ளங்களுக்கு பக்குவத்தையும், பண்பாட்டையும் வழங்கி, சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடிய செயல்களில் நாம் ஈடுபடும் போதே எமது இபாதத்துக்கள் நன்மை பயப்பனவாகையாக இருக்கின்றன..

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் ஓரங்கம். அச் சமுகம் உயிர்ப்போடு இருக்கும் போதே அவனாலும் நிம்மதியாக, மகிழ்வுடன் அச் சமுகத்தில் தன்னைப் பொறுத்தி பயனடைய முடியும்.

முஸ்லிமின் இவ்வுலக கஷ்டங்களிலிருந்து அவனை நீக்கி, அவனுக்கு உதவி செய்து நிறைவான வாழ்வுக்குள் அவனை அழைத்துச் செல்லும் கடமைப்பாடு எம்மெல்லோரின் கடமையாகும்.

எனவே ஈகையினதும், கருணையினதும் மாதமாகிய இப் புனித ரமழானில் சமூகத்தில் வாழ வழியற்றுத் தவித்துக் கொண்டிருக்கும் வறியவர்கள், அனாதைகள், எளியவர்கள் மீது மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டி இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளை, உதவியைப் பெற்றுக் கொள்வோமாக!


2012/08/01

காட்டூன்


ரோசா இதழ் பிழிந்து
தேகம் நெய்த என் மழலையாள்........
தன்
மங்களச் சிரிப்பின் கரகோஷத்தில்
நிதமும்
காட்டூன்களோடு உறவாகின்றாள்
ரசிப்பைச் சிந்தி!

கோடுகள் பல வரைந்தும்
உரு நெய்தும்.........
வண்ணங்களால் மேனி வார்த்தும்
பேசிடும் சித்திரங்களில்...........
வியப்பின் நெருடல்
விண்வரை எட்டிப் பார்க்கும்
என்னுள்!

உயிரேந்தும் சித்திரங்கள்
பேசும் பொம்மைகளாய் மாறி
விசித்திரம் காட்டுகையில்...........
பூரித்து நிற்பது ...........
குழந்தை மட்டுமல்ல
நானும் தான் !

பேசும் பொம்மைகள்
குதிப்பதும் ஓடுவதும்
குஷி காட்டிச் சிரிப்பதுமாய்
எம்மைப் போஷிக்கையில்............
கவலைகள் தூசியாய் பறக்க
மனமோ லேசாகிப் போக............
நானோ
மீண்டும் உயிர்ப்பேன் குழந்தையாய்!

தூரிகையில் உயிர் கொடுக்கும்
முகந்தெரியா அந்த ஓவியனுக்காய்......
என்
வாழ்த்துக்கள் தூதாகும்.............!
அவை
காத்திருக்கும் காட்டூனுலகில்
கரந்தொடுத்து மகிழ்ந்திருக்க!

கற்றலும் சொற் புகட்டலும்
சிந்தைமிகு பாடல்களும்.................
சிரிப்பூட்டும் கதைகளுமென - மனதை
பூரிக்கச் செய்யும் சித்திரங்கள்
மின் திரையில்
வேடிக்கை காட்டுகையில்.......
நானும் சிறகடிக்கின்றேன்
சின்னச்சிட்டாய்
குழந்தையுலகில்!

முன்பெல்லாம்
அடம்பிடித்து என் கரமிழுத்து
கார்ட்டூனியக்கத்திற்காய்
கணனிமுன்னமர்ந்த என் மழலையாள்
இப்பொழுதோ அவளழையாமல்.........
தோள் தொடுகின்றன
பேசும் பொம்மைகள்
என் விருந்தினராய்!

கதை சொல்லும் நான்..............
இப்பொதெல்லாம்
கதை கேட்பவளாய் மாறி...........
காட்டூனோடு சஞ்சரிக்கின்றேன்
பிஞ்சுலகின் அங்கத்தவராய்
மீள உருமாறி!

ஜன்ஸி கபூர் 

பெண் சாரணிய சில நினைவலைகள்


எல்லோரிடமும் வாழ்க்கை பற்றிய கற்பனை மிக அழகாகத்தான் இருக்கின்றது. ஆனால் நாம் யதார்த்தங்களைச் சந்திக்கும் போதுதான் அது பற்றிய எண்ணங்களும், அனுபவங்களும்  நம் மூச்சுக்காற்றுக்குள் விஷம் கலக்கின்றது.. நாம் சந்திக்கும் துன்பங்களின் கனாதியில், கிடைக்கின்ற சின்னச் சின்னச்  சந்தோஷங்களையும் தொலைத்து விடுகின்றோம்.

ஆனால் மாணவப் பருவமென்பது துன்பங்களை நம் நினைவில் நிலைநிறுத்தாத பருவமாகையால் கவலைகளற்ற சிட்டுக்களாக நாம் நம் கல்லூரி வாழ்க்கையில் ஒன்றித்து அதன் இனிமையான ஞாபகங்களை மறக்காதவர்களாய் மாறி விடுகின்றோம்.

அந்தக் கல்லூரி வாழ்க்கையில் நான் பெற்றுக் கொண்ட அழகிய அனுபவங்களிலொன்றுதான்  பெண்சாரணியப் பயிற்சி...........

.என் கல்வியின் ஆரம்ப அத்திவாரம் யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலயத்தில் இடப்பட்டாலும் கூட, நான்காம் வகுப்பில் என்னை உள்வாங்கிக் கொண்ட பாடசாலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி.............தான்! அப்பொழுது என் தந்தை நல்லூர் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தமையால் என்னை அழைத்துச் செல்லும் வசதிக்கேற்ப நானும் கல்விக்காக அங்கே மாற்றப்பட்டேன். தினமும் தந்தையுடன் சைக்கிள் சவாரி...சிறு பிள்ளைப் பருவத்தில் நானிருந்தமையால் என்னை எனது லுமாலா லேடிஸ் சைக்கிளில் தனியாக அனுப்ப என் பெற்றோர் தயங்கியதால் தினமும் நான் என் தந்தையின் துவிச்சக்கர வண்டிக்குப் பாரமானேன்.

நானிணைந்த அந்த நான்காம் வகுப்பு..........!

பெரிதாக உலகத்தை அறிந்து கொள்ளாத, அக்கறைப்படாத சிறு வயதை உள்வாங்கிய வகுப்பு நிலை. விளையாட்டும், படிப்புமாக பாடசாலை நாட்கள் நகர்ந்தன. வகுப்பாசிரியை திருமதி. நடேசுபிள்ளை ரீச்சர். பெரிய குங்குமப் பொட்டும், கொண்டையும், சிறு நட்சத்திர மூக்குத்தியும் அவருக்கே உரிய அழகான அம்சங்கள். எங்களுடன் ரொம்ப அன்பாக இருந்தார். இன்னும் என் ரீச்சரின் உருவம் கண்ணுக்குள் நிற்கின்றது. அப்பொழுதே அவருக்கு வயது ஐம்பதைத் தொட்டிருக்கும்.

அப்பொழுதுதான் பாடசாலையில் பெண்சாரணியப் பயிற்சிக்காக எம்மைத் தெரிவு செய்தார்கள். 

சாரணியம் என்றால் என்ன? 
அதன் இலக்குகள் என்ன? 

எனும் குறிப்புக்கள் எதுவுமின்றி ஏதோ ஆசையினால் நண்பிகள் இணைவதால் நானும் இணைந்தேன்..


அதனை "ப்ரவுனிஸ்" என்றழைத்தார்கள். வித்தியாசமான யூனிபார்ம், சாரணிய சட்டதிட்டங்களுக்கேற்ப தைத்து, ப்ரவுண் டை கட்டி, சலூட் அடிக்கும் விரல்களைப் போன்ற தங்க நிறச் சின்னம் அணிந்து இரட்டை ஜடை கட்டி அந்த சாரணியப் பயிற்சிக்கும், பாசறைக்கும்  கலந்து கொள்வது எனக்கு நாளடைவில் பிடித்துப் போனது. இரு நேரப் பாடசாலையென்பதால் பாடசாலை பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவடையும். அதன் பிறகு கிழமையில் இரண்டு நாள் பயிற்சி 5 மணி வரை தொடர்ந்தது. நாங்கள் மாலைநேரங்களில் உற்சாகமாகக் கலந்து கொண்டோம். நிறையப் பாட்டுப்பாடி ஆடி மகிழ்ந்ததும் இன்னும் என் மனக்கண்ணில் குவிந்து விரிகின்றது..

"பாடுவோம் எல்லோரும்
பாடுவோம் எல்லோரும்
பலவித துன்பங்கள்
பனி போல மறைந்திட
பாடுவோம் எல்லோரும்"

இதுதான் நாங்கள் முதன்முதலாகப் பாடிய பாடல். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப் பாடல் படித்துப் பயிற்சி பெற்றோம்.


இது வேறொரு பாடல் :-

"வாத்தியக் கோஷ்டி எங்கள் வாத்தியக் கோஷ்டி
வேணி பாடுகிறாள் சும்மா வெளுத்துக் கட்டுகின்றாள்
தக்கிடத் தக்கிடத் தோம்
தக்கிடக் தக்கிடத் தோம்......................."

இவ்வாறு இந்தப் பாடல் தொடரும்.

"அண்ணன்ர சைக்கிளுக்கு பெல் இல்லை
பிரேக் இல்லை "......................

இது இன்னுமொரு பாடல்

இவ்வாறு தொடரும் பல பாடலை நாங்கள் ரசித்துப் பாடிய ஞாபகம்  நெஞ்சுக்குள் வருகின்றது....

"சின்னத்தம்பி சின்னத்தம்பி
நித்திரையோ....நித்திரையோ
மணியடிக்கிறது மணியடிக்கிறது
எழும்புங்கோ....எழும்புங்கோ"

இந்தப் பாடல் அடிக்கடி நான் முணுமுணுக்கும் பாடல்....இவ்வாறு பல பாடல்களை மனம் இப்பொழுதும் தொட்டு ரசிக்கின்றது.



சமூகத்தில் நற்பிரஜையாக இணைந்து கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் பயிற்சிக்களமாக சாரணியப் பயிற்சி செயற்படுகின்றது. நான் சாரணியத்தில் கற்றுக் கொண்ட பல விடயங்கள் என் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து என் மனப்பண்புகளாக சேமிக்கப்பட்டுள்ளன. இன்றும் அது என் வாழ்வுடன் தொடர்ந்த நிலையில்  என்னைத்  தன் செல்வாக்குக்குள் உள்ளடக்கி வருகின்றது. இதனை என்னால்  உணரக்கூடியதாக உள்ளது.

என் பெண் சாரணிய மாணவப் பருவத்தில் பயிற்சிப் பாசறைக்காக  பல தடவைகள் யாழ்ப்பாண பழைய பூங்காவில் உள்ள திடலில் மாணவர் ஒன்றுகூடலில் ஈடுபட்டோம். குழுக்களாகப் பிரிந்து உணவுக்காக  "சன்விச்' செய்ததும், நாங்கள் பெற்ற பயிற்சியைப் பிரயோகித்து அனுபவித்ததும், முகாம் அமைத்ததும், ஆடிப் பாடியதும் என்னால் மறக்க முடியாதவை...

ஆறாம் வகுப்பிற்கு வந்ததும் நாங்களும் சற்றுப் பெரியவர்களானோம். பெண் சாரணியர் என அழைக்கப்பட்டோம். நீல நிற டையும், மூவித இலைச் சின்னமும் எங்கள் அடையாளங்களாகின். நான் க.பொ.த சா/த பரீட்சை (தரம் 11) எழுதும் வரை பெண் சாரணியாகச் செயற்பட்டதும், சாரணியத் தந்தை "பேடன் பவல்" அவர்களின் பிறந்த நாளில் பாடசாலைகளூடாக ஒன்று கூடுவதும் , விழாக்களில் கலந்து கொள்வதும் மறக்க முடியாததொன்று.

சாதி, மத, பேத வேறுபாடின்றி நாங்கள் சகலரும் ஒன்றாக உணர்வில் ஒன்றித்திருந்தோம். நல்ல மனப்பான்மையுடன் சமூகத்தை நோக்கும் திறன் எமக்குள் இயல்பானது. உயர்தர படிப்புக்குள் நுழைந்ததும் படிப்பு, புத்தகம் எனும் வேறொரு உலகின் சங்கமிப்புக்களால்  என் சாரணியத்துவ செயற்பாடுகளுக்கு பாடசாலையில் முற்றுப்புள்ளியிடப்பட்டது.

நாட்கள் நகர்ந்தன. ஆசிரியர்த் தொழிலுக்குள் உள்வாங்கப்பட்டேன். புதிய பாடசாலை, புதிய இடம்..., புதிய மொழி....என் கடந்த காலம் பகிரப்படாத நிலையில்,.............


 ஒரு நாள் என் பாடசாலை அதிபர் என்னை அழைத்து நடைபெறவுள்ள சாரணியர் பயிற்சி செயலமர்வுக்கு செல்லும்படி கூறினார். பயிற்சி சிங்கள மொழியில் நடைபெறுவதால் தயங்கினேன். ஆனாலும் அவர் பிடிவாதமாக அச்செயலமர்வுக்கு என்னை அனுப்பியதால் என் பெயர் சாரணியப் பயிற்சிக்காக கல்வித்திணைக்களத்தில் பதிவாகியது. அதனைத் தொடர்ந்து பல பயிற்சிகள். ஆரம்பத்திலிருந்த மொழியச்சம் இப்பொழுது நீங்க தொடர்ந்தும் பயிற்சி பெற்றேன். பயிற்சி பெற்று வருகின்றேன்.......

கொழும்பிலிருந்து வருகை தந்த ஜனாதிபதி சாரணியத் தலைவி ஜெஸீமா (அவர்தான் இலங்கையில் பெரியவர்) அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து, சல்யூட் அடித்து உரிய சாரணியப் பதக்கத்தை அவர் எனக்குச் சூட்ட சாரணியத் தலைவியாக நியமனம் பெற்றேன். இது சாரணியத்துவத்தின் முதல் நிலை. இதனை என்னால் மறக்கவும் முடியாது. 

இந் நிகழ்வு அநுராதபுரத்திலுள்ள சம்பத் - கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது. எமது கல்வி நிலைய அதிகாரியொருவர் பெண் சாரணியத் தலைவியாக இருப்பதால் அவர் எமது பிரதேச பாடசாலை மாணவிகளின் பெண் சாரணியத்தினை ஊக்குவிப்பவராகவுள்ளார். இதனால் அடிக்கடி கூட்டங்களும், செயலமர்வுகளும்  எமக்கு கிடைக்கின்றன. எமக்கு பயிற்சிப் பொறுப்பாக நயினா மெடம் உள்ளார். அவருக்கு என்மீது ரொம்ப விருப்பம். வீதியில் சந்திக்கும் போதெல்லாம் எனது சாரணியச் செயற்பாடுகள் தொடர்பாக விசாரிப்பார். அநுராதபுர நகரில் சாரணியப் பயிற்சிக்காக ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ்மொழி மூலப் பாடசாலை எமது பாடசாலையே ஆகும். நானும் எனது சக ஆசிரியை ஒருவரும் இப் பயிற்சியைப் பெறுகின்றோம்.

மாணவியாக யூனிபார்மில் தொடரப்பட்ட எனது சாரணிப்பயிற்சி, இன்று வெள்ளை நிறச் சேலையும், கை முழுவதையும் மறைக்கும் வெள்ளை நிற மேற்சட்டையும், கொண்டையும் என்ற தேசியமாக மாற்றப்பட்டு, நான் மாணவிகளுக்கு வழிகாட்டும் பொறுப்போடு நிற்கின்றேன்.......

அன்று தமிழ் பாடல்களுள் மகிழ்ந்த நான் இன்று சிங்களப்பாடல்களுடன் ஒன்றித்துக் கிடக்கின்றேன். மாணவப் பருவத்திலிருந்த அதே குழந்தைத்தனமான எங்கள் மனங்கள் மாறவில்லை. ஆனால் வயதுதான் கடந்து விட்டன.

ஆகஸ்ட் முதலாம் திகதி உலக சாரணியர் தினம் எனும் ஞாபக அலை நெருடலால் இந்நினைவுகளின்று என் வலைப்பூவுக்குள் தன் கரங்களையசைத்துக் கொண்டிருக்கின்றது.............

சாரணியர் இயக்க வரலாறு
---------------------------------------

1857 .02.22 ந் திகதி பிறந்த சாரணத் தந்தையான "சேர் றொபர்ட் ஸ்டீவன் ஸ்மீத் பேடன் பவல் " என்பவரால் 20 இளைஞர்களுடன் இணைந்து சாரணிய இயக்கம் 1907.07.28ல் ஆரம்பமானது. பெண் சாரணிய இயக்கம் அவரது பாரியார் "ஓபேவா பேடன் பவல்" என்பவரால் 1910 ல் ஆரம்பிக்கப்பட்டது. 1916 ல் குருளைச் சாரணர் இயக்கமும், 1918 ல் ரோவர்ஸ் சாரணர் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டது. சிறுவர்களுக்கான சாரணியர் தொடர்பான நூல் 1908 ஆம் ஆண்டு அவரால் பதிக்கப்பட்டது. பேடன்பவலின் தந்தை அவரது 3 வது வயதில் காலமானதால் பவல் எனும் தந்தையின் பெயர் குடும்பப் பெயரானது.

லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மாநாடும், சாரணியப் பாசறையும் ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை நடைபெற்றது. அதனை மையப்படுத்தியே உலக சாரணர் இயக்கம் கொண்டாடப்படுகின்றது.

வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை , தேசப்பற்று, தைரியம், மனிதாபிமானம் போன்ற பல உயரிய பண்புகளைத் தூண்களாகக் கொண்ட சாரணர் இயக்கத்தின்  தொனிப் பொருள் "எதற்கும் தயாராக இரு " என்பதாகும்.

1910 ஆம் ஆண்டு உலகெங்கும் சாரணியம் பரவத் தொடங்கியது. தற்போது 216 நாடுகளில் சாரணியர் இயக்கங்கள் தொழிற்படுகின்றன. இத்தொகை ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளின் தொகையை விட அதிகமாகும். உலக முழுவதும் 38 மில்லியன் சாரணர்கள் உள்ளனர். 1912 ல் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேடன்பவல் உலகப் பயணமொன்றையும் மேற் கொண்டார். 1921, 1931 ம் ஆண்டுகளில் பேடன்பவல் இலங்கைக்கும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அந்த முயற்சி இன்று பல நாடுகளில் சாரணர் இயக்கங்களாக விழுது பரப்பியுள்ளது.

1920 ல் பேடன் பவல்  அவர்கள் சாரணர் ஜம்போரி ஒன்றை இங்கிலாந்தில் ஒலிம்பியாவில் ஏற்படுத்தினார். அந்நிகழ்வில் 34 நாட்டு சாரணர் முன்னிலையில் பேடன்பவல் அவர்கள் உலக சாரணர் "பிதாவாக" முடிசூட்டப்பட்டார். இங்கிலாந்து மன்னர் 5 ஆம் ஜோர்ஜ் மன்னராலும் கௌரவிக்கப்பட்டார். அன்றிலிருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ் ஜம்போரி நடைபெறுகின்றது. சாரணிய இயக்கம் உலகமயப் படுத்தப்பட்டதொரு அமைப்பாகும். எனவே இவ் ஜம்போரி பாசறை முக்கியமானவை. உலகின் பல பாகங்களில் இவ் ஒன்று கூடல் பல நாட்டு சாரணியர்களின் இணைவுடன் நடைபெறுகின்றன. இப் பாசறைகளிலேயே சாரணியர்கள் ஒன்றிணைக்கப்படுகின்றனர். டென்மார்க், இங்கிலாந்து, ஹங்கேரி,ஹொலண்ட், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ், கிரேக்கம், ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, கனடா, நெதர்லாந்து, சிலி, தாய்லாந்து
போன்ற பல இடங்களில் ஜம்பொரி பாசறை நடைபெற்றது.


2007 ஆம் ஆண்டு சாரணிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜம்போரி பாசறை இங்கிலாந்தில் நடைபெற்றது. இது 21 வது பாசறையாகும். இதில் 147 நாடுகள் பங்கேற்றன. கடைசியாக நடைபெற்ற ஜம்போரி சுவீடன் நாட்டில் நடைபெற்றது. 23வது ஜம்பொரியை ஜப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இலங்கை சாரணர் சங்கம் கிறின் என்பவரால் 1912ல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் சாரணர் இயக்கம் மாத்தளை கிறிஸ்து கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று எமது சாரணர் இயக்கம்  2012 ஆம் ஆண்டில் நூற்றாண்டைத் தொட்டாலும் கூட இன்னும் உலக சாரணர் இயக்கத்தில் அங்கத்துவம் பெறவில்லை. உலக சாரண இயக்கத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு அச்சங்கம் ஒரு லட்சம் சாரணர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்ற நிபந்தனைப்பாடுள்ளதால் இன்று கல்வித்துறையின் இணைப்பாடச் செயற்பாடாக சாரணர் இயக்கத்தை பாடசாலைகள் ஊக்குவிக்கவேண்டிய கடப்பாடுள்ளது.

நீல்ஆம்ஸ்ரோங், கென்னடி, ஜோர்ஜ் புஷ், பில் கேட்ஸ் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற பலர் சாரணியர்கள் என்பதும் பெருமைக்குரிய விடயங்களே!

சாரணிய இயக்கமும், பெண் சாரண இயக்கமும் சமூக வளர்ச்சிக்கும், வழிகாட்டலுக்கும் வழிகோலக்கூடிய மிகச்சிறந்த அமைப்பாகும் என்பதில் சிறிதளவேனும் ஐயமில்லை.


2012/07/31

நன்றி சொல்லவே

என் முகநூல் பதிவுகளை ஊக்குவித்த , ஊக்குவிக்கின்ற நட்புள்ளங்கள் உங்களுக்கு என் நன்றி பற்பல....

                                                      ** றஸீன் றபியுத்தீன் (அபூதாபி)

   
                                                         ** கார்த்திக் ராஜா (திருநெல்வேலி)

                                         
                                                    **  பிரகாஷ் சோனா (இந்தியா)


                                               000000000 ** Sureshappu Boss (மயிலாடுதுறை)


                                                          **   Isac Jcp (சிவகாசி)


                                                 **  Mohamed Amjad  (இலங்கை)


** Vimal Hasan  (Chennai )


  **  Sritharan Nadarasa  (Sri Lanka) 


** அமல்ராஜ் பிரான்ஸிஸ்


** அபூபக்கர் சித்தீக் (மதுரை)



                                                           மொஹமட் பஸால் (இலண்டன்)


                                                            சகோதரர் மர்ஸிஸ் (தூத்துக்குடி)


                                                               ஜாஹிர் ஹூசைன் (தஞ்சாவூர்)


முத்து ராமன் ( மதுரை)


 புருஷோத்தமன் செல்வராஜ் (பெங்களூர்)



ஜீவா ஜீவ குமார் (இந்தியா)




நினைவிலிருத்தி.......

என் முகநூல் பதிவுகளின் வளர்ச்சிக்கு வித்திட்டதுடன், இடைக்கிடையே   என் பதிவுகளுடன் பேசுகின்ற உங்களுக்கு என் நன்றி பற்பல

                                                      Divyes  Prajapati ( Surat - Gujarat ) 



** சகோதரர் K.S. சிவகுமாரன் அவர்கள் (இலங்கை)

                                                                                                   
                                                              ** சகோதரி  ரோஸ் (ஜெர்மனி)

                                                                 
சகோதரர் புண்ணியாமீன் அவர்கள் ( கண்டி) 


                                                        **  சதீஷ்  ராஜா  ( சென்னை )


** சகோதரர் வதிரி சி ரவீந்திரன்  அவர்கள் ( கொழும்பு )


               
                                  ** சகோதரர் ராஜகோபால் அப்பாத்துரை  அவர்கள்  ( தென்காசி)



                                                     **  நிஷாம் பாறுக் ( இலங்கை)


                               **  சகோதரர் கவித்தோழன் பஸ்லி ஹமீட் (இலங்கை)




** சகோதரர் பிரபின் ராஜ்  அவர்கள்  (திருச்சி)


** சுதன் ராஜா(சென்னை)


சகோதரர் கலைமகன் பைரூஸ்